இருள் வெளியில் எரியும் சொற்கள் 1 - கடலூர் சீனு

2023 ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரையிலான முதல் தொகுப்பு உள்ளிட்டும் அதற்குப் பிறகானதுமான அவரது கவிதைகளை மொத்தமாக எடுத்து மீண்டும் வாசித்தேன்.  பின் ஜெயமோகன் தளத்தில் அவரது தேர்வின்படியிலான சதீஷ்குமாரின் கவிதைகள் சில தொடர்ந்து வெளியான பிறகு அவற்றை வாசித்த வகையில் என் மனப்பதிவு  மாறியது.

மொத்தமாக வாசிக்கையில் நவீனத் தமிழ்க் கவிதை உலகுக்கு குறிப்பிடத்தக்க வரவு என்றே சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளை மதிப்பிடத் தோன்றுகிறது. வந்து குவியும் கவிதைப்பெருக்கில்  அதில் குறிப்பிட்ட ஒரு கவியுலகம் எந்த அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறுகிறது என்றால் முதன்மையானது அதில் பயின்றுவரும் கவிதை மொழி. 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழிகள் போலவே இலக்கியத்தினுடையதும் ஒரு மொழி. எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது இலக்கியம் எனில், இலக்கியத்தின் தனி மொழி வழியாகவே இலக்கியம் இயங்கும். இந்த இலக்கியத்தின் தனி மொழியில் கவிதைக்கான தனி மொழி மேலும் அதிக தனித்துவம் கொண்டது. சொற்கள் படிமங்கள் கொண்டு ஒரு தளத்தில் அது அர்த்த, கற்பனைச் சாத்தியங்களைக் கிளர்த்தும் அதே சமயம் மற்றொரு தளத்தில் சொல் கொண்ட அர்த்தங்களை ரத்து செய்து விட்டு, அர்த்தங்களால் திரை மறைக்கப்படாத உள் உணர்ச்சிகளின் தீவிரத்தை நேரடியாக வாசகனுக்கு தொடற்புறுத்த முயலுகிறது. 

கனல் மணக்கும் பூக்கள், ஆடி வரும் தேனே என்றெல்லாம் எழுதுகிறார் பாரதி. இவற்றுக்கு என்ன அர்த்தம். அர்த்தங்களால் மறைக்கப்படாத தீவிர உணர்வுகளை தொடற்புறுத்தும் மொழி இது.  இந்த கவிதைக்கான தனி மொழி சதீஷ்குமார் கவிதைகளில் எவ்விதம் தொழிற்படுகிறது என்பதை அறிய ஒரு உதாரண கவிதை கீழே.

இசையற்ற வெயில்

வெயிலுக்கு ஏதேனும்

இசைமை இருக்கிறதா

ஆயிரம் மௌனங்களின் மனம்போல

விழுகிறது நிலத்தில்

ஈரமற்ற பொழுதுகளில்

வாடின உயிரின் தாவரங்கள்.

ஆயிரம் மௌனங்களின் மனம் போல நிலத்தில் விழும் இசையற்ற வெயில் எனும் வரிகள் கிளர்த்தும் உணர்வுகள் மிக அந்தரங்கமானது. உயிர் எனும் தாவரத்துக்குத் தேவையான அந்த ஈரம் எதுவோ அந்த ஈரத்தில் வந்து விழுந்து அதை உலரச் செய்யும் வெயில் அது.

இரண்டாவது கலைக்கூறு கவிதைகள் வழியாக மட்டுமே உருவாகி வரும், இத்தகு கவிதைகள் வழியாக மட்டுமே காண முடிந்த தனித்துவமான காட்சிகள்.  

புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி.

என்று எழுதுகிறார் பாரதி. ஜோதி ஒளி கொண்டு புன்னகைக்கும் புல், வியக்கும் பூ இவற்றை இந்த காட்சியை இக்கவிதை வழியாக மட்டுமே காண முடியும். புறக் கண்களால் அன்றி கவிதை மொழி நல்கும் அகக் கண்களால் காண முடிந்த காட்சி.

இக்கலைக்கூறு சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளில் இயங்கும் வகைமைக்கு ஒரு உதாரண கவிதை கீழே

தனதலகில் சூடி

காற்று வரும் என இருந்துவிட்டேன்

ஜன்னல்களை

நான் மூடுவதே இல்லை.


சாளர விளிம்பில்

அமரும்

எந்தப் பறவையும்

ஒருகொத்து காற்றை

தனதலகில் சூடி வரவில்லை


இதற்கெல்லாம் யார் என்ன செய்ய முடியும்

செய்தாலும்


முழுதாக சூட முடியாத

கோடி அலகுகள்

கோடி காற்றுகள்

இருந்தும்


ஒரு வீம்பில்

காற்று வருமென வீற்றிருந்தேன்

*

சிற்றலகில் கொத்து காற்றைச் சூடி வரும் சிறு பறவை. அந்தப் பறவையை இந்தக் கவிதையில் அன்றி வேறு எங்குமே காண இயலாது.  ஒரு உயிர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை எதுவாகிலும் ஆகட்டும், அது உயிர் எனும் நிலை கொள்ளும் அடுத்த நொடியே பிறிதொரு உயிரின் பிரேமைக்கு அது தகுதி கொண்டதாகி விடுகிறது. அந்தப் பிரேமை உயிர்களின் அடிப்படைத் தேவையும் கூட. அப்படி ஒரு தகுதியும் தேவையும் கொண்ட உயிர் கொள்ளும் காத்திருப்பு சார்ந்த அழகிய கவிதை இது. உலகம் அன்புமயம் என்பதை இத்தகு முழுமையோடு உணர சாமான்யனுக்கு ஆகுமா? அந்த 'முழுமை' அன்பிலிருந்து 'கொஞ்சத்தை' எடுத்து வந்து தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு ஊட்டுவதை போல ஊட்ட ஒரு சக உயிர் அந்த சாமானியனுக்கு தேவைப்படுகிறது. சாமானியனின் அந்த சக உயிர்க் கான காத்திருப்பு மீதான கவிதை. 

மேற்சொன்ன இரண்டையும் கவிதையின் தொழில்நுட்பம் என்றல்லாது அதன் கலைக்கூறு என்றாக்கும் அம்சம் எது என்று பார்த்தால், அசல் கவிதை என்பது வாசகன் கைக்கு கிடைக்கும் ஒரு மொழிக் கட்டுமானம், (போலிக் கவிதைகள் இங்கேயே தோன்றி இங்கேயே முடிந்து விடும்) அந்த மொழிக்கட்டுமானம் என்பது கவித் தன்னிலை ஒன்றின் உணர்வுக் கட்டுமானம் ஒன்றின் வெளிப்பாடு. அந்த உணர்வுக் கட்டுமானம் என்பது அந்த கவிக் தன்னிலை கண்ட வாழ்வின் சிக்கல்கள் அளித்த உண்மையும் தீவிரமும் கொண்ட அலைக்கழிப்பின் வெளிப்பாடு என்பது விளங்கும்.

எனில் சதீஷ்குமார் சீனிவாசன் எழுதிய கவிதைகளின் முதல் தொகுப்பான உன்னைக் கைவிடவே விரும்புகிறேன் தொகுப்பின் வழியே எழும் கவித்தன்னிலை என்னவாக இருக்கிறது என்பதை, திருப்பூர் பற்றி ஒரு கவிதை, மற்றும் 2020 இன் அறிவுரை எனும் தலைப்புகளைக் கொண்ட இரண்டு கவிதைகளைக் கொண்டு வரையறை செய்யலாம்.

முதல் கவிதை தலைப்பிலேயே 'இடம்' இடம்பெற்று விடுகிறது. நகரம் ஒன்றின் சாமானிய நடுத்தட்டு வர்க்கம் ஒன்றின் ஒரு நாள் மீதான கவிதை அது. பிழைத்துக் கிடக்க ஒரு வேலை. அந்த வேலையை செய்து முடிக்க ஒரு நாள் பற்றாது. அந்த வேலையை செய்து பிழைத்துக் கிடக்கும் சாமானியர்கள் அதன் அலுப்பும் சற்றே தோன்றி சட்டென மறையும் ஆசுவாசங்களும் என இப்படியே ஒழுகி சென்று மறையும் ஒரு வாழ்க்கை. வாழ்வது என்பதற்கான அர்த்தமே வந்து சேராத பிழைத்துக் கிடக்க எத்தனிக்கும் நிலை மட்டுமே கொண்ட ஒரு வாழ்க்கை.

அடுத்த கவிதை தலைப்பிலேயே 'காலம்' வந்து விடுகிறது. 

2020 இன் அறிவுரை

நேசமென்பது

பாசமென்பது

அன்பென்பது

ரசமென்பது 

தயிரென்பது

மயிரென்பது

பாவனையின் சுழல் சுழலோ சுழலெனச் சுழல்கிறது மிதவையாக இருத்தல் சால நலம் 

நழுவியோடி நழுவியோடி

எங்கே போவது


இருளில் பார்க்க என்ன இருக்கிறது

பாவனையின் தீக்குச்சைப் பற்றவை


 உன் ஆடைகளைக் களை

தேகம் தழுவு

ஒழுக்கத்தை அப்படி ஓரமாய் உட்கார வை


சந்தோசமாயிரு


பிணத்தின் கண்களைத் நோண்டி

ஐஸ் கட்டிகளுக்குப் பதில் அவற்றை

உன் மதுக்கோப்பையில் மிதக்கவிடு 

இன்னொரு லார்ஜ் அருந்து


அரசியலில் குதி

செல்வம் சேர்

ஏய்ப்பதே தர்மம்

எது ஆனந்தமோ அதுவே தர்ம மயிர்


ரசிகர் மன்றம் ஆரம்பி நடிகனை நக்கிப்பிழை

பேனர் அடி

கோஷமிடு


உன் தாயைத் துரோகி

நண்பனை வஞ்சி

மனைவியை அவள் காதலர்களுடன்

படுக்க அனுமதி 


குழந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்டுக்கொல் 


உன் மகளுக்கு டில்டோ வாங்கிக் கொடு

மகனுக்கு வேசையிடம் போகப் பணம் தந்துதவு தொந்தரவு தரும்

யாவற்றையும் துற

மொத்தமாய் மற

காதலென எந்தக் கிறுக்குத் தனங்களையும் செய்யாதே என்னைப்போல போதனை சுந்நியும் செய்யாதே 

இரு 

எப்படி வேண்டுமானாலும் இரு


சந்தோசமாய் இரு


எது சந்தோசம் எனக் கேட்காதே அப்போதே பைத்தியத்தின் நிழல் உன்னை பீடிக்கும்.

*

சமீபத்தில் நான் நெருங்கி அறிந்த சம்பவம் ஒன்று. நான்காவது படிக்கும் சிறுமி ஒருவள் தனது நெருங்கிய சொந்தம் ஒன்றால் தொடர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதை, அவளுடன்  பாதிக்கப்பட்ட அவளை போலவே நடித்து தொடர்ந்து பேசி பழகி அறிகிறார் அவளது டீச்சர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும் வகைமையில் இறங்குகிறார் டீச்சர். இந்த குறிப்பிட்ட சூழலில் அந்த நபர் அந்தக் குழந்தையை மாடியில் இருந்து கீழே எறிந்து கொன்று விட்டு, கை தவறிய விபத்து என அதை மாற்றி, அனைத்து சட்ட பிடிகளில் இருந்தும் தப்பி விடுகிறார். 

இந்த 2020 இன் அறிவுரை கவிதையில் நானறிந்த அந்த சம்பவமே ஒரு வரியில் வருகிறது. இப்படி அந்த கவிதையின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்து வைத்திருக்கும் சம்பவங்கள்தான் இந்த வாழ்வு. வாழவே முடியாத ஒரு 'இடம்'.தாளவே இயலாத பைத்தியத்தின் விளிம்பை நோக்கி தள்ளி செல்லும் 'காலம்' இந்த இரண்டின் இடையே சிக்கி, இவை அல்லாத ஓரு உலகை சேர்ந்த பிரியத்துக்கும் காதலுக்கும் தவிக்கும், தகிக்கும் காமமும் மாறாத தனிமையும் கொண்ட  தன்னிலை  ஒன்றின் வெளிப்பாடே இக்கவிதைகள்.

இந்த இடமும் இந்த காலமும் அளிக்கும் அல்லல் மீதான கவிமனதின்  எதிர்வினை என்றே இத்தொகுப்பின் வரம்பற்ற கவிதைகள் போன்ற சில கவிதைகளை வகைப்படுத்த முடியும். எதிர்வினைகள் ஒருபோதும் கவிதைகள் ஆகாது. அதே போல போஸ்ட் மார்டன் பேரடி (parody) போன்ற சில கவிதைகள். இவற்றை கவியின் அகம் தோயாத இயல்பில் சேராத மோஸ்தர் கவிதைகள் என்றே சொல்லமுடியும். இப்படி சிற்சில பலவீனங்கள் இருப்பினும் அதை இத்தொகுப்பில் இலங்கும் கவித்தன்னிலை தனது தீவிரமும் உண்மையும் கலைத்திரமும் கொண்ட கவிதைகள் பலவற்றால் விஞ்சி எழவே செய்கிறது. குறிப்பாக காதல் காமம் பிரிவாற்றாமை குறித்த கவிதைகளில்.

ஜென்ம மீட்சி

உன் பசிய முலையின் காம்புச்சியில் பெய்கிறது தாபத்தின் பெருமழை

என் நாபிச்சுழியினுள் ஊற்றெடுக்கிறது வேட்கையின் காட்டாறு

நம் உவர் தீர்த்தத்தில் ஜென்மங்களின் தாகம் தணிந்து

வனம் மீள்கின்றன இச்சையின் மான்கள்.

*

எல்லாமே பழகிய சொற்கள் படிமங்கள். ஆனால் இவற்றைக் கொண்டு தீவிரமான புத்தம் புதிய ஒன்றை இக்கவிதையால் தொட்டுவிட முடிகிறது.


நான் மட்டும்தான்

நீயில்லாத இந்தக் காலத்தின் உலகம் அப்படியேதான் இருக்கிறது.

ஒரு மணற் துகள் கூட தன் நிலையழியாமல் வழக்கம் போலே இருக்கிறது.

நான்தான் நீயில்லாததைக் குறித்து எப்படி எப்படியோ எண்ணிக்கொள்கிறேன்.

*

பௌதீகமாக அவள் வெளியே இல்லை. புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. அபௌதீகமாக அவள் உள்ளே இருப்பதால்தான் அகத்தில் இத்தனை கொந்தளிப்பா?. அல்லது அகத்திலும் அவள் இல்லாது போனதால் நிகழும் கொந்தளிப்பா? 

தொகுப்பில் எனக்குப் பிடித்த மேலும் இரண்டு கவிதைகள் இவை. பெண்மையின் இரண்டு நிலைகள் குறித்த அதை எதிர்க்கொள்ளும் ஆண்மையின் பார்வையில் அமைந்த கவிதைகள். ஒருவள் மூதேவி. மற்றவள் யட்சி.

ஒரு பழைய படிமத்தை உடைத்தல்

என் தேவதைகளுக்கு சிறகுகளில்லை 

தலையில் பூக்களாலான கிரீடங்களில்லை வெண்ணிற பரிசுத்த ஆடைகளை அவை அணிந்திருப்பதுமில்லை


அவை ஆகாயங்களிலிருந்து பொத்தென குதித்தவைகளும் அல்ல

ஞானச்செருக்கின் ஒளிவட்டம் அவர்களின் சிரசுக்குப் பின்னே ஒளிர்வதில்லை 


அவற்றின் கரங்களில்

எந்த மாயக் கோல்களும் இருப்பதில்லை 

அவற்றின் பாதங்கள் 

பூவை விட மென்மையானவைகளும் அல்ல 

அவை பாவங்களை மன்னிக்கும் புனித ஆத்மாக்களும் அல்ல


என் தேவதைகள் மூத்திரம் பெய்யும் 

அவர்களின் அபானவாயு துர்வாடை வீசும் அக்குள்களில் திட்டுத் திட்டாய் அழுக்குகளின்

தடங்களிருக்கும்

கற்றை முடிகளை சிலுப்பினால்

பேன்கள் உதிரும்


துரோகம் செய்வார்கள்

நள்ளிரவில் தன் காதலர்களின் பொருட்டு தலையில் கல்லைப் போட்டு சாகடிப்பார்கள்


நான் இல்லாதபோது

பிறன் மனையாளனுடன் கூடிக் களிப்பார்கள் 

மகா முட்டாள்களாக இருப்பார்கள்


கால்களில் பித்தவெடிப்பு இருக்கும் 

திருடவும் செய்வார்கள் அவர்களின் ஆடைகளில் வேர்வையின் கவுச்சி எப்போதும் கமழும் 

என் பாவங்களுக்கு 

என் பாவங்களைவிட அதிகமான தண்டனைகளை நியாயமற்று வழங்குவார்கள்.


என் தேவதைகளில் 

ஒரு தேவதை 

இப்போதென் வலது கையின் இரத்ததாளமொன்றை அறுத்து குருதியைக் குடித்துக் கொண்டிருக்கிறது சந்தேகமாக இருந்தால் என் அறைக்கு வந்து பாருங்கள்.

*

யட்சியைப் பற்றிய சில குறிப்புகள்.

நூறுநூறு மண்டையோடுகளின் மீது

அமர்ந்திருக்கிறாள் யட்சி 


ஒருபோதும் தீராத

அவள் பலியின் வேட்கைக்கு நானும்

நாளை என் மகனும் அவளது பலிபீடத்தில் தலைவைப்போம்.

_

வார்ச்சடையை சிலுப்புகிறாள் யட்சி அதிலிருந்து விழுந்த

சிறு திவலைகள்

நதிகளாகின

அளவில் பெரிதான துளிகள்தாம் ஏழுகடல்கள்.



சடவெடுக்க கையுயர்த்தியவளின்

அக்குள் மயிர்களிலிருந்து பாய்ந்தோடின


மதம்பிடித்த யானைகளும்

வேட்டையின் தாபம் மின்னும் கண்களுடைய ஓநாய் கூட்டங்களும்


அவளது

இடது கண்ணில் சூரியனும் வலது கண்ணில் நிலவும்


இடைப்பட்ட இரு நாசிச் சரிவுகளில் காலமும் பொழுதுகளும் பதுங்கிக் கொண்டன


பத்துக்குப் பதினாறு அறையில் யட்சியை பார்த்திருக்கக்கூடாது. 

தவம் கிடந்ததும் இதற்காகத்தான் 

ஆனால் கருந்துளையை விழுங்க யாரால் ஆகும் ?

_

யட்சியை அடைய முடியாது

பிரார்த்திக்க மட்டுமே முடியும்

தேவி என தேவி என பிரார்த்தித்தே செத்துப் போ .

_

புரண்டு படுக்கிறாள் யட்சி அவன் உடலின் கனல் தொட்ட இடங்களிலிருந்து பெருகியதுதான் இந்தக் காட்டுத்தீ

_

நிர்வாணமாய்

துயில் கொள்ளும் யட்சியின் யோனிப்பிளவில் விழுந்தது. கார்காலத்தின் முதல் மழைத்துளி 

அதில் துளிர்த்ததுதான் இந்தப் பெருவனம்.

_

வெளிச்சப் பொழுதொன்றில்

முயங்கிக் கிடந்தோம்.

காது மடல்களில் வழிந்த வேர்வையை கண்டியெறித்தாள் யட்சி சூரியன் கனவடங்கி

ஒளியடங்கி அணைத்து போனது.


எங்கும் ஆதி இருளின் அடர்திரை.

*

இவற்றுக்கு வெளியே சதீஷ்குமார் சீனிவாசன் கவிதைகளை முக்கியத்துவம் கொள்ள செய்வது அதன் ஆத்மீகமான பெருமதி.  பொதுவாக கவிதைக்கு இன்றைய சூழல் என ஒன்று இருக்கலாம், ஆனால் இன்றைய காலம் என்ற ஒன்று இருக்க வாய்ப்பு குறைவு. காரணம் கவிதை தனக்கு கச்சாவாக கொள்ளும் இந்த வாழ்வு எந்த நிலையிலும் அறுபடாத என்றுமுள்ள காலத்தொடர்ச்சியின் மேல் நிகழும் ஒன்றே. அந்த வகையில் படைப்பாளி தனது படைப்பில் இன்றைய சூழல் இன்றைய காலம் என்று எந்த ஒரு பாவனையை கைக்கொண்டாலும், நான் மேற்சொன்ன யதார்த்தத்தை ஒட்டி, அவனது படைப்பில் உள்ள உணர்வுக் கட்டுமானத்திற்கு அதன் படைப்பாளியையும் கடந்து தன்னியல்பாக எழும்  ஆத்மீக பெறுமதி உண்டு. 

அல்லது இப்படியும் சொல்லலாம் படைப்பு காட்டும் வாழ்க்கை வழியே அது மானுடம் குறித்து என்ன சொல்கிறது, படைப்பு கிளர்த்தும் உணர்வுகள் ஒட்டுமொத்தமாக ஒரு ஆத்மீக பின்புலத்தில்  என்ன பொருள் கொள்கிறது எனும் நிலையை நெருங்கி நிற்கும் படைப்புகளே குறிப்பிடத்தக்க படைப்புகள்.

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive