(தென்காசி பொருநை இலக்கிய விழா - 2026ல் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)
![]() |
| மேக்ஸ் முல்லர் |
பாரதி, “கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?” என்று முழங்க சொன்ன கவிதை வரியின் மென்மையான அதே நேரம் உறுதியான வரிகள் தேவதேவன் தன் கட்டுரையில் சொன்னவை. இருவரும் தமிழின் மகாகவிகள்.
என்றும் அழியாத ஒன்றின் பகுதியாக தன்னை நிறுத்திக் கொள்ளும் விசை பெரும் எழுத்தாளுமைக்கு மட்டும் தான் உள்ளதா? அல்லது அந்த நித்தியமான ஒன்று தன்னால் மட்டும் படைக்க முடியும் என்ற அவனது கர்வமா?
இந்தியவியல் ஆய்வாளரான மேக்ஸ் முல்லர் ஒரு கட்டுரையில், ஆதி பழங்குடி தெய்வங்கள் என பூசகன், கையில் குழந்தையுடன் கூடிய அன்னை இருவருமே உலகளாவ பிரதான ஆதி தெய்வங்கள் என்கிறார். இந்த தெய்வம் என்ற கொள்கைக்குள் தன்னை செலுத்திக் கொண்ட பழங்குடிகள் வரலாற்றில் பரிணாமம் அடைந்து வந்தனர். அந்த கருதுகோளுக்குள் செல்லாத பழங்குடிகள் வரலாற்றில் காணாமல் அழிந்திருக்கலாம் என்கிறார். மேலும் பூசகன், அன்னை சித்திரத்தை/படிமத்தை உருவாக்கியவன் கவிஞன் என்றே குறிப்பிடுகிறார். நம் மரபில் வேத ரிஷிகள் அனைவரும் கவிஞர்கள் என்றே குறிப்பிடும் வழக்கம் உள்ளது. கவி என்பவன் அழியா ஒன்றை தன் அகத்தே தன்னிச்சையாக (Intuitive) அறிந்து சொல்லாக்கியவன்.
இன்று தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஊழி பெருநடனம் புரியும் ஆடவல்லான் (நடராஜர்) ஆதி வடிவம் பூசகன். உலகத்தை காத்து ரட்சிக்கும் சர்வசம்ரக்ஷகியான அன்னையின் படிமமே கோவிலுள் குடிக்கொள்ளும் உலகம்மை.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கம்பீரமாக திகழும் ராஜ கோபுரம் இன்றிலிருந்து முப்பத்தைந்து ஆண்டுகள் முன் கட்டப்பட்டது. அதற்கு முன் முந்நூறு ஆண்டுகளாக தீக்கிரையாக்கப்பட்டு மொட்டை கோபுரமாக திகழ்ந்தது. தமிழகத்தில் வேறு எந்த கோவில் கோபுரத்திற்கும் ஏற்படாத அநீதி அது. பாளையக்காரர்களின் வரிவசூல் விவரம் இக்கோபுரத்தில் பாதுகாக்கப்பட்டதாகவும் அதனை அழிக்க ஒரு பாளையக்காரர் செய்த கொடுஞ்செயல் இது என
1960-ல் தென்காசிக்கு ஒரு மாநாட்டிற்கு வந்த காமராஜர் கோவில் கோபுரத்தை மீட்டெடுக்கும் எண்ணத்தை முதலில் முன்வைக்கிறார். 1981ல் சிவந்தி ஆதித்தனார் தலைமையில் குழு அமைத்து மறுபுணரமைப்பு செய்யும் பணி நிகழ்ந்தது. சிவந்தி ஆதித்தனார் இக்கோபுரத்தை மீட்கும் பொறுப்பேற்ற போது சொன்னது. தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்களிலேயே தலையாயவன் பராக்கிரம பாண்டியன் அவன் இந்த கோபுரத்தை கட்டத் தொடங்கும் போது,
‘மேலே விரிவு செய்தே புரப்பாரடி வீழ்ந்தவர் தம்
பாலேவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே’
எனப் புரப்பவர் பாதம் தொட்டு பணிவதாகப் பாடி வைத்தான். அவன் சொல்லுக்காக எழும்ப போவதே இந்த ராஜகோபுரம் எனச் சொல்லி 1990 களில் கோபுரம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகமும் நிகழ்ந்தது. பராக்கிரம பாண்டியனின் அந்த செய்யுள் கோபுர நுழைவு வாயிலில் இன்றும் காணப்படுகிறது. பல கட்ட இடிப்பாடுகளுக்கு பின் நிர்மூலமான ஒன்று திரும்ப சொற்களால் மீட்டுருவாக்கப்படுகிறது.
பொ.யு. 15 ஆம் நூற்றாண்டு பாண்டியன் காலம் தொடங்கி தென்காசியில் எப்போதும் முதன்மை தமிழ் கவிஞர்கள் உருவாகிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
மதுரையில் நாயக்கர் ஆட்சியும், தென்காசியில் பாண்டியர் ஆட்சியும் இல்லாத 18 ஆம் நூற்றாண்டு, திருநெல்வேலி, தென்காசி பகுதியை பாளையக்காரர்கள் ஆட்சி செய்த காலம் (ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தான் கோபுரம் தீ வைக்கப்பட்டது). நிலையான அரசியல் சூழல் இல்லாத காலம். இலக்கியங்களும் பெரிதாக உருவாகாத காலம். தமிழகத்தில் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டிற்கு பின் செவ்விலக்கியம் தோன்ற அடுத்த எழநூறாண்டுகள் ஆகியது.
17, 18 ஆம் நூற்றாண்டு தமிழக இலக்கியத்தை சிற்றிலக்கியம் காலம் என வகைப்படுத்தலாம். தொன்னூற்றாறு வகை சிற்றிலக்கியங்களின் முதன்மையான வகை குறவஞ்சி அதல் தலையாயது திருக்குற்றாலக் குறவஞ்சி. குற்றாலத்தில் இருக்கும் திருக்குற்றாலநாதனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்து திரிகூடராசப்ப கவிராயர் பாடியது.
“தேன் அருவித் திரை எழும்பி வான் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”
என்ற வரியை மனப்பாடம் செய்யாத பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் இன்றிருக்க முடியாது. அனைத்தும் சிதைந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிருந்து ஒரு கவி குற்றாலநாதரையும் அவர் வாழும் மலை வளத்தையும் துதிப்பாடிக் கொண்டிருந்தான்.
தமிழில் பெண் கவிஞர்கள் என சிறு பட்டியலே உள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் முதன்மையானவர்கள். காரைக்கால் அம்மையாரை பற்றி குறிப்பிடும் போது “பேயார்க்கும் அடியேன்” என சுந்தரர் பாடுகிறார். ஔவையாரை புகழாத கவிஞர்கள் இல்லை. அவர்கள் வரிசையில் வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள். செங்கோட்டை ஆவுடையக்காளை நவீன இலக்கியத்திற்கு அறிமுகம் செய்தவர் ஆய்வாளர் வேதசகாயகுமார். குமார், நாஞ்சில் நாடனிடம் ஆவுடையக்காள் பற்றி கேட்க நாஞ்சில் அவரை பற்றி தேடி தகவல் சேகரிக்கிறார். ‘ஆவுடையக்காள் ஆத்ம அனுபூதியில் லயித்தவர், உன்மத்தையாக இருந்தவர், பண்டிதர் - பாமரர் என்று எல்லோராலும் கொண்டாடப்பட்டவர்’ என நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார். "செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு" நூலின் சமர்ப்பணம் பகுதியில் ஸ்ரீ ஞானானந்த நிகேதனம் நித்தியானந்த கிரி சுவாமிகள், ஆவுடை அக்காள் தமிழ் நாட்டின் பெருமை மிக்க பெண் ஞானிகளில் ஒருவர் என்று குறிப்பிடுகிறார்.
ஆவுடை அக்காளின் வாழ்க்கை வரலாறு சுவாரஸ்யமானது. இவர் பதின்ம வயதை எய்தும் முன் விதவையாகிறார். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 19 ஆம் நூற்றாண்டு விதவை பிராமணப் பெண் என்றால் அதன் பின் எஞ்சிய வாழ்க்கையெல்லாம் வீட்டில் சிறைவாசம் தான்.
ஆவுடையக்காள் தன் வீட்டை துறக்கிறார். திருவிசைநல்லூர் ஶ்ரீ வெங்கடேச அய்யாவிடம் மந்திர தீக்ஷை பெற்று, அவரிடமே வேதாந்த ஞானமும் உபதேசமும் பெறுகிறார். அந்தணப் பெண் விதவையான பின் கல்வி கற்றதால் அவரை ஊர் மக்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்படுகிறார்.
ஆவுடை அக்காள் அனைத்தையும் துறந்து துறவற வாழ்க்கை வாழ்கிறார். அக்காலகட்டத்தில் வேதாந்த மெய்யியல் சார்ந்த கவிதைகள் பல எழுதுகிறார். அவை தொகுக்கப்பட்டு ‘செங்கோட்டை ஶ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு’ என வெளிவந்துள்ளது. பாரதியார் ஆவுடை அக்காளின் வாழ்க்கை வரலாற்றை அறிய முயற்சி செய்துள்ளார். பாரதியின் கவிதைகளில் அக்காளின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது.
ஆவுடையக்காளின் ஒரு கவிதை,
கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி
இத்தனை வேஷத்திலும் தன்னை கவிஞன் என்றே நிறுவிக்கொண்டவர். யார் அவரிடம் கேட்டாலும் தன்னை கவிஞன் என்றே அடையாளம் சொல்பவர். கவிஞனாக வாழும் சித்தர்.
விக்கிரமாத்தியன் கவிதையில் மரபிலக்கியம், சைவ சமயம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் காணப்படுகிறது. அதே வேளையில் கவிதையில் படிமங்கள் இல்லாத நேரடி தன்மையையும், அன்றாடத்தன்மையையும் கொண்டுவந்தவர்.
அவரது ஒரு கவிதை,
அபிராமி
பிச்சி தான்
மிக இஷ்டம்
முல்லைக்கு
மறுப்பொன்றுமில்லை
மனோரஞ்சிதம் தான்
வெகுவாக விருப்பம்
ரோஜா சூடிக்கொள்வதும்
சம்மதமே
அபிராமி மனம்போல்
அவள் வாழ்வு
மலை வளம் பாடும் ராசப்ப கவிராயர், பிரம்ம ஞானம் பாடும் ஆவுடையக்காள், அபிராமி துதியை நவீன மொழியில் பாடும் விக்ரமாதித்யன் மூவரும் வெவ்வேறு வகையில் அலைகழிப்பு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆனால், அதற்கு மாறாக அவர்களது கவிதையில் அலையாத, மாறாத நிரந்தர ஒன்றை நோக்கி பாட நினைத்தவர்கள்.
அந்த நிலையான ஒன்றை பாடும் தருணத்தில் அவர்கள் தங்களை நித்தியமானவர்களாக உணர்ந்திருக்கக் கூடும் அல்லது அந்த கணத்தில் அவன் பெயர் இறைவன்.
***
திரிகூடராசப்ப கவிராயர் தமிழ் விக்கி பக்கம்
ஆவுடை அக்காள் தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
தென்காசி கோவில் தமிழ் விக்கி பக்கம்
தென்காசி கோவில் கல்வெட்டுகள் தமிழ் விக்கி பக்கம்
மேக்ஸ் முல்லர் தமிழ் விக்கி பக்கம்
***








0 comments:
Post a Comment