நான் சந்தோஷமாக இருந்த அன்று
என்னைச் சுமந்தபடி போயின
வண்ணத்துப் பூச்சிகள்.
கொண்டுபோய்;
ஒரு மரத்தின் பழுத்த இலையில் வைத்தன
இருக்க.
தூங்குக என்று
பூக்களைக் கொண்டுவந்து விசிறியாய் வீசின
காற்று மணக்க மணக்க
பூச்சிகள்.
உண்ணத் தேன் கொடுத்தன வாய்க்குள்.
நான் அங்கிருந்து பாடிய கவிதையை
சிறகிற்குள் பத்திரமாய்
கொண்டு சென்று பூமரத்தின் கன்னிக்குள்
ஊற்றன,
நாளைய மலர்கள் இனிக்க.
***
பொன் ஆற்றின் ஒரு கதை
குளித்து முடிந்ததா சூரியனே!
மீன்கள் கடித்தனவா!
தாமரைக்குள் நீ விழுந்து
குளிக்கும் அழகே தனி.
மஞ்சள் அரைத்துக் கரைத்த ஆறு இது.
ஆம்,
பொன் அருவி!
எருமைமாடுகளும் தங்கமுலாம் பூசிய
அழகுப் பதுமைகள்போல்
எந்த நேரத்திலும்
இந்த ஆற்றில்
குளிக்கும்.
ஒருநாள்
ஒரு தங்க எருமைமாட்டிற்கும்
அழகிய ஒரு வெண் கொக்கிற்கும்
காதல் மலர்ந்தது,
இந்த ஆற்றில்தான்!
பிறகென்ன;
கொக்கு
மீன் தேடுவதே இல்லை.
அந்த எருமைமாட்டில் மையல் கொண்டு
தினம் தினம் இந்த ஆற்றைச் சுற்றிப்
பறக்கத் தொடங்கியது.
தங்க எருமைமாடும் அப்பிடித்தான்
கொக்குப் பறக்காத நேரத்தில்
சோர்ந்திருக்கும்.
ஒருநாள்
தாமரைகள் அதிகம் பூத்திருந்த தினத்தில்
தவளைகள் கீதம் பாட
தங்க எருமைமாட்டைத் தூக்கிப் பறந்தது
அந்த வெண்கொக்கு.
எருமைமாடு
அட்டையைப்போல அதன் காலில்
ஒட்டியிருந்தது
காதலில்.
***







0 comments:
Post a Comment