பிரதான சாலையோரத்தில் காலம்
துளித்துளியாய் கோர்த்து அலையடித்துக் கிடக்கிறது
சிறு கடல் போல.
வேர்விடத் துடிக்கிறது.
ஒரு பறவை திடீரென எடுத்துப் பறந்து விடுகிறது.
பின் தன்னிறகை ஒவ்வொன்றாக உதிர்த்துக் கொள்கிறது.
நிழல் நிஜமாகவே தொலைகிறது.
வெட்டவெளியில் காலம் நிற்கிறது.
அது அப்படித்தான் நிகழும்.
அதற்கென்று தனியாக ஒரு இருப்பு இல்லை.
காலம் கனிகிறபோது தரு
மீண்டும் கனி தருகிறது .
வானிறங்கி சொட்டுகையில் காலம் தானிறங்கி வருகிறது
பின் மணம் சொல்லில் மலரென ஆகியது
வடிவம் விழிகளில் அழகென விரிகிறது
மரம் ரகசியமின்றி காலத்தை காட்டுகிறது.
நினைவில் மட்டுமே எஞ்சிய எனது காலத்தை எப்படிக் காட்டுவது?
நினைவை சமைத்த அனைத்தும் இம்மரம் போல் ஒன்றல்லவா!
எதனுடன் எக்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தேனென நினைவில்லை.
தொகுத்து தொகுத்து குறியீடாக கவிதை மொழிய காத்திருக்க வேண்டியதுதான்.
போன வந்த பாதைகளனைத்தும் ரகசியமே!
கூறயியலாத கணங்களை ரத்து செய்த பயணங்களாகவே பதிவு செய்ய வேண்டியிருக்கும்.
ரகசியம் இலாத காலம் வாய்க்கும் கணமே அழகு!
கவிஞர் லெக்ஷ்மி மணிவண்ணனின் ஒரு கவிதை தந்த வாசிப்பனுவமே இது. பரந்த வெளியும், காலமும் கூட மனிதனின் மனப்பிரமைகளே. பொருள்களின் நிறங்களும் அதன் வடிவமும் நம் மனதினால் கண்டுணரப்படுகிறது. அதே போலத்தான் காலமும், இந்த பிரபஞ்சமும் நம் மனதால் கண்டுணரப்படக்கூடிய ஒன்று தான் என்கிறார் ஐன்ஸ்டீன். இப்பிரபஞ்சத்தை எப்படி கண்டுணர்கிறீர்கள்? பிரபஞ்ச வெளியில் இருக்கும் பொருள்கள் மூலமாக மலை,மரம், மண் இம்மாதிரி பொருட்கள் நிறைந்ததே இப்பிரபஞ்சம். அந்த பொருட்களில் நிகழும் நிகழ்ச்சிகளின் மூலமாக அந்நிகழ்ச்சிகளை வரிசைப்பிரகாரமாக அளக்க முற்படும்போது நாம் காலத்தை உணர்கிறோம். சரிதானே! ஆக காலம் என்பதும் நம் மனத்தின் உணர்வே. இந்தப் பிரபஞ்சம் என்பதும் மனத்தின் உணர்வே. மனத்தின் உணர்வுக்கு அப்பால் சென்று விட்டால் அணுவுமில்லை அண்டமுமில்லை காலமுமில்லை பொருளுமில்லை பிரபஞ்சமுமில்லை. ஆனால் கவிஞனின் பார்வையில் மட்டுமே காலம் சட்டமிட்டு அமரும் அவ்வகையில் கவிதை மாத்திரமே தன்னை உதிர்த்து மீண்டும் பச்சையம் பூக்கும் மரம் போல் இடமளிக்க தயாராகயிருக்கும். ஆகவே கவிதை அழகு!
கவிஞர் லெக்ஷ்மி மணிவண்ணனின் அந்தக்கவிதை,
உடல் விடர்த்து
தளிர்க்கும் அரச மரம்
மரத்தின் எலும்புக் கூடனெ
நிற்கிறது
அதன்மேல் அமர்ந்திருக்கும்
காகங்கள்
கிளிகள்
கொக்குகள் அரசின் கனிகள் போல
தொங்குகின்றன
அடுத்த பருவம் இலை உதிர்த்து
பச்சையம் பூக்கும்
எல்லாமே வெட்ட வெளியில்
நடக்கின்றன
ஒளிவு மறைவு என்று
ஒன்று கூட இல்லை
பிரதான சாலையோரம்
இது!
அதே கவிஞரின் இன்னொரு கவிதை,
ஐந்து தலை நாகமும் சாதுதான்
தலைவைத்துப் படுத்திருப்பது யார்
என்பதைப் பொறுத்திருக்கிறது
அது
ஆசையின் தலைதான்
எவ்வளவு பெரியது
அருமையான கவிதையிது இக்கவிதை நிகழ்த்தும் பேதங்கள் எண்ணிலடங்காதவை. திரிபின் நிலைகளை நிகழ்த்துபவை. அறியும் அறிவை வகுத்துப் பார்க்க வைப்பவை. இயல்பையிழந்து பெறும் ஒன்றுதான் இயல்பே என்பவை. காணும் யாவிலுமே அவ்வியல்பே இயக்குகிறது என்பவை. நிகழும் தினங்களில் தூங்கும் பொழுதுகள் அத்தனை இலகுவாய் அமைந்து விடுமாயென்ன? சிவமாய் சமைந்துவிடும் சக்தியை அத்தனை சீக்கிரம் அடைந்து விடலாமா? சிதறி தெறித்த விழிகளாகி மீண்டும் ஆகாயத்தில் காயமாக முடியுமா? கதிரின் அகத்தீயில் இணையும் விதிகளை அறிவார் யார்! சாயை அழியுமென்பது மாயையே! அழிக்கும் ஒளியிங்கே கிடையவே கிடையாது. இங்கே ஒளி மூழ்கி ஒளிந்ததும், இருளாகிவிடும் அவ்வளவு ரகசியம் இதுமட்டுமே நித்யம். இமைக்கும் உயிர்களனைத்தும் கணந்தோறும் காண்பதிதுதானோ. அறிவின் பாற்கடலில் அறிவதென்ன? அதன் ஆழங்கள் எதனெதனாலோ ஆனவை. அத்தனையுமறிய ஆவலாவென்றால் ஆம்! அறியுந்தோறும் அலையுந்தன்னிலை மறந்து அரை விழி மூடிக் கொள்ளும் நீலமென துயிலுமோ? விளைவின் ஆழத்தில் செயலுறையுமோ? இரைத்துச் சோர்ந்தபின் பாத்திகளில் நிறையும் கிணறு ஒருமையுணர்த்துகிறதோ. அறியவேயியலாத அமுதவிஷத்தின் அறிவை சித்'தில் வைத்தது தான் சத்'தின் ஆனந்தமோ. அசையும் விசை குடையென விரியுவமயம் அபேத கணத்தை அடைவதெங்ஙனம். நர்த்தனக் களைப்பின் நாடகமோ. நாடக வையத்தின் அவயங்களோ. சுயமே லிங்கமாகி ஆவுடையைக் கொள்கிறதோ.
***
0 comments:
Post a Comment