சங்க இலக்கியம் - ஒரு பார்வை - க.நா.சு

இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்கம்’ எனும் சொல், இவ்விடத்தில் அறிஞர்கள் கூடிய மன்றத்தைக் குறிக்கிறது. சங்கப்பாடல்கள் என்ற பெயர் வருவதற்கு  ஏழாம் நூற்றாண்டில் உருவாகி நிலைபெற்றுவிட்ட ஒரு கதையே காரணமாகும். இக்கதையாடல் பின்னர் அதிக நம்பகத்தன்மை பெற்றதோடு பல விளைவுகளையும் உண்டாக்கியது. மூன்று சங்கங்களின் கதை ஒரு புராணக் கதை என்ற அளவில் மட்டுமே கருத்தில் கொள்ளத்தக்கது. தமிழ் இலக்கியம் குறித்த வரலாற்றாய்வில் பொருட்படுத்தும் அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அதில் சிறிதளவு உண்மை இருக்க வாய்ப்பிருந்தாலும், அதன் அளவும் துல்லியமும் இன்றைய நிலையில் மதிப்பிட முடியாதவை.

தமிழ் மரபு நமக்குக் கையளித்துள்ள கதைகளின்படி, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சங்கங்கள் செயல்பட்டுள்ளன. கடவுளரும் முனிவரும் பிற மக்களும் பங்குகொண்டு நடைபெற்ற முதல் சங்கம் தென்மதுரையில் 4,450 ஆண்டுகள் நீடித்தது. கடல்கொள்வதற்கு முன்பான லெமூரியா கண்டமே இச்சங்கம் இயங்கிய இடம். இரண்டாவது சங்கம் நடைபெற்றதோ வடக்கே உள்ள கபாடபுரத்தில். அதுவும் தற்போது கடல்கொண்டுவிட்ட இடமாகும். 3,700 ஆண்டுகள் நீடித்த இச்சங்கத்தில் கடவுளர் இருக்கவில்லை. ஆனால் முனிவர்களும் மக்களுமே பங்குகொண்டனர். இறுதியாக நடந்த மூன்றாவது சங்கமே தற்போது உள்ள மதுரையில் இருந்தது. 1,850 ஆண்டுகள் நீடித்த அச்சங்கத்தில் 49 பேர் மட்டுமே பங்குகொண்டதாகச் சொல்லப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் இம்மூன்று சங்கங்களுக்கும் ஆதரவளித்து புரவலர்களாக இருந்துவந்தனர்.

தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலப் படைப்புகள் எதிலும் இந்தச் சங்கங்கள் குறித்தோ அதன் செயல்பாடுகள் குறித்தோ எவ்விதக் குறிப்பும் இல்லை. அதே சமயம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வஜ்ரநந்தி சங்கம் என்ற பெயரில் கற்றலுக்கான சமண மையம் ஒன்று உருவாகி, பெரிய அளவில் செயல்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஒருவேளை தமிழர்கள் உருவாக்கியிருக்கும் தொன்மக் கதைக்கு இதுவொரு அடிப்படைத் தூண்டுதலாக இருந்திருக்கலாம். காலத்தால் மிகவும் முற்பட்ட சங்கம் எனும் கருதுகோள் இன்று பொதுவாக  ஏற்கப்படாவிட்டாலும், ஆரம்பகாலத் தமிழ்க் கவிதைகளுக்கு ‘சங்கப்பாடல்கள்’ எனும் பெயரே வேறெந்த பெயரைக் காட்டிலும் ஏற்புடையது. மேலும் அதுவே மரபாக வழங்கிவந்து நிலைத்துவிட்ட பெயராகும். இதுவரை அறியப்பட்ட தமிழ் நூல்களிலேயே தொன்மையானதான தொல்காப்பியம் தொடக்ககாலத் தமிழ்க் கவிதைகளின் வரிசையில் சேர்க்கப்படுவதில்லை. அதுவொரு இலக்கண நூலாக இருந்தாலும் வழக்கமான இலக்கண நூல்களைப் போன்றதல்ல. சொற்சேர்க்கை, வாக்கிய அமைப்புக்கான விதிகள் முதலானவை குறித்து அது ஓரளவு பேசினாலும், அதைக் காட்டிலும் கூடுதலாக கவிதைக்கான பேசுபொருள் குறித்தும் இலக்கிய மரபுகள் குறித்தும்தான் பேசுகிறது. சங்கப்பாடல்கள் பொது யுகம் முதலாம் நூற்றாண்டு வாக்கில் உருவாகி வந்திருக்கலாம். அதன்பின்னர் அதற்கு அடுத்து வந்த ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளில் அவையெல்லாம் தொகுக்கப்பட்டு, மொத்தமாக சுமார் 26,000 வரிகளுடன் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு என தற்போதுள்ள வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். இது மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கலாம்.

நான் எட்டுத்தொகையை மட்டும் தற்போதைய பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன். அவற்றுள் இரு தொகுப்புகள் காலத்தால் பிற்பட்டவை என்ற கருத்து பரவலாக ஏற்கப்பட்டது. எனவே அவற்றை விட்டுவிடலாம். மீதமுள்ளவை ஆறு தொகைநூல்கள். அவை பின்வருமாறு:

1. அகநானூறு: 400 பாடல்களின் தொகுப்பு. மரபான காதலைப் பேசுபொருளாகக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 13 முதல் 31 அடிகள் வரை உள்ளன.

2. நற்றிணை: காதலைக் குறித்த 400 பாடல்களின் தொகுப்பு. ஒவ்வொன்றும் 8 முதல் 12 அடிகள் வரை கொண்டது.

3. குறுந்தொகை: 400 காதல் பாடல்கள். ஒவ்வொன்றும் 4 முதல் 8 அடிகள் வரை உள்ளன.

4. ஐங்குறுநூறு: 500 காதல் பாடல்கள். ஒவ்வொன்றின் அளவும் 3 முதல் 6 அடிகள் வரை மட்டுமே.

5. பதிற்றுப்பத்து: பத்துப்பத்து செய்யுள்கள் கொண்ட பத்துப் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நூறு பாடல்களின் தொகுப்பு. ஒவ்வொரு பாகமும் சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னனின் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் பேசுகிறது. இத்தொகுப்பின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

6. புறநானூறு: 400 பாடல்களின் தொகுப்பு. காதலைத் தவிர்த்த பிற பேசுபொருள்களைக் கொண்ட பாடல்கள் என்று சொல்லலாம். 4 முதல் 40 அடிகள் வரை நீள்பவை.

மற்ற இரண்டு தொகுப்புகளான பரிபாடலும் கலித்தொகையும் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுவதால் அவை இந்த வரிசையில் சேர்க்கத்தக்கவை அல்ல. இருப்பினும் எட்டுத்தொகை எனும்போது இவ்விரண்டு தொகுப்புகளையும் சேர்த்தே குறிப்பிடுவது மரபு.

மேற்கண்ட ஆறு தொகுப்புகளில் உள்ள கவிதைகளை, இத்தனை காலமாக அவற்றின் மீது ஏற்றப்பட்ட கதைகளையும் உரைகளையும் உதிர்த்துவிட்டு, கவிதைக்கான அழகியல் நோக்கில், கவிதைகளாக மட்டும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்த ஆறு தொகுப்புகளில் உள்ள இரண்டாயிரத்து இருநூறு பாடல்களுக்கும் அவற்றுக்கே உரிய பண்புநலனும் தரமும் உண்டு. அவை நாகரிகத்தின் தொடக்க கால சமூகத்தைப் பேசுகிறது. இருப்பினும், இலக்கிய வழக்குகளுக்கும் அன்றாடத்தின் நடைமுறை வாழ்க்கைக்கும் நடுவே உள்ள இடைவெளியை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்கூட அது எவ்வகையிலும் பண்பாட்டு முதிர்ச்சியற்ற சமூகத்தைச் சித்தரிக்கவில்லை. இப்பாடல்களில் வெளிப்படும் சமூகவியல் கூறுகளின் முக்கியத்துவத்தை கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள் பலவாறாக அடையாளப்படுத்தியும் பட்டியலிட்டும் வந்துள்ளனர். உ. வே. சாமிநாதையர் மற்றும் சி. வை. தாமோதரம் பிள்ளை போன்றோரின் அசாத்திய முயற்சியால் திட்டவட்டமான, போற்றுதலுக்குரிய பதிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே சங்கப்பாடல்களில் வெளிப்படும் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வை சமூகவியல் நோக்கில் ஆராயும் இப்பணி எவ்வித தடையுமில்லாமல் நடைபெற்று வருகிறது.

ஆனால் வழக்கமாக சங்கப்பாடல் தொகுப்புகளில் அதிகமும் தவறவிடப்படுவது அதன் கவிதை அம்சம்தான். அவை எந்த காலத்தில் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டு இந்த வடிவை அடைந்திருந்தாலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்பட்ட சிறந்த கவிதைகள் சிலவற்றுள் அவையும் அடங்கும். இத்தொகுப்புகளில் உள்ள இரண்டாயிரத்தி சொச்சம் பாடல்களில், நான்கில் ஒரு பங்கு நல்ல கவிதையாகவும் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கு மகத்தான கவிதைகளாகவும் சொல்லிவிட முடியும். தமிழ்க் கவிதை அடைந்த சாதனையின் சுவடுகள் அவை. அவற்றைக் குறித்து நாம் மேலும் சிந்திக்கலாம்.

அனைத்துக் கவிதைகளும் ஒரு மனதால், ஒரே கவியால் எழுதப்பட்டதல்ல. நற்றிணையில் 175 கவிகளின் ஆக்கங்கள் உள்ளன. குறுந்தொகையில் 205 கவிகளின் பாடல்களும் ஐங்குறுநூற்றில் 5 கவிகளின் பாடல்களும் புறநானூற்றில் மொத்தம் 157 கவிகளின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் பதிற்றுப்பத்து அளிக்கும் வெவ்வேறு நிகழ்வுகள், அரசவை அதிகாரிகள் தொடர்பான தரவுகளையும் இணைத்துப் பார்க்கும் பொழுது அக்காலகட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து பார்ப்பதற்கான சிறந்த மூலப்பொருட்களாய் இவை உள்ளன. இத்தொகுப்புகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண் படைப்பாளிகளும் உள்ளனர். சில கவிஞர்கள் இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தொகுப்புகளில்  இடம்பெற்றுள்ளனர்.

சங்கப்பாடல்களை அழகியல் நோக்கில் கவிதைகளாக அணுகுவதை பின்னால் வந்த கற்று தேர்ந்த உரையாசிரியர்கள் சற்று சிரமமான காரியமாக ஆக்கியுள்ளனர். உரையாசிரியர்களோ காலத்தால் மிகவும் பிந்தி வந்தவர்கள். கவிஞரின் அனுபவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு தளங்களிலான தங்கள் கற்றல் அனுபவத்தை அவர்கள் தங்கள் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றுள் சில உரைகள் மிகவும் எடைமிக்கவை. பல எளிய கவிதைகள் அவற்றின் எடையைத் தாங்குவதில்லை. கவிஞர்களின் காலத்திலிருந்து குறைந்தது ஆறிலிருந்து எட்டு நூற்றாண்டுகள் கழித்தே  உரையாசிரியர்களின் காலம் வருகிறது. வாழ்க்கைமுறை, சிந்தனைப்போக்குகள் அனைத்தும் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கும். வெவ்வேறு அறிவுத்துறைகளிலிருந்து அவர்கள் கொண்டுவரும் பலதரப்பட்ட தரவுகளால் உரையாசிரியர்கள் இன்றளவும் நம்மை வியப்பிலாழ்த்தத் தவறுவதில்லை. வேர்ச்சொல்லியல், கலாச்சாரம், கலை, மதம் மற்றும் மதம் கடந்த தகவல்கள் என தகவல்பெருக்கத்தால் கவிஞர்களின் எளிய வரிகளில் நாம் அடையக்கூடிய நேரடிப் புரிதலும்கூட பலசமயம் தடைப்பட்டுவிடுகிறது. இது ஷேக்ஸ்பியரின் கவிதையை அடைய, அவரது எழுத்தின் பகுதியாக பல்வேறு விளக்கவுரைகளையும் பொருளுரைகளையும் சேர்த்து வாசிப்பதைப் போன்றது.

நவீனத் தமிழ்க் கவிதையின் வாசகருக்கு சங்கப்பாடல்களை முதன்மையாகக் கவிதை நோக்கில் அணுகுவதில் உள்ள பெரிய சிக்கலே இதுதான், இது எல்லா காலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாசகருக்கும் ஓரளவு பொருந்தும். இதன்மூலம் உரையாசிரியர்களின் தகுதியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை, பலசமயம் அவர்கள் கவிஞர்களைவிடவும் கற்றறிந்தவராக இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்குண்டு. ஆனால் அவர்களின் பாண்டித்யம் ஒரு கவிஞனின் சொல்லுக்கும் அதன் நல்ல வாசகருக்கும் இடையே குறுக்கிடக் கூடாது.

உதாரணமாக டாக்டர் சாமிநாதையரின் தேடலில் குறுந்தொகைக்குப் பழைய உரைகள் ஏதும் கிடைக்காதபோது அவர் சோர்வுற்றுவிடவில்லை. அதைத் தானே எழுதுவதாக முடிவுசெய்தார். அது எவ்வகையிலும் மரபான பழைய உரையாசிரியர்களிடமிருந்து மேம்பட்டோ அல்லது மேலும் தெளிவை அளிப்பதாகவோ இருக்கவில்லை. அதன்வழி வாசகருக்கும் கவிதைக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத சுவர் ஒன்றை அவர் எழுப்பிவிட்டார். டாக்டர் சாமிநாதையரின் ஆதரவாளர்களேகூட குறுந்தொகையின் சிறந்த கவிதைகளுக்கு அவரால் நல்ல உரை அளித்துவிட முடியும் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சாமிநாதையரை அவமதிக்கும் நோக்கிலோ அவரது பங்களிப்பைச் சிறுமைப்படுத்தும் நோக்கிலோ இதைச் சொல்லவில்லை. மாறாக ஒருவரின் பாண்டித்யம் அவரது அழகியல் பார்வை அல்லது படைப்பூக்கத்தின் அடையாளமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தவே சொல்கிறேன்.

அடுத்ததாக அக்காலகட்டத்தின் பொதுவான இலக்கிய வழிமுறைகளை விவாதிக்கும் முன்பாக இப்பாடல்களில் பயின்றுவரும் யாப்பமைதி பற்றிச் சொல்ல வேண்டும். இவை அனைத்தும் அகவற்பாவில் அமைந்தவை. அகவல் என்பது அழைத்தல் அல்லது பேசுதலைக் குறிப்பது. இந்தப் பாவகை வெவ்வேறு தாளங்களில் அமைந்திருந்தாலும் அதன் அழுத்தம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வரியின் பல்வேறு புள்ளிகளில் இடைநிறுத்தம் இருப்பதால் பல பயன்பாடுகளுக்குப் பொருந்தக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட பாவகையாகும். பழமையான மற்றும் எளிதில் புரியாத சொற்கள் கவிதைகளில் இருந்தாலும், அதன் தாளம் ஒருவித எளிமையான உரையாடல் சாயலை அளிக்கிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, முந்தைய காலத்தின் பழக்கவழக்கங்களையும் சொற்களையும் புரிந்துகொள்ள நாம் தவிர்க்கமுடியாமல் உரையாசிரியர்களை நம்பவேண்டி இருக்கிறது. அவர்கள் இந்த விஷயத்தில் ஏற்கத்தக்கவர்களாகவும், கிட்டத்தட்ட இன்றியமையாதவர்களாகவும் மாறுகிறார்கள். இக்கவிதை வரிகளின் தாளம் இன்றைக்கு ஒருவருக்கு பழக்கப்பட்ட பேச்சைப் போலத் தோன்றக்கூடும். சங்கப்பாடல்களிலிருந்து ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகள் கழித்து வந்த சிலப்பதிகாரத்துடன் தமிழ்க் கவிதையில் இவ்வகை தாளத்தின் பயன்பாடு முடிவுக்கு வந்தது.

மறைந்த எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமது ‘History of Tamil Language and Literature’ என்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் இவ்வாறு கூறுகிறார்:

‘அவை அனைத்தும் அகவற்பாவில் உள்ளன. தமிழ் யாப்பியலின் நீண்டகால வளர்ச்சியில் முதலாவதாகத் தோன்றிய பாவகை இதுவாகும். இது தமிழுக்குப் பிரத்யேகமானது, சமஸ்கிருதத்தில் இதற்கு இணையில்லை. ஆங்கிலத்தில் உள்ள blank verse மட்டுமே இதற்கு மிக நெருக்கமாக வரக்கூடியது. குறிப்பாக, சிறிய பாடல்களில், மொழி எளிமையாகவும் நேரடியானதாகவும் வீரியம் மிக்கதாகவும் வெளிப்படுகிறது. சுருக்கமான வெளிப்பாடு, பொருட்செறிவு, சொல்லின் தூய்மை மற்றும் சிந்தனையில் ஒருமை ஆகியன சங்கப்பாடல்களின் முக்கியப் பண்புகள். தமிழ் ரசனையின் இந்த எளிமையான வெளிப்பாடு பண்டைய கிரேக்கத்துடன் சிறப்பாக ஒப்பிடத்தக்கது. பிற்கால இலக்கியங்களின் சிறப்பியல்புகளாக விளங்கும் அற்ப கற்பனைகளும் புலவர்களின் வறட்டுப் புலமையின் வெளிப்பாடும் இதில் முற்றிலும் இல்லை. மாறாக, எளிய மனித இயல்பு இவற்றின் பளிங்குபோலத் தெளிவான வாக்குகளில் பிரதிபலிக்கிறது. உணர்ச்சிகள் தூண்டப்படும்போது அவை மட்டுப்படுத்தப்பட்டு, அதன்வழி எழும் அடக்கப்பட்ட வெளிப்பாடே இலக்கியத்தில் பயன்படும் கருவி. இப்பாடல்களில் கலையின் நுட்பமும் எளிமையும் உள்ளது. ஆனால் செயற்கைத்தனம் மிகக் குறைவே.’

இக்கவிதைகளின் உணர்வையும் தமிழ்ப் பாக்களின் தாளத்தையும் சுட்டிக்காட்டும் விதமாக புறநானூற்றில் உள்ள சிறிய பாடல் ஒன்றை இங்கே தருகிறேன். இப்பாடல், சிறந்த வள்ளல் என்று அறியப்பட்ட பாரியின் புகழையே எப்போதும் பாடிக்கொண்டிருக்கும் புலவர்களை நோக்கிப் பேசுகிறது. இதில் புலவர், இவ்வுலகின் ஒரே வள்ளல் பாரி மட்டுமல்ல; இன்னொருவரும் உண்டு என்கிறார். அது விண்ணுலகிலிருந்து பொழியும் மழை! அதுவே ஒரு வேளாண் சமூகத்தில் எல்லா மக்களுக்கான உணவையும் வாழ்வாதாரத்தையும் கொடுப்பது. இது வார்த்தைகளை மிகக் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்தித் திறம்பட வெளிப்படுத்தப்பட்ட ஓர் அழகிய கற்பனையாகும்:

‘பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே’

[புறநானூறு 107; கபிலர்]

சங்கப்பாடல்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில படிமங்களையும் சித்திரங்களையும் இங்கு தருகிறேன்.

புறநானூற்றிலிருந்து ஒரு பாடல்:

‘தாயில் தூவாக் குழவி போல,

ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.’

[புறநானூறு 5; பரணர்]

இது குறுந்தொகையிலிருந்து:

‘யாரும் இல்லை; தானே கள்வன்;

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறு பசுங் கால,

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!’

[குறுந்தொகை 25, கபிலர்]

இது அகநானூற்றிலிருந்து:

‘நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,

பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,’

[அகநானூறு 18, கபிலர்]

[ஓடிவரும் காட்டாற்றில் மலரிதழ்கள் உதிர்ந்து குவிந்து நீரின் நிறத்தை மறைக்கும் அளவுக்குப் படர்ந்திருக்கும்.]

(ஜப்பானியக் கவிதைகளுடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இக்கவிதையில் உள்ள ஜப்பானியத் தாக்கம் புரியும்.)

இப்பாடல் நற்றிணையிலிருந்து:

‘நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக

கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய

பல் பூங் கானலும் அல்கின்றன்றே’

[நற்றிணை 187; ஒளவையார்]

அகநானூற்றிலிருந்து மேலும் ஒரு பாடல்:

‘உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல

நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,’

[அகநானூறு 208; பரணர்]

இக்கவிதைகளில் இருந்து உருவகங்கள், அணிச்சொற்கள், கச்சிதமான கவித்துவச் சொற்றொடர்கள் என முடிவில்லாமல் எடுத்துக்காட்டலாம். இக்கவிஞர்கள் இயற்கையைப் பற்றி மிக நுட்பமான கவனத்துடன் இருந்துள்ளனர். இன்னொரு நோக்கில், தாந்தேவைப் போல, அவர்கள் தங்களுக்கான படிமங்களை அன்றாடம் சுற்றியுள்ள பரிச்சயமான வாழ்க்கையிலிருந்தே எடுத்துக்கொண்டனர். செம்மண் தரையில் ஊற்றப்படும் நீர் காணாமல்போவதைப் பற்றி ஒரு கவிஞர் குறிப்பிடுகிறார். மற்றொருவர், வீட்டிலிருக்கும் இல்லத்தரசி கவனிக்காதபோது முற்றத்தில் அணில்கள் விளையாடுகின்றன என்கிறார். இவ்வாறான அன்றாடச் சித்தரிப்புகள் அடங்கிய இக்கவிதைகளிலிருந்து தினசரி வாழ்க்கையின் ஒரு சிறந்த மாதிரியைக் காணலாம். அதேபோல அக்காலகட்ட இயற்கை, தாவரங்கள், பறவைகள் போன்றவற்றின் தகவல் களஞ்சியமாகக் காணமுடியும். இது சங்கப்பாடல்களில் காணப்படும் செல்வத்தின் ஒரு பகுதியே. இந்தக் கூறு தமிழ்ப் பண்டிதர்களாலும் பேராசிரியர்களாலும் ஓரளவுக்கு முழுமையாகவே ஆராயப்பட்டிருக்கிறது. அதேபோல, அக்காலத்திய கவிதை மரபுகளும் எண்ணற்ற முறை ஆய்வுகளுக்குள்ளாகி, அவற்றின் தனித்தன்மைகள் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. சங்கக் கவிதைகளை அகம் மற்றும் புறம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுப்பது மிகவும் நவீனக் கருத்தாக்கமாகும். இது இன்றைய இலக்கியத்துக்கும் உளவியல் விளக்கங்களுக்கும் பொருந்தக்கூடியதுயாகும்.

அகத்தை உள்முகமானது, தன்னிலை சார்ந்தது என்றும் புறத்தை வெளியுலகம், புறவய உலகம் சார்ந்தது என்றும் பொருள் கொள்ளலாம். சங்கக் கவிஞர்கள் இதை சில வரையறுக்கப்பட்ட, மரபுவழிப் பொருள்களில் மட்டுமே பயன்படுத்தினர்: அகக் கவிதைகள் காதல் சார்ந்தவை, தனிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை. புறக் கவிதைகள் காதல் அல்லாத பிறவற்றைப் பேசுபவை - போர், கொடை, மன்னர்களின் வாழ்வு போன்றவற்றை  வெளிப்படுத்துபவை. நாம் அகம் மற்றும் புறம் என்ற சொற்களையே இன்றைய இலக்கிய விமர்சனத்திலும் பிரதானமாகப் பயன்படுத்தலாம். யதார்த்தவாதம், இயல்புவாதம், இருத்தலியல் போன்ற மேற்கத்தியக் கலைசொற்கள் அவர்களின் விவாதப் பரப்பிலேயே இடத்துக்கு இடம் பொருள் மாறுபடும் தன்மை கொண்டுள்ளது. அவற்றுக்கு மாற்றாக நாம் நமது இச்சொற்களை பயன்படுத்தலாம். நமது சொல் குறைந்தபட்சம் அது எங்கிருந்து வருகிறது என்கிற அடிப்படையை நமக்குத் தெரிவிக்கும் என்பதால் ஒரு பிடிமானம் கிடைக்கும். இந்தி இலக்கிய விமர்சன பரப்பில் ஜைனேந்திர குமாரை இருத்தலியல் படைப்பாளியாக அடையாளப்படுத்தும் போக்கைப் பார்த்திருக்கிறோம், இருப்பினும் அவரிடம் இருத்தலியல்வாதிக்குரிய எந்தத் தடயமும் இல்லை. உதாரணமாக, புதுமைப்பித்தனின் ‘நினைவுப்பாதை’ என்ற கதையை அகம் சார்ந்தது எனக் கொள்ளலாம். அது உள்நிலை உணர்வுகளை ஆராய்கிறது. அதேசமயம் அவரது ‘சாப விமோசனம்’ போன்ற கதையை புறம் சார்ந்ததாகக் கொள்ளலாம். அது வெளிப்புறச் சமூக நிகழ்வுகளைப் பேசுகிறது. இவ்வாறான  வகைப்படுத்தல் சொல்லின் தொழில்நுட்ப அர்த்தத்தையும் உள்ளடக்கத்தின் உணர்வையும் இணைத்துக் காட்டுகிறது. இதேபோல ஜப்பானிய நவீன இலக்கிய விமர்சனத்திலும் ‘நான்’ கதைகள் மற்றும் ‘நான் இல்லாத’ கதைகள் எனப் பிரித்துப் பார்க்கும் மரபு நிலவுவதைச் சுட்டிக்காட்ட முடியும். அதாவது, நமது சொந்த மொழிகளில் இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் உருவாக வேண்டும் என்பதன் பொருள் - நமது வாசிப்பு, எழுத்தின் வழி நமது சொந்த மொழி இலக்கியங்களின் அடிப்படையிலேயே நமக்கான தொடர்புறுத்தும் புள்ளிகளை வரையறுத்துக்கொள்ளலாம். உலகளாவிய இலக்கிய அளவுகோல்கள், விமர்சனக் கருதுகோள்கள் போன்றவை எங்கும் பயன்பாட்டில் இருந்தாலும், அவை நம் சூழலில் விழிப்புணர்வுடன் வளர்க்கப்பட வேண்டும். ஆனால் இன்று ஆங்கிலத்தில் நடைபெறும் இலக்கியக் கருத்தரங்குகளில் பார்க்கும்போது, இந்திய எழுத்து என்பது ஏதோ மாஸ்கோ, வாஷிங்டன், லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களின் புறநகர் (suburban) எழுத்து போலத் தோற்றமளிக்கிறது. நாம் மேற்கத்திய விமர்சனச் சொற்களை அவற்றுக்கான பொருத்தமான விமர்சனச் சட்டகமோ, வரையறைகளோ இல்லாமல் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். இதைத் தவிர்க்க, நாம் அகம், புறம் போன்ற சொற்களை நவீனத் தமிழ்க் கவிதைகளுக்கும் பிற இலக்கியங்களுக்கும் பயன்படுத்தினால், நம் சொந்த விமர்சனக் கட்டமைப்பை நாமே வரையறுக்க முடியும்.

அகம், புறம் சார்ந்து முந்தைய தமிழ் இலக்கிய மரபுகளைப் பற்றிப் பேசும்போது, சி. ஜேசுதாசனும் ஹெப்சிபா ஜேசுதாசனும் இணைந்து எழுதிய ‘A History of Tamil Literature’ நூலிலிருந்து ஒரு மேற்கோளைத் தருவதைவிடச் சிறந்த விளக்கத்தை என்னால் அளித்துவிட முடியாது:

‘அந்தக் காலங்களில் காதலும் போரும்தான் இளைஞர்களின் முக்கிய அக்கறைகளாக இருந்திருக்க வேண்டும். அமைதி என்பதை பொருட்படுத்தாத பல அரசர்களும் எண்ணற்ற தலைவர்களும் அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளனர். எனவே இயல்பாகவே வீரச்சிந்தனையும் மரியாதை உணர்வும் பெருக்கெடுக்க, அதை சமநிலைபடுத்தும் வகையில் இன்னொரு பக்கம் காதல் இருந்துள்ளது. காதல் இடம்பெறாத வீரயுகம் எந்த வரலாற்றில்தான் உள்ளது? அக்காலத்தின் சூழ்நிலைகள் இலக்கியத்தின் போக்கை வழிநடத்தின, அதேசமயம் இலக்கிய வடிவம் சார்ந்த இறுக்கமான மரபுக் கட்டுப்பாடுகள் அவற்றுக்கு இருந்தன.’

இருபெரும் பிரிவுகளில், அகம்தான் சங்க இலக்கியத்தின் பெரும்பகுதியை ஆள்கிறது. ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கை அகத்தின் முதற்பொருள் (நேரம் மற்றும் இடம்), கருப்பொருள் (இயற்கைச் சூழல்), உரிப்பொருள் (அவர்களின் நடத்தை, செயல்) ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில் அமைகிறது. இந்த அமைப்பின் மூலம் காதல் வாழ்வின் அனைத்து அனுபவ நிலைகளையும் நாம் பின்தொடர முடியும். குறிஞ்சியில் பச்சைக் குன்றுகளில் மலரும் முதல் காதல் உணர்வு, பாலையில் புதுமண வாழ்வில் வரும் பிரிவின் வேதனை, முல்லையில் தனித்திருக்கும் பெண்ணின் முடிவிலாக் காத்திருப்பு, நெய்தலில் பிரிவுத் துயரத்தில் வாடியிருக்கும் பெண், முதிர்ந்த காதலும் வீட்டு வாழ்க்கையின் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட மருத நிலத்தில் உள்நுழைந்து எட்டிப்பார்க்கும் துரோகம். காதல் அனுபவங்களின் முழுப் பரப்பையும் இந்த அமைப்புக்குள் சொல்லிவிட முடியும். இதற்குள் சில மாற்றங்களுக்கும் இடமுண்டு. (கைக்கிளை மற்றும் பெருந்திணை ஆகியவை அகம் சார்ந்த கவிதைகளில் மீதமுள்ள இரண்டு கூறுகள்.)

புறம் பெரும்பாலும் பழங்குடியினக் கால வீரச் செயல்களை மையமாகக் கொண்டது. வெட்சி, வஞ்சி போன்ற அதன் திணைகளின் பெயர்கள் அக்குழுவினர் அணியும் மலர்களைக் குறிப்பது. வெட்சித் திணை எதிரியின் நாட்டிலிருந்து மாடுகளை கவர்ந்து வரும் வீரச் செயலையும், மாடுகளை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் தங்களுடையதாக மீட்கும் தீரத்தையும் கூறுகிறது. வஞ்சித் திணை எதிரியின் தாக்குதலை முன்கூட்டியே அனுமானித்து தாக்குதல் தொடுப்பதை விவரிக்கிறது. உழிஞைத் திணை போரின் அடுத்தகட்ட நிலையான கோட்டைத் தாக்குதல் மற்றும் பாதுகாப்பைப் பேசுகிறது. தும்பைத் திணை போர்க்களத்தின் மையத்திற்கே சென்று எதிரெதிர்ப் படைகள் மோதிக்கொள்ளும் காட்சியை விவரிக்கிறது. வாகைத் திணை, அரசர்களின் போர் வெற்றியைப் பாடுவது. இவ்வுலக வெற்றிகளை அடைந்த பின்பு, தொடர்ந்து இயல்பாக வருவது அவற்றின் நிலையாமை பற்றிய சிந்தனை. அதைப் பேசுவது காஞ்சித் திணை. பாடாண் திணையோ புரவலர்களின் பெருமைகளை எடுத்துரைக்கிறது.

இது ஒரு சுருக்கமான மரபுக் கட்டமைப்பு மட்டுமே. இதற்குள் பொதுவாக சங்கக் கவிதைகள் பொருந்திப்போகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் சங்கக் கவிஞர்கள் என்றாலே அவர்கள் மரபுக்கான அடையாளச் சீட்டுகள் மட்டும் அல்ல. அவர்கள் தங்கள் கற்பனைக்கும் சிறிது சுதந்திரத்தைக் கொடுத்துள்ளனர்.

சங்கக் காலத்திற்கு முன்போ பிறகோ பாடல்களைத் தொகுப்பது தமிழர்களின் ஒரு வழக்கமாகத் தோன்றவில்லை. பழந்தமிழ் இலக்கியத்தின் இந்த ஆறு தொகுப்புகளை வாசித்துப் பார்க்கும்போதும் அதன்மீது இன்றைய கல்விசார் அணுகுமுறையின்படியும், இப்பாடல்களை ஒன்றிணைப்பதற்கான பொதுவான தர அளவுகோல் ஏதும் இல்லை என்பதை ஒருவர் காணலாம். உரையாசிரியர்களும் தற்காலப் பேராசிரியர்களும் சொல்வதன்படி பார்த்தால் பாடுபொருள் மற்றும் அடிகளின் நீளம் ஆகியவை மட்டுமே வளம்மிக்க இப்பாடல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட ஒரே அளவுகோலாகத் தெரிகிறது. உதாரணமாக, அகநானூற்றில் 13 முதல் 30 அடிகளுக்குள் அகப் பாடல்கள் காணப்படுகின்றன; நற்றிணையில் 8 முதல் 12 அடிகளுக்குள்; குறுந்தொகையில் 4 முதல் 8 அடிகளுக்குள்; ஐங்குறுநூற்றில் 3 முதல் 6 அடிகளுக்குள் அகப் பாடல்கள் காணப்படுகின்றன, மேலும் இது மட்டுமே வழக்கமான 400 பாடல்கள் அல்லாமல் 500 பாடல்களை கொண்ட ஒரே தொகுப்பாகும்.

இத்தொகுப்புகள் உருவாகிய காலத்தில் அவற்றுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் இருந்திருக்குமா என்று யோசிப்பது சுவாரஸ்யமான கேள்விதான். ஒருவகையில் தமிழின் தொன்மையான இலக்கிய மரபை வகுத்தளிப்பதே இத்தொகுப்புகள்தான். பொதுவாக, தொகுப்புகள் ஒருவிதமான விமர்சன நோக்கத்துடன் அமைக்கப்படுவதாக நாம் கருதுகிறோம். இத்தொகுப்புகள் உருவானதன் நோக்கம் குறித்து என்னால் ஒரு யூகத்தை முன்வைக்க முடியும். எனது கருத்து வெறும் யூகமே எனத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்கு சமூக, இலக்கிய, விமர்சன அல்லது வரலாற்று ஆதாரம் என்னால் வழங்க இயலாது. ஆனால், இது இவ்வாறு நடந்திருக்கலாம் என ஒரு ஆரம்பகட்ட முன்மொழிவை மட்டும் சொல்கிறேன்.

சங்கக் காலத்தின்போது சங்கக் கவிதையில் இடம்பெறாத பல்வேறு பிற கவிதைகளும் கவிஞர்களும் புழக்கத்தில் இருந்ததாக நாம் அனுமானிக்கலாம். ஆனால் அவர்களின் படைப்புகள் சங்கத் தொகுப்புகளில் சேர்க்கப்படாமல் கறாராகப் பிரித்துவைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் உருவான புறத்திரட்டு எனும் தொகுப்பில் உள்ள சில பாடல்கள் சங்கக் காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவை சங்கத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. இது, சங்கத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்ற எனது வாதத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, அந்த மற்றக் கவிதைகளின் உணர்ச்சி நிலை என்பது சங்கப் பாடல்களின் உணர்ச்சி நிலைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளன.

சங்கக் கவிதைகளின் இயல்பைக் குறித்து வையாபுரிப்பிள்ளையின் கருத்தை இக்கட்டுரையில் ஏற்கெனவே மேற்கோள் காட்டியுள்ளேன். இப்போது, சங்கக் கவிதைகளின் தரம் பற்றிய ஜேசுதாசன்களின் கருத்தையும் பார்ப்போம். அவர்கள் தங்கள் ‘History of Tamil Literature’ என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றனர்:

‘பொதுவாக சங்கக் கவிஞர்களின் நடை, குறிப்பாகக் காதல் கவிதைகளில், ஒரு புகைப்படக் காட்சியின் துல்லியத்தை எட்டியுள்ளது. அவர்கள் கண்ணால் காணும் காட்சி படிமங்களின் தாக்கத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள். பொதுவாக வன்முறைமிக்க உணர்ச்சிகளைக் கையாளுவதில்லை. நகைச்சுவையிலும்  ஆர்வமில்லை. கட்டுப்பாடற்ற தன்னிச்சையான வெளிப்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அவர்களின் வழிமுறை என்பது வாழ்வின் முக்கியத் தருணங்களை தூய்மையாக, மிகை உணர்ச்சிகள் இன்றி, செம்மையான முறையில் பதிவு செய்வதே. அவர்கள் இயற்கை பின்னணியில் வாழ்வின் சிறுநிகழ்வைத் தேர்ந்தெடுத்து, அதனை மிகுந்த நுணுக்கத்துடன் கவிதையில் வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மரபு அளிக்கும் கட்டுப்பாடு அவர்களின் கற்பனையை அடக்கினாலும், வடிவத்தை அடைய அது ஒரு சிறந்த அடிப்படையை உருவாக்கி அளிக்கிறது. புறப் பாடல்களில் மட்டுமே கவிஞர்களின் சுய வெளிப்பாட்டிற்குச் சிறிது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும்கூட தங்களைப் பாதுகாத்துத் தாங்கும் புரவலருக்கான விசுவாசம் ஒரு தடையாகலாம். சுதந்திரமற்ற கலை நீண்டகாலம் நீடிக்க முடியாது. கடுமையான எல்லைகளுக்குள் அது தேங்கி, தரம் இழக்கும். எனவே, சங்கக் கலை பல திறமைகளைத் தன் பெருமையாகக் கொண்டிருந்தாலும், அதன் அனைத்து வளங்களும் தீர்ந்தவுடன் ஒருநாள் இயல்பாகவே அது முடிவுக்கு வந்தது.’

சங்கக் கலையின் இறுதி குறித்து ஜெசுதாசன்களின் கருத்துடன் நாம் உடன்பட்டாலும் இல்லாவிட்டாலும் வையாபுரிப்பிள்ளையின் கருத்தோடு அவர்கள் ஒரு விஷயத்தில் ஒத்துப்போவதைக் காண்கிறோம். சங்கக் கவிதைகளில் உணர்ச்சிகள் அடக்கப்பட்டுள்ளன என்பதை இருவருமே வலியுறுத்துகிறார்கள். சங்கத் தொகுப்புகளில் உள்ள பாடல்களைப் பகுப்பாய்வு செய்தால், இவ்விதம் பல்வேறு திறமைகளைக் கொண்ட கவிஞர்கள், உணர்ச்சி வெளிப்பாடில்லாத ஒருவகை ‘பிளாஸ்டிக்’ (plastic) கவிதைகள் என்று சொல்லத்தக்க கவிதைகளை உருவாக்க முயன்றிருப்பதை நிச்சயமாகக் காணலாம். அதாவது, மனித அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசினாலும், அதில் தீவிரமான உணர்ச்சிப்பாங்கில்லாத கவிதைகளும் உள்ளன. தமிழின் பிற்கால கவிதைகளில் தென்படும் பக்தி, நீதிநெறி, மீபொருண்மை, நீள் கவிதைகள் போன்றவற்றுக்குள் செல்லாமல் சங்கக் கவிஞர்கள் முற்றிலும் வேறுபட்ட கவிதைகளை பிரக்ஞைபூர்வமாகவே உருவாக்க முயன்றனர் என்பது தெளிவு. மேலும் அவை அவர்களின் காலத்திலேயே ஏற்கப்பட்ட கவிதை வடிவங்களிலிருந்தும் வேறுபட்டு தனித்திருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மரபான சமஸ்கிருதக் கவிதைகள், ஒன்பது ரசங்களில் சாந்த ரசம் நீங்கலாக பிற எட்டு ரசங்களை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்நிலையில் சங்கக் கவிஞர்களின் அடக்கமான உணர்ச்சி வெளிப்பாடு, உணர்ச்சிகளற்ற கலையைப் படைப்பதற்கான பிரக்ஞைபூர்வ முயற்சி என்றே சொல்வேன். வெளிப்படையாக புலப்படும் இதை ஏற்றுக்கொண்டால், தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க மரபை வரையறுத்த இத்தொகுப்புகள் உருவானதன் நோக்கமும் தெளிவாக புலப்படும்.

சமஸ்கிருதக் கவியியல் எப்போதிருந்து சாந்த ரசத்தை தன் மரபில் இணைத்துக்கொண்டது என்பது பற்றிய துல்லியமான தேதி நம்மிடமில்லை. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரத முனிவர், இலக்கியத்தில் சாந்த ரசத்தை ஏற்கவில்லை. ஆனால் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனன் இலக்கியத்திலும் கலைப் படைப்புகளிலும் சாந்தம் என்ற ஒன்பதாவது ரசத்தின் இருப்பை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சங்கத் தொகுப்புகள் உருவான கி.பி. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டுகளின் அதே காலத்தில்தான் சமஸ்கிருத சமய மற்றும் இலக்கியத் துறைகளில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்துக்கொண்டிருந்தனர். எனவே சமணர்களும் கலையில் வைதிக மரபின் ஆதிக்கத்தை எதிர்க்க நினைத்த வேறு சிலரும் தமிழில் ஒருவகையான கலை எதிர்ப்பை உருவாக்கியிருக்கலாம். இவ்வாறு ‘நடந்திருக்கலாம்’ - இந்த அளவுக்கே என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

‘இதுநாள்வரை தமிழ்நாட்டில் கலாசாரத்திற்கும் கல்விக்குமான தூதர்களாக இருந்தவர்கள் சமணர்களே’ என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிறார். சங்கத் தொகுப்புகளில் பெரும்பகுதியை சமணத்துடன் தொடர்புபடுத்த முடிந்தாலும், அவற்றை முழுமையாக சமணக் கவிதைகள் என்று சொல்லிவிட முடியாது. சமணத்தன்மை அற்ற கவிதைகளை, அந்த அழகியலை மறுக்கும் கவிஞர்கள் இயற்றியிருக்கலாம். அவர்கள் வழக்கமான பாணிகளையும் ஒப்புக்கொள்ளப்பட்ட மரபுகளையும் பின்பற்ற மறுத்து, தங்களுக்கே உரிய அழகியல் மற்றும் மரபு வழிமுறைகளைத் தேடியவர்களாக இருக்கலாம்.

தமிழ் சங்கக் கவிஞர்களின் உணர்ச்சியற்ற தன்மையை ஒரு சாதாரண நிகழ்வு என்றோ தற்செயல் என்றோ ஒதுக்கிவிட முடியாது. அல்லது அது அவர்களாகவே உருவாக்கி ஏற்றுக்கொண்ட மரபுகளால் உண்டானது என்றும் கொள்ள இயலாது. ஏனெனில், அவர்கள் வேறு எந்த மரபையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கும் நிலையில் இதை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

சமஸ்கிருத இலக்கியத்தில், ஒன்பதாவது ரசம் எனப்படும் சாந்த ரசம் ஆனந்தவர்த்தனனுக்கு சிறிது காலத்திற்கு முன்பே ஏற்கப்பட்டுள்ளது. டாக்டர் வி. ராகவன் கூறுவதின்படி, சாந்த ரசத்தை அடிப்படையாகக் கொண்ட காப்பியங்கள் சமஸ்கிருதத்தில் உருவாகியிருந்தன. ஆனால் கி.பி. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேம்ஸ் ஜாய்ஸ்தான் தனது புகழ்பெற்ற நூலான ‘A Portrait of the Artist as a Young Man’-இல், கலைக்கான அடிப்படை கோட்பாடாக ‘emotional stasis’ [உணர்ச்சிகரமின்மை] என்ற கருத்தைத் தெளிவாக முன்வைத்தார். அவரது பிற்காலப் படைப்புகளான Ulysses, Finnegan’s Wake ஆகியவற்றில் இந்த ‘emotional stasis’ கோட்பாடு எந்தளவு பிரதிபலித்துள்ளது என்பதை ஆராய்வது சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகக் கூறலாம், சங்கத் தொகுப்புகள் முழுமையான உணர்ச்சிகரம் அற்ற கவிதைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ‘நகத்தை வெட்டுவது போல, படைப்பாளர் தன்னை விலக்கிக்கொண்ட’ கவிதைகள். இந்த உணர்ச்சி இல்லாத வெளிப்பாடும் வடிவழகும் தாந்தேவின் (Dante) காப்பியத்தில் காணப்படும் சிறந்த பகுதிகளுடன் ஒப்பிடத்தக்கது. உதாரணமாக, தாந்தேவின் ‘Inferno’வில் வரும் பிரபலமான பகுதியில், தன் தலையை உடலிலிருந்து பிரித்துக்கொண்டு, கையில் விளக்காகத் தூக்கி நிற்கும் ஒருவனை நாம் காண்கிறோம். ஏனெனில் அவன் வாழ்வில் ‘சகோதரர்களுக்கிடையே உருவாகும் பிளவைப் போல’ ஒரு துயரம் நேர்கிறது. இதற்கு நிகரான ஒரு சித்திரத்தை உலக இலக்கியத்தில் காண வேண்டுமென்றால், நாம் குறுந்தொகையை நோக்கலாம். அதில், ஒரு பெண் (உரையாசிரியரின் கருத்துப்படி அவள் தப்பிச்செல்லும் பெண்ணின் செவிலித்தாய்) தப்பிச்செல்லும் காதலர்களின் பின்னால் சென்று தேடும்போது, அவள் கண்களில் தட்டுப்படும் உலகிலுள்ள பிற காதலர்களால் தனது கண் பார்வையையும் கால்களின் வலிமையையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறாள்

‘காலே பரி தப்பினவே; கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;

அகல் இரு விசும்பின் மீனினும் 

பலரேமன்ற, இவ் உலகத்துப் பிறரே’.

[குறுந்தொகை 44, வெள்ளிவீதியார்]

இவ்வாறு உணர்ச்சி இல்லாமல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறை, உலக இலக்கியத்தில் வேறெங்கும் காணமுடியாத தமிழ் சங்கக் கவிதைகளில் காணப்படும் தனித்துவமான அம்சமாகும்.

ஆங்கில மூலம்: க.நா.சு

தமிழில்: டி.ஏ. பாரி

***

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்

***


Share:

கவித்துவம் - புனைவெழுத்தாளர்கள்

கவித்துவம் என்ற இந்தப் பகுதியில் மூன்று புனைவெழுத்தாளர்களிடம் கவிதைகள் குறித்த ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களின் பதில்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

பதில்களை அளித்த எழுத்தாளர்கள் சுனில் கிருஷ்ணன்,கார்த்திக் பாலசுப்ரமணியன், தூயன் ஆகியோருக்கு நன்றிகள். கேள்விகளைக் கட்டமைப்பதில் உதவி செய்த கவிஞர் வே.நி.சூர்யாவுக்கும் நன்றி.
  1. புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்? 

சுனில் கிருஷ்ணன் :

பெரும்பாலான புனைவெழுத்தாளர்களைப் போல எனக்கும் கவிதைதான் தொடக்கம். பள்ளி காலத்தில் ஒரு நோட்டு புத்தகத்தில் கவிதைகள் என நான் நம்பியவற்றை எழுதி சேமித்து வைத்திருந்தேன். பலவும் 'ஏ மனிதா' ரகம்தான். ஒன்றிரண்டு கவிதைகள் கொஞ்சம் பரவாயில்லை என சொல்லலாம். பதிப்பிக்கப்பட்ட முதல் ஆக்கம் என்பதும் கவிதைதான்.  ஆங்கில நாளிதழின் சிறுவர் இணைப்பிதழில் 'ஜோக்கர்' என்றொரு கவிதை வெளியானது. எனது கவிதைக்கு ஒரு படமும் வரைந்திருந்தார்கள். ஒரு வாசகர் கடிதம் கூட பள்ளி முகவரிக்கு வந்தது.   பள்ளி ஆண்டு மலரின் ஆசிரியர் குழுவில் இந்த கவிதை என்னை கொண்டு சேர்த்தது. அதிலும் 2 கவிதைகள் வெளியாகின. கவிஞர்களில் எனது முதல் ஆதர்சம் அப்துல் ரகுமான். கவிஞனாக தொடரவில்லை. கைவிட்ட கவிதையை நவீன கவிதைகளை வாசித்து, பல வருடங்களுக்கு பிறகு துரத்தத் தொடங்கினேன்.  கவிதையை எட்டிப்பிடிக்க முயலும் உரைநடையாளன் என்று சொல்லிக் கொள்ளலாம். தற்போது வெளிவந்துள்ள எனது புதிய நாவலான குருதி வழியில் மையப்பாத்திரங்களில் ஒருவன் இளம் தமிழ் கவி. ஆகவே அதில் சில கவிதை முயற்சிகள் உள்ளன.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

கவிதையைத் தொடாமல் புனைவின்வழி மட்டுமே எழுந்து வந்தவர்கள் இங்கே மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு நானும் விதிவிலக்கல்ல என்றாலும் அவற்றை வெளியிட்டுப் பார்க்கும் விஷப் பரிட்சைக்குத் துணியவில்லை என்பதே தமிழ் கவிதைக்கு என்னாலான எளிய பங்களிப்பு.

இலக்கியத்துக்குள் நுழைபவர்களை உண்மையில் கவிதையே முதலில் வசீகரிக்கிறது என்றாலும் நாவல், சிறுகதைகளை ஒப்பிட கவிதைகளைக் குறைவாகவே வாசித்திருக்கிறேன். என்னளவில் கவிதை அதன் வரிகளுக்கு இடையேதான் தன்னைத் திறந்து வைக்கிறது. ஆகவே, அளவில் சிறியதென்றாலும் கவிதைகளை வாசிக்க அதிக உழைப்பும் ஈடுபாடும் கூரிய கவனமும் தேவைப்படுகின்றன. முந்நூறு பக்க நாவலை வாசிக்கும் வேகத்தில் என்னால் மூன்று பக்கக் கவிதையை வாசிக்க இயல்வதில்லை. குறைவாகவே எனினும் தொடர்ந்து கவிதைகளை வாசிக்கிறேன்.

தூயன் : 

கதைகள் வழியாகவே ஒவ்வொருவரும் இலக்கியத்துக்குள் நுழைவதாகவும் கவிதைகள் வழியாக படைப்பாளியாகிறதாகவே நான் இதுவரை நம்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் மொழியைப் பொருள்கொள்வதில் அடிப்படையில் கவிஞனும் புனைவெழுத்தாளனும் வெவ்வேறானவர்கள். காரணம் இருவரது பிறப்பும் வெவ்வேறாக அமைந்துவிடுகிறது. அதனால் புனைவெழுத்தாளனுக்கு கவிஞன் “மற்றமை” (ஆனால் கவிஞனுக்கும் மற்றமைக்குமான உறவுச் சிக்கலானது. காரணம் கவிஞன் தன்னையே மற்றமையாக துண்டிக்கிற பரிசோதகன்). எனவே புனைவெழுத்தாளனின் அடிப்படை கதைமனம் மற்றமைக் குறித்தே சிந்திக்கவும் ஆராயவும் அறிந்துகொள்ளவும் “தந்நோய்போல் போற்றாக் கடை” என்பதாக விரும்புகிறது.

  • உரைநடையும் கவிதையும் வேறுபடும் இடங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? 

சுனில் கிருஷ்ணன் :

ஆயுர்வேதத்தில் இந்த பிரபஞ்சம் ஐம்பூதங்களால் ஆனதென சொல்லப்படுகிறது. பஞ்ச பூங்களின் கூட்டு என்பதினாலேயே பிரபஞ்சம் என்றானது. ஐம்பூதங்களில் உரைநடையில் நிலத்தின் தன்மை அதிகம் என எனக்கு தோன்றுவதுண்டு. கவிதை விசும்பின் தன்மையுடையது. வெளிக்குரிய விஸ்தாரம் கொண்டது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

கவிதையை நான் பூடகத்தின் கலை என்பதாகப் புரிந்துவைத்திருக்கிறேன். சிறுவயதில் வானத்தில் குவிந்து நிற்கும் மேகக்கூட்டங்களைப் பார்த்து உருவங்கள் கண்டுபிடித்து விளையாடுவோமில்லையா? ஒருவனுக்குப் புலியாகத் தெரியும் அதே மேகம்தான் இன்னொருவருனுக்கு மானாகவும் மற்றொருவனுக்கு மயிலாகவும் தெரியும். சில நொடிகள் இடைவெளியில் புலி பார்த்தவனுக்குப் புலி மறைந்து பூச்செடி தெரியும். கவிதை அந்த மாதிரிதான். உரைநடை அந்த மேகத்துக்குப் பின்னால் நீண்டிருக்கும் வானம் போல. வண்ணக் கண்ணாடி அணிந்து பார்க்காத வரை பார்ப்பவர் அனைவருக்கும் ஒரே நீல வானம்தான்.  

தூயன் : 

நிறைய சொல்ல முடியும். கவிஞன் சொற்களை உருவாக்குகிறான். அப்படியென்றால் புதிய சொற்களை உருவாக்குவதாக அர்த்தத்தில் அல்ல, மொழியின் வடிவத்தைக் குலைத்துப் போடுகிறான். அவ்வாறுதான் அவனால் கவிமனதை அறிய முடிகிறது. புனைவெழுத்தாளன் கவிஞன் இருவரும் மொழியால்தான் இலக்கியத்தை அனுகுகிறார்கள். மொழி இருவருக்கும் வெவ்வேறு திசைகளில் உள்ளது. உரைநடையில் புனைவுக்குள்ளே மொழி இயங்குகிறது என்றால், இங்கு மொழியே கவிதையாகிறது. உண்மையில் புனைவு எழுதுகிறவர்களும் கவிஞர்களைப்போல மொழிக்குள் திரும்ப வேண்டும். மாறாக புனைவெழுத்தாளனோ ஒரு தொல்லியலாளனைப் போல் கையில் கிடைக்கிற கல் குறித்து ஆராய்ச்சிதான் செய்கிறான்.

ஆனால், கவிஞனால் அது இத்தனை காலம் நிலத்துக்குள் மிதந்ததை எண்ணிச் சிரிக்க முடிகிறது. புனைவெழுத்தாளன் அந்தக் கல்லின் காலத்துக்குள் பயணிக்கிறான். கவிஞன் காலத்துக்குள் புலங்குவதில்லை. அதனால்தான் அவனால் Flashforward ஐ நிகழ்த்திப் பார்க்க முடிகிறது. ஆனால் புனைவிலும் Flashforward நிகழ்த்த முடியும் என்கிறார் பா.வெங்கடேசன் தன் கதையும் புனைவும் நூலில். அதுகுறித்து நாம் விரிவாகத்தான் உரையாட வேண்டும்.

இரண்டாவது, கவிதை தன் கற்பனைகள் வழியே புனைவுலகை உருவாக்குகிறது. புனைவு தன் கற்பனைகள் வழியே யதார்த்தவுலகை உருவாக்குகிறது. புனைவு உருவாக்கும் யதார்த்தம் நமது அன்றாட யதார்த்தத்தின் “அச்சு அசல்“ என்கிறபோது தோற்றுவிடுகிறது. ஆனால் கவிதை உருவாக்கும் உலகம் யதார்த்தவுலகம் அல்ல.

மூன்றாவது, கவிதையால் எந்தப் பாடுபொளுளையும் பேசலாம். வெறும் மொழியை மட்டும் பேச முடியும். இது ஒருவித மரபு போல கவிதைக் கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பாடிவிட்டு பிறகு தனக்களித்தச் சிறப்பு என மொழியைப் பாடும். மொழியின இனிமையை மட்டும் எழுதித் தீர்க்கிறது. தொல்க்காப்பியத்துக்குள் இப்படி நிறைய நாம் காணலாம். நம்மிடம் உள்ள இலக்கணப் பனுவல்கள் அத்தனையிலும் இது உள்ளது. வள்ளுவர் சொல் இனிது என்கிறார், பாரதி சொல்லை இசைக்கவிட்டார். அது சத்தம் போட்டது, பாடியது, ஆடியது. ‘ஞங்’ என அது விழும் ஓசையை பாரதி கவிதைகளில் கேட்கலாம். சில இடங்களில் மௌனமாகி நிற்கிறது. மௌனத்தை சொற்கள் வழியே பாரதி கடத்திருக்கிறார்.

அதே சமயம் கவிதைகளில் நிறைய கவித்துவப் பண்புகள் கவித்துவக்கூறுகள் அதைக் கவிதையாக நடிக்க வைக்கும். நாம் கவித்துவத்தின் மோனத்தில் மயங்குவோம் அவை உண்மையில் கவிதையா என்று தெரியாமல். படிமங்கள் மூலம் கவிதைபோல ஒன்றை எழுதிவிட முடியும். கவித்துவ வர்ணையால் காட்சிகளை அழகாய்ச் சுட்ட முடியும். பிரமிளின் ‘காற்றிலாடும் பறவையின் சிறகு’ அழகான படிமம். நகுலனின் ‘எங்கிருந்தோ வந்தான்’ ஆழமான தத்துவவிசாரனை. கவிதை அது கவிதையாகிற கணத்துக்கு முன் அதன் கூறுகளைத் தனியாக விடுவிப்பதில்லை. இவ்விடுபட்டவை கவிதையாக கவிஞனை வற்புறுத்தும்.

அவற்றை வாசிக்கிறபோதும் நம்மால் ரசிக்கவும் உணர்ச்சிவசப்படவும் உருகவும்கூட முடியும். கவிதை என்கிற வகைமையில் இது பெரும் சிக்கலான ஒன்று. இதைக் கவிதைக்கும் புனைவுக்குமன ஒரு வேறுபாடகவே சொல்ல முடியும். ஆனால் புனைவில் நடிக்கிற சிறுகதை, நடிக்கிற நாவல் என்று ஒன்று இல்லை. காரணம் புனைவு ஒரு கதையைச் சொல்ல முனைகிறது. கதையின் அலகு ஸ்தூலமான சிலப் பண்புகளைக் கொண்டிருக்கிறதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் கதை ஒன்றிலிருந்துத் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிய வேண்டியுள்ளது. கவிதைக்கு இவ்வாறான விதிகள் இல்லை. கவிதை விதிகளுக்கு அப்பாற்பட்டது.

  • ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை வாசிப்பு எந்த அளவுக்கு உதவிகரமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?

சுனில் கிருஷ்ணன் :

செய்திறன் சார்ந்து மொழியின் எல்லைகளை நெகிழ்த்த, அர்த்த அடுக்குகளை உருவாக்க கவிதை வாசிப்பு மிகவும் முக்கியம். மொழியின் தனித்துவம் கவிதை வழியே அடையப்பெறுவது. கவிதை வாசிப்பு புதிய தரிசனங்களை உருவாக்க வல்லது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இக்கேள்விக்கு பதிலளிக்க முயல்கிறேன். என்னுடைய நட்சத்திரவாசிகள் நாவலை எழுதுவதற்கான தூண்டுதலை சாலையோரச் சுவரில் வரையப்பட்டிருந்த முள்கிரீடம் தரித்த ஏசுவின் ஓவியத்திலிருந்து பெற்றேன். நாவலுக்கும் அந்த ஓவியத்துக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் கிடையாது. நாவலில் ஒரு வரியிலாவது ஏசு வருகிறாரா என்றால் இல்லை. பல நேரங்களில் கவிதையில் கிடைக்கும் ஒரு காட்சி, சமயங்களில் தெறிப்பாக வந்துவிழும் ஒரு வரி அல்லது ஒரே ஒரு சொல் என அதுவரை கதையாக உள்ளே உழன்றாலும் எழுதுவதற்கான தூண்டுதல் இல்லாமல் கிடந்த நிச்சலனத்தைக் கலைத்திருக்கின்றன. கதைகள் எழுதுவதற்கு கவிதைகள் தூண்டுதலாக இருந்திருக்கின்றன என்று தனிப் பேச்சில் சில நண்பர்களும் கூறியிருக்கிறார்கள்.

தூயன் : 

இலக்கியத்தில் எதுவும் எதற்கும் உதவிகரம் நீட்டுவதில்லை. உதவிக்கரம் என எண்ணுவது அவரவர் தேர்வைப் பொறுத்தது. கவிதை இலக்கியத்தின் ஆதிவடிவம். இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிற தளம். அது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் முதன்மையானது. முதுகிழவி. அதனால் அதை புனைவெழுத்தாளர்களோ அபுனைவாளர்களோ மொழிபெயர்ப்பாளர்களோ யாராக இருந்தாலும் அதைத் தீண்டியே ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, கவிதைகள்தான் புனைவெழுத்தாளனுக்கு நிறையக் கற்பனைகளைத் தரும், உணர்ச்சிகளை மொழிப்படுத்தக் கற்றுத் தரும், மொழி சிக்கிக் கொள்கிறபோது அதை மௌனமாக்கும் வித்தையை அளிக்கும். உதாரணத்திற்கு அகநானூறு பாடலில் ஆய் எயினன் போர்க்களத்தில் இறந்து விழுகிறான். பரணர் அதைப் பாடுகிற விதம் பாருங்கள். 

ஒண் கதில் தெறாமை சிறகரின் கோலி நிழல்

செய்து உழறல் காணேன் அவன்மேல் வெயில் 

படாதிருக்க பறவைகள் சிறகால் நிழல் போர்த்துவது, 

இதே போல கம்பராமாயணத்தில், 

கானகம் மறைத்தன காலமாரி, மீன்நகு

திரைக்கடல் விசும் போர்தென 

இந்த வரிகள் அளிக்கிறக் காட்சிகள் ஆகட்டும்,

சங்கப்பாடல்கள் ஒரு முழுக் கதையையும் உவமையாகச் சொல்லி, வரலாறாகக் காட்டி ஆரம்பிக்கிற வடிவம் என புனைவுக்கான நிறைய அசாத்தியமானக் கூறுகள் உள்ளன. வேறெந்த மேலை இலக்கியத்திலும் இதுபோல கிடையாது.

கலித்தொகையில் ’ இடைமடக்கி’ என்கிற வகையில் பாடல் வரும். (நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?) ஒரு சொற்றோடர் மடக்கி மடக்கி மறுபடியும் மறு சொற்றோடர் அதே ஓசையில் முடிந்து ஆனால் பொருள் முந்தைய உவமையைத் தாண்டிச் செல்லும். இத்தகைய வடிவில் புனைவில் கதைகூறுவது சாத்தியமா என்று யோசித்திருக்கிறேன். குறுங்கதை ஒன்றை அப்படி எழுதிப்பார்த்தது உண்டு. பரிபாடலில் மலைமுழை அதிரும் என்கிற பரங்குன்றம் பற்றியப் பாடலில் ஒரு சுழற்சி வடிவம் கையாளப்படும். கார் மேகத்தின் இடிக்குரல் மன்னின் யானையின் பிளிறல் போலிருக்கிறது. அப்படியான இடியோசைக் கேட்டதும் யானை பிளிறிவிட்டதெனக் கண் விழித்துக் கூவுகிறதாம் சேவல். சேவல் கூவியதைக் கேட்ட யானை தன் பங்குக்குப் பிளிறுகிறது. அந்தப் பிளிறல் குன்றுகளில் மோதி எதிரொலிக்கின்றன. அந்த எதிரொலி இடி மலைபோன்று அதிர்கிறது. ஒவ்வொரு சம்பவங்களும் அழகாய் சுழல் போலச் சுற்றுகிற வடிவில் இருக்கிறது.

இதுபோல அகநானூறில் பரணரின் இரும்பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் என்கிற பிரபலமான பாடல் உண்டு. அதில் களவுக்குத் தடையாக அமைகிற ஒவ்வொருவரின் துஞ்சாமைப் பற்றி வரிசைப்படுத்தப்படும். அதாவது, ஊரில் யாரும் உறங்கமாட்டார்கள் இந்த உறங்காமை ஒவ்வொன்றாய் எழுப்புவதுபோல ஒரு சுழற்சி வரும். இதெல்லாம்தான் புனைவுக்கானக் கதைசொல்ல மெட்டீரியல் என்கிறேன். 

இன்னொரு சங்கப்பாடலில் தலைவன் பறத்தையின் உறவில் திளைத்திருக்கிறான், தலைவின் நினைப்பெழ அவளைச் சமாதானம் செய்ய விறலியை தூதனுப்பி, தன்னைப் பற்றி விறலி சொல்வதாக, விறலி தன் காதலைச் சுட்டி தலைவனது காதலை விளக்க வேண்டும். எப்படி இருக்கிறது பாருங்கள் உரையாடல்? சங்கப்பாடல்களில் ஓர் உணர்ச்சியை ஒருத்தர் இன்னொருவருக்கும் வேறொருவரின் வழியாக அதைப் பரிமாறுவதெல்லாம் இயல்பாக நிகழும். அங்கு நேருக்கு நேராக உரையாடுவதே அதிகம் இருக்காது. அதுபோல சட்டென உணர்வை உடைக்கிற வித்தைகளை மொழி கவிதைகளில்தான் நிகழ்த்துகின்றன.

பேயாயுழலுஞ் சிறுமனமே என்கிறார் பாரதியார். காமக் கணிச்சி உடைக்கு என்கிறார் வள்ளுவர். பன்னமைதிக்காகப் பாடப்பட்டப் பரிபாடலில் வைகையின் வெள்ளப் பெருக்கும் சனங்களின் களிப்பும் வருகிற ஒவ்வொரு பாடல்களின் முடிவிலும் அதன் சந்தம் தெறிப்பாக முடிந்திருக்கும். தாயிற்றே தண்ணம் புனல், காமப் பெருக்கென்றோ வையை வரவு, புதுநாற்றம் செய்கின்றே செம்பூம் புனல். இப்படியெல்லாம் இந்தப் புனல் இந்த மக்களையும் ஊரையும் கொண்டாட்த்தில் வைக்கிறது. காமப் பெருக்கை கம்பர் படு மதம் நாற காத்த அங்குசம் நிமிர்ந்திர கால் விரித்து ஓடி புத்த ஏழிலைப் பாலையை பொடி பொடி மதம் பிடித்த யானை ஏழிலைப்பாலையின் நறுமணத்தை முகர்ந்து களிவெறிக்கூடி மரத்தில் போய் முட்டிக்கொண்டது என்கிறார். வள்ளுவர் பசலை நோய் பற்றி எழுதிய பசப்புறு பருவரல் அதிகாரத்தில் ஓர் அற்புதமான குறள் உள்ளது.

புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளி கொள்ளவற்றே பசப்பு

இந்தக் குறளில் காலம் எப்படி shift ஆகிறது பாருங்கள். தழுவலுக்கும் புரல்தலுக்கும் இடையில் காலம் எவ்வளவு தூரம் ஓடியதாட்டம் ஒரு மாயையை அவள் உணர்வதாக நம் கற்பனையைத் தூண்டுகிறார் இல்லையா? இதுதான் கவிமனதின் மந்திரம்.

  • சில கருக்கள் மனதில் தோன்றும்போதே இது சிறுகதைக்கு இது நாவலுக்கு என மனம் பகுக்கும். அப்படி செய்கையில் இது கவிதைக்குரியதாயிற்றே என்று எதுவும் தோன்றியதுண்டா. அப்படி இருந்தால் அதைப் பகிருங்களேன்...
சுனில் கிருஷ்ணன் :

என்னளவில் எந்த கருவையும் கவிதையாகவோ கதையாகவோ எழுத முடியும் என்று நம்புகிறேன். நமக்கு வாகான வெளிப்பாட்டு முறை என்ற அளவில் மட்டுமே வேறுபாடு. உரைநடையில் கவிதைக்குரிய தன்மைகளை கொண்டு வர விரும்புகிறேன். ஆகவே கவிதைக்குரியது என எதையும் தனியாக கருதியதில்லை.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

ஆம், கருக்களாகத் தோன்றும்போது நேரடியாக மனம் அவற்றை குறுங்கதை, சிறுகதை, நாவல் இப்படி ஏதேனும் ஒரு புனைவு வகைமைக்குள் வைத்துப் பொருத்திக்கொள்கிறது. எழுதிப் பழகிய மனப் பயிற்சியால் அது கூடியிருக்கலாம். கருவாக அல்லாமல் ஏதோ ஒருவகையில் என்னைப் பாதித்த ஒரு காட்சியாக மட்டும் மனத்தில் தங்கிவிடும்போது அது கவிதைக்கு உகந்ததாக இருக்கிறது. 

கருவை காட்சியிலிருந்து எப்படி பிரித்துப் புரிந்துகொள்வது? ஒரு காட்சிக்கு முன்னும் பின்னும் சென்று பார்க்கும் சாத்தியம் இருந்து அதில் அந்தக் காட்சியை மீறியும் சொல்வதற்குப் புதிதாக ஒன்று இருக்கும்போது அங்கே கரு கிடைக்கிறது. 

முன்பு ஒருமுறை கவிஞர் தேவதேவன் ஆரஞ்சுப் பழத்தை, ஒரு அழகிய பூவைப் போல உறித்து வைத்திருந்த புகைப்படம் காணக் கிடைத்தது. அதில் பழத்திலிருந்து மலர்ந்திருந்த பூ என்னைக் கிளர்த்தியது. அப்போது இப்படியொன்றை எழுதிப் பார்த்தேன்.

சொற்களிலிருந்து 

கவிதையை விடுவிப்பதைப் போல 

ஒரு ஆரஞ்சுப் 

பழத்தைத் திறக்கிறான் கவிஞன் 

கனியிலிருந்து பிறக்கிறது ஒரு 

பூ


தூயன் : 

அப்படி எனக்குத் தோன்றியதில்லை. கவிதைக்குரிய “கரு“ என்று ஏதேனும் உண்டா? தெரியவில்லை. அடிப்படையில் நான் கவிஞன் இல்லை. நீங்கள்தான் சொல்ல வேண்டும். உண்மையில் கவிஞன் கவிதையை கரு கொண்டு அனுகுவதில்லையென்பது என் கருத்து. கவிஞனுக்கு அதொரு கணம். அவன் அந்தக் கணத்தைப் பிடித்துவிடுகிறான். கணம் என்றால் வெறுமனே காலம் அல்ல. அவனுக்குள் வந்து விழுகிற எதுவாக வேணாலும் இருக்கலாம் அவன் அதை அந்தக் கணத்திலேயே நிறுத்த முயற்சிக்கிறான். அது காலவெளியில் உறைந்துவிடுகிறது. உடனே அதை எழுதலாம் அல்லது எப்போது அதைத் தீண்டுகிறானோ அப்போது அது குறித்து எழுத ஆரம்பிக்கிறான். பிறகுதான் அதைத நாம் “கரு“ என்கிறோம் அல்லது பாடுபொருள் என்கிறோம். நான் கவிஞனாக இல்லையென்பதற்காக நல்ல கவிதைகளை வாசிக்கிறபோதெல்லாம் மனம் நொந்துக்கொள்வேன். 

சங்கப் பாடல்களை வாசிக்கையில் நிறைய இடங்களை அது புனைவுக்கானத் தருணத்தை அளிப்பதை எண்ணி வியந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, நான் மேலே குறிப்பிட்ட குறளில் (புல்லிக்கிடந்தேன்) வருகிற காலத்தாவல் time shift சிறுகதைக்கான அருமையான கரு. குறுங்கதையாக எழுதலாம். கலிங்கத்துப்பரணி மாதிரியான பாடல்கள் தருகிற கற்பனையை எந்த பேன்டசி ஹாரார் கதைகளிலும் திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. பேய்கள் காளியிடம் கதைக் கூறுவது என்பது எப்படியொரு கற்பனை! கலிங்கத்துப்பரணி முழுக்க வாசிக்க வாசிக்க திளைக்கச் செய்கிற ஆச்சர்யங்கள் அதிகம். கரு என்று நினைப்பதைவிட கதைசொல்லல் (நேரேட்டிவ்) தன்மைகளை சங்கக் கவிதைகளில் பார்த்து வியக்கலாம். அப்படியொரு நேரேடிவ் இன்னும் நம்மால் உரைநடையில் செய்ய முடியவில்லை. முதுபேய் ஒன்று இமயமலையிலிருந்து இறங்கி வருகிறது, அது காளியைச் சந்தித்து, காளியைச் சுற்றி பசியோடு இருக்கிற தொண்டுப் பேய்களுக்கு (காளியின் பேய்களெல்லாம் பசியாற முடியாமல் தம் உடல்களையே உண்டுகொண்டிருக்கின்றன வேபசிக்கு அலந்து பாதி நாக்கும் உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனோம்- கொஞ்சம் கண்களை மூடி கற்பனை செய்துகொள்ளுங்கள்!) அவைகளுக்கு இந்திரஜால வித்தையை நிகழ்த்திக்காட்டுகிறது இமயமலையிலிருந்து வந்த முதுபேய். அவ்வித்தையில் குலோத்துங்கனின் போர் அரங்கேறுகிறது. அதைப் பார்த்த காளியின் பேய்களெல்லாம் அது மாயவித்தையென்பதை மறந்து உண்மையான இரத்தமும் சதையும் கண்முன்னால் கிடைத்தவிட்டதெனத் தின்பதற்கு அலைகின்றன. 

வெறுக் கை முகந்து முகந்து

எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே. 

இரத்தம் ஓடுகிறது என்று வெறு நிலத்லை அள்ளிக் குடிக்கிறதாம். ஒருகட்டத்தில் இப்படி எங்கள் பசியை இந்த முதுபேய் வித்தைக்காட்டி ஏமாற்றுகிறது (பேய்கள் ஏமாறுகின்றன!) என்று முதுபேயை விரட்டக் கோரிக்கை வைக்கின்றன தொண்டுபேய்கள். இப்போது முதுபேயிடம் கேட்டக் கதையை காளி தன் தொண்டுபேய்களிடம் ”நீங்களெல்லாம் பசியாற கலிங்கப்போர் ஒன்று நிகழப்போகிற”தென குலோத்துங்கனின் படைபலத்தையும் அவனது திறமையையும் விவரிக்கிறபோதே கலிங்கத்தில் போர் தொடங்கிவிடுகிறது. அதைக் கண்ட கலிங்கப்பேய்கள் ஓடிவந்து சொல்கின்றன (உரைப்போர்க்கு நா ஆயிரமும் கேப்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டும்). கதை எப்படி போகிறது பாருங்கள். அதாவது, குலோத்துங்கனை ஒரு முதுபேய் அறிமுகப்படுத்த, காளி அதை மற்றப் பேய்களுக்குச் சொல்ல, போரைக் கண்டக் கலிங்கப்பேய்கள் வந்து விவரிக்கின்றன. என்னமாதிரியான கதைசொல்லல் இது!. இதுக்குப் பிறகு போர்க் காட்சிகள் வரும். குலோத்துங்கனின் யானைகள் மதம்பிடித்துக்கொண்டு சமர் செய்வதும் எதிரிகளின் யானைகள் இரண்டாக அறுபட்டு இரத்த ஆற்றில் படகுபோல கிடப்பதும் (குருதியின் நதிவெளி பரக்கவே குடை இனம் நுரையென மிதக்கவே) என அவ்வளவு பெரிய போரை பேய்கள் சொல்கின்றன. கலிங்கத்தைச் சொல்ல கவிஞர் எதற்காக பேய்களை கதாப்பாத்திரங்களாக்குகிறார்? அந்தத் தேர்வுதான் நமக்கு குலோத்துங்கனையும் கலிங்கப்போரையும் முன் ஊகிக்க வைக்கிறது. 

பரிபாடலை நாம் வாசிக்கிறபோது ஒரு திரைப்படம் தொடங்குவபோல ஆரம்பிப்பதைக் காணலாம். ஊர் விழிக்கிறது, திருமால் வணக்கம், வைகையில் நீர் வருகை, மக்கள் கொண்டாட்டம், ஊரின் பெருமை, மக்களின் பண்பாடு, தெய்வத் தொழுகை இதனூடே தலைவன் தலைவியைப் பிரிந்து தன்னை மட்டுமே விரும்புகிற இற்பரத்தையிடம் செல்கிறான், பிறகு தொழிலுக்காக இன்புறுத்தும் காதற்பரத்தையிடம் திரும்புகிறான், தலைவியின் கோபத்தை அறிந்து விறலியைத் தூதனுப்புகிறான். இங்கே இந்த நான்கு பெண்களின் உள்ளப் போக்குகள் வழியே அந்த உலகம் விரிகிறது. நான்கு பெண்களும் நான்கு திசைக்குரிய பண்புகளுடையவர்கள். நால்வரும் ஒருத்தொருக்கொருத்தர் தத்தமது உணர்வுகளைச் சொல்லி இன்னொருவருக்கு அதைக் கடத்துகிறார்கள்.

கதையை காளிக்குப் பேய்கள் சொல்வதாக இவ்வடிவத்தை இன்றைக்கு உரைநடை இலக்கியத்தில் சொல்ல முடியுமா தெரியவில்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் புனைவாசிரியர் அதற்கெனத் தன் மொழியைத் தயார் பண்ண வேண்டியிருக்குமா? மொழி கற்பனைக்கேற்ப தயாராவதில்லை, மொழியே கற்பனையை உருவாக்குகிறது. சரி, நம்மிடம் சங்கக்காலத்தில் உரைநடை வடிவம் இல்லையே? பிறகு எப்படி உரைநடையில்  இது சாத்தியமா என்று கேட்க முடியும் என்று கேள்வியெழுப்பலாம். நம்மிடம் கவிதைநடைதான் இருந்ததென்கிற கூற்றை நான் இப்படிப் பார்க்கிறேன், அதாவது, கவிதையின் மொழிதான் காளி, பேய்கள் என்கிற மனித உயிர்க்கு அப்பாற்பட்ட உருவிலிகளால் மனிதனின் கதையைச் சொல்ல முடிகிறது. கவிதைக்குள் மொழி சிதறுவதால்தான் இவ்வாறு கற்பனைகளை கொண்டுவர முடிகிறது. 

நான் இங்கு பக்தி இலக்கியத்திற்குள் போகவே இல்லை. அதனுள் இதே போன்று அவ்வளவுக்கவ்ளவு அழகியலையும் கற்பனைகளையும் காண முடியும். காரைக்கால் அம்மையாரின் தொன்மக்கதையே அபாரமான ஒர் உதாரணம்.

  • ஒரு நல்ல கவிதையில் இருந்து நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்னனென்ன விஷயங்கள்? அவை குறித்துச் சொல்லுங்கள்.

சுனில் கிருஷ்ணன் :

நல்ல கவிதை என என்னுள் தங்கியவற்றை குறித்து யோசிக்கிறேன். கவிதையில் ஒருவித பூடகமும் மர்மமும் இருப்பதாக தோன்றுகிறது. முழுவதும் தன்னை புலப்படுத்தாத கவிதைகள் நம்மோடு நீண்டநாள் இருப்பதாக எனக்கு தோன்றுவதுண்டு. அபியின் கவிதைகளைச் சொல்லலாம். இப்படிச் சொல்கையில் நேரடியான சொற்களில் உள்ளத்தை தீண்டும் இசை, மனுஷின்  கவிதைகள் பல நினைவுக்கு வருகின்றன. மொழி, சிந்தனையில் புதுமையை கொண்டு வசீகரிக்கும் பெருந்தேவியின் கவிதைகள் ஒரு பாய்ச்சலென்றால், ஆட்கொண்ட தீவிரத்தை முன்வைக்கும் ஸ்ரீவள்ளி கவிதைகள் பெரும் உவகை அளிக்கிறது. அகவயமான பதிலையே சொல்ல முடியும். அந்தரங்கமாக இந்த கவிதை பாவனை செய்கிறது என்று நான் உணராமல் இருப்பதே நல்ல கவிதைகளாக தங்கி நிற்கின்றன.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

ஒரு நல்ல கவிதை என்னை ஏமாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். முதல் வாசிப்பில் 'அட இவ்வளவுதானே!' என்று நினைக்கச் செய்துவிட்டு வெவ்வேறு தருணங்களில் தன்னைப் புதிதாக தோலுரித்துப் புது வடிவம்கொண்டு ஆச்சரியப்படுத்தும் கவிதைகளே என்னை அதிகமாக ஈர்க்கின்றன

தூயன் : 

உதாரணத்திற்கு வள்ளுவர் எழுதிய பசப்புறு பருவரலையே எடுத்துக்கொள்ளலாம். சங்கப் பாடல்கள் அதிகமும் காதலையும் காமத்தையும் பேசுகின்றன. அதில் அத்தனையிலும் பசலை நோய் பாடுபொருளாக உண்டு. பசலை பெண்களுக்கு மட்டுமே உரித்தான நோய். காதலால் மட்டுமே வருகிற நோய்,அதற்கு காதல் மட்டுமே மருந்து இல்லையா? பசலையை மற்ற சங்கப்பாடல்கள் அனைத்தும் (நான் வாசித்த வரையில்) அதை ஒரு நோயாகவும் சில இடங்களில் ஒரு வரம் போலவும் (நேர்மறையாக) சில இடங்களில் காதலனின் நினைவு அடையாளம் போலவும் பேசுகின்றன. கபிலர், பரணர், வெள்ளிவீதியார் இப்படி நிறைய புலவர்கள் பசலையை வெவ்வேறு பொருள்களுடன் உருவகப்படுத்துகின்றனர். விடுவழி விடுவழிச சென்றாங்கு, அவர் தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே என்று கலித்தொகையில் பசலைப் பகைவருக்கு உவமையாக்குகிறது. முல்லையும் குறிஞ்சியும் திரிந்த வெம்மை உற்ற நிலம் எனப் பாலையைக் குறிப்பிடுவதுபோல பசலைக் கண்ட தேகம் இருப்பதாகப் பாடுகிறார்கள். இவை எல்லாவற்றையும் விட வள்ளுவர், பசலையைப் பேசுகிற இந்த பத்துக் குறள்களின் வழியே அதற்கு ஓர் உருவம் தர முயற்சிக்கிறார். பசலையை தனக்குத் துணை என்கிறாள் தலைவி, விளக்கு அணைய இருள் காத்திருந்ததுபோல எப்போது காதலன் அகல்வான் என்று காத்துக்கொண்டிருக்கிறதென்கறாள்(பிசாசு மாதிரி), பசலை வந்து என்னை ஆட்கொண்டதென்கிறாள், பசலை ஒரு டிராகுலா மாதிரி இங்கு தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தனது இருப்பை மறைத்துக்கொண்டிருக்கிறது. பசலையை மட்டும் எடுத்து வாசித்தாலே இவ்வளவு விதவிதமான கற்பனைகளும் சிந்தனைகளும் நமக்குக் கிடைக்கும். சங்கப் பாடல்கள் முழுக்க போரும் காதலும்தான் அதிகம். இந்த நிலம் போருக்கும் காமத்திற்குமானது. 

ஒரு நோய்தான் அதை எத்தனை விதமாகச் சொல்ல முடிகிறது!. இந்த “விதம்“ என்கிற சொல்லைப் பிரக்ஞையில் ஏற்றாமல் இருக்க இன்றைக்கு முடிகிறதா என்று தெரியவில்லை. காரணம் மாற்றுப் பார்வையென்று நாம் எதைப் புரிந்துகொள்கிறோம்? வள்ளுவர் பசலையை எழுதும்போது சங்கப்பாடல்களில் அது பேசப்பட்டதை வாசித்திருப்பாரா? அல்லது மற்றக் கவிஞர்கள் பசலைப் பற்றி பிற பாடல்களில் தெரிந்திருப்பார்களா? ஒவ்வொரு நிலமும் அந்தச் சூழலும் பாடுபொருட்களும் அதற்கான மொழியை அளிக்கின்றன. குறுந்தொகையில் தொழிற்படுகிற சொல்லின் சந்தம் வேறு, அகநானூறில் வேறு, பரிபாடலில் வேறு, கலிங்கத்துப்பரணியில் வேறு. ஆனால் அகநானூறுக்குள்ளோ குறுந்தொகைக்குள்ளோ வருகிற அத்தனை புலவர்களின் லயமும் சொற்களும் வெவ்வேறாக இருக்கின்றன. பரணருக்கும் கபிலருக்கும் வித்தியாசம் உண்டு  (இதை இவர்தான் பாடினாரென்று சொல்லுமளவு பாண்டித்தியம் எனக்கு இல்லை.) இருந்தாலும் பாடுபொருள் சார்ந்து அத்தனையும் ஒன்றாகிறது. ஒவ்வொரு கவிஞனும் வேறு வேறு திணைகளை, அரசர்களை, பூக்களை, நிலங்களை பாடியபடி ஆனால் அத்தனைபேரும் அகத்தைச் சொல்கிறார்கள். அதாவது, உள்ளுக்குள் எத்தனை முறைமை (pattern) இருக்கிறது.  இப்போது நாம் ஒட்டுமொத்த அகப்பாடல்களையும் அத்தனையும் இன்றையக் காலத்திலிருந்து வாசிக்கிறோம். எல்லாம் ஓவியத்தின் வெவ்வேறு முகபாவங்கள் என்றால் Gaze மாதிரியான ஒன்றைக் கற்பனைப் பண்ண முடிகிறது. இன்றைக்கு எழுதப்படுகிற கவிதைகளில் இந்த ஒழுங்கை நம்மால் எட்ட முடிந்தால் ஆச்சர்யம்தான். 

இத்தனை வடிவங்களையும் மரபுக்கவிதையிலும் புதுக்கவிதையிலும் செய்து காட்டிய முதலும் கடைசியுமான கவிஞன் பாரதியாகத்தான் இருக்க முடியும். 

  • உங்களது வாசிப்பில், கவிதை எனும் வடிவம் சந்திக்கிற சவால்கள்/ பிரச்சனைகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? 

சுனில் கிருஷ்ணன் :

கவிதை உயர்ந்தது. அந்த மதிப்பின் காரணமாகவே அதிகமும் போலி செய்யப் படுகிறது. எல்லா காலத்திலும் உள்ளது தான். வடிவ ரீதியாக தனது எல்லைகளை காலத்துக்கேற்ப புதுப்பித்துக்கொண்டே தான் இருக்கிறது.  மற்றபடி எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஒரே வித நெருக்கடிகளைத்தான் இன்றைய காலத்தில் எதிர்கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

இன்றைய கவிதையின் பலம் மற்றும் பலவீனம் என இரண்டுமே அவற்றின் பரவலாக்கம்தான் என்று எண்ணுகிறேன். பரவலாக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய கவிதையும் ஒரு நல்ல கவிதையிலிருந்து நல்லதைப் போலிருக்கும் ஒரு கவிதையை வேறுபடுத்திப் புரிந்துகொள்வதில் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஏதேனும் ஒரு கவிதை பரவலான கவனத்தைப் பெற்றுவிடும்போது உடனடியாக அக்கவிதையின் எண்ணற்ற நகல்கள் நடமாடத் தொடங்கிவிடுகின்றன. அங்கிருந்து தொடங்கும் ஒருவருக்கு சிறந்த கவிதைகளைத் தேடிக் கண்டடைவதற்கான வழி இன்னும் கடினமாக மாறியுள்ளது. 

தூயன் : 

சங்கக் கவிதைகளில் புழங்கிய சந்தம் அணி பண் சீர் இதெல்லாம் இல்லாத சுதந்திரமான வடிவமென நவீனக் கவிதைக்கு நாம் வந்தபோது இத்தனையாலும் சமைகிற கதைப்பாடலுடன் கற்பனையையும் சேர்த்தே கலட்டிவிட்டுவிட்டோமோ என்கிற ஐயம் உண்டு. இப்போது நம்மிடம் கவிதைசொல்லி மட்டுமே எஞ்சியிருக்கிறார் கூடவே அவரிடம் சில போத்தல்களும் கோப்பைகளும் லிங்கமும் யோனியும் மிச்சம்.

அதற்காக நாம் மறுபடியும் மரபுக் கவிதைக்கும் சங்கப்பாடல்களுக்கும் போக வேண்டுமா என்று கேட்கவில்லை. இன்றைக்கிருக்கிற இந்த வடிவமும்கூட கவிதையால்தான் நிகழ்ந்திருக்கிறது. கவிதைதான் முதலில் தனது வடிவத்தைக் குலைத்தது. பாம்பு சட்டை உரிப்பதுபோல, தன்னை நிர்வாணமாக மாற்றிக்கொள்வதுபோல கவிதையால் மொழிக்குள் இத்தனை லாவகங்களை நிகழ்த்த முடிகிறது. இப்போது அது எதிர்கவிதைக்குத் திரும்புகிறது. கவிதைப்போல தன்னைத்தானே தற்கொலை செய்துகொள்கிற (துணிந்து!) வெறொரு வகைமை இலக்கியத்தில் இல்லை.

இத்தனை சாதனையும் கவிதை நிகழ்த்தியபின்னும் எங்கோ ஒரு ரசத்தைத் தவறவிடுவதாக உணர்வது இல்லையா? உங்கள் கேள்வியே அதனால்தானே எழுகிறது. இந்த நூற்றாண்டில் இலக்கியம் எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால் என “பேசாதவற்றைப் பேசுதல்” என்கிறார் டி.தருமராஜ். அது கவிதைக்கும்தான். ஆனால் அது, தான் தொலைத்த அத்தனைக் கற்பனைகளையும் வைத்துக்கொண்டு பேசாதவற்றை எப்படிப் பேசப்போகிறது என்றுதான் தெரியவில்லை.

  • உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்/ பிடித்த கவிதைகளைக் குறித்துச் சொல்லுங்கள். வாய்ப்பிருந்தால் ஏன் என்பதையும் பகிரலாம்.

சுனில் கிருஷ்ணன் :

எனக்கான கவி என ஒருவரை முதல்முறையாக உணர்ந்தது கல்பற்றா நாராயணனைத்தான். பிடித்த கவிதைகள் கவிஞர்கள் பற்றி என்றால் ஒரு தொடர்தான் எழுத வேண்டும். ஆக சமீபத்திய பித்து என்பது பிரம்மராஜன் மொழியாக்கம் செய்த பிரெக்ட் கவிதைகள் மீது. என் நாவலின் தரிசனத்திற்கு  பிரெக்ட் கவிதைகள் ஒரு கருவியாக இருந்தது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் : 

க.மோகனரங்கன், தேவதச்சன், சுகுமாரன், இசை, முகுந்த் நாகராஜன் ஆகியோரின் கவிதைகளை விரும்பி வாசித்திருக்கிறேன். 

முகுந்தின் எனக்குப் பிடித்த கவிதை ஒன்றை இங்கே தருகிறேன். ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்கவே தேவையில்லை என்பதே கூடுதலாகப் பிடிப்பதற்கு ஒரு காரணம். 

நீர் தெளித்து விளையாடுதல்

முன் பின் பழக்கம் இல்லாத

பயண வழி உணவு விடுதியில்

சாப்பிட்டு விட்டு

கை கழுவப் போனேன்.

சாதாரண உயரத்தில்

இரண்டு வாஷ்பேசின்களும்

மிகக்குறைந்த உயரத்தில்

ஒரு வாஷ்பேசினும் இருந்தன.

கை கழுவும்போது

காரணம் தெரிந்து விட்டது.

குள்ள வாஷ்பேசின் முன்

இல்லாத குழந்தையின் மேல்

செல்லமாக தண்ணீர் தெளித்து

விளையாடி விட்டு

விரைவாக வெளியே வந்து விட்டேன்.

தண்ணீர் என்றதும் சுகுமாரனின் இந்தக் கவிதை நினைவுக்கு வந்தது. முகுந்தின் கவிதை குழந்தைகளின் எளிய உலகத்தோடு நாம் பரிச்சயம்கொள்ளும் தருணத்தை கவிதையாக்குகிறது. சுகுமாரனுடையதோ மாபெரும் பிரபஞ்சத்துடன் நம்மை எங்கே பொருத்திக்கொள்வது என்ற தத்தளிப்பைக் கவிதையாக்குகிறது. இரண்டிலும் இருப்பது ஒரு கை நீர்தான் என்றாலும் இரண்டுக்கும் எவ்வளவு பார தூரம்!

கையில் அள்ளிய நீர்

அள்ளி

கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்

நதிக்கு அந்நியமாச்சு

இது நிச்சலனம்

ஆகாயம் அலை புரளும் அதில்

கை நீரை கவிழ்த்தேன்

போகும் நதியில் எது என் நீர்?

தூயன் : 

ஓரளவுக்கு சங்கப் பாடல்களில் வாசிப்பு உண்டு. குறிப்பாக பரணரின் பாடல்கள் பிடிக்கும். அகம் புறம் சார்ந்து கபிலர் அதிகம் எழுதியிருந்தாலும் பரணர்தான் எனது தேர்வு. ஏனென்றால் எப்படி இவரால் ஒவ்வொரு பாடல்களிலும் வரலாற்றுத் தரவுகளை இவ்வளவு அழகாய் சரடாக்க முடிகிறதென ஆச்சர்யம். குறுந்தொகையில் தலைவி தலைவன் உறவைத் தோழி கூறுகிற இடத்தில் ”உங்கள் இருவருடையக் கதை, வாகைப்போரில் பசும்பூண் பாண்டியனுக்காக இறந்த அதிகனின் சாவைக் கொங்கர்கள் பேசியதைவிட அதிகமாகத்தான் ஊர்ப்பேசுகிறது” என்கிறார். நம் ஊர்களில் திண்ணைகளில் அமர்ந்து பெருசுகள் பேசுகிறதாட்டம் இருக்கிறது இந்தத் தொனி. அகநானூறு பாடல் ஒன்றில் தலைவன் வருகையின் தடையைச் சொல்கிற தலைவி, ஊர் உறங்கினாலும் தாய் உறங்கவில்லை, தாய் உறங்கினாலும் காவலன் உறங்கவில்லை, காவலன் உறங்கினாலும் நாய் உறங்கவில்லையென்று அடுக்கியபடியே வந்து உறையூர் அரசன் தித்தனும் விழித்துவிடுவான் என்பதாக ஓர் இடைச் செறுகல் வரும். இப்படி ஒவ்வொரு பாடலிலும் எப்படி இத்தனையும் கொண்டு வருகிறாரென வியந்திருக்கிறேன். 

நவீனக் கவிதைகளில் சி.மணி, ஞானக்கூத்தன், பெருந்தேவி இவர்களது கவிதைகள் பிடிக்கும். அன்றாடத்தில் நிகழும் சில அனுபவங்களை இக்கவிதைகள் நினைவூட்டும். சி.மணியின் “வரும் போகும்“, “நிலவு“ 

நல்ல பெண்ணடி நீ 

முகத்திரை இழுத்துவிட இரண்டு வாரம் 

முகத்திரை எடுத்துவிட இரண்டு வாரம் 

வேறு வேலையே இல்லையா 

உனக்கு 

ஞானக்கூத்தனின் “சைக்கிள் கமலம்“, “கீழ்வெண்மணி“, “குரங்குள் பேசுகின்றன" பெருந்தேவியின் கவிதை ஒன்று, நவீன வாழ்வின் அதிகாரத்தின்மீதான் ஆசையின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துகிற கவிதை.

தம்ளர் காப்பியில் ஓர்  எறும்பு நீந்திச் செல்கிறது 

கடவுளைப் போல் நான் சக்தியோடிருக்கிற 

அபூர்வத் தருணம் 

எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன் 

உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத் 

தூக்கித்தான் கும்பிடேன்

இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் சில சங்கச் சித்திரங்களை வரைய யத்தனிக்கும். அத்தகைய இடங்களில் அவ்வுலகம் கார்காலத்தில் சிரிக்கும் அந்திச் சூரியனாட்டம் எட்டிப்பார்க்கும்

கண்டராதித்தன் கவிதைகள் எனக்கு எப்போதும் பிடிக்கிறது. காரணம் அவருடையது ஏதோவொருவிதத்தில் சங்கப்பாடல்களுக்கு நெருக்கமானதான உள்ளது. அல்லது நான் அப்படி வாசிக்கிறேனா தெரியவில்லை.

உன் அன்பிற்கும் பிரியத்திற்குமிடையில் 

காரணங்களற்ற வெறுப்பும் கசப்பும் திரண்டுவிட்டது

அந்தத் தாழி உடைந்தால் அதுதன்னுடையதே என

இந்த இரவும் பகலும் மாய்ந்து கொண்டன 

ஒரு பகலில் நானுமு ஒரு இரவில நீயும் 

சமாதானத்துடன் பிரிந்துகொண்டோம் 

உடையாத தாழியொன்று இரவுக்குமு பகலுக்குமாய்

ஆடிக்கொண்டிருக்றது தீராத துக்கத்தோடு

இந்தக் கவிதை மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் மாதிரியான சங்கக் கவிதையின் பிரிதல் நிமித்தங்களுக்கு நிகரானது. கண்டரின் இப்பிரிதலில் சங்கக்கவிதையில் சொல்லப்படாத இருவருக்குமான சமாதானம் ஒன்று தலைப்படுகிறது அற்புதம். அம்சம் என்கிற கவிதையில் வருகிற பிருஷ்டத்தில் ஆடியக் கூந்தலை வலக்கையால் அள்ளி வரப்புகளைத் தாண்டி எனும் கற்பனை வள்ளுவரின் புல்லிக்கிடந்தேன் குறளில் வரும் காலத்தாவலைக் கொண்டுவருகிறது. கண்டராதித்தனின் கவிதைசொல்லி அதிஷ்டவசமாக சங்கக்காலத்தில் வாழ்கிறார். நல்ல கொடுப்பினை.

***



***
Share:

ஒண்முகில் ஒளிர்வு - கடலூர் சீனு

1

மரபின் பின்புலத்தில் பண்டிதர்கள் தங்கள் இலக்கணக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்திருந்த கவிதை அனுபவதை, தனது சோதி மிக்க நவ கவிதைகளுக்குள் பொதிந்து அதை ஜனநாயகப்படுத்திய முன்னோடி கவி சுப்ரமணிய பாரதி. ஹைகூ முதல் நாட்டுப்புற பாடல் வரை பல்வேறு வடிவங்களை தனது கவிதைகளுக்குள் கொண்டுவந்தவர்.

அங்கே துவங்கிய நவீன கவிதைக்குரிய பரிணாம வளர்சி, க நா சு வழியே புதுக்கவிதை என பெயர்பெற்று பல்வேறு  விமர்சகர்கள் வழியே நா பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, சுகுமாரன் போல பல்வேறு புனைவாளர்கள் வழியே அதன் வடிவமும் கூறுமுறையும் அழகியலும் உச்சம் தொட்டது. வெகு ஜன கவிதைகளுக்கு நேர் எதிராக வளர்த்த இக்கவிதைகள் இந்த வளர்சி நிலையின் ஒரு பகுதியாக (கவிஞர் அபி) அருவக் கவிதைகள், (கவிஞர் பிரமீள்) படிமக் கவிதைகள் போன்ற அழகியல் வழியாக எல்லாம் பயணித்து  நவீன கவிதை தனது செறிவு ஆழம் இவற்றை அடைந்தது.

நவீன கவிதைகள் கொண்ட இந்த பரிணாம வளர்ச்சியின் முரண் இயக்கமாக அமைந்த  இசை, முகுந்த் நாகராஜன், டிப் டிப் டிப் ஆனந்த குமார், மதார் என்று தொடரும் ஒரு கவி வரிசை உண்டு. (பிரமிள் உள்ளிட்ட இன்ன பிறர் எழுதிய சரியாக வராது போன ஆக்கங்களை வாசிக்கும் போது, அவர்கள் தங்கள் கவிதையின் அழகியலுக்கு "சேர்த்த விஷயங்கள்" எல்லாம் டெட் வெயிட் என இண்ட முள் புதர் ஆக மாறி நிற்பதை காணலாம். இண்ட முள் புதருக்குள்  அதன் முட்களின் வடிவ லாவகம் அறிந்தே கையை நுழைக்க முடியும். தவறாக அசைந்தால் அந்த புதருக்குள் சிக்கிக் கொள்வோம்). தங்கள் கவிதை வழியே  கவிதைக்கும் வாசகனுக்கும் இடையே இருந்த இண்ட முள் வேலியை இல்லாமல் செய்ததே தீவிர நவீன கவிதைக்குள் அவர்கள் கொண்டு வந்த வடிவ ஆசுவாசம். 

தீவிர கவிதை வெளிக்குள் முற்போக்கு இயக்கம், எழுத்து இயக்கம், வானம்பாடி இயக்கம் என்றெல்லாம் வளர்ந்த நவீன கவிதை பெரும்பாலும் நவீனத்துவ கவிதைகள் எனும் அழகியல் கொண்டே நிலை பெற்றது. அந்த நிலையை எதிர்த்து, அல்லது அதன் அடுத்த நிலையாக வந்தது பின்நவீனத்துவ கவிதைகள்.

பின்நவீனத்துவம் அடிப்படையிலேயே ஒரு குறை பிறவி. உதாரணமாக (எழுத்தாளர் அஜிதன் வசம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு உரையாடலில் அவர் சொன்னது இது) "உலகளாவிய உண்மை என்ற ஒன்று கிடையாது" என்பது பின்நவீனத்துவ பிரகடனம். அதுவே தன்னனவில்  உலகளாவிய உண்மை நிலை ஒன்றை குறித்த கூற்றுதானே. இந்த அடிப்படை கோணல் போல பல, அதில் இருந்து கிளைத்த, படைப்பு என்ற ஒன்று கிடையாது, பிரதியும் குறிகள் கொண்ட இயக்கம் இவை மட்டுமே உண்டு, ரசனை என்பது கட்டமைக்கப்பட்ட நுண்ணதிகாரம். ரசனை படிநிலைகள் என்பதெல்லாம் பாசிசம். இப்படி துவங்கி இன்னும் இன்னும் என பல உளறல்கள். இவை எல்லாமும்தான் தமிழுக்கு பின்நவீனத்துவ சிந்தனைகளாக வந்து சேர்ந்தது. அதன் விமர்சனம் புனைவாக்கம் இரண்டுமே சலிப்பூட்டும் கோட்பாட்டு குட்டிக்கரணங்களால் மட்டுமே ஆனது. அதன் ஒரு பகுதியான பின்நவீனத்துவ கவிதைகளில் நூற்றுக்கு தொண்ணூறு, மொழிச் சிதிலங்கள் என்பதன்றி வேறில்லை. (இதில் எதிர் கவிதைகள், சைடு கவிதைகள், நட்டுக்குத்து கவிதைகள் என்று பல்வேறு அழகியல்கள் உண்டு)  தெரு முனைக்கு சென்று மக்காத குப்பைகள் என்று பெயர் பொறித்த சிகப்பு டப்பாவில் போடப்பட வேண்டியவை அவை என்பதற்கு மேல் அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை.

மாறாக தமிழில் பின்நவீனத்துவ புனைவுகளை படைப்புத்திறனோடு உருவாக்கியவர்கள் என்று ரமேஷ் பிரேதன், பா. வெங்கடேசன், சாரு நிவேதிதா என்று வெகு சிலர் உண்டு. (இதில் பா. வெங்கடேசன் அவர்களின் புனைவு வெளி எனக்கானது அல்ல. ஆனால் அவர் படைப்புத்திறன் கொண்ட பின் நவீன புனைவாளர் என்பதே என் எண்ணம்) இதில் சாரு நிவேதிதா இங்கே இந்த வாழ்வில் இடையறாது கலந்திருக்கும் பின் நவீன அபத்த நிலையுடன் எங்கோ பொருந்தி இருப்பவர். அவரது புனைவுகள் அப்படி பொருந்தி இருக்கும் அவரது அந்த நிலையில் இருந்து எழுவது. 

ஒரு முறை கள்ளக்குறிச்சி ஊருக்கு பெரிய மனிதர் சாவு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மிக பெரிய குடும்பி. உறவுகள் கூடி 12 மணி நேரத்துக்கும் மேலாக சாங்கியங்கள் நடந்து கொண்டே இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு ஒன்று கண்டேன். அவருக்கு வாய்க்கரிசி யாக விழுந்தது கிட்டதட்ட ஒரு மூட்டை அரிசி. ஒரு மூட்டை அரிசி என்பது இருபத்தி ஐந்து கிலோ. ஒருவர் ஒரு பிடி வாய்க்கரிசி போடுவார். இப்படி போட்டுதான் 25 கிலோ அரிசி. ஒரு கணம் இதில் உள்ள அபத்தம் என்னை நிலை குலைய வைத்தது. சாரு அங்கே இருந்திருந்தார் என்றால் என்னை போலவே இதை பார்த்திருப்பார். (இதுதான் பின்னவீன அபத்தம்) ஆனால் சடங்குகள் மேல் கவனம் குவிக்கும் என்னை போல அன்றி, இந்த வாய்க்கரிசி மூட்டை அபத்தத்தை புனைவுக்குள் கொண்டு வந்திருப்பார். எது சொல்லப்படாததோ, எதை சொல்லக்கூடாதோ, எதை சொல்ல முடியாதோ அதை, இதையெல்லாமா இப்படியெல்லாமா சொல்வது என்று வாசகன் துணுக்குறும் வண்ணம் ஒரு வடிவில் மொழியில் அதை வெளிப்படுத்துவது அதுதான் சாரு. இத்தகு  சாரு நிவேதிதாவின் சமீபத்திய கவிதை தொகுதியான - சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் - வாசிக்கக் கிடைத்தது. நான் வாசிக்கும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.

2

பெரும்பாலான அறிமுக கவிஞர்களின் முதல் தொகுப்பு போல இதிலும் கவிதை குறித்தும் கவிஞன் குறித்தும் சில கவிதைகள் உண்டு. அதில் ஒன்று தேய் வழக்கை என்ன செய்ய நண்பா என்று கேட்கிறது. அது தெய்வழக்கு என்பதால் அதில் உள்ள உண்மை உண்மையின் மதிப்பை இழந்து விடுமா என்ன? மற்றொன்று கவிஞனாக தன்னை இரண்டாவது தேவன் என்றே பிரகடனம் செய்கிறது.

தொகுப்பின் முதல் கவிதையே முக்கியமான கவிதை. ஒருவன் கொண்ட நிழல் தொலைந்து போகிறது. அவனது அவஸ்தைகள் குறித்த கவிதை. சாதாரணமாக தோன்றும் இது உண்மையில் ஒரு விசித்திரமான உளவியல் வதை. எனது நண்பர் ஒருவர் வெளிநாடு சென்றார். அவர் சென்று இறங்கிய கால சூழல் விநோதமானது. அவர் அங்கே போன நாள் துவங்கி சூரியனையே மூன்று மாதம் கழித்துதான் முதன் முதலாக பார்த்தார். தனது நிழலை பல மாதம் கழித்து முதன் முதலாக கண்ட பரவசத்தை பகிர்ந்து கொண்டார். பின்னர் சென்று வாசித்த பிறகே அந்த நிலை அளிக்கும் உளவியல் அழுத்தம் எல்லாம் புரிந்தது. வெண்முரசு நாவலில் நிழலே இன்றி ஒளியில் எல்லாமே செயல்பாடு இன்றி உறைந்து நிற்கும் நகரம் ஒன்றின் சித்திரம் வரும். அந்த நகரத்தில் இருந்து வந்தவனின் கவிதையாக இதை மேலதிகமாக வாசிக்க முடிந்தது.

டியூரின் குதிரை வரும் ஐந்தாவது கவிதையில் முதல் பாதியில் இயங்கும் நிலமும் பொழுதும் உயர்திணையும் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறி விடுகிறது. பொசுக்கும் வெயிலில் இருந்து நடுக்கும் குளிருக்கு மாறும் இந்த தலைகீழாக்கம் வழியே அது வாசகனுக்கு அளிக்கும் உணர்வு அலாதியானது. 

பத்தாவது கவிதையும் இருபத்தி ஆறாவது இருபத்தி ஏழாவது கவிதையும் நேரடியாகவே  நடை சித்திர வடிவில் அமைந்தவை. 19 ஆவது கவிதை வாசகனை மனிதனை விட்டு பறவைக்கு கூடுபாய வைக்கிறது என்றால், 29 ஆவது கவிதை விளிம்பு நிலை வாழ்வின் மௌன சாட்சியாக வாசகனை நிறுத்துகிறது. 21 ஆவது கவிதை மகிழ்சி எனும் நிலை மீதான வினோத உளவியல் தருணம் ஒன்றை தீண்டி பார்க்கிறது.

தொகுப்பின் 20 ஆவது கவிதை  அழகிய வடிவம் கொண்டது. அதில் ஐந்து பகுப்பில் இருக்கும் ஒவ்வொன்றும் ஒரு தனி கவிதை. மொத்தமாக படித்தால் ஒரே கவிதை. மாய யதார்த அழகியல் கொண்டு அமைந்த அழகிய கவிதை. நேரடியாகவே ஜோக் ஆக அமைந்த கவிதை, பகடிக் கவிதை, விமர்சனக் கவிதை என பல்வேறு வகைகளை கொண்ட கவிதைகள் கொண்ட இந்த தொகுப்பு பிரமீள் கவிதை, பேலா தார் திரைப்படம், சங்க கவிதைகள் கொண்ட அழகியல் என பல்வேறு மூலகங்களில் இருந்து தனக்கான வெளிப்பாட்டு உருவங்களை எடுத்துக்கொள்கிறது.

3

நாம் ஒரு கார் வாங்க விரும்புகிறோம். இதுவரை இருக்கும் மாடல் தாண்டி புதிய மாடல். முழு விலையும் முன் பணமாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதியில் நேரில் வந்து புதிய காரை வாங்கி செல்லுங்கள் என்று ஒரு விளம்பரம் கண்டு அதன்படியே நடக்கிறோம். நாள் வருகிறது. ஷோ ரூம் போகிறோம். இந்தாருங்கள் உங்கள் கார். எடுத்து செல்லுங்கள் என்று சொல்லி பெட்டி ஒன்று தருகிறார்கள். நாம் ஆவலுடன்  திறந்து பார்க்கிறோம். உள்ளே நிறைய காயலான் கடை பொருட்கள் மட்டும் கிடக்கிறது. பதறி போய் என்னையா இது என்று கேட்கிறோம். இது பின்னவீன காலத்தை சேர்ந்த "எதிர்" கார். இது இப்படித்தான் இருக்கும். ஒட்டி செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நாம் என்ன செய்வோம் கையில் கிடைத்தை எடுத்து ஆசாமி மண்டையை உடைப்போமா மாட்டோமா.

கடந்த பல வருடமாக பின்னவீன கவிதைகள் என்ற பெயரில் வரும் நூற்றுக்கு 75 கவிதைகள், இந்த எதிர் கார் போன்ற எத்துவாளித்தனம்தான். வெறும் மொழிச் சிதிலம். ஏனய்யா இப்படி என்று கேட்டால் வாசக பங்கேற்பு என்ற பெயரில் கோட்பாட்டு குச்சியை ஆட்டி நம்மை குரங்கு போல தாவ சொல்வார்கள். அப்போதுதான் அவர்களின் மொழிச் சிதிலத்தில் சிக்கி சின்னாபின்னம் ஆகி கிடக்கும் கவிதை கண்ணுக்கு தெரியும் என்று சொல்வார்கள்.  

இத்தகு பைத்தியக்கார தனங்களில் இருந்து விலகிய, பின்னவீன கூறுகளை கையாண்ட, அதே சமயம் கவிதை அனுபவத்தை தவற விடாத தொகுப்பு இது. பின்னவீன கூறுகளை எடுத்தாண்ட கவிதைகள் என்றுதான் சொல்கிறேனே அன்றி இவை முற்ற முழுதான பின்நவீனத்துவ கவிதைகள் என்று நான் சொல்லவில்லை. 

இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் கொண்ட பின்னவீன கூறுகள் என்னென்ன? முதலாவதாக பேச்சு மொழி. சனிக் கிழமையும் அதுவுமா என்று ஒரு கவிதை துவங்குகிறது. இரண்டாவதாக வலிமையான படிமங்கள், உட் சிக்கல்கள் போன்ற எடைகளை உதிர்த்து விட்டு அதனால் இலகுதன்மை பெற்று பறந்து எழ முயலும் நிலை. கவிதைகளுக்குள் வரும்  தேன்சிட்டு இந்த நிலையின் பிரதி நிதியாகவே வருகிறது.  மூன்றாவது இந்த கவிதைகளை தொடலாம், பார்க்கலாம், நுகரலாம் என்பதை போன்ற புலன் மயக்கத்தை அளிக்கும் சித்தரிப்புகள். நான்காவது இந்த தொகுதி ஒவ்வொரு கவிதையாக தனித் தனியாகவும் மொத்தமாகவும் அளிக்கும் கசப்பே அற்ற இனிய வாசிப்பு இன்பம். ஐந்தவதானதும் அதி முக்கியமானதுமான இரண்டின்மை என்பது அளிக்கும் இனிமை. அந்த இனிமையின் உச்சம் ஒன்பதாவது கவிதையில் உள்ளது. 

இவை போக பின்நவீனத்துவம் பிரதிநிதித்துவம் செய்த முக்கிய அம்சமான வெளிப்படைத் தன்மை. (இங்கே வெளிப்படை தன்மை என்பது தபு சங்கர் போன்றோரின் கேளிக்கை கவிதைகளில் இருக்கும் வெளிப்படை தன்மை அல்ல) உள்ளபடிக்கே பாரங்களை உதறி இலகு கொண்டு எழ வைக்கும், அந்த விடுதலையை அளிக்கும் வெளிப்படைத் தன்மை. "உள்ளே" ஏதோ இருக்கிறது என்று கிண்டிக்கொண்டு கிடக்காமல் எது அளிக்கப்பட்டிருக்கிறதோ அதில் வெளிப்படையாக எல்லாம் இருக்கிறது எனும் தன்மை. மூளையை சற்றே மூட்டை கட்டி வைத்து விட்டு புலன் அனுபவம் போல காதல் போல கவிதைகளில் ஈடுபாடு கொள்ள செய்யும் தன்மை.

பூமியில் இருந்து பார்த்தால் நமக்கு மிக அருகில் இருக்கும் நெபுலாக்களில் ஒன்று ஹெலிக்ஸ். நட்சத்திரத்துக்கான கச்சா பொருட்கள் எல்லாம் அடங்கியது. ஆனால் நட்சத்திரம் அல்ல. ஒரு புகை மண்டலம் மட்டுமே. ஆனால் நட்சத்திரம் உமிழும் ஒளியை விட வசீகரமான வர்ண ஜாலம் கொண்ட ஒளியை தன்னில் கொண்டது. நல்ல நவீன கவிதைகளை வடிவத்தால் வெளிப்பட்டால் நட்சத்திரங்கள் என்று கொண்டால், நல்ல பின்னவீன (கூறுகள் கொண்ட) கவிதைகளை நெபுலாக்கள் என்று சொல்லலாம். அத்தகு நெபுலாவின் வர்ண ஜாலம் கொண்டது சாரு திவேதிதாவின் 

சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம் என்ற தலைப்பில் அமைந்த இந்த கவிதை தொகுப்பு.

பின்குறிப்புகள்:|

  1. இந்த கவிதை தொகுப்பு சற்று இடைவெளி விட்டு இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் சாரு எழுதிய கவிதைகள் அடங்கியது. முதல் வருடம் எழுதிய கவிதைகள் தொகுப்புக்குள் - காற்றிலாவது - எனும் தலைப்பில் முதல் பகுதி என்றும், அடுத்த வருடங்களில் எழுதிய கவிதைகள் - உதிர்ந்த நட்சத்திரங்களின் ஒரு குரல் பாடல் - எனும் தலைப்பில் இரண்டாம் பகுதி என்றும் தலைப்பிட்டு ஒரே கவிதை நூலாக தொகுப்பாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இந்த இரண்டு பகுதியில் ஒவ்வொன்றும் தனி தனி கவிதை தொகுப்பு என்றும், இரண்டும் ஒரே தொகுப்பு என்றும் வாசிக்க முடியும். அதில் காற்றிலாவது எனும் முதல் பகுதியை மட்டுமே பேசுபொருளாக கொண்ட கட்டுரை இது. இரண்டாம் பகுதி குறித்து மேலதிகமாக பேச சில உண்டு என்பதால் அதை தனி கட்டுரையாக பிரிதொரு சமயம் எழுதுவேன். 
  2. தொகுப்பில் இருந்து ஒரே ஒரு கவிதை வரியை கூட மேற்கோள் காட்டாது இந்த கட்டுரையை எழுதவேண்டும் என்பதை போதபூர்வமாகவே செய்திருக்கிறேன். இந்த தொகுப்பை பொறுத்த வரை ஒரே ஒரு வரி எனினும் வாசகர்கள் அதை நூலுக்குள் சென்று வாசிக்கட்டும் என்று ஒரு எண்ணம்.
  3. நெபுலா மண்டலத்துக்கு தமிழில் ஒண்முகில் என்று பெயர்.
***

***

Share:

என்னில் எடுத்ததொரு நான்... - மதார்

வி.சங்கரின்  கவிதைகள் ஒரு பாடலுக்குரிய ஒழுங்கில் எழுதப்பட்டுள்ளன. இன்று உன்னைக் காணவில்லை, என்னில் எடுத்தல் ஆகிய எளிய புள்ளிகளில் கவிதை சூல்கொண்டு நிகழ்ந்துவிடுகிறது. ஒரு கோணத்தில் ஒரு பக்திப் பாடலின் தன்மையோடு கடவுளிடம் பக்தன் வைக்கும் உரையாடலின் தன்மையில் தெரிகிறது. இன்னொரு கோணத்தில் பற்றி எரியும் காதலின் தீவிரத்தில் காதலனின் குரலாக அமைகிறது. 

என்னில்

எடுத்து முடைக

நரம்பொரு யாழ்

என்ற வரிகள் அழகாக முடையப்பட்டுள்ளன. அந்தக் கவிதையே கூட.

என் இல் துடைத்து வைத்துவிட்டேன் நீ இன்னும் வரவில்லையே என்று கேட்கும் குரல் எவ்வளவு அழகானது. அவருக்கென்று பிரத்யேகமான புனைவுலகம் ஒன்றை தன் கவிதைக்குள் பின்னியிருக்கிறார். அதற்குள் முட்டி மோதி எழும்பும் கவிதைகள் மொழியழகு மிக்கவை. அது அல்லாது வெளியுலகை தன் உலகுக்குள் இழுத்து வந்து எழுதப்படும் கவிதைகளும் மொட்டு மலரும் தருணத்தில் நிற்கின்றன. அவை முழுதாக விரியும்போது வி. சங்கரின் கவிதைகள் இன்னும் பரந்துபடும் என்று தோன்றுகிறது. வி.சங்கரை கவிஞனாக அடையாளம் காட்டும் கவிதைகள் இவை. 

1

வெளி மீபெரிது

குருவி நாம்

இங்கு வந்தோம்


காடு விடுத்து அதில்

சிறு வீடு செய்தோம்


வீடு விடுத்து அதில்

சிற் றகம் செய்தோம்


அகம் விடுத்து அதில்

சிறு சேக்கை செய்தோம்


சேக்கை விடுத்து அதில்

சிறு கூடு செய்தோம்


குறுகிபடுத்து அதில்

சிறு குருவி ஏய்தோம்

2

என் இல் துடைத்து வைத்திருக்கிறேன்

இன்று உன்னை காணவில்லை


சிறு விளக்கு சுடர் ஏற்றியிருக்கிறேன்

இன்று உன்னை காணவில்லை


மணற்மேடுகளை பார்த்திருக்கிறேன்

இன்று உன்னை காணவில்லை


ஞாயிறும் திங்களும்

என் தலை மேல் போட்டிருக்கிறேன்

இன்று உன்னை காணவில்லை


தேடாத இடம் தேடியிருக்கிறேன்

இன்று உன்னை காணவில்லை


தேடிய இடத்தில் காத்திருக்கிறேன்

இன்று உன்னை காணவில்லை.

3

என்னில் 

எடுத்து உண்ணுக

ஊன் ஒரு பருக்கை


என்னில்

எடுத்து தீட்டுக

என்பு ஒரு ஈட்டி


என்னில் 

எடுத்து முடைக

நரம்பொரு யாழ்


என்னில்

எடுத்து மீட்டுக

தோலொரு ஓசை


என்னில் 

எடுத்து நிறைக


என்னில்

எடுத்ததொரு நான்

***

Share:

சில தமிழ் கவிதைகள் - மு. சுயம்புலிங்கம்

 ரசம் அழிந்த கண்ணாடிகள்

அந்த குப்பமேட்டில்

அங்க அங்க

தீ எரிஞ்சிக்கிட்டு இருக்கு.


ஆளுக்க

எது எதையெல்லாமோ பெறக்கி

பத்தரப்படுத்துதாக.


ஒரு சின்னக் கொழந்த

தனியா உக்காந்திருக்காள்.

அவா கைல

ஒரு சானிட்டரி டவல் இருக்கு

அசிங்கமா இருக்குது அது.

அந்த தீட்டுத் துணிய

கைட்டுப் பெசைறா

வாய்ல வச்சிக் கடிக்கிறா.

அந்த வெளையாட்டு

போர் அடிச்சதும்

தீட்டுத் துணியை தூர எறிஞ்சுட்டு

குப்பையை அள்ளி

தல மேல போட்டுக்கிறாள்.

சந்தோசம் தாங்க முடியல அவளுக்கு

குழந்தை குலுங்கிக் குலுங்கி

சிரிப்பாச் சிரிக்கிறது.


அழாமல்

சிரிச்சி வௌயாண்டுக்கிட்டு இருக்கு

கொழந்த.


அலஞ்சி திரிஞ்சி

அந்தப் பெரிய குப்பமேட்டில்

உடைந்த பீங்கான்கள்

பெறக்கிக்கிட்டு இருக்கா

தாய்.

***

எஜமானர்கள்

எங்கவூர் கழுதைகளுக்கு

காதுகள்

அறுக்கப்பட்டிருக்கும்.


உடம்பெங்கும்

சூடு போட்ட

தழும்பு இருக்கும்.


எஜமான்

கழுதைகளுக்கு

இரை போட மாட்டான்

தண்ணீர் காட்ட மாட்டான்.


முதுகில்

ஏற்றி வைத்த பொதிகளை

கண்ணீரோடு சுமக்கும்

கழுதைகள்.


கழுதைகள்

தப்பிச் செல்லமுடியாது.

அவைகளுக்கு

முன்கால்கள்

தழையப்பட்டிருக்கின்றன.


கழுதைகள்

நொண்டி நொண்டி

தானாகவே மேய்ந்துகொள்ளும்.


கழுதைகள்

குடும்பம் நடத்துகின்றன


கழுதைக் குட்டிகள்

அழகாக இருக்கின்றன.

***

பிறந்த ஊர்

வருசம்

போனது தெரியாமல்

போய்விட்டது.


பட்டணத்துக்கு வந்து

நாற்பத்தைந்து ஆண்டுகள்

ஆகிவிட்டன.


பிறந்த ஊருக்கு

புறப்பட்டேன்.

ஒரு வனாந்தரத்தில்

என்னை இறக்கிவிட்டது

பஸ்.


ஐந்து கிலோமீட்டர் நடை

வெயில்

முள்

பனைமரங்கள்

ஒத்தையடிப்பாதை.


மணல் சுடுகிறது

உடம்பு வியர்க்கிறது

தாகம்.


ஒரு முள்மரத்து நிழலில்

இளைப்பாறுகிறேன்,

எனக்கு முன்னே

என்னுடைய கிராமம்.


என்னைப் பார்த்து

நாய்கள் குரைக்கின்றன

பன்றிகள் ஓடுகின்றன

கோழிகளும்

சேவல்களும்

பயத்தில் கெக்கரிக்கின்றன.


சிறுவர்கள்

வேம்படியில்

வேப்பங்கொட்டை

சேகரிக்கிறார்கள்.


தெருவெங்கும்

அடுப்புச் சாம்பல்.

உடைந்து நொறுங்கிய

மண்பானை ஓடுகள்.


ஒரு பாட்டி

ஒரு ஓலையை மடித்து

அதில்

தீக்கங்குகள் எடுத்து வருகிறாள்.


ஒரு அண்ணாச்சி

முறுக்குத் தடியில்

அருவாள்

தீட்டிக்கொண்டிருக்கிறார்.


ஒரு பெண்

தன் குழந்தையை

மடியில்

கிடத்தி

சீழ் துடைத்துக்கொண்டிருக்கிறாள்.


தெருவில்

கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு

குழந்தை தலைக்கு

தண்ணீர் ஊற்றுகிறாள்

ஒரு தாய்.

குழந்தை உடம்பு முழுவதும் புண்

தண்ணீரில்

மஞ்சள் வேப்பிலை.


கருவாடு சுடுகிற வாசனை

காற்றில் மிதக்கிறது.


ஒரு திண்ணையில்

இரண்டு குழந்தைகள்

கஞ்சி குடிக்கிறார்கள்.


தெருக்கோடி

எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து

நிற்கிறேன்.


வீடு இருந்த இடத்தில்

ஒரு குப்பைமேடு

ஒரு பெரிய கருவை மரம்

இரண்டு கழுதைகள்

படுத்துக் கிடக்கின்றன.


தெருவில்

புழுதி

வெயில்.

***

மு. சுயம்புலிங்கம் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி



மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங்காமல், இந்த ராக – காட்சி, பாடல் வரி – இசை தொடர்புறுத்தல்கள் வெறும் சமரசமாக, மனம் நிகழ்த்தும் சித்து விளையாட்டாகவும் அமைந்துவிடலாம். அவை மாற்றுப் புலனனுபவமாக (synesthesia) மாறாமல் சில நேரங்களில் மனப்பிதுக்கங்களாக (mental projections) மட்டுமே நின்று விடுகின்றன. இதனால் தான் வரிப்பாடல்கள், சினிமாப் பாடல்கள் அவ்வளவு பிரபலமாக இருக்கின்றன. வெண்ணிலாவின் தேரில் ஏறி சைதாப்பேட்டை சென்று இறங்கும் காட்சி ஒன்று முகுந்த் நாகராஜன் கவிதையில் வரும். ஆரம்பகட்டத்தில் அப்படி எதாவது ஒன்றை பிடித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. உங்கள் வெண்ணிலாவின் தேருக்கு இலக்கம் சைதாப்பேட்டை தானா என்ற கேள்வியை சற்று அழுத்தமாக கேட்டுக் கொள்வதில் தவறில்லை.  

சொல்லவா ஆராரோ (வெய்யில்)

ஆம் அம்மா! அந்த ரயில்தான்

உனக்கும் எனக்குமிடையே நீண்டு தடதடக்கும்

தொப்புள்கொடி

வலிக்கிறது ராஜா... வெட்டிவிடுங்கள்

ரணமான அவளின் உயிர்ப்பாதையில் 

வேங்குழலின் சாற்றைப் பூசிக்கொண்டிருப்பது யார்?  

லயத்தின் துடிப்பை, நாதத்தின் தொடர்ச்சியை பின் தொடர்ந்து மனம் ஒரு உத்தரவாதத்தை, நிறைவை, அதன் வழியாக இந்த வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக ஒரு அர்த்தத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது. பல நூறு வருடங்களாக மாறாத ஒலியமைப்புக்குள், பரிணமிக்கப் பிடிக்காத ஓர் ஆதிப் பிரக்ஞை நம்மைச் செலுத்தி வருகிறது. அதற்கு நாம் மொழியை துணைக்கருவியாக, ஆதார கட்டமைப்பாக கொள்கிறோம்.  நகரத்தின் பாதுகாப்பான கட்டமைப்பில் இருந்து விலகினால் ஒழிய வயல் பச்சைகளை கண்டு கொள்ள முடியாது. அதற்கொரு மனப்பயிற்சி அவசியமாகிறது.

செவ்வியல் இசை திரை இசையிடமும் நாட்டார் இசையிடமும் இருந்து பின் தங்குவதில் மொழியின் பங்கு முக்கியமானது. கருவியசைகளை நாம் தாண்டிச் செல்வதன் பின்னணியில் இருப்பதும் மொழியின்மை தரும் அச்சமே. இயல்பாகவே நாம் பரீட்சார்த்தமான முயற்சிகளை வெறுப்பதற்கான உளநிலையை வேறு கொண்டுள்ளோம். அந்த அச்சத்தை, மனத்தடைகளை விலக்கி, பெயரும் உடலும் அற்ற சுதந்திர இருப்பாக இசையை சொல்வதில் இருக்கும் போதை அலாதியானது. ஏனெனில், ராக அனுபவம் என்பது சொல்பொருள் அனுபவமல்ல.

ராகம் (அபி)

விரல்கள் தாளமிடத் தொடங்கியதும்

அந்த ராகம்

எங்கிருந்தோ

மனசுக்குள்

நுழைந்தது


கிளை பிரிந்து பிரிந்து

கடலடித் தாவரங்களை

அசைத்து இசைகொண்டது


பவளப்பாறை இடுக்குகளில்

குளிர்ந்து கிடந்த வயலின்கள்

உயிர்த்து வீறிட்டன

00


எல்லாப் புறங்களிலிருந்தும்

ஒரே காற்று

வீசியடித்தது


கற்பனைகள் முற்றிலும்

கலைந்து போயின


பல தேசத்துக்

குழந்தைகளின் முகங்கள்

ஒரே அழுகையின் கீழ்

ஒன்று கூடின


பாதைகளற்றுப் போனது உலகம்

நேரம் கூட நகர்வதற்கின்றி


கவிதையின் மூச்சு ஒன்று

கவிதையை மறுத்துக்

கடல்வெளி முழுவதையும்

கரைக்கத் தொடங்கிற்று

விவால்டியின் புகழ்பெற்ற நான்கு பருவங்கள் இசைக் கோர்வையில் ஒன்றான கூதிர் காலத்திற்கான இசையுடன் நான் இதை தொடர்புபடுத்திக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க குறிப்பு கொடுத்திருக்கிறார்கள் – ‘வேகமாக, ஆனால் அதிவேகமாக வாசிப்பதற்கு அல்ல.’ சரி தான்.  

கேள்வியின் முதன்மையான இன்பத்தை ஒதுக்காமலும் கலை புறக்கணிப்பாக மாறாமலும் இசையை நாம் அணுக வேண்டி இருக்கிறது. நாம் ‘சஹ்ருத்யர்’ என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. பவபூதி, இதை சமான தர்மம் என்கிறார். இசைப்பவருக்கும் நமக்கும் நிபுணத்துவத்தில் இருக்கும் நிகர்நிலை இல்லை, உள்ளத்து உணர்வில் ஏற்படும் சமானம் இது. ஒரே ஸ்ருதியில் பிணைக்கப்பட்டிருக்கும் இரண்டு வீணைகள் ஒத்திசைப்பது போல இசையும் ரசிகரும் ஒன்றாவது தான் நிஜமாகவே கலை உதிக்கும் இடம்.

இசைப் பயன் (சுகுமாரன்)

பாடகர் பாடிக் கொண்டிருக்கிறாரா

நாம் எல்லாரும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமா

பாடகருக்கும் நமக்கும் நடுவில் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறதா?

ஏதோ விநாடியில்

நமக்கும் இசைக்கும் இடையில் அமர்ந்து

பாடகரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கும் இசைக்கும் இடையில் அமர்ந்து

நாமும் பாடிக் கொண்டிருக்கிறோம் .


-

ஒரே பாடல் தான் 

நான் கேட்டதால்

இரண்டாகப் பிரிந்தது

மீண்டும்

நான் பாட, நீ கேட்கவென,

பலவாகி வளர்ந்தது

நாம் பாடி, பலர் கேட்டு

உலகம் நிறைத்தது

உலகெலாம் பாட

ஒன்றாகிக் கேட்கிறது

ஒரே பாடல். (ஆனந்த் குமார்)

-

சரிவிலே எழுவதென்ன கண்ண பெருமானே ! (இசை)

பாடகர் பாடுகிறார்

பாடிக் கொண்டிருக்கிறார்

பாடிக் கொண்டிருக்கிறார்


பாடகர்  

‘பாடத்’ துவங்கும் தருணம்

என்றொன்றுண்டு


பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார்


“ ஓ...”

என்றெழுந்ததொரு  வாத்தியம் 


“ம்”

என்றொரு வாத்தியம்


“ஆஹா...”

என்று எங்கோ துள்ளியதொரு வாத்தியம்


“ ச்…”

கொட்டி மறைந்ததொரு வாத்தியம்


“வாவ்!” 

வாய் திறந்து 

கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு


தாயைத் திட்டி 

ஒரு கெட்ட வாத்தியம்

பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள்

செருப்புக் கால் வாத்தியங்கள்


நெஞ்சத்து ஆனந்தம்…

அது ஒரு நிகரற்ற வாத்தியம்


வாத்தியங்கள் 

கூடிக் கூடிப் பெருகியதில்


மேடை கொள்ளவில்லை

இதோ..

இந்த மேடை 

சமத்தில் சரிவதைக் காண்கிறேன்


மேடை, அரங்கு என்று

இரு வேறில்லை இப்போது.

இயற்கையின் சரடாக ஓர் இசைப்படைப்பை அணுகுவதென்றால் என்ன? குயிலும் குக்கரும் கூவுவது இனிமை தான். ஆனால் இசை என்ற அடையாளத்தை அறுதியாக ஏற்காதவை. ஸ்வரங்கள் என்பவை ஒரு வகையான ஒலி ஊகங்கள். அதை ஊகிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் உள்வாங்குவதிலும் மானுட அறிவு தொழில்படுகிறது.  கரும்பச்சைக்கும் இளம்பச்சைக்கும் வேறுபாடு சொல்வது போல சாதாரண காந்தாரத்திற்கும் அந்தர காந்தாரத்திற்கும் வேறு சொல்ல முடிவதில்லை. அருகருகே வைத்து பாடி காண்பித்தால் கூட காதில் வண்டு ஊறுவது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கும். இசைக்கு காது திறக்க காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது, திறக்காமலே கூட போகலாம். இருப்பினும், ஒலியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்று ஒன்று இருப்பதை நாம் தன்னியல்பாக உணர்கிறோம். அது நடக்காத பொழுது, ஏனென்றே தெரியாமல், நாம் எதிர் திசையில் செல்கிறோம். நல்ல இசை எது என்பது குறித்து நமக்குள் வெட்டு குத்து ஏற்படும் அளவிற்கு கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் ‘நாராசம்’ என்பதை நம் உள்ளுணர்வு உடனடியாக கண்டு கொள்கிறது. கவியின் நீரோ எரியும் ரோம் நகரத்திற்கு நடுவில் இசைப்பவன் அல்ல, அவன் ஆற்றுவிப்பவன்; நவீன உலகத்தின் நீரோ ஓயாமல் ஹார்ன் அடித்து நகரத்தை எரியூட்டுபவன், எதிர்-பைட் பைப்பர் போன்றவன். 

நீரோ நீ வாசி (மதார்)

ஹாரனில் இசையமைக்கும் பேருந்தோட்டி 

தன் பயணிகளை 

அமைதியற்ற மலையுச்சிக்கு 

அழைத்துப் போகிறான் 

தன் ஹாரன் வழியே

இனிமைப்படுத்த முயலுகிறான் 

இழந்த இசைப்பொழுதுகளை 

ஹாரன் இசை செவியுறும் அப்பிரதேசத்து மக்கள் 

கெட்ட வார்த்தை கூறி நகர்கிறார்கள் 

ஹாரன் இசை செவியுற்ற 

ஒரு கூடைப் புல்லாங்குழல்கள் 

கால் முளைத்து மானாகி காடோடின 

நம் பேருந்தோட்டி இசையை நிறுத்தமாட்டான் 

ஹாரன் இசைதான்

நம் பேருந்தோட்டிக்கு 

எரியும் ரோம் நகரமும் 

பிடிலும்

அருவமான ஒன்றாக இருந்தும் அதெப்படி புலன்களை இத்தனை நெருக்கமாக வந்தடைகிறது? மேலும், புலன் உணர் வட்டத்திற்குள் இருந்தும் பிடிபடாத இசையின் எடையின்மையை எப்படி பொருள் கொள்வது? இசைக்கான பிரத்யேகமான தொழில்நுட்ப மொழியை கொண்டு அதன் தொழில் நுட்பத்தை மட்டுமே விளக்க முடிகிறது. கவி மொழிக்குள் ஸ்வரத்தின் துல்லியமும் அசைவும் சட்டென்று திறந்துவிடுகிறது.

மழை தேக்கிய இலைகள்

அசைந்து

சொட்டும் ஒளி


கூரையடியில் கொடியில் அமர‌

அலைக்கழியும் குருவி 

(யேசுதாசுக்கு, இசை தரும் படிமங்கள், சுகுமாரன்)

அப்படி எல்லா நேரமும் இசை தன்னை காட்டி நிற்பதில்லை. மர்மமான களி நடனமும் இந்த பரவசத்தின் ஒரு பகுதி. பெரும்பாலும் தொட்டறிய முடியாத தெய்வதங்களை, பேரனுபவங்களை நாம் இசையோடு தொடர்பு படுத்தி வைத்திருக்கிறோம். அது காமமாக வெளிப்படும் பொழுது நமக்கு மெல்லிய திகைப்பு ஏற்படுகிறது. இந்த இணைவு சாதாரணமாக fallacies முளைக்கும் சாத்தியங்களை கொண்டுள்ளது. எந்த உள்ளர்த்தமும் இன்றி எவ்வித அனுபவத்தையும் மீட்டாமல், பேச்சுவாக்கில் ஒரு பிரபலத்தின் பெயரை குறிப்பிட்டு தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும் கற்றுக்குட்டிப் போல், சில கவிதைகள் இசையை பெயர் தூவிச் செல்கின்றன. தொடுகறி ஆக்கிக் கொள்கின்றன. பெயர் தூவிக் கவிதைகளில் இருந்து இசையை காப்பற்ற வேண்டியதில்லை, கவிதையை பத்திரப்படுத்த வேண்டி இருக்கிறது. அரிதாக நுட்பங்களைத் தொடும் கவிதையும் உண்டு. 

ஜகன்மோகினி (சுகுமாரன்)

மறைக்கபடாத உன் இடங்களை எல்லாம்

பகல் ஒளியின் உண்மை போலப் பார்த்த எனக்கு

ஆடையின் இருளில் அதே இடங்கள்

அறியாமையின் திகைப்பாய்த் திணற வைப்பதேன்


தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில்

தெரியாப் புதிராகிறது ஜகன்மோகினி?

... 

இசை, கால ஒழுங்கோடு மிக நெருக்கமான தொடர்புடையது. ஏதுமற்ற தொடக்கத்தில், காலவெளி ஒன்றோடன்று முயங்கி ஒற்றை உருண்டையாகக் கிடந்தது. நாம் ‘நோட்’ அல்லது 'ஸ்வரம்' என்று அர்த்தப்படுத்தும் ஒலிகள் அத்தனையும் ஒரே நேரத்தில் இணைந்து பேரோசை இட்டிருக்கலாம். காலம் என்றொன்று பிறக்க, ஒரு கணம் மற்றொன்றில் இருந்து பிரிந்து தனித்த அடையாளத்தை பெற்று இசைக்கான சாத்தியங்கள் பிறக்கின்றன. ஏறத்தாழ பிரம்மத்தை வர்ணித்து ஜீவன் பிறந்த கதை போல் இருந்தாலும், ராகங்களும் தாளங்களும் அறுபடாத ஒருமையிலிருந்து பிறந்தவை. அரூபத்தை இத்தனைத் தூலமாக சொல்லிவிட முடியுமா என்று தோன்றச்செய்யும் சிருஷ்டி கீதமாகவும் கவிதை அமையும். 

நிசப்தமும் மௌனமும் (அபி)

நெடுங்கால நிசப்தம்

படீரென வெடித்துச் சிதறியது


கிளைகளில் உறங்கிய

புழுத்தின்னிப் பறவைகள்

அலறியடித்து

அகாத வெளிகளில்

பறந்தோடின

தத்தம் வறட்டு வார்த்தைகளை

அலகுகளால் கிழித்துக் கொண்டே


விடிவு

நினைவுகளையும்

நிறமழித்தது


'நெடுங்காலம்' கடுகாகிக்

காணாமல் போயிற்று


சுருதியின்

பரந்து விரிந்து விரவி...

இல்லாதிருக்கும் இருப்பு

புலப்பட்டது

மங்கலாக


சுருதி தோய்ந்து

வானும் நிறமற்று

ஆழ்ந்தது மெத்தென


பூமியில்

ஒலிகளின் உட்பரிவு

பால்பிடித்திருந்தது

வெண்பச்சையாய்

'இசைக் கோர்வை என்பது, காலக் களிமண்ணில் வனைந்தெடுத்த  பலபட்டைகள் கொண்ட இருப்பு’ என்கிறார் விர்ஜினியா வுல்ஃப். அவர் நுட்பாமாக எதையோ சொல்கிறார் என்று புரிந்தாலும் என்னவென்பதை என்னால் ஊகமாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. சப்தத்தின் பிடியில் சிக்கி இருக்கும் சங்கீதத்தின் விளக்கமுடியாத நுண்மையை சொல் தொட்டுவிடும் கணமும் கவிதைக்குள் சாத்தியம். 

...

நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்! (அங்கு, இசை)

நேரடி புலன் அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் அதி தீவிர அனுபவத்திற்கு முன்னும் பின்னும் மனிதர் அமையும் இரட்டை நிலையையும், இசையின் பல்பரிணாம இருப்பையும் மொழியனுபவமாக மாற்றுகிறது. 

இசைக்கு அறிவு தேவையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. மேலும், உணர்வு நிலைகள், அறிவிற்கு அவ்வப்பொழுது எட்டாததாலேயே கீழானது என்ற எண்ணமும் அறிவுத்தளத்தில் உண்டு.  இவற்றில் உண்மை இல்லை என்பதால் எனக்கு உடன்பாடில்லை. பீத்தோவன் இசையை அறிவுலகத்திற்கும் உணர்வுலகத்திற்கும் இடையில் இயங்கும் சமரசக்காரராக விவரிக்கிறார். செவித்திறன் இழந்த பின் சிம்ஃபோனி எழுதியவர் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. அறிவும் உணர்வும் கனிந்த நிலையை இசை கோருகிறது. அதற்கு நம் முன் அனுபவங்களும் போதாமைகளும் எதிரிகள் ஆகின்றன. நம் பழகத்தின் பிள்ளைமையை சற்று தள்ளி வைக்க வேண்டியுள்ளது. 

பியானோ (பிரமிள்)

...

கைதொட  எட்டி

கண்தொட எட்டாத

தொலைதூரம் வரை

கட்டமிட்டு நின்றன

ஸ்ருதி பாறைகள்

இசையின் வெளியில்

வட்டமிட்டது ஒருநிழல்


திடீரிட்டு

வெளிநீத்து வெளியேறி

கையை நிழல்

கவ்விக் குதறிற்று

வேதனையில்

சிலிர்த்த விரல்கள்

நிலவில் ஒடுங்கின.

நிலவெளிமேல்

ஸ்ருதிப் பாறைகள்

தத்தளிக்க துவங்கின.

"அடடா!- ஆனாலும்

இண்டியன் கர்நாடிக்

மியூசிக்கிற்கு

அப்புறம்தான் இது -

நம்ப கல்ச்சர்

ஸ்பிரிச்சுவல் ஆச்சே"

என்று உருண்டன

உள்வட்டது

அசட்டுக் கற்கள்


இந்தக் கல்நார்

தோல் வட்டத்துக்கு அப்பால்

அரை இருளில்

காலணியற்று நின்ற

யாரோ ஒருவனின்

இதயச் சுவடுகளில்

குத்திய முட்கள்

சிறகுகளாயின


துடிப்புகள் கூடி

கழுகுகளாகி

நிலவில் ஒடுங்கின

...

மனிதர் கைதொடும் யாதொரு வீணையும் நலங்கெட்டு புழுதி சேர்வதில் ஆச்சரியம்மல்ல, இசையும் அதற்கு விதி விலக்கல்ல. நாம் பார்க்கவே பல மரபார்ந்த கருவிகள் மறைந்திருக்கின்றன, இசைக் கலைஞர்கள் கலையை கைவிட்டிருக்கின்றனர். தமிழில் இசையைப் பற்றிப் பேசும்பொழுது இசை இழப்பையும் பேச வேண்டி இருக்கிறது. 

அரசியல் தொனிக்கும் கவிதைகளை கவித்துவம் குறைந்தவை என்று சொல்லும் நுட்ப அரசியத்தாண்டி, சமகாலத்தன்மை கொண்ட ஒன்று எப்போது கவிதையாக உருக்கொள்கிறது? பாட்டும் வரியும் இணைந்து நிகழ்த்தும் ரசவாதத்தை போல, இசையற்ற வெளியில் இசையின் நினைவு எழுப்பும் ரசவாதம் என்றும் ஒன்றுண்டு. ‘மென்குரல் மங்கிய பின்னான இசை’ என்ற தலைப்பில் ஷெல்லி எழுதிய கவிதைக்கு அருகில் வரும் கவிதை இது. நினைவினூடாக ஓசையை தொட்டெழுப்பி ரீங்காரமாக எஞ்சும் புள்ளியில் நிகழ்கிறது. மலர் உதிர்ந்த பின்னும் எஞ்சும் மணம். இன்மையின் அழுத்தமான ஆற்றல், அது தரும் துயரம், துயரமென்னும் இசை, இசையென்னும் ஆடல், ஆடலில் ஒரு சொல். 

தூல சூட்சும சன்னிதி (ஷங்கர்ராமசுப்ரமணியன்)

கிழக்குக் கோபுரத்துக்குள்

நுழைந்து

நந்தியை

நினைவில் இப்போது

தாண்டினாலும்

தலைக்குள் கேட்கத் தொடங்கிவிடுகிறது

தவிலும் நாயனமும்

இசைப்பவர் வேண்டாம்

கருவியும் வேண்டாம்

இன்னும் வெளிச்சம் நுழையாத

இருள்மூலைகளில்

அதன் எதிரொலிகள் பெருமூச்சுகள் கேட்கின்றன

ஒடுக்கிய குதிரைகள் போல்

கொடிமரம் தாண்டிக் கருவறைக்குள்

செல்லும் நுழைவாயிலின்

பக்கவாட்டு மேடையின் மூலையில்

தவிலும் நாதஸ்வரமும் பம்பையும்

புழங்காத நாட்களில் அழுக்குத் துணிகள் சுற்றி

எண்ணெய் மக்கி நெடியடிக்கும் 

சுவரில் தொங்கும்.

உச்சிகால பூஜை வேளையில்

சந்தடி இல்லாத நேரத்தில்

கோயிலுக்குள் புகுவோம் சிறுவர்கள் நாங்கள்

தவிலும் பம்பையும் தொங்கும் மேடையில்

துள்ளி ஏறி

தவிலை தப்தப்பென்று அடித்துவிட்டு

அரவமில்லாத மண்டபத்தைத் துடித்தெழுப்பி

பறந்து ஓடுவோம்

ஆமாம்

இன்னமும்

கோயிலின் நடுவில் 

தன் ஆதங்கத்தை 

நூற்றாண்டுகள் அடக்கப்பட்ட பைத்தியத்தை 

ஒலிக்காமல்

இருக்கிறது அந்த வாத்தியம்

கைகளைக் கொண்டு விடுதலை செய்ய முடியாது. 

உள்ளே வா

சந்தடி இல்லாத உச்சிகால வேளையில்

விளையாட்டாக

நுழையும் சிறுவர்களைப் போல உள்ளே வா

உள் ஒடுக்கி

அமர்ந்திருக்கிறது 

தவிலும் பறையும் பம்பையும்

உள்ளே வா

கைகளைக் கொண்டு 

சிலைக்குள் இருக்கும்

குதிரையை

விடுதலை செய்யமுடியுமா

உள்ளே வா. 

(பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு)

இசையை பற்றி நேரடியாக சுட்டாமல் என்னுள் இசையனுபவமாக நீடிக்கிற கவிதைகள் இருக்கின்றன. அவை மிகை வாசிப்பிற்குள்ளும் மிகை உணர்சிக்குள்ளும் கூட்டிச் செல்லும் அபாயத்தை மனதில் கொண்டு கைவிடுகிறேன். 

தெளிவற்ற பாழ்வெளிகளில், எதனுள்ளும் சிக்காத முடிவின்மையில், மொழிப்படுத்தவியலாதவற்றில் இசை எழுகிறது. அங்கு காட்சிக்கலைகள் துல்லியத்தை இழக்கின்றன, கவிதை சற்று திக்கித் தடுமாறுகிறது. சரியாக அந்தப் புள்ளியில், இருளை உண்ணும் ஒளி போல, இசை நுழைந்து தனது ஆட்சி செலுத்துகிறது. இசையின் சாத்தியங்கள் பிரக்யைக்குள்ளும் மொழிக்குள்ளும்  வசப்பட்டும் வசப்படாமலும் அலைக்கழிக்கும் தருணங்களை கூர்மையாக்கிக் கொண்ட அளவிற்கு, பாடல் வரிகளை விரித்துக் கொண்ட அளவிற்கு, முக பாவங்களை கூர் நோக்கியதைத் தாண்டி, ரசிகனின் ரசனையை புலன் அனுபவப்படுத்தியத்தை விடுத்து, இசையின் தனித்த  நுண்மைகளை தொட்ட கவிதைகள் தமிழில் அரிதாகவே கிடைக்கின்றன.  சொல்லால் அள்ளிவிட்டால் எதோ ஒன்று அதில் பிறழ்ந்து விடுமோ, தப்பி ஓடுமோ,  என்ற ஐயம் காரணமாக இருக்கலாம். 

பேரலையோடு கடல் வந்து நம் காலை தீண்டித் தீண்டிச் செல்கிறது, நாம் கண்டுகொள்வது அலையின் தடங்களைத் தான். உவமையிலா இன்பம் என்றாலும், மொழியின் விந்தை அல்லவா அலையை கடலாக்குவது?

நன்றி: கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன், கவிஞர் இசை

***

வெய்யில் தமிழ் விக்கி பக்கம்

சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

அபி தமிழ் விக்கி பக்கம்

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

இசை தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:
Powered by Blogger.

சங்க இலக்கியம் - ஒரு பார்வை - க.நா.சு

இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்க...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (13) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (236) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (27) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (13) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (236) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (27) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive