காலண்டர்
ஆள் பார்த்து
அனுப்பி வைத்தானே,
காலண்டர் எனக்கெதற்கு?
ஆனாலும் நன்றி-
அனுப்பி வைத்தவருக்கு,
பணம்,
உறவு,
உலகளக்கும் வாய்மரக்கால் -
ஒரு தொடர்பும் இல்லையே.
ஆனாலும்
அங்க சங்கமற்ற ஆளுக்கு,
துணையற்ற வழிப்போக்கனுக்கு,
தனக்குள்ளே தூர் எடுக்கும்
சஞ்சாயக்காரனுக்கு
வழிபாடாய் வந்த
காலண்டருக்கு நன்றி.
அண்டாத ஆழத்தில்
கால் அண்ட
காலண்டர் கைக்கோலா?
தனக்கென்று தலைவைத்துப் படுக்க
அகமில்லார்க்கு
காலண்டர் குடைநிழலா?
உள்ளுக்கும் வெளிக்கும்
கணநேரக் கடலில்
கடியார மின்றி
நகரும் கப்பலுக்கு
காலண்டர் துருவமீனா?
ஜன்னல் வழி ரவி விரல்
கடிகார முள்ளும்,
கருங்காக்கை நிழலமர்
பகல் முள்ளும்,
மஞ்சள் வலைவீசும்
மாலை முள்ளும்
பார்த்து,
மேடேறி
பள்ளத் திறங்கி
கோடி காணப்போகும் கண்ணுக்கு
காலண்டர் எதற்கு?
கடிகாரம் சிலந்தி
காலண்டர் வலை.
கருத்துகள் காற்றாடி.
காற்றில் பறக்கவிட
நூல் வேண்டும்.
தூக்கிவிட ஆள் வேண்டும்.
காலம் வெளி
காரண காரியத் தொடர்பு-
அவ்வளவும்
நான் விட்ட பட்டங்கள்
காலண்டர் வால்தானே.
ஆனாலும்
காலண்டர் அனுப்பிய
நினைப்புக்கு வணக்கம்
குழந்தைகளுக் காகும்.
- ந. பிச்சமூர்த்தி
('பிச்சமூர்த்தி கவிதைகள்' தொகுப்பு, பக்கம் 155, 156)
புதுக்கவிதை முதல்வர் ந. பிச்சமூர்த்தியின் ஆளுமையை கவிமனத்தைக் காட்டும் ஓர் அருமையான கவிதை இது. இதுபோலக் கவிதைகள்தாம் உள்ளபடிக்கே நவீன கவிதைகள். ந. பிச்சமூர்த்தி தான் புதுக்கவிதையைத் தோற்றுவித்த பெரியவர். இன்றைய தினம் எவரெவரோ அந்த உரிமை கொண்டாடுகிறார்கள். வரலாற்றைத் திரிபுசெய்வது கண்டனத்துக்குரியது.
(எல்லையற்ற, முடிவுறாத காலத்தைக் 'காலாதீதம்' என்பார் ந. பிச்சமூர்த்தி. அவரை முழுமையாகப் படிக்காமல், இந்தச் சொல்லாட்சி பிரமிளினுடையது என்று 'கவிதைரசனை' யில் தவறாகக் குறிப்பிட்டிருக்கும். இன்றுவரை இந்தத் தப்பை இங்கே யாரும் சுட்டிக்காட்டவில்லை என்பது வருத்தம் தருகிறது. இந்த இடத்தில் அது நேர் செய்யப்படுகிறது. பிரமிள், ஒரு கவிதையிலிதே சொல்லைப் பிரயோகித்திருப்பார். இது தான் குழப்பத்துக்குக் காரணம்,
நாம்தான் வருஷம், மாசம், தினம், மணி, நிமிஷம் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறோம். சௌகரியத்துக்காக. நமக்குக் கடிகாரமும் காலண்டரும் இன்றியமையாதவை. ந. பிச்சமூர்த்திக்கு வேண்டியதில்லை. உலகியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நியமப்படி வாழ்ந்துகொடிருப்பவர்களுக்கு, கடிகாரம், நாள்காட்டி, நாள்குறிப்பேடு எல்லாமே வேண்டியவைதாம்.
வேலைபார்க்கிறவர்கள், விடுமுறைநாளை எதிர்ப்பார்த்திருப்பவர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் இப்படி. இப்படி இருப்பவர்கள் காலண்டர் இல்லாமல் இருக்க முடியாது. கால ஓர்மைகொண்டு இயங்க வேண்டியவர்களுக்குக் கடிகாரம் இல்லாமல் தீருமா. என்ன தேதி, என்ன கிழமை, வங்கி விடுமுறைநாளா, அஞ்சலக விடுமுறைநாளா, அரசு விடுமுறைநாளா என்றெல்லாம் யார் யார் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இலௌகிகமாக வாழ்பவர்கள்தாம். ந. பிச்சமூர்த்தி இதைக் கடந்துவிட்டவர்.
'காலண்டர்' கவிதை, பொருள் செறிவோடு திகழ்கிறது. முன்வைக்கப்படும் விஷயம் முக்கியமானது. மொழியப்படும் முறை கவனம் கொள்ள வேண்டியது. வெளியரங்கமாய்ச் சொல்லியிருப்பதால், விஷயம், ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. கவிஞரின் 'தன்மை'யைக் (Self) காட்டும் கவிதை.
இரண்டிரண்டு சீர்களிலேயே கவிதை கட்டப்பட்டிருக்கிறது. உரிய இடங்களில் ஒரே சீர்.
முதல் பத்தியில் ஆறாவது, ஏழாவது அடிகள், "பணம்", "உறவு" தனித்தனிச் சீர்களாக - பிரித்துப் பேசும்விதமாக. பத்தாவது வரி, "ஆனாலும்"; ஒரு தனிச்சொல்.
இரண்டாவது பத்தியில், ஐந்தாவது அடி, "அகமில்லார்க்கு", இரு சொற்கள் கூடிய ஒரு சொல்லாக மற்றும் பதினெட்டு, பத்தொன்பதாவது வரிகள், "பார்த்து" "மேடேறி" - ஒரொரு சொல்லில்.
நான்காவது பத்தியில், ஐந்து - ஆறாவது வரிகள், "காலம்", "வெளி" பிரித்துக்காட்டும் முறையில் - ஒரொரு சீராக. பதினோராவது வரி - "ஆனாலும்" ஒரு தனிச்சொல்.
இவ்வளவு விரிவாகக் கவிதைக் கட்டமைப்பை விவரிக்கக் காரணம் - ந. பிச்சமூர்த்தி, நாற்பதாண்டுகளுக்கு முன்னமேயே கவிதையியலில் கொண்டிருந்த ஞானத்தைக் காட்டத்தான். இப்படிக் கட்டியிருப்பதுதான் இந்தக் கவிதைக்கு ஏற்றதாக இருக்கிறது. வேறுவிதமாக எழுதியிருந்தால் இந்த வீச்சு, இந்த ஓட்டம் வாய்த்திருக்காது. எழுதிப் பழகிய கை; கவிதைப்புலமை கூடியதில் பெற்ற பேறு.
கடைசி நான்கு அடிகளில், சரியான முடிப்பு.
முதல் பத்தி, முழுக்கவும் வாக்குமூலமாக/அறிக்கையிடலாக. இரண்டாவது பத்தி, கேள்விகளாக. மூன்றாவது பத்தி, உருவகம் அல்லது படிமமாக. நான்காவது பத்தி, வாக்குமூலம் தான்; ஆனால் விளக்க உரையால் ஆனது.
தொடக்கம், பேச்சுத் தோரணையில்; நடு, உருவக/படிமங்களில்.
ஆரம்பத்தில், மூன்றாவது வரி: "காலண்டர் எனக்கெதற்கு?" இரண்டாவது பத்தியின் இறுதி வரி: "காலண்டர் எதற்கு?" இயல்பாகவே வந்து அழுத்தம் தருவதாக அமைகிறது..
"ஆனாலும் நன்றி" - "அனுப்பி வைத்தவருக்கு"
"காலண்டருக்கு நன்றி"
"ஆனாலும் / காலண்டர் அனுப்பிய / நினைப்புக்கு வணக்கம். குழந்தைகளுக் காகும்."
ந. பிச்சமூர்த்தியின் மனநுணுக்கம் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று.
முதல் இது, உண்மையிலேயே நன்றிநவிலல்.
இரண்டாவதாக உள்ளது, ஒரு சிறு பரிகாசம்.
மூன்றாவதாக வருவது, மறுபடியும் அந்த அன்பைப் போற்றுவதும் திரும்பவும் ஒரு சிறு எள்ளலும்.
காலண்டர், கவிஞர் இல்லத்தில் எப்படிப் பயன்படும். குழந்தைகள் கிழித்துக் கப்பல் செய்ய?
இந்தக் கவிதைமீது ஒரு மெலிதான விமரசன்ம்:
மூன்றாவது பத்தியிலேயே கவிதை முற்றுப்பெற்று விடுகிறது.
நான்காவது பத்தியின் இறுதி நான்கடிகள் நீங்கலாக, மற்றவை தேவையில்லை. அதிகப்படியான வரிகளைச் சுமந்து நிற்பதாகத் தோன்றுகிறது; விரிவாக்கமாகவும் படுகிறது.
இந்த கவிதையில் இரு வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஒன்று "அங்கசங்கமற்ற", தஞ்சை. மாவடா வழக்காகவோ பார்ப்பன வழக்காகவோ இருக்கலாம். "அக்குதொக்கு" என்ற சொல், நெல்லைப் பழகுதமிழில் 'தனியாள்' என்ற பொருளில் புழங்கப்படுகிறது. அதுமாதிரி இருக்குமாய் இருக்கும் இதுவும். இரண்டு "சஞ்சாயக்காரன்" வடசொல் அகரமுதலியைப் பார்த்துத்தான் நேர்ப்பொருள் காணவேண்டும். 'விசாரம் உள்ளவன்' எனும் அர்த்தமாக இருக்கலாம். இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் புரியாவிட்டாலும், கவிதையோட்டத்தில் அது பெரிய விஷயமாக இல்லைதான். யூகித்துக்கொள்ள முடிகிறது.
***
ந. பிச்சமூர்த்தி தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment