ஒருவேளை இப்போது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்தால் வான்காவை மனதில் நிறுத்தித்தான் அதைச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. "பசியின் நிறம்" என்ற தலைப்பு இந்தக் கவிதையை முழுமையாக்குகிறது. பாபு பிரித்விராஜின் தூரிகை வான்காவின் தூரிகையாக, நட்ஹாம்சனின் தூரிகையாக ஆகிறது.
***
பசியின் நிறம்
சுற்றிலும் நிறைந்து வழியும்
வண்ணக்கோப்பைகள்
பொழுதை ஒருவாறு
தீட்டிக் கொண்டிருந்தேன்
உச்சிப்பொழுது
மெல்ல மெல்ல,
கருமை கொண்டது.
மயக்கத்தில் லேசாக
துலங்கியது
ஓவியம்.
***
'நிலா பார்த்தல்' என்ற தலைப்பை முதன்முதலில் வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. கவிஞர் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு அது. எனக்கு பிடித்த கவிதை தொகுப்புகளின் தலைப்புகளில் அதுவும் ஒன்று. இதை விட நேரடியாக, அழகாக ஒரு கவிதைத் தொகுப்புக்கு தலைப்பிட முடியாது. 'நிலா பார்த்தல்'. நிலா பார்த்தலுக்கு நிகரானது கடல் பார்த்தல். பாபு பிரித்விராஜின் இந்தக் கவிதையில் ஒரு வரி வருகிறது.
"ஆழமான ஒன்றை
வெளித்தள்ளுகிறது
எப்போதும்
கடல்"
இப்போது யோசித்தால் அலை என்பது வேறொன்றாவதை கவனிக்கலாம். பாபு பிரித்விராஜின் 'இம்மொழி பெருங்கூடு' தொகுப்பில் கடல் பற்றியும் பறவைகள் பற்றியும் நிறைய கவிதைகள் வருகின்றன. அதில் இது அழகான ஒன்று.
***
அலைகளில்
மிதந்து வரும்
சிறு மேகத்துண்டென
மூழ்காத
தன்னிழலை
சிறகமர்த்தி
காப்பாற்றியது
அப்பறவை
ஆழமான ஒன்றை
வெளித்தள்ளுகிறது
எப்போதும்
கடல்
***
0 comments:
Post a Comment