பிரபஞ்சமும் வாழ்க்கையும்: இரண்டு கவிதைகள் - கடலூர் சீனு

இப்போது இவ்விதம் இருக்குமிப்பிரபஞ்சம் பலகோடி ஆண்டுகள் முன்  ஒரு ஒட்டுமொத்த புள்ளியாக இருந்தது. புள்ளி எனில் அது நிற்பதற்கு இடமோ, நிறைப்பதற்கு வெளியோ எடுத்துக்கொள்ளாத அளவு புள்ளியிலும் புள்ளியான புள்ளி அது. குண்டூசி முனையில் அந்த புள்ளிகளை எண்ணிறந்த எண்ணிக்கையில் போட்டு வைக்கலாம். எல்லாம் சாமானியனை நாக்கு தள்ளவைக்கும் பௌதீக விதிகளின் கணக்கு  வழக்குகள் வழியே அறிவியல் முன்வைக்கும் ஊகம். 

இந்தப் புள்ளி 'எப்படியோ' 'எதனாலோ' வெடித்து அல்லது வீங்கி விரியத் துவங்க, இப்போதய பிரபஞ்சத்தில் பாதி, அது முழுமைகொள்ள தேவையான நேரம் வெளி பொருட்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கங்களுடன் வெறும் மூன்றே நிமிடத்தில், அதாவது நன்கு வெந்த தோசைக்கல்லில் உடைத்து ஊற்றப்பட்ட முட்டை ஒன்று ஆஃபாயில் ஆக எடுத்துக்கொள்ளும் நேரத்தில், எல்லாமே உருவாகி வந்துவிட்டது. 

இதில் சூரியனில் இருந்து சிதறிய துண்டு பூமி என்றாகி, அதில் முதல் உயிர் தோன்றுவதற்கான மூலங்கள் பிறந்தது வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளை 24 மணி நேரமாக சுருக்கி அங்கே நிகழ்ந்ததை விவரிக்கப் புகுந்தால், அந்த நாள் முடியப் போகும் இரவு 11 அல்லது 11.30 வாக்கில்தான் உயிரை உருவாக்கத் தேவையான குழம்புகள் உதிக்கின்றன.

இந்த குழம்புகள் உதிக்க, பலப் பலகோடி கோடி நட்சத்திர இருப்பில், நமது ஒரே ஒரு சூரியனின் இருப்பு இவ்விதமாக உடைய வேண்டி யிருக்கிறது. உடைந்த துண்டு மிக சரியான கச்சிதமான தூரத்தில் சென்று அமைய வேண்டியிருந்திருக்கிறது. இப்போது உள்ள இடத்தில் இருந்து பூமி ஒரு 100 கிலோமீட்டர் முன்னே இருந்தால் அது இந்நேரம் நெருப்புதுண்டாக மட்டுமே எஞ்சி இருக்கும். 100 கிலோமீட்டர் பின்னே இருந்தால் பனி உருண்டையாக மட்டுமே மிஞ்சி இருக்கும்.

மிக மிக சரியான ஈர்ப்பு விசை விலக்கு விசைக்குள் அது நிற்கவேண்டியிருக்கிறது. இரண்டில் ஒன்று சற்றே மிகுந்தாலும் குறைந்தாலும் இப்போதைய பூமி இல்லை. இந்த பரிணாமகதி வழியே நிகழ்ந்த வளி மண்டலம் எனும் அதிசயம். இதில் உள்ள ஒரே ஒரு வாயு அதன் அணுக்கூட்டு சற்றே வேறு விதமாக அமைந்திருந்தால் வளி மண்டலம் என்பதே தோன்றி இருக்காது.  இத்தனை இத்தனை துல்லியமான தற்செயல் பரிணாமகதி வழியேதான் உயிரின் மூலக் கூறுகள் தோன்றி இருக்கிறது.

உயிரின் மூலக்கூறு தோன்றிய கணம் முதல் ஹோமோ சேபியன் தோன்றிய காலம் வரையிலான பல்லாயிரம் வருட நெடிய காலத்தை 24 மணி நேரம் என சுருக்கி அதை புரிந்து கொள்ளப் போனால், அதிகாலை 12 மணிக்கு உயிரின் மூலக்கூறுகள் தோன்றிய பிறகு அதிகாலை 4.30 வரை எதுவுமே நடக்க வில்லை. 4.31 க்கு மூலக்கூறுகள் 'எதனாலோ' இணைந்து 'எப்படியோ' முதல் உயிர் தோன்றிவிடுகிறது. அதன்பிறகு அந்த நாள் முடியப்போகும் நேரத்தில் கிட்டத்தட்ட 11.45 வாக்கில் ஹோமோ சேபியன் ஆகிய நாம் தோன்றி விட்டோம். இடையே ட்ரைலபைட்டா காலம் ஜூராசிக் காலம் என வித விதமான உயிர்கள் வாழ்ந்து முற்றிலும் அழிந்து போன ஐந்து பேரூழிகள் அதன் பின்னர் பனி யுகம் முடிந்து, பின்னர்தான் நாம் வந்தோம். 

நாம் இப்போது இங்கே இவ்விதம் இருக்க இத்தனை துல்லியமாகவும் அதிர்ஷ்டத்துடனும்  விஷயங்கள் நடந்தேறி இருக்கிறது. உங்கள் காலுக்கு கீழே தரையில் ஒரு கிரிக்கெட் பந்தை வைத்து விட்டு, அதை விட்டு விலகி விலகி நடந்து ஒரு ஒன்றரை கிலோமீட்டர் சென்று உங்கள் காலுக்கு கீழே தரையில் ஒரு பட்டாணியை வைத்து, அதை அப்படியே அளவு தூரம் உள்ளிட்டு பெரிதாக்கினால், அந்த பட்டாணிதான் பூமி கிரிக்கெட் பந்துதான் சூரியன் என்று மாறினால்... ப்ரும்மாண்டத்தை அளவை தூரத்தை கற்பனை செய்ய இயலாமல் மூச்சு முட்டுகிறது இல்லையா? அதுதான் நமது நட்சத்திர மண்டலத்தின் உண்மையான நிலவரம். இப்படி கற்பனைக்கும் எட்டாது, தூர தூரமாக அமைந்த கோடி கோடி நட்சத்திரங்கள் கோள்கள் அடங்கியது  நமது பால்வெளி, பால்வெளியின் பக்கத்து வீட்டுக்கு ஆண்ட்ராமீட்டா என்று பெயர் அங்கே போக சில நூறு வருடம் ஒளி வேகத்தில் பயணிக்க வேண்டி வரும், இப்படி பலப் பல நட்சத்திர மண்டலங்கள் அடங்கிய விரிந்து கொண்டே போகும் மகா மகா மகா பிரம்மாண்ட, மகா மகா மகா துல்லிய, அறிவால் அவிழ்க்க இயலா மகா மகா மகா மர்மம் சூழ்ந்த, நூறு நூறு நட்சத்திரங்கள் அனுதினமும் வெடித்துக்கொண்டிருக்க கூடிய, இவ்வனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் பற்பல கருந்துளைகள் அடங்கிய பிரபஞ்சத்தில்தான், பிரம்மாண்ட பாலைவன மணல் வெளியில் உள்ள ஒரே ஒரு மணல்பரு போன்ற பூமியில்தான்  இப்போது உயிர்குலங்கள் மொத்தத்தில் அடங்கிய  நாம் இருக்கிறோம். தனியே. தன்னந்தனியே.

பில் ப்ரைசன் அளிக்கும் சுவாரசியமான இந்த அட்டவணையை வாசிக்கும் எவரும் ஒரு கணம் திகைத்து சொல்லிழப்பர். அறிவியலால் தத்துவத்தால் தவத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிய ப்ரும்மாண்டம். இந்த பிரம்மாண்டம் ஏன்? இவையெல்லாம் எங்கிருந்து வந்தது? எங்கே போகிறது? இதில் நான் ஏன்? இங்கே நான் யார்? எல்லாமே சாமனியனுக்கு மேலான மனம் கேட்கும் கேள்விகள். கொள்ளும் தவிப்பு. 

தத்துவமோ அறிவியலோ அறியாத சாமானியன் இந்த ப்ரும்மாண்டத்தை எவ்விதம் எதிர்கொள்வான்? திகைத்து தவித்து அவன் தேடிப் பற்ற எது எஞ்சும்? 

அத்தகு எளியவனுக்கு ஆறுதல் போலும் பொன் முகலியின் இந்தக் கவிதை வந்து அணைக்கிறது.


வாழ்க்கை என்பது

உண்மையில் ஓர் எளிய உண்மை.


நீ பார்க்காத உலகத்தில்,

நீ பார்க்காத சூரியன்கள்,

தினம், தினம்

வெடித்துச் சிதறுகின்றன.


எல்லாவற்றையும் மிதக்க வைக்கிற கடலொன்று,

உன் கண்களுக்குப் புலப்படாமல்,

உன் பக்கவாட்டில் பொங்கிக் கொண்டிருக்கிறது.


புலங்களின் அச்சிலிருந்து

தவறி விழுகிற கிரகங்கள்,

நீயறியாத இடங்களில் ஆயிரம்

பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன.


என்றாலும், 


இந்த வாழ்க்கை, நீ பற்றியிருக்கிற

என் விரல்களைப்போல

ஓர் எளிய உண்மைதான் இன்னமும்.

- பொன்முகலி

இக் கவிதை சாமான்யனுக்கு திகைப்பளிக்கும் பிரம்மாண்டமான, துல்லியமான, வெகு சிக்கலான, மர்மமான பௌதீக பிரபஞ்சத்துக்கு மாற்றாக, அறிவியல், தர்க்கம், தத்துவம், தவம், அனைத்துக்கும் மாற்றாக 'எளிய உண்மையாக'  வாழ்வை முன்வைக்கிறது. 

வாழ்வு சார்ந்த தகிக்கும் கேள்விகள் கொண்ட  எந்தக் கூரிய மனமும், ஏதோ ஒரு கணம் அனைத்தையும் உதறி விலகி அன்னையின் மடியில் சேரவோ, காதலியின் விரல்களை பற்றிக் கொள்ளவோ ஏங்கும்.  அந்த ஏக்கத்துக்கான ஆறுதல் போலவும் அமையக் கூடிய கவிதை.

அன்னையாலோ காதலியாலோ தர முடியாத ஒன்று, ஒரு குருவால் மட்டுமே அதை தர முடியும் என்ற ஒன்று. ஆத்மீக தவிப்பு கொண்ட ஒருவனுக்கான குரு வின் சொல் போல அமைந்தது தேவதேவன் எழுதிய கீழ்கண்ட கவிதை.

காதலனாக இரு

வாழ்வின் மகத்தான லட்சியம்

அதுவாக இருக்கிறது


நான் உனக்கு இப்பூமியைப் பரிசாகத் தருவேன்

அண்ட சராசரங்கள் அனைத்தையும் தருவேன்

பெற்றுக்கொள்ள இடமிருக்கிறதா உன்னிடம் 

பேணிக்கொள்ளத் தெரியுமா உனக்கு

காதல் உனக்கு வழிகாட்டும்.

- தேவதேவன்

ப்ரும்மாண்டத்திலிருந்து தனித்த துளி என்பது முதல் கவிதை கொண்ட பார்வை என்றால் துளிக்குள் உறையும் பிரம்மாண்டம் என்பது இரண்டாம் கவிதை கொண்ட பார்வை. 

எளிய வாழ்வுதான். ஆனால் இந்த எளிய வாழ்வுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. மகத்தான லட்சியம் அது. காதலனாக இருப்பது.  இந்த காதலன் ப்ரும்மாண்டத்தின் முன் திகைத்து சிறுத்து பற்றிக்கொள்ள விரல்கள் போதும் என்று அமைதி கொள்ளும் லௌகீக எளியவன் அல்ல. இந்த ப்ரும்மாண்டத்தை இந்த பூமியை,அண்ட சராசரங்களை ஏந்திக்கொள்ளும் 'விகாசம்' கொண்டவன். காதல் வழியே அந்த 'ஆத்மீக' விகாசத்தை அடைந்தவன். ப்ரும்மாண்டத்திலிருந்து தனித்தவன் கொண்ட துயரம் என்பது ஆறுதல் தேடுவது. விகாசம் கொண்டவனுக்கோ அத்தனை ப்ரும்மாண்டமும் அது அவனுக்கு அளிக்கப்பட்ட பரிசு என மாறுகிறது.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

தீபு ஹரி (பொன்முகலி) தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive