கவிதைக்காக மூன்று நாட்கள். கவிதை சார்ந்தும், கவிதை வாசித்தும், கவிதை கேட்டும், கவிதை மொழிபெயர்த்தும், கவிதை கவிதை என மூன்று நாட்கள். கடிகாரத்தின் மூன்று முட்களும் பிடித்த தருணத்தில் உறைந்து நின்றது போல மூன்று நாட்கள். தவிர கல்லூரியின் அத்தனை நிகழ்வுகளுமே கவிதைக்காகத்தான். கவிதை அமர்வுகள், கவிதை சார்ந்த ஓவிய அரங்குகள், நோக்குத்தி (திருஷ்டி பொம்மை) அறை. இதில் நோக்குத்தி (திருஷ்டி பொம்மை) அறை என்பது எனக்குப் புதிதாக இருந்தது. ஒரு இருட்டான அறையில் திருஷ்டி பொம்மையின் மூன்று புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. மூன்றும் மூன்று நிலைகளில், மூன்றும் ஒன்றல்ல.. அந்தந்த புகைப்படங்களுக்குக் கீழே கம்பியில் தொங்கும் பெரிய ஒலிவாங்கி (headphone). ஒன்றை எடுத்து காதில் மாட்டினால் அதற்கு நேர் எதிரே இருக்கும் திருஷ்டி பொம்மையின் புகைப்படம் எடுக்கப்பட்ட பின் கதையை அது சொல்கிறது.
(ஒரு நாள் நான் பேருந்துக்குக் காத்திருக்கையில் அந்தத் திருஷ்டி பொம்மையைப் பார்த்தேன். நான் அணிந்திருந்த அதே சட்டையை அணிந்திருந்ததும் ஒரு கணம் திடுக்கிட்டேன்,etc...)
இப்படி மூன்று புகைப்படங்களுக்கும் மூன்று கதைகள். இருட்டான அறைக்குள் அமைதியாக ஒலிக்கும் குரல் - ஒரு திகிலான தியான அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுபோக சுவரில் மாட்டப்பட்ட ஐபேடில் ப்ளே செய்தால் ஓடும் திருஷ்டி பொம்மை வீடியோ, டிவியில் ஓடும் திருஷ்டி பொம்மை வீடியோவைப் பார்க்கப் போடப்பட்ட நீள் இருக்கை என கவிதைக்குத் துணை செய்யும் ஒரு அரங்கு - கவிதை படிமம் போல்..
![]() |
கார்த்திக் கே |
கன்னியாகுமரி கவிதை முகாம் 2022 ல் கவிஞர் ஆனந்த்குமார் மொழிபெயர்த்த கார்த்திக் கே வின் இரண்டு கவிதைகள்
1
காலம் செல்லச்செல்ல மனிதன் கனிவுள்ளவனாகிறான்
சிறு குழந்தைகளுக்கு ஊட்டும்போது
அவர்கள்
தண்ணீர் பருகும் தேக்கரண்டிகளுக்கு
அடம் பிடிப்பார்கள்
நான் அப்படி அடம்பிடிக்கையில்
அப்பா
கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு
‘அதைத் திருடன் கொண்டுபோய்விட்டானே’
எனச் சொல்வதை கேட்டிருக்கிறேன்
நானே தனியாக அள்ளியுண்கையில்
நேற்று
ஒரு குழந்தையின் அப்பா
கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு
‘அது தண்ணீரில் கரைந்துவிட்டதே’
எனச் சொல்வதை கேட்டேன்
சாப்பிட்டு முடிக்கும் முன்பே
நான் புரிந்துகொண்டேன்
காலம் செல்லச்செல்ல
மனிதன் கனிவுள்ளவனாகிறான்
2
கடைசியாக வயிறு நிறைந்தது
(கார்த்திக் கே)
ஹோட்டல் என்பது
இந்தக் காட்சியின் பெயர்
ஒரு பிரியாணி பார்சல் வேண்டுமென்பது
இதன் பின்னனி
எனக்கு நன்கு பசிக்கிறது என்பதே
நாடகத்தின் அடிநாதம்
காட்சியில்
கடைக்காரன் தன்
கதாபத்திரத்தின் சூழல் மறந்து
பிரியாணி மடக்க எடுத்த
பேப்பரில் இருந்த
ஒரு இளைஞனின் படத்தைக் கண்டு
அசைவற்று நிற்கிறான்
காட்சி சொதப்புகிறது
பின்னனி மாறுகிறது
நாடகத்தின் அடிநாதம் உடைகிறது
‘நீங்கள் இதிலல்ல
அடுத்த காட்சியில்தான் நடிக்கிறீர்கள்’
கோபம் கொண்டு நான்
பேப்பரிலுள்ள இளைஞனோடு
மேடையிலிருந்து இறங்கிப் போகிறேன்.
இந்த இரண்டு கவிதைகள் போகவும் கணிசமான கவிதைகள் ஆனந்த் குமாரால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனவே அவை அல்லாத வேறு கவிதைகள் இருந்தால் மொழிபெயர்க்க அனுப்பும்படி நான் கார்த்திக்கிடம் கேட்டிருந்தேன். எனக்கு மலையாளம் தெரியாது. ஆகவே அனுப்பிய கவிதையை வாசித்து அனுப்புமாறும் கேட்டிருந்தேன். அப்படி கார்த்திக் அனுப்பிய முதல் கவிதைதான் "உதயம்". மிக நல்ல கவிதை
ഉദയം
പതിവിലും നേരത്തെയെണീറ്റ്
ഉദയം കാണാൻ പോയതായിരുന്നു.
അപ്പോൾ
അടുത്തു വന്നിരുന്ന നായ്ക്കുട്ടി
അതിൻ്റെ പിൻകാലുകളിലൊന്നുയർത്തി
ഇനിയുമുണങ്ങാത്ത, നീരൊലിക്കുന്ന
വ്രണം
കാണിച്ചു തന്നു.
കഴിഞ്ഞ രാത്രി മുഴുവൻ
വേദനിച്ചിട്ട്
അതിനുറക്കം കിട്ടിയിട്ടുണ്ടാവില്ല-
എന്നു തോന്നി
ഞാൻ മിച്ചം പിടിച്ച അൽപം ഉറക്കം
ഒന്നു തലോടുന്ന മട്ടിൽ
അതിനു കൊടുത്തു.
എൻ്റെ കണ്ണുകൾ
നിദ്രയിലേക്ക് സാവധാനം അടയാറുള്ള
അതേ പോലെ
നായ്ക്കുട്ടിക്കാലിലെ ചീഞ്ഞ വ്രണം
അതാ..
മിഴി പൂട്ടുന്നത് കണ്ടു.
உதயம்
வழக்கத்தை விடவும்
சீக்கிரமே எழுந்து
உதயம் காணச் சென்றேன்
அப்போது
அருகே வந்த
ஒரு நாய்க்குட்டி
பின்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி
நீர் ஒழுகுகிற
புண்ணைக் காட்டியது
கடந்த இரவு முழுதும்
வேதனையில்
அது தூங்கியிருக்குமா
எனத் தோன்றவே
நான் மிச்சம் பிடித்த
சொற்ப தூக்கத்தை
தடவுவது போல்
அதற்குக் கொடுத்தேன்
மெல்ல
எனது கண்கள்
துயிலில் மூடுவதைப் போலே
அதோ அதன் புண்ணும்
மூடக் கண்டேன்
மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பே நான் செய்த உதயம் கவிதையின் இறுதி வடிவம். கார்த்திக் வாசித்து அனுப்பியதும் அதை Google translator ல் போட்டும் கவி ஆனந்த்குமாரிடம் கேட்டும் நான் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்தேன்.
உதயம்
அன்றென்னவோ
கொஞ்சம் முந்திச் சென்றேன்
உதயம் காண -
நீண்ட உறக்கத்தின்
சிறு சிமிழை
சேமிப்பில் வைத்து
வழியிடையே
குட்டி நாயொன்று
பின்னங்கால் தூக்கிக் காட்டியது
சீழ் பிடித்த புண்ணை, ரணத்தை
நானதன்
குட்டி விழிகளைப் பார்த்தேன்,
தூங்கியிராத வேதனையை
குட்டி நாய்க்குட்டியே
என் சேமிப்பின் சிமிழிலுள்ளது
சிறு உறக்கம்
நானதை உனக்குத் தருவேன்
ஆழ் தூக்கத்துள்
என் விழி மூடுவது போல
உன் புண் மூழ்கட்டும்
இதைக் கவி ஆனந்த்குமாருக்கு அனுப்பியதுமே அவர் கண்டுபிடித்தார் இதில் ஏதோ சரியில்லை என்று. மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பவன் தேடுவது வெறும் சொல் அல்ல. அது மாற்றுச் சொல். நேரடியாக எழுதும்போது கூட நேரடிச் சொல் ஒன்று வந்துவிழுந்து விடலாம். எல்லா இடங்களிலும் மாற்றுச் சொல் குறித்த யோசனை தேவைப்படாது. ஆனால் மொழிபெயர்ப்பு மாற்றுச் சொற்களால் ஆனது. இது பொருந்துமா இது சரியாக இருக்குமா என மனைவியை துணிக்கடைக்குக் கூட்டிச் சென்றது போல மாற்றுச் சொற்களை மாற்றி மாற்றிப் போட்டபடி இருக்கவேண்டும். ஆனந்த் குமார் இதில் என்னை மலையாள 'ஒலி' பொருந்தும்படியான தமிழ் மாற்றுச் சொற்களைப் போட்டுப் பார்க்கச் சொன்னார். பின்னர் எனக்கு சற்று புரிந்தது. தோசையைத் திருப்புவது மாதிரி அவர் கொடுத்த இந்த யோசனை எல்லா கவிதைகளுக்கும் பொருந்தாதுதான். ஆனால் இந்தக் கவிதைக்கு ஓரளவு பொருந்தி வந்தது. அதே போல மொழிபெயர்ப்பில் இரண்டு உண்டு. சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பது, சொற்களை நம் இஷ்டம் போல் மாற்றி அர்த்தத்தை மொழிபெயர்த்துவிடுவது.
(இது குறித்து கவிதைகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த ஒரு உரையாடல் கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் -(நெல்லை சந்திப்பு) இந்தக் கவிதையில் மலையாளத்திற்கு இணையான தமிழ் வார்த்தைகளைப் போட்டும் கவிதை சரியாக அதன் அர்த்தத் தளத்தை அடைந்தது. கார்த்திக் கே வின் கவிதைகள் எளிய மொழியில் அமைந்தவை. ஆனால் அவை அடையும் கவித்துவ தருணம் ஆழமானவை. இந்த எளிய கவிதையை மொழிபெயர்க்கையிலும் நிறைய இடங்களில் சந்தேகம் வந்தது. "நாய்க்குட்டி பின் கால் தூக்கி" என்று முதலில் மொழிபெயர்க்க அது தமிழில் ஒரு நாய்க்குட்டி சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தந்தது. பிறகே பின்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி என்று மாற்றினோம். அதே போல மலையாளத்தில் "அல்பத் தூக்கம்" என்றிருந்ததை தமிழில் "சொற்பத் தூக்கம்" என்று மாற்றினோம். அல்பம் என்பது தமிழில் கேலி செய்வதற்கும் பயன்படும் ஒரு சொல். ஆனால் மலையாளத்தில் "சொற்பம்" என்ற பொருள் மட்டும்தானாம். ஆகவே அதை சொற்பம் என்று மாற்றினோம். மொழிபெயர்ப்பில் பெரும் பங்கு ஆனந்த்குமாருடையதே.
இரண்டாவதாக கார்த்திக் கே அனுப்பிய கவிதை "நடுக்கம்" அதையும் மேல்சொன்ன கவிதைக்கு செய்த அதே முறைமைகளைப் பின்பற்றி செய்து பார்த்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு சரியாக அமையவில்லை.
நடுக்கம்
கண்ணாடிக்கு முன்னால் நின்று
தெரிந்தவர்களை நடித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது
ஒருதடவை மட்டும்
கண்ணாடி
நடுங்கும் பாவத்தில்
ஒருவரை கண்டுபிடித்தது
இந்த செய்தியை
நான் அவரிடம் சொன்னபோது
அதைவிட நடுங்கிய அவர்
தானே உடைவது போலொரு
சப்தத்தை எழுப்பினார்
அந்த செய்தியை
நான் கண்ணாடியிடம்
தெரிவித்தேன்
அப்போது கண்டுகொண்டேன்
இதற்கெல்லாம் பின்னால் உள்ள
அந்த
உடைந்த ரகசியத்தை
கார்த்திக் கே வின் இந்தக் கவிதையில் மொழிபெயர்த்த எல்லா சொற்களும் எளியவைதான். ஆனால் சொற்களிலிருந்து விடுபட்டு கவிதை கவிதையை அடையும் இடத்தை எவ்வளவு முயன்றும் பிடிக்கவே முடியவில்லை. மலையாள மூலத்தை அதே செறிவோடு மொழியாக்கம் செய்வதில் பெரும் சவாலாக அமைந்தது இந்தக் கவிதை. இந்தக் கவிதைக்கு ஒரு abstract தன்மை உண்டு. பார்ப்பதற்கு எளியது போன்ற தோற்றம். மொழிபெயர்க்கையிலேயே அதன் சிக்கல் புரிந்தது. மலையாளக் கவிஞர் பி.ராமன் அவர்களிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தபோது தமிழில் யாருடைய கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பது எளிது என்று கேட்டோம். அவர் யோசிக்காமல் சுகுமாரன் என்றார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி தீர்வதற்குள் யாருடைய கவிதை மொழிபெயர்ப்பு கஷ்டமானது என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்தார், அது - கலாப்ரியா. தமிழ் வாசிப்பில் இது தலைகீழானது. கலாப்ரியாவின் கவிதைகள் தமிழில் பார்க்க எளிமையானது போல் தோன்றினாலும் அதிக பண்பாட்டு/உறவுப் பின்புலங்களைக் கொண்டிருக்கும். அதை மலையாளத்திற்கு மொழிபெயர்ப்பது சிரமம் என்று கூறி எங்களுக்கு விளங்க வைத்தார். இன்னொன்று மலையாள மொழி இன்னொரு மொழியிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வளரும், சமஷ்கிருதத்திலிருந்து எடுக்கும்; தமிழிலிருந்து எடுக்கும், ஆங்கிலத்திலிருந்து எடுக்கும். பஸ் என்பது மலையாள வார்த்தைதான் தெரியுமா என்று சிரிப்போடு கேட்டார் முதல் நாள் பட்டறையில் ஜமீல் சார்.
![]() |
அமித் |
1
நடனம் ஆடுகையில்
நான்
தொடுவதெல்லாம் எனது.
நிலவும் ஆகாயமும் எனது.
அசைவுகள் நான்
அளந்தெடுப்பதெல்லாம் எனது
பார்க்கும் திக்கெனது
2
நர்த்தகன்
ஒரு நர்த்தகன்
ஓய்ந்தவொரு தருணத்தில்
இறகுகளை அடுக்கும்
பறவைபோல
அசைவுகளை பூட்டிவைக்கிறான்
எத்தனை மலர்கள்
விரல்களில்
விரியாமல்
வாடாமல்
அந்த மனிதன்
கண்களை மூடுகிறான்
நூற்றியோரு மேடைகளில்
ஆடிய பாடலில்
ஏதோவொரு நிமிடத்தில்
இன்னுமொரு தடம்வைக்க
சாத்தியம் இருப்பதை
சட்டென நினைக்கிறான்
ஏதோ நடனத்தில்
அமைதியாய் மிதக்கிறான்
3
நிற்றல்
பாதி உடலில்
ஒரு பாம்பு
எழுந்து நிற்கிறது
மிகவும் தனிமையாய்
மண்ணில் இருந்து
ஆகாயத்திற்கு
ஊர்ந்து ஏறி
வீழாமல் நிற்கிறது
வெட்டவெளிக்கு
முகம்காட்டி
கைகால்கள் எல்லாம்
விரித்து
கைகால்கள் இல்லாமல்
பாதி ஆகாயத்திலும்
பாதி மண்ணிலுமாய்
ஒரு பிரார்த்தனை
சாத்தியமான உயரத்தில்
தியானம் போன்ற நடனத்தில்
விரல்களில் நின்று
நான் நிகழ்த்துவது போல்
![]() |
அசோகன் மறையூர் |
1
இந்த ஆண்டு டிசம்பர் பூக்கள் தந்த ஏழு கவிதைகள்
மலையில் முதல் பருவத்தில்
எப்போதும் பயணப்படும்
அதே காட்டுவழியில் நடக்கிறேன்
கையில் பிடித்திருக்கும்
என் ஊன்றுக்கோலுக்கு முன்னால்
கூட்டம் கூட்டமாக
என்னை கடந்து செல்கின்றன பட்டாம் பூச்சிகள்
அதன் பின்னே வசந்தத்தை மேய்த்தபடி
நானும் போகிறேன்..
இரண்டாம் பருவத்தில் மலைக்காடு
இந்த ஆண்டிலேயே மிகவும குளிரேறிய இரவுகளைக் கொண்டிருந்தன.
நான் குன்றின் மேலேறி
ஒரு பாறை இடுக்கினுள் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு
கீழே சமவெளியைப் பார்க்கிறேன்.
குடுவையில் அடைக்கப்பட்ட மின்மினிப்பூச்சிகள்
ஒவ்வொன்றாக வெளியேறுவதைப்போல
ஒவ்வொரு பகலும் முடிந்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு பகலும் எனை கடந்தகாலத்திற்கு அழைத்துச் சென்றது.
ஆனால் வெகு சீக்கிரத்தில் அவையெல்லாம்
சில்வண்டுகளாக மாறின.
அவை ஒவ்வொன்றின் முதுகையும் துளைத்துக்கொண்டு
பல்லாயிரம் சில்வண்டுகள் வெளியேறின.
பாறைகளிலும் மரங்களிலும் அமர்ந்து
சத்தமிடும் அவற்றின் ஓசையால் காடு நிறைகிறது.
குடுவையிலிருந்து வெளியேற விரும்பாத அந்த மின்னாம்மினியின் பகலில்
நமக்கான ஒரு வேனல் மழை ஒளிந்திருக்கிறது..
மூன்றாம் பருவத்தில்
பூக்களில்
பார்வையற்றோர் எழுத்தை தொடுவதைப்போல
எத்தனை முறைதான் ஒரு பட்டாப்பூச்சி
தன் கால்களால்
ஒவ்வொரு வசந்தத்தையும் தொட்டறிகிறது.
நான்காம் பருவத்தில்
ஓராயிரம் விதிகளால்
ஒரு நபர் வாழும் உலகமாக மாறுகிறது காடு.
மொத்த மழையும் நனைத்தாலும்
அவை மழையோடு சேராமலும்
மொத்த வெயிலும் பிரகாசிச்சாலும்
அவை வெயிலோடு சேராமலும்
காதலால் முழுமையாக ஆட்கொண்டாலும்
அவை காதலை நெருங்காமலும்
தனியே அலைகிறது
ஒன்று கேட்கட்டுமா
இப்படி இருந்துகொண்டு
காடே
எனக்கு நீ தந்த மெளனத்தை
எத்தனை ஜென்மம் எடுத்துதான்
எழுதித் தீர்த்தாய்.
ஐந்தாம் பருவம்
விதைகளின் கர்ப்பபையில்
எத்தனை அழகாக
ஒரு பட்டாம்பூச்சியைப் போல
முத்தம் இட்டுச் செல்கிறது
அப்போது குளிர்ந்த விதைகளின் மென்மைக்கு ஏங்கி
பட்டாம்பூச்சிகள் மரிக்கின்றன
அதுவும் இல்லையென்றால்
ஒரு வசந்தத்திற்கு
என்னதான் மதிப்பு
ஆறாம் பருவத்தின் வேனல் சூட்டில்
டிசம்பர் பூவில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியின் றெக்கைகள்
ஏரிவதைப்போல படபடக்கின்றன.
ஏழாம் பருவத்தில்
நாம் இல்லாத பொழுதில்
காற்றில் அலைந்த பட்டாம்பூச்சி
இறுதியாக பறந்து செல்கையில்
தன்னோடு சேர்த்து காட்டின் வசந்தத்தையும்
எடுத்துச் சென்றது.
2
கடிகார ஆமை
என் வீட்டில்
ஒரு சாவி இயக்கியும்
நான்கு கால்களுமுடைய
வார்கள் அறுந்த கடிகாரம் ஒன்றும்
மேஜை மேலே வெறுமனே கிடக்கும்.
எப்போதும் வானொலியின் அருகில்தான்
அதன் இருப்பிடம்.
அப்பா அதையே பார்த்தபடி இருப்பார்
பின் திடீரென அதை கையிலெடுத்து
சாவி இயக்கியால் பலமுறை திருகுவார்
அது சிறியதொரு ஆமை
குஞ்சினைப்போல
அவருடைய கைகளிலிருந்து ஓடத்தொடங்கும்.
ஒரு ஆமையைப்போல அதன் தலை
எப்போது வெளியே நீளுமென்றும்
சாவி இயக்கியை எப்போது திருகவேண்டுமென்றும்
அப்பா மட்டுமே அறிவார்
பின் மெதுமெதுவாக என் அப்பாவும் ஆமைக்குஞ்சினைப் போலவே நடக்கத் தொடங்கினார்
இப்போது அப்பாவும் அந்தக் கடிகாரமும்
நாற்காலியில் அருகருகில்தான் இருக்கிறார்கள்.
அந்த இருப்பில் அப்பாவுக்குத் தெரியும்
சிலநேரங்களில் நேரமென்பது
ஆமையின் மேல்புறத்திலுள்ள கெட்டியான ஓடு என்றும்
சிலநேரம் கண்ணாடியைப்போல
ஒரு விழுகையில்
சில்லு சில்லென சிதறிப்போகுமென்றும்
மேலும்: மாற்றுச் சொற்கள் - 2
வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்
சந்திரா தங்கராஜ் தமிழ் விக்கி பக்கம்
பெரு. விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்
ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்
கவிஞர் மதார் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment