இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்? 

ஆம். நான் முதன்முதலாக ஏதேனும் 'படைப்பூக்கத்துடன்' எழுதியது கவிதைதான். ஷோபன்ஹாவரின் தத்துவத்தின் பாதிப்பில் அப்போது அதை எழுதினேன். அதன் ஒரு சிறிய வடிவம் என்னுடைய ‘காப்பன்’ என்ற குறும்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இடம்பெறும். உண்மையில் அது ஒரு அரைகுறை முயற்சிதான். ஆனால் அதை கவிதை வடிவில் எழுதிச்சென்று தந்தையிடம் காண்பித்தபோது அவர் சொன்னது எனக்கு சில தெளிவுகளை அளித்தது. ”கவிதை என்பது சிறிய முனையில் நிகழ்வது. அது மொழியின் வெவ்வேறு சாத்தியங்களை வைத்து விளையாடிக் கொண்டிருப்பவர்களுக்கானது. உன்னுடைய களம் தத்துவமும் இலக்கியமும், அதன் பாதையில் எந்த கவிஞனுக்கும் இணையான கவித்துவமும் ஆழமும் உன்னால் அடையமுடியும். கவிதை கவிஞர்களுக்கானது, அதன் மேன்மையும் அதன் மிகப்பெரிய எல்லையும் அந்த குறுகிய தளம்தான்.” 

உண்மையில் இந்த விளக்கம் எனக்கு பலவகைகளில் கவிதையை அணுக கற்றுக்கொடுத்தது. முக்கியமாக கவிதையின் எல்லைகள்தான் என் தளம் என்று எனக்கு அது உணர்த்தியது. நான் முன்பு 'மைத்ரி' நாவலின் வெளியீட்டு விழாவில் நீட்ஷேவை துணைகொண்டு சொன்னதையே இப்போதும் சொல்வேன். உரைநடை என்பது எப்போதும் கவிதையை தவிர்ப்பதிலேயே (resist) அதன் உச்சத்தை அடைகிறது. அது கவிதையின் அகவயம், உணர்ச்சிகரம், இசைமை, பொதுமை போன்ற அலகுகளில் நிகழ்கிறது. ஒரு வெற்றிகரமான உரைநடையின் விவரிப்பு என்பது அது எத்தனை நெருக்கமாக சென்று கவிதையை தவிர்த்திருக்கிறது என்பதன் கதைதான் என நினைக்கிறேன். தோற்கும் தருணங்கள் மகத்தானவையாக இருக்கலாம், ஆனாலும் அவை தோல்விகளே.

கவிதை என்றும் உரைநடை என்றும் இங்கு எதை வரையறை செய்கிறீர்கள்?

இங்கு முக்கியமான ஒரு தெளிவை நாம் கொண்டிருக்க வேண்டும். கவிதை என்று நாம் இப்போது சொல்வது, உரையாடுவது எல்லாம் நவீன கவிதையையே. அது மரபின் தனிப்பாடல்கள் (lyrical poetry) என்னும் வகைமையில் இருந்து உருவாகி வந்தது. அந்த வகைமையின் ode, elegy போன்ற மரபுகள் படிப்படியாக எதுகை, மோனை, அசை, சீர் போன்ற வடிவ கட்டுப்பாடுகளை இழந்து இப்போதைய நவீன கவிதையாக ஆனதை நாம் காண்கிறோம். ஆயினும் நவீனக்கவிதையின் பேசுபொருள் இன்னமும் தனிப்பாடல்களின் நினைவுகளை கொண்டிருப்பதே. அது உணர்வுக்கும், அகவயத்துக்கும், Rhetoric-குக்கும் முக்கியத்துவம் அளிப்பது. செய்திகளையும், பொருண்மைகளையும் தவிர்ப்பது. சங்கப்பாடலில் தலைவன், தலைவி, தோழி, திணைகள் என எல்லா கருவிகளும் பொதுமையை (universal) நோக்கி செலுத்துவதே. நவீன கவிதையிலும் அதே தன்மை இருப்பதை காணலாம், குழந்தை, அன்னை, காதலி, மரணம் என.

அதற்கு எதிராக மரபின் காவிய கவிதை (epic poetry) என்ற வகைமை இப்போதைய உரைநடையின் பேசுபொருளையும் விரிவையும் கொண்டது. அதன் கதாபாத்திரங்களும் உணர்வுதளங்களும் மேலும் தனித்தன்மை (particularity) கொண்டவை. இன்று கம்பன் இருந்திருந்தால் அவன் உரைநடையிலேயே வெளிப்பட்டிருப்பான். அதனால் அவன் இழப்பதை விட பெருவது அதிகமாக இருந்திருக்கும் என்பதை உண்மையான உரைநடை வாசகர்கள் அறிவார்கள். 

ஆகவே நாம் நவீன கவிதையை குறித்தும், உரைநடையை குறித்தும் பேசும்போது இந்த புரிதலை கொண்டிருக்க வேண்டியது அவசியமானது. கம்பனையோ, சிலப்பதிகாரத்தையோ முன்வைத்து நவீன கவிதையில் அத்தகைய உச்ச நாடகீயம் இல்லை, புனைவு தருணங்கள் இல்லை என்று சொல்வது சரியல்ல. நவீன கவிதையின் தளம் அதுவல்ல. அதன் தொடர்ச்சி சங்கப்பாடலிலும், பக்தி இலக்கியத்திலும் உள்ளது.

உரைநடையும் கவிதையும் வேறுபடும் இடங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? 

’கவிதை – உரைநடை’ என்ற எதிரீட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்பது, இயல்பாக கவிதைக்கு வந்துவிடும் மையத்தன்மை. நான் ஏற்கனவே முதல் கேள்விக்கு சொன்ன பதிலிலும் இந்த தொனி வந்துவிட வாய்ப்பிருக்கிறது. கவிதையல்லாதது உரைநடை எனும்போது இயல்பாகவே ஒரு இரண்டாம் பட்சம் உரைநடைக்கு விதிக்கப்பட்டதாக எண்ணலாம். அதன் அடுத்தகட்டமாக சில உரைநடையாளர்களே கவிதை தூயது என்றும், உரைநடை என்பது கவிதையின் நீர்த்த வடிவம் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள். தங்களை தோற்றுபோன கவிஞர்களாக பாவித்துக்கொள்கிறார்கள். இதன் மோசமான பின்விளைவென்பது “நீர்த்த” உரைநடையை கவிதையின் தன்மைகளை கொண்டு செறிவாக்க செய்யும் முயற்சிகள். அவை உரைநடையின் விசாலத்தையும் வீச்சையும் இல்லாமல் செய்கின்றன, அதை ஒரு வாழிடமாக ஆக்கிக்கொள்ளும் வெளியை- இடைவெளியை தரமறுக்கின்றன. அத்தகைய உரைநடைகள் ஒரு வகையில் ஆசிரியரின் மூச்சுக்காற்றால் நிரம்பி வழிகின்றன. 

ஏனென்றால் அவ்வளவு இடத்தை நிரப்ப அவனிடம் புறமோ, அனுபவங்களோ, கற்பனையோ இல்லை, பிதற்றல்களே உள்ளன. உரைநடையின் கட்டின்மை பிதற்றல்களை பெருக்குகின்றன. பிதற்றல்கள் என்பது வெறுமனே மொழியின் வழிப்படுதல். கவிதையில் மொழி வழிப்படுதல் பலம். ஆனால் உரைநடையின் கட்டின்மை அதை பலவீனமாக்குகிறது. தன் உரைநடையின் பிதற்றலுக்குள் தன்னை இழந்தவன் முடிவில்லாது அதில் மூழ்கி இறக்கிறான். ஏனென்றால் மொழி தன்னளவில் தனித்தன்மைகளுக்கு எதிரானது. “காலம் இன்மையை சுழித்துக் கடக்கிறது” என்பது போன்ற வாக்கியங்கள் மொழியின் தளத்தில் மட்டுமே நிகழ்வன. உரைநடையின் பிரதான சுபாவம் துல்லியமும் விழிப்புநிலையும்தான். இங்கு விழிப்புநிலை என்பது கனவுக்கும், கற்பனைக்கும் எதிரானதாக எண்ணவேண்டியதில்லை, அது அருவமான சிந்தனை சட்டகங்களுக்குள் வீழாமல் இருத்தல். ஒரு அந்தியை துல்லியமாக பிரிதொன்றிலாததாக விவரிக்க, அல்லது அகத்தூண்டலாக அளிக்க இயலாதவன் அதை “அம்மாவின் மௌனத்தை போல” என்று ஏதேனும் முதிரா கவிதை வரியை சொல்லி நிரப்புகிறான். அது ’அந்த’ தனித்துவமான அந்தியை மறைத்து, பொதுவான அந்தியென்றாக்கி அதற்கு மற்றுமொரு பொதுவான பிம்பத்தை ஒப்புமைசெய்து கடக்கிறது.

இதற்கு நேர்மாறாக மோசமான கவிதை தெளிவடைந்து தெளிவடைந்து நேரடிக்கூற்றுகளாக ஆகி வெறும் சொல் அறிக்கைகளாக (manifesto) மாறுகிறது. வெறும் அகவுணர்வின் நேரடி வெளிப்பாடு. இரண்டுமே அதனதன் வீழ்ச்சிகள்.

’உண்மையில் கவிதையல்லாதது உரைநடை’ என்பது அல்ல, மாறாக ’உரைநடை அல்லாதது கவிதை’ என்பதே இப்போது (புனைவெழுத்தாளர்களுக்கு) தேவையான பார்வை. தெரிதாவின் இருமைகளின் தலைகீழாக்கத்தை போல இங்கு நாம் உரைநடையை மையத்துக்கு கொண்டுவந்து சிந்தித்து பார்க்கலாம். அதற்கு சாதகமான சில வாதங்களையும் நாம் முன்வைத்து பார்க்கலாம். உதாரணமாக, கவிதையே மூத்தது, உரைநடை ஒரு நவீன கண்டுபிடிப்பு என்ற கூற்று பரவலாக இங்கு திகழ்கிறது. வரலாற்று ரீதியாகவே அது தவறு. உரைநடையின் உச்ச சாத்தியங்களான பைபிளும், பிளேட்டோவின் உரையாடல்களும், உபநிஷதங்களும், புத்த ஜாதக கதைகளும் காலத்தால் மிக முந்தயவையே. அதல்லாமல், எழுதப்படும் கவிதை வடிவம் எழுதப்படாத ஒரு உரைநடை தளத்தையே எப்போதும் தன் பின்புலமாக கொண்டுள்ளது. வாய்மொழிக்கதைகள் உரையாடல்கள் என மொழியின் சாத்தியங்களின் மீதே கவிதை நிகழ்கிறது.  

அதாவது முன்பு சொன்னதை போல கவிதை என்பது மொழியின் சாத்தியங்கள் அல்ல, அசாத்தியங்களின் கலை. அது நிகழ்வது சாத்தியங்களின் பின்புலத்தில். உரைநடையே மொழியின் சாத்தியம், அதன் விசாலம். மொழியின் சிறையை தகர்க்க முயற்சிக்கும் ஒருவன் அதன் சுவர்களில் மீண்டும் மீண்டும் மோதி தலையுடைக்கிறான், அவன் வாழ்க்கை ஓரங்களுக்கு விதிக்கப்பட்டது. மொழியின் சிறையை தன் பார்வைமாடமாக ஏற்றுக்கொண்டவன் அதன் மையத்தில் அமர்ந்து உலகை காண்கிறான். கவிதைக்கு மொழிதான் பிரதான அக்கறை என்றால், உரைநடை உலகை தன் பிரதான அக்கறையாக கொள்கிறது.

ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை வாசிப்பு எந்த அளவுக்கு உதவிகரமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?

புனைவெழுத்தாளன் முதலில் அறியவேண்டியது உலகை. அதன் விசாலத்தை. அதை மொழியின் அத்தனை விரிவையும் கொண்டு அள்ளும் பெரும்செயல் அவனுடையது. அந்த பெரும்செயலில் இயல்பாக அவனுக்கென்று சில பாணிகள் வந்துவிடுவதுண்டு. அது இன்றியமையாததும்தான். அந்த பாணிகள் அவனது சிக்கனத்தின் வெளிப்பாடு. அது ஒரு வகையில் அவன் தன்வயப்படுதலில் இருந்து தவிர்க்கிறது. வழக்கமாக நாம் எண்ணுவதற்கு மாறாக, பாணி என்பது தன்னில் இருந்து விடுபடுவதற்கான வழியே. அது அவனை மொழியின் மீதான கவனத்தில் இருந்து விடுவிக்கிறது. அவன் கவனம் முழுக்க உலகை நோக்கி, அதன் நுண்மைகளை நோக்கி திறந்திருக்கிறது. (இங்கு ’மொழியும் உலகும் வெவ்வேறு அல்ல’ என்று வாதிடும் பின் அமைப்பியல் தரப்பை மறுக்கும் ஒரு வலுவான எதிர்தரப்பில் நின்று பேசுகிறேன். மொழிக்கு வெளியிலான ’யதார்த்தம்’ குறித்த விரிவான உரையாடல் தமிழ்சூழலில் நிகழ வேண்டியிருக்கிறது.) 

ஆனால் சில சமயம் புனைவெழுத்தானின் பாணி ஒரு சிந்தனை பாங்காக குறுகிவிட வாய்ப்புகள் உள்ளன. அதுவே உலகின், யதார்த்தத்தின் நுண்மைகளை அள்ளமுடியாமல், அவற்றை புனைவு சாத்தியங்களுக்குள் கொண்டுவரமுடியாமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆயுதம் இங்கு கைவிலங்காக மாறுகிறது. அவ்வப்போது மொழி மீதான கவனம் அதை தவிர்க்க உதவும் (கத்தியை கூர்தீட்டுவது முழுநேர பணியல்ல). அந்தவகையில் நவீன கவிதை வாசிப்பு புனைவெழுத்தாளனுக்கு முக்கியமானது என நினைக்கிறேன். மறுபுறம் தத்துவ வாசிப்பும் அதேபோல சிந்தனை மீதான கவனத்தை அளித்து, அவன் வளர்ச்சியில் அதே இடத்தை பெறுகிறது. கவிதையும் தத்துவமும் அவ்வகையில் நெறுக்கமானவை.

ஆனால் அதைத்தாண்டி ஒருபடி மேலாக, கவிதை அகவயத்தையும் உணர்ச்சிகரத்தையும் மொழிப்படுத்தும் உச்சங்கள் எப்போதும் எல்லா புனைவெழுத்தாளர்களும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று. பாரதி இல்லாமல் ஜெயகாந்தன் முழுமையடைவதில்லை, ஷில்லர் இல்லாமல் தாஸ்தயேவ்ஸ்கியும் அப்படித்தான்.

ஆனால் அத்தகைய கவித்துவம் தற்போதைய கவிதைகளில் பெரும் அளவில் நிகழ்கிறதா என்பது கேள்வியே.   

சில கருக்கள் மனதில் தோன்றும்போதே இது சிறுகதைக்கு இது நாவலுக்கு என மனம் பகுக்கும். அப்படி செய்கையில் இது கவிதைக்குரியதாயிற்றே என்று எதுவும் தோன்றியதுண்டா. அப்படி இருந்தால் அதைப் பகிருங்களேன்…

முன்பு சொன்னது போல கவிதை எப்போதும் என் தேர்வுகளில் ஒன்றாக இருந்ததில்லை. ஆனால் அகவயத்தன்மை அதிகமாக கொண்ட சில படைப்புகளை ஒரு கவிஞர் கவிதையாக எழுதிப்பார்த்திருக்க சாத்தியங்கள் இருக்கிறது என தோன்றுகிறது. நிலைவிழி, மருபூமி, ஓர் இந்திய ஆன்மீக அனுபவம் போன்றவற்றை அப்படி சொல்லலாம். மருபூமியின் சில பகுதிகள் எழுதும்போது வால்ட் விட்மேனின் ‘Song of myself’ இன் பாதிப்பு இருந்தது. மைத்ரியின் சில பகுதிகளும் கவிதைக்கான சாத்தியங்கள் கொண்டவையாக சொல்லாம்.

ஒரு நல்ல கவிதையில் இருந்து நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்னனென்ன விஷயங்கள்? அவை குறித்துச் சொல்லுங்கள்.

விட்கென்ஸ்டீனியன் பாணியில் சொல்லவேண்டுமெனில் நல்ல கவிதை என்ன என்று வரையறுக்க முடியாது, அதை விவரிக்கவே முடியும். மேற்சொன்ன அகவயத்தன்மை, உணர்ச்சிகரம், மொழியின் அசாத்திய பயன்பாடுகள் எல்லாம் அந்த விவரிப்பின் பகுதிகளே. இவையல்லாது கவிதையின் முக்கியமான குணங்களில் ஒன்று அதன் இளமை. இளமையின் இன்னொரு பெயர் அனுபவமின்மை என்றும் சொல்லலாம். ஆனால் கவிதை அனுபவக்குறைவை தன் தீவிரத்தின் கருவியாக பயன்படுத்துகிறது. அனுபவம் என்பது கடந்த காலத்தின் சுமைகளும் கூட. எல்லா தீவிரங்களையும் மட்டுறுத்தும் அவற்றின் மறுபக்கத்தை காட்டி நிகர்செய்யும் தன்மை அனுபவத்துக்கு வந்துவிடுகிறது. கவிதை அதை தவிர்க்கிறது. கவிதைக்கு மரணமும், பிறப்பும், பிரிவும், காதலும் எல்லாம் முதல் முறையாக நிகழ்கின்றன. அதன் அதீத நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும், வெற்றிக்களிப்பும் தோல்வித்துவர்ப்பும் இந்த அனுபவக் குறுகலின் தீவிரம்தான். அதன் மொழி துணிச்சலையும் இதன் விளைவாக பார்க்கலாம். 

கலை என்பதன் முக்கியமான கூறு தன்னிழப்பு என்று ஷோபன்ஹாவர் சொல்வதை நாம் ஏற்போம் என்றால், உரைநடையும் கவிதையும் அதை இரண்டு திசைகளில் சென்று நிகழ்த்துகின்றன. வைட்ஹெட் (A.N. Whitehead) ஓர் இடத்தில் சொல்கிறார், “இளமை தன் விசையிலேயே தன்னை இழக்கிறது”. ’என் உற்சாகம்’ ஒரு உச்சத்தில் ’உற்சாகம்’ மட்டுமென்றாகிறது. அது வைட்ஹெட் சொல்வதை போல ”தன்வயப்படுத்தும் பொருட்டு தனக்கு வெளியே செல்லுதல்”. பைரனின் வரிகள் இங்கு நினைவு கூறலாம் “I live not in myself, but I become Portion of that around me: and to me High mountains are a feeling”. அவ்வகையில் உணர்ச்சியாகாத, தீவிரம் அடையாத ஒன்றுக்கு கவிதையில் இடமில்லை. தீமை அல்ல கவிதையின் பிரதான எதிரி, மரத்துபோதலே. கவிதையின் உலகு பிரதானமாக அழகியல் சார்ந்தது. தீமையை கூட அது அழகற்றது என்ற வகையில்தான் விமர்சனம் செய்ய முயலும்.

உரைநடை அனுபவங்களின் வழியாக அதே தன்னிழப்பை நிகழ்த்துகிறது. ஒவ்வொன்றையும் நிகர் செய்வதன் ஊடாக, ஒப்புமைபடுத்துவதன் ஊடாக அது அனுபங்களை கோர்த்து ஓர் உலகை உருவாக்குகிறது. அங்கு தனி அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்தத்தின் பகுதியாகவே பொருள்படுவதன் வழியாக தன்னிழப்பு நிகழ்கிறது. என் உற்சாகம் பிறரது உற்சாகங்களின் ஒப்புமையோடும், என் பிற உணர்வுகளின் வேற்றுமையோடும் கொள்ளும் உறவால் பொருள்படுகிறது, தனி உணர்வாகிறது. என் உற்சாகம் பிறரது பிற உணர்வுகளுடன் நிகர் நிற்கும்போது அழுத்தம் பெருகிறது, நாடகீயம் பிறக்கிறது. நான் பிறரின், ஒட்டுமொத்தத்தின் பகுதி. தீமை என்பது தனிமைபடுத்துவது, தன்வயப்படுவது என கொள்வோமென்றால், தீமையே உரைநடையின் பிரதான எதிரி. உரைநடையின் உலகு பிரதானமாக அறம் சார்ந்த ஒன்று. 

இதனால் கவிதையும் உரைநடையும் முரண்படும் இடங்கள் தெரிகின்றன. உரைநடைக்கு கவிதை சமயங்களில் பொறுப்பற்றதாக தெரியும்போது, கவிதைக்கு உரைநடை சுவாரஸ்யமற்றதாக தெரியலாம். இது காலம் காலமாக நிகழ்ந்து வரும் தந்தை-மகன் (தாய்-மகள்) நாடகம் என்றே நினைக்கிறேன். ஆனால் இது வெறும் மோதல் மட்டுமல்ல, மிகுந்த நேசமும் அதற்குள் இருக்கிறது. இரண்டின் இறுதி குறிக்கோளில் நிறைய ஒப்புமைகளும். நல்ல உரைநடை முதிர்ச்சியானது, நல்ல கவிதை இளமையானது.

கவிதைக்கும் அழகியலுக்கும், உரைநடைக்கும் அறத்துக்குமான மேற்சொன்ன உறவை சற்று விரிவாக்க முடியுமா?

கவிதையும் உரைநடையும் முரண்படும் சில இடங்களை வைத்து அதை புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். 

உதாரணமாக, கவிதையில் சட்டென்று எழும் மூர்க்கமும், கோபமும், பொறாமையும் கூட அது தன்னிச்சையாக (spontaneous) எழும் எனில் அழகே. அதன் தற்காலிகத்தன்மையே அதை அழகாக்குகிறது, அதன் உயிர்துடிப்பே அதை உணர்ச்சிகொள்ள செய்கிறது. அதேநேரம் நன்மையே எனினும் அதில் புதுமையோ, மாற்றமோ, தன்னிச்சையோ இல்லை என்றால் அது கவிதையின் பேசுபொருளாகாது. நீதியுரைகள் கவிதைக்கு எதிரானவை. ஆனால் அதேபோல தீமையும் கூட தன்னிச்சையாக இல்லாமல் திட்டமிட்ட, தேங்கிய வெளிப்பாடாக இருக்குமெனில் அது அழகில்லாதாகிறது. கோபத்துக்கும் வஞ்சத்துக்குமான வேறுபாடு அது.

ஒரு கவிதை கோபத்தின் விளைவாக அல்லாமல் வஞ்சத்தின் குரலாக இருக்கும்போது அது அழகை இழக்கிறது. கவிதை அல்லாதாகிறது.

இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கவிதை எப்படி அதன் உணர்ச்சிகரத்தை பெறுகிறது என்பதை. முரண் இல்லாமல், வேறுபாடு இல்லாமல் எப்படி வெறும் உணர்ச்சி தோன்ற முடியும்? முன்பு சொன்னது போல கவிதை தன் பின்புலமாக அமைந்த வாழ்க்கையினோடு கொண்ட முரண் வழியாக தோன்றுகிறது. கவிதை எப்போதும் தனக்கு வெளியே விரிந்து கிடக்கும் பின்புலத்தை சார்ந்தே எழுகிறது. தனக்கென்று உலகை கட்டமைக்க வேண்டாத சுதந்திரமே கவிதையின் அழகு.

கவிதை இரண்டு விதத்தில் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தனித்துவங்களில் இருந்து பொதுமையை பிரித்தெடுத்தல், அதுவழியாக அது தன்னை உலகில் இருந்து விடுவித்துக்கொள்கிறது. குழந்தை, மரணம், இருண்மை, ஒளி, காலம் என. அச்சொற்களின் அர்த்த தளத்தை கவிதை அளிப்பதில்லை, அதை நாம் நம் அனுபவங்களின் ஊடாக கவிதைக்கு அளிக்கிறோம். இரண்டாவது சுவாரஸ்யமான வகைமை ஒன்று உண்டு. அது தனித்துவமான செய்திகளில் இருந்து இணைப்புகளை துண்டித்தல். அப்போது அவை ஒவ்வொன்றும் விதவிதமான பின்புலங்களுடன் இணைய சாத்தியம் கொண்டு தம்மளவில் பொதுமைகளாக மாற்றமடைகின்றன. உதாரணமாக ஒரு கவிதை ஒரு மரணவீட்டில் நிகழும் தனித்துவமான உரையாடல்களை எந்த தொடர்பும் இல்லாமல், யார் யாரிடம் கூறியது என்று இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைத்து கூறுமெனில் அது "மரணவீடு" என்ற பொதுமையின் குறியீடாக மாறுகிறது. ஒரு இலக்கிய மொண்டாஜ். T.S. Eliot இன் Wasteland-இல் இடம்பெரும் காட்சிகளும் உரையாடல்களும் இதற்கு சிறந்த உதாரணம்.

இவ்வாறு கவிதை உலகின் முன் நின்று தான் கண்ட அழகை பேசுகிறது. உலகின் அத்தனை பொருள்களும் அதன்முன் நின்று தங்கள் அழகியல் மதிப்பீட்டை பெருகின்றன. முடிவில்லாது மறுவரையறை செய்யப்படுகின்றன.    

கவிதைக்கு இத்தகைய ஓர் அடித்தளத்தை கொடுத்த பின்பு உரைநடை ’வெறும்’ அறம் சார்ந்தது என்று சொல்லும்போது, அதன் தளம் சட்டென்று சுருங்கிவிடுவது போல தோன்றலாம். நம் வாழ்க்கையில் அறம் சார்ந்தது என எண்ணி நாம் எதிர்கொள்ளும் செய்கைகளும், சம்பவங்களும் மிகச்சிலவே. மேலும் இது உரைநடையாளர்களை, ஏற்கனவே பல முக்கியமான எழுத்தாளர்களின் மீதுள்ள குற்றச்சாட்டான, வெறும் அறவாதிகளாக குறுக்குவது போல தோன்றுகிறது.

ஆனால் இலக்கியத்தின் அறம் என்பது மிக விரிவான தளத்தில் இயங்குவது. உலகின் அனைத்தையும் தன் பார்வைக்குள் கொண்டுவந்து பொருத்துவது. சிறுவயதில் நாம் கதைகேட்க துவங்கும் முன்னே கேட்கும் அந்த முதல் கேள்வியே கடைசிவரை இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கிறது. ”அந்த **** நல்லதா? கெட்டதா?”. நாம் வளர வளர இந்த இருமை எண்ணில்லா வர்ண வேறுபாடுகள் கொள்கிறது. பலவகையான நன்மைகள் இருக்கலாம், பல வகையான தீமைகளும் இருக்கலாம், எல்லாம் இருப்பின் நெசவில் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. அவை அதன் இசைவில் தங்கள் மதிப்பை பெருகின்றன. ஐரிஸ் முர்டாக் (Iris Murdoch) சொல்லும் அந்த “இருப்பின் நெசவே” (fabric of being) இலக்கியத்தின் பேசுதளம். அதில் நற்செயல், தீச்செயல் என்ற தெளிவாக வரையறுக்கப்பட்ட குறுகிய வட்டம் இல்லை. அது ஒருவனின் ஒவ்வொரு செயலிலும், சிரிப்பிலும், பேச்சிலும், சிந்தனையிலும் மெல்லிய நெசவாக ஊடுருவியிருக்கிறது, எண்ணில்லா பிறவற்றுடன் உரையாடுகிறது. (a continuous fabric of being is shown in their mode of speech or silence, their choice of words, their assessment of others, their conception of their own life, what they think attractive or praiseworthy, what they think funny. - Iris Murdoch) 

ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகும் தருணமே நாம் அவனை, அவன் செயல்களை, அவன் உலகோடு கொண்டுள்ள உறவை மதிப்பிடுகிறோம். அது நல்லது தீயது என்ற எளிய சூத்திரத்தில் இல்லை. நாம் அவனை அவனது தளத்தில் வைத்து மதிப்பிட முயல்கிறோம். உரைநடை என்பது தொடர்புறுத்தல்களின் கலை. ஒப்புமைகளும் முரண்களும் இருவகையான தொடர்புறுத்தல்கள். அது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எண்ணில்லாத தொடர்புறுத்தல்கள் வழியாக, தருணங்கள் வழியாக தொட முயல்கிறது. 

இந்த இடத்தில் மதிப்பீடு என்னும் வார்த்தையே பிழைப்புரிதலுக்கு காரணமாக தோன்றலாம். புனைவாசிரியன் முதன்மையாக அற மதிப்பீடுகள் கொண்டவன் அல்ல, அறப் புரிதலே அவனுக்கு பிரதானம். அதனூடாகவே எந்த பொருளும் அவனிடம் அதன் இரண்டாம் பட்சமாக தங்கள் மதிப்பீட்டை பெருகின்றன. ஆம், ”பொருட்களும்” கூட புனைவிலக்கியத்தில் ஒருவகையில் அற மதிப்பீட்டையே பெருகின்றன. ஒன்று மற்றவைகளுடன் எத்தனை விதமாக தொடர்புறுகிறது, எத்தனை விரிவாக அதன் பிணைப்புகள் பரவியிருக்கின்றன என்பதை கொண்டு அவை தங்கள் மதிப்பை பெருகின்றன. அதில் அழகியல் பார்வைக்கு இருக்கும் அதே விரிவு அறப்பார்வைக்கும் இருக்க முடியும். பாலை தீயது, மழைக்காடு நல்லது என்றல்லாமல், இரண்டுமே இரண்டுவித நன்மைகளாக, அவற்றுக்கே உரிய முழுமையுடனும் பிணைப்புகளுடனும் திகழ முடியும். அவ்வாறு இணையாத குறுகிய வட்டம் கொண்ட பொருள் தீயதாக மதிப்பிடப்படலாம். அதையே நாம் செயற்கை என்கிறோம்.

நன்மை, தீமையை உரைநடை அதன் எல்லைவரை சென்று புரிந்துகொள்ள முயல்கிறது, அவ்வாறு புரிந்துகொள்ளாத போது அது தன்னளவில் தீமை அடைகிறது. உரைநடையின் பிரதான எதிரி தீமை என்று கூறியது இந்த அர்த்தத்தில் தான். தீமை வெளிப்படும் படைப்புகள் என்பன தீமையை சித்தரிக்கும் படைப்புகள் அல்ல, அவை தன்னளவில் அறப் புரிதல் இல்லாத படைப்புகள். எனவே தான் பிரச்சார படைப்புகள் கவிதைகளில் பல சமயம் ஏற்றுக்கொள்ளபடுகையில், உரைநடையில் அவை எப்போதும் மோசமான இடத்தையே பெருகின்றன. பார்வை குறுகல் கொண்ட, ஒற்றைப்படையான இலக்கியம் எல்லாவகையிலும் தீயது. அவ்வகையில் பெரும்பாலான அறவாத இலக்கியமும் தீயதே, மோசமானதே. 

நல்ல இலக்கியம் அற மதிப்பீட்டை முன்வைப்பது அல்ல, அறப் புரிதலை முன்னேடுப்பது, அதன் வழியாக அற மதிப்பீடுகளை மறுவரையறை செய்வது. இலக்கியத்துள் அறவாழி என்றும் சுழன்றபடியே இருக்கிறது.      

உங்களது வாசிப்பில், கவிதை எனும் வடிவம் சந்திக்கிற சவால்கள்/ பிரச்சனைகள் என நீங்கள் எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? 

ஒட்டுமொத்த கவிதையின் வடிவம் சந்திக்கிற பிரச்சனைகளை சொல்வதானால் அது கவிதையின் பலங்களையே பலவீனங்களாக சொல்வதாகவே முடியும். ஒரு உரைநடையாளனாக அதை சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் அதை சொல்ல ஒரு இலக்கிய இடத்தை அடைய வேண்டும். தால்ஸ்தாய் சொல்லலாம், அஜிதன் இன்னும் சொல்வதற்காகவில்லை. ஆனால் கவிதையின் மரபுக்குள் சமகால தமிழ் கவிதைகள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றை முக்கியமாக கவனிக்கிறேன். 

சமகால கவிதைகள் குறுவடிவில் (5-6 வரிகளுக்கு கீழ்) இருக்கும்போது அடையும் வெற்றியை சிறுவடிவில் பெரும்பாலும் அடையவில்லை. இதற்கு காரணம் குறுவடிவில் பெரும்பாலும் ஒற்றை அனுபவமும் அதன் தீவிரமும் இருக்கிறது, அவ்வனுபவத்தை அதன் தீவிரம் குறையாமல் மொழிப்படுத்தும்போது அது பிற எல்லாவற்றையும் (கவிதைக்கு வெளியே) பறந்தெழச்செய்ய போதுமானதாக இருக்கிறது. ஒரு சிறிய மந்திரக்கோலை போல.

ஆனால் சிறு-கவிதை ஒன்றுக்கும் மேற்பட்ட அனுபவங்களை இணைக்கிறது. அது படிப்படியாக ஒன்று மற்றொன்றை என உயர்த்துகிறது. ஆனால் அதன் கடைசி பறந்தெழல் அக்கவிதையை ஒட்டுமொத்தமாக உயர்த்த வேண்டும். அது அந்த அனுபவங்களுக்குள் மேற்பார்வைக்கு ஒரு இணைப்பை காட்டிவந்து கடைசி வரிகளில் ஒட்டுமொத்தமான, இன்னும் ஆழமான ஒரு இணைப்பை காட்டவேண்டும். அவ்விணைப்பு கவிதைக்கு வெளியே பல சாத்தியக்கூறுகளுடன் இணைய வேண்டும், அப்படியே கவிதைக்கு வெளியே எல்லா அனுபவங்களுடனும் தன்னை இணைத்து அவற்றை பறந்தெழச் செய்யவேண்டும். ஆனால் அத்தகைய இணைப்பை நிகழ்த்த கவிஞனுக்கு தன்னியல்பான ஒரு விரிந்த பார்வை இருக்கவேண்டும், அது நம்பிக்கையில் இருந்து எழவேண்டும் (ஆம், அந்த வார்த்தையை சொல்ல கவிஞர்கள் தயங்க வேண்டியதில்லை). 

உண்மையில் சிறுகவிதையின் கடைசி இருவரிகள்தான் கவிஞனின் மிகப்பெரிய சவால். அதை இரண்டு வழிகளில் சமகாலத்து கவிஞர்கள் தவிர்கிறார்கள். ஒன்று அதுவரை தொடுத்து வந்த இணைப்பை கலைப்பதோ அல்லது மேலதிகமான இணைப்பு ஒன்றும் இல்லை என்று அதை அர்த்தமிழப்பாக பிரகடனப்படுத்துவதோ வழியாக. இது நவீன கவிதையில் மிகுந்து காணப்படுகிறது. அது கவிதைக்கு தேவையான ஒரு உணர்வுத்தீவிரத்தை தந்தாலும், அர்த்தமிழப்பு என்பது ’ஒரு’ உணர்வுதான். அதுவே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் அயர்ச்சி நவீனக்கவிதையை பீடித்திருக்கிறது. இது கதைசொல்லலில் ஒருவன் கற்பனையை பெருக்கி பெருக்கி முடிவில் எல்லாம் கனவுதான் என்று சொல்வது போல. ”கனவு” என்பது ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தத்தை இணைக்கிறது, அதேநேரம் “அவற்றுக்குள் எந்த இணைப்பும் இருக்க வேண்டியதில்லை” என்றவகையில் அதை நிகழ்த்துகிறது. முதிரா கதைசொல்லிகள் கடைபிடிக்கும் இந்த உத்தியை போலதான் சில சமயம் நவீன கவிதைகளிலும் இதற்கு இணையான பாவனை வெளிப்படுகிறது. ஆம், நவீன கவிதையில் நம்பிக்கையிழப்பு என்பது படைப்பூக்கமின்மையின் ஒரு பாவனைதானோ என சந்தேகிக்கிறேன். 

கவிதைக்குள்ளில் இருக்கும் அனுபவங்களுக்கு எந்த அர்த்தபூர்வமான இணைப்பும் இல்லை என்பதன் வழியாக அந்த அர்த்தமிழப்பின் உணர்வை கவிதைக்கு வெளியே கசிய செய்யும் அந்த உத்தி சற்று பழையதாகிவிட்டதாக உணர்கிறேன்.  

இதல்லாது சில கவிஞர்கள் கைகொள்ளும் இரண்டாவது வழி, ஏற்கனவே சொல்லப்பட்ட மானுடவாத, ஆன்மீக அல்லது மதம் சார்ந்த விடைகளில் இருந்து அந்த இணைப்பை சமைப்பது. இது வேறொரு வகையில் ஏமாற்றம் தருவது. இவ்வாறு செய்யும்போது அப்பார்வை கவிதைக்கு வெளியே நீளாமல் கவிதைக்குள்ளேயே அடங்கிக்கொள்கிறது. 

இந்த இரண்டில் இருந்தும் வெளிவரவேண்டும் எனில் கவிஞர்கள் கவிதைக்கு வெளியே முடிவில்லாத தேடல் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். புனைவு, தத்துவம், அறிவியல், மதம் (நம்பிக்கை அல்ல), இசை, பறவை பார்த்தல் என எல்லா திசைகளிலும் அவர்களது தேடல் விரிய வேண்டும். 

தமிழில் சமீபமாக மதாரின் கவிதைகளில் அந்த இறுதிவரி பறந்தெழல் நிகழ்கிறது. உதாரணமாக: 

ஒரு மீன்

ஒரு கணம் நின்றது

ஒரு சொல்லானது

அது அசைந்து நிற்கவே

ஒரு வார்த்தையானது

நீந்தி நீந்தி

நீண்ட சொற்றொடரானது

சொற்களின் பெருக்கமானது

பூரணமானது

அடுத்த ஓர் அசைவில்

அது மீண்டும்

ஒரே சொல்லானது

மறு அசைவில்

அதுவொரு மீனானது

இக்கவிதையை உண்மையில் நேரடியாகவே நாம் முன்பு சொன்ன மொழியின் அசாத்தியத்தை தொடும் ஒரு முயற்சியாக காணலாம். கடைசி வரியில் ”மீன்” ஒரே நேரத்தில் சொல்லாகவும் (’மீனானது’), சொல்லுக்கு அப்பாற்ப்பட்டதாகவும் மாறுகிறது. அந்த இருமையின் அழுத்தமே அதை உயர்த்துகிறது. மொழியின் சாத்தியங்கள் வழியாக ஞானத்தை பெருக்கி பூரணத்தை அடைந்த பின்னும் ”மீன்” மொழிக்கு வெளியில் செல்கிறது. அல்லது ஞானத்துக்கு பின் மொழி தன் கட்டை அவிழ்த்து இல்லாதாகிறது. மேலும் இக்கவிதையில் ”மீன்” எப்படி ஒரு கணம் நின்றதும் சொல்லாகிறது என்பதும், சொல் எப்படி அர்த்தச்சலனத்தை அடைந்து வார்த்தையாகிறது என்பதும் முக்கியமான தருணங்கள்.  

அதேபோல தற்காலத்தில் எழுதுபவர்களில் கவிஞர் இசை இத்தகைய கவித்தருணங்களில் மாஸ்டர். இசையின் கவிதைகள் கீழிறக்குவதன் பாவனையில் சிறு துரும்புகளையும் சேர்த்து பறந்தெழச்செய்பவை. சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட இந்த கவிதை ஓர் உதாரணம்.

மகா நிர்வாணம்

செருப்புக்கடைக்கு

செருப்புக்கடை  என்றே

பெயர் சூட்டியுள்ளான் ஒருவன்


உனக்கு 

அம்மை அப்பன்

யாருமில்லையா?


பெண்டு பிள்ளை சேர்க்கவில்லையா?


காதலி...

பழைய காதலி...

பால்ய சகி ...

ஒரு நினைவும் இல்லையோ உனக்கு?


அபிமான நடிகன்

அபிமான நடிகை

இப்படி

அபிமானம் ஏதுமில்லையோ?


உன் தலைக்கு மேல் வானமில்லையா?


பூவோ, புழுவோ 

இல்லையோ உன் நிலத்தில்?


கொள்கை? 

கோட்பாடு ?


தெய்வம் என்று

ஒன்று கூட இல்லையா உனக்கு?


செருப்புக்கடைக்கு

செருப்புக்கடை  போதும் 

என்று முடிந்தது

பெருஞ் சலிப்போ? அன்றி

தெள்ளிய ஞானம் தானோ?


சலிப்பும், ஞானமும்

அவ்வளவுக்கும்

அருகருகோ!

இக்கடைசி வரிகள் ஞானியை சலிப்புற்ற செருப்புக்கடைக்காரனாக்குகிறதா, அல்லது செருப்புக்கடைக்காரனை மறுபுறம் செலுத்துகிறதா என்பதே கவிதையின் இறுதியுச்சம். செருப்புக்கடைக்கு செருப்புக்கடை என்பதை தவிர வேறு எல்லா பெயர்களையும் வைக்க நினைக்கும் கொள்கைகள், கோட்பாடுகள், அபிமானங்கள், கடந்த காலம் (அம்மை அப்பன்), எதிர்காலம் (பெண்டு பிள்ளை), மரபு, தத்துவம் என எல்லாம் கொண்ட நாம் அவன் முன் கூசி நிற்கிறோம். அல்லது எல்லாம் வெறும் சலிப்புதானோ? என சந்தேகமும் கொள்கிறோம்.  

உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்/ பிடித்த கவிதைகளைக் குறித்துச் சொல்லுங்கள். வாய்ப்பிருந்தால் ஏன் என்பதையும் பகிரலாம்.

நான் மேற்சொன்ன பாணியின் சிறுகவிதைகளில் நான் மாஸ்டராக கருதுபவர் Gerald Manley Hopkins. அவரது God’s Grandeur மற்றும் Pied Beauty என்ற இரண்டு கவிதைகளும் என் வாழ்வில் மறக்கமுடியாத பாதிப்பை ஏற்படுத்தியன. அவை என்னை ஷோபன்ஹாவரின் கசப்பில் இருந்து மீட்டளித்தன.

God's Grandeur

The world is charged with the grandeur of God.

    It will flame out, like shining from shook foil;

    It gathers to a greatness, like the ooze of oil

Crushed. Why do men then now not reck his rod?

Generations have trod, have trod, have trod;

    And all is seared with trade; bleared, smeared with toil;

    And wears man's smudge and shares man's smell: the soil

Is bare now, nor can foot feel, being shod.


And for all this, nature is never spent;

    There lives the dearest freshness deep down things;

And though the last lights off the black West went

    Oh, morning, at the brown brink eastward, springs —

Because the Holy Ghost over the bent

    World broods with warm breast and with ah! bright wings.

இக்கவிதையின் இறுதியில் இருக்கும் மரபான ஆன்மீக படிமம் ஒன்று வெறும் வெளிப்பாட்டில் இருக்கும் நேர்மையினால், உணர்ச்சிகரத்தால் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் துல்லியத்தால் மொத்த கவிதையையும் உயர்த்துகிறது. அந்த கணத்தில் கவிஞருடன் சேர்ந்து நாமும் அந்த மகத்தான ஒளிச்சிறகுகளை பார்க்கிறோம்.

நீள் கவிதைகளில் இந்த ’கேள்வி-பதிலால்’ தூண்டப்பட்டு இளமையில் நான் ரசித்த ‘Wasteland’ மற்றும் ‘Song of myself’ இரண்டையும் மறுவாசிப்பு செய்தேன். சில இடங்களை தவிர “Wasteland” என்னை இம்முறை கவரவில்லை. அதே நேரம் “Song of myself” இன்னமும் அதே மகத்தான வீரியத்துடன் இருக்கிறது. நவீன கவிதையின் துவக்கத்திலேயே அகவயத்தின் ஒருமை, மாற்றமின்மை, உடல்கடந்த தன்மை என்ற எல்லா மரபான நோக்குகளையும் கேள்விக்குட்படுத்தி, தகர்த்து ஆனால் இறுதியில் அதன் இருப்பை பன்மடங்கு பெரிதாக்கிய படைப்பு அது. A grand treatise on subjectivity.  

***
இசை தமிழ் விக்கி பக்கம்:




அஜிதன் தமிழ் விக்கி பக்கம்:


மதார் தமிழ் விக்கி பக்கம்:


***





Share:

திருவள்ளுவரும் அவரது திருக்குறளும் - க.நா.சு

என் பள்ளி, கல்லூரிக் காலம் முழுவதும் நான் சமஸ்கிருதத்தைப் பெரிய ஆர்வத்துடன் கற்றவன் அல்ல. எனவே, ஆங்கிலத்தில் கொஞ்ச காலம் எழுதிவிட்டு, முப்பதுகளின் நடுப்பகுதியில் தமிழில் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச் செவ்வியல் ஆக்கங்கள் குறித்து அதிகம் அறிமுகமில்லாமல் இருந்தேன். நான் அவற்றைக் கற்கத் தொடங்கியது சுப்ரமணிய பாரதியிலிருந்துதான். அவ்வாறு நவீனக் காலத்தில் ஆரம்பித்து, படிப்படியாகப் பின்னோக்கி நகர்ந்து தொன்மையைச் சென்றடைந்தேன். இப்பயணம் பல வகையிலும் என் மனதிற்கு நெருக்கமாக இருந்துவந்துள்ளது. நான் இறக்கும் நாளில்கூட இது முடிந்துவிட வேண்டும் என நான் எண்ணவில்லை. ஜைனர்களைப் போல, தமிழ்ச் செவ்வியல் ஆக்கங்களை முழுமையாகக் கற்று முடிக்க இன்னொரு பிறவியில் நம்பிக்கை வைக்கிறேன்.

குறிப்பாக, இரண்டு காரணங்களுக்காக திருக்குறளைப் படிப்பது எனக்கு முக்கியமானதாக இருந்தது. ஒன்று, தமிழர்கள் உதட்டளவில் இந்த நூலுக்குக் கொடுக்கும் அளவுக்கு அதிகமான புகழ்ச்சி; ஆனால் அதற்குரிய சீரிய, ஆழமான ஆய்வுகள் அதிகமாக செய்யப்படவில்லை. இரண்டாவது, இதுவொரு அறநெறி போதிக்கும் நூலாக இருக்கும் அதே சமயத்தில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகவும் இருப்பது. லட்சியவாத எழுத்தின் மீதான மதிப்பு இன்றைய காலத்தில் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான லட்சியவாத எழுத்தாளர்கள் தங்கள் சிறிய படைப்புகளால் தோல்வியடைந்த எழுத்தாளர்களாக இருப்பதையே வரலாறு நமக்கு காட்டுகிறது.

லியோ டால்ஸ்டாய் நிச்சயமாக ஒரு நவீனக் காலத்து விதிவிலக்கு. அவ்வாறே திருவள்ளுவர் என்னளவில் பண்டைய காலத்து விதிவிலக்கு. தங்கள் அறவுணர்வை சிறந்த இலக்கியமாக வெளிப்படுத்திய மிகச்சில அறநெறி எழுத்தாளர்களில் ஒருவராக திருவள்ளுவரைக் கருதலாம்.

திருக்குறளை முதன்முறை படித்தபோது, அந்நூலில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே  சிறந்த கவிதைப்பண்புடன் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பில் என் கருத்து மாறியது. தற்போது ஒரு பங்கை வேண்டுமானால் நிராகரித்துவிடலாம், மிச்சம் ஐந்தில் நான்கு பாகம் சிறந்த கவிதைகளாகச் சொல்லத்தக்கவை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்ச காலம் இந்நூலுடன் செலவழித்தால் சற்றுக் குறைவாகத் தோன்றிய பாகமும் என் கருத்தை மாற்றிச் சிறந்தவையாகத் தோன்றக்கூடும் என நினைக்கிறேன்.

கற்றறிந்த உரையாசிரியர்கள் தங்கள் விளக்கவுரைகளால் குறளில் உண்டாக்கிய சிக்கல்களிலிருந்து அப்பிரதியைப் பிரித்து எடுப்பதை எனக்கே ஒரு விளையாட்டு போலச் செய்து பார்த்தேன். உரையாசிரியர்கள் கற்றவர்களாக இருந்தாலும் எனக்கு அசௌகரியமாய் இருந்தனர். அவர்களை ஒதுக்கிவிட்டு கவிஞனின் உள்ளத்திலிருந்து குறளை அணுக முயன்றேன். நேரடியாக சொற்களின் வழியாகவும் செறிவுமிக்க அதன் சொற்றொடர்கள் வழியாகவும் அணுகினேன். பத்து வருடங்களுக்கு முன்பு இவ்வாறு எனக்கு நானே உரைநடை வடிவில் செய்துகொண்ட மொழியாக்கம் மிகவும் களிப்பூட்டும் பயிற்சி அனுபவமாக இருந்தது.

பிறருக்குத் தீங்கு செய்யாமையை ஒட்டுமொத்தமாக வலியுறுத்துவது, யாரையும் காயப்படுத்தாமல் அஹிம்சை வழியைக் கடைபிடிப்பதன் மேன்மை, துறவு நெறியின் சிறப்பு போன்றவற்றை குறள் தொடர்ந்து எடுத்துரைப்பதைக் காணலாம். இதுபோக, காலக்கணக்கு மற்றும் இதரக் கருத்துகளுக்கு நான் சார்த்திருக்கும் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்துப்படியும் குறளை இயற்றியவர் பிறப்பாலோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ ஒரு சமணராக இருக்கலாம் என்கிற வலுவான எண்ணம் எனக்கு உள்ளது. தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரை, என் கருத்து என்னவென்றால், இலக்கியத்தைக் காட்டிலும் மதம் சார்ந்த பற்றுகளே அவர்களின் இலக்கிய நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் சமணர்களின் பங்களிப்பு வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதைவிட மிகவும் பெரிது என்றே நான் நினைக்கிறேன். மேலும் சமணர்கள் அன்றைக்கு நிலவிய சமஸ்கிருத மைய இலக்கியப் போக்குகளை எதிர்த்து நடத்திய போராட்டமும் தமிழ் மொழி தன் பேச்சுவழக்கு எனும் நிலையிலிருந்து இலக்கிய நிலைக்கு உயர முக்கியக் காரணியாக இருந்திருக்கலாம். இவை அனைத்தும் இப்போதைக்கு ஆராய்ச்சிக் கருத்துகளே; தெளிவான ஆதாரங்களாக இன்னும் உருவாகவில்லை.

இந்த நிலைமையில்தான் பாரதிய ஞானபீடத்தின் ஆலோசகர் திரு எல். சி. ஜெயின், வள்ளுவரின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கினார். தினசரி வாழ்வில் குறள் வலியுறுத்திய அஹிம்சை, அதன் சமூக மற்றும் மனிதநேயப் பார்வை ஆகியவற்றைத் தொகுத்து நோக்கினேன். குறளின் பல்வேறு அதிகாரங்களின் ஊடே மீண்டும் மீண்டும் வாசித்தபோது, நாளுக்கு நாள் இன்னும் தெளிவாக நான் உணர்ந்தது என்னவென்றால், கவிஞர் சொல்வதான மானுடப் பொதுநெறி, சமண மதப் பின்னணியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்பதே.

பேராசிரியர் அ. சக்கரவர்த்தி, தன் முடிவுகளின்படி, குறளின் ஆசிரியர் ஸ்ரீ குந்தகுந்த ஆச்சாரியர் என்றும் அவரது சீடர் காஞ்சிபுரம் பகுதியின் அதிகம் அறியப்படாத சிற்றரசரான சிவகுமார மஹாராஜா என்றும் அடையாளப்படுத்தியுள்ளார். இது மிகைப்படுத்தப்பட்டது போலத் தோன்றினாலும் அவரது ஆய்வு முடிவுகளை முழுக்கச் சாத்தியமற்றவை என்று சொல்லிவிட முடியாது. சமண மரபு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இதனுடன் குறளிலிருந்து அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பெரும்பாலான நூல்கள், சமண நூல்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும்போது திருவள்ளுவர் ஒரு சமணர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

நான் சக்கரவர்த்தியின் அறிமுகத்தில் இருந்தும் பிற முக்கியக் கட்டுரைகளிலிருந்தும் அதிகமாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் பார்வையில் வடக்கு-தெற்கு என்றோ, தமிழ்-சமஸ்கிருதம் என்றோ பிரிவினைப் பார்வைகளைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் திருவள்ளுவரை ஒரு கவிஞராகவும் உலகை நோக்கி சில நித்திய உண்மைகளைப் பாட முயன்றவராகவும் காண்பதே குறளுக்குச் செய்யும் நியாயமாக இருக்கும். அதன் அறநெறிப் பார்வை சமணத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் குறள் நிச்சயமாக மதம் அல்லது அதுபோன்ற வேறெந்த குறுகிய பிரிவுக்குள்ளும் அடங்கிவிடாத புத்தகம். அது அன்பைப் போல விசாலமானதும் கடலைப் போல அகன்றதும் வானத்தைப் போல உயர்ந்ததுமான ஒன்று. பண்டைய நூலாக இருந்தாலும், நவீன மனிதன் விரும்புகிற அளவுக்கு என்றும் நவீனத்தன்மையுடன் இருப்பதே அதன் மிகப் பெரிய கவர்ச்சி.

குறளிடம் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. அது கவிதையாகவோ ஞானமாகவோ இருக்கலாம். மனிதராய் பிறந்த அனைவரும் அதன்வழி பயனடைய முடியும். உலகின் சிறந்த அறநெறி நூல்களின் வலிமை இதில்தான் உள்ளது. அவ்வகையில் உலகுக்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த அறநெறி நூல்களில் ஒன்றாக குறள் இருந்தாலும் உலகின் பெரும்பகுதி அதுபற்றிய அறிமுகம் இல்லாமலே உள்ளது. தேவையான விமர்சன ஆழத்துடன் உலக அரங்கில் குறள் முன்வைக்கப்படாததே அதன் காரணம்.

. நா. சுப்ரமண்யம்

புது தில்லி

தமிழ்ப் புத்தாண்டு நாள், 1986

***

[க. நா. சுப்ரமண்யம் திருக்குறள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய Tiruvalluvar And His Tirukkural (1987) என்ற நூலின் முகவுரை. தமிழில், டி. ஏ. பாரி.]

***

க.நா.சுப்ரமண்யம் தமிழ் விக்கி பக்கம்:


டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்





***

Share:

மராட்டிய கவிதைகள் - தீபா.ஆர்

1

பைடணி*

-ஷாந்தா ஷேலகே

பழைய மர அலமாரியின் அடியில்,  பதுங்கி இருந்தது ஒரு துணி மூட்டை. 


அதில் பழைய உடைகள்,                          

அலங்காரமாக கைவினை செய்யப்பட்ட குழந்தையின் குல்லாய்கள், ஷால்கள் இவற்றோடு, சதுரமாய் மடிக்கப்பட்ட பைடணி  புடவை.       


தேங்காய் நிற முந்தியும், தங்க ஜரிகையும் சேர்ந்து செல்வச் சீருடன் தெரிந்தது.


என் பாட்டி இதே பைடணியைத் தான் அவள் திருமணத்தில் உடுத்தி  

இருந்தாள்.


இதன் முந்தானையை கையில் பிடித்த படியே மூத்தோர் கால்களை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றாள். 


இந்த பைடணியைச் சுற்றித்  தவழ்கிறது ஒரு மென்மையான மணம். 

நான் அறிந்ததும், அறியாததுமான காலத்தை இணைக்கும் ஒரு உள்ளுணர்வு.


விளக்கு, தூபம் கற்பூரம் எரிந்த எத்தனை ஆவணி மாதங்கள்,

பண்டிகை நாட்கள் ஓடிவிட்டன. 


அவளின் விரல்களின் ஈரத்தை, அதன் மென்மையை அவள் உடலை, அதன் நறுமணத்தை, ஏன் அவளின் மனதையும் கூட தெரிந்து வைத்திருந்தது, ஆண்டுகளாய் அவள் உடுத்திய பைடணி!

 

புதிதின் மிடுக்கில் இருந்த பைடணி  மெல்ல மிருதுவாகி விட்டது. 

அதன் ஒவ்வொரு மடிப்பிலும் வாழ்வு விரிந்ததில், வருடங்கள் ஓடி ,

தன்னை அறியாமலேயே, அவள் மரணித்தும் போனாள்.


எப்போதாவது இந்த பைடணியை  நான் மார்போடு அணைத்துக் கொள்கிறேன். 


அதன் மென்பட்டு தொடுதலில் பாட்டி நெருக்கமாக அமர்கிறாள். எங்களுக்கு நடுவில் காலம் விலகி நின்று  தாழிடுகிறது.


காற்றே, என் நலத்தைக் கூறி என் பாட்டியின் நலத்தை விசாரித்தேன் என்று சொல்லு!

------------------------------------------------------------

*பைடணி - பட்டுச் சேலையின் பெயர்

***

2

தாகினா*

- சஞ்சய்  சௌத்ரி

அழகு மகள் கேட்டாள், 


"அம்மா, உன் கை விரல்களில், 

வைரம் போல ஜொலிக்கும் கற்களுடன்,  மோதிரம் 

ஏன் இல்லை?

 

அம்மா சொன்னாள் ,

"கண்ணம்மா! 

உன் பிஞ்சு விரலால் என் விரலை சுற்றிக்கொள்.

இதை விட விலையுயர்ந்த மோதிரம் இருக்கிறதா என்ன?"


ஆசை மகள் மீண்டும் கேட்டாள், 


"அம்மா ,

உன் கழுத்தில் மஞ்சள் மின்னும் தங்க மாலைகளும், அட்டிகைகளும் 

ஏன் இல்லை?"


அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள், 

 "குட்டி , உன் மென்மையான கரங்களால் என் கழுத்தைக் கட்டிக்கொள், 

உன் சிறு இதயம் என் மார்பில் துடிக்கட்டும்.

இதைவிட மேலான ஆபரணம் உலகிலுண்டா?"


குழந்தை அம்மாவின் விரலைப் பிரித்துக் கொண்டு, 

கழுத்தை இருக்கமாகக் கட்டிக்கொண்டு, மார்போடு அணைத்துக் கொண்டாள்!


அம்மாவின் கண்களிலிருந்து விழுந்த வெண் முத்துக்கள் மகளின் கருங்கூந்தலை நனைத்தது.


அம்மா சொன்னாள்,

"குட்டி ,

நம் உள்ளம் மலர்ந்திருப்பது தான் நமக்கு உண்மையான நகை!


எந்த மரமும் வேறொரு மரத்தின் பூவைச் சூடிக்கொண்டு தன்னை அழகாய்க் காட்டிக்கொண்ட வரலாறு இதுவரை நிகழ்ந்ததே இல்லை."

-------------------------------------

*தாகினா - அணிகலன்

***

(கவிதைகள், தமிழில்: தீபா.R)

சாந்தா ஷேலகே:                                                            

                                                







Share:

இருளென்றும் ஒளியென்றும் ஒன்று - கடலூர் சீனு

ஒருமுறை சுவாமி வியாசப்ரசாத் வசம் யாரோ ஒருவர் தனது மனத்துயர்களை சொல்லிக்கொண்டு இருந்தார். சுவாமி சொன்ன பதில் இவ்வாறாக இருந்தது.  "அந்த கஷ்டங்கள் எல்லாம் வெறும் நிழல். எது உன்னை சந்தோஷமாக வைத்திருக்கிறதோ அதை செய். அதுதான் நிஜம்". அவர் சொன்ன விதம் அது குறிப்பிட்ட கேள்விக்கான பதில் அல்ல, இந்த வாழ்வை குறித்த அடிப்படை உண்மை என்று துவனித்தது. 

ராமகிருஷ்ணர் வசம் சாதகர் ஒருவர் இந்த வாழ்வின் துயரம் குறித்து புலம்புகிறார். குருதேவர் அவருக்கு  "தன்னை தேடி வரும் யாருக்கும் கடல் உப்பைத்தான் அளிக்கும். உபாயம் அறிந்து முக்குளிப்போருக்கே கடல் தன் முத்தை அளிக்கும்." என்று பதில் சொல்கிறார். ரமணர் மூப்பு, தளர்வு, நோய் அனைத்தாலும் ஆட்கொள்ளப்பட்டாலும் அவர் " ஆன்மாவின் இயல்பு ஆனந்தம்" என்றே சொல்கிறார். 

இது எல்லாமே இந்த வாழ்வின் சாரம் குறித்த இந்திய நோக்கு. இந்த நோக்குக்கு மேலை சிந்தனை மரபில் பிளாட்டோ துவங்கி எமர்சன் தொடர்ந்து, அங்கிருந்து இங்கே ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வரை நீளும் மரபு தொடர்சி உண்டு.அந்த வாழ்க்கை நோக்கை என் சொல்லில் இப்படி தொகுக்கிறேன். காணும் யாவும் அழகே. அந்த அழகு புறம் என்ற யதார்த்தம் என்ற உண்மைமேல் நிலைகொள்கிறது. கண்ணுக்கு புலனாகும் பிரிக்க இயலா இந்த உண்மையும் அழகும், இதற்கும் அப்பால் கண்ணுக்கு புலனாகாத இவற்றின் சாராம்சமான அருவமான முழுமுதல் நன்மை ஒன்றின் ஸ்தூல வெளிப்பாடு. இங்கே தீமை என்பது இல்லை. தீமை என்று சொல்லப்படுவது நன்மை குறைந்த நிலை மட்டுமே. 

இந்த வாழ்க்கைப்பார்வையின் பகுதியாக வந்த ஜிட்டு கிருஷ்ணமூர்தி அவர்களின் தொடர்சி என்று தேவதேவன் அவர்களை சொல்லலாம்.

அவரது சமீபத்திய கவிதைகளில் ஒன்று இது.

கொக்குகள் திகைக்கச்

சிறகுகளின்றியே

செம்மாந்து நிற்கும் ஆம்பல் மலர்கள் 

காலடியில் 

தவம் கிடக்கும் பெருவெளி.

ஒற்றைக்கால் கொக்கு, ஒற்றைக்கால் ஆம்பல் மலர் இவை நேரடியாகவே ஒற்றை கால் கொண்டு தவத்தில் நிற்கும் யோகியை நினைவூட்ட, கவிதை அதை தலைகீழாக்கி அதன் காலடியில் பெருவெளியை தவம் செய்ய வைக்கிறது. கொக்கு பறக்கும் வானப் பெருவெளி என்பது சென் புத்திச மரபில் நேரடியாகவே ஞானம் நோக்கிய பயணத்தை குறிப்பது. ஓஷோ தியான மையம் ஒன்றின் லோகோ அதுதான். 

கொக்குக்கு நேர் எதிரான ஆம்பல் மலர் கொக்கு போலவே ஒற்றைக்கால் தவ யோகி ஆனால் கொக்கு போல வான வெளி அதற்கு கிடைக்குமா? வானம் உயிர்த்து, நிகழ்ந்து, மறையும், யாவற்றையும் தன்னில் கொண்டு, ஆனால் தான் மாறாத, மாற்றமே அற்ற காலமே அற்ற, விரி வானம். கொக்கு பறந்து எழுந்து அடைய வேண்டிய விரி வானம், எதுவுமே செய்யாது வெறும் காத்திருப்பு மட்டுமே கொண்ட அந்த ஆம்பல்  மலரின் காலடியில் கிடக்கிறது. ஒரே காட்சி கொண்ட இக்கவிதை, வாசகர் மனதில் ஒரு கணம் தியான அனுபவத்துக்கு நிகரான அமைதி ஒன்றை தொட்டுக் கிளர்த்திவிடுகிறது.

வாழ்வு குறித்த இந்த பார்வைக்கு நேர் எதிரான வலுவான பார்வை கொண்ட தத்துவத் தரப்பு, இந்த கவிதை சுட்டும் காட்சியை கண்டால் என்ன சொல்லும்? ஆம்பல் மலரால் பறக்க முடியாது. அதற்கு வானம் கிடைக்காது. அதன் காலின் கீழ் கிடப்பது வானம் போன்ற மாயை. அதற்கு கீழே இருப்பது உண்மையின் சேறு. ஆம்பல் நிற்பது அந்த உண்மையின் சேற்றில்தான். கொக்கு விரி வானை அளைந்து திரிந்தாலும், உயிர் வாழ ஒரு பிடி உண்ண வேண்டின் அது இந்த சேற்றில் இறங்கி நின்றுதான் ஆக வேண்டும். மேலை மரபில் இந்த வாழ்க்கை நோக்கு சார்ந்து பண்டைய காலம் தொட்டு ஷோபனாவர், நீட்சே தொடர்ந்து இன்றுவரை நீளும் தத்துவவாதிகள் தொடர்சி உண்டு. 

அவற்றை என் சொல்லால் இப்படி தொகுப்பேன். புற உலகுக்கு தன் இயல்பில் அழகு என்ற ஒன்றோ சாரம் என்ற ஒன்றோ இல்லை. இங்கே நிகழ்வது அனைத்தும் குருட்டுத்தனமான ஆற்றல்களின் முட்டி மோதல் மட்டுமே. மனிதனுக்குள் அதுவே குருட்டுத்தனமான விழைவாக, அதற்கான யத்தனமாக வெளிப்படுகிறது. இது ஒரு நிறைவின்மை. இங்கே செயல்பாட்டில் இருக்கும் அந்த துயருக்கே வாழ்க்கை என்று பெயர்.  இந்த வாழ்வில் உண்மை நன்மை அழகு என்பவை எல்லாம் இந்த நிறைவின்மை நிலையை ஒரு கணம் நிற்க வைப்பதில் எழும் ஆசுவாசம் மட்டுமே. மேலே தெரியும் அந்த அழகு நன்மை இவற்றின் ஆழத்தில் மானுடம் அறியாத எல்லையற்ற இருளின் ஆழம் மட்டுமே உண்டு. மனிதனால் தேர்வு செய்ய முடியும். ஆனால் எதன் வழியாகவும் இந்த அடிப்படை  துயர் அதில் இருந்து அவனால் வெளியேற முடியாது. ஏன் எனில் அவன் "இதில்" இருந்து வெளியேறி செல்ல "அப்பால்" என ஏதும் இல்லை. 

இந்த வாழ்க்கை நோக்கு சார்ந்த இலக்கியப் பிரதிகள் தமிழ் உட்பட உலக மொழிகள் யாவற்றிலும் நிறைய உண்டு. இந்த வாழ்க்கைப் பார்வை மேல் அமைந்த கவிதை என்று சசி இனியன் எழுதிய இந்த கவிதையை வகைப்படுத்தலாம்.

கண்

பழைய படித்துறை பாசி படிந்திருந்தது.

அவ்விடத்தில்

வெவ்வேறு விதமான பாத்திரங்களுடன்

பிச்சைக்காரர்கள் 

அமர்ந்திருந்தனர்.

கூடவே அந்தச் சூழலில் நிலவும்  சத்தம் வேறு.

எனக்குக் கால்கள் மிகுந்த சோர்வாக இருந்தது.

அவ்விடத்திலே அவர்களோடு

அமர்ந்து விட்டேன்.


பாசிகளும் அழுக்குகளும்  குப்பை கூளங்களாக

இருந்த இடத்தில் 

அவர்களின்

இடையே உட்கார்வது

ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

ஆனாலும் 

கண்களைச் சற்று தாழ்த்தியபடி 

அமர்ந்து கொண்டேன்.


அவ்விடத்துக்குச் சற்றும் 

பொருந்தாத ஏதோ ஒன்று

என்னை உற்றுப் பார்ப்பது போல இருந்தது.

நான் என் தலையை இன்னும்

சற்று தாழ்த்தி அதைப் பார்த்தேன்.!

எனக்கு

மிகச் சமீபமாகக்

மிகச் சிறிய கோலிக்குண்டு போல

ஒன்று

கிடந்தது!


நான்

ஏதோ பொம்மைக் கண் என்று நினைத்து 

அதைக் கைகளில் எடுத்துப் பார்த்தேன்.

ஈரப்பசையோடு வெண்மையும் சிவப்பும், 

அடர் நீலநிற ரத்த நாளங்களுமாகத் தோல் 

நீக்கப் படாமல் இருந்தது.

அதன் மெல்லிய சவ்வுப் படலத்தை நீக்கினேன்.

அது சட்டென்று விழித்துப் பார்த்து அலறியது!

அதன் வாயின் மெல்லிய நீள் கோடுகளை

அதன் ரத்த நாளங்களை எல்லாம் பார்த்தேன்.

அதன் குரல்

அந்தக் குளத்தை

அதைச் சுற்றி உள்ள மனிதர்களை நடுங்கச் செய்தது.!

கண் கிடைத்ததும் அதற்குத் தலை வந்துவிட்டது.

பின்பு ஒவ்வொன்றாக..

நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன்!!


மிக மெல்லிய

மிகச் சிறிய என்று 

நினைக்கிற எல்லாமும் இப்படித்தான் 

அச்சுறுத்துகிறது

அல்லது 

இப்படி 

திறந்து காண்பிக்கிறது. 

சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.

குளத்தில் வெண்கொக்கு 

ஒன்று 

இங்கிருந்து அங்கும் 

அங்கிருந்து இங்குமாக பறந்துக் கொண்டிருந்தது.

(சசி இனியனின் முதல் தொகுப்பாக நீலி வனம் வெளியாகி இருப்பினும், அதில் இருப்பவை எல்லாம் கவிதைக்கான கச்சா பொருள்களே அன்றி கவிதைகள் அல்ல. அந்த தொகுப்புக்கு பிறகு எழுதிய இந்த கவிதைதான் அவரது "முதல் கவிதை". இங்கிருந்துதான் கவிஞர் தனது கவிதை பயணத்தை துவங்க வேண்டும்) 

மேற்கண்ட கவிதை திடுக்கிட்டு விழித்துக்கொள்ளும் கவிஞனின் ஒரு அறுபடல் வழியே அவன் அமர்ந்திருக்கும் குளக்கரை மேலே பறந்து கொண்டிருக்கும் கொக்குகள் கொண்ட புற உலகுக்கு மீள்கிறது.

திடுக்கிட்டு விழிக்கும் முன் அவன் தியான தருணத்தில் அதன் ஆழத்தில் அந்த குளம் பாசி படிந்த பண்டைய கால குளமாக கிடக்கிறது. அருகே வெவ்வேறு பாத்திரம் கொண்ட பிச்சைக்காரர்கள். ஆம் வெவ்வேறு விதமான பாத்திரங்களை ஏந்தி அமர்ந்திருப்பது தவிர அவர்கள் கையில் எதுவும் இல்லை. அவர்கள் செய்ய ஏதும் இல்லை. எவரேனும் இருந்து அவர் வந்து பிச்சை இட்டால்தான் உண்டு. அதில் எந்த நிச்சயமும் இல்லை.

இதற்கெல்லாம் இடையில் எவராலும் கோரப்படாது  மிக சாதாரணமாக அங்கே கிடக்கும் ஒன்று.  (தியானிகள் தேடும் மூன்றாவது கண் என்றும் கொள்ளலாம்) அதன் வழியே திறக்கும் ஆழம். அதன் இருள் சித்திரம். பீதி அளிக்கும் உணர்வை பொதிந்து வைத்திருக்கும் கவிதை இது. இதுவும் தியான அனுபவம் ஒன்றின் பகுதிதான். சரியான குரு இன்றி பயின்று இத்தகு தியான காட்சிகள் வழியே சித்தம் கலங்கிய பலர் உண்டு. 

சமகாலத்தில் எழுதப்பட்ட மேற்கண்ட இரண்டு கவிதைகள் கொண்ட தனித்தன்மை என்பது அது சமகாலத் தீவிர தமிழ் இலக்கியத்தில் எழுதி குவிக்கப் படும் (அரசியல் அநீதி, காதல், வப்பாட்டி ,கைகால் வலி இப்படி ஏதோ ஒன்று, அய்யய்யோ போச்சே அல்லது அய்யய்யோ வந்துருச்சே வகையறா) காண்டம்பரரி கவிதைகளை உதறி வெளியேறி என்றும் உள்ள ஒன்றை சுட்டி நிற்கும் நிலை. மேற்கண்ட இரண்டு கவிதைகளும் கொண்ட பலம் என்பது இந்த வாழ்க்கை அதன் சாரம் குறித்த உசாவலின் கவி வடிவமாக நிற்கும் நிலை.

பிளாட்டோ காலம் துவங்கி இன்றுவரை தத்துவவாதிகள் எல்லோருக்கும் இலக்கிய (குறிப்பாக கவிதை) ஈடுபாடு உண்டு. காரணம் அறிவு சார்ந்த எல்லா பலத்துடனும் தத்துவம் இயங்கினாலும் (அறிவின் இயல்பு அது முற்ற முழுதான இறந்த காலத்தை சேர்ந்தது) அது கலைக்கு ஒரு வினாடி பின் தங்கியே நிற்கும். தூரத்தில் பட்டாசு ஒளிக்கு பிறகு சில வினாடி விட்டு ஒலி அதனோடு ஓடி சேர்ந்து கொள்வது போல தத்துவம் கவிதைக்கு பின்னால் ஓடி வந்து சேர்ந்து கொள்ளும். காரணம் கவிதை இந்த வாழ்வுடன் பிரிக்க இயலா வகையில் "இக்கணத்தில்" "நிகழ்வது". 

ஒரு ஃபிராய்டிய அறிஞன்  தி ஜா வின் அம்மா வந்தாள் நாவலும், தாஸ்தாவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலும் படித்தான் என்றால் அம்மா வந்தாள் நாவலை ஆம் சரிதான் என்று ஆமோதித்து வைத்து விடுவான். மாறாக கரமசோவ் சகோதரர்கள் நாவலுடன் உரையாடுவான். காரணம் தி ஜா அவன் அறிந்ததை கலை வழியே அவனுக்கு திருப்பி காட்டுகிறார். மாறாக தாஸ்தாவெஸ்கியோ அந்த அறிஞன் அவன் கொண்ட துறையில் எதை அறிந்திருக்கிறானோ அந்த அறிதல் எல்லையை மேலும் கொஞ்சம் விஸ்தரிக்கிறார்.

மேற்கண்ட இரண்டு கவிதைகள் ஒரு தத்துவவாதி வாசித்தால் ஆமாம் சரிதான் என்று சொல்லி கடந்து விடுவான். ஆம் அந்த கவிதைகள் தத்துவம் அடைந்தவற்றை சித்திரங்கள் வழியே உணர்ச்சி ஏற்றி வாசகனுக்கு அளிக்கிறது. அந்த வகையில் இந்த கவிதைகள் தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்லலாம். ஆனால் தத்துவத்தை கடந்து தத்துவத்துக்கு கவிதையால் அளிக்க முடிந்த ஒன்றை தரும் கவிதைகள் அல்ல இவை. அந்த வகையில் தமிழில் நிகழ்ந்த, இந்த திறன் மிகுந்த, சீரிய  நல்ல  கவிதைகள், அவை கொண்ட எல்லையும் இதுவே.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்:



சசி இனியன் தமிழ் விக்கி பக்கம்:


***


Share:

இரா.கவியரசு கவிதைகள்

தேவ குயில்

அதிகாலை

இரவெல்லாம் சுழன்றடித்த வெக்கையை 

ஐன்னல் திறக்குமொரு தருணத்தில் 

பாய்ந்து கவ்வி அழிக்கிறது 

உந்தன் குரல். 


குரலில் ஒரு குளிருண்டு 

விழிக்காது உருளுகிறேன் 

பனிக்குடத்தின் நீரலைகளுக்குள். 

கன்னத் தசைகளில் கிளர்ச்சியூற 

உதைக்கத்தான் வேண்டும் இப்போது

கால்பந்தாவதும் உந்தன் குரல்தான் 

குளிர்குயிலே !


காலை

ரயிலை விட்டிறங்கினால் 

காலைப் பிடித்திழுக்கும் 

அலுவலக நாற்காலி

ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிவிடும்.

இப்போது ஏன் கூவுகிறாய் ?

குரலில் ஒரு ஏணியுண்டு 

ஏறி மரத்துக்கு 

ஏறி மேகத்துக்கு 

ஏறி வெளிக்கு 

ஏறி ஏதுமற்றதற்கு வந்துவிட்டேன்.

இறங்குவதற்கு 

ஏணி இல்லையா   

விண்குயிலே !


தேநீர் இடைவேளை

எலுமிச்சம் தேநீர்தான். 

அரசமரத்தில் இலைகளெல்லாம் 

உன் குரல் உடுத்திக் கூவுகிறதா?

காணவே முடியாது 

குரலில் ஒரு சுவையுண்டு 

உறிஞ்சும்போதெல்லாம்

வாய்க்குள் விரியும் மண்டலங்கள். 

சுற்றிக் கொண்டிருகின்றன 

சுவை கிரகங்கள் 

நிறுத்தவே முடியாமல்.


பிரம்மக் கடலொன்றை உருவாக்கி 

மூழ்கடிக்க வா 

பச்சைக் குயிலே !



மாலை

ரயில் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும்

அன்றாடத்தின் பாதைதான் அது.

பிரார்த்தனையின் 

பொற்தூவல் தெளிக்கும்  

குரலில் ஒரு பாதையுண்டு 

கண்மூடித் தவழ்கிறேன். 


தூக்கிக் கொஞ்சத் தாயாருண்டு 

அவரளிப்பதோ 

வளரவே முடியாத சாபம்.


அழுகிற யாவரையும் 

குழந்தையாக மாற்றிவிடுவாயா 

தேவ குயிலே !


வெண்பாறை இட்லித் தட்டு 

தெருவிளக்குகள் 

சுவர்க்கோழிகளுடன் 

உரையாடிக் கொண்டிருக்கின்றன

மழை விட்ட குளிரில்  

விழித்திருப்பது குறித்து.


"அக்காஆஆஆஆ" 

கேட்டைத் தட்டுகிறது குழந்தை 

வெண்பாறை இட்லித் தட்டை 

ஏந்தி நிற்கும் தாயுடன்.


சிடுசிடுப்பில்லை 

அழுகையில்லை

கன்றைப் போல குதித்து 

வாசல் வருகிறாள்

கனவுக்குள்ளிருந்து.


பாறை இட்லிகள் 

சட்னி நதியில்  

கரைந்தோடுகின்றன 

வயிற்றுக்குள்.


தோளிலணைத்து "ரோரோ" சொன்னதும் 

பூத்துப் பரவுகிறது ஏப்பம்.

அப்போதும் 

" அக்காஆஆஆஆ"தான். 


உலகுக்கே செரித்து விட்டது.

***

Share:

சங்க இலக்கியம் - ஒரு பார்வை - க.நா.சு

இன்று நமக்குக் கிடைக்கும் தமிழின் செவ்வியல் ஆக்கங்களில் காலத்தால் மிகவும் முற்பட்டது சங்க இலக்கியங்களே. பொதுவாக, கூடுகையைக் குறிக்கும் ‘சங்கம்’ எனும் சொல், இவ்விடத்தில் அறிஞர்கள் கூடிய மன்றத்தைக் குறிக்கிறது. சங்கப்பாடல்கள் என்ற பெயர் வருவதற்கு  ஏழாம் நூற்றாண்டில் உருவாகி நிலைபெற்றுவிட்ட ஒரு கதையே காரணமாகும். இக்கதையாடல் பின்னர் அதிக நம்பகத்தன்மை பெற்றதோடு பல விளைவுகளையும் உண்டாக்கியது. மூன்று சங்கங்களின் கதை ஒரு புராணக் கதை என்ற அளவில் மட்டுமே கருத்தில் கொள்ளத்தக்கது. தமிழ் இலக்கியம் குறித்த வரலாற்றாய்வில் பொருட்படுத்தும் அளவுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அதில் சிறிதளவு உண்மை இருக்க வாய்ப்பிருந்தாலும், அதன் அளவும் துல்லியமும் இன்றைய நிலையில் மதிப்பிட முடியாதவை.

தமிழ் மரபு நமக்குக் கையளித்துள்ள கதைகளின்படி, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சங்கங்கள் செயல்பட்டுள்ளன. கடவுளரும் முனிவரும் பிற மக்களும் பங்குகொண்டு நடைபெற்ற முதல் சங்கம் தென்மதுரையில் 4,450 ஆண்டுகள் நீடித்தது. கடல்கொள்வதற்கு முன்பான லெமூரியா கண்டமே இச்சங்கம் இயங்கிய இடம். இரண்டாவது சங்கம் நடைபெற்றதோ வடக்கே உள்ள கபாடபுரத்தில். அதுவும் தற்போது கடல்கொண்டுவிட்ட இடமாகும். 3,700 ஆண்டுகள் நீடித்த இச்சங்கத்தில் கடவுளர் இருக்கவில்லை. ஆனால் முனிவர்களும் மக்களுமே பங்குகொண்டனர். இறுதியாக நடந்த மூன்றாவது சங்கமே தற்போது உள்ள மதுரையில் இருந்தது. 1,850 ஆண்டுகள் நீடித்த அச்சங்கத்தில் 49 பேர் மட்டுமே பங்குகொண்டதாகச் சொல்லப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் இம்மூன்று சங்கங்களுக்கும் ஆதரவளித்து புரவலர்களாக இருந்துவந்தனர்.

தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலப் படைப்புகள் எதிலும் இந்தச் சங்கங்கள் குறித்தோ அதன் செயல்பாடுகள் குறித்தோ எவ்விதக் குறிப்பும் இல்லை. அதே சமயம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வஜ்ரநந்தி சங்கம் என்ற பெயரில் கற்றலுக்கான சமண மையம் ஒன்று உருவாகி, பெரிய அளவில் செயல்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஒருவேளை தமிழர்கள் உருவாக்கியிருக்கும் தொன்மக் கதைக்கு இதுவொரு அடிப்படைத் தூண்டுதலாக இருந்திருக்கலாம். காலத்தால் மிகவும் முற்பட்ட சங்கம் எனும் கருதுகோள் இன்று பொதுவாக  ஏற்கப்படாவிட்டாலும், ஆரம்பகாலத் தமிழ்க் கவிதைகளுக்கு ‘சங்கப்பாடல்கள்’ எனும் பெயரே வேறெந்த பெயரைக் காட்டிலும் ஏற்புடையது. மேலும் அதுவே மரபாக வழங்கிவந்து நிலைத்துவிட்ட பெயராகும். இதுவரை அறியப்பட்ட தமிழ் நூல்களிலேயே தொன்மையானதான தொல்காப்பியம் தொடக்ககாலத் தமிழ்க் கவிதைகளின் வரிசையில் சேர்க்கப்படுவதில்லை. அதுவொரு இலக்கண நூலாக இருந்தாலும் வழக்கமான இலக்கண நூல்களைப் போன்றதல்ல. சொற்சேர்க்கை, வாக்கிய அமைப்புக்கான விதிகள் முதலானவை குறித்து அது ஓரளவு பேசினாலும், அதைக் காட்டிலும் கூடுதலாக கவிதைக்கான பேசுபொருள் குறித்தும் இலக்கிய மரபுகள் குறித்தும்தான் பேசுகிறது. சங்கப்பாடல்கள் பொது யுகம் முதலாம் நூற்றாண்டு வாக்கில் உருவாகி வந்திருக்கலாம். அதன்பின்னர் அதற்கு அடுத்து வந்த ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளில் அவையெல்லாம் தொகுக்கப்பட்டு, மொத்தமாக சுமார் 26,000 வரிகளுடன் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு என தற்போதுள்ள வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். இது மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கலாம்.

நான் எட்டுத்தொகையை மட்டும் தற்போதைய பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன். அவற்றுள் இரு தொகுப்புகள் காலத்தால் பிற்பட்டவை என்ற கருத்து பரவலாக ஏற்கப்பட்டது. எனவே அவற்றை விட்டுவிடலாம். மீதமுள்ளவை ஆறு தொகைநூல்கள். அவை பின்வருமாறு:

1. அகநானூறு: 400 பாடல்களின் தொகுப்பு. மரபான காதலைப் பேசுபொருளாகக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 13 முதல் 31 அடிகள் வரை உள்ளன.

2. நற்றிணை: காதலைக் குறித்த 400 பாடல்களின் தொகுப்பு. ஒவ்வொன்றும் 8 முதல் 12 அடிகள் வரை கொண்டது.

3. குறுந்தொகை: 400 காதல் பாடல்கள். ஒவ்வொன்றும் 4 முதல் 8 அடிகள் வரை உள்ளன.

4. ஐங்குறுநூறு: 500 காதல் பாடல்கள். ஒவ்வொன்றின் அளவும் 3 முதல் 6 அடிகள் வரை மட்டுமே.

5. பதிற்றுப்பத்து: பத்துப்பத்து செய்யுள்கள் கொண்ட பத்துப் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நூறு பாடல்களின் தொகுப்பு. ஒவ்வொரு பாகமும் சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னனின் படையெடுப்புகளையும் வெற்றிகளையும் பேசுகிறது. இத்தொகுப்பின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

6. புறநானூறு: 400 பாடல்களின் தொகுப்பு. காதலைத் தவிர்த்த பிற பேசுபொருள்களைக் கொண்ட பாடல்கள் என்று சொல்லலாம். 4 முதல் 40 அடிகள் வரை நீள்பவை.

மற்ற இரண்டு தொகுப்புகளான பரிபாடலும் கலித்தொகையும் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுவதால் அவை இந்த வரிசையில் சேர்க்கத்தக்கவை அல்ல. இருப்பினும் எட்டுத்தொகை எனும்போது இவ்விரண்டு தொகுப்புகளையும் சேர்த்தே குறிப்பிடுவது மரபு.

மேற்கண்ட ஆறு தொகுப்புகளில் உள்ள கவிதைகளை, இத்தனை காலமாக அவற்றின் மீது ஏற்றப்பட்ட கதைகளையும் உரைகளையும் உதிர்த்துவிட்டு, கவிதைக்கான அழகியல் நோக்கில், கவிதைகளாக மட்டும் அணுகுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இந்த ஆறு தொகுப்புகளில் உள்ள இரண்டாயிரத்து இருநூறு பாடல்களுக்கும் அவற்றுக்கே உரிய பண்புநலனும் தரமும் உண்டு. அவை நாகரிகத்தின் தொடக்க கால சமூகத்தைப் பேசுகிறது. இருப்பினும், இலக்கிய வழக்குகளுக்கும் அன்றாடத்தின் நடைமுறை வாழ்க்கைக்கும் நடுவே உள்ள இடைவெளியை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்கூட அது எவ்வகையிலும் பண்பாட்டு முதிர்ச்சியற்ற சமூகத்தைச் சித்தரிக்கவில்லை. இப்பாடல்களில் வெளிப்படும் சமூகவியல் கூறுகளின் முக்கியத்துவத்தை கடந்த எழுபது ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள் பலவாறாக அடையாளப்படுத்தியும் பட்டியலிட்டும் வந்துள்ளனர். உ. வே. சாமிநாதையர் மற்றும் சி. வை. தாமோதரம் பிள்ளை போன்றோரின் அசாத்திய முயற்சியால் திட்டவட்டமான, போற்றுதலுக்குரிய பதிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே சங்கப்பாடல்களில் வெளிப்படும் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வை சமூகவியல் நோக்கில் ஆராயும் இப்பணி எவ்வித தடையுமில்லாமல் நடைபெற்று வருகிறது.

ஆனால் வழக்கமாக சங்கப்பாடல் தொகுப்புகளில் அதிகமும் தவறவிடப்படுவது அதன் கவிதை அம்சம்தான். அவை எந்த காலத்தில் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டு இந்த வடிவை அடைந்திருந்தாலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்பட்ட சிறந்த கவிதைகள் சிலவற்றுள் அவையும் அடங்கும். இத்தொகுப்புகளில் உள்ள இரண்டாயிரத்தி சொச்சம் பாடல்களில், நான்கில் ஒரு பங்கு நல்ல கவிதையாகவும் ஏறக்குறைய எட்டில் ஒரு பங்கு மகத்தான கவிதைகளாகவும் சொல்லிவிட முடியும். தமிழ்க் கவிதை அடைந்த சாதனையின் சுவடுகள் அவை. அவற்றைக் குறித்து நாம் மேலும் சிந்திக்கலாம்.

அனைத்துக் கவிதைகளும் ஒரு மனதால், ஒரே கவியால் எழுதப்பட்டதல்ல. நற்றிணையில் 175 கவிகளின் ஆக்கங்கள் உள்ளன. குறுந்தொகையில் 205 கவிகளின் பாடல்களும் ஐங்குறுநூற்றில் 5 கவிகளின் பாடல்களும் புறநானூற்றில் மொத்தம் 157 கவிகளின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் பதிற்றுப்பத்து அளிக்கும் வெவ்வேறு நிகழ்வுகள், அரசவை அதிகாரிகள் தொடர்பான தரவுகளையும் இணைத்துப் பார்க்கும் பொழுது அக்காலகட்டத்தை மீட்டுருவாக்கம் செய்து பார்ப்பதற்கான சிறந்த மூலப்பொருட்களாய் இவை உள்ளன. இத்தொகுப்புகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண் படைப்பாளிகளும் உள்ளனர். சில கவிஞர்கள் இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தொகுப்புகளில்  இடம்பெற்றுள்ளனர்.

சங்கப்பாடல்களை அழகியல் நோக்கில் கவிதைகளாக அணுகுவதை பின்னால் வந்த கற்று தேர்ந்த உரையாசிரியர்கள் சற்று சிரமமான காரியமாக ஆக்கியுள்ளனர். உரையாசிரியர்களோ காலத்தால் மிகவும் பிந்தி வந்தவர்கள். கவிஞரின் அனுபவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு தளங்களிலான தங்கள் கற்றல் அனுபவத்தை அவர்கள் தங்கள் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றுள் சில உரைகள் மிகவும் எடைமிக்கவை. பல எளிய கவிதைகள் அவற்றின் எடையைத் தாங்குவதில்லை. கவிஞர்களின் காலத்திலிருந்து குறைந்தது ஆறிலிருந்து எட்டு நூற்றாண்டுகள் கழித்தே  உரையாசிரியர்களின் காலம் வருகிறது. வாழ்க்கைமுறை, சிந்தனைப்போக்குகள் அனைத்தும் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கும். வெவ்வேறு அறிவுத்துறைகளிலிருந்து அவர்கள் கொண்டுவரும் பலதரப்பட்ட தரவுகளால் உரையாசிரியர்கள் இன்றளவும் நம்மை வியப்பிலாழ்த்தத் தவறுவதில்லை. வேர்ச்சொல்லியல், கலாச்சாரம், கலை, மதம் மற்றும் மதம் கடந்த தகவல்கள் என தகவல்பெருக்கத்தால் கவிஞர்களின் எளிய வரிகளில் நாம் அடையக்கூடிய நேரடிப் புரிதலும்கூட பலசமயம் தடைப்பட்டுவிடுகிறது. இது ஷேக்ஸ்பியரின் கவிதையை அடைய, அவரது எழுத்தின் பகுதியாக பல்வேறு விளக்கவுரைகளையும் பொருளுரைகளையும் சேர்த்து வாசிப்பதைப் போன்றது.

நவீனத் தமிழ்க் கவிதையின் வாசகருக்கு சங்கப்பாடல்களை முதன்மையாகக் கவிதை நோக்கில் அணுகுவதில் உள்ள பெரிய சிக்கலே இதுதான், இது எல்லா காலத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாசகருக்கும் ஓரளவு பொருந்தும். இதன்மூலம் உரையாசிரியர்களின் தகுதியை நாம் குறைத்து மதிப்பிடவில்லை, பலசமயம் அவர்கள் கவிஞர்களைவிடவும் கற்றறிந்தவராக இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு தமிழ் கலாச்சாரத்தில் முக்கிய பங்குண்டு. ஆனால் அவர்களின் பாண்டித்யம் ஒரு கவிஞனின் சொல்லுக்கும் அதன் நல்ல வாசகருக்கும் இடையே குறுக்கிடக் கூடாது.

உதாரணமாக டாக்டர் சாமிநாதையரின் தேடலில் குறுந்தொகைக்குப் பழைய உரைகள் ஏதும் கிடைக்காதபோது அவர் சோர்வுற்றுவிடவில்லை. அதைத் தானே எழுதுவதாக முடிவுசெய்தார். அது எவ்வகையிலும் மரபான பழைய உரையாசிரியர்களிடமிருந்து மேம்பட்டோ அல்லது மேலும் தெளிவை அளிப்பதாகவோ இருக்கவில்லை. அதன்வழி வாசகருக்கும் கவிதைக்கும் இடையே கண்ணுக்குப் புலப்படாத சுவர் ஒன்றை அவர் எழுப்பிவிட்டார். டாக்டர் சாமிநாதையரின் ஆதரவாளர்களேகூட குறுந்தொகையின் சிறந்த கவிதைகளுக்கு அவரால் நல்ல உரை அளித்துவிட முடியும் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சாமிநாதையரை அவமதிக்கும் நோக்கிலோ அவரது பங்களிப்பைச் சிறுமைப்படுத்தும் நோக்கிலோ இதைச் சொல்லவில்லை. மாறாக ஒருவரின் பாண்டித்யம் அவரது அழகியல் பார்வை அல்லது படைப்பூக்கத்தின் அடையாளமாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்தவே சொல்கிறேன்.

அடுத்ததாக அக்காலகட்டத்தின் பொதுவான இலக்கிய வழிமுறைகளை விவாதிக்கும் முன்பாக இப்பாடல்களில் பயின்றுவரும் யாப்பமைதி பற்றிச் சொல்ல வேண்டும். இவை அனைத்தும் அகவற்பாவில் அமைந்தவை. அகவல் என்பது அழைத்தல் அல்லது பேசுதலைக் குறிப்பது. இந்தப் பாவகை வெவ்வேறு தாளங்களில் அமைந்திருந்தாலும் அதன் அழுத்தம் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வரியின் பல்வேறு புள்ளிகளில் இடைநிறுத்தம் இருப்பதால் பல பயன்பாடுகளுக்குப் பொருந்தக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்ட பாவகையாகும். பழமையான மற்றும் எளிதில் புரியாத சொற்கள் கவிதைகளில் இருந்தாலும், அதன் தாளம் ஒருவித எளிமையான உரையாடல் சாயலை அளிக்கிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, முந்தைய காலத்தின் பழக்கவழக்கங்களையும் சொற்களையும் புரிந்துகொள்ள நாம் தவிர்க்கமுடியாமல் உரையாசிரியர்களை நம்பவேண்டி இருக்கிறது. அவர்கள் இந்த விஷயத்தில் ஏற்கத்தக்கவர்களாகவும், கிட்டத்தட்ட இன்றியமையாதவர்களாகவும் மாறுகிறார்கள். இக்கவிதை வரிகளின் தாளம் இன்றைக்கு ஒருவருக்கு பழக்கப்பட்ட பேச்சைப் போலத் தோன்றக்கூடும். சங்கப்பாடல்களிலிருந்து ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகள் கழித்து வந்த சிலப்பதிகாரத்துடன் தமிழ்க் கவிதையில் இவ்வகை தாளத்தின் பயன்பாடு முடிவுக்கு வந்தது.

மறைந்த எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமது ‘History of Tamil Language and Literature’ என்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் இவ்வாறு கூறுகிறார்:

‘அவை அனைத்தும் அகவற்பாவில் உள்ளன. தமிழ் யாப்பியலின் நீண்டகால வளர்ச்சியில் முதலாவதாகத் தோன்றிய பாவகை இதுவாகும். இது தமிழுக்குப் பிரத்யேகமானது, சமஸ்கிருதத்தில் இதற்கு இணையில்லை. ஆங்கிலத்தில் உள்ள blank verse மட்டுமே இதற்கு மிக நெருக்கமாக வரக்கூடியது. குறிப்பாக, சிறிய பாடல்களில், மொழி எளிமையாகவும் நேரடியானதாகவும் வீரியம் மிக்கதாகவும் வெளிப்படுகிறது. சுருக்கமான வெளிப்பாடு, பொருட்செறிவு, சொல்லின் தூய்மை மற்றும் சிந்தனையில் ஒருமை ஆகியன சங்கப்பாடல்களின் முக்கியப் பண்புகள். தமிழ் ரசனையின் இந்த எளிமையான வெளிப்பாடு பண்டைய கிரேக்கத்துடன் சிறப்பாக ஒப்பிடத்தக்கது. பிற்கால இலக்கியங்களின் சிறப்பியல்புகளாக விளங்கும் அற்ப கற்பனைகளும் புலவர்களின் வறட்டுப் புலமையின் வெளிப்பாடும் இதில் முற்றிலும் இல்லை. மாறாக, எளிய மனித இயல்பு இவற்றின் பளிங்குபோலத் தெளிவான வாக்குகளில் பிரதிபலிக்கிறது. உணர்ச்சிகள் தூண்டப்படும்போது அவை மட்டுப்படுத்தப்பட்டு, அதன்வழி எழும் அடக்கப்பட்ட வெளிப்பாடே இலக்கியத்தில் பயன்படும் கருவி. இப்பாடல்களில் கலையின் நுட்பமும் எளிமையும் உள்ளது. ஆனால் செயற்கைத்தனம் மிகக் குறைவே.’

இக்கவிதைகளின் உணர்வையும் தமிழ்ப் பாக்களின் தாளத்தையும் சுட்டிக்காட்டும் விதமாக புறநானூற்றில் உள்ள சிறிய பாடல் ஒன்றை இங்கே தருகிறேன். இப்பாடல், சிறந்த வள்ளல் என்று அறியப்பட்ட பாரியின் புகழையே எப்போதும் பாடிக்கொண்டிருக்கும் புலவர்களை நோக்கிப் பேசுகிறது. இதில் புலவர், இவ்வுலகின் ஒரே வள்ளல் பாரி மட்டுமல்ல; இன்னொருவரும் உண்டு என்கிறார். அது விண்ணுலகிலிருந்து பொழியும் மழை! அதுவே ஒரு வேளாண் சமூகத்தில் எல்லா மக்களுக்கான உணவையும் வாழ்வாதாரத்தையும் கொடுப்பது. இது வார்த்தைகளை மிகக் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்தித் திறம்பட வெளிப்படுத்தப்பட்ட ஓர் அழகிய கற்பனையாகும்:

‘பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே’

[புறநானூறு 107; கபிலர்]

சங்கப்பாடல்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில படிமங்களையும் சித்திரங்களையும் இங்கு தருகிறேன்.

புறநானூற்றிலிருந்து ஒரு பாடல்:

‘தாயில் தூவாக் குழவி போல,

ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.’

[புறநானூறு 5; பரணர்]

இது குறுந்தொகையிலிருந்து:

‘யாரும் இல்லை; தானே கள்வன்;

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறு பசுங் கால,

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!’

[குறுந்தொகை 25, கபிலர்]

இது அகநானூற்றிலிருந்து:

‘நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,

பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,’

[அகநானூறு 18, கபிலர்]

[ஓடிவரும் காட்டாற்றில் மலரிதழ்கள் உதிர்ந்து குவிந்து நீரின் நிறத்தை மறைக்கும் அளவுக்குப் படர்ந்திருக்கும்.]

(ஜப்பானியக் கவிதைகளுடன் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இக்கவிதையில் உள்ள ஜப்பானியத் தாக்கம் புரியும்.)

இப்பாடல் நற்றிணையிலிருந்து:

‘நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக

கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய

பல் பூங் கானலும் அல்கின்றன்றே’

[நற்றிணை 187; ஒளவையார்]

அகநானூற்றிலிருந்து மேலும் ஒரு பாடல்:

‘உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல

நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,’

[அகநானூறு 208; பரணர்]

இக்கவிதைகளில் இருந்து உருவகங்கள், அணிச்சொற்கள், கச்சிதமான கவித்துவச் சொற்றொடர்கள் என முடிவில்லாமல் எடுத்துக்காட்டலாம். இக்கவிஞர்கள் இயற்கையைப் பற்றி மிக நுட்பமான கவனத்துடன் இருந்துள்ளனர். இன்னொரு நோக்கில், தாந்தேவைப் போல, அவர்கள் தங்களுக்கான படிமங்களை அன்றாடம் சுற்றியுள்ள பரிச்சயமான வாழ்க்கையிலிருந்தே எடுத்துக்கொண்டனர். செம்மண் தரையில் ஊற்றப்படும் நீர் காணாமல்போவதைப் பற்றி ஒரு கவிஞர் குறிப்பிடுகிறார். மற்றொருவர், வீட்டிலிருக்கும் இல்லத்தரசி கவனிக்காதபோது முற்றத்தில் அணில்கள் விளையாடுகின்றன என்கிறார். இவ்வாறான அன்றாடச் சித்தரிப்புகள் அடங்கிய இக்கவிதைகளிலிருந்து தினசரி வாழ்க்கையின் ஒரு சிறந்த மாதிரியைக் காணலாம். அதேபோல அக்காலகட்ட இயற்கை, தாவரங்கள், பறவைகள் போன்றவற்றின் தகவல் களஞ்சியமாகக் காணமுடியும். இது சங்கப்பாடல்களில் காணப்படும் செல்வத்தின் ஒரு பகுதியே. இந்தக் கூறு தமிழ்ப் பண்டிதர்களாலும் பேராசிரியர்களாலும் ஓரளவுக்கு முழுமையாகவே ஆராயப்பட்டிருக்கிறது. அதேபோல, அக்காலத்திய கவிதை மரபுகளும் எண்ணற்ற முறை ஆய்வுகளுக்குள்ளாகி, அவற்றின் தனித்தன்மைகள் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. சங்கக் கவிதைகளை அகம் மற்றும் புறம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பகுப்பது மிகவும் நவீனக் கருத்தாக்கமாகும். இது இன்றைய இலக்கியத்துக்கும் உளவியல் விளக்கங்களுக்கும் பொருந்தக்கூடியதுயாகும்.

அகத்தை உள்முகமானது, தன்னிலை சார்ந்தது என்றும் புறத்தை வெளியுலகம், புறவய உலகம் சார்ந்தது என்றும் பொருள் கொள்ளலாம். சங்கக் கவிஞர்கள் இதை சில வரையறுக்கப்பட்ட, மரபுவழிப் பொருள்களில் மட்டுமே பயன்படுத்தினர்: அகக் கவிதைகள் காதல் சார்ந்தவை, தனிப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை. புறக் கவிதைகள் காதல் அல்லாத பிறவற்றைப் பேசுபவை - போர், கொடை, மன்னர்களின் வாழ்வு போன்றவற்றை  வெளிப்படுத்துபவை. நாம் அகம் மற்றும் புறம் என்ற சொற்களையே இன்றைய இலக்கிய விமர்சனத்திலும் பிரதானமாகப் பயன்படுத்தலாம். யதார்த்தவாதம், இயல்புவாதம், இருத்தலியல் போன்ற மேற்கத்தியக் கலைசொற்கள் அவர்களின் விவாதப் பரப்பிலேயே இடத்துக்கு இடம் பொருள் மாறுபடும் தன்மை கொண்டுள்ளது. அவற்றுக்கு மாற்றாக நாம் நமது இச்சொற்களை பயன்படுத்தலாம். நமது சொல் குறைந்தபட்சம் அது எங்கிருந்து வருகிறது என்கிற அடிப்படையை நமக்குத் தெரிவிக்கும் என்பதால் ஒரு பிடிமானம் கிடைக்கும். இந்தி இலக்கிய விமர்சன பரப்பில் ஜைனேந்திர குமாரை இருத்தலியல் படைப்பாளியாக அடையாளப்படுத்தும் போக்கைப் பார்த்திருக்கிறோம், இருப்பினும் அவரிடம் இருத்தலியல்வாதிக்குரிய எந்தத் தடயமும் இல்லை. உதாரணமாக, புதுமைப்பித்தனின் ‘நினைவுப்பாதை’ என்ற கதையை அகம் சார்ந்தது எனக் கொள்ளலாம். அது உள்நிலை உணர்வுகளை ஆராய்கிறது. அதேசமயம் அவரது ‘சாப விமோசனம்’ போன்ற கதையை புறம் சார்ந்ததாகக் கொள்ளலாம். அது வெளிப்புறச் சமூக நிகழ்வுகளைப் பேசுகிறது. இவ்வாறான  வகைப்படுத்தல் சொல்லின் தொழில்நுட்ப அர்த்தத்தையும் உள்ளடக்கத்தின் உணர்வையும் இணைத்துக் காட்டுகிறது. இதேபோல ஜப்பானிய நவீன இலக்கிய விமர்சனத்திலும் ‘நான்’ கதைகள் மற்றும் ‘நான் இல்லாத’ கதைகள் எனப் பிரித்துப் பார்க்கும் மரபு நிலவுவதைச் சுட்டிக்காட்ட முடியும். அதாவது, நமது சொந்த மொழிகளில் இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் உருவாக வேண்டும் என்பதன் பொருள் - நமது வாசிப்பு, எழுத்தின் வழி நமது சொந்த மொழி இலக்கியங்களின் அடிப்படையிலேயே நமக்கான தொடர்புறுத்தும் புள்ளிகளை வரையறுத்துக்கொள்ளலாம். உலகளாவிய இலக்கிய அளவுகோல்கள், விமர்சனக் கருதுகோள்கள் போன்றவை எங்கும் பயன்பாட்டில் இருந்தாலும், அவை நம் சூழலில் விழிப்புணர்வுடன் வளர்க்கப்பட வேண்டும். ஆனால் இன்று ஆங்கிலத்தில் நடைபெறும் இலக்கியக் கருத்தரங்குகளில் பார்க்கும்போது, இந்திய எழுத்து என்பது ஏதோ மாஸ்கோ, வாஷிங்டன், லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களின் புறநகர் (suburban) எழுத்து போலத் தோற்றமளிக்கிறது. நாம் மேற்கத்திய விமர்சனச் சொற்களை அவற்றுக்கான பொருத்தமான விமர்சனச் சட்டகமோ, வரையறைகளோ இல்லாமல் பயன்படுத்துவதே இதற்குக் காரணம். இதைத் தவிர்க்க, நாம் அகம், புறம் போன்ற சொற்களை நவீனத் தமிழ்க் கவிதைகளுக்கும் பிற இலக்கியங்களுக்கும் பயன்படுத்தினால், நம் சொந்த விமர்சனக் கட்டமைப்பை நாமே வரையறுக்க முடியும்.

அகம், புறம் சார்ந்து முந்தைய தமிழ் இலக்கிய மரபுகளைப் பற்றிப் பேசும்போது, சி. ஜேசுதாசனும் ஹெப்சிபா ஜேசுதாசனும் இணைந்து எழுதிய ‘A History of Tamil Literature’ நூலிலிருந்து ஒரு மேற்கோளைத் தருவதைவிடச் சிறந்த விளக்கத்தை என்னால் அளித்துவிட முடியாது:

‘அந்தக் காலங்களில் காதலும் போரும்தான் இளைஞர்களின் முக்கிய அக்கறைகளாக இருந்திருக்க வேண்டும். அமைதி என்பதை பொருட்படுத்தாத பல அரசர்களும் எண்ணற்ற தலைவர்களும் அப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளனர். எனவே இயல்பாகவே வீரச்சிந்தனையும் மரியாதை உணர்வும் பெருக்கெடுக்க, அதை சமநிலைபடுத்தும் வகையில் இன்னொரு பக்கம் காதல் இருந்துள்ளது. காதல் இடம்பெறாத வீரயுகம் எந்த வரலாற்றில்தான் உள்ளது? அக்காலத்தின் சூழ்நிலைகள் இலக்கியத்தின் போக்கை வழிநடத்தின, அதேசமயம் இலக்கிய வடிவம் சார்ந்த இறுக்கமான மரபுக் கட்டுப்பாடுகள் அவற்றுக்கு இருந்தன.’

இருபெரும் பிரிவுகளில், அகம்தான் சங்க இலக்கியத்தின் பெரும்பகுதியை ஆள்கிறது. ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கை அகத்தின் முதற்பொருள் (நேரம் மற்றும் இடம்), கருப்பொருள் (இயற்கைச் சூழல்), உரிப்பொருள் (அவர்களின் நடத்தை, செயல்) ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில் அமைகிறது. இந்த அமைப்பின் மூலம் காதல் வாழ்வின் அனைத்து அனுபவ நிலைகளையும் நாம் பின்தொடர முடியும். குறிஞ்சியில் பச்சைக் குன்றுகளில் மலரும் முதல் காதல் உணர்வு, பாலையில் புதுமண வாழ்வில் வரும் பிரிவின் வேதனை, முல்லையில் தனித்திருக்கும் பெண்ணின் முடிவிலாக் காத்திருப்பு, நெய்தலில் பிரிவுத் துயரத்தில் வாடியிருக்கும் பெண், முதிர்ந்த காதலும் வீட்டு வாழ்க்கையின் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட மருத நிலத்தில் உள்நுழைந்து எட்டிப்பார்க்கும் துரோகம். காதல் அனுபவங்களின் முழுப் பரப்பையும் இந்த அமைப்புக்குள் சொல்லிவிட முடியும். இதற்குள் சில மாற்றங்களுக்கும் இடமுண்டு. (கைக்கிளை மற்றும் பெருந்திணை ஆகியவை அகம் சார்ந்த கவிதைகளில் மீதமுள்ள இரண்டு கூறுகள்.)

புறம் பெரும்பாலும் பழங்குடியினக் கால வீரச் செயல்களை மையமாகக் கொண்டது. வெட்சி, வஞ்சி போன்ற அதன் திணைகளின் பெயர்கள் அக்குழுவினர் அணியும் மலர்களைக் குறிப்பது. வெட்சித் திணை எதிரியின் நாட்டிலிருந்து மாடுகளை கவர்ந்து வரும் வீரச் செயலையும், மாடுகளை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் தங்களுடையதாக மீட்கும் தீரத்தையும் கூறுகிறது. வஞ்சித் திணை எதிரியின் தாக்குதலை முன்கூட்டியே அனுமானித்து தாக்குதல் தொடுப்பதை விவரிக்கிறது. உழிஞைத் திணை போரின் அடுத்தகட்ட நிலையான கோட்டைத் தாக்குதல் மற்றும் பாதுகாப்பைப் பேசுகிறது. தும்பைத் திணை போர்க்களத்தின் மையத்திற்கே சென்று எதிரெதிர்ப் படைகள் மோதிக்கொள்ளும் காட்சியை விவரிக்கிறது. வாகைத் திணை, அரசர்களின் போர் வெற்றியைப் பாடுவது. இவ்வுலக வெற்றிகளை அடைந்த பின்பு, தொடர்ந்து இயல்பாக வருவது அவற்றின் நிலையாமை பற்றிய சிந்தனை. அதைப் பேசுவது காஞ்சித் திணை. பாடாண் திணையோ புரவலர்களின் பெருமைகளை எடுத்துரைக்கிறது.

இது ஒரு சுருக்கமான மரபுக் கட்டமைப்பு மட்டுமே. இதற்குள் பொதுவாக சங்கக் கவிதைகள் பொருந்திப்போகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் சங்கக் கவிஞர்கள் என்றாலே அவர்கள் மரபுக்கான அடையாளச் சீட்டுகள் மட்டும் அல்ல. அவர்கள் தங்கள் கற்பனைக்கும் சிறிது சுதந்திரத்தைக் கொடுத்துள்ளனர்.

சங்கக் காலத்திற்கு முன்போ பிறகோ பாடல்களைத் தொகுப்பது தமிழர்களின் ஒரு வழக்கமாகத் தோன்றவில்லை. பழந்தமிழ் இலக்கியத்தின் இந்த ஆறு தொகுப்புகளை வாசித்துப் பார்க்கும்போதும் அதன்மீது இன்றைய கல்விசார் அணுகுமுறையின்படியும், இப்பாடல்களை ஒன்றிணைப்பதற்கான பொதுவான தர அளவுகோல் ஏதும் இல்லை என்பதை ஒருவர் காணலாம். உரையாசிரியர்களும் தற்காலப் பேராசிரியர்களும் சொல்வதன்படி பார்த்தால் பாடுபொருள் மற்றும் அடிகளின் நீளம் ஆகியவை மட்டுமே வளம்மிக்க இப்பாடல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட ஒரே அளவுகோலாகத் தெரிகிறது. உதாரணமாக, அகநானூற்றில் 13 முதல் 30 அடிகளுக்குள் அகப் பாடல்கள் காணப்படுகின்றன; நற்றிணையில் 8 முதல் 12 அடிகளுக்குள்; குறுந்தொகையில் 4 முதல் 8 அடிகளுக்குள்; ஐங்குறுநூற்றில் 3 முதல் 6 அடிகளுக்குள் அகப் பாடல்கள் காணப்படுகின்றன, மேலும் இது மட்டுமே வழக்கமான 400 பாடல்கள் அல்லாமல் 500 பாடல்களை கொண்ட ஒரே தொகுப்பாகும்.

இத்தொகுப்புகள் உருவாகிய காலத்தில் அவற்றுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் இருந்திருக்குமா என்று யோசிப்பது சுவாரஸ்யமான கேள்விதான். ஒருவகையில் தமிழின் தொன்மையான இலக்கிய மரபை வகுத்தளிப்பதே இத்தொகுப்புகள்தான். பொதுவாக, தொகுப்புகள் ஒருவிதமான விமர்சன நோக்கத்துடன் அமைக்கப்படுவதாக நாம் கருதுகிறோம். இத்தொகுப்புகள் உருவானதன் நோக்கம் குறித்து என்னால் ஒரு யூகத்தை முன்வைக்க முடியும். எனது கருத்து வெறும் யூகமே எனத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்கு சமூக, இலக்கிய, விமர்சன அல்லது வரலாற்று ஆதாரம் என்னால் வழங்க இயலாது. ஆனால், இது இவ்வாறு நடந்திருக்கலாம் என ஒரு ஆரம்பகட்ட முன்மொழிவை மட்டும் சொல்கிறேன்.

சங்கக் காலத்தின்போது சங்கக் கவிதையில் இடம்பெறாத பல்வேறு பிற கவிதைகளும் கவிஞர்களும் புழக்கத்தில் இருந்ததாக நாம் அனுமானிக்கலாம். ஆனால் அவர்களின் படைப்புகள் சங்கத் தொகுப்புகளில் சேர்க்கப்படாமல் கறாராகப் பிரித்துவைக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் உருவான புறத்திரட்டு எனும் தொகுப்பில் உள்ள சில பாடல்கள் சங்கக் காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவை சங்கத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. இது, சங்கத் தொகுப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்ற எனது வாதத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, அந்த மற்றக் கவிதைகளின் உணர்ச்சி நிலை என்பது சங்கப் பாடல்களின் உணர்ச்சி நிலைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளன.

சங்கக் கவிதைகளின் இயல்பைக் குறித்து வையாபுரிப்பிள்ளையின் கருத்தை இக்கட்டுரையில் ஏற்கெனவே மேற்கோள் காட்டியுள்ளேன். இப்போது, சங்கக் கவிதைகளின் தரம் பற்றிய ஜேசுதாசன்களின் கருத்தையும் பார்ப்போம். அவர்கள் தங்கள் ‘History of Tamil Literature’ என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றனர்:

‘பொதுவாக சங்கக் கவிஞர்களின் நடை, குறிப்பாகக் காதல் கவிதைகளில், ஒரு புகைப்படக் காட்சியின் துல்லியத்தை எட்டியுள்ளது. அவர்கள் கண்ணால் காணும் காட்சி படிமங்களின் தாக்கத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள். பொதுவாக வன்முறைமிக்க உணர்ச்சிகளைக் கையாளுவதில்லை. நகைச்சுவையிலும்  ஆர்வமில்லை. கட்டுப்பாடற்ற தன்னிச்சையான வெளிப்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அவர்களின் வழிமுறை என்பது வாழ்வின் முக்கியத் தருணங்களை தூய்மையாக, மிகை உணர்ச்சிகள் இன்றி, செம்மையான முறையில் பதிவு செய்வதே. அவர்கள் இயற்கை பின்னணியில் வாழ்வின் சிறுநிகழ்வைத் தேர்ந்தெடுத்து, அதனை மிகுந்த நுணுக்கத்துடன் கவிதையில் வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மரபு அளிக்கும் கட்டுப்பாடு அவர்களின் கற்பனையை அடக்கினாலும், வடிவத்தை அடைய அது ஒரு சிறந்த அடிப்படையை உருவாக்கி அளிக்கிறது. புறப் பாடல்களில் மட்டுமே கவிஞர்களின் சுய வெளிப்பாட்டிற்குச் சிறிது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும்கூட தங்களைப் பாதுகாத்துத் தாங்கும் புரவலருக்கான விசுவாசம் ஒரு தடையாகலாம். சுதந்திரமற்ற கலை நீண்டகாலம் நீடிக்க முடியாது. கடுமையான எல்லைகளுக்குள் அது தேங்கி, தரம் இழக்கும். எனவே, சங்கக் கலை பல திறமைகளைத் தன் பெருமையாகக் கொண்டிருந்தாலும், அதன் அனைத்து வளங்களும் தீர்ந்தவுடன் ஒருநாள் இயல்பாகவே அது முடிவுக்கு வந்தது.’

சங்கக் கலையின் இறுதி குறித்து ஜெசுதாசன்களின் கருத்துடன் நாம் உடன்பட்டாலும் இல்லாவிட்டாலும் வையாபுரிப்பிள்ளையின் கருத்தோடு அவர்கள் ஒரு விஷயத்தில் ஒத்துப்போவதைக் காண்கிறோம். சங்கக் கவிதைகளில் உணர்ச்சிகள் அடக்கப்பட்டுள்ளன என்பதை இருவருமே வலியுறுத்துகிறார்கள். சங்கத் தொகுப்புகளில் உள்ள பாடல்களைப் பகுப்பாய்வு செய்தால், இவ்விதம் பல்வேறு திறமைகளைக் கொண்ட கவிஞர்கள், உணர்ச்சி வெளிப்பாடில்லாத ஒருவகை ‘பிளாஸ்டிக்’ (plastic) கவிதைகள் என்று சொல்லத்தக்க கவிதைகளை உருவாக்க முயன்றிருப்பதை நிச்சயமாகக் காணலாம். அதாவது, மனித அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிப் பேசினாலும், அதில் தீவிரமான உணர்ச்சிப்பாங்கில்லாத கவிதைகளும் உள்ளன. தமிழின் பிற்கால கவிதைகளில் தென்படும் பக்தி, நீதிநெறி, மீபொருண்மை, நீள் கவிதைகள் போன்றவற்றுக்குள் செல்லாமல் சங்கக் கவிஞர்கள் முற்றிலும் வேறுபட்ட கவிதைகளை பிரக்ஞைபூர்வமாகவே உருவாக்க முயன்றனர் என்பது தெளிவு. மேலும் அவை அவர்களின் காலத்திலேயே ஏற்கப்பட்ட கவிதை வடிவங்களிலிருந்தும் வேறுபட்டு தனித்திருக்கின்றன. அவர்கள் வாழ்ந்த காலத்தில் மரபான சமஸ்கிருதக் கவிதைகள், ஒன்பது ரசங்களில் சாந்த ரசம் நீங்கலாக பிற எட்டு ரசங்களை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்நிலையில் சங்கக் கவிஞர்களின் அடக்கமான உணர்ச்சி வெளிப்பாடு, உணர்ச்சிகளற்ற கலையைப் படைப்பதற்கான பிரக்ஞைபூர்வ முயற்சி என்றே சொல்வேன். வெளிப்படையாக புலப்படும் இதை ஏற்றுக்கொண்டால், தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க மரபை வரையறுத்த இத்தொகுப்புகள் உருவானதன் நோக்கமும் தெளிவாக புலப்படும்.

சமஸ்கிருதக் கவியியல் எப்போதிருந்து சாந்த ரசத்தை தன் மரபில் இணைத்துக்கொண்டது என்பது பற்றிய துல்லியமான தேதி நம்மிடமில்லை. கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரத முனிவர், இலக்கியத்தில் சாந்த ரசத்தை ஏற்கவில்லை. ஆனால் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனன் இலக்கியத்திலும் கலைப் படைப்புகளிலும் சாந்தம் என்ற ஒன்பதாவது ரசத்தின் இருப்பை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். சங்கத் தொகுப்புகள் உருவான கி.பி. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டுகளின் அதே காலத்தில்தான் சமஸ்கிருத சமய மற்றும் இலக்கியத் துறைகளில் சமணர்கள் தங்கள் ஆதிக்கத்தை இழந்துக்கொண்டிருந்தனர். எனவே சமணர்களும் கலையில் வைதிக மரபின் ஆதிக்கத்தை எதிர்க்க நினைத்த வேறு சிலரும் தமிழில் ஒருவகையான கலை எதிர்ப்பை உருவாக்கியிருக்கலாம். இவ்வாறு ‘நடந்திருக்கலாம்’ - இந்த அளவுக்கே என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

‘இதுநாள்வரை தமிழ்நாட்டில் கலாசாரத்திற்கும் கல்விக்குமான தூதர்களாக இருந்தவர்கள் சமணர்களே’ என்று வையாபுரிப்பிள்ளை கூறுகிறார். சங்கத் தொகுப்புகளில் பெரும்பகுதியை சமணத்துடன் தொடர்புபடுத்த முடிந்தாலும், அவற்றை முழுமையாக சமணக் கவிதைகள் என்று சொல்லிவிட முடியாது. சமணத்தன்மை அற்ற கவிதைகளை, அந்த அழகியலை மறுக்கும் கவிஞர்கள் இயற்றியிருக்கலாம். அவர்கள் வழக்கமான பாணிகளையும் ஒப்புக்கொள்ளப்பட்ட மரபுகளையும் பின்பற்ற மறுத்து, தங்களுக்கே உரிய அழகியல் மற்றும் மரபு வழிமுறைகளைத் தேடியவர்களாக இருக்கலாம்.

தமிழ் சங்கக் கவிஞர்களின் உணர்ச்சியற்ற தன்மையை ஒரு சாதாரண நிகழ்வு என்றோ தற்செயல் என்றோ ஒதுக்கிவிட முடியாது. அல்லது அது அவர்களாகவே உருவாக்கி ஏற்றுக்கொண்ட மரபுகளால் உண்டானது என்றும் கொள்ள இயலாது. ஏனெனில், அவர்கள் வேறு எந்த மரபையும் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கும் நிலையில் இதை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

சமஸ்கிருத இலக்கியத்தில், ஒன்பதாவது ரசம் எனப்படும் சாந்த ரசம் ஆனந்தவர்த்தனனுக்கு சிறிது காலத்திற்கு முன்பே ஏற்கப்பட்டுள்ளது. டாக்டர் வி. ராகவன் கூறுவதின்படி, சாந்த ரசத்தை அடிப்படையாகக் கொண்ட காப்பியங்கள் சமஸ்கிருதத்தில் உருவாகியிருந்தன. ஆனால் கி.பி. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேம்ஸ் ஜாய்ஸ்தான் தனது புகழ்பெற்ற நூலான ‘A Portrait of the Artist as a Young Man’-இல், கலைக்கான அடிப்படை கோட்பாடாக ‘emotional stasis’ [உணர்ச்சிகரமின்மை] என்ற கருத்தைத் தெளிவாக முன்வைத்தார். அவரது பிற்காலப் படைப்புகளான Ulysses, Finnegan’s Wake ஆகியவற்றில் இந்த ‘emotional stasis’ கோட்பாடு எந்தளவு பிரதிபலித்துள்ளது என்பதை ஆராய்வது சுவாரஸ்யமானதாக இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகக் கூறலாம், சங்கத் தொகுப்புகள் முழுமையான உணர்ச்சிகரம் அற்ற கவிதைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ‘நகத்தை வெட்டுவது போல, படைப்பாளர் தன்னை விலக்கிக்கொண்ட’ கவிதைகள். இந்த உணர்ச்சி இல்லாத வெளிப்பாடும் வடிவழகும் தாந்தேவின் (Dante) காப்பியத்தில் காணப்படும் சிறந்த பகுதிகளுடன் ஒப்பிடத்தக்கது. உதாரணமாக, தாந்தேவின் ‘Inferno’வில் வரும் பிரபலமான பகுதியில், தன் தலையை உடலிலிருந்து பிரித்துக்கொண்டு, கையில் விளக்காகத் தூக்கி நிற்கும் ஒருவனை நாம் காண்கிறோம். ஏனெனில் அவன் வாழ்வில் ‘சகோதரர்களுக்கிடையே உருவாகும் பிளவைப் போல’ ஒரு துயரம் நேர்கிறது. இதற்கு நிகரான ஒரு சித்திரத்தை உலக இலக்கியத்தில் காண வேண்டுமென்றால், நாம் குறுந்தொகையை நோக்கலாம். அதில், ஒரு பெண் (உரையாசிரியரின் கருத்துப்படி அவள் தப்பிச்செல்லும் பெண்ணின் செவிலித்தாய்) தப்பிச்செல்லும் காதலர்களின் பின்னால் சென்று தேடும்போது, அவள் கண்களில் தட்டுப்படும் உலகிலுள்ள பிற காதலர்களால் தனது கண் பார்வையையும் கால்களின் வலிமையையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறாள்

‘காலே பரி தப்பினவே; கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;

அகல் இரு விசும்பின் மீனினும் 

பலரேமன்ற, இவ் உலகத்துப் பிறரே’.

[குறுந்தொகை 44, வெள்ளிவீதியார்]

இவ்வாறு உணர்ச்சி இல்லாமல் உணர்ச்சியை வெளிப்படுத்தும் முறை, உலக இலக்கியத்தில் வேறெங்கும் காணமுடியாத தமிழ் சங்கக் கவிதைகளில் காணப்படும் தனித்துவமான அம்சமாகும்.

ஆங்கில மூலம்: க.நா.சு

தமிழில்: டி.ஏ. பாரி

***

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்

***


Share:
Powered by Blogger.

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (10) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (14) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (241) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (7) மரபு கவிதை (8) மராட்டி (1) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (10) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (14) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (241) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (7) மரபு கவிதை (8) மராட்டி (1) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive