முதிய குதிரை
புதிதாகப் பார்க்கிறது
பனியில் பூத்த மலரை
- ரியோகான்
இலக்கிய வகைமைகளில் கவிதைகள் வசீகரமானவை. கவிதையைக் காண்கின்ற அந்த ஒரு தருணத்தில் சில்லிட்டுப்போகும் மனம் தீராத உளைச்சல்களிலிருந்தும் படிந்து பெருகிய அழுத்தங்களிலிருந்தும் மாயையாய் விடுபடுகிறது. ரியோகானின் கவிதையில் வரும் முதிய குதிரை நிகழ்காலக் குறியீடு போன்றே தோன்றுகிறது. பனிப்பாதையின் தொலைவும் பயண அலுப்புமாக சோர்வுற்றிருந்த அத்தருணத்தில் சற்றைக்குமுன் மலர்ந்த ஒரு மலரைத் தந்து நெகிழ்த்துகிறது இயற்கை. அக்கணமே துயர கணங்களிலிருந்து சட்டென்று விடுபடுகிறது நிகழ்காலம். கவிதையின் திறப்பு அந்த வசீகர மலரைப் போன்றதுதான்.
இருபது பனிநிறை மலைகளின்
மத்தியில் ஒரே ஒரு சலனம்
கருங்குருவியின் கண்
- வாலஸ் ஸ்டீவன்ஸ்
கண் முன்னால் மிகப் பிரம்மாண்டமான பனிமலைகள் காட்சிப்படும்போது அவற்றிற்கு மத்தியில் தோன்றும்
ஒரு துளி கருங்குருவியின் கண் தான் நம்மைச் சலனத்திற்குள்ளாக்குகிறது .
கவிதைகளோடு வாழ்கிறவர்கள் பிரம்மாண்டமாய் சூழும் உணர்வுகளிடையே
துளிச் சலனத்தைக் காண முயல்கிறார்கள். அச்சலனமானது எப்படிப்பட்ட புறவியக்க சீற்றங்களையும் தோற்றுப்போகச் செய்கிறது. மேலும் சொற்களைத் தேடும்போதும் கண்டடையும்போதும் ஒருவித அகத்திறப்பு தானாய் நிகழ்கிறது. முன்னர் கண்டிராத பிரபஞ்சங்களை அதன்மூலம் நாம் அடையாளம் கண்டுகொள்கிறோம்.
இரவில் ஒரு நட்சத்திரமும்
எஞ்சியிருக்கப் போவதில்லை
இரவும் கூட மிஞ்சியிராது
நான் இறப்பேன்
என்னோடு சேர்ந்து
சகிக்கவியலாத இப் பிரபஞ்சத்தின்
எடையும் இல்லாதொழியும்
அன்றாட வாழ்க்கை தரும் இன்னல்களையும் அல்லல்களையும் சக மனிதரோடு பகிர்ந்துகொள்ள ஒருபோதும் மனம் இசைவதில்லை. இதில் சமரசம் கொள்ளாத காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடம் ரகசியங்கள் பல்கிப் பெருகிவிட்டன. நன்மையோ தீமையோ அவற்றின் தீர்வுகளைக் காண சுயரகசியங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.தனி மனித சுதந்திரம் தனிமனித வாழ்வோடு புழுங்கிக்கொண்டுள்ளது .
கவிதைக்குள் சஞ்சரிக்கும் ஒருவன் இதையெல்லாம் எளிதாக உடைத்தெறிகிறான். தற்கொலை குறித்த மேற்சொன்ன போர்ஹேவின் வரிகளில் மனத் தீவிரத்தின் நிலைப்பாடானது கவிதைக்குள் எளிதாகத் திணிவதைக் காண்கிறோம்.
மேலும் எந்த் தடைகளையும் காணாமல்,
பிரமிடுகளை பெரும் பதக்கங்களை
கண்டங்களை, முகங்களை
நான் துடைத்தழிப்பேன்
என்கிறார் போர்ஹே
ஒரு கவிஞனின் தற்கொலை இப்பிரபஞ்சத்தின் முகமூடிகளை கழற்றி எரிகிறது. அதன் நிகரற்ற சாரம் தனிமனித இழப்பில் தவிடுபொடியாகிறது.
மேலும் தொட்டழிப்பேன்
இறந்த காலத்தின் சேகரங்களை
வரலாற்றைப் பொடித்துத் தூசியாக்குவேன்
தூசியிலும் தூசியாக
போர்ஹே இவ்வரிகளின் வழியாக விடுதலை அடைந்து விடுகிறார். நினைவுகளில் வரலாற்றை சிதைத்த கணத்தில் அவருக்கும் அவரை மனத்தீவிரத்திற்குள் தள்ளித் துயருரச்செய்த இப்பிரபஞ்சத்திற்குமான உறவு அத்தோடு அறுந்து போகிறது . கடைசியில் அவர்
நான் இப்போது
இறுதியாகக் காண்கிறேன்
சூரியன் மறைவதை
கடைசிப் பறவை
கரைவதைச் செவிமடுக்கிறேன்
நான் கையளிக்கப்போவதில்லை
எவர் ஒருவருக்கும் வெறுமையை
என்று சொல்லி முற்றாகத் துண்டித்துக்கொண்டுவிட்டார். தன் வெறுமையை இவ்வுலகிற்குக் கையளிக்க விரும்பாத மனிதனாக கவிஞனால் மட்டுமே ஆக முடிகிறது. கவிஞனுக்கும் உலகிற்குமான உறவு தூய்மையிலும் தூய்மையானதாக இம்மண்ணில் நிலைபெற்றுவிடுகிறது. "கவிதைக்குள் எல்லாம் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன" என்கிறார் நிக்கனோர் பர்ரா. வாழ்வின் சஞ்சலங்களையும் அனுகூலங்களையும் வெகு இயல்பாக அவனால் கவிதைகளிடம் பகிர்ந்துகொள்ளமுடிகிறது . சக மனிதனிடம் உள்ள விருப்புவெறுப்பு ஏற்புமறுப்பு போன்ற எவ்வித உணர்வு பேதங்களையும் கவிதைகள் கொண்டிருக்கவில்லை. வாழ்வில் சுதந்திரமாகவும் தன்னியல்பாகவும் ஒருவனை இயங்கச் செய்கின்ற சிறப்பைக் கவிதைகளே கையளிக்கின்றன.
அதே சமயத்தில் பந்த பாச மதிப்பீடுகளைக் கவிதைகள் துச்சமாக்குகின்றன. பிரபஞ்சத்தின் தன்னிச்சையான இயக்கம் போன்றொரு உந்துவிசை கவிஞனையும் கவிதையையும் இணைக்கின்றது. பிரிவும் பரிவும் தத்தம் தீவிரத்திலிருந்து விடுபட்டு ஒரே எடையுள்ள உணர்வுகளாய் சொற்களில் இலகுவாகின்றன.
மலையையும் மடுவையும் ஒரே சமமான நித்தியத்துவற்குள் அடக்கிவிடுகிறான் கவிஞன். காற்றின் தொலைவும் கடலின் இருப்பும் இரண்டுமே ஒன்றுதான் அவனைப் பொருத்தவரை.கவிஞனுக்கு பறத்தல் சாத்தியமில்லை. ஆனால் பறவைகளைவிடவும் மேலான நம்பிக்கையையும் கனவுகளையும் லட்சியமாகக் கொண்டுவிடுகிறான்.
அந்த லட்சியமே அவனை வானையும் நிலவையும் நட்சத்திரங்களையும் எளிதாக ஸ்பரிசிக்க வைக்கின்றது.
விடிகாலையில் ஒரு வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு முயல் குறுக்காக ஓடியதை எங்களில் ஒருவர் விரல் நீட்டி சுட்டினார். அப்போதுதான் அம்முயலை காண நேர்கிறது. இந்தச் சம்பவம் நடந்து வெகுநாட்களிகிவிட்டது. இப்போது யாருமே இல்லை. அந்த முயலும் கூட இல்லை. ஆனால் அந்த முயலோடும் திசையைச் சுட்டிய விரலும் அவ்விரலிலிருந்து வியப்பாக கணப்பொழுதில் எழுந்த மின்வெட்டும் காலத்திற்கும் அணையாமல் மனதில் ஒளிர்ந்துகொண்டிருப்பதாக "ஸெஸ்லாவ் மிலோஸ் " என்பவரின் கவிதை வரிகளில் வருகின்றன. கவிஞனால் மட்டுமே அந்த மின்வெட்டையும் வியப்பையும் காலம்தாண்டியும் கடத்தவியலும். இவ்வித கவிதைகளின் வியப்பானது வரலாற்றில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
***
வால்ஸ் ஸ்டீபன் - Wallace Stevens
***
0 comments:
Post a Comment