யூமா வாசுகி நேர்காணல்கள் - மதார்

தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் யூமா வாசுகியின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பான 'யூமா வாசுகி நேர்காணல்கள்' நூலை வாசித்தேன். நேர்காணல் தொகுப்புகள் படைப்பாளி குறித்தும் படைப்புகள் குறித்தும் ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பவை. இந்த நூலில் கவிஞராக ஓவியராக மொழிபெயர்ப்பாளராக சிறார் இயக்கச் செயல்பாட்டாளராக எழுத்தாளராக பத்திரிக்கையாளராக என பன்முகப்பட்ட யூமா வாசுகியைப் பார்க்க முடிந்தது. கலை மீதான அவரது பொறுப்புணர்வு இந்த நூல் முழுவதும் வெளிப்படுகின்றது. கவிதை குறித்து யூமா வாசுகி முன்வைக்கும் சில அவதானங்கள் இந்த நூலிலிருந்து  

என்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கான ஈரத்தைக் கவிதைதான் எனக்குத் தருகிறது.

கவிதை மட்டும்தான் கவிதையின் உச்சம். கவிதையின் பெரும்பேறு என்பது, அது நல்ல கவிதையாக அமைவதுதான். தனது படைப்பிற்கு உயிரும் உரமும் கொடுத்து, அதை இயன்றவரையில் உயர்வானதாகப் பிறப்பிக்கச் செய்வதுதான் ஒரு கவிஞனின் வேலையாக இருக்கவேண்டும். தவிர, கவிதையைத் தூண்டில் புழுவாகப் பயன்படுத்தி லெளகீக லாபங்கள் அடைய முயற்சிப்பது இலக்கியத்திற்கெதிரானதாகும். 

0

என்னுடைய அனுபவத்தில் சில முக்கியமான படைப்பு சந்தர்ப்பங்களில், படைப்புவயப்பட்ட மிக அதீத மன நெருக்கடியில் மொழி சற்று விலகி நிற்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எனது சகலவிதமான தேடுதல் பிரயத்தனங்கள் அத்தனையும் நிகழ்ந்தும்கூட சில கவிதைகளில் மொழி என்னுடன் பரிபூரணமாகக் கலக்கவில்லை. மொழி ஒரு வெளியீட்டு சாதனம் எனில் உணர்கின்ற எல்லாவற்றையும் அதன் நுட்பத்துடன் வெளிப்படுத்திவிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

தன் சக்தி முழுவதையும், படைப்பூக்கத்தின் இறுதித் துளிவரை ஆத்மார்த்தமாகத் தன் படைப்பு வெளிப்பாட்டின் உயர்வுக்குச் செலவிடுவது மட்டுமே படைப்பாளியின் ஒழுக்கம்.

கவிதை எழுதுவதற்கான மனநிலை வரையறுத்தலுக்கு அப்பாற்பட்டது. மிக நெருக்கடியான ஒரு சூழலில், நிற்பதற்குக்கூட இடமற்ற ஒரு பேருந்துக் கூட்டத்தில் பிதுங்கிப் பயணம் செய்யும்போது என் கவிதை வெளியில் மிக சுதந்திரமாக நான் பிரவேசித்து இருக்கிறேன். அந்த நெருக்கடியிலும் என் கவிதையை இயல்பாகப் பின்னியபடியே பயணித்திருக்கிறேன். அதே சமயம் என் நீண்ட, மிக ஏதுவான, எந்தத் தொந்தரவும் இல்லாத ஓய்வுகளில் என்னால் எதுவும் எழுத முடிந்ததில்லை. லௌகீக சிந்தனைகளுடன் தஸ்தயேவ்ஸ்கி சாலையில் சென்றுகொண்டிருக்கிறபோது, அந்தக் கவித்துவத்தின், படைப்பு மனநிலையின் மந்திரக்கோல் பிரக்ஞையில் பட்ட மாத்திரத்திலேயே உயர்வான படைப்பு எழுச்சி நிலைக்கு ஆட்படுகிறார். இப்படி ஒரு குறிப்பு வெண்ணிற இரவுகளில் வருகிறது.

கவித்துவத்தின் பறவை இடையறாது மாந்திரீகத்தில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அது நம் தோளணையும் தருணத்தை நாம் நிதானிக்க இயலாது. படைப்பு மன நிலை என்பது முற்றிலும் அரூபம் சார்ந்தது. ஒருவித மாயத் தன்மையுடனும், எல்லையற்ற சுதந்திரத்தோடும்தான் படைப்பின் மனநிலை இயங்குகிறது. இந்த மன நிலையைத் தக்க வைத்துக்கொள்வதில்தான் ஆகப் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையின் ஓரத்தின் கல்லில் அமர்ந்து அழுதபடியே என் சில கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன். மனநிலை வாய்ப்பது என்பது மிக முக்கியமானதாகும். பாரதியார்கூட சில வருடங்கள் எட்டயபுரம் மகாராஜாவின் விருந்தினராக இருந்தபோது எழுதாமல் இருந்திருக்கிறார். சுந்தர ராமசாமி போன்றவர்களும் பல வருடம் எழுதாமல் இருந்திருக்கிறார்கள்.

ஆகச் சாதாரண அற்ப விஷயம்கூட படைப்பு மனநிலையைப் புரட்டிப் போட்டுவிட முடியும். பழக்கப்பட்ட டீ குவளை காணாமல் போனால்கூட படைப்பாளிக்கு மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. உயிர் கொல்லும் மனவாதையில் இருக்கும் போது படைப்பிலே அற்புதங்கள் துலங்கலாம். அதற்கு முரணாகவும் இருக்கலாம்.

0

ஒரு படைப்பில் ஈடுபடும்போது அந்தப் படைப்பு நிர்ப்பந்திக்கக் கூடிய விஷயங்களில் அந்த படைப்பாளி நேர்மையாக இருக்கவேண்டும். அதாவது அந்தப் படைப்பு அவனுள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவன் அதற்குப் பரிபூரண விசுவாசமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அது காத்திரமான படைப்பாக வெளிப்படும். படைப்பு வேறு. படைப்பாளி வேறுதான். அதிகபட்சம் தன் படைப்பின் உருவாக்கத்தில் உண்மையாக இருக்க வேண்டும். அவன் பறவையாக கூடு பாய்ந்து இருந்தால் அப்பட்டமாக ஒரு பறவை அந்தப் படைப்பின் பக்கங்களில் வாழவேண்டும். இன்னொன்று, படைப்பின் அடிப்படையாக படைப்பாளியின் ஆளுமைப் பண்பே விரிந்து கிடக்கிறது.

0

முதலாவதாக, கவிஞன் தன் படைப்புருவாக்கத்தில் சந்திக்கும் முட்டுச் சந்துகளை, படைப்பைக் கருக்கொள்வதிலிருந்து அதை உருவாக்குவது வரை நேரக்கூடும் பெருந்தடைகளை யெல்லாம் தன் கவிதார்த்த தாபத்தின் பேரான்மிகத்தால், பல கோடிக் கண்களாலும் கரங்களாலும், கொந்தளிப்பும் குமுறலுமாகத் தேடும் படைப்பு மூர்க்கத்தால் உடைத்துப் போட்டுப் பெருவெளிக்குப் போகிறான். அவனுடைய அந்த அபூர்வ இயல்பினால் சொற்களும் பொருட்களும் புத்தாக்கங்களாகக் கூடுகின்றன. அறியப்படாத பிரதேசங்கள் கண்டடையப்படுகின்றன. இது அவனது அக வாழ்க்கை. இதில் அவனை அவனே தின்றுமுடித்து மீளவும் தன்னைப் பிறப்பித்துக்கொள்கிறான். இப்படி, கவிதை அவன் மீது சுமத்தும் பேரழுத்தத்தின் காரணமாகத்தான் அவன் உலகின் ஒளியாக மாறுகிறான்.

0

ஒரு விஷயத்தை யோசிக்கும்போது, அதை வெளிப்படுத்த பிரயாசைப்படும்போது சிறந்த வகையில் வெளியிடுவதற்கு தகிப்பு உண்டாகிறது.

ஒரு பெரும் சூறாவளியில் சிக்கித் தவிக்கிற, அல்லாடும் மரம்போலத் தேடுதல் நடக்கிறது. இப்படித்தான் எனது மொழியைக் கண்டுபிடிக்கிறேன். அல்லாட்டமும் பித்தமும் கிறக்கமுமான நிலையில் சில வரிகள் ஓடி வரும். சொல்ல வேண்டிய பரிதவிப்பில் இருந்து அப்படி உருவாகிறது.

உதாரணமாக, குழந்தை தொடர்பாக நான் எழுதிய ஒரு கவிதையில், 'இதயத்திலிருந்து ரத்தத்தை மசியாக விட்டுக்கொடுக்கிறது பேனா முனை' என்று ஒரு வரி வரும். இதுபோன்ற பல வரிகளுக்கான திறப்பு உன்மத்தமும், பதற்றமும், ஆவேசமும், குழப்பமும் இயலாமையும், சோர்வும் கொண்ட மனநிலையிலிருந்துதான் வருகிறது.

அது கவித்துவம் கொண்ட வரிகளாக இருக்கலாம், அன்றாடப் புழக்கத்தின் மொழியில் இருக்கலாம். இரண்டுமே விரவித்தான் வரும். அதை அந்தக் கணத்தில் முறைப்படுத்தவும் முடியாது. யூகிக்கவும் முடியாது. அது கவிதையின் ஆன்மீகம் தொடர்பானது.

0

கவிதை என்பது கவித்துவம். அது எழுதப்படுவது மட்டுமே அல்ல. வரிவடிவங்கள், வார்த்தைகளால் வரையப்படுவது மட்டுமே அல்ல. இறைத்துவத்தை நாம் கவிதைப்பூர்வமாகவே பார்க்கிறோம். கவிதையின் கூறுகள் பலவிதமாக இப்படித்தான் இந்த உலகில் சிதறிக் கிடக்கின்றன. இயற்கை கவிதைமயம். உறவுகள் கவிதைமயம். இந்தக் கவிதைமயத்தை ஸ்வீகரிப்பவர்கள் களிப்பூட்டக்கூடிய கவிதை அனுபவத்தை அடைகிறார்கள். எல்லா அனுபவங்களும் கவித்துவத்தில்தான் சங்கமிக்கின்றன. இயற்கை, காதல், நேசம், நட்பு எல்லாவற்றிலும் கவிதை இருக்கிறது.

அழகு என்று அதைக் குறுக்க முடியாது. ஒழுங்கு என்றும் திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. அது பெரும் தரிசனம். மனிதனிடம் இருக்கும் ஆற்றலெல்லாம் சென்றடைந்து, ஓய்வுற்று ஆனந்திக்கிற எல்லையாகக் கவிதை நிலை உள்ளது. அது அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. அதை இனம்கண்டு உணர்வதில்தான் நமக்குப் பிரச்சினை உள்ளது. அதை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளும் கணத்தில், இந்த உலகில் உள்ள அனைத்தும் அவருடையதாக மாறிவிடுகிறது. கவித்துவம்தான் ஒரு நல்ல ஓவியத்தைத் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல சிறுகதையையும், நாவலையும் அதன் கவித்துவம்தான் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல மனிதனின் நடத்தையை அவனது கவித்துவம்தான் தீர்மானிக்கிறது. அந்த வகையில் சகலமும் கவித்துவமாகவே இருக்கிறது.

0

என்னுடைய அனுபவத்தில் உரைநடையை விடவும் மிகவும் உறுதிப்பாடாக அனுபவத்தைக் கடத்தும் வடிவம் கவிதையே என்று நம்புகிறேன். ‘அவனை யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன்' என்ற தேவதேவனின் கவிதையை உதாரணமாகச் சொல்கிறேன். அந்த வரி என் மனதில் வரும்போதே எனக்கு கண்ணீர் கசிந்துவிடும். சாலையில் அலைந்து கொண்டிருப்பவனை, பூட்டிய கடையின் முன்பு நள்ளிரவில் படுத்து உறங்குபவனை, குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு அழுதபடி ஓடும் பெண்ணை யாரோ ஒருவன் என்று எப்படிச் சொல்வேன் என்று போகும் கவிதை அது. இந்த நான்கு வரியில் எவ்வளவு துயரம் நம்மேல் கவிந்துவிடுகிறது. இந்த நான்கு வரி கொடுக்கும் அனுபவத்தை ஆயிரம் பக்க நாவலும் கொடுக்கும். ஆனால், கவிதை வலிமையாகவும் கூர்மையாகவும் கடத்தும் அனுபவம் தனியானது.

0

கவித்துவத்தை மிக உச்ச உணர்வாகத்தான் நான் பார்க்கிறேன். இதைத் தவிர இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஒன்றும் இல்லை. இதைத் தாண்டிச் செல்வதற்கும் இடம் இல்லை. ஆதியும் அந்தமும் இது. ஆழ ஆழத்தில் உணர்க. அமிழ்க. பரவிக் கலந்து நிறைக. கண்ணீரால் தொழுதிடுக. அற்புதங்களின் சிறகு கொண்டு பறந்தலைக. ஆர்த்தார்த்து வியந்து வணங்குக. கவிதை. கடவுளே அது. வாழ்வேதான் அது. கோடி கோடி சல்லி வேர்களால் உறிஞ்சுக. அது கொண்டு ஆகும் ஒரு மலர். ஒட்டுமொத்த தரிசனம். எழுதுவது மட்டும் அல்ல.

0

மீனுக்குத் துடுப்புகள் உருவானதற்கு அதன் காலகால எத்தனமே காரணம் என்பதுபோல, வெளிப்படுவதற்காகத் திமிறும் படைப்பு, சுய எத்தனத்திலிருந்தே மொழியை எடுத்துக்கொள்கிறது.

0

இன்றைக்கு எழுதும், என்னைவிட வயதில் குறைந்த ஒருவர் தம் படைப்பில் இலக்கியத்தின் புதிய சாத்தியங்களை எனக்குக் காட்டித் தரும்போது அவரும் எனக்கு முன்னோடிதான்.

0

கவிதை எழுத வேண்டும் என்றோ, கவிஞராக

அறியப்பட வேண்டும் என்றோ எந்தக் கட்டாயமும் கவிஆற்றாருக்கு இல்லை.அதே நேரத்தில், அவரது கவிதை கைவிட்டுப் போகாதிருப்பதில் - அதன் கலையும் மொழியின் ஒழுங்கும் இழப்பாகாதிருப்பதில் கவனம் கொண்டிருந்தார். கவிதை எழுதவில்லை என்றாலும், பிரசுரிக்கவில்லை என்றாலும் எப்போதும் மனதில் கவிதை இருக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் கொண்டவர்.

0

அம்புக்குறியின் அகண்ட பாகம் எல்லையற்று விரிந்து எல்லாம் உட்கொண்டு, அதன் கூர்முனை அன்பெனக் குவிகிறது.

சூரிய ஒளிக் கிரணங்களுக்கு எத்தனை வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகள் கவிதை கூடிவருவதற்கும் இருக்கின்றன. தான் சம்பவிப்பதற்கு ஒரு படைப்பு மேற்கொள்ளும் முறைகள் வரையறுக்க முடியாதவை.

0

பெருநகரச் சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது, பேருந்துக்குக் காத்திருக்கும்போது, உணவருந்துகையில் என எந்த நிலையில் இருந்தாலும் திடீரென்று தன்னெழுச்சியாக என்னுள்ளே கவிதைகள் அரிதாக நிகழ்ந்தது உண்டு. எத்தகைய சூழ்நிலையிலும் அப்போதே மெனக்கெட்டு அவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். உதாரணமாக, 'அம்மாவுக்கு என் கைகளை மிகவும் பிடிக்கும்...' என்று ஆரம்பிக்கும் கவிதை, 'மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்', 'தெருப் பெண்ணுக்கு', 'பூமொழி' போன்ற கவிதைகளைச் சொல்லலாம்.

இவை முதற்கட்டத்தில் எப்படி முகங்காட்டினவோ அப்படியே பதியப்பட்டவை. பிறகு எந்தத் திருத்தங்களுக்கும் ஆட்படாதவை. சில, இரண்டு முறை எழுதப்பட்டு, சில நான்கைந்துமுறை செம்மைப் படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

சிலவற்றை மாதக்கணக்கில் எப்போதும் என்னுடனேயே வைத்திருந்து போகும் இடங்களிலெல்லாம் செப்பனிட்டிருக்கிறேன். இதற்கு உதாரணமாக, 'சக்தி வழிபாடு' போன்ற கவிதைகளை நினைவுகூர்கிறேன். நடந்துகொண்டே, நின்று நின்று, மனதிற்குகந்த ஒரு கவிதையை எழுதி முடித்தவுடனே சாலையோரக் கல்லில் அமர்ந்து குமுறி அழுதிருக்கிறேன். வேறொரு கவிதையை எழுதிவிட்ட உடனே வானளாவி வளர்ந்துவிட்டவனாக அவ்வளவு இறுமாப்புடன் சகலத்தையும் துச்சமென நோக்கி நடந்திருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் இடமுண்டு...

கவிதைக்கான மனநிலையை எப்போதும் தக்கவைப்பதும், அசகாய மோப்ப சக்தியுடைய வேட்டை நாய்போலக் கவிதையின் சலனங்களைப் பின்தொடர்வதும், எக்கணமும் பிரக்ஞையுடன் இருப்பதும் முக்கியமாகிறது. 

0

மாயாஜாலக் கதை ஒன்றில் தன் மீது பாதம் பதிக்கும் சிறுமியிடம் ஒரு படி சொல்லும்: 'மாயக் கம்பளத்தில் பறப்பதெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருந்தாயே? இப்போது அது பொய் என்று தெரிகிறதா?' அதற்கு அவள் பதில் சொல்வாள்: 'அது கற்பனை என்று இப்போது அறிகிறேன். ஆனால் அந்த மாயக் கம்பளத்தில் பறந்து பறந்து நான் கொய்தெடுத்த கவிதைக் கதிர்கள் எண்ணற்றவை. இன்னமும் அவற்றின் மணம் நுகர்கிறேன். காற்றசைவில் உலையும் எழில் பார்க்கிறேன், அவற்றில் அமர்ந்த பறவைகளின் பாடல் கேட்கிறேன். அவை என் வாழ்வை உருவாக்கிய அம்சங்களில் ஒன்று! 

0

யூமா வாசுகி தமிழ் விக்கி பக்கம்

யூமா வாசுகி நேர்காணல்கள் வாங்க...

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive