கோடு வரைவதெனின்
சரி
வரைந்துகொள்
இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்
எடுத்துக்கொள்வது
எதிர்ப்புறம் என்பாய்
இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்
முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்?
மாறிமாறி
எதிர்ப்புறக் குழப்பம்
இருபுறமும் உனது?
இருபுறமும் எதிர்ப்புறம்?
எதுவும் எவ்வாறும்
இல்லை என்று சலிப்பாய்.
களைந்து உறங்கும் உலகம்
ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்
இது அது என்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன் முடிவு
அதனால்
கோடுவரைவதெனின்
வரைந்துகொள்.
தேவதேவன் அபியின் கவிதைகள் தத்துவச்சுமையில்லாதவை என்கிறார். எனக்கோ, ‘கோடு’ என்ற கவிதை எழுதவிருக்கும் கட்டுரை, கிறிஷ்த்மஸ் விடுமுறைக்கு எங்கு போகலாம் என்று எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது. குழப்பம் இருக்கத்தான் செய்யும், போகவேண்டும் என்றால் போ, எழுதவேண்டும் என்றால் எழுது என எனக்குக் கட்டளையிடுகிறது. தத்துவார்த்தமாக பதில் சொல்கிறது.
உலகக்கால்பந்து விளையாட்டுப் போட்டி நடக்கும் இந்த நாட்களில், யார் ஜெயித்தால் என்ன பார்ப்பதே ஒரு அனுபவம். ஜெர்மன், பிரான்ஸ், க்ரோஷியா என்று யார் ஜெயித்தால் என்ன, அபியைப்போல ஆடுகின்ற பந்தின் பக்கம் நான்.
அதுவே ஜெயிக்க
அதுவே தோற்க,
பந்துக்கு என்ன கிடைக்கிறது.
பந்தும் ஆடும்
காலும் ஆடும்
யாரை யார் ஆட்டுவிப்பது?
அசைவும் இயக்குமும் இன்றி உலகம் எங்கனம் இயங்கும்? உருவம் இல்லா அருவங்களை அபி தன் மொழியால் நகர்த்தவும், புரளவும், தொடவும் செய்கிறார். ஓடும் பஸ்ஸில் அமர்ந்துகொண்டு நகரும் மரங்களை வேடிக்கை பார்ப்பவனாக அபியின் கவிதைகளை வாசிக்கிறேன் நான்.
மைதானம்
சலிப்போடு
புரண்டு கொடுக்கிறது.
மாலை-திரும்புதல் கவிதையில் ‘புரண்டு படுக்க இடமின்றி ஒற்றையடிப்பாதை சலிக்கிறது’ என்கிறார்.. எனது வலைப்பக்கத்திற்கு , ‘காற்றின்நிழல்’ என்று பெயர் வைத்துள்ளேன். காற்றுக்கு நிழல் உண்டா என்றால், ‘நிழல் தொட்டுவிட்டு எழுப்பிப்போனது’ என்று சொல்லும் அபியின் ரசிகன் நான், ஆம் என்று பதில் சொல்வேன்.
அபி எதையும் ஓங்காரமாகச் சொல்வதில்லை. வாழ்க்கையின் சிக்கல்கள், துக்கங்கள் , இழிவுகள் , அழிவுகள் என புலம்பல்களையும், அதற்கான விடைகளையும் பகிர்வதில்லை. இல்லாது இருத்தலே இருத்தல் எனும் அவர் தெளிவு என்ற ஒன்றே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.. அவருடன் உடன்படாமல் இருக்கமுடியவில்லை.
Communication கவிதையில் சொல்லப்படும் தெளிவு.
எப்படியும்
கலங்கித் தெளிந்தபோது கண்டோம்
தெளிவும் ஒரு
கலங்கலேயாக.
தெளிவு கவிதையில் , தெளிவைப் பொய் என்றே நிறுவுகிறார்.
தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைந்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்.
விஷ்ணுபுரம் விருது விழா – 2019-ல் அபிக்குப் பொன்னாடை போர்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்று அவர் எனக்குக் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த , அபியின் கவிதைகள் புத்தகத்தை எனது படுக்கையின் அருகில் இருக்கும் மேசையில் வைத்திருப்பேன். மயிலறகாய் தடவும் அவரது கவிதைகளை உறங்கும் முன் வாசிப்பது என் வழக்கம். அதில் எனக்கு மிக விருப்பமான ஒன்று , நானும் இந்தக் கவிதையும். நானே வாசிப்பதைவிட, அந்தக் கவிதையை , கவிஞர் ரவிசுப்பிரமணியன் மெட்டு அமைக்க பாடகி ஹரிணி அந்தக் கவிதையை பாடியது கேட்கப் பிடிக்கும்.
***
0 comments:
Post a Comment