விட்டகலா குருதிக்கறை - கடலூர் சீனு

என் பதின்வயதுகளின் இறுதியில் இந்த உலகை உய்விக்க வந்த இரண்டாம் ரமணர் நான் என்று நம்பி, காவி கட்டி தாடி வளர்த்த மயிராண்டிகள் பலரை சாமியார் என்று நம்பி, அவர் பின்னால் திரிந்து பல கோரஷ்டை அப்பியாசங்கள் வழியே உடலையும் உள்ளத்தையும் மீண்டும் சீர் செய்ய வகை இல்லாத அளவு குலைத்துக் கொண்டவன் நான்.

தூரத்து எதிரொலி போல அதன் விளைவுகள் இன்றும் என்னை தொடர்வன. சில சமயம் உணர்வு மொத்தமும் மழுங்கி அறிவு நிலை கொதித்து எல்லாமே மிக மிக துல்லியம் கொண்டு விடும். எதிர்வரும் நபரின் உடலில் உள்ள மொத்த ரோமங்களின் எண்ணிக்கையை கூட சொல்லி விட முடியும் எனும்படிக்கான துல்லியம் அது. அந்தப் பக்கம் போன ஊஞ்சல் இந்தப் பக்கம் வந்தால் அறிவு முற்றிலும் மழுங்கி உணர்வு மட்டுமே கொந்தளித்துக் கிடக்கும். சிக்னலில் சிகப்பு ச்சிவுக் என மறைந்து பச்சை எரிந்தால் கூட அடி வயிறு திடுக்கிட்டு காது கொய்ய்ய் என்று ஆகி கண்கள் கலங்கி விடும்.

அப்படி உணர்வு கொந்தளிக்கும் தருணம் ஒன்றில் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த என்னை அந்த குறத்திப் பெண் அணுகினாள். சிறிய வயதுதான் பரட்டை தலை. மான் விழிகள், கருத்த உதடுகளின் விளிம்பில் இரண்டு புறமும் வெள்ளையாக மாவுத்துளி போன்ற படிவு, ஊத்தை பற்கள், இடையில் கட்டிய தொட்டிலில் சிறிய பெண் குழந்தை அமர்ந்திருந்தது. அது என்னையே உறுத்து நோக்கிக் கொண்டிருந்தது.

அம்மா, பிச்சை போலும் என்னிடம் கை ஏந்தி "கொயிந்த பஷ்ஷில இருக்குங்கய்யா" என்றாள். நான் பாக்கெட்டுக்குள் கை விட்டு வந்த ரூபாயை எடுத்து கொடுத்தேன். "ஐயா நாங்கோ பிச்சிகாரோ இல்லிங்... இந்த மணி மால வாங்க்கிட்டு காஷ் குடுங்... ஒடம்புக்கு நெல்லது. சூடு போவும்..." என்றாள். அந்த குழந்தை அக்கணம் என்னை நோக்கி ஒரு புன்னகையை மலர்வித்தது. அது வெளியிட்ட குமிண்சிரிப்பினைக் கண்ட அக் கணம் முதல் என்னை சுற்றி என்ன நிகழ்ந்தது, நேரம் என்ன காலம் என்ன என்ற போதமே எனக்கு இல்லாமல் போனது. என்னைச் சுற்றிலும் கூச்சல் பொங்கும் குறவர் கூட்டம். எதிர் டீ கடை மாஸ்டர் என்னை சுட்டி ஏதோ சொல்ல, அவர் கடையில் டீ குடிக்க வந்த காவலர் வந்து குறவர் கூட்டத்தில் இருந்து அவர்களை விரட்டி என்னை மீட்டார். 

எல்லாம் முடிந்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்த மொத்த ரூபாயான முந்நூற்று சொச்சத்தையும் இழந்திருந்தேன். தூரத்தில் விலகி சென்ற கூட்டத்தில் இருந்து அந்த குழந்தை மட்டும் இன்னும் என்னை இட்ட கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டே சென்று மறைந்தது. தீராத கணக்கு ஒன்றிலிருந்து மீண்டும் எழுந்து வந்த அந்தக் குழந்தையின் முகம் மட்டும் என்னுடனே தங்கிவிட...

முன்னர் அத்து அலைந்த காலங்களில் என் மூளைக் கொதிப்பை அடக்க எங்கெங்கோ சென்று ஒளிந்து கிடப்பேன். அப்படி ஒரு சமயம் ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட ஒரு திரைஅரங்கில் திரைக்கு முன்னெ உள்ள வரிசையில் கைப்பிடி உடைந்த சீட்டில், உள்ளத்தால் கைவிடப்பட்ட பாரம் மிக்க உடலினைத் தாளாது சாய்ந்து விழுந்து கிடந்தேன். அன்றெல்லாம் திரைக்கு முன்னே உள்ள முன் வரிசை என்பது, சமூகம் சாக்கடை என்று வெளியேற்றிய உதிரிகளால் ஆனது.

தரையெல்லாம் துப்பிவைத்து காய்ந்த கோழை, என்னென்னவோ கறைகள், நசுக்கிய தீப்பெட்டி அட்டைகள், கரிந்த சிகரெட் பீடி துண்டுகள், பாக்கு பாக்கெட் குப்பைகள், நெடு நாள் வெயிலில் காய்ந்த வைக்கோல் வாடை, கஞ்சா நெடி, மூட்டை பூச்சி கடி இவற்றிடையே விழுந்து கிடந்து, வெள்ளி பூசிய சாக்கு போன்ற திரையில், அழுக்கு வண்ணத்தில் எதுவுமே புரியா வண்ணம் நீள நீள வாக்கில்  தெரியும் உருவங்கள், போங்கு போங்கு, பூம் பூம் என்று முழங்கும் ஒலிக் கூச்சல்கள் இவற்றில் கொண்டு தீக்கோழி போல அகத்தை கொஞ்ச நேரம் புதைத்துக் கிடப்பது எனக்கு ஒரு வகை விடுதலை. மூளையை கவ்வும் அவமதிப்பு, வேதனை, துயர நண்டின் கொடுக்குப் பிடியில் இருந்து சற்று நேரமேனும் விடுதலை.

அத்தகு தருணம் ஒன்றில், கோடை கொதிக்கும் மதிய வேளையில் போக்கிடம் அற்ற ஒரு முப்பது நாற்பது பேர் கிடக்கும் அந்த அரங்கில் படம் துவங்கி ஓடிக்கொண்டிருக்க, ஒரு பதினைந்து அல்லது இருபது பேர் கொண்ட, ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஒரு பூனை உள்ளிட்ட குறவர் கூட்டம் ஒன்று அல்லோல கல்லோல கூப்பாடுகளுடன் என் வரிசையில் வந்து அமர்ந்து வரிசையை நிறைத்தது. என்னைத் தாண்டி எனது புஜத்தை ஒட்டிய வலது புற இருக்கையில் தனது பத்து மாதமோ ஒருவயதோ ஆன குழந்தையோடு இளம் குறத்தித் தாய் ஒருவள் ஓடி வந்து அமர்ந்தாள். அவள் முகத்தில் இயற்கை உபாதை முட்டுவது போல அப்படி ஒரு பாவம். வேகமாக சம்மணம் போட்டு அமர்ந்து, குழந்தையை மடியில் போட்டு, சிணுங்கும் அதன் முகத்தை இடது முலையில் பொத்தி, விசுக் என இடது முலை ஜம்ப்பரை கிழித்து விடுவது போல உயர்த்தி, இடது முலையை விடுவித்தாள்.

திரை ஒளியில், மெல்லிய எண்ணெய் பளபளப்புடன் அமுத பாரம் கொண்டு செழித்த முலையும், அது என்றென்றுமெனக் கொண்ட கனிவும், அது கொண்ட இக்கணத்து தினவும், உண்ண வா என்றழைக்கும் முலைக்கண் துளிர்ப்பும் துலங்க, நெடு நேரம் கட்டி வைத்த ஒன்று பீரிடுவது போல மூன்று நான்கு தாரைகள் என பால் பீச்சி அந்தப் பெண் குழந்தையின் முகம் நனைக்க, குழந்தை சொப்பு உதடுகளால் முலைக்கண்ணைச் சிக் என்று கவ்வி உரிஞ்சத் துவங்க, எழுந்தது மெல்லிய பால் கவுச்சி வாசம். நான் குறத்தியின் முகத்தை பார்த்தேன். அவளும் நோக்கினாள். அதில் ஆசி என நிறைந்திருந்தது அவள் அக்கணம் முலையூட்டி விண்ணக தெய்வங்களுக்கு அவியளித்து அடைந்ததன்  ஆசுவாச ஈடேற்றப் புன்னகை.

இடது பக்கம் கழிவறை நோக்கிய கதவு திறந்து கிடக்க, மூத்திர வாடையும் வியர்வை புழுக்கமும் நிறைந்த, தலைக்கு மேலே ஓய்ந்து கிடக்கும் மின்விசிறிக்கு கீழே சுழலும் தூசிப் புகையில் ஒளி நடனம் புரிய,  பழைய குடோன் போன்ற அந்த அரங்கில் அப்போது முலை மறைக்காத பெண்கள் நிறைந்த ஏதோ அமேசான் காட்டு ஆதிவாசிகளை மையமிட்ட ஆங்கில படம் ஓடிக்கொண்டு இருந்தது. கூட்டத்திலிருந்து  ஒரு குறவன் எழுந்து நின்று எனக்குப் புரியாத மொழியில் திரையை சுட்டி தங்கள் கூட்டத்துக்கு அவ்வப்போது எதையோ விளங்கினான். அப்போது திரையில் பேய் போன்ற உருவத்தில் ஒரு சாமியாடி தோன்ற, அவன் உட்பட எல்லா குறவன்களும் கூச்சலிட்டபடி ஓடி தங்கள் குறத்தியை கட்டிப் பிடித்து பயந்து போய் பம்மி அமர்ந்தனர். அவர்களை நோக்கி ஏதோ சொன்ன என் அருகிலிருந்த இளம் குறத்தி, எழுந்து உறங்கும் தன் குழந்தையை சீட்டில் படுக்க போட்டு விட்டு தன் கூட்டத்தின் முன்னே நின்று திரையை சுட்டி அவர்கள் பாஷையில் மேலும் எதையோ சொல்ல துவங்க, மொத்த கூட்டமும் இப்போது எழுந்து நின்று உரையாடலாக வித விதமாக கூச்சல் இட்டது. பின்னர் நெடு நேரம் நின்றுகொண்டே அவர்களுக்குள் அவர்கள் மொழியில் விவாதித்தபடி படம் பார்த்தனர். ஒரு தருணத்தில் படத்தில் ஏதோ பழங்குடிகள் ஆட்டம் வர, மொத்தமாக குஷியாகி இவர்களும் ஏதோ பாடி ஒத்திசைவின்றி ஒவ்வொருவரும் தனித்தனியாக வித விதமாக ஆடத் துவங்கினர். அதில் ஒருவர் ஏதோ பொருட்கள் நிரம்பிய டப்பாவை ஜல் ஜல் ஓசை எழ தட் தட் தட் என தட்டி ஒலிக்க விட்டு இசை எழுப்பினார்.  படத்தில் காட்சி மாறி விட்டாலும் இவர்கள் தங்கள் ஆட்டத்துக்குள் சிக்கிக்கொண்டவர்களாகி ஆடிக்கொண்டே இருக்க, அரங்கிற்குள் எங்கிருந்தோ எழுந்து வந்த ஒரு முரட்டுக் குடிகாரனும் உள்ளே நுழைந்து அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டான். அக்கணமே ஆட்டம் பிசக, குடிகாரன் உன்மத்தமாகி அருகே இருந்த அந்த இளம் குறத்தியின் இடமுலையை பிடித்து கசக்கி பாவாடையை பிடித்து தூக்க, குறவர் கூட்டம் மொத்தமும் வெகுண்டு எழுந்து திரை ஒலியை விடவும் கூச்சல் குழப்பம் எகிறி, உடலில் எலும்பில் தசையில் வலிய அடிகள் விழும் கூச வைக்கும் ஒலிகளைத் தொடர்ந்து, குடிகாரன் வாங்கிய அடிகளில்  நிலைதவறி என் பக்கத்து இருக்கையில் வந்து சீட் வரிசை மொத்தமும் அதிர, தொம் எனும் ஒலி எழ உடலின் முழு எடையுடன் விழுந்தவாறு அமர்ந்தான். அவன் கீழே பிஞ்சு உடல் மொச் என்று உடையும் ஒலியை என் முதுக்குத்தண்டால் உணர்ந்தேன்.

எவ்வளவு நேரம்...நரமாமிசம் தின்னும் காட்டுவாசிகள் வசம் சிக்கிய வெள்ளைக்காரன் வலி தாங்காமல் வானம் வரை எட்டும் வண்ணம் கூக்குரல் இட்டான்...எல்லோரும் எழுந்து கூப்பாடு போட, அரங்கின் எல்லா கதவுகளும் திறக்க,

காக்கி சட்டை போட்டு கைலியை மடித்து கட்டிய முரட்டு காவலாளி ஒருவன் உள்ளே வந்து, கூச்சல் குழப்பம் ஒப்பரியில் மிதந்த  குடிகாரன் உள்ளிட்ட குறவர் கூட்டம் முழுவதையும், கார்ப்பரேஷன்காரர் தடி கொண்டு வெறி  நாயை அடிப்பது போல, தனது லட்டியால் அடித்து, குப்பைகளை துடைப்பம் கொண்டு பெருக்கி வாசலுக்கு வெளியே தள்ளும் தொனியில் வாசல் வழியே வெளியேற்றலானார். களேபரத்தின் இடையே என் கண்கள் அவளை மட்டுமே பார்த்திருந்தது. நிலைகுலைந்து வீறிட்டு அலறியபடி அந்த இளம் குறத்தி, இடது கையில் வசமற்ற முறையில் பொத்திப் பிடித்த குழந்தையின் உடலுடன் கூட்டத்தில் அல்லாடினாள்.என்னை நோக்கி, விரல்கள் விரித்து வானம் பார்த்த வலது கை நீட்டி, எனக்கு புரியாத அவர்கள் மொழியில்  பிச்சை போலும் ஏதோ கேட்டாள். அல்லது சபித்தாளா? கையாலாகாத என் கண் பட்டுதான் அவள் குழந்தைக்கு இந்த தீங்கு வந்து சேர்ந்தா? அவள் கண்கள் சிவந்து முகம் ததும்பி கண்ணீர் வழிய, அவள் இடது முலை ஜம்ப்பர் மொத்தமும்  பாலூரி நனைந்து கிடக்க, குழந்தையின் முகம் என்னை நோக்கும் வண்ணம் புரண்டு தலை துவண்டு ஆட , அதன் கடை வாயோரம்  உதிரம் கோடென வழிந்து துளியென மண் சொட்டியது. பாதாள தெய்வங்களுக்கான பலியுணவு. துளிக்குருதி.  நான் ஊன் தடி என எதுவுமே செய்யாமல் செய்ய இயலாமல் சீட்டில் விழுந்து கிடந்தேன். ஏழேழு பிறவி எடுத்து நரகில் எரிய வேண்டிய இந்த உடலை செயலற்ற அகத்தால் நோக்கியபடி அங்கேயே அவ்விதமே விழுந்து கிடந்தேன்.

மிகப் பின்னர் வாசித்த யூமா வாசுகியின் கவிதை ஒன்று அன்றைய எனது அத்தனை கொந்தளிப்புக்கும் முகம் அளிக்கும் ஒன்றாக இருந்தது.

தீராத கணக்கு

எதையோ நினைத்தபடி

எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது

சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து

பிச்சை என்று கேட்டாய்.


தெய்வமே அந்தக் குழந்தை

என்னமாய்ச் சிரித்தது....

அதற்கு மாறாக நீ என்

சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்


ஓரிரவில் சாக்கடையோரம்

கொசுக்கள் குதறும் வதையில்

துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி

அய்யா என யாசித்தாய்


உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது

எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....

அதற்குப் பதில் நீ என்னை

அடித்துப் பிடுங்கியிருக்கலாம்


பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படிச் செய்தாயே,


பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது...

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்


இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்

அனாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று

இரந்து நிற்கிறாய் இன்று


புவி சுமக்க முடியாத பாரமாக இது

எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது.....


அய்யோ அய்யோ என்று

பதறி அழிந்தபடியே

ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து

உன்னைக் கடந்து போகின்றேன்


தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க

ஏன் உனக்குத் தெரியவில்லை.

***

யூமா வாசுகி தமிழ் விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive