இன்மைகளின் வலிகளின் நோய்மையின் அழகியல் - சமயவேல்

வெகு காலத்திற்குப் பிறகு முழுக்கக் கவித்துவம் ததும்பும் தனித்துவமானதொரு கவிதைகள் வே.நி.சூர்யாவின் கவிதைகள். நோய்மையிலும் வலியிலும் கூட இயற்கையோடு கைகோர்த்து மரணத்தையும் தனக்குள் அடக்கிக்கொள்ளும் வாழ்வின் மகத்துவத்தை, கவிதைகளாக்கியிருக்கிறார் சூர்யா. இவரது ஆழ்ந்த வாசிப்பும் கவிதைகள் மேலான அபரிமிதமான ஈடுபாடும் புதிய பா வகைமையை உருவாக்கியுள்ளன. கவிதைகளென ஏராளமாக அச்சாகிக் குவியும் இந்நாளில், வாழ்தலின் அனுபவங்ளை எவர் போலவும் இல்லாமல் தன்போக்கில் எழுதப்பட்ட அற்புதமான கவிதைகள் இவரது ‘கரப்பானியம்’  ‘அந்தியில் திகழ்வது’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இருக்கின்றன. புராதன நகரம் திருநெல்வேலியில் இருந்து விடுபட்டு கன்னியாகுமரிக் கடற்கரை ஊருக்குக் குடியேறியது இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. 

இருவேறு உலகங்களை இணைக்கும் அந்திப் பொழுது இருமை இணைவின் அழகியலாக மாறுகிறது. ஒளியையும் இருளையும்,  விழிப்பையும் உறக்கத்தையும், சூரியனையும் விண்மீன்களையும் இணைக்கும் அந்தி, சற்று நேரம் மயங்குகிறது. பறவைகளும் விலங்குகளும் மனிதர்களும் என எல்லா உயிர்களும் மயங்குகின்றன. அந்திப்பொழுது மாறுதலின் வலியை அழகியலாக மாற்றுகிறது. ரில்கேயின் புகழ்பெற்ற கவிதையான ‘அந்தி’யில், ‘இரண்டு உலகங்கள் உன்னைவிட்டு நீங்குகின்றன’ என்கிறார். கவிதையின் கடைசி வரி:  ‘உனது வாழ்க்கை, ஒரு நொடி உனக்குள் ஒரு கல், அடுத்த நொடி அதுவொரு நட்சத்திரம்.’ நாகர்கோவிலைச் சுற்றியுள்ள கடற்கரைகளும் அந்திப்பொழுகளும் சூர்யாவின் ‘கற்களை’ தங்க நாணயங்களாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. இரும்பையும் மகிழ்ச்சியாக உண்டு செரிக்கும் வல்லமையை கவிதை வழங்கும் அதிசயத்தை வே.நி.சூர்யாவின் "அந்தியில் திகழ்வது" தொகுப்பில் காண்கிறோம். 

“பிரிவைச் சந்திப்பு என்றும் சொல்லலாமா” என்று ஒரு கவிதை இவ்வாறு முடிகிறது. 

தொலைவு களைந்து 

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

பின் ஒரு சொல்கூடப் பேசவில்லை

வெறுமனே

பார்த்துக்கொண்டிருந்தோம் 

ஒவ்வொரு அலையும் இன்னொரு அலையை 

எப்படியெப்படியெல்லாம் பிரிகின்றன என்று. 

இங்கே பிரிதல் வலியில்லை. அனைத்தையும் ஏற்கும் ஆன்மபலம் கவிக்கு மிக இயல்பாகக் கூடுகிறது. பிரிதலை எண்ணி எண்ணி புலம்பும் கவிகளிடம் இருந்து சூர்யா வேறுபடும் இது.  

‘பாடல்’ என்ற கவிதையில்,

சந்தித்தால் பிரிய நேரிடும் இன்ப வடிவே,

ஆதலால் சீவனுக்கு எட்டாமல்

ரகசியமாகவே இரு எனது மரண தேதியைப்போல

உன்னை எண்ணி எண்ணி

அப்போதுதான் என்னைப்

பிரமாதமாக

அழித்துக்கொள்ள முடியும் எனக்கு.

என்று மரணமும் பிரமாண்டமான அழிவும் சூர்யாவுக்கு தன்விருப்பமாக அமைகிறது. இது வரையிலும் நாம் தமிழில் வாசிக்காத மனநிலை.

“இறுதியில் யாவுமே தருணங்கள்தானா” என்பது ஒரு மிகப்புதிய அமைப்பிலான பத்துப் பகுதிகள் கொண்ட வடிவான கவிதை. ஒன்பது எதிரெதிர் விசாரங்களும் பத்தாவதாக இவ்விதம் வெகு அழகாக முடிகிறது. 

அமைதியாக இரு

அமைதியாக இரு

இந்த அகத்துடனும் சரீரத்துடனும்

நான்

இப்போதுதான் பிறந்திருக்கிறேன்.

முக்கிய பரிசோதனைகளுக்கும், கிளை கிளையாய் பிரிந்து விரிந்து அயர்ச்சி தரும் விவாதங்களுக்கும், பெரும் விசாரத்துக்கும் வலிக்கும் அழுகைக்கும் பின்னால் அகமும் சரீரமும்  இணைந்து ஓர் உயிர் தோன்றிவிடுகிறது. வீடே, தெருவே, ஊரே கொண்டாடும் தருணம் இது. இறுதியில் எல்லாம் தருணங்களே என்றாகின்றன.  

பல்வகை நோய்மை குறித்தும் அவற்றிலிருந்து விடுதலை அடைவது குறித்தும் எழுதப்படும் எழுத்துக்களே இலக்கியம் என்று நான் கருதுகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு நோய்மை உலகையே பிடித்தாட்டுகிறது. ஜெர்மனியில் ஒரு குறிப்பிட்ட மனிதனை அதிகார வெறி, இன வெறுப்பு ஆகிய நோய்கள்  பிடித்து ஆட்டியபோது, இரண்டாம் உலகப்போர் மூண்டது. எவ்வளவு கொடூரங்கள்? எவ்வளவு உயிர்களை நாம் இழந்தோம்? ஹிட்லரைத் தொடர்ந்து ஸ்டாலினியப் போர்களால் சின்னஞ்சிறிய நாடுகளில் எவ்வளவு மரணங்கள்? எல்லாமே திரள் மனநோய்களே.  

காஃப்கா, நாஜிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டது போக இறுதியில் காச நோயாலும்  பீடிக்கப்படுகிறார். காச நோய் ஏற்பட்டு சானடோரியங்களில் இறுதிக் காலத்தைக் கழித்த பல கவிகளையும் எழுத்தாளர்களையும் பற்றி நாம் வாசிக்கிறோம். காச நோய்க்கு சரியான மருந்தும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு கவி அந்தக் காச நோய் பற்றியே கவிதை எழுதுகிறார். வே. நி. சூர்யாவின் “காச நோய்க்கு ஒரு பாடல்”  கவிதை, மகத்தான அற்புதம். 1970களில், என் சகோதரி ஒருவர், காச நோய்க்கு ஒரு நுரையிரலை இழந்து இறந்த நாட்களை நான் இன்னும் மறக்கவில்லை. எத்தனை வகையான மாத்திரைகள்? எத்தனை தூங்காத இரவுகள். சானடோரியத்தின் ஒவ்வொரு ஜன்னலிலும் இருந்தும் கசியும் துயரமும் தாங்க முடியாதவை. அந்தக் காலங்கள் எல்லாம் மறைந்து போயின. 

ஆனாலும் காசநோயே

நான் எப்போதும் இப்படித்தான்

நன்றிகெட்டு விடைகொடுக்கிறேன்

விடைபெறுகிறேன்

அழுகிறேன் எச்சில் வடிக்கிறேன்

சமயங்களில் திருதிருவென முழிக்கிறேன்

என் வேர்கள் பலவீனமானவை

சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூடத் தெரியாதவை

அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்

நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன

ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு

மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்

கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே

இவை உன் கைங்கரியம்தானா

அறியேன் அறியேன் அறியேன் 

இப்போது நாம் வே.நி.சூர்யாவின் தியான மண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறோம். அது, “நோயை எதிர்கொள்ளல்” என்று கட்டுரை எழுதிய நித்ய சைதன்ய யதியின் தியான மண்டபமாகவும் இருக்கலாம். உண்மையில் ‘தியான மண்டபம்’ என்னும் கவிதையும் எனக்குப் பிடித்த கவிதை. 

ஒன்றுவிடாமல் அத்தனையும்

மூச்சினை ஆழமாக உள்ளிழுத்து மெல்ல வெளிவிடுகின்றன

இப்போது ஒரு தியான மண்டபமென எழுகிறது

அதனுள் நான் அமர்கிறேன்

என்னுடன் அங்கே அனைத்தும் அமர்கின்றன

மாலை 06.56க்கு நிகழும் இந்தக் கவிதையில் முழு பூமியும் தியான மண்டபம் ஆகிறது. அந்த மண்டபத்துக்குள் அத்தனை உயிர்களும் தியானம் செய்கின்றன. இந்த மண்டபத்தின், 

கீழறையில் ஒரு காகிதத்தில்

சொற்களாக அதனிடை வெற்றிடங்களாக

ஒரு கரத்தினால் எழுதப்படுகிறேன்

ஒர் அமைதி 

நிறுத்தற்புள்ளி போல.

என்னவொரு அற்புதமான அனுபவம். 

வே. நி. சூர்யாவின் வாசிப்பை நான் நேரடியாக அறிவேன். உலகின் மிகச் சிறந்த கவிகளை எல்லாம் அவர் தேடித் தேடி வாசித்து வருகிறார். வாசிப்பு முறைகளிலேயே மிகச் சிறந்தது ‘மொழிபெயர்ப்பதன் மூலம் வாசிப்பது’ என்பதை அறிந்திருப்பதால், சூர்யா கவிதை மொழிபெயர்ப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மிகச் சிறந்த உலகக் கவிதைகள், சூர்யாவின் அகத்தில் ஆன்ம பெலத்தை உருவாக்கியிருக்கிறது. அவரது தலை முட்ட, வயிறு முட்ட, மனசு முட்ட கவித்துவத்தை  நிரப்பியிருக்கிறது. ‘அந்தியில் திகழ்வது’ தொகுப்பு முழுவதுமே அவரது ஆன்மாவின் விகசிப்பதைக் கேட்க, உணர முடியும். 

‘ஒளி மனிதன்’ என்னும் கவிதையில்  

தேநீர் மேசையின் எதிர்புறத்தில் அமர்ந்திருக்கும், ஒட்டுமொத்த அண்ட சராசரத்துடனும் மொழியின்றி 

பேச்சைத் துறந்து பேசிக்கொண்டிருக்கும் ஒருவன் 

கடற்கரை ஒரு மெத்தை என்றாகச் 

சோர்ந்து சுருண்டு தனக்கு வெளியே படுக்கத்துவங்குகிறான்

என்று எழுதுகிறார். தனக்கு வெளியே தான் எப்படி படுக்க முடியும்? 

அச்சு அசலாய் 

மானுட உருவில்

ஓர் உடுத்தொகுதி 

என்று கவிதை முடிகிறது. ஒளி மனிதன் என்பவன் அந்த உடுத்தொகுதி. 

இப்படி ஒவ்வொரு கவிதையையும் அனுபவித்து வாசிக்க வேண்டும். மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புக்கு ‘விமர்சனம்’ எழுதுவது அபத்தமானது. வாசித்து, மீண்டும் மீண்டும் வாசித்து,  உணர்ந்து அனுபவிக்க வேண்டும். 

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்


அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive