சுகுமாரனின் பிந்தைய கவிதைகள் - இசை

கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்லவும் உகந்த தருணம். 

நான் ‘பொக்கிஷங்களை’ நம்புவதில்லை. மாநகராட்சியின் மக்காத குப்பைத் தொட்டியில்  இன்று வந்து விழுபவைகளுள் சில,  ஒரு காலத்துப் பொக்கிஷங்கள்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே அவற்றைப் பூட்டிப் பாதுகாப்பது வேடிக்கையானது. ஆனாலும்  நான் அப்படி பாதுகாக்கும் ஒரே ஒரு பொக்கிஷம்,   இதுவரை வெகுசிலரே பார்த்திருக்கிற,  என் முதல் கவிதைத் தொகுப்பை வாசித்து விட்டு , சுகுமாரன் எழுதிய கடிதம் ஒன்றுதான். இதோ இந்தக் கட்டுரைக்கும் உதவும் சொற்கள் அந்தக் கடிதத்தில் இருந்தன. 

கோவை காந்திபுரம் கணபதி விடுதியில் இளம் இளைஞனாக அவரோடு நிகழ்த்திய மூன்று மணி நேரத்திற்கும்  அதிகமாக நீண்ட உரையாடலும் இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது. “ கவிதைக்கு பொய்யழகு” என்கிற கூடாரத்திலிருந்து வந்தவனின் நெஞ்சில் உண்மையே கவிதையின் ஆபரணம் என்கிற எண்ணத்தை  ஆழ விதைத்துவிட்டவை அந்த உரையாடல்கள்.  மொத்த  உலகத்தின்  கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு நான் சென்று வந்த 11 மணிக் காட்சிகள் குறித்து,  முதன்முதலில் இன்னொரு மனிதரிடம் நான் பகிர்ந்து கொண்டதும் அவரிடம்தான். அதாவது என்னிடமே நான்  சொல்லத் தயங்கிய  பலவற்றையும் ஒரே மூச்சில் அவரிடம் சொல்லி முடித்தேன். அந்த உரையாடல் முடிந்த படியிறங்கிச் செல்கையில் இருந்த காலி மனத்திற்கும் இலக்கியத்திற்கும் வலுவவான தொடர்பிருந்தது என்றே கருதுகிறேன்.  எல்லாவற்றுக்கும் நன்றி தம்பி !

சுகுமாரனைக் குறித்தும் அவரது முந்தைய காலத்துக் கவிதைகள் குறித்தும் நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே இந்தக் கட்டுரை அவரது பிந்தைய கவிதைகளைக் கருதி  எழுதப்படுகிறது. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பான “ இன்னொரு முறை சந்திக்க வரும் போது” என்கிற தொகுப்பில் உள்ள கவிதைகளையும், இதுவரை தொகுக்கப்படாத சமீபத்திய கவிதைகளையும் இங்கு  அணுகிப் பார்க்கலாம்.

பொதுவாக நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளரை மதிப்பிட அவர் எங்கு துவங்கி,  எங்கெங்கு சென்றுவிட்டு, இப்போது எங்கு வந்து நிற்கிறார் என்பதைக் காண்பது ஒரு விமர்சன மரபு. “மனிதர் இப்போது எவ்வளவு கனிந்துவிட்டார் பாருங்கள்..”  என்று சொல்வது அந்த மரபின் ஐதீகங்களில் ஒன்று.  கனிவிற்கு கண்டிப்பாக கைதட்டி ஆக வேண்டும் இல்லையேல் நமது கல்நெஞ்சம் கையும் களவுமாகச்  சிக்கிவிடும்.  ஆனால் இந்த மரபு ஒரு தோராயமான  வரைபடத்தையே அளிக்க இயலும் என்று நினைக்கிறேன்.  எப்படியாவது தொகுத்துக் காணவேண்டும் என்பதற்காக இப்படிக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் பயணத்தை அப்படி துல்லியமாக வரையறுத்து விட  இது பயன்படுமா என்பது சந்தேகமே.  மனிதன் ஒரு நாளில் இச்சையின் பிடியிலும், மறுநாள் ஞானத்தின் ஒளியிலும் வாசம் செய்பவன். நமது ஒரு நாள் கூட ஒன்பது மெய்ப்பாடுகளாக உடைந்து விட வாய்ப்புண்டு தானே? கனிந்துவிட்டார் என்று நாம் சான்றிதழ் தரும் ஒருவர் மறுநாளே ஒரு கொலை செய்தாலும் செய்துவிடுவார்.  கவிஞரும் தன் சமீபத்திய தொகுப்பின் முன்னுரையில் இதை ஒத்துக் கொள்கிறார். “ மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட்களில் ஒருங்கே எழுந்தன”.

ஒரு எழுத்தாளரின் 50 வருடப் பயணத்தில் 45 ஆண்டுகளை கழித்து விட்டு  5 ஆண்டுகளை மட்டும் தனியே காண்பது சிரமமே எனினும் அவரது பழைய கவிதைகளை துணைக்கு அழைக்காமல் இந்தக் கவிதைகளை மாத்திரம் பேசிப் பார்க்க இங்கு முயலலாம். இந்த வகையில் ஒரு அனுகூலம் உண்டு.  ஒவ்வொரு கவிஞனின் நெற்றியிலும்  தலையெழுத்தைப் போல் பொறிக்கப்பட்டிருக்கிற,  அவனது சில  கவிதைகளிடமிருந்து அவனுக்கு விடுதலை அளித்துவிட முடியும்.

சுகுமாரனின்  வாராணசி குறித்த கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இத்தொகுப்பில் உள்ளன.  “காலம் “என்கிற தலைப்பில் முதல் கவிதை உள்ளது.  அச்சமாகவும் விடுதலையாகவும் இருக்கிற,  நிர்கதியாகவும், சரணாகதியாகவும் பொருள் படுகிற ‘மரணம் ‘ நிகழ்ந்து கொண்டேயிருக்கிற ஸ்தலத்தில் காலம் என்னவாக இருக்க முடியும்?

இங்கு

காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று

காலங்களுக்கு அப்பாலான காலம்


இங்கே 

இன்று பிறந்த இன்றும்

நாளை  பிறக்கும் நாளையும்

பிறந்ததுமே

இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன..

………


இங்கே 

வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது

சாவின் கொள்ளிகளுக்கு இடையில்

………….

………………

வாராணசி கவிதைகளில் அடுத்ததாக உள்ளது  உஸ்தாத் பிஸ்மில்லாகானின் நினைவுகளூடாக எழுதப்பட்டிருக்கிற “ உஸ்தாத்” என்கிற கவிதை. அதாவது, ‘காலம் ‘என்கிற சோகமான தத்துவத்திலிருந்து ,  எப்போது நினைத்தாலும் அப்போது தித்திக்கிற பேரின்பத்திற்கான ஏக்கத்திற்கு தாவுகிறது கவிதை. இப்போது ‘காலம் ‘என்கிற முதல் கவிதை அர்த்தம் இழக்கிறதா? அல்லது கூடுதலாக வலுப்பெறுகிறதா?

வாராணசி கவிதைகளில் “முக்தி” மூன்றாவது கவிதையாகவும், “சுடர்கள்” கடைசிக் கவிதையாகவும் உள்ளன. 

முக்தி

காசிக்கு வந்தால்

அதி விருப்பானதை

இங்கேயே கைவிட்டுப் போவது மரபு

……….

ஒவ்வொருவரும்

ஒவ்வொன்றைக் கைவிட்டுப்  போகும்போது

காசியையும் கையோடு கொண்டு போகிறார்கள்

ஒவ்வொருவரும்

ஒவ்வொரு முறையும்

காசியை நினைக்கும் போது

கைவிட்டவையும் கூடவே வராதா?


“சுடர்கள்” கவிதை இப்படி முடிகிறது


 “கங்கையில் மிதக்கவிடப்

பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில்

அழியாச்சுடர்களை பார்த்தேன்…”

இப்படியாக இந்தக் கவிதைத் தொடர் அழிவில் துவங்கி அழியாச்சுடரில் நிறைகிறது. அழிவு உறுதியானதும் இறுதியானதும் என்பதை மனிதன் அறிய மாட்டானா என்ன? ஆனால் அதற்குள் அழியாச்சுடர்களை கண்டுவிட ஏங்குபவன் அவன். கண்டும் விடுபவன் என்றே தோன்றுகிறது

இந்த நாட்களில்  இருட்டை அதிகம் சந்திக்கிறேன். இத் தொகுப்பிற்கு எழுதப்பட்டிருக்கிற முன்னுரையின் தலைப்பு “ இருட்டின் ஒளி”. ‘இருட்டும் ஒரு வெளிச்சம்தான் என்கிற அறிவை’ அடைந்ததாக முன்னுரை சொல்கிறது. முன்னுரைக்கு முன் அச்சிடப்பட்டிருக்கிற அப்பாஸ் கியரோஸ்தமியின் வாசகம் ஒன்று  “முழு இருட்டிலும் கவிதை காத்திருக்கிறது. அது அங்கிருப்பது உனக்காகவே ”  என்கிறது. . சமீபத்தில் வாசித்த  சஹானாவின் கவிதை ஒன்று.. “ இருளே உண்மையான வெளிச்சம்” என்றது. எங்கும் விரவிக் கிடக்கிற வெளிச்சத்தில் விழிகள் தூக்கத்துள் செருகிக் கொள்கின்றன. இருட்டு நம்மை நன்றாக விழித்துக் காணச் சொல்கிறது. அப்போது காணாத பாதையெல்லாம் காணக்கிடைக்கின்றன.  இப்படியாக தமிழின் மூத்த  கவி ஆளுமை ஒருவரும், இளம் கவி ஒருவரும் இணைந்து இருட்டில்தான் தேடுகிறார்கள். இருட்டில்தான் அடைகிறார்கள். கவி இருளின்  சிநேகிதராக இருப்பது அவசியம் என்றே நானும் நம்புகிறேன்.

தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகளில் இயல்பாகவே "இருப்பு"  குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 

…..

நாம் இல்லாமற் போனால்

நமது பிரபஞ்சம் என்ன ஆகும்

நாம் இல்லாமற் போனால்

நாம் என்ன ஆவோம்?

நாம் இல்லையெனில்  உறுதியாக பிரபஞ்சத்திற்கு ஒன்றும் ஆகாது. ஆனால்  நாம் இன்றி நம்மால் இருக்க இயலுமா? நாம் எதுவோ அது இல்லையெனில் அது நாம் அல்ல அல்லவா? ( ஆஹா!!! எவ்வளவு அழகான சத்தங்கள் எழுகின்றன)

கவியின் பிந்தைய கவிதைகளில்  அடிக்கடி மரணம் தலை நீட்டிப் பார்க்கிறது. கூடவே மரணத்திற்கு எதிரான காதலும். மரணத்திலிருந்து காக்கும் வேடிக்கைச் சிரிப்பையும்   காண முடிகிறது.  வேடிக்கை, தீவிரத்திற்கு எதிரானதென்பதே பொதுக் கருத்து. அது ஒரு தனித் தீவிரம்தான். இவ்வளவு தீவிரத்திற்கு இங்கு ஒரு அர்த்தமும் இல்லை என்று சொல்லும் தீவிரம். சமீபத்தில்  ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் பொன்மொழி ஒன்றை வாசித்தேன்..” நாம் வேடிக்கையானவர்களாக இல்லையென்றால் வாழ்க்கை நரகமாகிவிடும்”

பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் தான் விரும்பிய “ எளிமையை” அடைய முடிந்திருப்பதாகச் சொல்கிறார் கவி. எளிமையினூடே கொஞ்சம் அசட்டையும் சேர்ந்து விட்டதோ என்று நான் சந்தேகிக்கிறேன். தொற்றுக் காலத்தின் சோர்வு இதன் சொற்களையும் பிணித்திருக்கலாம். எளிமையும், அசட்டையும் அருகருகே இருக்கும் ஆபத்துகள் தானே?

கதை சொல்லும் கவிதைகள் மேல் பெரிதாக எனக்கு ஈர்ப்பில்லை. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் அப்படியான  இரண்டு  கவிதைகள் என்னை அதிகம் ஈர்த்தன.  பிறழ்ந்த காதல் என்று சொல்லப்படுகிற காதல் கதைகளில் இடம்பெறும் இரண்டு ஆண்களுக்கு இடையேயான விரோதம்,  வெறுப்பு, கொலை வெறி போன்றவற்றை நாம் அறிவோம்.  ஆனால் அவர்களுக்கிடையே  முகிழ்கும் அன்பையும், மதிப்பையும் பேசும் தமிழ்க்கவிதை வெகு அரிது என்றே நினைக்கிறேன். இந்தக் கதையில் காதலியின் பெயர்”  லியான்ஹூவா” அவள் கணவனின் பெயர்” காங்க்மிங்க் ரேன்”. அவள் காதலனின் பெயர்” ருவான் ரே”.  கணவன் காதலனை போனில் அழைக்கிறார்…

திரு. ருவான்ரேனின் காதலி

…….

……

……

“ ஹலோ, ருவான் ரே,

 லியான்ஹூவா இங்கே ஓயாமல் அழுகிறார்

கூந்தலைப் பிய்த்து கூப்பாடு போடுகிறார்

சுவரில் முட்டிக் கபாலம் பிளக்கிறார்

நீங்கள் பேசினால் நிச்சயம் தணிவார்”


கைநடுங்க ரிசீவரைப்  பற்றிக்

காதலிக்கு ஆறுதல் சொல்லும் போது

கலங்கிய விழிகளால் ருவான் ரே

ஜன்னலுக்கு அப்பால்

மண்ணிலிருந்து விண்ணுக்கு

நட்சத்திரம் ஒன்று ஒளிபரப்பிப் போவதை

அண்ணாந்து பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்

அந்த விண்மனமீனுக்கு

”காங்க்மிங்க்  ரேன் ” என்று புதுப்பெயர் சூட்டினார்.

“லியான்ஹூவாவின் காதலர்” என்கிற அடுத்த கவிதையும்  பிறழ்ந்த காதலின் வினோதமான மனநிலைகளில் ஒன்றை துல்லியமாகத் தொட்டு விடுகிறது. 

….

…..

காதலியின் கணவர் மறைந்தால்

கைம்மைக்கு ஆளாவது காதலரே என்று

திரு. ருவான் ரே யாரும் காணாமல் தேம்பினார்

தான் அந்நியமானதை எண்ணி வெதும்பினார்……

இந்தக் கவிதைகளின் பாத்திரங்களுக்கு கந்தசாமி, முனுசாமி, கலைச்செல்வி என்றே கூட பெயர்கள் சூட்டி இருக்கலாம். ஆனால் அப்படிச் சூட்டினால் இவற்றை யாராவது வாசித்துவிடும் ஆபத்துண்டு என்பதால் கவிஞர் தவிர்த்து விட்டாரோ என்னவோ? அல்லது தமிழன் இன்னும் அவ்வளவு நாகரீகமடையவில்லை என்று கருதுகிறாரா ?

இந்தப் பிந்தைய  கவிதைகளில் இசை அளிக்கும்  பரவசங்கள் கவிதைகளாகி உள்ளன. “ ஒளி இடறி இடறி உரையாடும் அடர்வனம்” என்கிறார் M.D. ராமநாதனின் சஹானாவை.   “ வகுளாபரணம்” எனும் ராகத்தின் உணர்வு நிலைகளை  புறக்காட்சிகளாக எழுதிப் பார்க்க முயன்றிருப்பது புதிய அனுபவம்தான்.  அந்தக் காட்சிகளின் வழியே அந்த ராகத்தின் இனிமையை தொட முடிகிறது. 

சரக்கொன்றை பாடும் சங்கீதமொன்றும் எனக்குப் பிடித்தமானது. கண் , காது வழிப் பார்க்கும்  கவிதையிது.   பளீரென்று ஒலிக்கும் பிரமாதமான பாடல் . 

பருவ கானம்

நாள்தோறும் நடக்கும் வழியில்

நேற்றுவரை காணாத மலர்ச்சி

இன்று


ஆண்டு முழுவதும்

ஒத்திகை பார்த்த பாடலைப்

பாடிக் கொண்டிருக்கிறது

பொற்கொன்றை

ஒவ்வொரு மனிதனிடமும் வழியனுப்பி வைக்க  வேண்டியவை என்று ஒரு பட்டியல் உண்டு. பிரியங்கள், ஆசைகள், பழக்கங்கள், நினைவுகள்  என்று. மனிதன் அதற்கெதிராக சமரிடாமல் இல்லை.   பயன்தான் பல உயிர்க்கும் வாய்ப்பதில்லை.

ஐ வல் யூ

காலம் கண்ணுக்குள் உறையக்

காட்சிகள் புரையோடுகின்றன

கால்கள் தளர்கின்றன

செவி மங்குகிறது

மொழி குழறுகிறது


இனிமேல் பயனில்லை

எனவே

கடைசியாக அலங்கரித்து

மனம் தளும்ப உபசரித்து

அழைத்துப் போய்

சொல் எட்டாத் தொலைவில்

விட்டு வந்தேன்


வரும் வழியில் உள்ளுருகி

அது இருந்த நாளையும்

அத்துடன் இருந்த பொழுதையும்

அதுவாக இருந்த நொடியையும்

நினைவில் ருசித்துக் கொண்டே திரும்பினேன்


நான் வந்து வீடடையும் முன்பே

அது வந்து வாசலில் நிற்கிறது

யுகயுகமாகக் காத்திருந்தாற் போல

துள்ளி ஓடி வந்து

அன்றலர்ந்த மலர்த்திரளை

ஆசையுடன் நீட்டுகிறது

முதன்முதலாகச் சொல்வது போல

 அந்தரங்கமாகச் கிசுகிசுக்கிறது

 “ ஐ வல் யூ”

“சொல் எட்டாத் தொலைவு”  என்கிற  தொலைவு இந்தக் கவிதையில் கவனிக்க வேண்டிய வரி. மேலும் இந்தக் கவிதையில் “ கடைசியாக” என்கிற சொல்லைப் பார்க்கப் பார்க்க  பாவமாக இருக்கிறது.  மனிதன் “ கடைசியாக “ என்று சொல்லும் அநேக தருணங்களிலும்  அவன் பின்னால் நின்றுகொண்டு ஏதோ ஒன்று வாய் பொத்திச் சிரிப்பது போல் எனக்குத் தோன்றும். 

தவிட்டுப் பழத்தை வாயில் இட்டு காலத்தை மெல்லும் ஒரு கவிதையும் எனக்குப் பிடித்தமானது.

இது போர்களின் காலம். டி.விக்கள்  நாள் தோறும் ஏதோ ஒரு போரைக் காட்டுகின்றன. இவற்றில் போர் குறித்து இரண்டு கவிதைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு கவிதை தெளிவாக போருக்கு எதிராகப் பேசுவது. காஸாவில் மண்ணை அள்ளித் தின்று காட்டிய ஒரு சிறுவன் வைரல் ஆனான். ஆனால் போர் என்ன ஆனது? 

ஆயத்தம்

ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க

இரண்டு பேர் போதும்

எதிரியாக மாறிய நண்பனும்

நண்பனாக மாறிய எதிரியும்


ஒரு யுத்தத்தின் முடிவில்

ஐந்து பேர் எஞ்சுவார்கள்

இறந்தவன் ஒருவன்

சுமப்பவர் நால்வர்


ஒரு யுத்தம்  புதிய சாதிகளை உருவாக்குகிறது

அங்கவீனர்கள்

அநாதைகள்

கைம்பெண்கள்

தரித்திரர்கள்


கூடவே

மூடர்களை

கல் நெஞ்சர்களை

இன்னொரு கவிதை” போரும் அமைதியும்”.  இந்த இரண்டு கவிதைகளும் ஒரு வகையில் அருகருகே வைத்து வாசிக்கத் தகாதவை. ஒரு வகையில் அருகருகே வைத்து வாசிக்கத் தக்கவை. பின்னது  என்னளவில் வெகு ஆழமானது. வீடுகளில் நடக்கும் போர்கள், உள்ளத்துள் நடக்கும் போர்கள் என நமது அன்றாடங்களின் யுத்தத்தையும் சேர்த்து அள்ளி வந்திருக்கிற கவிதை அது. 

போரும் அமைதியும்

யுத்தமும் சமாதானமும் இரண்டல்ல

ஒன்றுதான்.


எப்போதும்

சமாதானத்துக்காகவே

காத்திருக்கிறது யுத்தம் 

எப்போதும்

யுத்தத்தை எதிர்பார்த்திருக்கிறது

சமாதானமும்


இரண்டும்

எப்போது இன்னொன்று முடியும் என்றே

தொடங்குகின்றன

இரண்டும் 

எப்போது  தொடங்கும்  என்றே

முடிகின்றன


ஒரு பொதுப் பகைவனைக் காட்டி

எல்லாரையும் கொல்கிறது போர்

ஒருவரையும் ஒருவரிடமும் 

கொண்டு சேர்ப்பதில்லை அமைதி .


யுத்தம்

மரணத்தின் வெட்டியான்

சமாதானம்

வாழ்வைத் தொலைத்த அகதி.


எனவே 

ஒன்றுதான்

போரும் அமைதியும்.

வாழ்வை தொலைத்து அடைகிற  சமாதானத்தை எண்ணினால்  குமட்டிக் கொண்டு வருகிறது.  சமாதானமும் நீதியும் வேறு வேறல்லவா? 

சுகுமாரனின் சில  கவிதைகள்  வெடிப்பதற்குப் பதிலாக ஒரு புள்ளியைச் சுற்றிச் சுற்றி வண்டு போல்  ரீங்கரிப்பை. ஒரு விதத்தில் ஆலாபனை போல. அவரது இசை ஆர்வம் இந்த வடிவிற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். அடுக்கி அடுக்கிச் சொல்லப்படுகிற அல்லது விஸ்தாரமாக நீட்டி முழக்கும் இந்த வகைமை மீது எனது ஆரம்ப நாட்களில் இருந்த மோகம் பின்னாட்களில் தேய்ந்து விட்டது என்பது  உண்மை. அந்த வகையான கவிதைகள் அவரது  பிந்தைய கவிதைகளில் குறைவு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு உவப்பான செய்தி.

கட்டுரை முடிந்துவிட்டது. “ சமாதானம் வாழ்வைத் தொலைத்த அகதி” என்கிற வரி இன்னும் முடியவில்லை.

(ஆவடி இந்துக்கல்லூரியும், காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “ சுகுமாரன் படைப்புப் பயணம் ’ “ நிகழ்வில்  ஆற்றிய உரையின் விரிவான எழுத்து வடிவம்)

***


***
Share:

கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு - க.நா.சு

(தேரழுந்தூரில் மார்ச் 28, 29 1964 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.)

நேற்று உலகக் கவிஞர்களிலே உயர்ந்தவன் கம்பன் என்று பலரும் பேசினார்கள், அப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கவிகள் உலகப் பரப்பிலே இருப்பதாக நினைப்பது தவறு. இது கவிஞர்களுக்குள்ளே போட்டியல்ல - எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு இந்த வருஷம் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பேர்வழிகள் போகிறார்கள் என்கிற கணக்கல்ல அது. உலகத்தில் நல்ல கவிகள் என்கிற எண்ணிக்கை ஒரு பத்திருபதுக்குள் அடங்கிவிடும் - அவற்றில் ஒருவன், தமிழில் எழுதிய கவி கம்பன் என்பது நமது பெருமை.

நல்ல கவிகளிலும் காவியங்கள் எழுதியவர்கள் மிகக் குறைவு. ஒரு கை விரல்களுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையினர்தான். கீழை நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் சீனாவிலோ ஜப்பானிலோ காவியங்கள் என்று இலக்கியத்தரமாகச் சொல்லக் கிடையாது. இந்தியாவிலே இரண்டு - ஆதி கவி என்று சொல்கிற வால்மீகி. தமிழிலே கம்பன். உலகத்து ஆதி கவியாகிய ஹோமர் கிரேக்க காவியம் எழுதியவன். ‘இலியாது’ம் ‘ஒடிஸ்ஸி’யும் அவன் காவியங்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் லத்தீன் மொழியில் வர்ஜில் ‘ஏனியது’ எழுதினார். பிறகு இத்தாலிய மொழியில் ‘தெய்வ நாடகம்’ எழுதிய டாண்டே கம்பருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்தவர். பின்னர் ஆங்கிலத்தில் மில்டன் - இவ்வளவு பேர்தான் காவிய கர்த்தாக்கள்.

இந்தக் காவியங்களிலே கட்டுக்கோப்பு அமைந்த காவியங்களைச் சிருஷ்டித்தவர் என்று வால்மீகியையும் கம்பனையும் விட்டுவிட்டால், வேறு டாண்டேயை மட்டும்தான் சிறப்பாகச் சொல்லலாம். டாண்டேயின் காவியம் ஆத்மானுபூதியால், வீட்டு உவமைகளால் சிறப்புப்பெற்றது. அதனுடன் ஒப்பிட்டு கம்பனின் உருவத்தைக் கணிக்கிற காரியத்தை விமரிசனபூர்வமாக நாம் இன்னும் செய்யவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக பாட்டையும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் பிய்த்துப் பிய்த்துக் கம்பனை அனுபவிப்பதையே நாம் இதுவரை செய்துவந்திருக்கிறோம். முழுக் காவியமாகக் காண இதுவரை எவ்வித முயற்சியுமே செய்யப்படவில்லை. விமரிசன முறையில் வ.வே.ஸு. ஐயர் இதை ஓரளவு செய்ய முயன்று பார்த்தார். அவர் பல மொழிகளையும் அறிந்தவராயினும், ஆங்கிலத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டு, மில்டனையே பெரிய காவிய கர்த்தவாக எண்ணி அவனோடு கம்பனை ஒப்பிடுவதுடன் நிறுத்திக்கொண்டார். விமரிசன ரீதியில் மில்டனையும் வர்ஜிலையும் இரண்டாந்தரக் காவிய கர்த்தாக்களாகவும் முதல் தரமானவர்களாக ஹோமர், டாண்டே என்கிறவர்களைக் கருதுவதும் சமீப காலத்து வழக்கு. இது இனி அழிபடாத வழக்கு என்றும் தோன்றுகிறது. கட்டுக்கோப்பு என்கிற அளவில் பார்ப்பதற்கு ஆதிகவிகளாகிய ஹோமரையும் வால்மீகியையும் விட்டுவிட்டு கம்பருடன் ஒப்புநோக்கத்தக்கவர் டாண்டே. இந்தக் காரியம், விமரிசனம் இனித்தான் செய்யப்பட வேண்டும்.

கட்டுக்கோப்பு தவிர இன்னும் ஒன்றிலும் கம்பனும் டாண்டேயும் ஒப்பிடத்தக்கவர்கள். டாண்டேயை மத்திய காலத்து அறிவு பூராவுக்கும், ஆத்ம அனுபூதி பூராவுக்கும் வாரிசாக மதிப்பது ஐரோப்பிய வழக்கு. அதே அளவில் கம்பன் இந்தியாவின் ஒரு முக்கியமான காலகட்டத்தின் அறிவு ஞானம், அனுபூதி இவற்றின் வாரிசு என்பது வெளிப்படை. ஆகையால்தான் அவனைப்பற்றி இவ்வளவு பேச முடிகிறது - அவன் காவியத்திலே இத்தனை விஷயங்களையும் காணமுடிகிறது என்பது தெளிவு. இத்தனை விழாக்களையும் அவனால் தாங்க முடிகிறது.

கட்டுக்கோப்பு என்பதை மனப்பாடம் பண்ணிய பாட்டுக்களைப் பாடி ருஜுப்படுத்த முடியாது. எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 1953-ல் என்று நினைவு - பாரிஸ் நகரில் ஆண்ட்ரே மால்ரோ என்கிற ஃபிரெஞ்சு அறிஞருடன் ஒருநாள் பூராவும் அளவளாவ எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நல்ல இலக்கியாசிரியர் - நாவலாசிரியர் - உலகத்துக் கலையின் சரித்திரத்தை எழுதியிருக்கிறார் – ‘வாய்ஸ் ஆஃப் ஸைலன்ஸ்’ என்கிற பெயரில் மதுரைக் கோயிலையும் தமிழ்நாட்டுச் சிற்பங்களையும் பற்றி அதிலே எழுதியிருக்கிறார். அவரைச் சந்தித்தபோது அதுபற்றி எனக்குத் தெரியாது - கலை பற்றிய அவர் நூல் அப்போது வெளிவரவில்லை. தமிழ் இலக்கியம் பற்றிய பேச்சிலே நான் கம்பனைப் பற்றிச் சொன்னேன் - தனியொரு சிறப்பான காவியமாக, ராமாயணக் கதைதான் எனினும் தனிச் சிறப்புடையது என்று. எனக்குக் கவிதையை மொழிபெயர்த்துச் சொல்ல வல்லமை இருப்பதாக நினைப்பு இல்லாதது காரணமாக மதுரைக் கோயிலை உதாரணமாகச் சொன்னேன்.

மதுரைக் கோயிலுக்கு, நம்முடைய கோயில்கள் எல்லாவற்றிற்குமே, ஒரு கட்டுக்கோப்பு உண்டு. அந்தக் கட்டுக்கோப்பு இத்தன்மையது; இதனால் அமைவது என்று சொல்ல இயலாது. ஆனால் அந்த கட்டுக்கோப்பை உணர முடியும். தென்னிந்தியக் கோயில்கள் போன்றதோர் சிறப்பான அமைப்புப் பெற்றது கம்பனின் காவியம் என்று சொன்னேன் மால்ரோவிடம். மால்ரோ பின்னர் இந்திய அரசாங்கத்தின் விருந்தினராக - அவர் அப்போது ஃபிரெஞ்சு தேசத்தின் கலாசார மந்திரி - தென்னிந்தியா வந்து மதுரையைப் பார்த்துவிட்டுப் போனார்.

மதுரைக் கோயிலின் ஆதி உருவம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இடையில் எத்தனையோ சேர்க்கைகள், புது அமைப்புகள் உண்டாகியுள்ளன. அதேபோல கம்பன் கவிதையிலும் செருகு கவிகள், போலிக் கவிகள், என்று யார் யாரோ பாடியவை பாடிச் சேர்த்தவை சேர்ந்துவிட்டன. பாடபேதங்கள் பிழைகள் ஏராளமாக இருக்கின்றன; உண்மைதான். அவையெல்லாம் சேர்ந்தும் விலகியுமே கம்பரின் காவியக் கட்டுக்கோப்பு உருவாகியுள்ளது. இதையெல்லாம் வைத்தே நாம் கம்பனின் காவியக் கட்டுக்கோப்பை அறிந்துகொள்ள வேண்டும். வாலிவதத்தையும், இந்திரஜித்தின் மாயத்தையும் மட்டும் பிரித்துப் பிரித்துச் சொல்லிக்கொண்டே காலங்கடத்திக்கொண்டிருப்பது சரியல்ல. முழுக் காவியமாக கம்பன் கவிதை பூராவையும் அறிந்துகொள்ள, இன்று அவசியம் இருக்கிறது.

இலக்கியத்தில் காவியம், நாவல் என்கிற இரண்டு துறைகளுக்கும்தான் கட்டுக்கோப்பு என்கிற சிறப்பு அமைதி உண்டு. மற்ற துறைகளுக்கெல்லாம் - உதாரணமாக சிறுகதை, சிறு கவிதை, நாடகம், விமர்சனம் - இதற்கெல்லாமும் கட்டுக்கோப்பு என்று ஓரளவில் உண்டு. என்றாலும் சிறப்பாக Structure, Architectonics என்பது காவியத்துக்கும் நாவலுக்குமே உரியது.

இன்றைக் காலகட்டத்தில் காவியங்கள் என்று எழுதுகிறவர்கள் கிடையாது. காவியங்களின் காலம் கடந்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம். காவியத்தின் குறிக்கோளை, நோக்கத்தைக் கொண்டு நாவல்கள் தோன்றியுள்ளன என்று சொல்வது மிகையாகாது. கம்பன் இன்று உயிருடன் இருந்தால், ராமாயணத்தையே எழுதுவதேயானாலும், அவன் இன்று நாவலாகவேதான் எழுதியிருப்பான். நாவாலாசிரியன் - இன்று நாவல்கள் எழுதத் துணியும் இலக்கியாசிரியன் - என்கிற அளவில் நான் சொல்வேன். ராமாயணத்தைப் போன்றதோர் நாவலுக்கேற்ற விஷயம் கிடைப்பது அருமையிலும் அருமை. வசனத்தில் நம் இன்றைய சிறந்த இலக்கியாசிரியர்களில் சிலரேனும் ராமாயணத்தை எழுதிப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்றே நான் சொல்வேன். ஒரு காலத்தில் நானே செய்து பார்க்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வேன் என்றும் சொல்லுவேன்.

உலகத்துக் காவிய கர்த்தாக்களைப் போலவே உலகத்து மிகச் சிறந்த முதல்தரமான நாவலாசிரியர்களும் எண்ணிக்கையில் ஒரு கைவிரல்களுக்குக்குள் அடங்கக்கூடியவர்கள்தான். டாஸ்டாவஸ்கி (பல நாவல்கள்), டால்ஸ்டாய் (‘போரும் சமாதானமும்’ என்கிற ஒரு நாவல்), மார்சல் ப்ரூஸ்ட், லாகர்கெவ், தாமஸ் மன் (ஜோஸஃப் வரிசை) என்று ஏழெட்டுப் பேருக்கு அதிகம் சொல்ல இயலாது. இவர்கள் சிருஷ்டிகளுக்குத் தந்த கட்டுக்கோப்புக்கும் காவிய கர்த்தாக்களில் கட்டுக்கோப்பு அம்சத்தில் சிறப்புற்றவர்களான டாண்டே, கம்பன் இவர்கள் தங்கள் சிருஷ்டிகளுக்குத் தந்துள்ள கட்டுக்கோப்புக்கும் ஒப்புவமை காணவேண்டியது, கண்டு முடிவுகளை வற்புறுத்துவது விமரிசகனின் கடமையாகும்.

டாண்டேயைப் படிக்கும்போது நமக்குச் சந்தேகம் இன்றித் தெரிகிறது. காவியத்தின் ஒவ்வொரு பாட்டும், ஒவ்வொரு மூன்று அடிப் பாட்டும், முதல் இரண்டு நரகம் பர்கேடரி சுற்றில் வர்ஜில் அழைத்துச் செல்ல, மூன்றாவது சுற்றில் பியாட்ரிஸ் என்கிற மன உருவக் காதலி அழைத்துச் செல்ல, டாண்டேயின் மஹோந்நதமான சிந்தனை என்கிற தெய்வ சாந்நித்யத்திலே கொண்டுபோய் டாண்டேயையும் அவனுடன் மனித குலத்தையும் நிறுத்தத்தான் என்பது தெரிகிறது. மனித அறிவின் பிரயாணம் டாண்டேயின் காவியத்தில் பிரமாதமான ஒரு அனுபவ ஆதாரம் எடுத்திருப்பதைக் காண இயலுகிறது.

ஆனால் மேலைநாடுகளிலும் ஃபாஷன் என்கிற பேய் பிடித்து இலக்கிய உலகத்தையும் ஆட்டத்தான் ஆட்டுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன் நம் நாட்டில் கம்பன் பற்றி இருந்த நிலைதான் டாண்டேயைப் பற்றி ஐரோப்பிய இலக்கியவுலகிலே. மில்டனைப் பெருங்காவிய கர்த்தாவாக மதிக்கிற பழக்கம் போய்விட்டது என்று சொன்னேன். அதற்குப் பிறகு டாண்டேயைப் பார்க்கிற பழக்கம் ஏற்பட்டுவிடவில்லை - டாண்டேயைப் பாராட்டுவது டி. எஸ். எலியட் என்கிற ஆங்கிலக் கவி தொடங்கி வைத்த ஃபாஷன் இன்று ஆங்கில இலக்கியவுலகிலே இருக்கிறதே தவிர படிப்பவர்கள் குறைவுதான்.

மேலைநாடுகளில் கவிதை என்றால் பயந்து கூட்டம் கலைந்துவிடும் என்று ரஸிகமணி டி.கே.சி. அவர்கள் சொல்லிவிடுவார்கள். இங்கு இந்தியாவில் கவியின் பெயரைச் சொல்லிக் கூட்டம் கூட்டுவது சாதாரண காரியமாக இருக்கிறது. கம்பனைப் பற்றி விழாக்கள் வேண்டுமா? கம்ப ராமாயண வகுப்புகள், சிறு பெரு பிரசங்கங்கள், ஆராய்ச்சிகள், தனி ஸ்தாபன பொதுத் துறை, சர்க்கார்த் துறை ஆதரவுடன் கம்பன் முயற்சிகள் எத்தனை எத்தனையோ நடக்கின்றன. ஒரு பதினைந்து ஆண்டுகளில் இருபது முப்பது லட்சங்கள் வரையில் சென்னை, டில்லி சர்க்கார்கள் கம்பன் பெயருக்காகச் செலவிட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் - புள்ளிக் கணக்கு விவரம் சரியா தப்பா என்று எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் ராஜம் மனமுவந்து அளித்த பதிப்பையும், பழைய வை.மு.கோ. பதிப்பையும், கு.அழகிரிசாமி பதிப்பையும் விட்டால் கம்பனுக்கு நல்ல பதிப்பு என்று ஒன்றுகூட இல்லாத குறைதான். பேசிப் பேசியே, விழாவெடுத்தே நமது இலக்கியத் தினவு எல்லாம் தீர்த்துக்கொண்டுவிடுகிறோம். குறிப்பிட்ட எத்தமிழ்த் துறையிலும் முழு ஈடுபாட்டுடன் உழைக்க ஒருவருமே தயாராக இல்லை. பேராசிரியராக இருக்கையிலே கம்பன் ஒரு உப தொழில். இப்படித்தான் கம்ப சேவை வளர்கிறதே தவிர – வ.வே.ஸு. ஐயர் அன்று துவக்கி வைத்த பாதையிலே செல்லக்கூடிய யாரையும் காணவில்லை

உலகத்துக் காவியங்களிலே பலவற்றிலும் காணப்படாத ஒரு கட்டுக்கோப்பு கம்பனில் காணப்படுகிறது என்று சொன்னேன். இந்த விஷயத்தில் டாண்டேயைத் தவிர வேறு யாரையும் கம்பனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கில்லை. ஹோமரிலும் வால்மீகியிலும் ஒரு சக்தியிருக்கிறது - அந்த சக்திக்கு ஒப்பிட உலக இலக்கியப் பரப்பிலே வேறு எதுவும் கிடையாது. அது தனி. ஆனால் கம்பனின் காவியத்தில் உள்ள சக்தியை செயற்கையால் பெற்றது. Sophistication கவி நயம் தெரிந்து சுயப் பிரக்ஞையுடன் பெற்றதாகும். டான்டெயிலும் இந்த சுயப் பிரக்ஞை உண்டு. கம்பனின் காவியம் டாண்டேயினுடையது போலவே அறிவுமயமானது. ஒரு குறிக்கோளை நோக்கி நடப்பது ராமராவண யுத்தம். மேலெழுந்தவாரியாக கதையின் முடிவுதான் அதுவும். கம்பனாக கற்பனை செய்துகொண்டதல்ல; வால்மீகி தந்து எடுத்துக்கொண்டாலும், ஆனால் அதற்கான பகைப்புலனும் சூழ்நிலையும், போர்க்களமும் கம்பனின் அறிவுக் கற்பனை. அதைக் குறித்தே காவிய முழுதும் எல்லாம் அங்குலம் அங்குலமாக நகருவதை கட்டுக்கோப்பைக் கணிக்கிறபோது நாம் காண்கிறோம்.

***

‘இலக்கிய வட்டம்’, இதழ் 11, 10-4-1964

‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’, 1984

 ***

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

Share:

ஆனந்த்குமாரின் ப்ளம்கேக் - மதார்

உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக இன்னும் நீ ஆகவில்லை என்பதே உண்மை. ஏனெனில் படைப்பவனுக்கு ஏழ்மை என்ற ஒன்றில்லை, முக்கியமற்ற இடமென ஏதுமில்லை.

   - ரெய்னர் மரியா ரில்கே

கவிஞர் ஆனந்த்குமாரின் முதல் தொகுப்பான டிப் டிப் டிப் 2021 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொகுப்பு. எளிமையும், குழந்தைகள் உலகும், கவிஞன் எட்டும் ஆன்மீகத் தளமும் அத்தொகுப்பின் சிறப்புகளாக அமைந்திருந்தன. நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரது இரண்டாவது தொகுப்பான ப்ளம் கேக் வெளிவந்துள்ளது. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவில் கவிஞர் ஆனந்த் குமார் தன் கவிதை வெளிப்பாட்டை 'ஒரு குழந்தை நமக்கு அளிப்பது அளப்பரியது' என்று தனது இரண்டு மகன்களுக்கும் நன்றியாகக் கூறுகிறார். இந்த இரண்டாவது தொகுப்பில் அவர் தந்தையினின்றும் கூடுதலாக ஒரு காதலனாக மலர்ந்துள்ளார். பொதுவாகவே அவரது மனம் ஒரு காதலனுக்கான மனம். காணும் யாவையும் காதலுடன் பார்ப்பவனே கவிஞன் எனச் சொல்லலாம்தானே. அந்த வகையில் ஆனந்த்குமாரின் 'மனம்' அவரை ஒரு கவிஞராக தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. அம் மனமே மொழியைத் தீர்மானிக்கிறது. கவிதையாகிறது. இரண்டு வகையான கவிஞர்கள் உண்டு. ஒன்றிலிருந்து வேறொன்றைக் கண்டறிந்து எழுத முனைபவர்கள். ஒன்றையே எழுதி எழுதிச் செல்பவர்கள். முதல் தரப்பில் தேவதச்சன், சுகுமாரன் போன்ற கவிஞர்களை வைக்கலாம். இவர்கள் கவிதைக்குப் புதிதாக எதையேனும் செய்யத் துடிப்பவர்கள். இரண்டாவது தரப்பில் தேவதேவன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்களை வைக்கலாம். அவர்களோடு சேர்த்து ஆனந்த்குமாரையும் வைக்கலாம். இவர்கள் தன் கவிதா ஆற்றலின் வீச்சால் முன் நகர்பவர்கள். கவிதை மீது அதீத பித்துடையவர்கள். இந்த இரு தரப்பினருமே கவிதைக்குத் தேவையானவர்கள்.

உனக்காக மட்டும்

நிறைத்துவைத்த பாத்திரத்தில்

ஒருவாய் அள்ளக்

கைவிடவும்


அண்டமெல்லாம்

பொங்கிவழியுது

நீர்

(ப்ளம் கேக் , பக்க எண் 63)

கவி ஆனந்த்குமாரின் டிப் டிப் டிப் லிருந்து ப்ளம் கேக் வேறுபடும் சிறிய இடமாக காதல் கவிதைகளைக் குறிப்பிடலாம். இந்த இடத்தில் காதல் கவிதை என்பதை அதன் வைரல் குணம் காரணமாகக் குறிப்பிடவில்லை. ஆனந்த் இயல்பாகவே தன் கவிதைப் பாதையின் 'வழியாக' அதைத் தேர்வு செய்கிறார். அதன் உச்சபட்ச சாத்தியங்களைத் தொடுகிறார்.

நீ இன்னும் வளையல்கள் அணிகிறாய்

பற்றியும் பற்றாமல்

பிடித்திருப்பதுதான்

எப்போதும் உன்

கைகளைச் சூழ்ந்திருப்பதன் ரகசியமா


உன்னில் ஓர் பிடியுமில்லை

என சொல்லிக்கொண்டே

இருக்கவேண்டுமா


நழுவிவிழும் தோரணையில்

உன் கைநுனிவரை சென்று

துடிக்கவேண்டும் இல்லையா


இந்த நாடகத்தை நீ

குறைந்தபட்சம் பார்க்கிறாயா

சின்னச் சிணுங்கல்களை

முனகல்களை கேட்கிறாயா


இந்தத் தேர் செல்லும் திசை

உனக்குத் தெரியுமா


முன்னும் பின்னும்

காலத்தில் ஓடும்

அந்த ஓட்டைச்சக்கரங்கள்

அப்படி

எங்குதான் கூட்டிச்செல்கின்றன உன்னை

அதன் மீது நீ

இப்படி அமர்ந்திருப்பதற்கு

ஆனந்த்குமாரின் காதல் கவிதைகள் மேலோட்டமானவை அல்ல. முதலிலேயே குறிப்பிட்டது போல் தன் 'மனம்' வழியாக அவர் அதைத் தொடும் இடங்கள் அபாரமானவை. ஏதோ ஒருவகையில் எல்லா நல்ல கவிதைகளும் காதல் கவிதைகளாகவே அமைகின்றன. இங்கே காதல் என்றால் எல்லா வகைக் காதல்களும். ஆனந்தின் காதல்கள் குழந்தை மீது, இயற்கை மீது, வெளி மீது, பெண் மீது நிகழ்கிறது. 

மலைமேல் ஒரு பட்டாம்பூச்சி

மண்ணிற்கருகில்

பறக்கிறது



விரிந்து உதிர்ந்த மலரென

நகர் நடுவில் ஒரு மைதானம்


பொங்கி நிற்கும் நீரை

சுற்றிவரும் எறும்புகள் போல

அதிகாலையில்

அதன் ஆழத்தைப் பார்த்தபடி

எல்லையைச் சுற்றி நடக்கிறார்கள்

பெரியவர்கள்


ஒன்றுமில்லையெனக்

கிடந்த அந்த மலரை

இந்த விடுமுறைநாளில்

தொட்டது யார்


பூவெறும்புகளென உள்ளிருந்து

வெளிவந்துகொண்டே இருக்கிறார்கள்

பிள்ளைகள்

நுண்மையான விஷயங்கள் மீது ஆனந்தின் கவனம் குவியும் இடங்களில் பிறக்கும் கவிதைகளும் இத்தொகுப்பில் முக்கியமானவை. 

காரின் பின்சீட்டில்

திரும்பி நிற்கும் குழந்தை

கைகளை விரித்து

கண்ணாடியில் வைத்திருக்கிறது


பின்னால்

நீண்டு விலகிச்செல்லும்

சாலையின் இருபக்கமிருந்தும்

சுருங்கிச் சுருங்கி

அதன் கைகளில்

சேர்ந்துகொண்டேயிருக்கிறது

உலகம்


-


நான் அவளை

சிறுவிரல் பற்றி

அழைத்து வருகிறேன்


அதற்குள்

நீங்கள் இந்த

உலகை கொஞ்சம்

ஒழுங்குபடுத்தி வைக்கிறீர்களா?

கவிதா ஆற்றலின் வீச்சால் அடித்துச் செல்லப்படும் இடங்களை ஒரு கவிஞன் அனுமதிக்க வேண்டும். அது பெரும் பேறு. ஆனந்த்குமார் அப்படி அனுமதித்த இடங்கள் தொகுப்பில் நிறைய உள்ளன. 

அந்த ஆளுயர செம்பருத்திச் செடியில்

எத்தனையோ முறை நான்

பூப்பறித்திருக்கிறேன்

அதிலெதுவும் இப்போது

என்னிடம் இல்லை

மரம்தான் வைத்திருக்கிறது

இன்னும் அந்தப் பூவை

ஒவ்வொரு நாளும் 

அதை மலர்த்திக் காட்டி

என்னை அழைக்கும்

ஒவ்வொரு முறையும்

நான் பறித்துவிட்டதாய்

நினைக்கையில்

நீர்ப்பறவைபோல மூழ்கி

மறுநாள்

மற்றோரிடத்தில் பூக்கும்

இன்னும் நான்

பறித்திடாத பூ

தொகுப்பில் பல கவிதைகள் மனதில் நிலைப்பவை. நான் தினமும் வேலைக்குச் செல்லும்போது என் இரண்டு வயது மகனை ஸ்கூட்டரில் ஒரு ரவுண்டு அடித்து இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அப்படி பிரிந்து செல்லும்போது மனம் இலேசாகக் கனக்கும். உடனே நான் மனதிற்குள்ளேயே இறைவா என் மகனை உன் பொறுப்பில் விட்டுப்போகிறேன். பத்திரமாக பார்த்துக்கொள் என்று வேண்டுவேன். நாட்கள் கூடக் கூட பட்டியல் நீண்டுகொண்டே போனது. மகனுடன் மனைவி இணைந்தார், அம்மா இணைந்தார், அண்டை வீட்டார் இணைந்தனர், இறுதியாக உலகோரெலாம் இணைந்தனர். நான் எழுத நினைத்த இந்தக் கவிதையை ஆனந்த் இத்தொகுப்பில் அழகான கவிதையாக எழுதியுள்ளார்.

தனியான பிள்ளைகளே உறங்குங்கள்

நான் குழந்தைகளை

அணைத்துறங்கும் இவ்வேளை

கொஞ்சம் கையை நீட்டி

இந்த நகரையும்

அணைத்துக்கொள்கிறேன்


இருளோ

அன்னையைப்போல்

நமை சேர்த்தணைத்துக்கொள்கிறது

இன்றைய ஒளியின் சிறுமைகளை

நீவி அழிக்கிறது

அதன் கனத்த கரங்கள் 


இவ்வளவு ஒட்டி

நாம் உறங்குகையில்

இனி

இடையில் எதுவும் புகாதேதான்


இன்னும் நெருங்கிப்படுங்கள்

குழந்தைகளே

மரங்களே

கடல்களே

இதே போல இந்தத் தொகுப்பின் இன்னொரு கவிதையும் நான் எழுத விரும்பிய ஒன்று

எனது வேலை

எனது வேலைக்கு

நீளமான உறுதியான கைகள்

எட்டு பக்கமும் கால்கள்

வேட்டை விலங்கின் கண்கள்

இரையின் காதுகள்

ஆனாலும்

சின்னப் பிரிவுக்கு வாடும்

வீட்டுச்செடியின் வாசனை அதற்கு


ஒருநாள் அதன்

உடலிற்குப் பொருந்தாத

இரண்டு குட்டிச்சிறகுகள் அதன்மீது

முளைத்திருப்பதைக் கண்டேன்

அதனிடம் சொன்னதும்

கிக்கிரி பிக்கிரியென சிரிப்பு

ஒரே துள்ளாட்டம்;

பறந்து பறந்து பார்த்தது

ஒரு கோழியைப் போல

கத்தரித்துக் கத்தரித்து நான்தான்

அதை பத்திரமாக

பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது


வெகுநெடுநாட்கள் கழித்து

வேலைக்குள் மூழ்கியிருந்த

ஒரு மழைநாளில்

சட்டென அது

தோகைவிரித்து ஆடத்தொடங்கியது

தொகுப்பில் மூன்று சமர்ப்பணக் கவிதைகள் உள்ளன. சம்பிரதாய சமர்ப்பணங்களாக இல்லாமல் நல்ல கவிதைகளாவும் அமைகின்றன அவை.

மதுர மலர்

இரண்டு டீயில்

ஒன்று சர்க்கரை இல்லாமல்.


இப்போது

எங்கள் முன் அமர்ந்திருக்கின்றன

ஒன்றையொன்று காட்டிக்கொடுக்காமல்


வெப்பம் அவிழும்

ஆவியில் மட்டும் சின்ன

நளின வேறுபாடு


நாங்கள் தேர்ந்தெடுத்தோம்

அவரவருக்குப் பிடித்த

ஒரு வசீகர நடனத்தை


ஒரு நொடி

நிலைகுலைந்தன

உலகின் மதுர விகிதங்கள்

செடிமாற்றிப் பூத்தன இரு

சின்னஞ்சிறிய மலர்கள்.

(கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு) 

தொகுப்பில் குட்டைச் சேற்றின் கேள்வி என்றொரு கவிதை உள்ளது. இதை நிறைய முறை யோசிக்க மட்டுமே செய்திருக்கிறேன். ஆனந்த் அதை அழகான கவிதையாகவும் எழுதியிருக்கிறார். 

குட்டைச் சேற்றின் கேள்வி

முன்பு 

பத்தாம் வகுப்பு பாடம் 

தீவிரமாய் போய்க்கொண்டிருக்கையில்  

அவன் நினைத்தான் 

இப்போது ஆறாம் வகுப்பில் 

சேர்ந்து விட்டால்  

எல்லாக் கேள்விகளுக்கும் 

தனக்கு விடை தெரியுமென்பதை 


அவன் முட்டி மண்டையுடைத்து 

எம்பிக் காலுடைத்த 

எல்லாப் சுவர்களையும் 

ஒற்றை எட்டில் 

தாண்டி வந்துவிடலாம் என்பதை 


சட்டென பாடம் நிறுத்தி 

அன்றில் இழுத்து வந்து 

பத்தாம் வகுப்பு ஆசிரியர் 

ஒரு கேள்வி கேட்டார் 

அவன் அங்கே நின்று 

முழித்துக்கொண்டு இருக்கிறான்


இன்று அவனுக்கு

அந்தக் கேள்விக்கு 

தெள்ளத் தெளிவாக பதில் தெரியும்  

மேலும் அவனுக்கு 

நிறைய பதில்கள் தெரியும் 

கேள்விகள்தான் பின்னால் கிடக்கின்றன 


யோசித்துக்கொண்டே 

நடந்து கொண்டிருந்தவனை

தடுத்து நிறுத்தியது 

ஒரு சாலையோர குட்டை 


பார்த்து பார்த்து என்றது 

பத்தாம் வகுப்பு 

குதி குதி என்றது 

ஆறாம் வகுப்பு 


அத்தனை பதில்களையும் தூக்கிக்கொண்டு 

இதோ அவன்

குட்டைச் சேற்றின்மேல்

பறந்து கொண்டிருக்கிறான் 

கவிஞர் வெய்யில் ஒரு மொழிபெயர்ப்பு கவிதையைக் குறிப்பிட்டு அதில் வருவது போல "கார்" என்கின்ற வாகனம் ஏன் தமிழ்க்கவிதையில் இயல்பாக வரவில்லை? ஏனென்றால் கவிஞர்கள் யாரிடமும் கார் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் கார் இயல்பாக வருகிறது. 

ஒரு புகைப்படக்காரனும் சரி கவிஞனும் சரி இருவருமே ஒரு தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அத்தருணம் வந்ததும் அதைப் பிடித்துவிடுகிறார்கள். ஆனந்த்குமாரால் சரியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பாக ப்ளம் கேக் தொகுப்பைச் சொல்லலாம். 

ஆடை கண்ணாடியில் ஓடும் நதி, பீரோ கண்ணாடியில் மிதக்கும் மேகம், மீதி அப்பாவை விரும்பும் அக்கி, சிந்திக் கிடக்கும் பருக்கை குட்டிக்கரணம் அடிப்பவனுக்கு நட்சத்திரமாவது, மத்தியத்தை வெட்டி விடுபவள்,கடை அடைப்பவரின் சித்திரம், சிக்னலில் காத்திருக்கும்போது நிகழ்பவை, ஒரு மலரைத் தொடுவது எப்படி, பூமியுடன் விளையாடும் சிறுமி, மழை பெய்யாத ஊரைப் பார்க்கும் மழை, இயேசுகுட்டி... அலுவலகத்திற்கு வழிதவறி வந்த பள்ளிக்கூட தின்பண்ட டப்பா, கலர் டிரெஸ் குழந்தைகள் என தொகுப்பு முழுக்கவே ஒரு ஞாயிற்றுக்கிழமைத்தன்மை கரைந்து கிடந்து இனிக்கிறது. 

***

ப்ளம் கேக் வாங்க : 

தொடர்புக்கு - 9789878967 (சுரேன், வான்கா பதிப்பகம்)

***

ஆனந்த் குமார் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

துஆ: ஒரு நவீன யாத்ரீகனின் ஆன்ம கீதம் - சொர்ணவேல்

சமகாலத் தமிழ் கவிதையுலகில், சபரிநாதன் ஒரு முக்கியமான ஆளுமையாக வெளிப்படுகிறார். உலகளாவிய இலக்கிய நனவை, ஆழமாக வேரூன்றியதும் அதே சமயம் அமைதியற்று கேள்விக்குட்படுத்துவதுமான ஒரு ஆன்மிக உணர்திறனுடன் அவர் இணைக்கிறார். அவரது கவிதைத் தொகுப்பான 'துஆ' (இறைஞ்சுதல் அல்லது பிரார்த்தனை எனப் பொருள்படும் ஒரு அரபுச் சொல்) இந்த இணைப்பிற்குச் சான்றாகும். வெறும் கவிதைகளின் தொகுப்பு என்பதைத் தாண்டி, 'துஆ' ஒரு நவீன தனிநபரின் இருத்தலியல் தேடலைப் பதிவுசெய்யும் ஒரு முழுமையான, நூல் வடிவப் பயணமாகச் செயல்படுகிறது. இத்தொகுப்பை ஒரு ஆழமான நவீனத்துவப் படைப்பாகவும் புரிந்துகொள்ளலாம். இது, மரபு கடந்த உலகில் சிதறுண்ட சுயத்தை வழிநடத்த ஒரு தொன்மவியல் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. 'துஆ'வின் மையத்திலிருகும் கவிமனம் ஒரு நவீன யாத்ரீகனுடையது. அவன் பௌதிக மற்றும் மீபொருண்மைப் பயணங்களை மேற்கொள்கிறான். கவிதைகளே இந்தப் புனிதமான, பெரும்பாலும் வேதனைநிறைந்த, அர்த்தத்திற்கான இறைஞ்சுதலின் கலைப்பொருட்களாக மாறுகின்றன.

சிதறுண்ட உலகில் நவீனத்துவ யாத்ரீகன்

முரண்கள் சூழ்ந்த இவ்வுலகில், தனிமைப்பட்டு, தன் அகவுலகில் மூழ்கி, மெய்மையை நாடும் ஒரு ஆன்மாவே 'துஆ'வின் மையமாகும். இந்தத் தனிமனிதனின் தேடல், ஒரு செவ்வியல் நவீனத்துவப் படைப்பின் உயிரோட்டமாக அமைகிறது. தேடலில் தோய்ந்த இக்கவிதைகள் போக்குவரத்துப் படிமங்களால் நிரம்பியுள்ளன—தொடர்வண்டிகள், விமானங்கள், பேருந்துகள், முடிவற்ற சாலைகள்—இவை வெறும் பயணத்தைக் காட்டிலும் ஆன்மிக இடப்பெயர்வின் உணர்வை அடிக்கோடிடுகின்றன. "ஒரு நல்ல காரியம்" கவிதையில், கவிஞர் பரபரப்பான கூட்டத்தோடு அல்லாமல், நகரில் தனித்து விடப்பட்ட ஒரு கழுதையுடன் உறவுகொள்கிறார். இது "இடந் தவறிய" ஒரு பொதுவான நிலையைப் பிரதிபலிக்கிறது. இந்த அந்நியமாதல் உணர்வு "லைட்ஸ்" போன்ற கவிதைகளில் மேலும் வலுப்பெறுகிறது. அங்கு, அலுவலக வேலையின் சலிப்பும் நிராகரிக்கப்பட்ட விடுமுறை விண்ணப்பமும் "ஒரு நீண்ட விடுமுறை... இன்னும் கொஞ்சம் வெளிச்சம், இன்னும் இன்னும் வெட்டவெளி" என்ற தீவிரமான ஏக்கத்திற்குக் காரணிகளாகின்றன.

இந்தச் சிதைந்த அடையாளம், "கவிஞனாகப்போகிற சிறுவனுக்கு" என்ற கவிதையில் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இது கவிஞனின் விதியை கோடிட்டுக் காட்டும் ஒரு தீர்க்கதரிசன சாபம் போல் ஒலிக்கிறது. "மனிதர் உன்னைப் பதற்றப்படுத்துவர். / மரங்கள் உன்னைத் தேற்றும்," என்று கூறும் இக்கவிதை, சமூகத்துடனான ஒரு அடிப்படைப் பிளவை நிறுவுகிறது. கவிஞர் ஒரு பிளவுபட்ட வாழ்விற்கு விதிக்கப்படுகிறார். அவர் "இரவில் துப்பறிவாளனாகவும், / பகலில் எழுத்தராகவும் வாழ்க்கை நடத்த" நிர்பந்திக்கப்படுகிறார். இது நவீனத்துவவாதியின் பிளவுபட்ட சுயத்தின் கச்சிதமான சித்தரிப்பு. இந்தச் சிதறுண்ட அனுபவம், தொலைந்துபோன ஒரு தொன்ம கடந்த காலம் குறித்த ஆழமான, வலியுணர்ச்சிமிக்க ஒரு நனவுடன் முரண்படுகிறது. "மறதி வங்கி" கவிதையில், கவிஞர் தனுஷ்கோடியில் மூழ்கிப்போன ஒரு தொடர்வண்டி நிலையத்தைக் கற்பனை செய்கிறார். அங்கிருந்து புகழ்பெற்ற கபாடபுரத்திற்கு பயணச்சீட்டு வாங்க முடியும். இது வெறும் கடந்தகால ஏக்கம் அல்ல; இது இப்போது ஒரு சிதைவாகவோ அல்லது வதந்தியாகவோ மட்டுமே இருக்கும் ஒரு முழுமையான பண்பாட்டு மற்றும் ஆன்மிக உலகத்திற்கான நவீனத்துவவாதியின் புலம்பல். கவிஞர் 21ஆம் நூற்றாண்டின் அலுப்பூட்டும் வாழ்விற்கும், தொலைந்த உலகங்களின் மாய நிழலுருவிற்கும் இடையில் சிக்கிக்கொள்கிறார். இது, வரலாற்றுரீதியாகப் "பிற்பட்டவராகவும்" ஆன்மிகரீதியாக வேரற்றவராகவும் இருக்கும் ஒரு செவ்வியல் நவீனத்துவ இக்கட்டாகும்.

தொன்மவியல் உத்தி: பயணம் ஒரு உருவகம்

இந்தச் சிதறுண்ட அனுபவத்தைக் கட்டமைக்க, சபரிநாதன் டி.எஸ். எலியட் "தொன்மவியல் உத்தி" (mythic method) என்று அழைத்ததைப் பயன்படுத்துகிறார். இத்தொகுப்பு, ஒரு அகவயத் தேடலுக்கான உருவகங்களாகச் செயல்படும் தொடர்ச்சியான தொன்மப் பயணங்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புனிதப் பயணம் நேர்கோட்டில் அமையவில்லை, மாறாக சுழற்சிமுறையிலும் புவியியல்ரீதியாகவும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் தென்கோடியிலிருந்து இமயமலை வரை ஒரு ஆன்மிக மற்றும் பௌதிக வரைபடத்தின் நீள அகலங்களை உள்ளடக்கியது.

இரண்டாவது பகுதியான "மலைப்பொழிவு", இந்த உத்தியை மேலும் கூர்தீட்டுகிறது. லடாக்கிற்கான பயணம் சுற்றுலாவாக அல்லாமல், ஒரு ஆதி நிலப்பரப்புடனான ஆழமான ஆன்மிகச் சந்திப்பாக முன்வைக்கப்படுகிறது. தொடக்கக் கவிதையான "புறப்பாடு", இந்தத் தொனியை அமைக்கிறது. விமானி இமயமலையின் காட்சியை ஒரு புவியியல் நிதர்சனமாக அல்லாமல், ஒரு தொன்ம யதார்த்தமாக அறிவிக்கிறார்: "அதைத் தாண்டி நீண்டு கிடப்பது கைலாய மலைத்தொடர்... அம்மலைகளுக்கு அப்பாலுள்ள மூட்டத்தினுள் ஒளிந்துள்ளது நந்தாதேவி சிகரம். தெரியவில்லை இல்லையா... ஆமாம் தெரியாது... ஆனால் உள்ளது." இந்தப் பயணம் உடனடியாக, கண்ணுக்குப் புலப்படாத ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீகத்திற்கான தேடலாகக் கட்டமைக்கப்படுகிறது. இந்தத் தேடல் அபாயகரமானது. "சூர்" கவிதையில், பனிச்சிறுத்தையைத் தேடுவது முழுமையான உண்மையைத் தேடுவதற்கான ஒரு உருவகமாகிறது. இது ஒரு அபாயகரமான மற்றும் சுய-அழித்தொழிக்கும் சந்திப்பு: "அதைக் கண்டாக வேண்டுமெனில் அது உங்களை நோக்கி பாய்வதை அனுமதிக்க வேண்டும். / மார்பைக் கிழித்து ரத்தம் பருக இசைய வேண்டும். / ஆனால் அதன் பிறகு நீங்கள் இருக்க மாட்டீர்கள், பனிச்சிறுத்தை மட்டும் இருக்கும்."

இந்தத் தொன்மப் பயன்பாடு, சக யாத்ரீகர்களாக மாறும் வரலாற்று ஆளுமைகளுக்கும் விரிவடைகிறது. "நான்கு நோட்டு புத்தகங்கள் 1920" கவிதையில், கேம்பிரிட்ஜில் உள்ள கணிதவியலாளர் சீனிவாச இராமானுசன் ஒரு மேதையாக மட்டுமல்லாமல், ஒரு சித்தராக, "தன் உருவகத்தை நிருபிக்க நிர்ப்பந்திக்கப்படும் கவிஞனாக" சித்தரிக்கப்படுகிறார். அவர் நாமகிரித் தாயாரிடம் இருந்து சமன்பாடுகளைப் பெறுகிறார். இதேபோல், "ட்ரங்குபாரில் இருந்து…" கவிதையில் வரும் டேனிஷ் மதபோதகர், காலனித்துவ மற்றும் ஆன்மிகப் புலப்பெயர்வின் குரலாகிறார். தாயகம் மீதான அவரது ஏக்கம், கவிஞரின் சொந்த இருப்பிடத்திற்கான தேடலை எதிரொலிக்கிறது. இந்த விவரிப்புகளை இணைப்பதன் மூலம், அர்த்தத்திற்கான தேடல் என்பது காலங்கடந்த, உலகளாவிய போராட்டம் என்றும், அது வெவ்வேறு வாழ்வுகளிலும் வரலாறுகளிலும் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்றும் சபரிநாதன் குறிப்பிடுகிறார்.

வரலாற்றின் தேவதை: சிதைவுகளின் சாட்சியம்

தொகுப்பின் வரலாற்று நோக்கு, பால் க்ளீயின் 'ஏஞ்சலஸ் நோவஸ்' ஓவியத்தை மையமாகக் கொண்ட வால்டர் பென்யமினின் 'வரலாற்றின் தேவதை' என்ற உருவகத்துடன் ஆழமாக ஒத்திருக்கிறது. பென்யமினின் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தேவதை, கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறது. அதன் முகம்/தலை முழுவதுமாக கடந்த காலத்தை நோக்கித் திரும்பியுள்ளது. அதன் உடலோ வேகமாக எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாம் நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் காணும் இடத்தில், அந்த தேவதை தன் காலடியில் சிதைவுகளைக் குவிக்கும் ஒற்றைப் பேரழிவையே காண்கிறது. அந்த தேவதை அங்கேயே தங்கி, இறந்தவர்களை எழுப்பி, உடைந்ததைச் சரிசெய்ய விரும்புகிறது. ஆனால் சொர்க்கத்திலிருந்து வீசும் புயல் அதன் சிறகுகளில் சிக்கிக்கொண்டு, எதிர்காலத்தை நோக்கி வலுக்கட்டாயமாகப் அதை பின்னோக்கித் தள்ளுகிறது. அந்தப் புயலைத்தான் பென்யமினின் பார்வையில் நாம் 'முன்னேற்றம்' என்கிறோம்.

'துஆ'வின் கவிதை மனம், இந்தத் தேவதையின் பார்வையை எதிரொலிக்கிறது. அது வரலாற்றை ஒரு நேர்கோட்டு முன்னேற்றமாகப் பார்க்கவில்லை, மாறாக சிதைவுகளின் தொடர்ச்சியாகவே காண்கிறது. "எம் காலத்தில்தான் கோட்டி பிடிக்கத்தொடங்கியது" என்ற கவிதை, பென்யமினின் பார்வைக்கு நேரடியான கவித்துவச் சான்றாக அமைகிறது. "எம் காலத்தில்தான் குழி தோண்டப்பட்டது," "எம் காலத்தில்தான் நதி கசக்கத்தொடங்கியது," என்று தொடங்கும் கவிதை, ஒரு குறிப்பிட்ட காலத்தின் சிதைவுகளைப் பட்டியலிடுகிறது. இது வரலாற்றை ஒற்றைப் பேரழிவாகப் பார்க்கும் தேவதையின் பார்வையை ஒத்தது. அதேபோல், "திகம்பரம்" கவிதையில் வரும் தீயேறிய மரம், "புயலின் கையெழுத்தாய்," "கவிஞனின் சாட்சியமாய்," மற்றும் "ஒரு நியாயவானின் கேள்வியாய்" நிற்கிறது. இது, சிதைவுகளுக்கு மத்தியில் நின்று சாட்சியம் சொல்ல விரும்பும் தேவதையின் தவிப்பைப் பிரதிபலிக்கிறது.

நவீன வாழ்வின் இடைவிடாத இயக்கம், பென்யமினின் 'முன்னேற்றம்' எனும் புயலுக்கு ஒப்பானது. கவிஞர் இந்த புயலில் சிக்கி, எதிர்காலத்தை நோக்கித் தள்ளப்படுகிறார். ஆனால் அவரது பார்வை, "மறதி வங்கி"யின் மூழ்கிய நகரங்கள் போல, கடந்த காலத்தின் சிதைவுகளின் மீதே நிலைத்துள்ளது. எனவே, இத்தொகுப்பில் கவிதை எழுதுதல் என்பது, சிதைவுகளைச் சரிசெய்ய முடியாவிட்டாலும், அந்தப் பேரழிவிற்குச் சாட்சியம் சொல்லும் ஒரு செயலாக, வரலாற்றின் தேவதை கொள்ளும் தார்மீக நிலைப்பாடாக மாறுகிறது.

புனிதமும் லௌகீகமும்: அன்றாடத்தை மீள-மயமூட்டல்

'துஆ'வின் மையமான பதற்றமும் இறையியல் வாதமும் புனிதத்திற்கும் லௌகீகத்திற்கும் இடையிலான ஊடாட்டமாகும். கவிஞரின் "இறைஞ்சுதல்" என்பது அன்றாட வாழ்வின் இழைகளுக்குள், ஜேம்ஸ் ஜாய்ஸ் "காட்சிப்புலப்பாடுகள்" (epiphanies) என்று அழைக்கக்கூடிய தெய்வீகத் தருணங்களைக் காணும் திறனுக்காகவே பெரும்பாலும் நிகழ்கிறது. இது "அன்னை" கவிதையில் ஆற்றலுடன் வெளிப்படுகிறது. அங்கு, தெய்வீகப் பெண்மையான மாதங்கி தெய்வம், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் உருவில் தூய்மை எனும் கட்டுக்கதையை கட்டவிழ்க்கிறது. "மலம் அள்ளுகிறேன், கூளம் பொறுக்குகிறேன். / நீரின் தூதுவன், தூய்மை எனது சீர், புனிதம் நான் அருளும் வரம்," என்று இக்கவிதை புரட்சிகரமாக அறிவிக்கிறது. மிகவும் சடங்குரீதியாகத் தூய்மையற்றதில் புனிதத்தைக் கண்டறிவதன் மூலம், இக்கவிதை பாரம்பரிய இருமைகளை உடைத்து, தெய்வீகத்தின் மிகவும் உள்ளார்ந்த மற்றும் ஒருங்கிணைவிற்கு எதிரானதை தகர்க்கும் ஒரு பார்வையை முன்மொழிகிறது.

இந்த அன்றாடத்தை மீள-மயமூட்டல் என்பது மீண்டும் மீண்டும் வரும் ஒரு கருப்பொருளாகும். "துப்புரவாளர்" கவிதையில், விடியலுக்கு முன் எழும் துப்புரவுத் தொழிலாளி, அவரது நரைத்த தலையின் பின்னால் ஒரு "ஒளிவட்டத்துடன்" விவரிக்கப்படுகிறார். இது அவரது லௌகீகப் பணியை ஒரு புனிதச் செயலாக உயர்த்துகிறது: அவர் குலம் தளைக்க வாதிடுகிறார் “இன்னுமொரு நாளைப் பெற்றுத்தரும் பொருட்டு." "தச்சர்" கவிதையில், ஒரு நாள் வேலைக்குப் பிறகு ஓய்வெடுக்கும் ஒரு எளிய கைவினைஞன், "கண்ணுக்குத் தெரியாத ஒன்றை மெய்மறந்து அருந்தும்" தருணம், ஒரு புனிதமான ஒருங்கிசைவாகிறது. "உப்பு" கவிதை, நவீன மிகைப்படுத்தலுக்கு எதிராக சக்திவாய்ந்த எளிய வாதத்தை முன்வைக்கிறது. ஒருவர் உண்மையிலேயே நாடுவது மிகவும் அடிப்படையான ஒரு பொருள்தான் என்று அது முடிக்கிறது: "நீர் தெளித்த தலைவாழை இலையின் இடது மூலையில் உப்பு / பூமியின் சாராம்சம், மிகச்சிறந்த முத்து, அது போதும்." இதுவே இத்தொகுப்பின் "பிரார்த்தனை"யின் மையமாகும்: சாதாரணத்திற்குள் இருக்கும் புனிதத் துடிப்பைக் காணக் கண்களையும், உணர இதயத்தையும் கோரும் ஒரு வேண்டுகோள்.

தீர்க்கப்படாத தேடலும் 'துஆ'வின் தன்மையும்

இறுதியாக, 'துஆ' ஒரு தேடல் நிறைவேறியதன் ஆறுதலை அளிக்கவில்லை. அதன் ஆற்றல், இந்த ஆன்மிகப் பயணத்தின் தீர்க்கப்படாத தன்மையைப் பற்றிய அதன் அசைக்க முடியாத நேர்மையில் உள்ளது. இத்தொகுப்பு பதில்களுடன் முடிவடையவில்லை, மாறாக கேள்விகளை ஆழப்படுத்துகிறது. இறுதி, காவியக் கவிதையான "கல் புணை", இதற்குச் சான்றாகும். இது வரலாறு, தொன்மம், மற்றும் நனவின் வழியாகச் செல்லும் ஒரு அடர்த்தியான, பல அடுக்குகள் கொண்ட பயணம். இது ஒரு இறுதி, நிலையான அர்த்தத்தை மறுக்கிறது.

இந்தத் தொடர்ச்சியான தேடல் நிலை கவிதைகள் தோறும் கசிகிறது. "தவறான எண்" கவிதையில், கவிஞர் மரணத்திடமிருந்து ஒரு அழைப்பைப் பெறுகிறார், ஆனால் அவரிடம், "ஓ... சபரியா? மன்னிக்கவும், தவறான எண்" என்று சொல்லப்படுகிறது. இந்த அபத்தமான, இருத்தலியல் நகைச்சுவை தருணம், கவிஞரின் நிலையை கச்சிதமாகப் படம் பிடிக்கிறது: காத்திருப்பு நிலையில் தொங்கிக்கொண்டிருப்பது. இத்தொகுப்பு ஒரு இறுதி இலக்குக்கான பிரார்த்தனை அல்ல, மாறாக பயணத்தைத் தொடர்வதற்கான மனவுறுதிக்கான பிரார்த்தனை. "கலீலியோவின் இரவு" கவிதையில், கவிஞர் தனது வரலாற்றுத் தருணத்தின் இருளை ஒப்புக்கொள்கிறார்—"மத்தியகால இரும்பின் ஓசை: நாளை தயாராகிக்கொண்டிருக்கிறது"—மேலும் ஒரே பதில் சாட்சியாய் இருப்பதுதான் என்று முடிக்கிறார்: "விழித்திரு வேறு வழியில்லை / ஒற்றை மெழுகுதிரியின் சோதியில் தனித்திரு / நீ நம்பிக்கொண்டிருக்கும் / உன்னை நம்பிக்கொண்டிருக்கும் ஓர் / அரிய உண்மையுடன்." இதுவே 'துஆ'வின் சாராம்சம். இது செயல்பாட்டிற்குள் அருள்புரியக் கோரும் ஒரு இறைஞ்சுதல்; மௌனத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் தாங்கிக்கொள்ளும் திறனுக்கானது. இங்கு கவிதையை எழுதும் செயலே—அனுபவத்தை வடிவமைப்பது, கேள்வி கேட்பது, சாட்சியாய் இருப்பது—இறுதிப் பிரார்த்தனை வடிவமாகிறது.

ஆக, சபரிநாதனின் 'துஆ' ஒரு வலிமையான மற்றும் கலைரீதியாக தேர்ந்த படைப்பாகும். சமகாலத் தமிழ்க் கவிதை எவ்வாறு சிக்கலான நவீனத்துவ மற்றும் இருத்தலியல் கருப்பொருள்களுடன் ஈடுபடுகிறது என்பதற்கு இது ஒரு நல்லுதாரணம். அதே நேரத்தில், செழுமையான பண்பாட்டு மூலங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு தனித்துவமான ஆன்மிகச் சொற்களஞ்சியத்தை அது தோற்றுவிக்கிறது. கவிஞன் எனும் யாத்ரீகன், நவீனத்துவத்தின் உடைந்த நிலப்பரப்புகளின் வழியே, தொன்மம் மற்றும் தனது நினைவுச் சிதறல்களுடன் பயணிக்கிறான். ஒரு இறுதி உண்மையை அடையும் நம்பிக்கையில் அல்ல, மாறாக அந்தப் பயணமே, அதன் அனைத்து வலி மற்றும் அழகுடன், ஆசுவாசமளிக்கக் கூடிய வேள்வி என்ற நம்பிக்கையில்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்

  • பெஞ்சமின், டபிள்யூ. (1968). வரலாற்றின் தத்துவம் குறித்த ஆய்வுரைகள். எச். அரென்ட் (பதி.), ஒளிர்வுகள்: கட்டுரைகளும் பிரதிபலிப்புகளும் (எச். சோன், மொ.பெ., பக். 253-264). ஹார்கோர்ட், பிரேஸ் & வேர்ல்ட்.
  • எலியட், டி. எஸ். (1975). யுலிஸஸ், ஒழுங்கு மற்றும் தொன்மம். எஃப். கெர்மோட் (பதி.), டி. எஸ். எலியட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைநடைகள் (பக். 175-178). ஃபேபர் அண்ட் ஃபேபர்.
  • க்ளே, பி. (1920). ஏஞ்சலஸ் நோவஸ் [காகிதத்தில் எண்ணெய் மாற்று ஓவியம்].
  • சபரிநாதன். (2024). துஆ. தன்னறம் வெளியீடு.

***

***
Share:

சில தமிழ் கவிதைகள் - ச.துரை

தெய்வம் 

பாருங்கள் என் துயரத்தை

இவ்வளவு காலமாக 

இந்த விசயங்கள் எல்லாம் 

தெரியாமலே வாழ்ந்து விட்டேன்


காலையில் சீக்கிரம் எழச் சொல்லி 

அம்மா ஏன் வற்புறுத்தினாள்


அப்பா ஏன் அதிகமாக

ரயில்களில் பயணித்தார்


செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது 

தாத்தா ஏன் சோகமாக இருந்தார்

என்பதெல்லாம் 

இப்போதுதான் புரிகிறது


தங்கை அடம்பிடித்தால் மட்டும் ஏன் 

அடி விழுவதில்லை 


ஜிம்மி ஏன் செத்துப்போனது


பக்கத்து வீட்டு அக்கா ஏன்

தனியாக வாழ்ந்தாள்

என்பதெல்லாம் இப்போதுதான் புரிகிறது


இதுபோல 

இன்னும் நிறைய நிறைய சம்பவங்கள் 

ஆனால் எதுவும் நினைவில்லை

இன்னும் இதுபோல எவ்வளவு எவ்வளவு விசயங்கள் 

தெரியாமல் வாழ்ந்திருக்கிறேன்

என யோசித்தால் பயம் வருகிறது 


புரியாமலே இதுவரை வாழ்ந்தது போல நினைவு வராமல் தொடர்ந்து இருக்க ஏதேனும் தனி தெய்வம் இருக்கிறதாவென

தேடிப் பார்க்கப் போகிறேன்.

ஞானம் -1

பிராத்திக்கும் போது 

ஒளியை மட்டும் பார் என்றார் குரு


எந்த ஒளியை என கேட்டேன்

பதிலில்லை


எல்லோரும் கண்களை மூடி 

ஆழ்நிலைக்கு உயிர் 

கொடுத்துக்கொண்டிருந்தார்கள்


நானும் கண்களை மூடினேன்


ரெம்பவே சுடுகிறது 

அமைதிக்குள் இருக்கும் ஒளி.

ஞானம் - 2

பிராத்தனை முடிந்து வெளியேறும் போது

அவன் சொன்னான்


ஒருவேளை நான் மன்னிக்கப்பட்டால் 

ஒரு ஒளியைப் போல அணைத்துவிடுங்கள்


இருந்த சுவடே தெரியக் கூடாது


உச்சிக்கு ஏறிய பிறகு

யாராவது அடிவாரத்தில் நகரும் 

பூச்சியை கவனிப்பார்களா

அதுபோல என்னை தவறவிட்டு விடுங்கள்.


போதனை

என்னிடம் நதியொன்று இருந்தது


அசையாததைப் போல அசையும் 

உறங்குவதைப் போல விழித்திருக்கும்

அதனிடம் இருந்துதான் வாழ்வின்

போலித் தனங்களை பயின்றேன்


யாருடைய கையையும் 

மேல் விசாரணையின்றி 

உடனே பற்றுகிற குணத்தை 

அதுதான் எனக்கு கற்றுக்கொடுத்தது


ஒரு மத்தியானம்

எனது கால்களை  அணைத்தபடி 

“ஞானத்தின் உட்புற மர்மம் எப்போதுமே வலிமிகுந்தது”

என்பதையும் நதிதான் அழுதபடியே போதித்தது.

***

சா. துரை தமிழ் விக்கி பக்கம்

***

Share:

ரீல்க டுயினோ - சைதன்யா

நான் அழைத்தால் என் கதறல்களை கேட்க அங்கு யார் இருக்கிறார்கள், தேவதூதர்களின் மத்தியில்… 

(Wer, wenn ich schriee, hörte mich denn aus der Engel Ordnungen?)


என்று தொடங்குகிறது டுயினோ எலஜிக்கள் (Duino Elegies) என்னும் கவிதை தொகுப்பு. ஒரு கடற்கரை ஓர நடையின் போது இந்த முதல் வரி காற்றில் எதிரொலித்ததாக Rilke ஒரு இடத்தில் கூறியிருக்கிறார். ரெய்னர் மரிய ரீல்க (Rainer Maria Rilke) டுயினோ (Duino) என்னும் இத்தாலி கடற்கரையில் அமைந்த பழமையான கோட்டையில் இருந்து கொண்டு 1912இல் எழுத துவங்கிய துயர் பாடல் தொகுப்பு டுயினோ எலஜிக்கள் என்ற பெயரில் 1922 இல் வெளியானது. பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு இது. நடுவில் போர்களால் எழுத்து தடைபட்டு பின் உச்சபடைப்பூக்கத்தில் ஓரிரு வாரங்களில் மொத்த தொகுப்பையும் எழுதி பின் ஆரபியஸ் பாடல்கள் (Sonnets to Orpheus) என்ற தொகுப்பையும் எழுதி முடித்தார். 

டுயினோ எலஜிக்கள் பல முக்கியமான கலைஞர்கள் தத்துவவாதிகள் மீது பெரும் தாக்கத்தை உருவாக்கிய கவிதை தொகுப்பு.

 


அக்காலக்கட்டம் (20ஆம் நூற்றாண்டின் துவக்கம்) இயற்கையை பரிணாம வளர்ச்சிக் கொள்கையால், மனித மனதை பிராய்டின் Ego மற்றும் Id என்னும் கருதுகோள்களால், ஆன்மாவை Nietzsche யின் Will to power என்னும் கருத்தால் என அனைத்துமே விளக்கப்பட்டு வந்த வரலாற்று புள்ளி. உலகத்தை நம்மால் முழுத்தறிந்து கொள்ள முடியும் என்ற தோற்றத்தை இவை உருவாக்கியிருந்தது. ஆனால் இவ்வாறு இங்குள்ள அனைத்தும் மனிதனால் விளக்கப்படவேண்டி இருப்பது என்பது அவன் இவ்வுயிருலகில் எவற்றையும் தனதாக உணர்வதில்லை என்பதால். 

ஒருபோதும், ஒரு தருணத்திலும், பூக்கள் முடிவில்லாமல் திறக்கும் அந்தத் தூய வெளி நம் முன் விரிவதில்லை...

“கடவுள் இறந்துவிட்டார்” என்றார் நீட்சே. ஆனால் அதற்கு கடவுள் இல்லை என்று அர்த்தமல்ல. கடவுள் இல்லாத உலகில் வாழும் ஒருவன் அவ்வெறுமை உணர்வை அடைவதில்லை. கடவுள் இறந்துவிட்டார் என்று கூறுவதில்லை. அவன் வாழும் உலகு அவனுக்கானது. அணுக்கமானது. கைக்குள் அடங்குவது.

ரீல்கவின் duino elegies இல் மீண்டும் மீண்டும் வருவது உலகின் ஒரு பகுதியாக தன்னை ஒருபோதும் உணர முடியாத மனிதன். 

மிருகங்கள் கூட அறிகின்றன விளக்கப்பட்ட இவ்வுலகிடமிருந்து  நாம் எவ்வளவு தொலைவில் உள்ளோம் என்று…

நம்மால் அறிய முடிவது இத்தொலைவை மட்டுமே. இத்தொலைவு சுட்டுவது நம்மை விட்டு என்றென்றைக்குமாக அகன்று நிற்கும் கடவுளின் அம்சத்தை. Rilke வின் உலகு கடவுள் அற்ற உலகல்ல. தேவதூதர்களை மட்டுமே நமக்கு காட்டி நிற்கும் அணுக முடியாத முடிவிலி அது. Elegy என்னும் கவிதை வடிவம் துக்க பாடலுக்கானது. ஏதோ ஒன்றின், ஒருவரின் இழப்பை கூறும் பாடல்கள் அவை. Rilke டுயினோ மலைமுகட்டில் நின்று உணர்ந்த வெறுமையும் இழப்புணர்வும் என்ன? 

இக்கவிதைகளில் வருவது மனிதன் இன்மையை நோக்கி விடுக்கும் அழைப்புகள். எதிர்க்குரல் எதிர்பாராது அவன் வீசியெறியும் அழைப்புகள். 

செவிகொள், என் இதயமே, முன்பு துறவிகள் மட்டுமே கேட்டது போல, கேள்…

(Höre, mein Herz, wie sonst nur Heilige hörten)

கேள்விப்புலனாக மட்டுமே தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ள விழைகிறார் இவ்வரிகளில். இவ்வரிகள் ஐரோப்பாவில் 13,14 ஆம் நூற்றாண்டுகளில் செழித்து வளர்ந்திருந்த மறைஞான பாடல்களை நினைவுபடுத்துகின்றன. அந்த மரபின் சாயல் இக்கவிதைகளில் அனைத்திலும் காணலாம். ஆனால் கடவுள் இங்கெங்கும் இல்லை. 

தேவ தூதர்கள் மட்டுமே வருகிறார்கள். அவர்களும் மரபான கிறிஸ்தவ குறியீடாக அல்ல. டுயினோ எலஜிகளின் தூதர்கள் அழகு, சீர்மை என இவ்வுலகை கடந்த கடவுளின் அம்சங்கள். தங்கள் உலகை விட்டு இங்கும் அங்கும், உயிருலகத்திலும், இறந்தவர்களின் உலகங்களிலும் பரவி திரிபவர்கள்.  நம்மால் அணுக முடியாத உச்சங்கள். அவ்வுலகில் உள்ளவற்றில் இருந்து நாம் எதை அள்ளுவது? அள்ளிக்கொண்டு எங்கு செல்வது? என்று கவிஞன் கேட்கிறான் ஒரு இடத்தில். 

... அழகு என்பது வேறொன்றுமல்ல 

பயங்கரமான ஏதோ ஒன்றின் தொடக்க புள்ளி. அதை நாம் சகித்துக் கொள்கிறோம், ரசிக்கிறோம் 

ஏனென்றால் அது நம்மை முற்றழிக்க மறுத்து விலக்கத்துடன் நோக்கி நிற்கிறது…

அவனை முற்றழிக்கவும் மறுக்கும் ஈவிரக்கமற்ற ஒன்றாக அதை காண்கிறான் கவிஞன். இவ்வுணர்வு நிலைகள் அனைத்துமே மரபான மறைஞான உணர்வுநிலைகள் தான். ஆனால் இங்குள்ள அனைத்தின் வெறுமையை அறிந்தபின் எழுபவையாக உள்ளன. அவற்றில் ஒரு சிறு திரிபு உள்ளது. ஒரு உருக்குலைவை உணரமுடிகிறது.  இதனை counter sublime என்று கூறுகிறார்கள். 

நீட்சே மனிதனின் இறுதி இலக்கற்ற தன்மையை ஒருவன் உணர்ந்தால், அவனுடைய ஒவ்வொரு செயலிலும் அதன்பின் வீண் என்றாகிவிடும் என்கிறார்.  ஒரு மலர் மலர்ந்து வீணாகி விழுவதை போல், மனிதகுலம் வீணாகி மடிவதை போல், இங்குள்ள ஒவ்வொருவரின் சுயமும் வீண் என்பதை உணர்வது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உணர்வு. ஆனால் அவ்வுணர்வை கவிஞனை தவிர யாராலும் தாங்கிக்கொள்ள இயலாது. கவிஞர்களுக்கோ தங்களை எப்படி ஆறுதல்படுத்திக் கொள்வதென்று தெரியும் என்று கூறுகிறார். இலக்கின்மையை உணர்ந்தபின் ஒரு கவிஞன் கூறும் ஆறுதல்கள் இப்பாடல்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். என்றாலும் இவை எவ்வகையிலும் தன்னை விடுவிக்காது என்றறிந்தபின் அவன் தனக்கு கூறிக்கொள்வது தான். 

கவிஞனாக மாறும் தருணத்தில் மானுடன் தேவதைகளின் எல்லைக்குள் உலவுகிறான். ஆனால் அங்கும் தன்னை முழுதாக அளிக்க முடிவதில்லை. தேவ தூதர்களில் ஒருவன் தன்னை அவனது மார்போடு அணைத்துக்கொண்டாலும் அவனது மேலும் தீவிரமான இருப்பில் (stärkere Dasein) தான் மூழ்கிவிடக்கூடும் என்கிறான் கவிஞன். சுயத்தின் அழிவின் மூலம் இங்குள்ள எல்லைகளை கடந்து செல்வதை குறித்து கூறும் இடங்களும் வருகின்றன. 

புவியில் இல்லாமல் ஆவது, எவ்வளவு விசித்திரமானது…. கற்றுக்கொள்ள துவங்கும் முன்னரே நாம் கைவிடும் நெறிகள் 

...

விசித்திரமானது. நம் விழைவுகளை நாம் விழையாமல் ஆவது…

நாம் ஒரு திரளாக கண்ட அர்த்தபடுத்தப்பட்ட  உலகம் சிதறி வெவ்வேறு திசைகளில் செல்வது…

இன்மைக்கும் இருப்புக்கும் நடுவில் அவ்வளவு தெளிவான கடக்க முடியாத எல்லை ஒன்றை Rilke காணவில்லை. அவை இரண்டும் கலக்கும் ஒரு புள்ளியை மீண்டும் மீண்டும் சென்று தொட முயல்கிறது இக்கவிதைகள். வெவ்வேறு கண்ணோட்டத்தில். வெவ்வேறு உணர்வுநிலைகளுடன். 

நம் காதலிடமிருந்து விடுபட்டு நடுக்கத்துடன் தொடர வேண்டிய காலம்…

நாணின் இறுக்கத்திலிருந்து தப்பி அதிர்ந்து வெளியேறும் அம்பு 

தன்னை விட தீவிரமான ஒன்றாக மாறிவிட்டிருக்கும் அத்தருணத்தில் …

அம்பு வில்லில் இருந்து அகன்று விசை கொண்டு அதிரும் அத்தருணம், தன்னை பற்றி கொண்டிருந்த ஏதோ ஒன்றை உதறி இன்னும் தீவிரமான ஒன்றாக மாறும் தருணம். இத்தொகுப்பில் உள்ள எல்லா கவிதைகளும் அருவமான உணர்வுகளை இது போன்ற மிக கூர்மையான படிமங்களால் சுட்டுகின்றன.

சிதறுண்ட அருவமான படிம குவியலாக மேலோட்ட வாசிப்பில் இக்கவிதைகள் காட்சியளிக்கின்றன. ஆனால் அவற்றை இணைக்கும் அடித்தளம் இவை அனைத்தும் எங்கிருந்து எழுகின்றதோ அது. 

அதில் நம் சாயல் அல்லது சாரம் சிறிதேனும் உள்ளது என்னும் கனவு. 

நாம் இவ்வுலக வெளியில் கரைகையில் அதில் நம் சாயல் சிறிதேனும் தென்படுமா? தேவதைகள் தங்களிடமிருந்து வெளிப்படுவதை மட்டுமே மீண்டும் நுகர்கிறார்களா, அல்லது சில சமயங்களில், ஏதோ ஒன்றின் பிழையால், நம் சாரத்தின் ஒரு தடயம் ஒன்று அங்கிருக்குமா? 


***


Share:

உலராத கண்ணீர் - கமலதேவி

கேட்பாரற்றுக்

கிடக்கும்

பழங் கோயிலின்

இடிபாடுகளில்

இள முலைகள் துள்ள

தனித்துத் திரிந்த

ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன்

தனக்குப் பயமில்லை

தான் தனித்தில்லை

என்றாள் அவள்

இங்கு பறவைகள் இருக்கின்றன

என்றாள்

நூற்றுக்கணக்கில்

பிறகு 

ஊழிவரும்வரை

 உறங்க முடியாத தெய்வங்கள்

ஆயிரக்கணக்கில்


காலத்தில் உறைந்த விழிகளை

மூட முடியாமல்

பார்த்துக்கொண்டே இருக்கின்றன

எப்போதும்

எல்லாவற்றையும்

என்று சிரித்தாள்.

அது வீசப்பட்டது போல

பெருகி வெளியங்கும் நிறைந்தது

அந்த சிரிப்பின்

முடிவில்

வைரம் போல் மின்னும்

இரண்டு கூர்க் கொடும்பற்களை

நான் ஒருகணம் பார்த்தேன்

அஞ்சி

ஓவென்று அலறினேன்

அவள்

வாய்மீது விரல் வைத்து

அஞ்சாதே

என்று புன்னகைத்த போழுது

யாரோ எய்தது போல

இளவெயில் நிறத்தில்

ஒரு பட்டாம்பூச்சி இறங்கி

அவள் உதடுகள் மேல் அமர்ந்தது.

நான் அது சிறகுகள் அசைய அசைய

மது உண்பதைப் பார்த்தேன்.

அப்போது

ஒரு புத்தனின் கண்கள்

அவளிடம் இருந்தது

அல்லது

முலை கொடுக்கும் தாயின் கண்கள்

ஆனால்

ஒரு ஓவியத்தின் கண்கள்

மாற்றபட்டாற் போல்

சட்டென்று

அவன் கண்கள் சாய்ந்து சோம்பிற்று

எனது வெறும் கைகளைக் கண்டு

எனக்கென

ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா

உன் தோட்டத்தில்

என்று வான் நோக்கி கூவினாள் அவள்

அது கேட்டு

கோபுரங்கள் நடுங்கின.

பின்

புனல் போல் இளகும்கண்களுடன்

புகை கலைவது போல

மெல்லிய மழைக்கம்பிகள்

ஊடே நுழைந்து நுழைந்து

அவள் என்னை விட்டு

விலகி கருவறைக்குள் போவதை

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்

செய்வதற்று

ஒரே ஒரு பூவில்

இருந்தது

அவள் சாஸ்வதம்.


 - கவிஞர் போகன் சங்கர்

சொல் அர்த்தமாவதில் கற்பனை மற்றும் உணர்தலின் பங்கு முக்கியமானது. கற்பனையாலும் உணர்தலாலும் கவிதைக்கு ஒரு ‘கான்க்ரீட்’ தன்மை இல்லாமலாகிறது. கவிதை என்றில்லை இலக்கியமும் கலையும் எவ்வாறு உணரப்படுகிறது என்பது ஆதாரமானது. உடலுக்கு உயிர் போல..கவிதைக்கு உணர்தல் இருக்கிறது. இந்த உணர்தலால் தான் எல்லாக்கலைகளும் காலத்தால் புதியதாகிறது. 

கவிஞர் போகன் சங்கரின் இந்தக்கவிதை ஒரு சிறு தெய்வம் பற்றியது. இடிபாடுகளாகிப்போன கோவிலின் தெய்வத்தை கவிமனம் சந்திக்கும் தருணம் இந்தக்கவிதையில் உள்ளது. அந்த சந்திப்பு புறநிகழ்விலிருந்து சென்று தொட்ட அக நிகழ்வாக இருக்கலாம். ஒரு கனவாக இருக்கலாம். மனதிற்குள் உள்ள நினைவாகவும் இருக்கலாம். 

கவிமனதிலிருந்து இறங்கி சொல்லில் அமரும் அது தன்னை இத்தனை விதவிதமாக காட்டுகிறது.முதலில் சிறுபெண்,அங்கு திரியும் பறவைகளில் ஒரு பறவை, கோபம் கொண்ட யச்சி, புத்தன், அன்னை, மழை, ஒரு சிறு பூ என்று அந்த தெய்வம் இந்தக்கவிதையில் வரும் சூழலில் உள்ள ஒவ்வொன்றிலும் உள்ளது. இத்தனையாகவும் தன்னை காட்டும் அது மறுபடியும் சென்று மனதில் அமர்ந்து கொள்கிறது. மனதிலிருந்து எடுத்து பார்க்க தயங்கும் ஒன்று அது. ஆறாத கோபமும் கருணையும் என்று இரு முகங்கள் கொண்டது. சிறுபெண், யட்சி என்று நாம் உணரும் இரு நிலைகள். 

சிறுதெய்வங்கள் அனைத்துமே இந்த உணர்வுகளை அளிக்கக்கூடியவை.  கவிதையின் இறுதியில் பெய்யும் மழையும் அந்த சிறு பெண் கேட்கும் பூவும் என்ன? 

ஒரே ஒரு பூவில் உள்ளது அவள் சாஸ்வதம் என்று கவிதை முடிகிறது. அவளுக்கு தரப்படாத அந்த ஒரே ஒரு பூவால் தெய்வமானவள் அவள். அவள் இதழில் பட்டாம்பூச்சிக்கு தேனாய் இருப்பது அதுவே. 

மழைக்குள் காலகாலமாய் தன்னை மறைக்கும் அவள் புகுந்து கொள்ளும் இருள் கவிந்த கருவறையில் உள்ளது ஆயிரம் காலத்து காயாத கண்ணீரும் குருதியும். அவள் எண்ணப்பட முடியாதவள். 

***
Share:

கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும் - தேவதேவனஂ

கட்டுரை பற்றி 

சென்ற பகுதியை எழுதி முடித்திருந்தபோது இனி சுணக்கமில்லாது கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மூன்று பக்கம்தான் எழுதியிருப்பேன். கவிதைகளை எழுதத் தொடங்கி ஆழ்ந்துவிட்டேன். தொடர்ந்து அத்தகைய ஒரு வாழ்வை வாழ்வதுதான் கவிதையின் மதம் என்று சொல்வேன். இந்த ஒன்றரை மாதத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகள்! கட்டுரையைத் தொடரவே மனமில்லை.

எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் ஒரு நிழற்பட நகல்கூட எடுத்துவைத்துக்கொள்ளாத நிலையில் பதிப்பாளரிடமும் கிடந்து அவைகள் தொலைந்து போயின. இருவருக்குமே எதிர்பாராதது அது. தொகுப்பாக ஒரு ஐநூறு பக்க அளவு வந்திருக்கக்கூடிய அந்த எழுத்துகளின் இழப்பு எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன். அன்று என்னிடமிருந்த ஊக்கமும் உணர்ச்சிகளும் எண்ணங்களோடும் கருத்துக்களோடும் ஊடாடிய வகையில் நிகழ்ந்த ஒரு நாட்டியத்தைத்தான் நாம் அதில் பார்த்திருக்க முடியும். அந்த எழுத்திற்காக நான் இப்போது வருத்தப்படவே இல்லை.

ஒருமுறை சுந்தரராமசாமி சொன்னார். எழுத்திலும் இது பதிவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்: “நடக்கத் தெரியாதவன் தனக்கு நாட்டியமாடத் தெரியும் என்பது போன்றது, ஆர்வக்கோளாறுகளால் தங்களைக் கவிஞர்களாக எண்ணிக் கவிதை எழுதுவது.”

தான் அறிந்த ஒரு விஷயத்தை அழகிய ஒரு மொழியில் சொல்லியிருக்கிறார் சு.ரா. அவர் இவ்வாறு உரைநடையையும் கவிதையையும் விவரிக்கும்போதே கவிதை பற்றிய அவரது பார்வையும் வெளிப்பட்டிருப்பதையே நான் கவனித்தேன். நான் அதனை உரைநடைக்கே ஏற்றுகிறேன். மேலும் கவிதை முதன்மையாக ஒரு கலை அல்ல என்பதே இன்று நமது பார்வை. கவிதையை அடைந்துவிட்டவனுக்கு, ஒரு காவியத்தைக் கண்டடையாத நிலையில், உரைநடையின் ஒரு சொற்பெருக்கு ஓர் ஆற்றலிழப்பாக மட்டுமே முடிந்துவிடும் ஆபத்து உண்டு. காவியங்களோ அபூர்வம். அபூர்வமான காவியங்கள் கவிஞனின் முதிர்ந்த ஆளுமையினின்று பிறப்பவை. அவனும்கூட விரிவான ஒரு வெளிப்பாட்டுமுறையை மேற்கொள்ளும் நிலையில் தனது கவிதை வாழ்வையும் கவிதைக் கணங்களையும் பெருவாரியாக இழந்துவந்தே செயல்படுகிறான். நான் ஒரு கட்டுரை எழுதத் தொடங்கிய நிலையில் கண்டதும்கூட இதுதான்.

எத்துணை பெரிய ஞானியானாலும் மேதையானாலும் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரே அமர்ந்து கூர்ந்து கேட்கும் எந்த மனிதனையும்விட அப்போது உயர்நிலையில் இருப்பதில்லை.

இரண்டும் (உரையும் கேட்டலும்) முடிந்தபிறகே பதிந்துபோன அவர் உரையும் பல்லாயிரம்பேர் பல்லாயிரம்முறை, பல காலமும் கேட்க இயலும் வாய்ப்பினாலேயே சிறந்து நிற்கிறதே ஒழிய அவரால் அல்ல. அவர் கனன்ற அந்த உரைக்குப் பிறகும் எப்படி எப்படி இருக்கிறாரோ அதைப் பற்றியிருப்பதுவே அவர் சிறப்பு. அதன் பெருமைகள் எந்த மனிதனையும் சாராது. அந்தப் பொருளின் மெய்மையினாலேயே கனன்று கொண்டிருக்கக் கூடியதே ஒழிய அதில் ஒரு மனிதன் இல்லை. எந்த ஒரு மனிதனும் இல்லை. இந்தப் போக்கிலான ஒரு கலை/வெளிப்பாடுதான் மனித வாழ்வைவிட மேம்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. அவ்வளவுதான்.

கவிதையின் மதம் சுட்டும் கவித்துவ மனநிலை ஒவ்வொரு கணமும் தன் மவுனத்தையே ஒரு வெற்றுப்பாத்திரமாகத் தாகத்துடனும் விழிப்புடனும் ஏந்திக்கொண்டிருப்பது. மய்யமான கருத்துகளையும் சிந்தனைகளையும் வைத்துக்கொண்டிருக்கும் மனிதன் ஒன்றைத் தொட்டவுடன் அங்கிருந்தும் தன் எண்ணங்களையே பல்வேறு அனுபவங்களோடும் விரித்துவிரித்துப் பெரும்பெரும் நூல்களை எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரைகளாகவும், நாவல்களாகவும், ஆய்வுகளாகவும். கவிதையின் முன் இவைகள் இரங்கத்தக்கவைகளாகவே இருப்பதையும் நாம் காணலாம். கவிதை தவிர்த்த எல்லா இயல்களுமே தம் இயல்பிலேயே மீட்பு அறியாச் சுழல்களாகவே இருக்கின்றன.

‘சூர்ய ஒளியில் மிதந்துகொண்டிருக்கும் அசைவிலாத மிகப்பெரியதான ஓர் ஏரியில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு படகு போன்றது ஒரு கவிதை’

எழுதிக்கொண்டிருக்கும்போதே மேலே உள்ள ஒரு வரியை ஒட்டிய மற்றொரு வரியாக எழுதப்பட்டுள்ளது இது. இந்த இயக்கத்தில் எதுவும் மறைந்துகொண்டிருக்கலாம். சவால் என்னவெனில் ஒன்று மெய்மையாக இருக்கும்பட்சத்தில் அதை நாம் வாழ்ந்து வளர்ந்தாக வேண்டும். நிரூபித்தாக வேண்டும். கவிதைக்குக்கூட இந்த அழகுக்காட்சி போதாது. வாழ்வோ ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாய்க் கேட்கும். அடங்காது. கொடுக்கத் தெரிந்தவனுக்கே அதுவும் கொடுக்கும், கவிதையும் மேன்மைமிக்கதொரு வாழ்வும் வேறுவேறல்லாதே இந்த நெருக்கம், அண்மை. கலை என்ற சொல்லை ஒருக்காலும் ஏற்காது மட்டுமல்ல; பெயர் எதையும்கூட ஏற்காது என்பதே மெய்மை. இதனால்தான் திணறுகிறார்கள் நம் அறிஞர்கள்.

நமது புரிதல்கள்

நாம் வாழ்வை எப்படிப் புரிந்துகொண்டுள்ளோமோ அதன்படியேதான் கவிதையையும் வரையறுக்கிறோம். முதலாவதாக நமது உயிரின் அசைவுகளைக்(காண்பதும் காண்பிப்பதுமே) கவிதை என்கிறோம். குப்பைத் தொட்டியாகிவிட்ட நமது அகத்தின் அசைவுகளைக் கவிதை என்கிறோம். காட்சியாகவும் படிமமாகவும், உருவகமாகவும், குறியீடாகவும், புதிர்களாகவும், புகைமூட்டங்களாகவும் தென்படும் இயற்றப்படும் எல்லாமே நம் எண்ணங்கள்தாம் என்பதையே அறியாத பேதமையுடன்தான் தான் எனும் தன் அகத்திலிருந்தே சற்றும் விடுபடமுடியாமல் தன் துயர்வலியையும் கவிதைகளாகப் புனைகிறோம். இவற்றில் முதன்மையாகச் செயல்படுவது வாழ்வுபற்றிய நமது புரிதல்கள்தாம். நமது முதிர்ச்சியற்ற தன்மையை நாமே அறியாத நிலையில் நமக்கு ஏற்பட்ட போர்களை, சச்சரவுகளை, துயரங்களை, வலிகளை, கவிதை என்கிறோம். உயிரின் இயற்கையான அசைவுகளுக்கு இணையானதாக்கப் பார்க்கிறோம். விடுதலையையும் கண்டடைதலையும் தேடும் ஏக்கத்தையும் தவிப்பையும் ‘காதலை’யும் பக்தியையும் கவிதையெனக் கொண்டாடி மகிழத் தொடங்கிவிடுகிறோம். பசியாறாத, தாகம் தணியாத இந்த வறுமை, அறத்தையும் சமன்நிலையும் உலகில் இயற்ற முடியாத கையறுநிலையை உடையதே என்பதையறியாத கொடுமை உதறப்படும்போதே விடுதலையையும் கண்டடைதலையும் கொள்ளும் இதயத்தின் வெளிப்பாட்டைத் தவறவிட்டுவிடுகிறோம். நமது துயரக் கலைகளுக்கெல்லாம் அப்பால்வெளியில் மவுனமாகக் காத்திருக்கும் மெய்மையையும் கவிதையையும் வெகுசிலரே காண்பவர்களாயிருக்கிறார்கள்.

நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர். வந்தடையவேண்டிய சீரியதோர் இடம் என ஒன்றுண்டு. அதுவே கவிதையினதும் வாழ்வினதும் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். நிச்சயமாக அது ஒரு கலையையோ பொழுதுபோக்கையோ, புலனனுபவச் சுவையூட்டலையோ முதன்மையாகக் கொண்டிருக்காது. அதேசமயம் என்னவானாலும் வாழ்வு என நாம் கண்கூடாகக் காண்பது இந்தக் குப்பைகளும் இதன் சச்சரவுகளும்தானே என்பதால் இவற்றின்மீது நாம் வீசும் வாள் போன்ற கூரான பார்வை அவசியம். இத்தகைய பார்வையுடையவனே கவிஞன் என வேண்டும். மனிதன் என வேண்டும்.

தான் தொட்டதையெல்லாம் மலர வைக்கவேண்டிய மனிதன் தொட்டதையெல்லாம் பிரச்னையாக்கிவிடுகிறான். இதுவரை மனிதகுலவரலாற்றில் மலர்ந்திருக்கும் எந்த இயற்கையையும் அறியத் தவறியவனாய் வழிநடப்பவன், மலரும் எந்தச் செயல்பாட்டையும் தன்னலத்தால் பிரச்னையாக்கிக் காலமெல்லாம் போரிலும் துயரிலும் வாழக்கற்றவன். அதன் ஊற்றுக்கண்ணை அறியாது, அறிய விரும்பாத, முனையாத ஒரு தடித்தனத்தில் வாழவும் கற்றவன். பெருஞ்செல்வந்தன் போலவும், அதிகாரி போலவும், அறிஞர்கள், கலைஞர்கள், தத்துவஞானிகள், மாமனிதர்கள் எனும் பெயரில் உதடுபிதுக்கும் பெருமிதத்தில் திரிகிறவர்களையெல்லாம் நம்மைச் சுற்றித் தாராளமாகக் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்?

நாம் எத்தகைய சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறோம் என்பது நாம் எத்தகைய மனிதனாக இருந்துகொண்டு விரும்புகிறோம், முயன்றுகொண்டிருக்கிறோம் என்பதில்தானிருக்கிறது. இதற்கெல்லாம் முன்பாக இந்த உலகம் சரியில்லை. அறமின்மையும், சமமின்மையும், வறுமையும், போரும், வலியும் துயர்களுமான இது மாற்றப்பட்டே ஆகவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை மிகத்தீவிரமாக நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதைப் பொறுத்திருக்கிறது.

இதுவும் காலம்காலமாகவே மேம்போக்கான ஓர் அரசியல் மற்றும் கொள்கைகளால் தோற்றுப்போனதையும் நாம் அறிவோம். வாழ்வுமுழுமை நாம் இதுவரையும் கண்டடையாதது. இவற்றிற்கெல்லாம் மேலாக, தீமையின் ஊற்றுக்கண்கள் நாம் அறியாதவையாக இருப்பது. எந்தக் கருத்துகளோடும், கொள்கை கோட்பாடுகளோடும் நம்பிக்கைகளோடும் நமக்குள்ள உறவு ஆபத்தானவையே என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? மனிதர்களோடு நமக்குள்ள உறவு என்ன? இயற்கையோடு? ஆழம்காண அழைக்கும் அதன் பார்வைக்குள் செல்லாது நுண்ணுணர்வுகள் எனப்படும் மெல்லிய அசைவுகளோடும் நெகிழ்ச்சிகளோடும் மட்டுமே நின்றுவிட்ட நம் குறைவாழ்வின் அபூர்வ தருணங்களையும், அபூர்வ தருணங்களின் தோற்றத்தையும், ‘அபூர்வ’ எனும் அந்த வார்த்தையிலேயே உள்ள கொடுமையையும்கூட மறைக்கும்படியான நம் மூடத்தனத்தின் மந்தத்தனத்தையும்கூட அறியாதவர்களாய் நாம் கவிதையையும் வாழ்வையும் இங்கே இயற்றிக்கொண்டிருக்கிறோம்.

வெட்கமில்லாமல், சூடு சுரணையில்லாமல் காலம்காலமாகவே கவிஞர்கள் அபூர்வ மனிதர்கள், நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும் அற்புதம் என்கிறோம். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பெரிய மனிதர்களை, தத்துவங்களை, வழிகாட்டிகளை நாமே நம் வறிய மடத்தனங்களால் உருவாக்கிக்கொண்டு வருகிறோம்?

ரிஷிமூலம்

ரிஷிமூலம் என்று நம் முன்னோர்கள் தப்பிக்கப் பார்த்ததெல்லாம் சொன்னால் நம்பவே முடியாத அதன் அளவினாலும், பண்பினாலும் எளிமையாலுமான அசைவுகள்தாம் என்பதாலும், அவை எவையுமே பிறருக்கு எந்தவகையிலும் பயன்படாது என்பதாலும்தான்.

எனது ஆங்கில வாசிப்பின் குழந்தைப்பருவத் தொடக்ககாலம். ஆங்கில மொழியின் சொற்றொடர் அமைப்பின் விசித்திர நிலைகளை நன்கு அறிந்துகொண்டேன். எனினும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால் பொருள் அறியப்படாத சொற்கள் அதில் அதிகமாகவே இருக்கக் கண்டேன். அகராதியைப் புரட்டிப்புரட்டியே முதன்மையான சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வேன் என்றாலும் அநேகச் சொற்களை ஊகத்தின் அடிப்படையிலேயே தாண்டிச் சென்றுவிடுவதுண்டு. ஆனால் கவிதையை அப்படிச் செய்வதில்லை. பொருள்புரியாத எல்லாச் சொற்களையும் அடிக்கோடிட்டுவிட்டு காகிதத்தில் குறித்துக்கொண்டு அப்புறம் அகராதியைத் திறந்து அத்தனை சொற்களின் பொருளையும் பார்த்து எழுதிக்கொள்வேன். அதன்பிறகே நான் கவிதையை வாசித்துப் புரிந்துகொள்வேன். கிட்டத்தட்ட அநேகக் கவிதைகளையும் நானே மொழிபெயர்த்துப் படித்தேன் என்று சொல்ல வேண்டும். கவிதையைத் தவிர்த்த – முக்கியமாக – நாவல்களை வாசிக்கையில் பொருள் புரியாத சொற்களை ஊகித்தபடித் தாண்டிச் சென்றதைப் பின் எப்போதாவது பார்க்க நேர்கையில் என் ஊகம் சரியாக, ஏறத்தாழ, இருந்ததையும் சரிந்ததையும் பார்த்திருக்கிறேன்.

எத்தனை முறைதான் அகராதியைப் புரட்டிக்கொண்டேயிருப்பது. தாகூரின் Stray Birds வாசிக்கையில் – அவரே அந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் – எளிமையான சின்னச்சின்ன அந்தக் கவிதைகளை மற்ற கவிதைகளைப் போலில்லாமல் – அறவே அகராதியைப் பயன்படுத்தாமலேயே புரட்டி வாசித்தேன். இடையில் ஆங்காங்கே அபூர்வமாய்த் தென்பட்ட சொற்களை நானே உரைநடையில் செய்ததைப்போலத் தாண்டித்தான் சென்றேன். அப்படித் தாண்டிச் சென்ற சொற்கள்தாம் ’Timid thoughts’. அதை நான் ஊகித்துக் கடந்த பொருள் ’மிக மெல்லிய எண்ணங்கள்’ பிற்காலம் ஒரு நாள் Timid என்ற சொல்லின் உண்மையான பொருளை நான் அறிந்துகொண்டபோது உண்டானது எனக்குள் ஒரு புதிய வெளிச்சம்தான். இப்போது எனது கையிலிருக்கும் அந்த நூலின் (பழைய புத்தகக்கடையில் கண்டுபிடித்து வாங்கியது. கெட்டி அட்டைபோட்ட macmillan பதிப்பு) அந்தக் கவிதை:

Timid thoughts, do not afraid of me

I am a poet.


பயங்கொள்ளி எண்ணங்களே

பயப்படாதீர்கள் என்னைக் கண்டு

யான் ஒரு கவி.


அன்று நான் ஊகித்திருந்த பொருள்:


“மிக மெல்லிய எண்ணங்களே

அஞ்சாதீர்கள் என்னைக் கண்டு

நான் ஒரு கவிஞன்.”

தாகூர் அரவணைக்கும் ஒரு தாயன்பைக் கவிதையாகக் காட்டுகிறார். தேவதேவனோ மனிதனைக் கண்டே அஞ்சி இந்த உலகைவிட்டே ஓடி ஒளிந்துகொள்ளத் துடிக்கும் மிக மெல்லிய எண்ணங்களை அறிந்தவராயிருக்கிறார். இதிலுள்ள பயங்கொள்ளித்தனம் இன்னொரு புதிய வியப்புதான் அல்லவா? மேலும் எண்ணங்களின் இயற்கையைத்தான் அவர் அறிந்துகொண்டாரோ?

நான் எனது எண்ணங்களுக்குள் ஆழ்ந்தவனாய்ச் சிந்திக்கத் தொடங்கினேன். அது எதைப்பற்றிய ஒரு கண்டடைதல் என்றே தெரியவில்லை. கோழையான பயங்கொள்ளி எண்ணங்கள் மெல்லியதானதோ மென்மையானதோ அல்ல, மாறாக பேரளவான தீமைகளையும்கூட விளைவிக்கக்கூடிய, நம் அகக்கண்ணுக்கும் நன்றாகத் தெரியக்கூடிய அருவுரு உடையவையே என்றிருந்தது. நான் அப்போது கண்ட மெல்லிய எண்ண அசைவுகளோ அந்த அகக்கண்ணுக்கும்கூடத் தென்பட மறுக்கும் மிக மெல்லிய உருஉடையவை. இங்கே வாழும் உயிர்களோடு தாமும் ஓர் உயிராய் வாழமுடியாத அளவுக்கு மெல்லியவை. காட்டின் புதர்களுக்குள் மறைந்துவாழும் குட்டிமுயல் என்றால் அது மிகச்சாதாரணமான ஒரு உவமையே. எண்ணங்களால் நெருங்கவே முடியாத ஒரு உண்மை அது. பயம் என்ற சொல்தான் சரியான சொல்லா? இதை வெளிப்படுத்துவதற்குரிய பருவடிவான ஒரு பொருளும் பூமியில் இல்லையாயிருக்க எப்படி அதனை ஒரு மனிதனால் வெளிப்படுத்த முடியும். இன்னும் துல்லியமாகவும் உண்மையாகவும் சொல்வோமானால் உயிர்வாழ அஞ்சுவதற்குக்கூட அவசியமில்லாமலேயே அழிந்துவிடக்கூடிய மிக மெல்லிய உயிர் அது. கூர்ந்து கவனித்தால் எக்கணமும் அழிந்துவிடத் தயாராயிருக்கும் நொய்மையையே வடிவமாகக் கொண்டது. அதனாலேயே அற்புதமான ஒரு குணபாவத்தைக் கொண்டதாயிருக்கிறது. எதையும் தன் உள்ஏற்கும் விரிவு, பார்வை, கவனம். எல்லாவற்றிற்கும் ஒரு கணம் முன்புதான் மெல்லிய ஓர் அசைவாய் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணங்கள்தாம் அவை. பயம் என்ற சொல்லாகப் பிறந்துவிடுவதும் இதுதானா? சம்பிரதாயமாகவேதான் தற்கால, தற்காலிக ஒரு மொழியில் ஒரு கவிஞனுடைய எண்ணங்கள் இவை என்று நான் சொல்வேன். மவுனம் என்றோ, மவுனத்தை நெருங்கிவிட்ட ஒன்று என்றோ, எந்தச் சொற்களாலும் சொல்ல முடியாத ஓர் உணர்வுநிலையை நாம் ஏதோ ஒருசில சொற்களில் சொல்கிறோம் அவ்வளவே. ஒரே சமயம் மிக எளிதில் சிதைந்துவிடக்கூடியதாகவும், எத்தகைய ஆற்றலாலும் சிதைக்கமுடியாப் பேராற்றலுடையதாகவும் இருக்கும் ஒன்று அது. இவற்றைக் குறித்து நான் மிக ஆழமாக யோசித்தவைகளையே இன்னும் இன்னும் எனச் சற்று விரித்துவிரித்துச் சொல்லிவிட்டேன். ஆனால் வாசகர்களாகிய உங்களுக்கு நான் என் வாழ்க்கையின் ஒரு காலத்தருணத்தைச் சொல்லவே இங்கே விழைந்துள்ளேன்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

கடவுளின் மதம் நூல் வாங்க...

Share:
Powered by Blogger.

சுகுமாரனின் பிந்தைய கவிதைகள் - இசை

கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (10) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (221) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (10) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (221) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive