எந்த ஆர்ப்பாட்டமும் அற்ற சாதாரணச் சூழலில் ஒரு சிறப்புத் தருணம் நிகழ்கிறது. சட்டென நம் வாழ்வில் தோன்றும் பொற்பாதங்களை நாம் காண்கிறோம். அன்று செவ்வாய்க்கு மறு நாளாக இருந்தாலும் அது புதன்கிழமையாக இருப்பதில்லை. அந்த எழுச்சியை ததும்பலை இக்கவிதை முதல் வாசிப்பில் நமக்கு ஏற்படுத்திகிறது. ஆனால் அடுத்தடுத்த வாசிப்பில் மேலுமொரு அடுக்கை கண்டுகொள்கிற்றோம். உண்மையில் அந்த பொற்கணம் நிகழ அப்படியான சூழல் வேண்டிருக்கிறது. நம் வீடு லௌகீக வருகையாளர்கள் இன்றி காலியாக இருக்கவேண்டியுள்ளது. நம் வீட்டைச் சுற்றி நீலவால் குருவியும் தேன்சிட்டும் உரிமையோடு பிராது சொல்லும் இடத்தில் தான் அந்த பாதம் காலெடுத்து வைக்கிறது.
***
செவ்வாய்க்கு அடுத்த நாள், ஆனால் புதன்கிழமை அல்ல
வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ
உதவி கோரியோ நன்கொடை திரட்டவோ
எப்போதாவது யாராவது வருவார்கள்
என்பதைத் தவிர்த்தால்
வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர
வருகையாளர் அதிகமில்லை வீட்டுக்கு
அனுமதி கோராத அழைப்பாளர்கள் சிலரும்
அபூர்வமாக நுழைவதுண்டு
விடிந்ததும் காற்றின் வெளிச்சம்
வீட்டைப் பிரியாத பூனையின் காதலன்
காதலனை வேவுபார்க்க வரும் இன்னொரு காதலி
முற்றத்து மரக்கிளை ஒடிந்தது எப்படி என்று
விசாரனை செய்ய வரும் நீல வால் குருவி
தொட்டிப் பூவை பறித்தது ஏன் என்று
பிராது சொல்லும் தேன்சிட்டு
மழைத்துளி விழுந்ததும் கத்தித் துள்ளும் தவளை
அறைக்குள் பதுங்கியிருக்கும் அந்திப் பிரகாசத்தைக்
கைப்பிடித்து இழுத்துச் செல்லும் முன்னிரவு
இவையெல்லாம் தற்செயல் வருகைகள்
இன்று
வெய்யிலின் இளநீர் வாசனையோடு
கண்ணாடிப் பிரதிபலிப்பாய்க் கொதித்து மின்னும்
நட்டநடுப் பகலில்
மூடிய கதவைக் கடந்து
யாரோ நுழைந்ததை உணர்ந்து திகைத்தேன்
கூடத்தில் பார்த்தேன், அறைகளுக்குள் தேடினேன்
யாருமில்லை யாருமில்லை யாருமேயில்லை
எனினும் யாரோ வந்து
வீடு முழுவதும்
ஊன்றி நடந்து திரும்பிய அடையாளாமாய்
தாழிட்ட கதவுக்கு இப்பால்
வாசல் நிலையருகில் தரையில்
ஒரு ஜோடிக் காற்சுவடுகள்
ஆரஞ்சு ஒளியுடன்
விடுவிட்டு ஒளிர்வதைப் பார்த்தேன்
அப்போது முதல்தான்
இதயத் துடிப்பின் நிமிடக்கணக்கில்
ஒரு துடிப்புக் குறைந்ததை உணர்ந்தேன்
அன்று
செவ்வாய்க்கு மறு நாள், ஆனால்
புதன்கிழமை அல்ல.
- சுகுமாரன்
***
முந்தைய கவிதைக்கு நேரெதிரான தருணத்தை பேசுகிறது இக்கவிதை. உள் நுழைதல் முதல் கவிதையென்றால் வெளியேறுதால் இரண்டாவது கவிதை. அனால் ஒரு நுட்பமான வேறுபாட்டை நாம் பார்க்க முடிகிறது. இந்த இரண்டாவது கவிதை முழுவதும் இறந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அனைத்து இழப்புகளும் அதை நீங்கிய பின்னான நினைவுகூறுதல் மூலமே பேருருவம் கொள்கிறது. வீட்டில் இருக்கும் போது பறவையாக இருந்த ஒன்று வெளியேறிய பின் கானகமாக மாறும் விசித்திரத்தை இக்கவிதையில் பார்க்க முடிகிறது. அந்தப் பறவையின் அபூர்வத்தை அது பறந்து சென்ற பின் தான் உணர்கிறோம்.
சுகுமாரனின் புகழ்பெற்ற கவிதைகள் அனைத்தும் தனது வார்த்தை கணத்தால் அர்த்தச் செறிவுகளால் எடை கொண்டிருப்பது. தீவிரத்தையும் அவரது கவிதையையும் பிரிக்க முடியாதது. ஆனால் இக்கவிதைகள் முற்றிலும் வேறுவகையாக நிகழ்கின்றன. இவற்றின் எடையின்மையால் அழகு கொண்டிருக்கிறன. ஒரு சொல்லாட்சி உண்டு. இறுகிய பனிகட்டிதான் உருகும் போது மிகத்தெளிந்த நீரைத் தரும். அப்படியான கவிமனத்தின் உருகுதல் தான் இவ்விரண்டு கவிதைகளும். அதுவே இக்கவிதைகளை மேலும் கூர்ந்து வாசிக்கச் செய்கிறது.
***
அறைவனம்
பிறகு விசாரித்தபோது தெரியவந்தது:
‘அது கானகப் பறவையாம்
அடிக்கடி தென்படாதாம்
அபூர்வமாம்’
எப்படியோ
அறைக்குள் வந்து சிறகு விரித்தது
அலமாரியில் தொற்றி
அது யோசித்த போது
புத்தகங்கள் மக்கி மரங்கள் தழைத்தன
நீர்ப்பானை மேல் அமர்ந்து
சிறகு உலர்த்தியபோது
ஊற்றுப் பெருகி காட்டாறு புரண்டது
ஜன்னல் திட்டில் இறங்கி
தத்தியபோது
சுவர்கள் கரைந்து காற்றுவெளி படர்ந்தது
நேர்க்கோடாய் எம்பிக்
கொத்தியபோது
கூரையுதிர்த்து வானம் விரிந்தது.
அறையைப் பறவை
அந்நியமாய் உணர்ந்ததோ
பறவையை அறை
ஆக்கிரமிப்பாய் நினைத்ததோ?
என்னவோ நடந்த ஏதோ நொடியில்
வந்த வழியே பறவை பறந்தது பறவை
அது
திரும்பிய வழியே திரும்பிப் போனது
அதுவரை அறைக்குள்
வாழ்ந்த கானகம்.
- சுகுமாரன்
***
0 comments:
Post a Comment