புனைப்பெயரும், உடல் மொழி அடையாளமும் கவிஞனின்
தனிச் சிறப்பானது.
ஞானக்கூத்தன் (ஆர். ரங்கநாதன்), தேவதேவன்
(பிச்சுமணி கைவல்யம்), தேவதச்சன் (ஏ.எஸ். ஆறுமுகம்), விக்ரமாதித்யன் (அ. நம்பிராஜன்),
கலாப்ரியா (டி.கே. சோமசுந்தரம்) என அதற்கு அடுத்து ஜெ. ப்ரான்சிஸ் கிருபா, போகன் சங்கர்
(கோமதி சங்கர்) வரை ஒரு பட்டியல் எழுதலாம். இதில் தேவதேவனும், விக்ரமாதித்யனும் சிறந்த
உதாரணம். தேவதேவனின் தோள்பை (அவரை பார்த்தால் கவிஞனா? கூட்டத்தால் தொலைக்கப்பட்டவரா?
என்ற குழப்பம் அவரே மற்றவரிடத்தில் உருவாக்குவார்), விக்ரமாதித்யன் தன் தோற்றத்தாலே
தான் ஒரு கலகக்காரன், ஞானி, சாமானியனல்ல, இங்குள்ளவர்களுடன் நானில்லை என்று தன்னை நிலைநிறுத்திக்
கொண்டார்.
தன்னை மறந்துவிட்டால்
தன்னை மறந்துவிட்டால்
கவிஞன்
தன்னைக் கடந்துவிட்டால்
சித்தன்
தன்னை அழித்துவிட்டால்
தெய்வம்
தன்னிலேயே உழன்றுகொண்டிருக்கிறார்கள்
பாமரர்கள்
-
விக்ரமாதித்யனின் கவிதை
-
சங்கு இதழில் வெளிவந்தது (மே 2008)
தமிழில் ஒவ்வொரு கவிஞனும் கவிதை வழியாக தன்னை
புனைந்திருக்கின்றனர். அல்லது புனைந்துக் கொண்ட தன்னுரு வழியாக கவிதையை வெளிப்படுத்துகின்றனர்.
இது கவிஞன் தன் கவிதைக்காக உருவாக்கிக் கொண்ட அகவெளி எனச் சொல்லலாம். அதன் வழியாக கவிஞன்
தன் கவியுலகை தனக்கே நிறுவிக்கொள்கிறான்.
ஆனால் சமகால கவிஞர்கள் அந்த அகநாடகத்தை தங்களுக்காக
ஏற்படுத்திக் கொள்வதில்லை. அது தங்கள் உருவிற்கு பொருந்தாத சட்டை என நினைக்கிறார்கள்.
எனக்கு நெருக்கமான நான் அணுகி அறிந்தவரான கவிஞர் மதார் இதே ரகம் தான்.
கவிஞன் என தனக்கான புனைப்பெயரையும், புனைவுருவையோ
ஏற்படுத்திக் கொண்டவரில்லை. பொதுவெளியில் தன்னை கவிஞராக கூட வெளிகாட்டியவர் அல்ல. அவரை
நேரில் நெருங்கி அறிந்தவன் என்ற முறையில் அவரை நான் பொதுவெளியில் கிராம நிர்வாகியாக,
மகனாக, கணவனாக, தம்பியாக, தந்தையாக, தோழனாக, பேருந்தில் சக பயணியாக, நல்ல இலக்கிய வாசகனாக
கண்டிருக்கிறேன். கவிஞனாக மட்டுமல்ல.
மதார் கவிஞனாக வெளிப்படுவது கவிதையில் மட்டும்
தான். அது ஒரு இயல்பு, வரம். எரிமலைக் குழம்பு
வெடிக்கும் கணத்திற்கும் முந்தைய கணம் வரை சாதாரண மலைப் போலவே காட்சி தரும். அது போல
தான் மதாரின் இயல்பும். அவர் எப்போதும் சாமானியர்களுள் ஒருவராக, மக்களோடு தினமும் புழங்கும்
ஒருவராகவே தன்னை முன்வைத்திருக்கிறார்.
அப்போது எந்த அம்சம் அவரை கவிஞனாக நிறுவுகிறது
எனக் கேட்டால் தன்னை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் அந்த அம்சம் என்று சொல்வேன். மேலே
சொன்னவர்கள் புறவுலகிற்கு நடித்துக் காட்டிய அந்த நாடகத்தை மதார் தன்னுள் ஒளித்து வைத்து
நடிக்கிறார். அதன் வழியே புறவுலகை இன்னும் ஜாக்கிரதையாக, தீவிரமாக கவனிக்கும் இயல்பையும்,
சுதந்திரத்தையும் மதார் பெற்றிருக்கிறார்.
அந்த மேலும் கூர்மையான புறவுலகே அவரிடம் மொழியாகும் போது கவிதை என்றாகிறது. மற்ற சமகால
கவிஞர்களிடத்திலிருந்து மதாரை ஒரு படி விலக்கி தனித்துவமாக காட்டுவது இந்த இயல்பு தான்.
தேவதேவனிடமும் இந்த இயல்பு உண்டு. அதனாலே மற்ற
நவீன கவிஞர்களுடன் ஒட்டாத தனித்தவராக இன்றும் தேவதேவன் இருக்கிறார். மதாருக்கும் தேவதேவனுக்கும்
உள்ள நேரடி ஒற்றுமையென்பது இது தான். அவர்கள் தங்களுக்குள் உள்ள கவிஞனை, குழந்தையை
பேணிக் கொள்கின்றனர். அதன் வழியாக உலகை காணும் பார்வையை அடைகின்றனர். அதன்பின் அதனை
மொழியாக்குகின்றனர்.
தேவதேவனுடன் நடையோ, பயணமோ சென்றவர்களுக்கு
தெரியும் அவர் ஒவ்வொரு காட்சியாக ரசித்து நகர்பவர் என்று. ஒருமுறை லடாக்கில் இமயமலை
பனிக்கட்டையை கண்டு ஆசைக் கொண்டு அதனை எடுத்து தன் பையில் வைத்துக் கொண்டார். (அவர்
தோள்பையுடன் சேர்த்து கார் மொத்தமும் நீரானது வேறு கதை). மதாரிடமும் அதே இயல்பு உண்டு.
ஆனால் நான் முன்னர் சொன்னது போல் அவர் அனைத்தையும் கவிதையில் மட்டுமே வெளிப்படுத்துவார்.
இதனால் இவர்களது கவிதை எவ்விதம் தனித்துவமாகிறது
என்பது அடுத்த கேள்வி. இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்று, கவிதையிலிருந்து கவிஞன்
முழுக்க தன்னை விலக்கிக் கொண்ட பிறகு தமிழில் நவீனத்துவ கவிதை உருவாக்கிய இறுக்கமும்,
கசப்பும் இல்லாமல் ஆகியிருக்கிறது. கவிஞனுக்கேயான துன்பமும், சுய பச்சாதாபமும், இருத்தலியல்
சிக்கலும் சமகால கவிதையிலிருந்து காணாமல் போயின.
மதாரின் கவிதையில் அரசியல் ஒரு பேசு பொருளாகவே
இல்லை என்பதாலே ஆத்மநாம் போல் ஓங்கி ஒலிக்கும் தன்மை இல்லாமல் ஆகிவிடுகிறது. ஜெ. பிரான்சிஸ்
கிருபாவை போல் கசப்பும் இல்லாததால் அதற்கான கனத்தையும் இழந்துவிடுகிறது.
பிறகு மதார் கவிதைகளை தாங்கி பிடிக்கும் சக்தி
எதுவென கேட்டால் அவரிடமுள்ள அந்த எடையின்மையே என நான் சொல்வேன். நாம் இத்தனை நாள் நம்
தலைக்கு மேலே தூக்கி சுமந்த யானையது. இப்போது அதனை இறக்கி வைத்தாயிற்று. இனி அதனுடன்
விளையாடலாம். அல்லது அதன்மேல் சவாரி செய்யலாம் என அதனை எதிரில் பார்த்து துள்ளி குதிக்கும்
குழந்தையின் எளிமையே மதார் கவிதைகள் எனச் சொல்லலாம்.
இரண்டாவதாக, இந்த எடையின்மையை தாங்கும் பலமென்பது
கவிஞனின் கூரிய புறவுலக அவதானிப்பு. இந்த இரண்டு புள்ளிகளும் முயங்குமிடம் ஒன்றுண்டு.
அதனை எளிமையும், கூர்மையும் எனச் சொல்லலாம். இது கவிஞர்களிலே கூட மிகச் சிலருக்கு வாய்க்கிறது.
மதாரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவிருக்கிறது. முதல் தொகுப்பிலிருந்து இரண்டாம் தொகுப்பிற்கு மதார் எடுத்துவைத்திருக்கும் நகர்வு என ஒன்றைச் சொல்லலாம் என்றால் நான் முன்னர் சொன்ன அந்த எளிமையும், கூர்மையும் இன்னும் கூர்தீட்டியிருக்கிறார்.
***
முழுதாகக் கரைந்த ரப்பர்
ஒரு மரம் நிற்கிறது
அதைக் கடந்து
ஒரு பேருந்து செல்கிறது
அழிரப்பரைப் போல்
மரம் அழியவே இல்லை
டுவீலர்கள்
சென்று பார்க்கின்றன
மரம் நிற்கிறது
அதே இடத்தில்
சாலையின் இருமருங்கும்
வாகனங்கள்
மாறிமாறி
அழித்துப் பார்க்கின்றன
அழிவதாய் இல்லை மரம்
ஒரு லாரி
முட்டி மோதிப் பார்த்தது
உதிர்ந்தன
சில இலைகள்
***
கண்ணை மூடிக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்
எங்கும் ஒரே நிறம்
வானை பார்த்துக்கொண்டே
இருந்த பொழுது
குருடனானேன்
எங்கும் ஒரே நிறம்
போகிற போக்கில்
பார்வை தந்து போனது
ஒரு பறவை
***
மெய்ப்புப் பார்த்தல்
கனவை மெய்ப்புப் பார்த்தேன்
நனவை ஒப்பிட்டு
வரிக்கு வரி பிழை
அடித்தல்கள்
இப்போது
நனவை மெய்ப்புப் பார்க்கிறேன்
கனவின் மூலப் பிரதியுடன்
- வெளிவரவிருக்கும் தொகுப்பிலிருந்து
***
மேலும் ... (இரண்டாவது தொகுப்பு பற்றி அடுத்த இதழில்)
***
0 comments:
Post a Comment