தியானம்: ஐந்து கவிதைகள் - கடலூர் சீனு

மானுடம் கண்ட மகத்தான கவிதைகளில் ஒன்று, ரிக் வேதத்தின் ஸ்ருஷ்டி கீதம். நான்காயிரம் வருடம் கடந்தும் புதுமையும் தீவிரமும் குன்றாத அக்கவிதையை எழுதியது ஒரு ரிஷி, முனி, ஞானி. அங்கே துவங்கி பல உபநிஷத் கவிதைகள், கீதை தந்த கிருஷ்ணன், பாரதம் தந்த வியாசன், வால்மீகி, சங்கரர், தமிழ் நிலத்தின் சைவ வைணவ பக்தி இயக்க ஆளுமைகள் துவங்கி குணங்குடி மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரை மகத்தான கவிதைகள் தந்த பலர் அடிப்படையில் ஞானியரும் கூட. 

பாரதியில் துவங்கும் நவீன கவிதை மரபின் வரிசையில் மகத்தான கவிதை எழுதிய பலர், அத்தகு கவிதை எழுதும் அந்த உச்ச கணத்தில், அந்த ஒரே ஒரு கணம் படைப்பாளி என்ற நிலையிலிருந்தும் மேலெழுந்து ஞானிகள் கொண்ட அனுபூதி நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். பாரதி முதல் பிரமீள் தொடர்ந்து தேவதேவன் வரை அது அவ்விதம்தான்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் கடலூர் சீனு ஆகிய நான் ஒரு ஞானி அல்ல. ஆனால் சில வருட யத்தனங்கள் வழியே வந்து சென்ற சிற்சில தியான அனுபவங்கள் அதன் சில நிலைகளை அறிந்தவன்.  அந்தப் பயணத்தில் நான் சந்திக்க நேர்ந்த சன்யாசிகளில் பெரும்பாலானோர் காவி கட்டி தாடி வளர்த்த ஞானியர் வார்த்தைகளை அந்த ஞானியர் போலவே பேசும் வெற்று ஆசாமிகள்.

அதே நிலைதான் நவீன  கவிதையிலும். இன்றுவரை தமிழில் எழுதப்படும்  நவீன கவிதைகளில்  கவிதைகளை நடிக்கும் போலி கவிதைகளே அதிகம். அதே பிரச்சனைதான் இத்தகு மெய்மை அனுபவம் தியான நிலைகளை சார்ந்து எழுதப்படும் கவிதைகளிலும் தொடர்கிறது. உதாரணத்துக்கு நகுலனின் கீழ்கண்ட கவிதை.


நான் ஒரு உடும்பு

நான் ஒரு கொக்கு

நான் ஒரு ஒன்றுமில்லை.


(நகுலன்)

யாருமில்லாத இடத்தில்

என்ன நடக்கிறது?

எல்லாமும்தான்.


எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்.

போன்ற எந்த ஆழமும் அற்ற அவரது எளிய எண்ண தெறிப்புகள் எல்லாம் மிகுந்த பரவசத்துடன் கொண்டாடப்பட்ட சூழலில் அவரது இந்த கவிதையும் அதே பரவசத்துடன் அனைவராலும் தூக்கி சுமக்கப் பட்டது. நவீன இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்த புதிதில் நானும் இத்தகு கவிதைகளை   'ஐய்யோ மனுஷன் என்னமா சொல்லிப்புட்டாரு' என்று வியந்திருக்கிறேன்.

இந்த கவிதையில் முதல் வாசிப்பில் கிடைப்பது  'நான் 'ஒரு ஊர்வனவாக  இருந்து ஊர்ந்து, பறப்பனவாக எழுந்து பறந்து, ஒன்றுமில்லாமல் காணாமல் போவது. அடுத்த வாசிப்பில் உள்ள உடும்பு உறுதியை குறிக்கிறது. உறுதியான தவம். கொக்கு மிக மிக பொறுமையான காத்திருப்பை குறிக்கிறது. ஞானத்துக்கான காத்திருப்பு. ஞானம் தொடும் கணம் அந்த நான் ஒன்றுமில்லாமல் போகிறது. 

இந்த கவிதையில் உள்ள முதல் கோணல் இது எந்த நிலையிலும் அந்த கவிஞன் கொண்ட அனுபவத்தின் வெளிப்பாடு அல்ல என்பது. இரண்டாவது கோணல் இதில் உள்ள ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டு. அது முடிந்ததும் பிறகு என்ற கேள்விக்கு இந்த கவிதை வசம் எந்த பதிலும் இருக்காது. அது முன்னரே செத்து விட்டிருக்கும். மூன்றாவது இது கவிதை வடிவில் பூடகம் போல சொல்லப்பட்ட ஒரு மொழிக் குட்டிக்கரணம் மட்டுமே. இதை இன்று கூகிள் கூட எழுதும். 

தியானம் சார்ந்த, மெய்மை சார்ந்த தமிழின் நல்ல கவிதைகள் என்பது இத்தகு போலிகளை கடந்தே அடையவேண்டியது உள்ளது.


மெய்மை நிலை குறித்த கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று மரபார்ந்த பின்புலத்தில் தொல் படிமங்களை கையாள்வதன் வழியே பயணிப்பது. உதாரணம் பிரமிளின் தெற்கு வாசல் போன்ற கவிதைகள். இரண்டாவது வகை இத்தகு விஷயங்களை உதறி நேரடியாக அன்றாடத்திலிருந்து துவங்கி பேரியற்கை எனும் மனம் கடந்த அப்பால் நிலையை சுட்ட முயலும் கவிதைகள். உதாரணம் தேவ தேவன் கவிதைகள். இரண்டாவதன் உதாரணமாக ஒரு கவிதை.

புத்தகத்தை மூடு

விளக்கை அணை


உன் அறிதுயிலில் உணரப்படட்டும்


உன் மேஜையோரத்து

கொசுபத்தி போலவோ

ஊதுபத்தி போலவோ


இந்தப் பிரபஞ்சமெங்கும்

நிறைந்துகொண்டிருக்கும்


உறக்கமென்பதிறியா

விழிப்பொன்றின்

மாண்புகள்.


(தேவதேவன்)

சிறு வயதில் எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று, ஒரு ஊதுபத்தியை ஏற்றிவைத்து அதன் மேல் ஒரு சிறிய கண்ணாடி காலி மீன் தொட்டியை கவிழ்த்து வைத்து, காற்று அசையாத அதற்குள் இழை போலும் மெல்ல மெல்ல ஊதுபத்தி புகை வியாபித்து நிறையும் காட்சியை அசையாது அமர்ந்து ரசிப்பது. எனக்குள்ளும் அந்த ஊதுபத்தி புகை போலும் ஏதோ ஒரு பரவசம் நிறையும்.

இந்த பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கொண்டிருக்கும் உறக்கம் என்பதை அறியா அந்த மாண்பிற்கு நம்  மேஜையோர ஊதுபத்தி புகையில் இருந்தே பாதை சமைக்கிறது இக்கவிதை. (புத்தகத்தை மூடு,) அறிவால் அல்ல, (விளக்கை அணை) புறக் கண்களால் அல்ல, அரிதுயில் கொள்ளும் உள்விழி அதைக்கொண்டே காண முடிந்த மாண்பு அது. 

வாழும் கணங்கள்

மூளை நரம்பொன்று அறுந்து

ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது


மனவெளியும் நிலவொளியில் குளிர

செவிப்பறை சுயமாய் அதிர

மண்ணில் ஒருபோதும் கேட்டிராத ஓசை உவகைகள் எழும்பின 

பாஷை உருகி ஓடிற்று


ஒரு

சொல் மிச்சமில்லை


என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது


ஒரு கணம்தான்


மறு கணம்

லாரியின் இரைச்சல் 

எதிரே நாற்காலி.


(சுந்தர ராமசாமி.)



கண நேரம் அடையும் இந்த ஆத்மீக பரவசத்தை ஓஷோ சட்டோரி என குறிப்பிடுகிறார். அந்த ஒரே ஒரு கணத்துக்கு பிறகு அந்த மனிதன் வாழ்வில் பிறகு ஒருபோதும் இந்த அனுபவம் நிகழாமலேயே கூட போகலாம். இது காரண காரிய தொடர்பின் ஒரு பகுதி அல்ல என்பதே பிரதான காரணம்.

//என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது//

கவிதையை அதன் உயர் தளத்துக்கு எடுத்து செல்லும் வரிகள் இவை.

இவையெல்லாம் கவிக்கு எல்லாம் சரியாக இருந்ததால் நிகழ்ந்த ஒன்றல்ல. மூளையில் ஒரு மெல்லிய நரம்பு அறுந்ததால் அதாவது ஒரு சிறிய பிழை ஏற்பட்டதால் நிகழ்ந்த ஒன்று. இதுதான் இத்தகு நிலைகள் மீது சுந்தர ராமசாமியின் பார்வை. 

இந்த காலம் இடம் இருப்பு கடந்த அனுபவ மண்டல பரவசம் எல்லாமே ஒரே ஒரு கணம்தான். மறுகணம் லாரி ஓசை வழியே நிகழ் காலம் வந்து விட்டது, எதிரே இடம் வந்து விட்டது, நாற்காலி வழியே இருப்பு வந்து விட்டது. 

இதற்கு முன்பான அந்த கணம். மூளையில் ஏதோ ஒரு சிறிய நரம்பு அறுந்த அந்த ஒரே ஒரு கணம், அதுதான் வாழும் கணம்.


தியானத்தில்

ஒரு கவலை மட்டும் பிரகாசமாக ஒளிர்ந்தது.


நாகம்

இறக்கி வைத்த விஷக்கல்.


நான் என் தியானத்தால்

அதை

உண்டு உண்டு

செரிக்க முயன்றேன்.


அது இன்னும் கடினமாகி

கடினமாகி

நெற்றி நடுவில்

நீலமாய்ப் பூரித்தது.


நான்

என் சிறிய கவலைகள் எல்லாம் தாய்ப் பாம்பை நோக்கிச் செல்லும் பாம்புக்குட்டிகள் போல்

அதை நோக்கி நெளிந்து செல்வதைப் பார்த்தேன்.


அம்மா

நான் என்ன செய்வேன்.


புவிமேல்

நானொரு மாபெரும் கவலைத் துளி.

(போகன்)



தியான அனுபவங்களில், உள்ளே நூறு பௌர்ணமிகளின் ஒளி வெள்ளம் நிறைவது, செவிக்குள் இனிய ஒலிகள் கேட்பது, நெற்றிக்குள் நீலம் ஒளிர்வது இப்படி பல இனிய தடயங்கள் கிடைக்கும். இவை பற்றி பதஞ்சலி யோக சூத்திரங்கள் நிறைய பேசுகிறது. கூடவே தியான அனுபவம் என்பது அகம் உள்முகமாக இருளுக்கும் ஒளிக்குமாக ஊசலாடும், ஆனந்தத்துக்கும் துயரத்துக்குமாக அல்லாடும் நிலையையும் கொண்டது. 

இதில் தவறான முறையில் சாதகனின் குண்டலினி எழ நேர்ந்தால் அவனை பீதி கிளர்த்தும் சித்திரங்கள் வேறு துரத்தும். தகுந்த குரு இல்லையேல் இத்தகு விஷயங்களில் இருந்து மீளாது, ஒளியில் இருந்து தவறி இருளில் விழவே வாய்ப்பு மிகுதி. 

தியான சாதகன் மட்டுமே அடைய நேரும் மற்றும் ஒரு துயர் உண்டு. இந்த உயிர் இந்த பிரக்ஞை இந்த உடலால் எல்லைகட்டபட்டமை கொண்டே தவிர்க்க இயலாது. அதன் உள்ளுரயாக அமையும் துயர் அது. அதில் விழுந்தவனுக்கும் மீட்சி அரிதே. இத்தகு விஷயங்கள் மீதான கவிதை என மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

வண்ணத்துப் பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்

பூந்தோட்ட மலர்களிலே 

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி


வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல் நோக்கிப் பறந்து


நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது


முதல் கணம்

உவர்த்த  சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.

(பிரமிள்)

உலகின் உயிர்ராசிகள் ஒவ்வொன்றும் அதற்கென வகுத்துவைத்த சூழல் வெளியில்தான் வாழ்கிறது. மனிதனை தவிர வேறு எவற்றாலும் இதை மீற முடியாது. அந்த வகையில் பட்டாம்பூச்சி கடலுக்கான உயிர்ராசி அல்ல. அது அங்கே போனதற்கு அதன் இயங்கு தளத்துக்கு மீறிய ஆற்றலே காரணம். சைவம் உள்ளிட்ட பல மரபுகளில் இதை இவ்விதம் செய்தால் ஞானம் எய்தி விட முடியும் எனும் நிலை என்பது கிடையாது. செய்ய வேண்டியதை செய்து விட்டு ' அவன் ' அருள் வேண்டி காத்திருக்க வேண்டியதுதான். நமது முயற்சி அல்ல, அவனது அருளே நாம் எய்தும் ஞானத்துக்கு மூலம். 

மேற்கண்ட கவிதையை, லெளகீகம் விட்டு தன் செயலாக அன்றி புற ஆற்றலால் ஆத்மீகத்துக்குள் சென்று விழும் ஒரு தன்னுணர்வு அடையும் அனுபவம் குறித்த கவிதையாகவும் வாசிக்கலாம்.

( எல்லா நல்ல கவிதைகளும் வாசிப்பவர் வாழ்வுப் பின்புலம், கலாச்சார வேர், ரசனைக் கோணம் சார்ந்து, பல்வேறு அர்த்த சாத்தியங்களை, கற்பனை சாத்தியங்களை அளிக்க வல்லவயே. எனவே என்னுடைய வாசிப்பு என்பது அந்த வரிசையில் ஒரு கோணம் மட்டுமே அன்றி இக் கவிதைகள் மீதான இறுதி வியாக்யானம் அல்ல)


***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive