நல்ல கவிதைளுக்கு அழகே சதா துடிப்போடு இருப்பதுதான். யார் வாசிக்கிறார்? எந்த மனநிலையில் வாசிக்கப்படுகிறது ? எந்த நேரத்தின் வாசிப்பு? என்பதுபோன்ற புறவியக்கங்களுக்கு அடங்காத துடிப்பு அது. அக்கவிதைகள் தரும் அகத்தூண்டல் அலாதியானது. அகத்தூண்டலற்ற கவிதைகள் வாசித்த கணத்தில் பனித்துளியெனக் கரைந்துவிடுகின்றன.துடிப்பான கவிதைகளே மனத்தில் நங்கூரமிட்டு நிற்கின்றன.
"நீரின் திறவுகோல்" கவிதைகள் வியந்து அணுகும் வண்ணம் துடிப்போடுள்ளன. அவற்றைக் கரைத்துப்போடும் ஒரு காலம் இனி எப்போதும் விடியப்போவதில்லை.வாசிப்பில் சில கவிதைகள் இன்பத்திற்கு மெருகூட்டின. என் ஆற்றாமைக்கு சில கவிதைகள் தீர்வு தந்தன.வாசிக்க வாசிக்க அகத்தேடலுக்கான ஒருவித நிறைவைக் கண்டது மனம். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் ஒரே கவிதை பலவாறான கோணங்களை எனக்கு அடையாளம் காட்டின.
குரோ புட்டின் வாழ்வென்பது யாது? கவிதையில் வரும் உவமைகள். நான் யூகித்திருந்த வாழ்வின் கோணங்களைத் தகர்த்துப்போட்டன.
வாழ்வென்பது யாது?
அது இரவில் தெரியும்
மின்மினிப்பூச்சியின் வெளிச்சம்
அது குளிர்காலத்தில் கேட்கும்
எருமையின் மூச்சொலி
அது புல் தரையின் குறுக்காக ஓடி
சூரியன் மறையும்போது
தன்னை இழக்கும் சிறிய நிழல்
வாழ்வு எத்தனை இலகுவாகிவிட்டது கவிதையின் இறுதி வரிகளில்.
சூரியன் மறையும்போது தன்னை இழக்கும் ஒரு சிறிய நிழல் அவ்வளவுதான் வாழ்க்கை.பெரும் பாரமென்று உழன்றுகொண்டிருந்த வாழ்வை வெட்கக்கேடானதாக உரு மாற்றுகின்றது கவிதை. கவிதையின் வரிகள் மிக எளிமையானதாக இருந்தாலும் உளவியல் ரீதியிலான பெரும் தாக்குதலை அது தொடுக்கிறது.
கார்ல் சாண்ட்பர்க் கின் " சூப் "என்றொரு கவிதை
புகழ்பெற்ற மனிதனொருவன்
சூப் பருகுவதைக் கண்டேன்
ஒரு சிறு கரண்டியால் கொழுப்புச் சாறினை எடுத்து
தன் வாய்க்குள் அவன் திணிப்பதைக் கவனித்தேன்
அம்மனிதனின் பெயர் அன்றைய நாளிதழில்
தடித்த கறுப்பெழுத்துக்களால் அச்சிடப்பட்டிருந்தது
ஆயிரக்கணக்கானவர்கள் அம்மனிதனைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தனர்
நான் பார்க்கும்போது அம்மனிதன்
தட்டின் மீது தன் தலையைக் குனிந்தவாறு
கரண்டியால் சூப்பை அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தான்
சாதாரண ஒரு மனிதனின் பார்வைக்கு இன்னொரு மனிதனின் புகழ் பிம்பங்கள் குறித்து எந்த வியப்பும் இருப்பதில்லை. அவனைப் பொருத்தவரையில் தன்னைப்போல அவனும் சூப் பருகிறவன் அவ்வளவுதான்.
தட்டின் மீது தன் தலையைக் குனிந்தவாறு
கரண்டியால் சூப்பை அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தான்
இவ்வரிகளிலிருந்து பார்த்தால் இன்னும் தன்னிலும் கீழானவனாகவே அவனை அவன் பார்க்கிறான் என்பது புரிகிறது. புகழும் பணமும் மதிப்பும் மனித உடல் கொண்ட அன்றாட இயக்கங்களிலிருந்து விலகிவிடுகின்றன. கோட்சூட் உள்ளிட்ட உயர் ரக உடலணிகள் எல்லாம் வெறும் அலங்காரப் பொருட்கள் மாத்திரமே. தலைகுனிந்து அவன் உண்ணும்போது அவை உடற் சித்திரங்கள்போல உறைந்துவிடுகின்றன.
ஒரு கடற்கரையில் ஆன்மாவிற்கும் உடலுக்குமான உரையாடலை " அன்னா ஸ்விர் "ன் கவிதை இப்படி விவரிக்கிறது.
கடற்கரையில்
தத்துவப் பாடநூல் ஒன்றினைப்
படித்துக்கொண்டிருந்தது ஆன்மா
அது உடலிடம் கேட்டது
"நம்மை ஒன்றாகப் பிணைத்து வைத்திருப்பது யார்? "
உடல் சொன்னது
"இது முழங்கால்களை வெய்யிலில் காட்டும் வேளை"
ஆன்மா உடலிடம் வினவியது
"நம் இருப்பு உண்மையானதில்லை
என்பது மெய்தானா? "
உடல் பதிலளித்தது
" நான் முழங்கால்களை வெய்யிலுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறேன்"
ஆன்மா உடலிடம் கேட்டது
"இறப்பு எங்கிருந்து தொடங்குகிறது
உன்னிலிருந்தா அல்லது என்னுள்ளிருந்தா?
உடல் சிரித்தபடியே
முழங்கால்களை வெய்யிலுக்குக் காட்டியது
இவ்வுரையாடலில் உணர்த்தப்படுவது தத்தம்போக்கில் இழுபடுகின்றன ஒரே உடலில் உள்ள ஆன்மாவும் அதே ஆன்மாவைக் கொண்ட உடலும் என்பது விளங்குகிறது. தன் மீது செலுத்தப்படும் புறவியக்கங்களுக்கு ஈடுகொடுக்க ஆன்மா விரும்புகிறது. ஆனால் அதற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. தன் தாகத்தை தன் பசியை தன் சுய லாப நஷ்டங்களை, ஓய்வை நோக்கி பாரபட்சமின்றி உடலானது ஆன்மாவை இழுக்கிறது. இதனால் முடிவற்றுத் தொடர்கிறது ஆன்மாவிற்கும் உடலுக்குமான இழுபறி. இதை அன்னா ஸ்விர்ன் கவிதை அழகாகச் சித்தரித்திருக்கின்றது.
இங்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை முறை என்றாலும் கூட "மனச்சிதைவு" எனும் ஒரே புள்ளியில் அவை ஒன்றுபடுகின்றன. போராட்ட குணங்களை நோக்கிப் போகவே வாழ்க்கைப் பணிக்கிறது .பகல் முழுவதும் ஓட்டமாய் ஓடி இரவுக்குள் விழுந்து விடிந்ததும் மீண்டும் எழுந்து ஓடுவதே சூழலாகிப் போனது. ஓய்வையும் உற்சாகத்தையும் ஊறுகாய்போல தொட்டுக்கொள்ளவே நேர்கிறது.
காலையில் கண் விழித்ததும்
உற்சாகமாக உணர்ந்தவன்
தொலைபேசியை எடுத்து
இன்று வேலைக்கு வரவியலாது
என்பதை தெரிவிக்க
எனக்கு முதலாளியாக
வாய்த்தவரின் எண்ணிற்குத்
தொடர்பு கொண்டேன்
உனக்கு ஏதேனும் நலக்குறைவா?
முதலாளி வினவினார்
இல்லை ஐயா
இன்று வேலைக்கு வரவியலாத அளவுக்கு
அதிக பூரிப்புடனிருக்கிறேன்
நாளை சோர்வாக உணரும் பட்சத்தில்
நேரமாகவே பணிக்குத் திரும்பிவிடுவேன்
என்றேன்
பெட்ரோ பியட்ரி "தொலைபேசி இணைப்பகம்" என்கிற தலைப்பில் இதை எழுதி இருக்கிறார். உற்சாகமும் பூரிப்புமாக விடிகிற ஒரு நாளைத் தக்கவைத்துக்கொள்ள சூழலிலிருந்து நாமாகவே துண்டித்துக்கொள்வதே ஆகச்சிறந்த செயல். நேரடியாகவே இந்தக்கவிதை அதை உணர்த்துகிறது.
நாளையிலிருந்து விடுமுறை எனும் உற்சாகத்தோடு குதூகலித்தபடி பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளைப்போல இவ்விஷயத்தில் நாமும் ஆகிறோம். ஆக அகச்சோர்விலிருந்து விடுபடவியலாத சூழலால் நாம் ஆட்கொண்டுவிட்டோம். அச்சூழலை பெட்ரோ பியட்ரியின் இந்தக் கவிதை ஆசுவாசப்படுத்தியது என்றுதானே சொல்லவேண்டும்!
நான் எதுவுமில்லை
நான் எதுவொன்றுமாக
ஆகப்போவதில்லை
நான் எதுவொன்றுமாக
ஆகப்போவதைப் பற்றி
ஆசைப்படக் கூட இல்லை
இதையெல்லாம் விடுத்து
நான் என்னுள்ளாககொண்டிருக்கிறேன்
இந்த உலகத்துக் கனவுகளையெல்லாம்
போர்ச்சுகல் கவியான "பெர்னான்டோ பெசொவா"இதை எழுதியிருக்கிறார். நான் எதுவுமில்லை என்கிற முதல் வரிக்கும் நான் என்னுள்ளாகக் கொண்டிருக்கிறேன் இந்த உலகத்துக் கனவுகளை எல்லாம் "என்கிற இறுதி வரிக்குமான அழகான முரண்தான் கவிதையைப் பேசுபொருளாக்குகிறது. தன் சேகரங்களிலிருந்து எப்போதுமே முற்றாக விலகிக்கொண்டுவிடுகிறான் கவிஞன். சொற்களின் வழியாகவே அவனுடைய அவதானிப்புகளில் உள்ள பிரமிப்பும் ஆழமும் வெளிப்படுகின்றன. எதுவுமில்லை என்பவனிடம் அவனுக்குள் திரண்டு பீறிடும் சொற்களே அவனை அவனுள்ளாக நிரம்பி வழியச் செய்கின்றன. கவிஞன் மட்டுமே தன்னிலிருந்து தன்னையே விலக்கிக்கொண்டு அந்த வெறுமையின் வழியாக நிறைவைக் கண்டடைகிறான்.
நீரின் திறவுகோலை ஒரு வானப் புத்தகம் எனலாம். மேகமாக நிலவாக நட்சத்திரங்களாக சூரியனாக பறவைகளாக கவிதைகள் இவ்வானில் சிறகடித்து ஒளிர்கின்றன.
கவிஞர் க.மோகனரங்கன் அவர்கள் சிறந்த அர்ப்பணிப்பை மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார்.எக்காலத்திலும் நிலைத்து நின்று வாசிப்பில் கொண்டாடப்படும் இந்த "நீரின் திறவுகோல்" கவிதைப் புத்தகம்
***
க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்
தொகுப்பு: நீரின் திறவுகோல்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்
***
***
0 comments:
Post a Comment