செண்பக மரமே!
- பத்மாகோளே
செண்பக மரமே!
செண்பக மரமே!
இன்று ஏன் என் கனவுகளில் நிறைந்து வந்தாய்?
அப்போதே நமக்குள் முடிவு செய்து கொண்டோம் இல்லையா!
நம் மனதில் துக்கம் ஏதும் எஞ்சவில்லை என்று !
உன் பூக்களின் வெண்மையும், இலைகளின் பசுமையும்,
என் மனதின் நிறங்களாக
ஊறிக் கொண்டிருக்கின்றன
தலைமுடியில் ராக்குடியும்,
கால்களில் ஃபுக்டி ஆட்டமுமாய் என்றும், உன் மனதில் வசிக்கும் அதே அறியாச் சிறுமி நான்!
வேண்டாம் அன்பனே!
கண்களில் நீர் தளும்ப வைக்காதே!
தெரிந்த ராகத்திலும், தாளத்திலும் ஹாதகா திருவிழாவின் பாடல்களைப் பாடாதே!
உன்னோடு விளையாடும் போது ஒரு காலை குளத்திலும், மற்றொரு காலை வயலிலும் வைத்து விளையாடினோம் அல்லவா?
ஏதோ ஒரு குதிரை மீதமர்ந்தது போல.
உன் கிளைகளின் மேல் அமர்ந்து கொண்டு!
நாம் வானமுழுதும் சுற்றினோம் இல்லையா?
இலையில்,மனதில் ஏதோ திரண்டு பொங்கி வருகிறது இல்லையா?
ஏதோ ஒன்று நழுவுகிறது.
எங்கேயோ வலிக்கிறது.
அது உனக்கும் புரிகிறது...
புரிகிறது இல்லையா?
புன்னகையயே சூடிக்கொண்டு எப்போதும் வெளியே ஏதும் சொல்லாமல், மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்தோம்.
பூக்களால் கைகளை நிரப்பியபடியே எப்போதும்.
இல்லையா?!
***
பாணி பூரி ஸார்க்கே ஸ்வப்ன
(பாணி பூரி போலத்தான் கனவும்)
- குரு டாகுர்
பாணி பூரி போலத்தான் கனவுகள் வருகின்றன.
சில நேரங்களில்,
வாய்க்கு எட்டும் முன்னாலேயே உடைந்து போவதுண்டு.
எதிர்பாராமல் கையிலே உடைவதுண்டு.
சலவை செய்த
சட்டையில் சிந்திய கரை போல் வாழ்நாள் முழுவதும் அவை வலிப்பதுமுண்டு.
இன்னும் வேறு சில கனவுகள்,
காரத்தால் புரையேறி,
தொண்டையில், உயிர் உருண்டு வந்து,
கண்கள் கலங்கி நீர் வழிய,
பிரபஞ்சத்தையே காட்டிச் செல்கின்றன.
கண்ட அந்த நொடிப்பொழுதில்!
***
அடிக்குறிப்புகள்:
1. ஃபுக்டி என்பது கோவா மற்றும் மகாராஷ்டிராவின் ஒரு பாரம்பரியமான, நாட்டுப்புற நடனமாகும். இது முதன்மையாக பெண்களால் விநாயகர் சதுர்த்தி போன்ற மத விழாக்கள் அல்லது சமூகக் கூட்டங்களின் போது ஆடப்படுகிறது.
2. ஹாதகா பண்டிகை, ஒரு நன்றி சொல்லும் திருவிழாவாகும்.
பெய்த மழைக்கு நன்றி தெரிவித்தும், வரயிருக்கும் அறுவடை காலத்தை வரவேற்கும் முகமாக கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. மகளிரும் சிறுமியரும் கூடி, வளத்தின் குறியீடாக, யானை கோலமிட்டு படங்கள் வைத்து,
இதற்கான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஆடுகின்றனர்.
***
குரு தாக்கூர் விக்கிபீடியா பக்கம்
***








0 comments:
Post a Comment