1
எழுதிடாத எண்ணற்ற கவிதைகள்
கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன
இவ்வுலகில்.
அதில் ஒன்றிரண்டைக் கண்டு
ஓரிரு சொற்களில் எழுதிவிட்டு
இவ்வுலகின் துயர்களுக்கெல்லாம்
புறமுதுகு காட்டி
உறங்கச் செல்வதில்
என்ன பெருமை இருக்கிறது?
2
உன்னைச் சேர்ந்து
பின் பிரிந்துச் செல்லும் இப்பொழுதில்
நான் மட்டும் தனியே
நடந்துச் செல்கிறேன்.
என் கண்களால் காண்கிறேன்
வேப்ப மரத்தின்
அடர் இலைகள் நடுவே
சிறுசிறு வெண்ணிறப் பூக்கள்.
வேர்வரை கசக்கும் இவ்வாழ்வில்தான்
எத்தனை எத்தனை
இனித்திடும் முத்தங்கள்!
உடலெல்லாம் உயிரெல்லாம் இனித்திடும்
உன் சின்னஞ்சிறு முத்தங்கள்!
3
நிலத்தின் மேல்
நான் உன் நிழல்.
நிலைத்த நீரின்மேல்
நான் உன் பிம்பம்.
விரைந்து நெருங்கி
என்னை அள்ளி அணைக்கும்
அந்த அணுப்பொழுதில்
நீயும் நானும் வேறுவேறு இல்லை.
நீ அணைத்து நீங்கிய
அவ்வேளையில்
அங்கு நானும் இல்லை.
4
இருள்வானில் மிதக்கும்
தனித்த பிறை நிலா.
அலைகளற்ற பெருவெளியில்
நிலைத்திருக்கும் ஒரு தோணி.
நான் நிலைக்கும் தோறும்
என்னோடு நிலைத்து நின்று
நான் அசையும் தோறும்
என்னோடு சேர்ந்து அசையும்
நீர்வழிப் படூஉம் நிலா.
***
வேணு வேட்ராயன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment