ஆகா என்றொரு அசைவு
சரியாக அதை சொல்லனும் எனில்
ஆகா என்றுதான் சொல்ல முடியும்
இந்தப் பத்து வருடத்தில்
திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவு போல இருந்தது அது
வளர்மதி ஸ்டாப்
பாலம் கடக்கும் போது
சரியாகப் பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்
மீனை நீர் தொடுவது மாதிரி
ஒரு கணம் திரும்பி
தலையை இரு கைகளாலும் தாங்கி அதிசயித்தாள்
இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள் தான் அழகு என மலர்ந்தாள்
எனக்கு அதை கண்டதும்
’ஆகா’ என்று இருந்தது
இந்த ஆகா இல்லாமல்தானே
இதெல்லாம் சீரழிந்தது
இந்த ஆகாவுக்காகத்தானே
கனவுகள் துடித்தன
இந்த ஆகா இல்லாமல்தானே
உடல்கள் உடல்களாக மட்டுமே
அறை திரும்பின தனித்திருந்தன
அவர்களுக்குள் என்ன என்று கூட
எனக்குத் தெரியாது
இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்
ஆனால்
அவளுடைய இன்றைய அற்புதம் அவன் தான்
இந்த நகரத்தின் இன்றைய அசைவு அந்த ஆகா தான்.
*
கொஞ்சம் இசையின் கவி உலகுக்கு நெருங்கி வரும் கவிதை. எல்லாமே வழக்கப்படி நடக்கும் சக்கையான மற்றொரு தினம். அதில் நிகழும் சின்னதொரு உடைப்பு. அந்த நாளையே உயிர்ப்புள்ளதாக மாற்றிவிடுகிறது. பிழைத்துக் கிடக்கப் போராடி யந்திரம் என்றாகிவிட்ட வெறும் உடலில் வாழும் தருணம் ஒன்று வந்து உயிரும் உணர்வும் நிகழும் கணம்.
அழைக்கும் தீ
காற்றில் அலையும்
ஒரு சுடர்போல்
தீண்டு என ஏங்குகிறாய்
தீண்டிவிட்டு விலக முடிந்த
தீயா இதுவென
யோசித்தவன்
குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்
அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்
சுடர் அணையும்வரை
அத்தனை வெளிச்சம்
இருளென்ற ஒன்று
இல்லவே இல்லை என்பது மாதிரி.
*
முதல் வாசிப்பில் ஒரு காதல் கவிதையாக இதை வாசிக்கலாம் என்றாலும் இந்த மொழிக்கட்டுமானமும் உணர்வுக் கட்டுமானமும் அளிக்கும் கற்பனை சாத்தியம் இன்னமும் ஆழம் கொண்டது.
விஷ்ணுபுரம் நாவலில் காமம் வழியே மெய்வழி காண்பவனாக மிகுந்த சஞ்சலம் கொண்டவனாக பிங்கலன் இருப்பான். அவன் யாக நெருப்புக்குள் விரலை விடுபவனாக அறிமுகம் ஆவான். பின்னர் வளர்ந்து வளர்ந்து இறுதியில் ஒரு கணமும் தயங்காது பச்சை நெருப்பில் பாய்ந்து விழுந்து காணாமல் போய் முடிவான். பிங்கலனின் அல்லது அத்தகு ஆத்மீக தவிப்பின் மற்றொரு கவிதை வெளிப்பாடாக மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.
நீ மற்றும் நான்
நீ ஆம்பவிலை
நானதில் வழிந்தோடும் எத்தனையோ திவலைகளில் ஒரு திவலை
நீ தரு
நான் உன்னில் துளிர்த்து பச்சையத்தில் ஒளிர்ந்து
பழுப்பேறி அகாலத்தில் உதிரும் எவ்வளவோ இலைகளில் ஓர் இலை
நீ வான்
நான் உன்னில் அலைந்து தடயமற்று மறையும் கோடிப் பறவைகளில் ஒரு பறவை
நீ அண்டவெளி
நானதில் எரிந்துதிரும் எண்ணிறந்த மீன்களில் ஒரு மீன்
நீ கடல்
நானதில் ஜனித்து
அலைந்தலைந்தோய்ந்து மரிக்கும் கோடி கோடி அலைகளில் ஓரலை
நீ காளி
நானுன் கழுத்தில் முண்டமற்று விழிதிறந்து கிடக்கும் தலைகளில் ஒரு தலை.
*
இலை, தரு, வானம், பேரண்டம் என்று விரியும் இதன் வைப்புமுறை வழியே எழும் காளியின் விஸ்வரூப சித்திரம் தீவிர கவிதைகள் அடைந்த வெகு சில அபூர்வங்களில் ஒன்று.
மொழியால், கூறுமுறையால், படிமங்களால், தனித்துவமான உள்ளடக்கத்தால், உண்மையான உணர்வுகளால், அவற்றின் ஆத்மீகமான பெருமதியால் குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதி தீவிரத் தமிழ் இலக்கியக் களத்துக்குள் அடி எடுத்து வைத்திருக்கும், இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருது பெரும் திரு. சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
***
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment