செய்யுளிலிருந்து கவிதைக்கு - கடலூர் சீனு

கொண்டுகூட்டிக் கொள்ள முயலுந்தோறும்

குழம்பிப் பொருள்மாறும் அந்த சீரிளமைத் தேகம்

தளை தட்ட,


துறைவிட்டகலாது

மறுகி நிற்கிறது;


மல்லற்பேரியாற்றின்

நீர்வழிப்படூஉம்

எனது புணை. 

(மோகனரங்கன்)

பொதுவாக  எனக்கு உள்ளுக்குள் சொல்லிச் சொல்லி மகிழும் வண்ணம் எழுதப்பெறும் நவீன கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

பின் நவீன அலைக்குப் பிறகு கவிதை அழகியலில் சமகாலம், சிம்கார்டு, அதிகாரம், அரசியல், கட்டுடைப்பு என்றெல்லாம் பேசப்பட்டு,  திட்டமிட்டு ஒழுங்கு, சந்தம், மொழி அழகு, மற்றும் இவை போன்ற  இன்ன பிற எல்லாம் அற்ற எதிர் கவிதைகள் சைடு கவிதைகள் என்றெல்லாம் எழுதப்பட்டு அவற்றின் ஆட்டங்கள் யாவும் சலித்த பின்னர் நவீன தமிழ்க் கவிதை மீண்டும் தனது ஆதி அழகு நோக்கி மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருப்பதன் சாட்சியமாக மேற்கண்ட மோகனரங்கன் கவிதையை சொல்லலாம்.

எப்போதும் போல இக்கவிதையை பின் சென்று சரி பார்க்காமல், அது என் நினைவில் 'என்' கவிதையாக நிற்கும் வகையில் இருந்தே இதை எழுதுகிறேன். 

நேரடியான கவிதை. காமக் கடும்புனலில் தெப்பமாக அடித்துச்செல்லப் படுவதற்கு முந்தைய தயங்கி நிற்கும் கணம், அது எதனால் என்று சொல்லும் கவிஞனின் கவிக் கூற்றாக எழும் கவிதை. 

இக் கவிதை கொண்ட உணர்வு நிலை, சங்க காலம் முதல் இன்று வரை தொடரும் 'என்றுமுள்ள' ஒரு உணர்வு நிலை. அந்த உணர்வை வெளிப்படுத்தும் மொழியும் வடிவமும் செவ்வியல் தமிழின் மொழி அழகும், இலகுவான செய்யுள் ஒன்றின் வடிவ அழகை பாவனையாகவும் கொண்டது. மொழி அழகும் சந்த அழகும் கூடிட ஒரு வாசகன் சும்மா உள்ளே சொல்லி சொல்லி மட்டுமே இக் கவிதை அளிக்கும் உணர்வு நிலையை அதன் இனிமை குன்றாது மீட்டிக்கொண்டே இருக்க முடியும்.

சங்க காலத்தில் இருந்து ஒரு கவிஞர் கிளம்பி 'இன்று'ல் வந்து நின்று இக் கவிதையை வாசித்தார் என்றார், அவர் இன்றைய மோகனரங்கனை தனது சக கவியாகவே உணர்வார். அதே நிலை தான் வாசனுக்கும். அவன் இந்த  மோகனரங்கன் கவிதையின் உணர்வு தளம், மொழி அழகு இவற்றைப் பற்றிக்கொண்டு பின்னால் சென்றால் இன்றைய மோகனரங்கனுக்கும் அன்றைய கபிலனுக்கும் 'கவிதை வெளி'யின் காலத்தில் எந்த தூரமும் இல்லை என்பதை உணர்வான்.  காலத்தால் தொடர்பு அறாத கவிதை எனும்  உயிரியின் அதே உடலின் நடுக்கண்டத்தின் துவக்கம் கபிலன் என்றால் முடிவு மோகனரங்கன் என்று சொல்லலாம்.

2000 இல் நவீன கவிதை வாசிக்க வந்த பலரைப் போலவே, எனக்கும் சங்க இலக்கியக் கவிதைகள் குறித்த ஈடுபாடு ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் நூலில் இருந்தே துவங்கியது. மெல்ல மெல்ல சங்கக் கவிதைகளை வாசிக்க நானே எனக்கொரு வழிமுறை உருவாக்கிக்கொண்டேன். அந்த வழிமுறையின் படி நான் ரசித்த வெள்ளிவீதியார் கவிதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன் ‘திதலையும் பசலையும்’ எனும் தலைப்பில் நான் நிகழ்த்திய ரசனை உரையாடல் எனக்கு அக்கவிதைகள் வாசிப்பது சார்ந்து மேலும் பல வாசல்களை அளித்தது.  

உதாரணமாக கீழ்கண்ட வெள்ளி வீதியார் கவிதை இது வரை நமக்கு எவ்விதம் வாசிக்கக் கிடைத்தது?

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்-

திதலை அல்குல் என் மாமைக் கவினே

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

மேற்கண்ட விதத்தில்தான் இல்லையா. ஒவ்வொரு சொல்லின் பொருள். பின்னர் ஒட்டு மொத்தமாக சொற்றொடர்கள் வழியே கிடைக்கும் ஒட்டு மொத்த பொருள். அந்த பொருளில் இருந்து அது அளிக்கும் செய்தி. மிக அழகாக சொல்லப்பட்ட செய்தி. 

மாறாக இந்த சொற் பொருள் அதன் படியிலான செய்தி விளையாட்டுக்கள் அனைத்தையும் உதறி, இதை செய்யுள் வடிவ 'கவிதை' என்று கண்டு வாசித்தால், 

கன்று ஈன்ற பசுவுக்கு அந்த கன்றின் ஆற்றலுக்கு வேண்டிய சத்துக்களுடன் முதலில் சுரக்கும் பால் தீம் பால் (சீம்பால், திரட்டுப்பால் என்று நம்மிடம் இப்போதும் புழங்குவதுதான் இந்த தீம்பால்) என்று உணர்வோம். அத்தகு பால் கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் மண்ணில் வீணாவது போல எனும் வரிகள் வழியே அவளது புலம்பலின் தீவிரத்தை உணர்வோம்.  ரத்தம் பாய்ந்து உன்மத்தம் கொண்டு மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு திதலை என்றும், ரத்தம் இழந்து சோகை கொண்ட மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு பசலை என்பதையும் உணர்ந்தால் மேற்கண்ட கவிதை கொண்டிருக்கும் எரோட்டிக் உச்சம் விளங்கும். 

ஆக சங்கக் கவிதைகளை வாசிக்க முதல் மற்றும் சரியான வழி, அவை 'அன்றைய' செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்ட, 'என்றுமுள்ள' உணர்வுகளைக் கொண்ட, அதை  'தனித்துவம்' கொண்ட காட்சி வழியே வெளிப்படுத்தும் 'இன்றைய' கவிதைகள் என்று அதை அணுகுவதே. 

துரதிஷ்ட வசமாக நான் சங்கக் கவிதைகளை அறிமுகம் செய்து கொள்ள தேர்வு செய்த தவறான நூல்களில் தலையாயது பொது அறிவு ஜீவி வாத்தியார், எழுத்தாளர் சுஜாதா உரை எழுதிய குறுந்தொகை 401 காதல் கவிதைகள் ஒர் எளிய அறிமுகம். 

பிழைகள் மலிந்த நூல். கன்றும் உண்ணாது என்று துவங்கும் வெள்ளி வீதியார் கவிதையை அந்த நூலில் கொல்லன் அழிசி எழுதியதாக கண்டிருந்தது.  (என்னிடம் உள்ளது முதல் பதிப்பு. அடுத்த பதிப்பில் அது திருவள்ளுவர் என திருத்தம் கண்டிருக்கலாம். தெரியவில்லை) . மேலும் சுஜாதா அவர்கள் அளித்த உரையில் ’உ’  மட்டுமே இருக்கிறது ’ரை’ யை காணவில்லை. இவற்றையெல்லாம்விட சங்கக் கவிதை ஒவ்வொன்றிலும் எந்த அம்சம் அதைக் கவிதை என்று ஆக்குகிறது என்பது சுஜாதாவுக்கு புரியவே இல்லை. உதாரணத்துக்கு சுஜாதா ’உ’ எழுதிய கீழ்கண்ட இந்த கவிதை

மாசு அறக் கழீஇய யானை போலப் 

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் 

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் 

நோய் தந்தனனே- தோழி; 

பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே.

சுஜாதா உரை.

கண்ணின் நிறம் 

அழுக்குப்போக கழுவப்பட்ட யானையைப் போல பெருமழையினால் கழுவப்பட்டு பசுமைபெற்ற நாட்டைச் சேர்ந்தவன் எனக்குத் தந்த நோயால் என் கருப்பான கண் பச்சையாயிற்று.

முடிந்தது கதை. முதலில் மேற்கண்ட பாடலே சொற்பிழை கொண்டு பதிப்பிக்கப்பட்ட பாடல். அது ஒரு தலைச் சேக்கும் அல்ல, ஒரு கலைச் சேக்கும். கலை என்றால் இங்கே கலை மான்.

அது ஒரு பாறை. எப்படிப்பட்ட பாறை? 

இரும்பு போல கரிய வண்ணம் கொண்ட, கரடு முரடான சருமம் கொண்ட, மழை 'அடித்துக்' கழுவிய, மாசு அற நீராட்டப்பட்ட யானை போன்ற, பாறை. அதில் தனிமை ஏக்கம் கொண்டு அமைந்திருக்கிறது 'ஒற்றைத்' கலை மான். 

அந்த நிலத்தைச் சேர்ந்தவன் எனக்களித்த நோயால் என் குவளைக் கண்கள் பசலை வண்ணம் கொண்டதே தோழி.

இதில் காதலியின் கண்கள் கருங்குவளை என்றோ செங்குவளை என்றோ கொண்டால் அந்த வண்ணம் போய் வெளுத்து விட்ட மலராக இந்த நோயால் இப்போது அவள் கண்கள் மாறி விட்டது. 

எத்தனை வண்ணங்கள் செறிந்த  கவிதை. மழை நின்ற பசுமை வெளியில் கரும்பாறையில் நின்றிருக்கும் பொன்னிற மான் பின்னணியாக கார்வண்ண வானம். இது எதுவுமே சுஜாதாவுக்கு உள்ளே சென்று சேராவிட்டாலும் பரவாயில்லை, கண்கள் பச்சை ஆனதே என்று அவர் விளக்கியது அதி கொடூரம். பசலையில் இருந்து அவர் மனம் பசலைக் கீரைக்கு சென்று அதிருந்து பச்சைக்கு சென்று விட்டது போலும்.

ஆக சங்கக் கவிதைகளை அறிய செய்யக் கூடாத முதல் விஷயம், பிழையான, பாப்புலர் பல்துறை அறிவு ஜீவி எழுத்தாளர்கள் எழுதிய உரை நூல்களை துணை கொள்ளாதிருப்பது.

காட்சிப் பூர்வமான சங்கக் கவிதைகளைப் பொருள் கொள்ள புதிய வாசகன் அடையும் முதல் இடர் என்பது, பண்டைய உரை மரபில் உள்ள காட்சி சார் வறுமை. பசலை திதலை போன்ற அனைத்துக்கும் ஒரு வகை தேமல் என்று மட்டுமே இருக்கும். பெரும் தேமல் பிரச்சனையில்  பண்டய தமிழ் இளம் பெண்கள் சிக்கி சீரழிந்திருக்கிறார்கள் என்றே உரைகள் வழி ஒருவர் உணரக் கூடும். அதே போல ஒரு வகை மரம், ஒரு வகை பறவை, இப்படியே நீளும். கொஞ்சம் முயன்றால் இன்றைய இணைய வசதி வழியே அந்தக் குறையை தாண்டி விட முடியும். உதாரணமாக ஒரு கவிதையில் கர்ப்பமான பச்சை பாம்பு போல, இதழ் விரிக்க துவங்கும் கரும்பு என்று கவிஞர் சொல்கிறார். இரண்டு படங்களையுமே நான் இணையத்தில் கண்டெடுத்து விட்டேன். அதே போல இக் கவிதைகளில் வரும் பறவைகள் குறித்தும் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயமோகன் ‘குருகு’ என்றொரு கட்டுரையே எழுதி இருக்கிறார்.

காட்சி இன்பம் அளவே செவிக்கின்பம் அளிக்கும் வரிகளும் சங்க கவிதைகளில் உண்டு, ஓய் என்று அழைக்கிறது குயில், நள் என்று ஒலிக்கிறது யாமம். பசு மாட்டின் கழுத்து மணி ஓசை என இத்தகு ஒலி சார்ந்த அழகுகள் நிறைய உண்டு.

நாசி நுகர்வு சார்ந்த அழகுகளையும் நிறைய கவிதைகள் கொண்டிருக்கிறது. தேன் வாசம், மலர் வாசம் கொண்டு மழை பொழிகிறது. என்றோ பிரிந்து சென்ற காதலன் சூடி இருந்த மலரின் மணம் இப்போதும் தன் தோளில் இருப்பது போல நினைவில் எஞ்சி இருப்பதாக காதலி ஒருவள் சொல்கிறாள்.  அதிலும் நுட்பங்கள் பல உண்டு உதாரணமாக இந்த கவிதை

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே

நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே

எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று

பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்

யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப

வேங்கை கமழுமெஞ் சிறுகுடி

யாங்கறிந் தனையோ நோகோ யானே.

இக்கவிதையில் பல்லோர் துஞ்சும் பானாட் கங்குலில், ஓங்கிய மலைப் பாதையில் காதலன் காதலியைத் தேடிப் போகிறான். அவனைக் கண்ட சந்தோஷம், ஆச்சர்யம் தாங்காமல் காதலி கேட்கிறாள்,  இரவில் இந்தக் கடும் மழையில் விண் நோக்கி வழி தேற வழி இல்லை. புரண்டோடும் வெள்ளத்தில் மண் நோக்கி வழி தேரவும் வழி இல்லை. எவ்விதம் எங்கள் சிறு குடிக்கு வந்தாய்? இங்கு வீசும் மெல்லிய வேங்கை மர வாசம் கொண்டா? 

செய்யுளின்படி நேரடி சொல்லுக்கு சொல் வழியே கொள்ளும் பொருளில் இல்லை இக் கவிதை. இந்த செய்யுளை கொண்டு  கூட்டிப் பொருள் கொள்ளுதல் போலவே அது அளிக்கும் காட்சி வழியே கொண்டு கூட்டி ஒரு கவிதை வாசகன் சென்றடையக் கூடிய இடம் இது. 

தொட்டு உணரும் அனுபவம் சார்ந்த அழகிய கவிதைகள் பலவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று கீழே 

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

இது காதலி எப்படிப்பட்டவள் என்று காதலன் கூறுவது.

கோடையில் அவள் குளிர்ச்சி தரும் சந்தனம். எப்படிப்பட்ட சந்தனம் என்றால் எவ்வுயிரும் அணுக இயலா உயர்ந்த  மலை உச்சியில் அங்கே உறையும் தெய்வத்தின் பின்னே வளர்ந்த மரத்தின் சந்தனம். பனிக் காலத்தில் அவள் வெம்மை. எப்படிப்பட்ட வெம்மை கொண்டவள் என்றால், சூரியனின் வெம்மையை வாங்கிக் (ஐ -அழகு)  குவிந்த தாமரையின் உள்ளே பொதிந்திருக்கும் வெம்மை கொண்டவள். இயல்பாகவே தாமரை குளிர்ச்சியின் பகுதி. ஐ எனக் குவிந்த தாமரை தனக்குள்ளே பொத்தி வைத்திருக்கும் வெம்மையைக் கொண்டவள்.

ஐம்புலன் கடந்து உள்ளுணர்ந்து கொள்வதன் வழியே உவகை அளிக்கும் கவிதைகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;

பிடி பசி களைஇய பெருங்கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும்

அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே

தோழி, உன் காதலன் சென்ற வெம் பாதையில், தன் பிடியின் தாகம் தணிக்க மரப் பட்டையை உரித்து உண்ணக் கொடுக்கும் வேழத்தைக் காண்பார். பெரும் காதலன்  (திரும்ப வருவார்) பெருங் கருணை மழை உன் மீது பொழிவார்.

எல்லா உணர்வுமே குறிப்பால் உணர்த்தப்பட்டுவிடும் கவிதை. காதலன் தன்னைக் களிறு என்றெண்ணும் ஒரு ஆல்பா மேல். வெம்மையில் நீருக்கான யானையின் தவிப்பு என்ன விதமாக இருக்கும்? அப்படி தனது காதலனுக்குகாக தவித்திருக்கிறாள் காதலி. அவளுக்கு  அத்தகைய்ய காதலிக்கு, இத்தகு காதலன் நல்குவது அன்பின் பெரு மழையாகத் தானே இருக்கும்.

இந்த ஐம்புலன் உள்ளுணர்வு இவற்றுக்கு வெளியே நிற்கும் அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணம்

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடரகத்து இயம்பும் நாட! எம்

தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?

விடரகம் எனில் மலைச் சாரலில் பாறை மேல் பாறை நின்று, கூரையும் முற்றமுமாக  இயல்பாக அமைந்த ஒரு பகுதி. பெரும்பாலும் சமண துறவிகள் மலை மேலே இத்தகு நிலைகளை தேர்வு செய்து தங்கிக் கொள்வார்கள். சிறந்த உதாரணம் குடுமியான் மலை சமண படுக்கைகள் உள்ள இடம். வெயில் படாது. கொட்டும் மழையில் ஒரு சொட்டு கூட உள்ளே வராது. 

விரைந்து ஓடும் அருவி, அந்த விடரகத்து சொல்கிறது, மேலே மேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருக்கிறது என்று.

அந்த நாட்டை சேர்ந்தவனே 

(மழை இல்லாமல் ஆகி விட்டால்  அருவி தேய்ந்து  வரைமுற்றமும் அருவியும் கொண்ட உறவு   இல்லாமல் ஆகி  விடுவதைப்  போல)  காமம் இல்லா விட்டால் நமது உறவும்  தேய்ந்து இல்லாமல் ஆகி விடுமா?  என்று கேட்கிறாள். 

இங்கே விடரகமும் அருவியும் காதலன் காதலி போலவே பேசிக்கொள்கின்றன. அவை வெறும் இயற்கையின் அசைவு மட்டுமே அல்ல. இப்போது அவை ஆன்மாவும் உணர்வும் கொண்ட உயிர்ப் பொருட்கள் .

சங்க இலக்கியத்தை ஆக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்று இது. பாறைக்கும் அருவிக்கும் உணர்வு உண்டு என்று அறிந்திருப்பது அது. அது ஒரு ஆதிப் பழங்குடி மனம். கை வளை கழலுவது போல திரும்ப திரும்ப அதில் நிகழ்வது ஒரு செவ்வியல் மனம். இந்தக் கலவையே சங்க இலக்கிய செய்யுள்களின் அடிப்படை. இதற்குள் வெள்ளி வீதியார் கபிலர் போன்ற கவி ஆளுமைகள் அவர்களின் தனித் தன்மையுடன் அழுத்தமாகவே வெளிப்படுகிரார்கள்.

அந்த வகையில் சங்க இலக்கியப் பாடல்களை அணுகி ரசிக்க விரும்பும் துவக்க நிலை வாசகன் செய்ய வேண்டியது, சுஜாதா போன்ற பிழைகளை முதல் தேர்வாக கொள்ளாதிருப்பது. ஜெயமோகனின் சங்ககச் சித்திரங்கள் போன்ற நூல்கள் வழியே அடிப்படைக் கவிதை ரசனைப் புரிதலை அடைவது. அகம் புறம் எனும் தத்துவ நோக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு, துணைக்கு உதவும் சொற் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, திணை துறை பகுப்புகள், தலைவன் தலைவி கூற்று போன்ற வியாக்யானங்களை உதறிவிட்டு, நேரடியாகவே செய்யுள் வடிவம் கொண்ட நவீன கவிதைகள் இவை எனும் போதத்துடன் இந்த உலகில் நுழைவது. இயன்றவரை  இக் கவிதைகள் அளிக்கும் காட்சி சித்திர நுட்பங்களை தேடி காட்சியாக காண்பது. குறிப்பாக வெள்ளி வீதியார், கபிலர் போன்ற ஒரே ஆளுமையின் கவிதைகளை மட்டும் தேர்வு செய்து தொடர்ந்து வாசிப்பது.

அனைத்துக்கும் மேல் கவிதை வாசகனை இயக்கும் இக் கலை வடிவம் மீதான தொடர் ஈடுபாடும் கற்பனை வீச்சும்  அவனுக்கு சங்கப் பாடல்கள் சார்ந்த  அனைத்து வாசல்களையும் திறந்து கொடுக்கும்.

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

சுஜாதா தமிழ் விக்கி பக்கம்

சங்க சித்திரங்கள் வாங்க...

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive