மாற்றுச் சொற்கள்: 2 - மதார்


அபிராம்
சந்திராவின் "மாயராணி" கவிதை போலவே பெரு.விஷ்ணுகுமாரின் "காலம் போல கல்" கவிதை மலையாளத்தில் சிலாகிக்கப்பட்டது. பெரு.விஷ்ணுகுமார் மலையாளக் கவி அபிராமின் இரண்டு கவிதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவை : 

1

எளிதல்ல இந்த முகபாவம்

1989-இல்

பகலென்று தோன்றாத

ஒரு பகலில்,

மழையென்று உறுதியாய் கூறமுடியாத 

ஒரு மழையில்


சுயம் இழந்த வண்ணத்துபூச்சிகளை

தேநீர் அருந்தும்போது

நினைத்துப்பார்க்கும் கிருஷ்ணன்குட்டியின் 

பிரத்யேக முகபாவம்

பின் எத்துனை முயன்றும்

அவனால் 

மீண்டும் கொண்டுவர இயலவில்லை 


மாற்றி மாற்றி 

எத்தனை பகல்கள் வந்தபோதும்

சலிக்கும் வண்ணம் 

எத்தனை மழை பெய்தபோதும்

வண்ணத்துப்பூச்சிகள் பற்றி 

எவ்வளவோ சிந்தித்தபோதும்

கிருஷ்ணன்குட்டிக்கு அந்த முகபாவம் 

வளைந்து கொடுக்கவில்லை 


கிருஷ்ணன்குட்டி ஒரு நடிகனாய் இல்லாதது

அவருடையதும் நம்முடையதுமான பாக்கியம்


மீண்டும் ஒருமுறை

அந்த முகபாவத்தை

நான் கண்டது

இதனை வாசித்துக்கொண்டிருக்கும்

உங்களிடம் தான்


உள்ளதைச் சொல்கின்றேன்

கிருஷ்ணன்குட்டியை விட

அந்த முகபாவம்

பொருந்துவது உங்களுக்கு தான்


நீங்கள் ஒரு மகாநடிகன் தான்...

2

வரைபடம்


ரவி ஆசாரி

எப்பொழுது வருவாரென

யார் அறிவார். 


வழியில் எத்தனை

பீடித்துண்டுகளை அடையாளமாக

வைத்து வந்தாரென 

யார் அறிவார். 


இனி இப்பொழுது வேலை துவங்கினால் 

மாந்த்ரீகம் செய்வதுபோல் 

எத்தனை பாழும் பலகைகளில் 

புள்ளிகள் வைத்துக்கொண்டிருப்பாரென்று 

யார் அறிவார்.


எத்தனை கூட்டிக் கழித்தலின் வழியே

அவர் இந்த புள்ளிகளை வரைகிறார்.


இனி இப்போது 

புள்ளிகளினூடே ஒரு பென்சில் ஓடினால்

கணக்கு சரியாகி 

அதிலொரு கப்பல் தெளிந்து வராதென்று 

யார் கண்டார்


மெருகேற்றி மெருகேற்றி

பெருகிவரும் மரச்சுருள்கள்

ஒரு கடல் போலாகுகையில் 

ரவியாசாரி அதில் தன் 

பாய்கப்பலை இறக்கமாட்டாரென

யார் கண்டார்.

இந்த இரண்டு கவிதைகளுமே ஒரு கதாபாத்திரத்துடன் துவங்கி அதன் பயணங்கள், குழப்பங்கள் என நீண்டு கவிதையின் முடிவிலா மர்மத்துக்குள் அமிழ்ந்து அழகாகின்றன. அபிராம் மலையாளக் கவிகளில் பன்முகத் தன்மைகொண்ட கவிதைகளை எழுதுபவர். இதுதான் இவர் உலகம் என வரையறுப்பது கடினம். விளையாட்டுத்தனமான மொழிநடையில் கோமாளி ஏறும் சிகரம் போல உயரத்தை அடைந்துவிடுவது. பெரு.விஷ்ணுகுமார் தன் உரையில் அபிராமின் கவிதை பற்றி குறிப்பிடுகையில் "'பிராந்தன்' என்பதற்கும், 'என்ன ஒரு பிராந்தன்' என்பதற்கும் வேறுபாடு இருப்பது போல அபிராம் தன் கவிதைக்குள் நகை உணர்வை அனாயசமாக, இயல்புக்கு அப்பாற்பட்டு கடத்திவிடுகிறார்" என்று குறிப்பிட்டார். அதே போல அபிராம் கவிதையை வாசித்த விதம் அது அற்புதமானது. தமிழில் கவிதைகளை படிப்போம், மலையாளத்தில் வாசிக்கிறார்கள், பாடுகிறார்கள், நடிக்கிறார்கள். அது அவர்களின் பண்பாட்டில் ஒன்றாக இருக்கிறது. தமிழில் எழுத்து/வானம்பாடி என்ற பிளவிலிருந்து கவிதை பிரிந்ததாலோ என்னவோ அவர்கள் செய்வதை இவர்கள் செய்யக்கூடாது,இவர்கள் செய்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற யூத/இஸ்லாமிய நடைமுறை இருந்து வருகிறது. தமிழ் நவீன கவிதை கவிதையை மெளனமாக வாசிக்கவே சொல்கிறது. மேடை வாசிப்பு நமக்கானதல்ல என்று எண்ணுகிறது. ஆனால் மலையாளத்தில் அந்த பாகுபாடு இல்லை. அவர்கள் 'ஒலி' வடிவில் அதை அழகுறச் செய்கிறார்கள். தமிழிலும் அழகாக வாசிக்கும் கவிகளுண்டு. வெய்யில் அழகாகப் பாடவே செய்வார். மனுஷ்யபுத்திரன் அழகாக வாசிப்பார். இளம் கவிஞர்களில் சோ.விஜயகுமார் வாசிப்பை ஒரு கலையாக நிகழ்த்தி வருகிறார். இன்னும் பலர் உள்ளனர். இருந்தும் அந்த இறுக்கம் இன்னும் தளரவில்லை. அது தமிழிலிருந்து சென்றிருந்த எங்கள் அனைவரிடமுமே இருந்தது. நான் வாசித்த என் பூக்கடைக்காரி, காட்சி அதிசயம் கவிதைகளை மலையாளத்தில் கார்த்திக் கே வாசித்தபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகவே தமிழ்க் கவிகள் நாங்கள் மலையாளத்திற்கு ஏற்றாற்போல் அங்கு சற்றி ஓங்கியே ஒலித்தோம். 

ரெம்யா தெரவூர்

மலையாளத்திலிருந்து இரண்டு இளம் பெண் கவிகள் வந்திருந்தனர் - அம்மு தீபா மற்றும் ரெம்யா தெரவூர். இதில் அம்மு தீபாவை ஆனந்த் குமார் மொழிபெயர்ப்பின் வழியாக தமிழ் வாசகர்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர். அவரது "குளம்" கவிதை குறித்த குறிப்பு கவிதைகள் இதழில் முன்பே வெளிவந்துள்ளது (அம்மு தீபா கவிதைகள்) அம்மு தீபா கவி ஆளுமையாகவும் பித்து நிலையிலேயே இருப்பவர். தமிழில் பிரான்சிஸ் கிருபாவை அப்படிச் சொல்வார்கள். 24 மணி நேரக் கவி வாழ்வு. பெண் கவிகளில் இது சாத்தியமா என்று கேட்டால் மலையாளத்தில் அம்மு தீபாவைக் காட்டலாம். என் முன் ஜென்மம் தமிழ் நிலத்தில் கழிந்தது என்று கூறும் அம்முவின் கவிதைகள் பெண் மனமே தொடும் ஆழமான விஷயங்களை எளிமையான மொழியில் தரிசனங்களாக முன்மொழிபவை. அம்மு தீபாவின் கவிதைகளைத் தமிழில் கவிஞர் லாவண்யா சுந்தரராஜன் மொழிபெயர்த்திருந்தார். அவற்றில் சில : 

1

முக்தி

இறந்து போன தாத்தா

ஒரு கிருஷ்ணப்பருந்தை

வீட்டைப் பாதுகாக்க அமர்த்தியிருந்தார்


வீட்டின் மேற்கூரைச் சுற்றி

அது எப்போதும்

வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்தது


விடிந்தலிருந்து மாலை வரை

மங்கிய வெயிலில் விசுகென்று

ஒளியெழுப்பி

நாய்களை வெருளச் செய்யும்


"செத்தாலும் நிம்மதி

தரவில்லை கிழவன்"


தலை திவசத்தினத்தில்

பாட்டி

பருந்துகிரையாக கோழிகுஞ்சை பொறிக்குள் வைத்தாள்


பருந்து கீழிறங்கி

பொறிக்குள் வந்தது


நல்ல உச்சி பொழுதில்

புழுக்கத்தோடு

ஓராண்டு பசியில்

தாத்தா வந்திருந்தார்


பருந்தை பிடித்து நெருப்பிலிட்டு  

நல்ல மசால் தடவி பொறித்தாள்


அதை தலை வாழையிழையிட்டு  

படையலாக வைத்தாள் பாட்டி

2

நள்ளிரவில்

நள்ளிரவில்

மொட்டை மாடிக்கு

ஏறி வருபவள்


மிளாவின் கொம்பிலேறி

நிலாவொன்று

மலையை கடப்பதைக் கண்டாள்

அம்மு தீபா

அம்மு தீபாவின் கவிதைகளை மட்டுமல்லாமல் பலரது கவிதைகளையும் லாவண்யா சுந்தரராஜன் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். வாட்ஸப் க்ரூப்பில் புயல் வேகத்தில் தினசரி அவர் செய்துவந்த மொழிபெயர்ப்புகளைப் பார்த்து பலர் ஊக்கம் பெற்றனர். விட்டல் ராவ் - விளக்கு விருது நிகழ்வில் அவர் பேசவேண்டி இருந்ததால் இறுதி நாளிலேயே எங்களோடு இணைந்துகொண்டார். அவரது கவிதைகளை அம்மு தீபா மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். 

ரெம்யா தெரவூரின் கவிதைகளை ஆனந்த் குமார் தமிழில் மொழிபெயர்த்தார். பெண் உலகை / பால்யத்தைப் பேசும் அவரது கவிதைகள் உணர்வுத் தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படுபவை. 

1

மகள் வரைந்த வீடு

ஐந்து வயதுள்ள 

எனது மகள் 

அவளது வீட்டை வரைகிறாள் 


வீடு

மரம்

பூக்கள்

நடைவழி 

ஆறு 


வரைவதை நிறுத்தி பாதியிலெழுந்து

அவள் வெளியே ஓடுகிறாள் 


பென்சிலை எடுத்து நான்

வீட்டைச்சுற்றி நிறைய காற்றாடி மரங்களை அதில் 

வரைந்து சேர்த்தேன் 


எனது தலைக்குருதியின் 

பைத்திய மான்கள் ஓடும் 

இந்த காட்டை 

மகள் இதற்குமுன் பார்த்ததேயில்லை 


அவள் வரைந்த மரக்கிளைகளில் 

இணையை தொலைத்த கிளி 

எனது பெயரைச்சொல்லி அழைப்பதை  

அவள் கேட்டதே இல்லை


இடையிடையில்

எனது கரடிக்கண்களின் நிறம் படரும் இந்த பூக்கள் 

எத்தனை வருடங்கள் கழித்து 

அவளது மெலிந்த விரல்களுக்கிடையில்

பூக்கும்?


அவள் பாதி வரைந்த நடைபாதைக்கருகில் 

புன்னை மரத்தடியில் 

இரவுகளில் நான் 

பேய்போல் அலைவதை 

அவள் அறியப்போவதேயில்லை


வீட்டிற்கருகிலுள்ள 

ஆற்றின் கரையில் 

எனது ஏழாவது மரணமும் கடந்துதான்

நான் துவட்டி ஏறி அமர்ந்திருக்கிறேன் என்பதை 

அவள் 

யூகிக்கக் கூட முடியாது 


சிறிது கழித்து 

செம்பின் நிறமுள்ள முடிகள் கொண்ட 

எனது மகள் திரும்பி வந்தாள் 


நான் வரைந்த 

காற்றாடிக் காட்டின் இடையிலிருந்து 

வெளிச்சத்தின் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு 

அந்த பாதைகளில் ஓடிமறைந்தாள்

2

அம்மாவின் ஞாபகம்

  

அம்மாவிற்கு ஞாபகம் மறைந்து போனபின்  

இரவுகள் விடியாமலும்    

வெளிச்சம் இருளாமலுமானது  

  

மேற்கு அறையின் உத்தரத்தில்  

நீல விரிப்பின்மேல்  

நான்கு துண்டு மேகங்களை   

அம்மா எப்போதும் வெட்டித்தொங்கவிடுவாள்  

  

இடையிடையே வாசலில் வந்து  

நிற்கவைத்த இடத்திலேயே சூரியன் இருக்கிறதாவென  

எட்டிப்பார்ப்பாள்  

  

அவள் வளர்த்துவரும் ஒரு காயலின் குறுக்கே  

பாலம் வந்து வெகுநாட்களான பின்னும்  

இப்போதும் அம்மா  

ஒரு சட்டியும் முறமும் சுமந்து   

இல்லாத படகுதுறை ஏறி  

இல்லாத தேவாலயத்தின் திருவிழா முடித்து  

தினமும் மாலை திரும்பி வருவாள்  

  

பருவம் தப்பிய மழை  

என்னை எட்டிக்கடந்து  

அம்மாவிற்கு மேல் மாத்திரம்   

நின்று பெய்வதை நான் ஏக்கத்துடன் பார்த்திருப்பேன்   

  

கட்டில் கால்களில் கைகள் ஊன்றிக் குனிந்து  

ஒரு அறுவடைகாலத்தை மிதித்து முடிக்கையில்   

வரப்புகளிலிருந்து அனிலும் கீரியும்  

நூற்றாண்டுகள் பழக்கமுள்ள ஞாபகத்தில்  

அம்மாவைப்போல் தலைநீட்டிப் பார்க்கும்  

  

இறந்தவர்களின் மொழியை எவ்வளவு எளிதாக அம்மா பேசிவிடுகிறாள்  

அதுதான் 

பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்த கனவனின் ஓலம்  

தாழை முள்ளென அம்மாவின் இருபுறமும் துளைத்து முளைக்கிறதா   

  

ஞாபகங்கள் இல்லாததனால்தானோ என்னவோ  

அன்று வரப்பில் இருந்த   

பொன்மானும் கீரியும் நீர்கோழியும்  எல்லாம்

உள்ளறையின் வாசல்வந்து  

அம்மாவின் மொழியைப் பேசுகின்றன.

ஆனந்த் குமாரின் கவிதைகளை மலையாளத்தில் ரெம்யா தெரவூர் மொழிபெயர்த்திருந்தார். ஆனந்த் குமார், வே.நி.சூர்யாவின் கவிதைகளை மலையாளத்தில் விரும்பி வாசித்தனர். ஆனந்த் குமார் ஏற்கனவே மலையாளத்தில் அறியப்பட்டிருந்தார். ஆனந்தை அவர்கள் மலையாளக் கவியாகவே பார்த்தனர். வே.நி.சூர்யாவின் கவிதைகளை அமித் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். வே.நி.சூர்யாவின் "பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா" கவிதையில் இடம் பெறும் பலவீன ரோஜா எப்படி ஒரு ஆழமான படிமமாக மாறுகிறது என்பது குறித்து சந்திரா தங்கராஜ் விளக்கினார். 

அதே போல இதற்கு முன் நடைபெற்றிருந்த தமிழ் மலையாள மொழிபெயர்ப்பு பட்டறைகள் குறித்தும் மலையாளக் கவிகள் சிலாகித்து பேசினர். கவிஞர் ச.துரையின் "ஆப்பிள்" கவிதை இன்றும் நினைவுகூறப்படும் ஒரு இனிய கவிதையாக அவர்களின் மனதில் தங்கிவிட்டது.

கூடைக்குள் வைக்கப்படுகிற

ஆப்பிளைப்போலத்தான்

ஒவ்வொரு இரவுகளிலும்

உன்னைத் தொட்டிலுக்குள்

வைப்பேன் மகளே

நீ அத்தனை சிவப்பு

மொழி அத்தனை இனிப்பு

அம்மா உனக்கு அழகான குடுமி இடுவாள்

அது அப்படியே ஆப்பிளின்

காம்பைப்போல்  இருக்கும்

அதே போல் இன்றும் நினைவுகூறப்படும் இனிய கவியாக அவர்களின் மனதில் தங்கிவிட்டவர் கவிஞர் இசை. இன்ப அதிர்ச்சியாக கவிஞர் இசையோடும் எங்களோடும் இணைந்து கொண்டார். நட்புக்காகவும், கவிதைக்காகவும் அவரது வருகை அமைந்தது. பாரதப் புழை ஆற்றில்"குத்துப்பாட்டின் அனுபூதிநிலை" பாடலை இசை வாசித்து பாடியதை மறக்கவே முடியாது. பாரதப் புழை ஆற்றில் கவிஞர் பி.ராமனோடு அவரது மனைவியும் கவிஞருமான சந்தியா, மலையாளக் கவி அணில் குமார், ஆதிரா, அசோகன் மறையூர், இசையோடு நாங்களும் சென்றோம். தமிழ்க் கவிதைகளில் ஆற்றை விட கடலே அதிகம் வருவதாக பி.ராமன் குறிப்பிட்டார். ஆற்றுப் பாலம் குறித்த இடசேரி கோவிந்தன் நாயரின் குட்டிப்புரம் பாலம் கவிதையை பி.ராமன் பாடினார். ஆற்றைப் பிண்ணனியாகக் கொண்ட பல கவிதைகளை நாங்களும் வாசித்தோம். கல்யாண்ஜியின் பல கவிதைகளை நான் வாசித்தேன். கல்யாண்ஜி பட்டாம்பி கவிதை திருவிழாவில் முன்னர் கலந்துகொண்ட இனிய அனுபவங்களை பி.ராமன் எங்களோடு பகிர்ந்து கொண்டார். கல்யாண்ஜி பேச ஆரம்பித்ததும் முழு அரங்கமும் அமைதியானதை இசை குறிப்பிட்டார். அவர் பேச்சுக்கு ஒரு இசைத்தன்மை உண்டு, அது மலையாளிகளுக்குப் பிடித்தது என்று பி.ராமன் பேசினார். அசோகன் மறையூர் இந்த நதிக்கு நீர் எங்கிருந்து வருகிறது தெரியுமா என்று "பேச்சின்" வழியாக அவர் ஊருக்கு சென்று சென்று வந்துகொண்டிருந்தார். நதியில் அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்த்தபடி ஒரு மாலை அழகாகக் கழிந்தது.   

பி.ராமன் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கும் கவிதை மனநிலையிலேயே அவர் இருந்தார். எங்கும் அவர் அப்படித்தான் இருப்பார், ஒரு சிறுவனுக்கேயுரிய முகத்தோடு, சுறுசுறுப்போடு. அவர் தற்கால தமிழ்க் கவிதைகள் அனைத்தும் 'ஒன்றை' நோக்கி எய்யப்படுவதால் ஒன்று போலவே இருப்பது போல் தோன்றுகின்றன என்றும், தற்கால மலையாளக் கவிதைகள் பல்வேறு விஷயங்களை அனுமதித்துச் செல்கின்றன (பழங்குடிக் கவிதைகள், திருநங்கை கவிதைகள் , etc..) என்றும் குறிப்பிட்டார். தற்கால தமிழ்க் கவிதைகள் குறைவாகவும் மலையாளக் கவிதைகள் விரிவாகவும் பேசுகின்றன என்றார். அவையே இரண்டு மொழிக் கவிதைகளின் பலமாகவும் பலவீனமாகவும் அமைகின்றன என்றும் குறிப்பிட்டார். மேற்சொன்ன கருத்தோடு தமிழ்க் கவிகள் விவாதித்தனர்.

தமிழுக்கு மலையாளக் கவிதைகள் எழுத்தாளர் ஜெயமோகன் வழியாகவே கிடைத்தது, கிடைக்கிறது. தற்கால மலையாளக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை கவிஞர் ஆனந்த்குமார் தமிழில் செய்யவேண்டும். அது அவருக்கேயுரிய பணி. 

மலையாள பெரும்கவிகள் கே.சச்சிதானந்தன், கல்பற்றா நாராயணன், வீரான்குட்டி, அன்வர் அலி, பி பி ராமச்சந்திரன் எனப் பலர் வந்திருந்தனர். அனைவரையும் சந்தித்தோம். கல்பற்றா நாராயணனைச் சந்திக்கையில் பாரி மணவாளன் மொழிபெயர்த்து 'அகழ்' இணைய இதழில் வெளிவரும் கட்டுரைத் தொடரை விரும்பி வாசிப்பதாகவும் அதில் இடம்பெற்ற "கழுதையும் குதிரையும்" கட்டுரை அபாரமானது என்றும் பெரு.விஷ்ணுகுமார் ஒரு ரசிக மனோநிலையில் சிலாகித்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வீரான்குட்டி அமர்வில் அவர் வாசித்த "நியூட்டன் ஆப்பிள்" கவிதையை கவிதைகள் இதழுக்காகக் கேட்டபோது அவர் மனம் உவந்து அளித்தார். அன்வர் அலி வாசித்த "கபர் வீடு" "செராபுதீன்- பும் பும்" கவிதைகளும் நன்றாக இருந்தன. 

பட்டறை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய ஒரு வாரம் கழித்து தோழி நித்ய கெளசல்யா சமீபத்தில் அவர் எழுதியிருந்த கவிதைகளை எனக்கு அனுப்பியிருந்தார். சமீபத்தில்தான் அவர் குழந்தை பெற்றிருந்தார். தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளார். கவிதை மேல் ஆர்வம் கொண்ட அவர் அதிகம் கவிதை எழுதியதில்லை. வாய் மொழியாகச் சொல்வார். தனக்குத் தோன்றிய இன்ன இன்ன கவிதைக் கருக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். ஆனால் எழுதிப் பார்த்ததில்லை. முதல் தடவையாக அனுப்பியிருந்தார்.

1

பருத்தியிலிருந்து வெடித்து வெளி வரும் பஞ்சு காற்றில் சுதந்திரமாய் மிதந்தது ...

கருப்பையிலிருந்து

வெடித்து வெளி வந்த

சேயோன்று அது போல்

கை கால்களை நீட்டி காற்றை தொட எத்தனிக்கிறது ...

உள்ளே புரள இட ஒதுக்கீடு பற்றாக்குறையால் ஒருக்களித்து படுத்த சேய் இன்று மல்லாந்து சுகம் கண்டது தாயருகில் ...

சுகமாய் மல்லாந்து தூங்கிய தாய் இன்று ஒருக்களித்து படுத்துக் கொண்டாள் பிரசவ வலியால் ...

கருப்பையில் சேய் -சேய் ...

நான் -தாய்...

இப்பொழுதோ சமயங்களில் சேய் -தாய் ...


நான் - சேய்...

2

புது வித சங்கீதம் தோன்ற சூழ்நிலை, திறமை வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை ...

தாயின் முலைக்காம்பும்...

சேயின் இதழும்

முத்தமிடும் தருணத்தில் பிரசவித்து விடுகிறது

எனக்கான சங்கீதம் ...

எனக்கு இந்த இரண்டு கவிதைகளிலும் உள்ள பாறையை இன்னும் கொஞ்சம் செதுக்கலாம் என்று தோன்றியது. சில மாற்றங்களை மட்டும் செய்தேன்.

1

பருத்தி பிளக்க

வெளி வந்த பஞ்சு 

காற்றில் 

சுதந்திரமாய் மிதந்தது 


கருப்பை பிளக்க

வெளி வந்த மகவும்

அதே போல

கை கால்களை நீட்டி 

காற்றைத் தொட 

எத்தனித்தது


இடப்பிரச்சினையால்

உள்ளே புரள

ஒருக்களித்து படுத்திருந்த

சேய் 

இன்று மல்லாந்து 

சுகம் காண்கிறது

தாயருகில்


சுகமாய் மல்லாந்து தூங்கிய தாய் 

இன்று 

ஒருக்களித்து 

படுத்துக் கொள்கிறாள் 

பிரசவ வலியில்


கருவில்

கரு கருவாய் இருந்தது

தாய் தாயாய் இருந்தாள்

இப்பொழுதோ 

சேய் தாயாகிவிட்டது

தாய் சேயாகிவிட்டாள்


2

உன்னத சங்கீதம்

புது வித சங்கீதம் 


அது தோன்ற 

புது வித சூழ்நிலை

தேவையில்லை


திறமை கூட வேண்டாம் போல 


தாயின் முலைக்காம்பு

சேயின் இதழ்

முத்தமிட்டுக் கொள்ளும் தருணம் 

உதித்து விடுகிறதொரு

உன்னத சங்கீதம்

திருத்தங்கள் செய்த இரண்டு கவிதைகளையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். மகிழ்ந்து போனார். இப்போது தொடர்ந்து எழுதுகிறார், வாசிக்கிறார். மேற்செய்த திருத்தங்கள் குறித்து யோசித்தேன். அது கேரள கவிதைப் பட்டறையின் விளைவே என்று தோன்றியது. மாற்றுச் சொற்கள் குறித்த கூருணர்வைக் கூட்ட அது தந்த பயிற்சி. முதல் கவிதையில் தாய் 'ஒடுங்கி' படுத்திருக்கிறாள் என்று திருத்தத் தோன்றியது. ஆனால் 'ஒடுங்குதல்' என்பது வேறு அர்த்தத் தளங்களையும் அளிக்கும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டேன். இது வழக்கமாகச் செய்வது தான். ஆனால் அந்தக் கூருணர்வு மாற்றுச் சொற்கள் குறித்த கவனம் இரண்டையும் கேரள கவிதைப் பட்டறை அளித்துள்ளது.

சரண்யா தமிழ் மலையாளக் கவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். அவருக்கு இரு மொழிகளுமே தெரியும் என்பதால் ஆர்வத்துடன் அவ்வேலையை செய்தார். மலையாளத்தில் ஒவ்வொரு கவிகளையுமே வாசகர்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். பேராசிரியர் ஜகதி மொழிபெயர்ப்பாளரும் கூட மொழிபெயர்ப்பு பட்டறையில் தேவையான இடங்களில் கூர்மையாக தன் அவதானிப்புகளைக் கூறினார். 

தமிழ்க் கவிஞர்களில் வே.நி.சூர்யாவுடனும், ஆனந்த் குமாருடனுமே எனக்கு அதிகப் பழக்கம். இந்தப் பட்டறையால் சந்திரா தங்கராஜோடும், இசையோடும், பெரு.விஷ்ணுகுமாரோடும் எனக்கு நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது. மலையாளக் கவிகளில் அம்மு தீபாவும், அமித்தும் தோன்றும்போதெல்லாம் இளையராஜாவின் பாடல்களைப் பாடி இனிமை சேர்த்தனர். அறையில், கல்லூரியில், கல்லூரியில் அமைந்த சிறு காட்டில், தேநீர் கடையில், ஆற்றங்கரையில், மகிழுந்தில், நடை வழியில் என எங்குமே கவிதை கவிதை கவிதை தான். ஊருக்குத் திரும்புகையில் நிறைவு, பிரிவு வருத்தம், கற்றல் என மனம் நிறைந்திருந்தது. கடிகாரத்தின் மூன்று முட்களும் பிடித்த தருணத்தில் உறைந்து நின்றது போன்ற மூன்று நாட்கள், நின்ற அந்த கடிகாரத்தில் பேட்டரி போடாமல் இருந்திருக்கலாம்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் - 1 - க.நா.சு

உலகத்து கவிதைகளைப்‌ பற்றி ஒரு மணிநேரத்துக்குள்‌ சொற்பொழிவு ஆற்ற வேண்டும்‌ என்று எனக்குப்‌ பணித்திருக்‌கிறார்கள்‌. இது கொஞ்சம்‌ சிரமம்‌ என்று...

தேடு

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (6) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (6) கட்டுரை (10) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (197) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (5) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (6) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (6) கட்டுரை (10) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (197) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (5) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive