மதிப்புரை சொல்ல இங்கு எடுத்துக்கொண்ட, ‘கோடைகாலக் குறிப்புகள்’ என்கிற சுகுமாரன் கவிதைகளை எடுத்துக்கொண்டால் இவர் எழுதியுள்ள இந்த இருபது கவிதைகளும் நாம் சமீப காலத்திலே நல்ல புதுக் கவிதையாளர்கள் என்று சொல்லக்கூடிய இருபது பேர்வழிகளில் எவருடைய கவிதைக்கும் மட்டமானதில்லை என்று சொல்ல வேண்டும். இது ஒரு விதத்தில் Negative அபிப்பிராய விமர்சனம். பாஸிடிவ்வாகச் சொல்லியும் பார்க்கலாம், அதற்கு இடம் தருகிறார் கவிஞர் சுகுமாரன்.
ஒரு தனிக் குரலாக இவர் குரல், இந்த இருபது கவிதைகளில் ஒலிப்பதைக் காண்கிறோம். தனிமையில் - ஒரு முழு மனிதனாக அவர் குரல் எழுப்புகிறார். அது நம் உள்ளத்தில் எதிரொலி எழுப்புகிறது. முகவுரையில் பிராம்மராஜன் இவரை சோக மலைகளினால் நசுக்குறப் பெறும் மனிதராகக் காண்கிறார். அதற்கு அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சோகமும், சுகமும் ஒரு மனித முழுமையில் சிறு அம்சங்கள்தான். சோகம் தொனிக்கிற அளவில் சுகமும், இந்தக் கவிதைகளில் தொனிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
“எங்கும் மின் விளக்குகளின் ஊளை
அகண்ட ஸிம்பனியொன்றின் சாயலை நெருடவிட்டு
என்ஜின்கள் பிளிரும் இடையிடையே
ஒரு பேய்க்கனவின்
ஒற்றைக் கண்போல் தொங்கும் கடிகாரம்
கூரையிலிருந்து உதிர்ந்து
ஒளிவிடம் தேடி நகரும்
யந்திர உறுமல்களுக்குப் பழகிய நொண்டிக் குருவி
வயிற்றிலும் கண்களிலும் பசியுடன்
மௌனமாய் நச்சரிக்கும்
அகாலமாய் மல்லிகை சூடிய பெண்
கனவுகள் பொதிந்த சுமைகளுடன்
திசைகளை அடையக் கிடக்கும் பிரயாணிகள்”
என்று ஒரு காட்சியை உருவகப்படுத்துகிற லாகவம் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சோகக் கதைதான்.
“முகமில்லாத நண்பன்
சக்கரங்களடியில் கந்தல் சதையானான்
கூக்குரல்
புலம்பல்கள் - பிறகு
நிசப்தம்
...
சாட்சிகளை நிறுத்திக் கடந்து போனது மரணம்
புத்தகங்களும் நம்பிக்கைகளும் என்னைக் கைவிட்டன
அப்போது”
“யதார்த்தம் / கழைக் கூத்தாடியின் வளையத்தில் சிக்கிய / உடலாய் நெளிகிறது!” என்றும், “சொல்லித் தந்ததோ / கற்றுக்கொண்டதோ போல இல்லை / வாழ்க்கை -அது / குழந்தைக் கவிதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த | உயிர்” என்றும் “காட்சி முடிந்த அரங்கில் / நாற்காலிமீது விடுபட்டுப்போன புஸ்தகம் போல” என்றும் “என் கை நீரைக் கவிழ்த்தேன் | போகும் நதியில் எது என் நீர்?” என்றும் சொல்ல முடிகிற கவிஞனின் எதிர்காலக் கவிகளை ஒரு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
நிஜமான புதுக்கவிதையில் சிரத்தை உள்ள எல்லோரும் படித்து அனுபவிக்க வேண்டிய நூல் சுகுமாரனின் ‘கோடைகாலக் குறிப்புகள்’.
கோடைகாலக் குறிப்புகள் – சுகுமாரன் கவிதைகள் தர்ஸனா பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர் 641045, 48 பக்கங்கள் ரூ 6.00 மார்ச் 1985.
‘ஞானரதம்’, பிப்ரவரி 1986
***







0 comments:
Post a Comment