ஒரு ராட்டினத்தில்
உட்கார்ந்த சில மணி நேரத்தில் தரைலியிருந்து
வானம் வரைக்கும் சிவ்வென்று சென்று, அது சுற்றும் இடத்திலிருந்து காட்சிப்பரப்பை வெவ்வேறு கோணத்தில் கண்டு வியக்கும் வாய்ப்பை அருளும்.
அது போல் சம்யுக்தா மாயாவின் டல்ஹவுசியின் ஆரஞ்சு இரவு, தீ நின்ற பாதம் ஆகிய இரு தொகுப்புகளையும் ஒருசேர வாசித்த போது பிறப்பு முதல்
இறப்பு வரை இருக்கும் மனிதனின் ஆதி உணர்வான தனிமை, காதல், பிரிவு, வாழ்வில் மரணத்தின் இடம், இறப்பு எழுப்பும் கேள்வி, அது அழைத்துக் செல்லும் மெய்மையின் பாதை என
எல்லாவற்றையும் சுற்றிப்பார்க்க வைக்கும்
ஒரு ராட்டினப் பயணம் போலானவொரு
அனுபவத்தை சம்யுக்தா மாயாவின் கவியுலகம்
கொடுத்தது .
மானுடம் விலக்கி வைக்க முடியாத ஓர் உணர்வு தனிமை. அருகில் யாருமில்லாத புறவய தனிமை ஒருபுறம், தன்னகத்தை தான் மட்டுமாக கையாள முடியாத அகத்தனிமை மறுபுறமென்று எப்போதும் தொடரும் ஒன்று அது. அத்தனிமை தனக்கே உரித்தான அடர்த்தியதுடன் உக்கிரமாய் எழுந்து நிற்கும் தருணம் இரவுகள். அப்படி தனிமை கொப்பளிக்கும் இரவுகளை ஓர் கழிவிரக்கம் போல் அல்லாமல் ஒரு பூனை குட்டியை மெதுவாய் வருடிக் கொடுத்து ஒரு தனி அறையில் விடுத்து 'கொஞ்ச நேரம் அமைதியாக சமத்தாக ஓர் இடத்தில் இரு, சற்று நேரத்தில் வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு நகர்வது போல் தனிமையை அதன் போக்கில் அனுமதிக்க சொல்கிறது மாயாவின் கவிதைகள். சிறிது நேரம் அதை துளியும் சீண்டாமல் இருந்தாலே போதும், தொட்டால் கீறிவிடும் அளவுக்கு வால்நுனி போலான தனிமையின் வீரியம் கூட மறுநாள் விடியும் பொழுது கூர்மை குறைந்து மழுங்கியிருக்கும் என்று ஆறுதல்படுத்துகிறது மாயாவின் 'இரவை தனியே இருக்க அனுமதி' என்ற கவிதை.
'இந்த இரவை மட்டும்
கடந்து விட முடிந்தால்
போதும்
தொடரும் பகல்
எல்லாவற்றையும்
துடைத்து விடும்
முற்றிலுமாக
அதன் பின்னர் பகலுக்கு
கடல் ஒரு பெரும்
சிறகுலர்த்தும் காகம் மட்டுமே'.
'ஓயாத அலைகள் கொண்ட கரிய கடல்' என்பது இக்கவிதையில் வரும் உருவகம். மாயாவின் கவிதைகளில் கருமை என்ற படிமம் தொடர்ந்து வருவதை காணலாம். சரியான தருணத்தில் நடக்க வேண்டிய ஒன்று சற்று தாமதமானால் கூட அது அரங்கேறி முழுமை பெரும் தன்மையை தவறவிட்டுவிடும். ஒரு பழத்தை அறிந்து சிறிது நேரம் காற்றில் காயவிட்டால் கருத்து விடுவது போல், சற்றில் நிலை மாறக்கூடியவை ஏராளம். மனித இருப்பிற்கும் கூட நிகழ்கணத்தை முழுதாய் அனுபவிக்காமல் தவறிவிடும் ஒவ்வொரு கணமும் பேரிழப்பே. மாயாவின் கறுக்கும் தேநீர் என்ற கவிதையில் 'கறுத்துக் கொண்டிருக்கும்' என்ற சொல்லாடல் காலத்தையா? எதை? என்ற கேள்வியை எழுப்புகிறது.
'நேரம் செல்லச் செல்ல ஆறிக்கொண்டே இருக்கிறது
நீயும் அருந்தாத நானும்
பருகாத
கறுத்துக் கொண்டிருக்கும்
இவ்வளவு ‘தேநீரை’
எந்த கடலில் போய் கொட்டுவது?'
அன்னபூரணி என்ற கவிதையில் காளியை சிவன் வெல்லும் ஆற்றாமையை தாள இயலாமல் ஏமாற்றத்துடன் உக்கிரமாய் எழுந்தருளிய போது 'கரிய எலுமிச்சையென உருள்கிறது காளியின் கண்கள்' என்று சம்யுக்தா மாயா கருமையை தன் கவிதைகளில் கையாளும் விதம் சுவாராஸ்யமானது. இக்கவிதை எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடையும் ஒரு உச்ச உணர்வை கடத்துகிறது.
'ஒரு கை அன்னத்திற்காக
அவள் வாசலில் பிச்சையோடு
ஏந்தித்
காத்திருந்தது நினைவிற்கு
வர
சவமாய் அடங்குகிறான் சிவன்'
கடவுளர்களில் ஆரம்பித்து
மனிதர்கள் வரை ஆண் பெண் உறவுக்கு இடையே எஞ்சும் 'எவர் பெரிது' என்ற ஆணவ சிடுக்குகளுக்கும் அது
திரியும் வெறுப்புகளுக்கும்
தீர்வென்பதே இல்லை. ஆனால் ஆண் பெண்ணிடமும் , பெண் ஆணிடமும் எந்த ஆணவத் தளைகளும் இல்லாமல் முற்றும் அடிபணிந்து
சரண்புகும் இடங்களும் உண்டு. அவ்விடத்தை தத்துவார்த்தமான உச்சங்களுக்கு எடுத்துச்
செல்லாமல் 'ஒரு ஆண் அன்னத்திற்காக நாடுவது பெண்ணின் தயவை தான்' என்ற எளிய இடத்தில் சென்று சேர்த்தது அழகாய் பொருந்தி நின்றது.
ஜெயமோகனின் குமரித்துறைவியில் 'மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன? இரு விளையாட்டுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒன்றையொன்று ஆடிபோல் பிரதிபலித்து பெருக்கிக் கொள்கின்றன' என்று சொல்லப்பட்டிருக்கும். சம்யுக்தா மாயாவின் அன்னபூரணி, மாதொரு பாகனை என்ற கவிதைகளை வாசித்த போது, ஆம்! எத்தனை உண்மையான வார்த்தைகள் அது என்று தோன்றியது.மாயா தன் கவிதைகளில் தெய்வங்கள் விளையாட அனுமதித்திருக்கிறார்.
'பொற்றாமரைக் குளத்திடம் தேம்புகிறாள் அவள்
ஊர் எல்லைக் காவலில் சற்று
நீ கண்ணயருகையில்
வெற்றுக் கால்களுடன் வறண்ட
நதிப்படுகை
தாண்டி தளர்ந்து செல்கிறாள்
மீனாட்சி
என்ன சொல்லி
சமாதானப்படுத்துவாய்
செய்வதறியாது திகைத்து
நிற்கும்
மாதொரு பாகனை...
அன்னபூரணி கவிதையில் கையாளப்பட்டிருக்கும் எதார்த்தம் ஒரு
ஏற்றுக்கொள்ளலோடு சேர்ந்து கற்பனாவாத மொழித்தன்மையுடன் 'சிடுக்கு' என்ற கவிதையில் அழகான ஒரு உயரத்தை
அடைந்திருக்கிறது. காதலித்து மணந்தவர்களிடம் கூட திருமணத்திற்கு
முன்னிருந்த குழந்தைத்தனமான தூய காதலை மணமான பின் அதே நிலையோடு தக்க வைத்துக்
கொள்ள முடிவதில்லை. காரணம், கனவிலும் கற்பனையிலும் உலாவித் திரிந்த
காதல் பருவத்தின் இனிப்பை நடைமுறை எதார்த்தம் திடுக்கிட வைத்து கலைக்கிறது. அந்த
அறைகூவலை எதிர்பார்த்தும் ஏற்றுக்கொண்டும் தான் மணவாழ்க்கையில் அனைவரும்
நுழைகின்றனர். ஒருத்தி திருமணத்திற்கு முன்பு தன்னை காதலித்த ஆண்களை எல்லாம்
ஒவ்வொரு விதமான சாகசப் பொருட்களாக மாற்றி தன் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு
நினைவுகளாக இயங்க அனுமதிக்கிறாள். ஆனால் மேட்ரிமோனியில் சந்தித்து தன்னை
மணந்து கொண்ட கணவனை பிறிதொன்றாக
மாற்றமுடிவதில்லை என்பதை கையில் வாங்கிய ஓர் பரிசுப்பொருளை அப்படியே ஏற்றுக்கொண்டு
புன்னகைக்கும் ஒரு அழகிய ஏற்பை வெளிப்படுத்துகிறது.
'திருமண வலைத்தள
சுயவிவரப் பக்கத்தில்
அவள் ஜீவகாருண்யத்தை மெச்சி
நேசித்து மணந்தவனை
இன்னமும் அவனாகவே
வைத்திருக்க நேர்ந்தது
குறித்து
மிகுந்த குழப்பம்
இருக்கிறது
அவளிடம்.'
இன்னும் அவனாகவே வைத்திருக்க நேர்ந்தது என்பதில் வரும் குழப்பத்தோடு அவனை அவனாகவே இருக்க அனுமதித்திருக்கும் கனிவையும் கவனிக்க முடிகிறது. பழகிய உறவுகள் யாவும் வாழ்வு முழுதும் தொடரும் என்று இயற்கை வாக்களிப்பதில்லை. ஆனால் நட்பிலோ, காதலிலோ பிரிந்தவர்கள் அவ்வுறவின் நினைவாக ஒன்றை வாழ்க்கை முழுதும் சுமந்திருப்பார்கள். பிரிவின் காரணம் யாதென்று தெரியாமல் பிரிந்த ஒரு உறவைப் பற்றி 'அரூப முத்து' என்ற கவிதை பேசுகிறது.
ஒரு மாதுளம்பழம்
பிரியத்துக்குரியவர்களை
உனக்கு நினைவூட்டுவதாய்
சொல்வாய்
தொலைவிலிருந்து பசியாற்றும்
திறன் - அதற்கு
உண்டெனும் உனது
நம்பிக்கைகள்
இப்போதும் உண்மையா?
'தொலைவிலிருந்து பசியாற்றும் திறன்' என்னும் சொற்கள் கனிவை, மானுட உறவுகள் மீதான நம்பிக்கையை பிடித்துக் கொள்ள வைக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை கத்தி முனையில் நடப்பது போலான போராட்டக் களமொன்றை வழியெங்கும் விரித்து வைத்திருக்கும் வாழ்வின் இறுக்கத்தை தளர்த்தி மலர வைக்க உறவுகளின் பிணைப்பும், மனிதமனங்கள் விளையாடும் வெளியும் தேவை. தன் காதலிக்காக வாங்க நினைத்து வாங்காமல் வந்து நிற்கும் காதலனின் கைகளில் அந்த மலர்களை கண்டுகொள்ள முடிந்த காதலியை 'பிரத்தியேகம்' என்ற கவிதையில் வாசிக்கையில் தூய புன்னகை எழுந்தது.
'நல்ல வேளை
ஒரு சிறு புன்னகையுடன்
நீ அந்தப் பிரத்தியேக
மலர்களை
கண்டு கொண்டாய்
வாங்கி வந்திருந்தால்
அவை உனக்கானதாய்
மட்டுமல்லாமல்
எல்லோருக்குமானதாய் ஆகியிருக்கும்.'
காயாமலும் வாடாமலும் இருக்கும் ஒரு வசீகர மலரை பரிசளித்ததற்காகவும் அகம் மலர்ந்து மாயாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
'அடைந்திட முடியாத காதலை
ஒரு வசீகர மலரெனச்
சூடிக்கொள்கிறேன்
அது காய்கிறதுமில்லை உதிர்கிறதுமில்லை'.
மாயாவின் கவிதைகளில் இடம்பெற்ற காதல், கனிவு என இனிப்பான உணர்வுகளைத் தொட்டு பேசியாயிற்று. இனி தொட்டால் சுட்டே தீரும் என்ற தெரிந்தவொன்றான மரணத்தை காசிக் கடலின் உப்பு வீச்சத்தோடு 'தீ நின்ற பாதம்' கவிதை தொகுப்பில் நமக்கு கொடுத்திருக்கிறார்.
'நான் ஆகிவிட்ட சவம்
நீ ஆகப்போகும் சவம்
இடையில் நிற்கும் காலமெனும்
மாயத்திரையை
கன்ணீர் துடைத்துக் கடந்து பார்'.
இவ்வாழ்வில் இது நிகழ்ந்தே தீரும் என்று அறுதியாக வரையறுக்கப்பட்ட ஒரே விஷயம் இறப்பு. அந்த நிச்சயத்தன்மையை 'நான் ஆகிவிட்ட சவம், நீ ஆகப்போகும் சவம்' என்ற இரண்டே வரிகளில் சொல்லமுடிந்ததை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சற்று யோசித்துப் பார்த்தால் கட்டப்பட்டிருக்கும் அனைத்து சங்கிலிகளிலுமிருந்து அறுபட்டு மரணம் போல் விடுதலையளிக்கக்கூடிய ஒன்று ஏதுமில்லை. ஆனால் அது போல் அசச்சுறுத்தும் ஒன்றும் பிறிதேதுமில்லை. இந்த முரண் ஏன் என்பதை கொஞ்சம் அதன் அருகில் அணுகி அவதானித்தாலே புரிந்துவிடும். அப்படி திரை விலக்கி அருகில் செல்லும் தைரியத்தை கொடுத்திருக்கிறது டமரு, காட்சி, மணிகர்ணா போன்ற மாயாவின் கவிதைகள். சம்யுக்தா மாயாவின் கவியுலகில் வியந்து ரசிக்கும் ஒன்று அவரின் மொழி அழகு.
'இரத்தம் கொதிநிலை அடையச் செய்திடும்
ஒரேயொரு ஆதி இசைக்கு தானே!'
இக்கவிதையில் 'ஆதி இசையென்று' எனக்கு பொருள்பட்டது மரணம் தான். மரணத்தை இத்தனை அழகாக சொல்லிவிட முடியுமா என்று வியக்க வைத்தது. நிச்சயக்கபட்ட ஒன்று இறப்பு. மரணம் வரை வலித்தாலும் வாதையானாலும் இவ்வுடலை தூக்கி சுமக்க வேண்டியது கட்டாயம்.இருகக் கட்டியிருக்கும் இந்த இரண்டின் கயிறை லேசாக அவிழ்த்துவிட்டு ஒரு ஆசுவாசத்தை அளிக்கிறது மாயாவின் கவிதை வரிகள்.
'இடைவிடாது நில்லாது ஆடும் இவ்வுடலை
இப்போதே துறந்து விடுவது
மிக நல்லது இல்லையா... ?!'
மரணம் முற்றிலும் வீடுபேறான ஒன்றாக முடியும். எப்போது? இந்த இருப்பும், இறப்பும், சகலமும் ஓர் இறையாணை தானே என்ற ஏற்றுக்கொள்ளல் வரும் போது பக்தி சரணாகதியாகிறது. நான் என்பது முற்றிலும் வடிந்து தான் விளங்கும் தருணமாகிறது. அப்போது மரணம் பயமின்றி கைபிடித்துக் கூட்டிச் செல்லும் நண்பனின் கரங்கள் போலாகிவிடுகிறது. அதை மாயாவின் கவிதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
'ஒன்றும் அறிகிலேன் யான்.
நானோ….
சிவனின் வலிய கை – இறுகப்
பற்றியிருக்கும்
பேரானந்தத்தில்
எதையும் உணராது
மயங்கியிருக்கும்
இடை குறுகிய சிறு உடுக்கை அன்றோ....!!'
முற்றும் துறந்து யோகத்தில் பழுத்த ரிஷிகள் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாய் காத்திருப்பது மரணத்திற்காக தான் என்று அத்வைதத்தில் சொல்லப்பட்டதை மாயாவின் கவிதை நினைவுபடுத்தியது.ஞானத்தாலோ பக்தியினாலோ எய்த முடிந்திடாத இந்த விடுதலை உணர்வை புரிதல் மூலமாகவும் கொஞ்சம் அடையக்கூடும் என்று தோன்றியது. மரணம் என்பது உடை மாற்றுவது போலான ஒன்று தான், 'இந்த சட்டை இல்லையென்றால் வேறொரு சட்டை'. அவ்வளவு தானே? ஆம்! என்று புன்னகையுடன் சொல்லியபடி வந்து நிற்கின்றன மாயாவின் இக்கவிதை வரி.
'படகு தாண்டி படகு தாண்டி
கரையை அடைய முயல்வது போல்
பிறவி தாண்டி பிறவி தாண்டி
நீ கடக்கத் துணிவது எதை.. ? என.
சட்டென்று அறுந்து போகிறது
பாசக் கயிற்றின் பிணைப்பும்
பயமும்.
நதியின் இருள் மடியில்
பூக்களுக்கு மத்தியில்
மிதந்து செல்கிறது
ஒரு தீபத்தின் சிறிய வெளிச்சமொன்று'.
இப்பிரபஞ்ச பேரிருப்பில் நில்லாமல் இடைவிடாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கும் பிறப்பு இறப்பு சங்கிலிக்கு தத்துவார்த்தமானதொரு பார்வையை ஒரு பெண்கவிஞரின் கவிமொழி வழியே காணக்கிடைத்தது அகம் நிறைந்த மகிழ்ச்சி அளித்தது. எந்த அடரிருள் மத்தியிலும் நமக்காக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அந்த சிறுவெளிச்சத்தை கண்டுகொள்ளும் மனநிலையை எப்போதும் பெற்றிருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் இக்கவிதை வாசித்த போது கூடவே எழுந்தது.
புரிதல்
நாம் இந்தக் காட்டிற்குள்
நடந்து
வெகு தொலைவு வந்து விட்டோம்
நீ கையில் வீட்டிலிருந்து
எடுத்து வந்த
சிறு பூவொன்றை
வைத்திருக்கிறாய்
உனக்கு இன்னுமொரு பூ
வேண்டுமெனத் தோன்றி விட்டது
எளிய விண்ணப்பம் தானே!
ஆனால் – இங்கு
பழுப்பும் பச்சையும் தவிர
வேறு வண்ணங்களே இல்லை
நீ விசும்பத் துவங்குகிறாய்
எங்குமே இல்லாத பூவை
எங்கு போய்த் தேடுவது?
புரிந்து கொள்ளேன்
நீ கண்டு கொள்ள வேண்டியது
இன்னொரு பூவை அல்ல
இன்னொரு வனத்தை
(அம்முவிற்கு)
ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பயணப்படுகையில் பழையனவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டு திறந்த நிலையில் இருந்தால் மட்டுமே, புதிய களம் நிறைக்கவிருப்பதை முழுதாக பெற்றுக் கொள்ள இயலும். வீட்டிலிருந்து எடுத்து வந்த சிறுபூவை போலவே இன்னொரு பூவை செல்லும் இடத்திலும் தேடினால் புதிய இடத்தில் கிடைக்கவிருக்கும் பூந்தோட்டத்தை தவற விட்டுவிட நேரிடலாம். 'நீ கண்டு கொள்ள வேண்டியது இன்னொரு பூவையல்ல இன்னொரு வனத்தை' என்று அம்முவிற்கு சொல்லப்பட்டதை அம்முவாகவே இருந்து நானும் உளமார பெற்றுக் கொண்டேன்.
கற்பனையினூடாக தன்னை
தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு முடிவின்மையை நோக்கி சென்றுகொண்டே இருப்பவர்கள்
தான் கவிஞர்கள். 'ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா...? வேறு வேறா? ' என்று கேட்கும் சம்யுக்தா மாயா என்றும் நின்று
எரியும் சுடராக தன் கவிதைகளை நிகழ்த்தியிருக்கிறார். அச்சுடர் என்றும்
அணையாதிருக்கட்டும். குமரகுருபரன் விருது பெரும் சம்யுக்தா மாயாவிற்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள். 'நம் மரபில் தெய்வம் மட்டுமே மலரில் அமர்ந்திருக்கிறது. மலரில் அமர்வது எளிதல்ல.
கவிதை வாசிப்பு என்பது அவ்வகையில் மலரில் அமர்வதே' என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின்
வார்த்தைகள் மனதிற்கு மிகவும் அணுக்கமானது. தன் கவிதைகள் மூலம் இன்னுமொரு முறை
மலரில் அமரும் வாய்ப்பைக் கொடுத்த கவிஞர் சம்யுக்தா மாயாவிற்கு ஆத்மார்த்தமான
நன்றி.
***
சம்யுக்தா மாயா தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment