கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல்

முதலில் சில அடிப்படைகளை வகுத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன்.  ’கவிதை என்றால் என்ன?’ என்பது பற்றி உங்களிடம் ஏதாவது நிர்ணயம் உண்டா?

’கவிதை என்பது என்ன? ’ என்பது பற்றி நிர்ணயம், யாருமே செய்ய முடியாது என்று படுகிறது.  கருத்தாக்கமாக கவிதை பற்றிய நிர்ணயங்கள் பல ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன.  பலராலும், பல மொழிகளிலும் இவற்றால் ஏதேனும் ஒன்றை நம்பி இப்படியிருப்பதுதான் கவிதை என்று ஓர் அளவுகோலை உருவாக்கிக் கொண்டு, அதன்படி கவிதையை நிர்ணயிக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.  காரணம், இவ்வாறு சுவீகரித்துக்கொண்ட அளவுகோலை முறிக்கும் கவிதை ஒன்று மறுநாளே படிக்கக் கிடைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.  செய்யுளுக்கும் கவிதைக்குமான அடிப்படை வேறுபாடு இதுவே.  செய்யுளை நிர்ணயிக்க இலக்கணம் சார்ந்த உபகரணங்கள் உள்ளன.  குறிப்பாக தமிழில் இவ்வுபகரணங்கள் விதிவிலக்குகளுக்கு உரிய சலுகைகளோடு உள்ளன.

கவிதை நிர்ணயம் பெருமளவும் பாடுபொருளை ஒட்டியே நிகழ்வதற்குச் சான்றுகளும் தமிழில் நிறைய உண்டு.  சித்தாந்த அடிப்படையிலான கவிதை பாவனைகள் கவிதை என்று கொண்டாடப்படுவதை நாம் பார்க்க முடிகிறது.  கவிதைக்குரிய அடிப்படை லட்சணங்கள் எதுவும் இல்லாத பிரகடணங்கள், சவால்கள், முற்றுமுடிவான கூற்றுகள், தழுதழுப்புகள் கவிதை என்று முன்வைக்கப்படுவதும் அங்கீகரிக்கப்படுவதும் முந்தைய காலங்களை விட தமிழில் இப்போது அதிகமாகப் பார்க்க முடியும்.

ஒரு நிமிடம்...  இப்போது எவையெல்லாம் கவிதை அல்ல என்று சொன்னீர்கள்.  கவிதைக்குரிய அடிப்படை லட்சணங்கள் சில உள்ளதாக... நான் கேட்டது அதுதான்.  அந்த நிர்ணயம் என்ன? குறைந்தபட்சம் நீங்கள் கவிதை எனும்போது எதை உத்தேசிக்கிறீர்கள்?

என் நிர்ணயம் புறவயமானதோ நிரந்தரமானதோ அல்ல.  ‘புறவயமாக நிர்ணயிக்க முடியாது’ என்றுதான் கூறினேன். அது அந்தந்த கவிதை சார்ந்து, வாசிப்பின்போது நான் உருவாக்கிக் கொள்வது.

ஆனால் ஒரு பொது விவாதத்தில் அந்தப் பொதுத் தளத்திற்காகவேனும் நாம் ஒரு நிர்ணயத்திக்கு வந்தாக வேண்டியுள்ளதல்லவா?

அப்படி நான் நினைக்கவில்லை.  கவிதை என்று நான் சொல்லும்போது, எதிர்முனையில் இருப்பவன் தன் அனுபவம் மூலம் அதை உணர முடியும்.  புறவயமான வரையறைகள் இல்லாமலேயே விவாதம் நடக்க முடியும்.

இப்பிரச்சனை காரணமாகவே ஆதி முதல் விமர்சகர்கள் கவிதையை அதன் வடிவமாகவே உருவகித்து புறவயமாக மாற்றிக் கொண்டார்கள்...

கவிதை என்பது அதன் வடிவமா? அல்லது பாடுபொருளா என்ற கேள்வியும் நிரந்தரமாகவே இருந்து வந்திருக்கிறது.  இவ்வாறு பிரித்துப் பேசுவது ஒரு வசதிக்காக மட்டுமேயன்றி அப்படி இரண்டாக இருப்பதில்லை.  வடிவமும், பாடுபொருளும் வெவ்வேறாக தென்பட முடியாத இசைவைக் கொண்டிருப்பது கவிதை.  பாடுபொருள் கவிஞனின் நிலைப்பாடு சார்ந்து வாழ்வின் எந்த முனையைப் பற்றியும் எந்தவிதமான தீர்மானத்துடனும் செயல்பட முடியும்.  வடிவத்துக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம், நீங்கள் புறக்கணிக்கவே முடியாத ஒரு வரலாற்றுப் பின்புலம் - இருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது.  கவிதையும் கவிதையனுபவமும் வேறானவை.  ‘கவித்துவம்’ என்பது, சிறுகதை, நாடக, சிலசமயம் விமர்சனக்கட்டுரைகள் மற்றும் அன்றாட வாழ்வியல் காட்சிகள் இவற்றில்கூட இருந்துவிட முடியும்.  உண்மையில் கவித்துவத்தை உள்ளடக்காத எதையும் ஒரு சீரிய  நுகர்வோன், ‘கலை’ என்றே ஏற்றுக் கொள்ள மாட்டான்.  ஆனால், கவித்துவம் கவிதை என்ற அந்தஸ்தை அடைவதற்குச் சில காரணிகளை உள்வாங்கியாக வேண்டும்.  ஆக, நாம் கவிதை என்று பேசமுடிவதெல்லாம் கவிதையியல் பற்றி மட்டுமே.  இந்த அர்த்தத்தில்தான் வார்த்தைகளின் அடங்காச் சுனையை உள்ளடக்கிய பிரமிளின் கவிதைகளையும் சொற்களின் அதீத மௌனம் சுமந்த நகுலனின் கவிதைகளையும் நாம் கவிதை என்ற ஒரே சொல்லின் பின்னணியில் வைத்துப் பேசுகிறோம்.  அது போலவே, இயற்கைக்கும்  மனிதனுக்குமான உறவுநிலை பற்றி ஆன்மிக மொழியில் பேசும் தேவதேவனின் கவிதைகளையும், தொழில்நுட்பத்துக்கும் மனிதனுக்குமான உறவுநிலை பற்றிப் பிரதானமாக கவனம் கொள்ளும் பிரம்மராஜன் கவிதைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிறோம்.

என்னைப் பொருத்தவரை கவிதையை ஒரு ‘நுண் அனுபவம்’ என்பேன்.  அதன் நுண்மை மிகவும் காத்திரமானது.  கவிதை புரிவதற்கு முந்தின நிலையிலேயே, கவிதையின் உட்பொருளும் அதன் விஸ்தீரணமும் விளங்கிவிடுவதற்கு முன்னமே, கவிதையுடன் ஓர் உறவு ஸ்தாபிதமாகிவிடுகிறது.  அந்த உறவை விவரிக்கும்போதுதான் தரவித்தியாசம் பற்றிய, ஏற்றலும் மறுத்தலும் பற்றிய விவாதங்கள் தொடங்குகின்றன.  அவை, பெரும்பாலும் கவிதை சாராதவை.  வாழ்வியல் பற்றி, சித்தாந்தம் சார்ந்தும் சாராமலும் வாசகனோ விமர்சகனோ கொள்ளும் நிலைப்பாடுகள் சார்ந்தவை.  ஆகவே, கவிதை பற்றிய பேச்சில் ஒருதலைப்பட்சமாக ஆகிவிடுபவை அவை.

என் கேள்வியை மீண்டும் முன்வைக்க விரும்புகிறேன்.  ‘கவித்துவம்’ கவிதை என்ற அந்தஸ்தை அடைவதற்கு, சில காரணிகளை உள்வாங்கியாக வேண்டும் என்கிறீர்களே அவை யாவை?

தேவதச்சனிடம் ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது, கவிதை என்பது, ‘ஒரு மாற்று கணித மொழி’ என்றார், அது ‘சரி’ என்றே படுகிறது.

வரையறை செய்யப்பட்ட கணித மொழியின் தருக்கத்தின் வழியாக அறிவுத்துறைகள் பயணிக்கின்றன.  மாறாக, மொழி ஊடகம் வழியாக பிரம்மாண்டமான அ-தருக்கத்தை முன்வைப்பதைக் கவிதை எனலாம்.   ‘ஜென்’ கவிதைகளைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.


    அவன் வனத்தில் நுழையும்போது

    சருகுகள் நொறுங்குவதில்லை

    நீரில் இறங்கும்போது

    வளையங்கள் கிளம்புவதில்லை


இந்தக் கவிதையை உணர்வுகொள்ள நடைமுறைத் தருக்கங்கள் எதுவுமே உதவாது.

இப்போது கிட்டத்தட்ட ஒரு வரையறையை நெருங்கி விட்டோம் என்று படுகிறது.  கவிதையின் மொழி வரையறுக்கப்பட்டதல்ல என்கிறீர்களா? இந்தக் கவிதையில் ‘வனம்’ என்றால் எது என்று நிர்ணயித்துவிட முடியாது...

அறிவுத்துறைகளின் அடிப்படை அலகு, ‘ஒரு சொற்றொடர் அல்லது கருத்து’. கவிதையின் அடிப்படை அலகு, ‘ஒரு வார்த்தை’.  பிற துறைகள் அடிப்படை அலகை வகுத்து, (குறைந்தபட்சம் அக்குறிப்பிட்ட தளத்திற்கு மட்டுமாகவாவது) முன் வைத்துவிட்டு  மேலே பேச ஆரம்பிக்கின்றன.  கவிதை, அது வரையிலான எல்லா வரையறைகளையும் நிராகரித்துவிட்டு மேலே பேச ஆரம்பிக்கிறது.  இதைத்தான் அ-தர்க்க நிலை என்றேன்.

அக அனுபவமான கவிதையைப் புறவய வடிவமாக வகுத்து முன்னால் வைத்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறோம்.  கவிதையியல் தொடங்குவதே இங்குதான்.  உங்கள் பார்வையில் இவ்’வடிவம்’ என்பது எப்படிப்பட்டது? அது ஒரு மொழிக்கட்டுமானமா? உட்குறிப்புகளின் (அல்லது தொனிகள்) குறைந்தபட்ச புற அடையாளங்களின் தொகுப்பா?

கவிதை மட்டுமல்ல, காண் உலகம் பற்றிய அவதானிப்புகள் எல்லாமே அக அனுபவங்கள்தான் என்பது என் கருத்து.  நிறக்குருடு என்ற பார்வைக்குறைபாடு என்னிடம் உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.  நீங்கள் சிவப்பு என்று குறிப்பிடும் நிறம், என் பார்வையில், நீங்கள் நீலம் என்று குறிப்பிடும் நிறமாகத் தெரிகிறது.  ஆகவே, படிப்படியாக நான் “அது சிகப்பு நிறமே!” என்று பொது ஒப்பந்தத்துக்கு வந்து சேர்கிறேன்.  இதை வேறு எங்கும் சரிபார்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை.  எண்ண ஓட்டங்கள், தரிசனங்கள் சம்பந்தமாகவும் இதே குழப்பம் இருக்கிறது.  நிசர்க தத்த மகராஜ் சொல்கிறார், ‘நான் மட்டுமே இருக்கிறேன்.  என்னைத்தவிர மற்றொன்று இருப்பதற்கான அத்தாட்சியும் என் புலன் அனுபவங்களை ஆதாரமாகக்கொண்டு நான் வழங்குவதே’ என்று.

அதாவது, பிம்பத்துடன் பேசிக்கொண்டிருக்கும் ‘பிம்பம்’ நான்.  என் சரீர உணர்வுகள் யாவும் பிம்பத்தின் உணர்வுத் தோற்றங்கள் மட்டுமே என்பது போலாகிறது.

சொல்லல் - கேட்டல் என்ற இருமுணைகளுக்கு இடையே ஒரு சமரசப் புள்ளி உருவாவதன் வழியாகவே தொடர்பு மொழி ஸ்தாபிதமாக முடியும்.  எனவே, கவிதை மட்டுமல்ல சொல்லல்; பேசுதல் என்ற பணிகளேகூட ஒரு பொதுமொழிக்  கட்டுமானத்தை உற்பத்தி செய்வதுதான்.  கேட்பவனை மறந்த சொல்லல் அதீத இருண்மைக்கும், கேட்பவன் பற்றிய அதீதக் கவனம் வெளிறிப்போன எளிமைக்கும் இட்டுச் செல்கிறது.

கவிதையைப் புறவயமாக நிர்ணயிக்க, தமிழ்க் கவிதையின் வரலாறு குறித்த பயிற்சி அவசியம்.  ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளை வாசிக்கவும் அளவிடவும் கவிதை பற்றிய அன்றைய பார்வையும் அணுகுமுறையும் போதுமானதாக இருக்கவில்லை.  தொடர்ந்து ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களும் அவரை ஒட்டி தன் சொல்லல் முறையை வளர்த்துச் சென்ற தி.சோ.வேணுகோபாலன், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற கவிஞர்களின் கவிதை முயற்சிகளும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையியலுடன் ஒரு நெருக்கத்தை உருவாக்கின.  ஆனால், இன்று யூமா. வாசுகியின் கவிதைகளை அனுபவம் கொள்ள ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளுடனான நெருக்கம் மட்டும் போதாது.  தொடர்ந்து ஐம்பது வருடங்களாக, தமிழ்க் கவிதை நகர்ந்து வந்துள்ள தடத்தைப் பற்றிய உன்னிப்பான கவனம் வேண்டும்.

ஆகவே, ‘வடிவம்’ என்பது இப்படிப்பட்ட ஒரு பொதுப்புரிதலின் தளத்தில் உருவாகிவரும் ஒன்று என்று கூறலாமா?

இம்மாதிரி வரையறுத்துக் கொள்வதன் அவசியம் என்ன என்பதே என் கேள்வி.  கவிதையை அளக்க அப்படி பொதுவான அளவீடுகள் அவசியமில்லை.  உருவாக்கப்படும் அளவீடு, கவிதையை வகைப்படுத்த உதவலாமே ஒழிய கவிதையனுபவத்தைத் துய்க்க உதவும் என்று தோன்றவில்லை.  வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கொன்று நேரதிரான சொல்லல் முறைகளைக் கவிதையாக உணர்வது சாத்தியமாகவே இருக்கிறது.

கவிஞனின் அந்தரங்க உணர்ச்சிநிலை, அவனது சிந்தனையின் வீரியம், இவற்றோடு அவன் பிரத்தியேகமாக உருவாக்கும் அழகியல் கோணம் இவற்றின் வழியாக ஒரு கவிதை, கவிதையாக நிறுவப்படுகிறது.  இம்மூன்று அம்சங்களின் கலப்பு விகிதத்தில் தென்படும் வித்தியாசங்களே ஒரு கவிஞனிடமிருந்து இன்னொரு கவிஞனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

நவீனக் கவிதைக்கு, மிகத் தோராயமாகவேனும் ஒரு இலக்கண அமைப்பைக் கற்பிதம் செய்ய முடியுமா?

நவீனக் கவிதை, தன் தொடர்ந்த வளர்ச்சிப் போக்கில் மரபுக் கவிதைக்கு ஈடாக, தன் இரகசிய இலக்கணங்களை உருவாக்கிக் கொண்டே போகிறது.  ஆனால், இவை சொற்களின் இருப்பு, இணைப்பு தொடர்பான இலக்கணங்கள் அல்ல.  மாறாக, அர்த்தங்களின் இருத்தல், இணைத்தல் மற்றும் சிதைத்தல் சார்ந்தவை.

சிறந்த ஒரு கவிஞன், தன் கவிதைகளுக்கென்று அதுநாள் வரை புழங்கியிராத ஒரு புதிய இலக்கணத்தைக் கட்டமைக்கக் கூடியவன்.  உதாரணமாக, பிரமிளின் ‘காவியம்’ கவிதை.  ஆனால், இந்தக் கவிதையும் பிரமிளின் ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதையும் ஒரே சொல்லல் முறையில் வருபவை அல்ல.  அதன் காரணமாகவே ஒரேவிதமாகப் புரியக்கூடியவையும் அல்ல.

ஆக, புறவயமாகக் கவிதையை அணுகும் பதற்றமும் வடிவரீதியான தேடலும் வாசகனுடையதோ கவிஞனுடையதோ அல்ல.  அது விமர்சகனுடையது.

இன்று கவிதையின் சவால் நவீனத்துவ காலகட்டத்து வடிவச் செம்மையை மீறி நவீனத்துவத்தால் புறக்கணிக்கப்பட்ட பரவசம், ஆவேசம் போன்ற உணர்வுகளைத் தொடத்துடிப்பதாக மாறியுள்ளது.  உங்கள் கவிதைகள் நவீனத்துவத்தின் எல்லையை மீறாதவையாக, கனகச்சிதமான நவீனத்துவ மாதிரிகளாக உள்ளன.  இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

என் கவிதைகளை நவீனத்துவக் கவிதைகளா அல்லது பின் நவீனத்துவ கவிதைகளா என்றெல்லாம் பொருத்திப் பார்ப்பது என் வேலையல்ல என்று தோன்றுகிறது.  என் பெரும்பாலான கவிதைகளை இருவிதமாகவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள்.  என்னைப் பொருத்தவரை கூர்மையான அனுபவங்களை வெளியிட நான் தேடும் ஒரு வடிவம் ‘கவிதை’ என்று மட்டுமே கூறுவேன்.

கவிதையை வகைப்படுத்த ஒரு புறாக்கூடுகளின் தொகுப்பு வடிவம் (Pigeon-Hole set-up) உருவகிக்கப்பட்டுள்ளது.  இன்ன கவிதை, இன்ன  இசம் என்று பிரித்து ஒவ்வொரு கூடுக்குள் போடப்படுகிறது.  அந்தக் குறிப்பிட்ட இசத்தின்மீது பற்றும் அறிவும் இருப்பவர்கள், கவிதையைவிடவும் இசத்தின்மீது விசுவாசம் காட்டுபவர்களாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.

அந்தப் புறாக் கூட்டமைப்பின் துவாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பொதுச்சட்டகம் பற்றியதே என் அக்கறை.

‘இசம்’ என்பது பொதுவாகச் சொல்லும்போது பல நுட்பங்கள் தவறிவிடுகின்றன.  இங்கு நான் கூறவருவது ஒரு கருத்தியல் அடையாளம் பற்றியது அல்ல.  இது கவிதையின் சமகாலத்தன்மை பற்றிய கேள்வி.  கவிதை பிரச்சினைப்படுத்தும் விஷயங்களை, அதற்குரிய வழிமுறைகள் ஆகியவற்றுக்கும் பிற சமகால அறிவுத்துறைகளின் பிரச்சினைக்களங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது.

சமகாலத்தன்மை, பிற துறைகளுடன் உரையாடல் போன்றவை கவிதையின் நிபந்தனைகள் அல்ல. கவிதையின் செயல்தளமே வேறு. பிற அறிவுத்துறைகளில் கூறப்படும் விஷயங்களை maxims, axioms-ஆக குறைத்துப் புரிந்துகொள்வது சாத்தியம்.  விஞ்ஞானம், மதம் சார்ந்த ஒரு பெரும் கொள்கையை ஒரு வாய்ப்பாடாகவோ ஒரு பிம்பமாகவோ மாற்றிவிடலாம்.  உதாரணம், ‘ஒளிவருடம்’, ‘கடவுள்’, ‘இருத்தல்’ போன்ற சொற்கள்.  கவிதையில் அது சாத்தியமல்ல.  கவிதையில் அப்படி ஒன்று நிர்ணயிக்கப்பட்ட உடனேயே அது அர்த்தமற்ற ஒலியாக மாறி கவிதையைவிட்டு வெளியே நிற்கத் தொடங்கிவிடுகிறது.

பிற துறைகளில் கூறுபவன், பெறுபவன் என்ற இருநிலை திட்டவட்டமானது.  கூறப்படாத ஒன்று பெறப்பட்டது என்று, அங்கு கற்பனையே செய்யமுடியாது.  கவிதையில் அவ்வேறுபாடு துல்லியமல்ல.  பெறுபவன்தான் பல சமயம் கவிதையை உருவாக்கிக் கொள்கிறான்.  பெறுபவன், தன்னிடம் கூறப்பட்ட அனைத்தையும் தாண்டிச் செல்லவும் கூடும்.  பொதுமைப்படுத்தல், குறைத்தல், அறுதியிடுதல் முதலியவை அறிவியக்கத்தின் அடிப்படைகள்.  அவை கவிதையில் சாத்தியமேயல்ல.  அறிவியக்கத்தின் பிராந்தியத்திலேயே கவிதை இல்லை.

கவிதையில் அதன் அனுபவதளத்தில் நான் இல்லை என்ற நிலையே உள்ளது.  கவிதையனுபவத்துடன் அதை அறியும் தன்னிலை கலந்து அழிந்துவிடுகிறது.  அதை வகுப்பவன் அவ்வனுபவத்தில் இருந்து தன்னை மீட்டு வெளியே வந்து அதை அறிவார்த்தமாக விளக்க ஆரம்பிப்பவன்.  அவன் விமர்சகனேயொழிய, வாசகனோ கவிஞனோ அல்ல.

யுவன், நீங்கள் இப்போது செய்வது என்ன தெரியுமா?  கவிதை இயலை நிராகரிக்கும் ஒரு கவிதை இயலை உருவாக்க முயல்கிறீர்கள்.

கவிதையைப் பற்றிய எல்லாப் பேச்சுமே கவிதை இயல் ஆகிவிடுகிறது.  கவிதை கவிதையியலிடமிருந்து முடிவின்றி தப்பித்து ஓடியபடியேதான் இருக்கிறது.  இதைத்தான் சொல்ல முயல்கிறேன்.

சரி, கவிதையியலின் தேவையை, அது கவிதை தொடங்கிய காலம் முதல் இருந்துகொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆமாம். எல்லா நுண்கலைகளுக்கும் அகவய அனுபவங்களுக்கும் அப்படியொரு அறிவார்ந்த தளம் உள்ளது.  சங்கீதத்துக்கு இருக்கிறதே...

அதாவது நுட்பங்கள், மீறல்கள் எல்லாம் ஒருபக்கமிருக்க, ஒரு குறைந்தபட்ச நிர்ணயத்தை நாம் தொடர்ந்து உருவாக்கியபடியே இருக்க வேண்டுமல்லவா? கோடுபோட்ட பிறகுதானே தாண்ட முடியும்?

ஒரு சிறந்த கவிதையை ஒட்டி அப்படி ஒரு நிர்ணயத்தை உருவாக்கினால், உடனே அது பிறிதொரு சிறந்த கவிதையை நிராகரிக்க ஆரம்பித்துவிடும்.  இதுதான் பிரச்சினை.


    ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும்

    அறுவடை வயல் வெளியில்...


-- என்ற வரியில் ஒரு உக்கிரமான காட்சிவடிவம் உள்ளது.


    அதோ அந்த புல்

    உட்காந்த இடத்திலேயே வளர்கிறது...


-- என்ற வரியில் சுத்தமாக காட்சியனுபவம் இல்லை.  அது கருத்துதள பரவசம் மட்டுமே.  இரண்டுமே மேலான கவிதைகள்.

நீங்கள் இப்போது கவிதையியலை எளிமைப்படுத்துகிறீர்கள்.  இரண்டு விஷயங்கள் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும்.  1.  காலாவதியாகிவிடும் என்று தெரிந்தே கவிதையியலாளன் தன் நிர்ணயங்களை உருவாக்குகிறான்.  அவை காலம் சார்ந்தவை, பிரதி சார்ந்தவை.  2.  கவிதையின் மீறல்களுக்கு தொடர்ந்து இடம் விடுகிறான்.  ‘வழுஉ’ என்பது மிக முக்கியமான ஒரு கவிதையியல் கருதுகோள்...

கவிஞனாக என் வேலை, விதிகளை மீறுவது மட்டும்தான்...

உங்கள் சொந்த விதிகளை மீறுகிறீர்களா?

என் ஒவ்வொரு கவிதையையும் அதற்கான முயற்சி என்றே கூறுவேன்.  ‘வேறு ஒரு காலம்’ முன்னுரையில்கூட அதைத்தான் சொல்லியிருக்கிறேன்.

இன்னொரு விஷயம், கவிதையியலாளனுக்கு, கவிதை நிகழ்வது அகவயமான தளத்தில் என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கிறது.  உதாரணமாக, ரசங்கள் (மெய்ப்பாடுகள்) கருகா, பீபத்சம், எல்லாம் என்ன? மன உணர்வுகள்தானே? அவற்றைப் படைப்பின் வடிவ இயல்பாக உருவகப்படுத்திப் பேச ஆரம்பிக்கிறார்கள்.  காரணம், வடிவம் மட்டுமே புறவயமானது.  கவிதையில் விவாதிக்கத்தக்கது அது மட்டுமே...

கவிதை நிகழ்வது, வாசகனும் கவிஞனும் ஒன்றாகும் ஒரு மாயத்தருணத்தில்.  அதை அப்படியோ இப்படியோ குறுக்குவது கவிதைக்கு எதிரானதேயாகும்.

நீங்கள் எத்தனை தூரம் விவாதித்தாலும், கவிதையில் உள்ள சமகால கருத்தியல் பாதிப்பை நிராகரிக்க முடியுமா என்ன? நவீனக் கவிதைக்கும் இருத்தலியத்துக்கும் உள்ள தொடர்பை... ரசசித்தாந்ததுக்கும் மையத்தை வலியுறுத்தும் வேதாந்த மரபுக்கும் உள்ள தொடர்பை...

இதெல்லாம் வரலாற்றுரீதியான வாசிப்பின் விளைவாக கண்ணில் படுபவை.  வரலாற்றுரீதியான நிர்பந்தம், என்னில் ஒரு கருத்தியலைப் புகுத்தவும் செய்யலாம்.  ஆனால், கவிஞனாகவும் வாசகனாகவும் அதைத் தாண்டிச் செல்வதே என் பணி.

ஆனால், கவிதை விவாதங்களில் நீங்கள் எப்போதும் ஒரு தெளிவான வடிவப் பிரக்ஞையுடன் இருப்பதாகத் தெரிகிறதே...

அது இயல்பான வெளிப்பாடு.  ஒரு கவிதை தோல்வியடையும்போது, ஏன் அது தோல்வியடைந்தது என்று விவாதிக்கும்போது, வடிவம் பற்றிய  பேச்சு வருகிறது.  அதற்கு அர்த்தம், ‘அவ்வடிவத்தை அது அடைந்திருந்தால் நல்ல கவிதையாக ஆகிவிட்டிருக்கும்’ என்பது அல்ல.  அதன் சரிவை, வடிவம் சார்ந்த உருவகங்கள் மூலம் விளக்க முடியும்.  அவ்வளவுதான்.  என் விசுவாசம் கவிதையனுபவத்துக்குத்தான்; வடிவத்துக்கு அல்ல.

உங்கள் விருப்பம் அது.  ஆனால்  மானசீகமான ஒரு வடிவ உருவகம் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

அதை மீறுவதே என் கவிதை.

மீண்டும் உங்கள் பதிலில் இருந்து தொடங்குகிறேன்.  கவிதையனுபவத்தின் ‘மாயத்தருணம்’ பற்றிச் சொன்னீர்கள்.  நீங்கள் கவிதையை மர்மப்படுத்த முயல்கிறீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?

ஏன் நான் மர்மப்படுத்தக்கூடாது?

அறிவார்ந்த தேடல் எத்தனை முடியுமோ அத்தனை தூரம் தன்னைக் கிழித்து, உடைத்து மர்மங்களை அவிழ்க்கவே முயலும்.  பெரும் கலைப்படைப்புகளின் இயங்குமுறையே அதுதான்.  மர்மப்படுத்துதலும் புனிதப்படுத்துதலும், கலையின் தத்தளிப்புக்கும் தேடலுக்கும் எதிரான ஒரு சமநிலையை உருவாக்குபவை.

ஏற்கிறேன்.  ஆனால், தமிழ்ச்சூழலில் அதன் கடைசி மர்மத்தை மறுக்கக்கூடிய போக்குதான் வலுவாக இருந்து வருகிறது.  ஏன் அதன் தொழில்நுட்ப சூட்சுமங்களையேகூட, புரிந்து கொள்ளாமல் எளிமைப்படுத்தும் போக்குதான் பரவலாக உள்ளது.  ஆகவேதான், நான் அந்த மர்மத்தை அழுத்திச் சொல்கிறேன்.  அந்த மர்மம்தான் முக்கியம் என்பதில், அதை அறிய முயலவேண்டும் என்ற தாபமும் உள்ளது.

கவிதையை ஓர் அறிவார்ந்த பரவசமாகப் (intellectual ecstacy) பார்க்கும் பார்வை நவீனத்துவ மரபில் உள்ளது.  அந்த அறிவார்த்தம், உண்மையில் தத்துவத்தால் கட்டமைப்பட்டது. ஆகவே, நவீனத்துவ கவிதையைத் தத்துவத்தின் ‘சோராத்திரி’ என்று இன்று சிலர் கூறுகிறார்கள். (தத்துவத்தின் சோதனைக்குழாய் புத்திரிகளுக்கு நம்மிடையே பஞ்சமில்லை).

இன்று தத்துவத்தின், தருக்கத்தின், அறிவார்த்தத்தின் பிடியே இல்லாத பீறிடலாக, கவிதையைக் காணும் ஒரு போக்கு தமிழில் உருவாகி வருகிறது.  உங்கள் தரப்பு என்ன?

பாடல் என்ற வடிவத்துக்கும், கவிதை என்ற வடிவத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே நீங்கள் குறிப்பிடும் அறிவார்ந்த பரவசம்தான்.  சாதாரண உணர்ச்சியின் உச்சநிலைகளைக் கூறும் வரிகளை இன்றைய கவிதை வாசகன் உடனடியாக நிராகரித்துவிடுவான்.  உணர்ச்சியும் அறிவார்த்தமும் கிரகிக்க முடியாத மனோவேகத்தில் புணரும் சொற்சேர்க்கையே இன்றைய கவிதையாக இருக்க முடியும்.  உண்மையில் இந்தக் கிளர்ச்சிநிலையை நோக்கி தமிழ்ப் புனைகதை விரைந்து செல்கிறது.  வறட்டு அறிவார்த்தத்துக்கும் அனுபவமாக ரசவாதம் கொள்ளும் அறிவார்த்தத்துக்குமான வித்தியாசம் எவராலும் உணரமுடிவதுதான்.  அதற்காக மென்மையான, சிந்தனையை வருடிச்செல்லும் கவிதைகளுக்கு நான் விரோதி அல்ல.  அவற்றை நான் எழுத முயலமாட்டேன். அவ்வளவுதான்.

அனுபவமாக ரசவாதம்கொள்ளும் அறிவார்த்தம் என்று சொன்னேன்.  தமிழ் நவீனக் கவிதையின் சவால் என்று நான் காண்பது இதைத்தான்.  ஒரு படிமம் முன்வைக்கப்படுகிறது.  அது வளர்ந்து செல்லும் போக்கில், பாதை இரண்டாக கிளை பிரிகிறது.  ஒன்று உணர்ச்சிப்பெருக்கின் பாதை.  மற்றது சிந்தனை வேகத்தின் பாதை.  இவ்விரண்டு பாதைகளில் ஏதேனுமொன்றில் கவிதை நுழைவதற்கு முன்னால், தான் புறப்பட்டு வந்த பாதையையும் சேர்ந்த முச்சந்தியிலேயே கவிதையை நிறுத்திவிட முயன்றால், அது சாத்தியமானால், நவீனக் கவிதையில் ஒரு புதிய சந்தியை அறிமுகப்படுத்திவிட முடியும்.

அந்த அறிவார்த்தத்தில் உள்ள தத்துவ அம்சத்தைப் பற்றிக் கேட்டேன்...

கவிதையில் அறிவார்த்தம் என்பது, ‘சிந்தனையின் வழியாக கண்டடைந்த உண்மையின் கூறு ஒன்றைச் சிந்தனையின் கூறாகவே முன்வைப்பது அல்ல; அறிவார்த்தத்தினால் தீர்த்துவிட முடியாத ஆழ்நிலைத்துயரம் ஒன்றை, மனிதார்த்தத்தின் கையறுநிலையைப் பிரலாபிப்பதுதான்.’ இந்தத் துயரொலியைக் கேட்குமளவு தன் செவிப்புலனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளும் அவசியம் வாசகத் தரப்பில் இருக்கிறது.

இவ்வாறு நான் சொல்லிச் செல்லும் ஆதர்சக் கவிதாநிலை போதத்தின் திடுக்கிடலை, ஆழ்மன சாத்தியங்கள் போத விளிம்புகளுக்கு அப்பால் சலனமுறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.  இது நேர்த்தியான, தருக்கபூர்வ சிந்தனையை முறித்துவிடக்கூடியது.  வெறும் ஆவேசமான வார்த்தைச்செட்டால் மட்டும் இது நிகழ்ந்து விட முடியாது.

சரி, இப்படிக் கேட்கிறேன்.  தத்துவத்தின் அறிவார்த்தத்துக்கும் கவிதையில் உள்ள அறிவார்த்தத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஓர் அறைக்குள் நுழைகிறோம்.  அது ஒரு முழுமையாக (wholesomeness) நம்மை எதிர்கொள்கிறது.  அறிந்தும் அறியாததுமாக புலன்கள் அதன் முழுமையை உள்வாங்குகின்றன.  அது ஓர் அனுபவம்.  பிறகு வெளியே வந்து அந்த அறையை நினைவு கூர்கிறோம் அல்லது கூற  முயல்கிறோம். அப்போது அந்த அறை பல்வேறு அறிதல்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது.  அவ்வறிதல்களை நாம் பட்டியலிடுகிறோம்.

விஞ்ஞானம், அறிகிறது. கவிதை, அனுபவமாக ஆகிவிடுகிறது.  தத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாமானியம், விசேஷம் என்ற இரு தளங்கள் உள்ளன.  இந்த வாஷ்பேசின் இல்லை, அணு கூட்டமைப்பே உள்ளது.  ஆனால், அதில் கைகழுவலாம்.  ஒரே சமயம் சாமானிய விஷேஷ நிலைகளில், இந்த வாஷ்பேசின், கவிதையில் இருக்க முடியும்.

நான் இப்படிச் சொல்கிறேன்.  வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் பிரக்ஞையாகவே கவிஞனில் தத்துவம்; அதாவது, அறிவார்த்தம் உள்ளது.  அது அவனுடையதல்ல, சூழலில் இருந்து வந்து படிவது.

கவிஞனை மீறிய மொழியின் தன்னிச்சையான சுதந்திரப் போக்கு ஒன்று இருப்பதாகச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.  கவிஞனின் ரகசிய மனத்தளங்களில் ஒரு சுனைபோல பீறிடக்கூடும்.  சொற்கள், அவற்றின் கட்டுமானங்கள் எல்லாமே ‘சொல்லல்’ என்று வரும்போது, தருக்கபூர்வமான தொடர்களாகவே முன்வைக்கப்பட முடியும்.  சொல்லின் வழியாக நுட்பமான திருகலுக்கு ஆட்பட்டே மொழி வெளியேறுகிறது.  நான் கவிதையைத் தரித்தவனைக் கவிஞனாகவும், சொல்பவனைத் தொகுப்பாளனாகவும் (editor) பார்க்கிறேன்.  கவிதையியல் சம்பந்தமான என் விவாதங்கள் தொகுப்பாளனுடன்தான்.

வார்த்தைகளின் மீதான அடங்காக் காதலின் வழியாக ஒரு சொற்கூட்டமைப்பைக் கவிஞன் தேர்கிறான்.  இந்தக் காதலை வெளிப்படுத்துவதற்கு, கதை இறுக்கம் பூண்ட வார்த்தைகளைக் கோர்த்து தைப்பு நிலையொன்றை உருவாக்குவது என்ற ஒற்றைப் பாதை மட்டுமே மார்க்கம் அல்ல.  மாறாகக் கூரான, மிகப் பொருத்தமான சொற்களை மிதமாகப் பயன்படுத்தியும் நீங்கள் விழையும் ஆழ்மனச் சாத்தியங்களை மொழியில் நிகழ்த்திவிட முடியும்.  சுட்டல், சுடாதிருத்தல் இரண்டுமே கவிஞனின் முன்தீர்மானத்தின்படி அல்லாமல் கவிதையனுபவத்தின் கோரிக்கைகள் சார்ந்து நடைபெற முடியும்.

இயல்பான உணர்வெழுச்சிகளைப் பிரக்ஞைபூர்வமாகக் கட்டுப்படுத்தி, மிதமாகக் கூறும் போக்கு நவீனத்துவக் கவிதையில் உண்டு.  உங்கள் கவிதைகளிலும் அதைக் கேட்டேன்...

உணர்ச்சிநிலைகளை ஐயத்துடன் பார்த்துக் கட்டுப்படுத்தும் தருக்கநிலையை நான் முன்வைப்பதாகக் கூறினீர்கள்.  ‘உணர்ச்சி நிலைகள் அல்ல; அவற்றின் வெளிப்பாடுகள்தான் மிகவும் அகவயமானவை; (subjective) தனிநபர் சார்ந்தவை.’ அவற்றில் விகதாசாரம் மீறிய உக்கிரம் வெளிப்படும்போது பல சந்தர்ப்பங்களில் அவை கேலிக்குரியதாகிவிடுகின்றன.  மிகப் பிரசித்தி பெற்ற நெம்புகோல் கவிதையை நினைவுகூர வேண்டுகிறேன். அதிலிருக்கும் ஆதங்கம், அறக்கோபம் இவற்றை நாமிருவருமே மறுக்கமாட்டோம் இல்லையா? ஆயினும் அந்தக் கவிதையில் வாசகப் பங்கேற்பு, உள்ளோடும் இணைப்பிரதி (parallel text) ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் மேற்கொள்ளப்படும் ஆழ்ந்த விசாரணை எதுவும் கிடையாது.

இதோ ‘இலக்கணம்’ வந்துவிட்டது...

இலக்கணம் அல்ல. எதிர்பார்ப்புதான்.  இவை இல்லாத சொல்முறைகள் வழியாகத் தகவல்கள் மட்டுமே பரிமாறப்படும்.  அந்தப் பணியை, தினசரி பத்திரிகைகள் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கின்றன.  உண்மையில், தினசரிகளில் செய்திகள் பிரசுரிக்கப்படும் ஒழுங்கமைப்பிலேயே செய்திகளைத் தாண்டி பல்வேறு செல்வாக்குகளைச் செலுத்தும்போது, கவிதை என்ற பிரத்யேக வடிவில் இவற்றை எதிர்பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே?

கனவுகள், ஆழ்மனநிலைகள் போன்றவை தம் நிகழ்தளத்தில், நிகழ்கணத்தில் கொண்டிருக்கும் அகப்பெறுமானத்தைச் சொல்லல் எனும் புறச்செயல்பாடு குறைத்துவிடுகிறது.  இவ்வகநிலைகள் சொல்லில் வனையப்படும்போது வெறுமே அடையாளப் படுத்தலாகச் சுருங்கியும் விடுகின்றன.  எனவே, கவிதை எனும் வடிவமே ஓர் அகண்ட பொருளில் அடையாளப்படுத்துவதுதான்.  மொழியின் தளத்தில் ஏற்கனவே புழங்கி பொதுத்தன்மையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் சொற்களில் புதிய சேர்க்கைகளை உருவாக்குவதன் மூலம், பொதுத்தன்மைக்கும் அங்கீகாரத்திற்கும் அப்பால் பாயும் முயற்சியை மேற்கொள்ளும்போது, அடையாளப் படுத்தல் சற்று விரிவான எல்லைகளை உண்டாக்குகிறது.  ஆனால், ஆழ்மன அனுபவங்கள் எல்லைகளை மீறிப் பிறப்பவை.

கட்டுப்படுத்தப்படாத நேரடி வெளிப்பாடு என்று கவிதையில் எதுவுமில்லை.

அறிவார்த்தத்தால் அல்லது தத்துவத்தால் அரித்து வெளிவிடப்படுவது பற்றிக் கேட்டேன்.

நவீனக் கவிதைத் தத்துவத்தின் சோரபுத்திரி என்று ஒரு வரி முன்பே சொல்லப்பட்டது.  பதப்படுத்தப்படாத மிகையுணர்ச்சி பீறிடும் வரிகளை, ‘ஏன் மதவாத செய்யுட்களின் நவீன மாறுவேடம் என்று சொல்லக்கூடாது?’ தேவார - திருவாசகப் பாடல்களின் பக்தியின் உன்மத்தம் பாய்கிறது என்றால், இவ்வகைக் கவிதைகளில் தனி மனிதனின் உறவுநிலைகள் சம்பந்தமான உன்மத்தம் பாய்கிறது. களங்களும் காரணங்களும் வேறாயினும், உன்மத்தம் உன்மத்தம்தானே? விசாரணையற்ற உன்மத்த நிலையில் உள்ள அந்தரங்கத்தன்மை கவிதைக்கு அவசியமான பிரபஞ்சத்தன்மைக்கு எதிரானது.

கவிதை விவாதத்தில் உணர்ச்சிகரம், அறிவார்த்தம் என்று பிரித்து எதிரெதிர் நிலைகளில் வைத்துப் பார்க்கும்போது பல விஷயங்கள் விடப்படுகின்றன.  கவிதையானது உணர்ச்சி பீறிட வேண்டிய ஒரு வடிவம் என்ற மறைமுகக் கருதுகோளின் அடிப்படையில் பிறக்கும் நம்பிக்கை இது.  அறிவார்த்தம் நீட்டிச் செல்லும் பாதையில் விரையும் ஒருவன், ஒரு கட்டத்துக்குமேல் செயலற்றவனாகத் தன்னை உணரும்போது, அதீத உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளாகிறான்.

    எப்பவாவது ஒரு

    கொக்கு பறக்கும்

    நகருக்கு மேலே என்

    கவசமும் வாளும்

    உருகி ஓடும்

    ஊருக்கு வெளியே,

என்ற தேவதச்சனின் கவிதையைப் படிக்கும் நகரவாசியான எனக்கு ஏற்படுவது அத்தகைய ஓர் அனுபவம்.  உணர்ச்சி, அறிவு என்று பேசிச் செல்லும்போது அடியில் உள்ள ஆழ்நிலை அறிதல் (understanding) கவனம் பெறாது போகிறது.

    எனது

    வீணையின் நரம்புகளுக்கு

    பாடத் தெரியாது

    நடனம்தான் தெரியும்

    அவை

    ஆடினால்

    பார்க்க முடியாது

    கேட்கத்தான்

    முடியும்

என்ற ஷாஅவின் கவிதையில் உள்ளது அறிவார்த்தத்தின் கருத்து நிலையா? உணர்ச்சிகரமான செயலறுநிலையா?

நான் உங்கள் கவிதைக்கு வருகிறேன்.  உங்கள் கவிதை அனுபவமாக இல்லை; அவ்வனுபவம் மீதான ஒரு கருத்தாக (idea) உள்ளது என்று கூறினால், என்ன பதில் கூறுவீர்கள்?

பதில் கூறியாகவேண்டும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.  கருத்து என்பதே ஒரு அனுபவம்தானே? அறிதலின் திறப்பு என்பது, அத்திறப்பின் பேரின்பம் என்பது ஏன் அனுபவமாகாது? அதை அனுபவத்தின் கீழான நிலை என்று கூறுவீர்களா என்ன?

அதேபோல, ‘உணர்ச்சி’ என்பதும் ஒரு வகை கருத்தேயாகும்.  கருத்துவடிவமாக அன்றி - மிருகங்கள்தவிர மனிதர்கள் - எப்படி உணர்ச்சிகளைத் தானுணரவோ, வெளிப்படுத்தவோ முடியும்?

என் கேள்வியை விரிவுபடுத்துகிறேன்.  அனுபவம், அவ்வனுபவம் மீதான ஒரு கருத்து, அதன் பிறகு அக்கருத்திற்கு ஏற்ப மறுகட்டமைப்பு செய்யப்பட்ட முதல் அனுபவம்.  இதுவே உங்கள் கவிதையின் இயல்பாக உள்ளது என்று கூறலாமா?

அறிவார்த்தம், உணர்வு தளம், கூறுமுறை எனும் மூன்றும் கலந்ததுதான் கவிதை.  இதன் பங்கீட்டளவும், முக்கியமானது.  அனுபவங்கள் மொழியினூடாக, மொழிப்பதிவுகளாக மட்டும்தான் நம்மால் அறியப்படுகின்றன.  முதலில் அனுபவத்தைப் ‘புரிந்து’ கொள்கிறோமா இல்லையா? அது என்ன? புரிந்து கொண்ட அனுபவத்தைத்தானே கூற முற்படுகிறோம்.  அனுபவம் அப்படியே கவிதையாக வருமா என்ன?

எல்லாச் சிந்தனை இயக்கமும் ‘நான்’ஐ விதவிதமாக கட்டமைக்கும் தொடர் இயக்கம்தான்.  இந்த ‘நான்’களுக்கு இடையே ஓர் ஒத்திசைவு இருக்கலாம், இல்லாமலும்கூட இருக்கலாம்.  நமது மனதில் ஓடும் சிந்தனைச்சரடு உண்மையில் என்ன? அனுபவங்களில் இருந்து ‘நான்’ஐத் தொடர்ந்து உருவியெடுக்கும் முயற்சிதானே? அதன் விளைவாகவே எல்லா அனுபவங்களும் மறு ஆக்கம் செய்யப்படுகின்றன.  அனுபவம் என்ற ஒன்று அறிதலுக்கு அப்பாற்பட்டது.  நான் பேசுவது ‘என்’ அனுபவத்தைப்பற்றி மட்டும்தான்.

கவிதை என்று வரும்போது, அப்படிச் சுயப்படுத்தப்பட்ட அனுபவத்தின் மேலும் செறிவான அம்சமே பதிவு செய்யப்படுகிறது.  அப்படி செறிவூட்டப்படும்போது அது, தான் சொன்னதைவிட பலமடங்கு உணர்த்த முற்படுகிறது.

இந்தப் பதில் எனக்கு முழுத்திருப்தி தருகிறது யுவன்.  ஆயினும் ஓர் ஐயம் மிச்சமுள்ளது.  தத்துவார்த்தமான கட்டுக்கோப்பு பல சமயம் வாழ்வனுபவத்தின் துளிகளைத் தவறவிடுகிறதல்லவா? அக்கட்டுக்கோப்பை வலுப்படுத்தக்கூடிய, அதனுடன் சம்பந்தப்பட்ட, விஷயங்கள் மட்டுமே அனுபவமாக ஏற்கப்படுகின்றன...

உறவனுபவங்களை மட்டும்தான் இங்கு நாம் சாதாரணமாக ‘அனுபவம்’ என்கிறோம்.  ஏன் ஒட்டுமொத்த அனுபவத்தை, பிரபஞ்சகரமான அனுபவத்தை நாம் அனுபவம் என்று சொல்வதில்லை? காலவெளி பற்றிப் பேசுவதைத் தத்துவமாகவோ விஞ்ஞானமாகவோ மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? அதுவும் அனுபவம்தானே? வானம் நோக்கி விரியும் மனிதத் தேடலின் தத்தளிப்பு மானுட அனுபவம் இல்லையா?  இதோ, இது நீர்த்துளி - ஆகவே, கடலும் ஒரு நீர்த்துளிதான்.  அனுபவ முழுமையின் பகுதியான சிற்றனுபவங்கள் மட்டுமே நமக்கு மானுட அனுபவங்களாகவும் சகஜமானவைகளாகவும் தோன்றுகின்றன.

என் வினாவை தொடர்புறுத்திவிடுகிறேனே.  யுவன், பாரிஷாவின் கரு கவிதையில் ‘முடிவற்ற ஆழமுள்ள பானைநீரில் நிலா’ என்று ஒரு படிமம் வருகிறது.  அது நம்மை கால - இட - வெளி பற்றிய ஒரு துணுக்குறலுக்கு ஆட்படுத்துகிறது.  ஒரு ஸ்தம்பிதம்.  இதுவே, கவிதையில் உள்ள மீ அனுபவம்.  உங்கள் கவிதையில் அந்தத் துணுக்குறல் அனுபவம் கைகூடவில்லை.  அத்துணுக்குறல் குறித்த பல்வேறு கருத்து நிலைகள்தான் நுட்பமாகக் கூறப்படுகின்றன.  அவை, என் சிந்தனைத்தளத்தில் பிரச்சனைகளைக் கிளப்பிப் பலவாறாகச் சிந்தித்து விரிவடையவைப்பது உண்மை.  ஆயினும் துணுக்குறல் இல்லை...

தேவதச்சன் ஒரு வரி எழுதியிருக்கிறார். “வண்ணத்துப்பூச்சி தன் காலில் ஒரு காட்டை சுமந்து செல்கிறது...” ஒரு ரொமாண்டிக் கற்பனை என்று இவ்வரியை எளிதில் கடந்து சென்றுவிடலாம்.  ஆனால், உடனே உங்கள் மனம் விழிப்புற்று யோசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அந்த வண்ணத்துப் பூச்சியின் மயிர் போன்ற கால்களில் மகரந்தத்துளி ஒன்று உள்ளது.  அது காய் ஆகலாம், கனியாகலாம். விதையாகி முளைத்துப் பரவி ஒரு பெரும் காடுகூட ஆகலாம்.  காலத்தில் இத்தனை தூரத்தை அதை வாசிக்கும் ஒரு கணத்தில் நீங்கள் பாய்ந்து தாண்டினால்தான் அந்தப் பிரமிப்பு அல்லது ஸ்தம்பிதம் ஏற்படுகிறது.  அதாவது, அது அவ்வரிகளை எதிர்கொள்பவனின் உக்கிரத்தைச் சார்ந்து தீர்மானிக்கப்படுவது.

நவீன உயர் பௌதீகம், முரண்பாடுகளின் மூலம் செயல்பட ஆரம்பித்ததன் விளைவாக ஐரோப்பிய அறிவுச்சூழலில் அதற்கிணையாக கீழை மரபில் உள்ள அரூபமான, முரண்பாடுகளைச் சார்ந்து இயங்குகிற ஞான மரபுகள்மீது ஒரு பரபரப்புமிக்க ஈர்ப்பு ஏற்பட்டது.  இதன் விளைவே ‘சென்’ மரபுக்கு மேற்குலகில் ஏற்பட்ட பிரபல்யம்.  எத்தனை வகையான ‘சென்’ நூல்கள்.  இவற்றின் பாதிப்பு பொதுவான சிந்தனையிலும் கவிதையிலும் ஏற்பட்ட மேலோட்டமான ஒரு கவர்ச்சி (infactuation) தான் என்பது என் எண்ணம்.  தமிழ்க் கவிதையானாலும் ‘ஆனந்த்’, ‘தேவதச்சன்,’ ‘ஷாஅ,’ உங்கள் கவிதைகளிலெல்லாம் உள்ளது இந்தக் கருதுதலின் கவர்ச்சி மட்டுமே என்று எண்ணுகிறேன்.  அசலான அனுபவத்தின் கணங்கள் அல்ல.

இது உங்கள் வாசிப்பின் பிரச்சினை.  எனக்கு இந்தப் பேரனுபவம் பெரும்பாலும் இசை சார்ந்தது.  நுஸ்ரத் ஃபத்தே அலிகான் பாடும்போது, என்னுள் பிரம்மாண்டமான அசைவின்மையை, கால-இட-வெளி முயக்கத்தின் உச்சநிலையைப் பலமுறை அடைந்துள்ளேன்.

நான் அவ்வனுபவத்திலிருந்து விரித்தெடுக்கப்பட்ட உதிரி அனுபவங்களை எழுத முற்படுவதில்லை.  அந்த மூல ஊற்றையே சொல்ல முயல்கிறேன்.  அதை எந்த அறிவுத்துறை தொட்டாலும் சரி, ஏறத்தாழ ஒரே மொழியில் பேச ஆரம்பித்துவிடுகின்றன.  விஞ்ஞானமானாலும் கவிதையானாலும் அதை உருவக மொழியில்தான் கூற முடிகிறது.  உயர் பௌதீகம் கவிதையருகே வருவது இங்குதான்.

நான் வினாவை இப்படித் திருப்பிக் கொள்கிறேன் யுவன்.  கால - இட - வெளி மாற்றம் நிகழ்கையில் ஒரு பித்துநிலை கவிதையிலும் கலைகளிலும் உருவாகிறதே, அது உங்கள் கவிதைகளில் உள்ளதா?

மீறலின் குரல் ஒலிக்குமிடங்கள் எல்லாமே பித்தின் இடங்கள்தான்.  மொழியின் தருக்கத்துள் நின்று பார்க்க முடியாத நிலைதான் கவிதையின் பித்தநிலை என்பேன்.  இது என் கவிதைகளில் பரவலாக இருப்பதாகவே கருதுகிறேன்.

எனினும், “என் கவிதைகளில் என்னென்ன உண்டு; என்னென்ன இல்லை” என்று காண்பது நானே செய்ய வேண்டிய வேலை இல்லை.  ஒரு குறிப்பிட்ட வாசக மனம் கொள்ளும் அனுபவம் மட்டுமே அந்தந்தக் கவிதையைப் பொருத்தவரை மெய்யானது.

மேலும்...

***

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

நன்றி: சொல் புதிது, எனி இந்தியன் பதிப்பகம், jyovramsundar.blogspot.com, யுவன் சந்திரசேகர், ஜெயமோகன்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive