பெங்களூரு 4.0
கார்கள் மூழ்குகின்றன ஸ்கூட்டர்கள் நீந்துகின்றன
துணிகளும் காண்டமும் காமவாசனைகளும் ஏழு வாரங்களுக்கு ஈரமாகவேயிருக்கும்
ஸ்விகி பிளிங்கிட் ஜமோடா அமேசான் அலிபாபாக்களின் டிரோன்கள்
கவலைகளுடன் சுற்றுகின்றன.
சிலைகள் சிலைகளாக கிடக்கும்
ஏரியின் கல்லறையின் மீது திருவிழா கொண்டாடினால் எத்தனை பிரமாதமாக இருக்கும்
***
லைவ்
அதிக ஆரவாரம் கூடாது.
ஒரு ஸ்மார்ட் போனும் ஐம்பது நூறு ரூபாய்க்கு டேடாவும் வைத்து
யார் வேண்டுமானலும் யூ ட்யூப் சேனலை உருவாக்க முடியும்
ராத்திரி அவசியமில்லை, பகல் வெளிச்சமிருந்தாலே வீடியோ நன்றாக வரும்
ஒரேயடியாக யாருமில்லாமல் இருப்பது ஆகாது,
எத்தனைக்கெத்தனை கூட்டம் உள்ளதோ அத்தனைக்கத்தனை நல்லது
கத்தி இருந்தால் நல்லதுதான் ஆனால் கட்டாயமில்லை.
மனிதனின் கையும் காலுமே போதுமானது.
போரை நேரடியாக ஒலிபரப்புகிறது சி என் என்
கொலை எண்ணத்தால் உற்சாகமடைந்து
கொலையை மக்களுக்குப் பிடித்த எண்ணமாக உருவாக்குகிறது பிரைம் டைம்
கொலையை நேரடியாக ஒலிப்பரப்பும் நாடாக ஆக்குகிறதா?
ஒரு அலைபேசி எண்ணைப் போல
உங்களை அழைப்பதாக இருந்தேன் நான்.
ஒரு நாள் நாம் இருவரும் ஒன்றாகவே படப்பிடிப்பை முடித்தோம்
இத்தனை சீக்கிரம், மூன்று நாட்களுக்கு உள்ளாகவே,
வேறுமாதிரியாகும் என்று எனக்குத் தெரியாது
இந்த மூன்று நாட்களில் பல முறை உங்களைப் பற்றி யோசித்தேன்
எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுபோல
மந்தமாக, ஆகவே சற்று பின்தங்கியவராக,
இருபதாம் நூற்றாண்டிலேயே மாட்டிக் கொண்டவர் என்றும்
இப்போதெல்லாம் உங்கள் வேலையை நீங்கள் சொன்னபடி சரியாக செய்வதில்லை
இந்து குடும்பத்திலிருந்து வந்த உங்கள் மனைவி எப்படி இருக்கிறார்கள்
உங்களுக்குக் குழந்தைகள் உண்டல்லவா? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
இந்த ஊரிலிருந்து போய் விட்டீர்களா?
என்றெல்லாம் நான் யோசித்தேன்
உங்கள் கேமரா பழைய தூர்தர்ஷனின் தரத்துக்கு சமமாக இல்லாமல் இருந்திருக்கலாம்
ஆனால் அதன் உணர்வுகள் சரியாக பொருந்தியிருந்தன.
நாள் முழுவதும் உங்களுடைய கண்கள் மனிதர்களை அல்ல, ஒளியையே பார்த்திருக்கும்
ஜே பி, இந்திரா இருவரையும் நீங்கள் இதே கண்களால் நேரில் பார்த்திருக்க
வேண்டும் என்று நான் நினைப்பது ஏனென்று எனக்குத் தெரியவில்லை
ஆனால் ஏதாவது செய்யுங்கள், உங்கள் உபகரணங்கள் பழசாகிவிட்டன
தூர்தர்ஷனை நீங்கள் வேலையாக மட்டும் பாருங்கள், காதலைப் போல் அல்ல.
ஆனால், உங்களைப் பற்றி பேச நான் உங்களிடம் வரவில்லை
அடுத்த படப்பிடிப்பு எப்போது என்று தெரியாது
உங்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது
இன்னும் நாம் நண்பர்களாகவில்லை
ஒருவேளை அது நடக்காமலும் போகலாம், ஏனெனில் எனக்கு நண்பர்கள் யாருமில்லை
இப்போதும் நான், இந்த எளிய நகரத்தில்
தற்பெருமை, அகங்காரம், சுயவிரக்கத்துடன் அலைந்து திரியும் கைவிடப்பட்டவன்தான்
நல்லது, நான் என்னைப் பற்றியும் உங்களிடம் பேச வரவில்லை
தவிர வேறெதையும் செய்வதுகூட இப்போது மேலும் சிரமமாக இருக்கிறது.
உங்களிடம் நான் ஒரு தாங்க முடியாத துயரத்தைப் பகிரவே வந்திருக்கிறேன்
என்ன நடந்தது என்றால் உங்களை நான் அழைப்பதாக இருந்தேன்
என்னுடைய அலைபேசியில் உங்களைப் பெயரை இட்டு,
தேடி வெகு நேரத்துக்குப் பிறகு கிடைத்தது
என் வாழ்வில் உள்ள இஜாஸ் நீங்கள் மட்டுமே அல்ல.
நண்பர்களற்று கைவிடப்பட்டு வருடக்கணக்கில் ஊர் ஊராக திரியும்
என்னுடைய அலைபேசியில் அந்த இன்னொரு இஜாஸின் எண்
எப்படி தங்கியதென்று எனக்குத் தெரியவில்லை
அந்த எண்ணையும் பெயரையும் கண்ட அந்த நொடியில்
எஞ்சியிருந்த இறகுகள் உடைந்து நொறுங்கின
நண்பர்களற்ற, கைவிடப்பட்ட ஒருவன் அழுவதுபோல அழுது கொண்டிருக்கிறேன்
நாற்பத்தி ஆறு டிகிரி கொதிக்கும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில்
மோட்டர் சைக்கிள் ஓட்டியபடியே அழுது கொண்டிருக்கிறேன்.
உங்களுக்குப் புரிகிறதல்லவா? இஜாஸ் அகமது இந்த உலகில் இல்லை
இப்போது அவர் என் அலைபேசியில் உள்ள ஒரு எண்.
இஜாஸ் அகமது இல்லை என்பது
இப்போது எத்தனை துக்கம் அளிக்கக் கூடியதென்பதை
உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
***
- தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
கிரிராஜ் கிராது:
நவீன ஹிந்தி இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத பெயர் கிரிராஜ் கிராது.
1975ல் ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் பிறந்தவர். பிரதிலிபி என்ற இருமொழி மாத இதழின் நிறுவனர். கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிக்கையாளர் என்று பலதுறைகளிலும் பங்களிப்பவர். இவருடைய கவிதைகள் இந்தியில் மிகவும் பிரசித்தி பெற்றவை என்றாலும் இதுவரையிலும் தொகுப்பாக வெளியிடப்படவில்லை.
வழக்கமான கவிதையின் வடிவத்தில் அல்லாமல் உரைநடையின் வடிவத்தில் இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. பல கவிதைகளில் இவர் முற்றுப்புள்ளிகளையோ பிற நிறுத்தற்குறிகளையோ இடுவதில்லை. காலங்காலமாக கவிதையில் சொல்லப்பட்டுள்ள பாடுபொருள்களை இவர் கவிதைகளில் காணமுடிவதில்லை. நவீன மனத்தின் சலனங்களை அபத்தங்களை கையாலாகத்தனங்களை நுட்பமாக சித்தரிக்கின்றன கிரிராஜ் கிராதுவின் கவிதைகள்.
அண்மையில் எழுதப்பட்ட அவரது இந்த ஏழு கவிதைகளும் ‘சமாலோசன்’ என்ற இணைய இதழில் வெளியானவை.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)
மேலே உள்ள கவிதைகள் சமாலோசன் இதழில் வெளியான கவிதைகளின் தமிழ் வடிவம்.
***
0 comments:
Post a Comment