மாற்றுச் சொற்கள்: 1 - மதார்

கேரள மாநிலம் பட்டாம்பி அரசுக் கல்லூரியில் கேரள பள்ளிக் கல்வித் துறையும் SNGS பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய Poetry carnival festival 2025 ல் தமிழிலிருந்து கவிஞர்கள் வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், ஆனந்த் குமார், சந்திரா தங்கராஜ், லாவண்யா சுந்தரராஜன் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டேன். ஜனவரி மாதம் 17,18,19 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இக்கவிதைத் திருவிழா பெரும் உற்சாகத்தையும், மனநிறைவையும் தந்தது. பேராசிரியர் சந்தோஷ் HK இந்நிகழ்வுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். மலையாளக் கவிஞர் பி.ராமன் தமிழ் மலையாள கவிஞர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார். தன்னை "கவிதையின் உபாஷகன்" என்று அழைத்துக் கொள்ளும் கவிஞர் பி. ராமன் மகத்தான ஆளுமை. கேரள நவீன கவிதைக்குக் கிடைத்த கொடை என்றே அவரைக் குறிப்பிடலாம். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் இயங்கும் இளம் கவிஞர்களின் கவிதைகளை அவர் தொடர்ந்து அவதானித்து வருகிறார். "புதியன புகுதல்" என்பதற்கு உதாரணமாய் கேரள நவீன கவிதையில் நிகழும் மாற்றங்களை வரவேற்பவராக உள்ளார். 1992 களில் எழுத்தாளர் ஜெயமோகன் ஒருங்கிணைத்த குற்றாலம் கவிதைப் பட்டறை மலையாளக் கவிஞர்களை பெருமளவு பாதித்தும், அவர்களது கவிதைகளில் செல்வாக்கு செலுத்தியும் உள்ளது. அதன் நீட்சியாக இன்றும் கேரளாவில் அத்தகு முயற்சிகளை பி.ராமன் முன்னெடுக்கிறார். (தமிழிலும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற வேண்டும்).

கவிதைக்காக மூன்று நாட்கள். கவிதை சார்ந்தும், கவிதை வாசித்தும், கவிதை கேட்டும், கவிதை மொழிபெயர்த்தும், கவிதை கவிதை என மூன்று நாட்கள். கடிகாரத்தின் மூன்று முட்களும் பிடித்த தருணத்தில் உறைந்து நின்றது போல மூன்று நாட்கள். தவிர கல்லூரியின் அத்தனை நிகழ்வுகளுமே கவிதைக்காகத்தான். கவிதை அமர்வுகள், கவிதை சார்ந்த ஓவிய அரங்குகள், நோக்குத்தி (திருஷ்டி பொம்மை) அறை. இதில் நோக்குத்தி (திருஷ்டி பொம்மை) அறை என்பது எனக்குப் புதிதாக இருந்தது. ஒரு இருட்டான அறையில் திருஷ்டி பொம்மையின் மூன்று புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. மூன்றும் மூன்று நிலைகளில், மூன்றும் ஒன்றல்ல.. அந்தந்த புகைப்படங்களுக்குக் கீழே கம்பியில் தொங்கும் பெரிய ஒலிவாங்கி (headphone). ஒன்றை எடுத்து காதில் மாட்டினால் அதற்கு நேர் எதிரே இருக்கும் திருஷ்டி பொம்மையின் புகைப்படம் எடுக்கப்பட்ட பின் கதையை அது சொல்கிறது. 

(ஒரு நாள் நான் பேருந்துக்குக் காத்திருக்கையில் அந்தத் திருஷ்டி பொம்மையைப் பார்த்தேன். நான் அணிந்திருந்த அதே சட்டையை அணிந்திருந்ததும் ஒரு கணம் திடுக்கிட்டேன்,etc...)

இப்படி மூன்று புகைப்படங்களுக்கும் மூன்று கதைகள். இருட்டான அறைக்குள் அமைதியாக ஒலிக்கும் குரல் - ஒரு திகிலான தியான அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுபோக சுவரில் மாட்டப்பட்ட ஐபேடில் ப்ளே செய்தால் ஓடும் திருஷ்டி பொம்மை வீடியோ, டிவியில் ஓடும் திருஷ்டி பொம்மை வீடியோவைப் பார்க்கப் போடப்பட்ட நீள் இருக்கை என கவிதைக்குத் துணை செய்யும் ஒரு அரங்கு - கவிதை படிமம் போல்.. 

கார்த்திக் கே

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னரே வாட்ஸப் வழி மொழிபெயர்ப்புகளை முடிக்கச் சொல்லியிருந்தனர். ஆகவே தமிழ் மலையாளக் கவிஞர்கள் பன்னிருவரும் வீட்டுப் பாடத்தை முடித்து பள்ளிக்கு வந்த பிள்ளைகள் போலே மிதப்பில் இருந்தோம். வாட்ஸப் வழி கவிதை மொழிபெயர்ப்புகளைச் செய்தது ஒரு புதிதான அனுபவம். ஒரு மலையாளக் கவிஞருக்கு ஒரு தமிழ்க் கவிஞர் என mutual ஆகத் தேர்வு செய்து மாறி மாறி மொழிபெயர்ப்புகளைச் செய்வது எனத் திட்டம். என்னுடைய கவிதைகளை மலையாளக் கவிஞர் கார்த்திக் கே மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். கார்த்திக் கே மலையாளத்தின் இளம் கவிஞர்களில் முக்கியமானவர். 21 வயதே ஆன இவர் அபாரமான கவிதைகளை எழுதியுள்ளார். "க்ளிங்" என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. மாணவர். சாதாரண விஷயங்களில் ஒளிந்திருக்கும் அசாதாரணத்தைக் கண்டுபிடிப்பதே இவரது கவிதை உலகம். விளையாட்டுத்தனம் இவரது கவிதை வடிவமாகக் கைக்கொள்ளப்படுகிறது. என்னுடைய கவிதை உலகத்திற்கு மிக நெருக்கமானது கார்த்திக் கே வின் கவி உலகம். கார்த்திக் கே வின் கவிதைகளை கவிஞர் ஆனந்த் குமார் 2022 ல் கவிஞர் லட்சுமி மணிவண்ணன் நடத்திய கன்னியாகுமரி கவிதை முகாம் அமர்வில் மொழிபெயர்த்து வாசித்திருக்கிறார். எனவே எனக்கு ஏற்கனவே கார்த்திக் கே வின் கவிதைகள் பரிட்சயமானதாக இருந்தன. விருப்பத்திற்குரியதாகவும் இருந்தன.

கன்னியாகுமரி கவிதை முகாம் 2022 ல் கவிஞர் ஆனந்த்குமார் மொழிபெயர்த்த கார்த்திக் கே வின் இரண்டு கவிதைகள்


1

காலம் செல்லச்செல்ல மனிதன் கனிவுள்ளவனாகிறான்

சிறு குழந்தைகளுக்கு ஊட்டும்போது

அவர்கள்

தண்ணீர் பருகும் தேக்கரண்டிகளுக்கு

அடம் பிடிப்பார்கள்


நான் அப்படி அடம்பிடிக்கையில்

அப்பா

கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு

‘அதைத் திருடன் கொண்டுபோய்விட்டானே’

எனச் சொல்வதை கேட்டிருக்கிறேன்


நானே தனியாக அள்ளியுண்கையில்

நேற்று 

ஒரு குழந்தையின் அப்பா

கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு

‘அது தண்ணீரில் கரைந்துவிட்டதே’

எனச் சொல்வதை கேட்டேன்


சாப்பிட்டு முடிக்கும் முன்பே 

நான் புரிந்துகொண்டேன்

காலம் செல்லச்செல்ல

மனிதன் கனிவுள்ளவனாகிறான்


2

கடைசியாக வயிறு நிறைந்தது 

(கார்த்திக் கே)

ஹோட்டல் என்பது 

இந்தக் காட்சியின் பெயர்

ஒரு பிரியாணி பார்சல் வேண்டுமென்பது 

இதன் பின்னனி

எனக்கு நன்கு பசிக்கிறது என்பதே

நாடகத்தின் அடிநாதம்


காட்சியில்

கடைக்காரன் தன் 

கதாபத்திரத்தின் சூழல் மறந்து

பிரியாணி மடக்க எடுத்த 

பேப்பரில் இருந்த

ஒரு இளைஞனின் படத்தைக் கண்டு 

அசைவற்று நிற்கிறான்


காட்சி சொதப்புகிறது

பின்னனி மாறுகிறது

நாடகத்தின் அடிநாதம் உடைகிறது


‘நீங்கள் இதிலல்ல

அடுத்த காட்சியில்தான் நடிக்கிறீர்கள்’

கோபம் கொண்டு நான் 

பேப்பரிலுள்ள  இளைஞனோடு

மேடையிலிருந்து இறங்கிப் போகிறேன்.

இந்த இரண்டு கவிதைகள் போகவும் கணிசமான கவிதைகள் ஆனந்த் குமாரால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. எனவே அவை அல்லாத வேறு கவிதைகள் இருந்தால் மொழிபெயர்க்க அனுப்பும்படி நான் கார்த்திக்கிடம் கேட்டிருந்தேன். எனக்கு மலையாளம் தெரியாது. ஆகவே அனுப்பிய கவிதையை வாசித்து அனுப்புமாறும் கேட்டிருந்தேன். அப்படி கார்த்திக் அனுப்பிய முதல் கவிதைதான் "உதயம்". மிக நல்ல கவிதை

ഉദയം

പതിവിലും നേരത്തെയെണീറ്റ്

ഉദയം കാണാൻ പോയതായിരുന്നു.

അപ്പോൾ

അടുത്തു വന്നിരുന്ന നായ്ക്കുട്ടി

അതിൻ്റെ പിൻകാലുകളിലൊന്നുയർത്തി

ഇനിയുമുണങ്ങാത്ത, നീരൊലിക്കുന്ന

വ്രണം 

കാണിച്ചു തന്നു.

കഴിഞ്ഞ രാത്രി മുഴുവൻ

വേദനിച്ചിട്ട്

അതിനുറക്കം കിട്ടിയിട്ടുണ്ടാവില്ല-

എന്നു തോന്നി

ഞാൻ മിച്ചം പിടിച്ച അൽപം ഉറക്കം

ഒന്നു തലോടുന്ന മട്ടിൽ

അതിനു കൊടുത്തു.

എൻ്റെ കണ്ണുകൾ

നിദ്രയിലേക്ക് സാവധാനം അടയാറുള്ള

അതേ പോലെ

നായ്ക്കുട്ടിക്കാലിലെ ചീഞ്ഞ വ്രണം

അതാ.. 

മിഴി പൂട്ടുന്നത് കണ്ടു.

உதயம்

வழக்கத்தை விடவும்

சீக்கிரமே எழுந்து

உதயம் காணச் சென்றேன்


அப்போது 

அருகே வந்த

ஒரு நாய்க்குட்டி

பின்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி

நீர் ஒழுகுகிற 

புண்ணைக் காட்டியது 


கடந்த இரவு முழுதும்

வேதனையில்

அது தூங்கியிருக்குமா 

எனத் தோன்றவே

நான் மிச்சம் பிடித்த 

சொற்ப தூக்கத்தை

தடவுவது போல்

அதற்குக் கொடுத்தேன்


மெல்ல

எனது கண்கள் 

துயிலில் மூடுவதைப் போலே

அதோ அதன் புண்ணும் 

மூடக் கண்டேன்

மேற்கண்ட தமிழ் மொழிபெயர்ப்பே நான் செய்த உதயம் கவிதையின் இறுதி வடிவம். கார்த்திக் வாசித்து அனுப்பியதும் அதை Google translator ல் போட்டும் கவி ஆனந்த்குமாரிடம் கேட்டும் நான் ஒரு மொழிபெயர்ப்பைச் செய்தேன்.

உதயம்


அன்றென்னவோ

கொஞ்சம் முந்திச் சென்றேன்

உதயம் காண - 

நீண்ட உறக்கத்தின்

சிறு சிமிழை

சேமிப்பில் வைத்து


வழியிடையே

குட்டி நாயொன்று

பின்னங்கால் தூக்கிக் காட்டியது

சீழ் பிடித்த புண்ணை, ரணத்தை


நானதன்

குட்டி விழிகளைப் பார்த்தேன்,

தூங்கியிராத வேதனையை


குட்டி நாய்க்குட்டியே

என் சேமிப்பின் சிமிழிலுள்ளது

சிறு உறக்கம்

நானதை உனக்குத் தருவேன்


ஆழ் தூக்கத்துள்

என் விழி மூடுவது போல

உன் புண் மூழ்கட்டும்

இதைக் கவி ஆனந்த்குமாருக்கு அனுப்பியதுமே அவர் கண்டுபிடித்தார் இதில் ஏதோ சரியில்லை என்று. மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பவன் தேடுவது வெறும் சொல் அல்ல. அது மாற்றுச் சொல். நேரடியாக எழுதும்போது கூட நேரடிச் சொல் ஒன்று வந்துவிழுந்து விடலாம். எல்லா இடங்களிலும் மாற்றுச் சொல் குறித்த யோசனை தேவைப்படாது. ஆனால் மொழிபெயர்ப்பு மாற்றுச் சொற்களால் ஆனது. இது பொருந்துமா இது சரியாக இருக்குமா என மனைவியை துணிக்கடைக்குக் கூட்டிச் சென்றது போல மாற்றுச் சொற்களை மாற்றி மாற்றிப் போட்டபடி இருக்கவேண்டும். ஆனந்த் குமார் இதில் என்னை மலையாள 'ஒலி' பொருந்தும்படியான தமிழ் மாற்றுச் சொற்களைப் போட்டுப் பார்க்கச் சொன்னார். பின்னர் எனக்கு சற்று புரிந்தது. தோசையைத் திருப்புவது மாதிரி அவர் கொடுத்த இந்த யோசனை எல்லா கவிதைகளுக்கும் பொருந்தாதுதான். ஆனால் இந்தக் கவிதைக்கு ஓரளவு பொருந்தி வந்தது. அதே போல மொழிபெயர்ப்பில் இரண்டு உண்டு. சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பது, சொற்களை நம் இஷ்டம் போல் மாற்றி அர்த்தத்தை மொழிபெயர்த்துவிடுவது. 

(இது குறித்து கவிதைகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த ஒரு உரையாடல் கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் -(நெல்லை சந்திப்பு) இந்தக் கவிதையில் மலையாளத்திற்கு இணையான தமிழ் வார்த்தைகளைப் போட்டும் கவிதை சரியாக அதன் அர்த்தத் தளத்தை அடைந்தது. கார்த்திக் கே வின் கவிதைகள் எளிய மொழியில் அமைந்தவை. ஆனால் அவை அடையும் கவித்துவ தருணம் ஆழமானவை. இந்த எளிய கவிதையை மொழிபெயர்க்கையிலும் நிறைய இடங்களில் சந்தேகம் வந்தது. "நாய்க்குட்டி பின் கால் தூக்கி" என்று முதலில் மொழிபெயர்க்க அது தமிழில் ஒரு நாய்க்குட்டி சிறுநீர் கழிக்கும் காட்சியைத் தந்தது. பிறகே பின்னங்கால்களில் ஒன்றை உயர்த்தி என்று மாற்றினோம். அதே போல மலையாளத்தில் "அல்பத் தூக்கம்" என்றிருந்ததை தமிழில் "சொற்பத் தூக்கம்" என்று மாற்றினோம். அல்பம் என்பது தமிழில் கேலி செய்வதற்கும் பயன்படும் ஒரு சொல். ஆனால் மலையாளத்தில் "சொற்பம்" என்ற பொருள் மட்டும்தானாம். ஆகவே அதை சொற்பம் என்று மாற்றினோம். மொழிபெயர்ப்பில் பெரும் பங்கு ஆனந்த்குமாருடையதே. 

இரண்டாவதாக கார்த்திக் கே அனுப்பிய கவிதை "நடுக்கம்" அதையும் மேல்சொன்ன கவிதைக்கு செய்த அதே முறைமைகளைப் பின்பற்றி செய்து பார்த்தேன். ஆனால் மொழிபெயர்ப்பு சரியாக அமையவில்லை.

நடுக்கம்

கண்ணாடிக்கு முன்னால் நின்று 

தெரிந்தவர்களை நடித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது


ஒருதடவை மட்டும் 

கண்ணாடி 

நடுங்கும் பாவத்தில் 

ஒருவரை கண்டுபிடித்தது 


இந்த செய்தியை 

நான் அவரிடம் சொன்னபோது 

அதைவிட நடுங்கிய அவர் 

தானே உடைவது போலொரு 

சப்தத்தை எழுப்பினார் 


அந்த செய்தியை 

நான் கண்ணாடியிடம் 

தெரிவித்தேன்


அப்போது கண்டுகொண்டேன் 

இதற்கெல்லாம் பின்னால் உள்ள 

அந்த 

உடைந்த ரகசியத்தை

கார்த்திக் கே வின் இந்தக் கவிதையில் மொழிபெயர்த்த எல்லா சொற்களும் எளியவைதான். ஆனால் சொற்களிலிருந்து விடுபட்டு கவிதை கவிதையை அடையும் இடத்தை எவ்வளவு முயன்றும் பிடிக்கவே முடியவில்லை. மலையாள மூலத்தை அதே செறிவோடு மொழியாக்கம் செய்வதில் பெரும் சவாலாக அமைந்தது இந்தக் கவிதை. இந்தக் கவிதைக்கு ஒரு abstract தன்மை உண்டு. பார்ப்பதற்கு எளியது போன்ற தோற்றம். மொழிபெயர்க்கையிலேயே அதன் சிக்கல் புரிந்தது. மலையாளக் கவிஞர் பி.ராமன் அவர்களிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தபோது தமிழில் யாருடைய கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்ப்பது எளிது என்று கேட்டோம். அவர் யோசிக்காமல் சுகுமாரன் என்றார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சி தீர்வதற்குள் யாருடைய கவிதை மொழிபெயர்ப்பு கஷ்டமானது என்று சொல்லி அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்தார், அது - கலாப்ரியா. தமிழ் வாசிப்பில் இது தலைகீழானது. கலாப்ரியாவின் கவிதைகள் தமிழில் பார்க்க எளிமையானது போல் தோன்றினாலும் அதிக பண்பாட்டு/உறவுப் பின்புலங்களைக் கொண்டிருக்கும். அதை மலையாளத்திற்கு மொழிபெயர்ப்பது சிரமம் என்று கூறி எங்களுக்கு விளங்க வைத்தார். இன்னொன்று மலையாள மொழி இன்னொரு மொழியிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வளரும், சமஷ்கிருதத்திலிருந்து எடுக்கும்; தமிழிலிருந்து எடுக்கும், ஆங்கிலத்திலிருந்து எடுக்கும். பஸ் என்பது மலையாள வார்த்தைதான் தெரியுமா என்று சிரிப்போடு கேட்டார் முதல் நாள் பட்டறையில் ஜமீல் சார்.

அமித்

முதல் நாள் காலை பட்டறையில் ஜமீல் சார் தலைமை தாங்கினார். வே.நி.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், சந்திரா தங்கராஜ், மதார், அமித் (மலையாளக் கவி), சரண்யா (ஒருங்கிணைப்பாளர்) ஆஜரானார்கள். மற்றவர்கள் மதியம் இணைந்து கொண்டனர். இதில் மேற்சொன்ன மலையாளக் கவி அமித்துக்கு தனிச்சிறப்பு உண்டு. அவர் ஒரு மோகினி ஆட்டக்காரர். சாயம் பூசாத தன் இயல்பான கருப்பு நிறம் கொண்டே மோகினி நடனம் ஆடுபவர். அவரது "நடன உலகம்/ நடன வாழ்வு" அவரது கவிதை உலகமாகவும் அமைகிறது என்பதே அமித்தைத் தனித்துக் காட்டும் ஒன்று. தமிழில் அப்படி யாருமே இல்லையென நினைக்கிறேன். மருத்துவர் மருத்துவ உலகை எழுதுவது/கொண்டு வருவது, நடனக்காரர் அல்லது பாடுபவர் அதைத் தன் படைப்புலகத்தோடு பொருத்துவது புனைவாசிரியர்களில் இருக்கலாம். அ-புனைவில் இருக்கலாம். கவிதையில் இல்லையென்றே நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் குறிப்பிடும்படியான கவிதையை எழுதியுள்ளாரா? தெரியவில்லை. தொழில் உலகம் வேறு. கவிஞன் தன் ஆளுமைக்குள் அதைக் கொண்டு வந்து எழுதுவது அரிதினும் அரிது. அமித் அத்தகைய அரிய கவி. ஆனந்த்குமார் மொழிபெயர்த்த அமித்தின் சில கவிதைகள்,

1

நடனம் ஆடுகையில்

நான் 

தொடுவதெல்லாம் எனது.

நிலவும் ஆகாயமும் எனது.

அசைவுகள் நான் 

அளந்தெடுப்பதெல்லாம் எனது

பார்க்கும் திக்கெனது 


2

நர்த்தகன்

ஒரு நர்த்தகன்

ஓய்ந்தவொரு தருணத்தில் 

இறகுகளை அடுக்கும் 

பறவைபோல 

அசைவுகளை பூட்டிவைக்கிறான்


எத்தனை மலர்கள் 

விரல்களில் 

விரியாமல்

வாடாமல் 


அந்த மனிதன் 

கண்களை மூடுகிறான்

நூற்றியோரு மேடைகளில் 

ஆடிய பாடலில்

ஏதோவொரு நிமிடத்தில் 

இன்னுமொரு தடம்வைக்க 

சாத்தியம் இருப்பதை

சட்டென நினைக்கிறான்


ஏதோ நடனத்தில்

அமைதியாய் மிதக்கிறான்


3

நிற்றல்

பாதி உடலில் 

ஒரு பாம்பு

எழுந்து நிற்கிறது 


மிகவும் தனிமையாய் 

மண்ணில் இருந்து

ஆகாயத்திற்கு 

ஊர்ந்து ஏறி

வீழாமல் நிற்கிறது 


வெட்டவெளிக்கு 

முகம்காட்டி


கைகால்கள் எல்லாம் 

விரித்து

கைகால்கள் இல்லாமல் 


பாதி ஆகாயத்திலும்

பாதி மண்ணிலுமாய்

ஒரு பிரார்த்தனை 


சாத்தியமான உயரத்தில்

தியானம் போன்ற நடனத்தில் 

விரல்களில் நின்று

நான் நிகழ்த்துவது போல்

அசோகன் மறையூர்

மதிய அமர்வில் மலையாளக் கவிகள் அபிராம், அம்மு தீபா, அசோகன் மறையூர், ரெம்யா தெரவூர் ஆகியோர் இணைந்தனர். இதில் அசோகன் மறையூர் சந்திரா தங்கராஜின் கவிதைகளை மொழிபெயர்க்க விருப்பம் தெரிவித்திருந்தார். அபூர்வமான ஒற்றுமை என்னவெனில் இருவருமே நிலம் சார்ந்து எழுதுபவர்கள்/இருவருமே பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள். அசோகன் மறையூரை தன் "இணை-கவி" என்றே சந்திரா குறிப்பிட்டார். "நீங்கள் எழுதாத ஒன்றை நான் எழுதவேண்டும் என்பதே சவால்" என்று அசோகனும் சந்திராவிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் சந்திரா தங்கராஜின் கவிதைகளை அசோகன் மறையூர் முன்னரே வாங்கிப் படித்திருக்கிறார் (இந்த நிகழ்வுக்காக அல்ல). அதே போல் மலையாளத்தில் எழுதி வரும் இளம் கவிஞர்கள் பலரும் தமிழ் நவீன கவிதையில் என்ன நடக்கிறது என்ன எழுதப்படுகிறது என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். பி.ராமன் தமிழில் எழுதி வரும் பல கவிஞர்களின் கவிதைகளை மொழியாக்கம் செய்து பார்க்கிறார். தமிழ்க் கவிஞர்களே அதிகம் கவனிக்காத தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளையும் அவர் கவனிக்கிறார். அவரைப் பொறுத்தவரை கவிதையே முக்கியம். ஆகவே நல்ல கவிதைகளை அவர் தவறவிடுவதில்லை. அசோகன் மறையூரின் கவி உலகம் சந்திரா தங்கராஜின் உலகம் போலே நிலத்தால் கட்டமைக்கப்பட்டது. அசோகன் மறையூர் என்ற பெயரும் அவரது கவிதைகளும் தமிழ் வாசகர்களுக்கு நிர்மால்யா மொழிபெயர்த்த "கேரளப் பழங்குடி கவிதைகள்" (தன்னறம் வெளியீடு) தொகுப்பின் வழியாக ஏற்கனவே பரிச்சயமானது. அசோகன் மறையூர் சந்திரா தங்கராஜின் "மாய இழை" "மாய ராணி" உட்பட பல கவிதைகளை மொழிபெயர்த்திருந்தார். "இழை" என்ற தமிழ்ச் சொல்லின் மலையாள மாற்றுச் சொல் குறித்து பேசினார். சந்திராவின் "மாயராணி" கவிதை அங்கு பலரால் சிலாகிக்கப்பட்டது. சிறிய கவிதையாக இல்லாமல் அசோகனின் பெரிய கவிதை ஒன்றை சந்திரா மொழிபெயர்த்தார். சவாலான அந்தப் பணியை அவர் வெகுசிறப்பாகச் செய்தார். சந்திரா மொழிபெயர்த்த அசோகன் மறையூரின் சில கவிதைகள், 

1

இந்த ஆண்டு டிசம்பர் பூக்கள் தந்த ஏழு கவிதைகள்

மலையில் முதல் பருவத்தில்

எப்போதும் பயணப்படும் 

அதே காட்டுவழியில் நடக்கிறேன் 

கையில் பிடித்திருக்கும் 

என் ஊன்றுக்கோலுக்கு முன்னால்  

கூட்டம் கூட்டமாக

என்னை கடந்து செல்கின்றன பட்டாம் பூச்சிகள்

அதன் பின்னே வசந்தத்தை மேய்த்தபடி

நானும் போகிறேன்..



இரண்டாம் பருவத்தில் மலைக்காடு

இந்த ஆண்டிலேயே மிகவும குளிரேறிய‌ இரவுகளைக் கொண்டிருந்தன.

நான் குன்றின் மேலேறி

ஒரு பாறை இடுக்கினுள்‌ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு

கீழே சமவெளியைப் பார்க்கிறேன்.

குடுவையில் அடைக்கப்பட்ட மின்மினிப்பூச்சிகள்

ஒவ்வொன்றாக வெளியேறுவதைப்போல

ஒவ்வொரு பகலும் முடிந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு பகலும் எனை   கடந்தகாலத்திற்கு அழைத்துச் சென்றது.

ஆனால்  வெகு  சீக்கிரத்தில் அவையெல்லாம் 

சில்வண்டுகளாக மாறின.

அவை ஒவ்வொன்றின் முதுகையும் துளைத்துக்கொண்டு

பல்லாயிரம் சில்வண்டுகள் வெளியேறின.

பாறைகளிலும் மரங்களிலும் அமர்ந்து 

சத்தமிடும் அவற்றின் ஓசையால் காடு நிறைகிறது.

குடுவையிலிருந்து வெளியேற விரும்பாத அந்த மின்னாம்மினியின் பகலில்

நமக்கான ஒரு வேனல்‌ மழை ஒளிந்திருக்கிறது..


மூன்றாம் பருவத்தில்

பூக்களில்

பார்வையற்றோர் எழுத்தை தொடுவதைப்போல 

எத்தனை முறைதான் ஒரு பட்டாப்பூச்சி

தன் கால்களால் 

ஒவ்வொரு வசந்தத்தையும்  தொட்டறிகிறது.


நான்காம் பருவத்தில் 

ஓராயிரம் விதிகளால் 

ஒரு நபர் வாழும்  உலகமாக மாறுகிறது காடு. 

மொத்த மழையும் நனைத்தாலும் 

அவை மழையோடு சேராமலும்

மொத்த வெயிலும் பிரகாசிச்சாலும்

அவை வெயிலோடு சேராமலும்

காதலால் முழுமையாக ஆட்கொண்டாலும் 

அவை காதலை நெருங்காமலும்

தனியே அலைகிறது

ஒன்று கேட்கட்டுமா

இப்படி இருந்துகொண்டு

காடே 

எனக்கு நீ தந்த  மெளனத்தை 

எத்தனை ஜென்மம் எடுத்துதான்

எழுதித் தீர்த்தாய்.


ஐந்தாம் பருவம்

விதைகளின் கர்ப்பபையில் 

எத்தனை அழகாக

ஒரு பட்டாம்பூச்சியைப் போல

முத்தம் இட்டுச் செல்கிறது

அப்போது குளிர்ந்த விதைகளின் மென்மைக்கு ஏங்கி

பட்டாம்பூச்சிகள் மரிக்கின்றன

அதுவும் இல்லையென்றால் 

ஒரு வசந்தத்திற்கு

என்னதான் மதிப்பு



ஆறாம் பருவத்தின் வேனல் சூட்டில்

டிசம்பர் பூவில் அமர்ந்திருந்த  பட்டாம்பூச்சியின்‌ றெக்கைகள் 

ஏரிவதைப்போல படபடக்கின்றன.


ஏழாம் பருவத்தில்

நாம் இல்லாத பொழுதில்

காற்றில் அலைந்த பட்டாம்பூச்சி 

இறுதியாக பறந்து செல்கையில்

தன்னோடு சேர்த்து காட்டின் வசந்தத்தையும்

எடுத்துச் சென்றது.


2

கடிகார ஆமை


என் வீட்டில்

ஒரு சாவி இயக்கியும்

நான்கு கால்களுமுடைய   

வார்கள் அறுந்த கடிகாரம் ஒன்றும் 

மேஜை மேலே வெறுமனே கிடக்கும்.

எப்போதும் வானொலியின் அருகில்தான் 

அதன் இருப்பிடம்.


அப்பா அதையே பார்த்தபடி இருப்பார் 

பின் திடீரென அதை கையிலெடுத்து

சாவி இயக்கியால் பலமுறை திருகுவார்

அது சிறியதொரு ஆமை 

குஞ்சினைப்போல

அவருடைய கைகளிலிருந்து ஓடத்தொடங்கும்.


ஒரு ஆமையைப்போல அதன் தலை

எப்போது  வெளியே நீளுமென்றும்

சாவி இயக்கியை எப்போது  திருகவேண்டுமென்றும் 

அப்பா மட்டுமே அறிவார்


பின் மெதுமெதுவாக என் அப்பாவும் ஆமைக்குஞ்சினைப் போலவே நடக்கத் தொடங்கினார்

இப்போது அப்பாவும் அந்தக் கடிகாரமும்

நாற்காலியில் அருகருகில்தான் இருக்கிறார்கள்.


அந்த இருப்பில் அப்பாவுக்குத் தெரியும்

சிலநேரங்களில் நேரமென்பது

ஆமையின் மேல்புறத்திலுள்ள கெட்டியான ஓடு என்றும் 

சிலநேரம் கண்ணாடியைப்போல 

ஒரு  விழுகையில் 

சில்லு சில்லென சிதறிப்போகுமென்றும்


மேலும்: மாற்றுச் சொற்கள் - 2

***

இசை தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

சந்திரா தங்கராஜ் தமிழ் விக்கி பக்கம்

பெரு. விஷ்ணுகுமார் தமிழ் விக்கி பக்கம்

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்

கவிஞர் மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் - 1 - க.நா.சு

உலகத்து கவிதைகளைப்‌ பற்றி ஒரு மணிநேரத்துக்குள்‌ சொற்பொழிவு ஆற்ற வேண்டும்‌ என்று எனக்குப்‌ பணித்திருக்‌கிறார்கள்‌. இது கொஞ்சம்‌ சிரமம்‌ என்று...

தேடு

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (6) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (6) கட்டுரை (10) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (197) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (5) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (6) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (6) கட்டுரை (10) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (197) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (5) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive