என் அப்பா தன் இருபதாவது வயதில் வியாபாரம் தொடங்கினார். அறுபது வரை வியாபாரம் செய்துக் கொண்டேயிருந்தார். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு தொழில்கள் ஒவ்வொன்றும் தோல்வியடைய ஒவ்வொரு காரணங்கள் காரியங்கள். அதற்கு மேலும் தொழில் முறை சோசியராக இருந்தார். இவர் ஜோசியம் பார்த்து தொடங்கிய தொழில் எதுவும் வெற்றிக் கூடவில்லை. ஆனால் அப்பாவிடம் ஜோசியம் கேட்டவர்கள் யாரும் இதுவரை சோடைப் போகவில்லை.
நம்மில் பலர் இத்தகைய தருணத்தை கடந்துவந்திருக்க கூடும். அத்தனை பேரும் இத்தகைய தருணத்தை கடந்த பின்பும் ஒவ்வொரு முறையும் இதிலுள்ள புதிர் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிக் கொண்டேயிருக்கிறது. லட்சுமி மணிவண்ணன் இந்த கவிதை வாசித்த போதும் அதே புதிரின் அதிர்ச்சி.
***
தங்கம்மை ஹோட்டல்
என பெயர் வைத்ததால்
தப்பித்தான்
என்கிறார்
அதன் பக்கத்தில்
ஹோட்டல் வைத்து அழிந்தவர்
இருபது
வருடங்களுக்குப் பிறகு
***
ஆண் பெண் அல்லது கணவன் மனைவி உறவில் உள்ள மர்மம் என்பது அது முற்றிலும் அறிய முடியாது என்பது தான். அறிய அறிய அதில் மர்மம் கூடிக் கொண்டே போகும். ஆனால் காலம் தோறும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அதனை அறிய முற்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். அதன் ஒரு துளி புரிதலை அடைந்துவிட முடியும் என்று. இந்த கவிதை கணவன் மனைவி உறவின் ஐம்பது/அறுபது ஆண்டு சுழற்சியைப் பற்றி பேசுகிறது. அதன் மர்மம் கரைந்து கரைந்து எழுவது போல் எழுந்து எழுந்து கரைகிறது. அந்த சுவர் எந்த மாற்றமும் இன்றி வேறொரு இடத்தில் மீண்டும் அலங்கரிக்க தொடங்குகிறது.
***
அவளுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு
அவனை அழித்துக் கொண்டான்
அவனுக்கு முற்றிலும் பிடிக்காதவாறு
அவளும் அழித்துக் கொண்டாள்
ஒவ்வொரு நாளாக வாழ்ந்து இருவரும்
இதனை சாதித்துக் கொண்டார்கள்
ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக
அழித்து இப்படி வந்து சேர்ந்தார்கள்
ஐம்பது ஆண்டுகள் ஓடிற்று
அழித்து முடித்த பின் அரவணைத்து நிற்கிறார்கள்
தன்னை அழித்து உருவான
சுவர்
தன்னை அழித்து கரைந்த சுவரும்
கூட
இப்படித்தான் கரையக் கரைய
எழும்பிய இந்த சுவர்
எழும்ப எழும்பக்
கரைந்தது
***
0 comments:
Post a Comment