கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி

ஆத்மாநாம்
ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்லி –இவை எல்லாவற்றையும் மனித மூளை அழகின் பிரதிபலிப்புகளாகவே விளங்கிக்கொள்கிறது. அழகின் வீரியத்தை வெளிப்படுத்தும் வழிகளில் மிக நெருக்கமானவை என்று கருதப்படுவது இசையும் கவிதையும். பண்ணோடு இணைந்த பாடல், ஓசை நயம் கொண்ட சொற்கள், சந்த ஒழுக்கிலமைந்த செய்யுள், இசைத்தன்மை கொண்ட வரிகள் என்று பல நிலைகளில் கவிதை இசையோடு அணுக்கமாகவே வாழ்கிறது. கவிதை என்றாலே அது ‘தட்டச்சு இயந்திரத்தில் பியானோ வாசிப்பது’ என்கிறார் கவிஞர் இசை. ஆனாலும், அவை தனிமொழிகள், கவிதையின் அலகு சொல், இசையின் அலகு ஒலி. எத்தனை அணுக்கமான வெளிகளில் இயங்கினாலும், இசையும் கவிதையும் வேறுபட்ட குணங்கள் கொண்ட தனித்தனி நிலங்கள். அவற்றை ஆளும் அரசியர் உயிர் தோழிகள் என்பதால் அவை நட்புணர்வு கொண்ட அண்டை நாடுகளும் கூட. 

சங்கீதத்தை பாடுபொருளாகக் கொண்டு, அதை வாழ்வின் ஒரு கூறாக, ஒரு தத்துவமாக, இயற்கையின் நுண்ணிய சரடாக, அரூபத்தின் வெம்மை மிக்க தொடுகையாக, ஆடலாக, பேருணர்ச்சியின் பெருவெளியாக, கலை அனுபவமாகக் கொண்டு அமைந்த நவீன கவிதைகளை என் வாசிப்பில் இருந்து முன்வைக்கிறேன். ஓர் அனுபவத்தை தனித்த வகைமையாக பாவித்து கவிதைகளை தொகுப்பது உகந்த செயல் அல்ல என்றாலும் ஒரு கலைக்குள் இன்னொரு கலை வந்தமரும் புள்ளியை, கவிதைக்குள் இசையின் நுண்ணுணர்வுகள் வெளிப்படும் இடத்தை தொட்டுகாட்டலாம் என்று தோன்றுகிறது. பாடுபொருளை அடையாளப்படுத்தும் முத்திரைச் சொற்களோ, குறிப்போ இல்லாதிருக்கும் கவிதைகள் ஏராளம் என்று அறிகிறேன். கூடவே என்னுடைய வாசிப்பின் எல்லைகளும் சில விடுபடல்களை இட்டு வரும். 

இசையை பாடுபொருளாக கொள்ளும் பொழுது சில சிக்கல்கள் எழுகின்றன. அந்தியை, குழந்தையை, கண்ணீரை, அழகை, காதலைப் பாடுவது போல இசை குறித்து பேச முடிவதில்லை. காதலியை கவர்வதற்காக முதல் முறையாக சமைக்கும் காதலன் செய்த பண்டம் போல, ஏதோவொரு ருசி அதீதமாகவோ குறைந்தோ நிற்கிறது. அவனுடைய நேர்மையான அசட்டுத்தனத்தை ஏற்றுக்கொண்டே தான் நாம் கவிதைக்குள் நுழைகிறோம். 

செவ்விசைக் கருவி (சி மணி)

செவ்விசை என்றால் இப்போதெல்லாம்

மாண்டலின் உண்டு; கிதார் உண்டு.

சாக்ஸஃபோன் கூட உண்டு. இனி

எதுவெல்லாம் செவ்விசைக் கருவி

என்றாகுமோ தெரியாது. ஆனால்


இப்போதும் சரி அப்போதும் சரி

செவ்விசை என்றால், நீதான்

உண்டு, சாரங்கி.

சி. மணி
ஒற்றைப் பொது அனுபவமாக மாறும் தன்மையை இசை தன்னியல்பாக கொண்டிருப்பதில்லை. சட்டென வடிவத்திற்குள் சிக்காத இரு வினோத உயிர்கள் சங்கமிக்கும் புள்ளியில் தான் இசையாலான கவிதைகள் பிறக்கின்றன. குழந்தை  வானத்தைத் தடவிப் பார்த்து அதற்கு ‘ஆனை’ என்று பெயரிடும் காரியம் இது. இசை நம் எல்லோரையும் மொழி திருந்தாதவர்களாக ஆக்கி விளையாடுகிறது. 

குளிரில்

கல் போல் உறைந்து

எங்கோ விழுந்துவிட்ட 

பாடலை

இரவு முழுதும் 

பீதியுடன்

தேடிக்கொண்டிருந்தது

பறவை (போகன் சங்கர்)

எத்தனை புற வயமாக சொல்ல முற்பட்டாலும், இசை ரசனை மிக மிக அந்தரங்கமானது,  அகவயாமனது. சகாவின் விளையாட்டும் காதலின் இனிமையும் அருமருந்தின் ஆதுரமும் துயரத்தின் பரிச்சயமும் அதில் ஏற்றி ஏற்றி மேருகேற்றப்பட்டிருக்கிறது. நெகிழ்ந்து சிதறிப் பரவுவத்தின் இன்பமாக துய்க்கப்பட்டிருக்கிறது. மயக்கி மதியிழக்கச் செய்து வேறோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஆன்மிக அனுபவமாகவே இசை விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காணா உலகமும் சேர்ந்தே இசை என்று நாம் அறிவது.

இசை/ஓசை (ஆத்மாநாம்)

வயலினில்

ஒரு நாணாய்

எனைப் போடுங்கள்

அப்பொழுதேனும்

ஒலிக்கிறேனா

எனப் பார்ப்போம்


அவ்வளவு துல்லியமாக

அவ்வளவு மெல்லியதாக

அவ்வளவு கூர்மையாக


எல்லா நாண்களுடனும்

ஒன்று சேர்ந்து

ஒலித்தபடி


உள் ஆழத்தில்

ஒலியின்

ஆளரவமற்ற

இடத்தில்

மிக மிக மெலிதாய்

ஒரு எதிரொலி கேட்கிறது


கூர்ந்து கேட்டால்


அதே துல்லியம்

அதே மென்மை

அதே கூர்மை

இசை ஜாம்பாவான்கள்  பலர் இந்த அவதானத்திற்கு மறு எல்லையில் நிற்கின்றனர். ‘இசையில் குறிப்பிடத்தக்கது என்று ஒன்றுமில்லை. சரியான விசையை சரியான சமயத்தில் தீண்டுவது ஒன்றே செய்ய வேண்டியது, இசைக்கருவி தன்னைத் தானே வாசித்துக் கொள்ளும்’ என்கிறார் பாக். அந்த விசை அத்துணை இயந்திரத்தனமானதா? ஏழே ஸ்வரம், அதை அப்படியும் இப்படியும் தொட்டால் இசை வருமா? ஒரு வகையில் இதை எந்த கலைக்கு வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். இதே மூச்சில், இசையில் இறைவனின் கை இருப்பதாக அவர் கூறி இருக்கிறார் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இலக்கணம், பயிற்சி, வெளிப்பாடு சார்ந்த கவலைகளும் ஏனைய உலகியல் சிக்கல்களும், தனிப்பட்ட நம்பிக்கைகளும் தொழில்முறை கலைஞர்களுக்கு இருக்க, நம் ரசனைகளையும் பித்துத் தருணங்களையும் அவர்களை உறுதிபடுத்த நிர்பந்திப்பதில் நியாயமில்லை. இசையின் முழு பரிமாணம் அவர்களுக்கும்  விளங்காத விந்தையாக  இருக்கக்கூடும். குயிலின் வேலை இசைப்பது தானே. 

ஆற்றல் மிக்க தலைவர்களையும் தத்துவ ஞானிகளையும் அறிவியல் மேதைகளையும் குழந்தைகளையும் விலங்குகளையும் சமநிலை இழக்கச்செய்து குழைத்துப் பார்த்திருக்கிறது இசை. பொதுவாக கண்ணீரையும் அகமலர்வுகளையும் தன் அளவுகோலாக பெற்று நம் உணர்ச்சிகளை நமக்கே மீள் அறிமுகம் செய்கிறது.

புல்லாங்குழல்

சகல மனிதர்களின் சோகங்களையும்

துளைகளில் மோதிற்று


கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்

ரத்தமாய்ப் பெய்தன‌

அறையெங்கும் இரும்பின் வாசனை


மறு நிமிஷம்

என் உப்புக் கரைந்து எழுந்தது

மல்லிகை மணம் (இசை தரும் படிமம், சுகுமாரன்)

கல்யாண்ஜி (வண்ணதாசன்)
நாம் பிடித்த பாடல்கள் என்று மீள மீள காதுப்புழுக்களாக மாற்றி வைத்திருக்கும் பாடல்களை உளவியல் ஆய்வாளர்கள் வடிவ அடையாளம் சார் நினைவுத் தூண்டலை எழுப்பிக்கொள்ளும் தந்திரம் என்கின்றனர். தாளக்கட்டு உள்ள பாடலைக் கேட்பவருக்கு டோபமின் போதை இருக்கலாம். அலைக்கழிக்கும் சோகப் பாடல்களையே மனம் திரும்பத் திரும்ப நாடுகிறதா, துயரத்தை மீட்டி மீட்டி உங்கள் மூளையின் நரம்புகளை ஊக்கிக் கொள்கிறீர்கள் என்கிறார்கள். விண்மீன்கள் கூட வளிம உருண்டைகள் தான், இல்லையா?

கஸல் (வண்ணதாசன்)

நான் இப்பொழுது

ஒரு கஸல் பாடிக்கொண்டிருக்கிறேன்

குரல் ஹரிஹரனுடையது

வரிகள் அப்துல் ரகுமானுடையது

கண்ணீர் மட்டும் என்னுடையது

மனிதருடைய சஞ்சலம் கொண்ட, குவியமற்ற மனத்திற்கு இசையின் ருசி அவ்வளவு சாதாரணமாக இருப்பதில்லை. மனித உள்ளம் ஒழுங்கமைவை தேடிக்கொண்டே இருக்கிறது. இசை நுணுக்கங்கள் என்று நாம் கண்டு கொள்ளும் ஆலாபனை முறைகள், கமகங்கள், சங்கதிகளிலும் வடிவுருவை பின்தொடரும் பித்து இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ நம்மால் நரம்புகளைத் தூண்டி நினைவுகளை எழுப்ப முடிகிறது. இசை குறைந்தால் வாழ்வே பிழையென்று கருதச் செய்கிறது. 

என் பயணவழிகளில்

அவர் என்னை ஊர்போய்ச் சேரவிடாமல் தடுக்கிறார்


நான் திரும்பவிரும்பாத என் பால்யத்திற்கு

அவர் திரும்பிப் போகச் செய்கிறார்


என் மோகத்தின் நெருப்பில்

அவர் என்னை ஒரு விறகாகப் பயன்படுத்துகிறார்


நான் மழையில் நனையும்போது

மழையின் சப்தத்தில்

அவர் தன் வயலினைக் கலந்துவிடுகிறார்


நான் உறுதிமிக்க மனிதனாக

இதயமற்ற மனிதனாக

கண்ணீரற்ற மனிதனாக இருக்க விரும்புகிறேன்

இளையராஜாவுக்குத் தெரியாமல்

நான் எங்கே ஒளிந்து கொண்டாலும்

இளைய ராஜா அங்கே வந்துவிடுகிறார். 


(இளையராஜா...எனக்கு விடை கொடுங்கள், மனுஷ்யபுத்திரன்)

கூடிக் குறைந்து இயங்கும் காதுகளை நம்பி இத்தனை மகத்தான ஒன்று படைக்கப்பட்டு பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது வியப்பூட்டுவது. அதுவும் கூட வெற்று தற்பெருமையோ, உணர்ச்சிப் பொங்கலோ, மனமயக்கோ என்று கூட பயம் காட்டுவது. அது மனிதனுக்கு மட்டும் என்று நம்புவதற்கில்லை என்று அறிவியலாலர்களைப் போல் கவிஞர்களும் நம்புகின்றனர். அறிவுப் புலனுக்கு அப்பால் உயிரிகள் அனைத்தும் இணையும் ஒற்றைப் பெரும் ஜீவநதியா இசை?

மகத்தான ஈ (இசை)

...

சஞ்சய் பாடுகையில்

மைக்கும் ஒரு இனிப்புப் பண்டம்தான்

அதன் வடவடப்பில் மொய்த்துக் கொண்டிருக்கிறது ஒரு ஈ

அவர் அவ்வளவு நெருங்கி வருகையிலும்

அது ஆடாது அசையாது அமர்ந்திருக்கிறது.

மத்தளங்களின் கொட்டும், நரம்புகளின் நாதமும்

விரட்டுவதற்குப் பதிலே

அதை மேலும் மேலும் இருக்கச் செய்கிறது.

அதிகாலை இளங்காற்றின் ஏகாந்தியென

மின்சார ஒயர்களின் மேல்

ஊர்ந்து கொண்டிருக்கிறது.

மகத்தான விஷயங்களின் மீது

ஈயாயிரு மடநெஞ்சே! 

***

கவிதையின் முதல் புலன் கண் என்பதால் இசைக்கு முன்னர் அந்த கலைஞரின் உடலசைவுகளும் கை மலர்த்தல்களும் கண் செருகல்களும் உவக்கின்றன. அதி தீவிர இசை விமர்சகர்கள் பாடகரை கொண்டாடுவது பாட்டைக் கொண்டாடுவது அல்ல என்றே கருதுகிறார்கள், அது கொஞ்சம் பழுதுள்ள உண்மை, மேட்டிமைத்தனம் கலந்திருப்பதால். நாம் முழுதுணர்ந்து விட முடியாத எல்லாவற்றிற்கும் நாம ரூபத்தை அளிக்கிறோம். இசையில் அது பாடலாகவும் இசைப்பவராகவும் அமைகிறது. அது இசை தரும் ஆழ்நிலை அனுபவத்தை உருவகப்படுத்துகிறது, நம் கற்பனைகளை  மானுடப்படுத்துகிறது. கீதம் இசைப்பவர், அவரல்ல, அவரற்ற அவர், அதிமானுடர், மொத்த உலகத்தின் எஜமானி. உணர்ச்சி மேலிட தொழுது ஓய்ந்த பின், பாடுவது எவர், என்னுள் பாட்டுவிப்பது எதை என்ற புதிர் கேள்வியே கவிதைக்கான வெளியாகிறது. 

ஒரு பாடலில் பாடுவது எது? (இசை)

நஸ்ரத் அலிகான்

தன் ஒற்றைக் கரத்தால்

வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம்


எனக்குத் தெரியும்

அந்த வானம்தான் பாடுகிறது


ஒருவர் காலியிடமொன்றை

உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார்.

அங்கு என்னென்னவோ

தோன்றித் தோன்றி மறைகின்றன.


எனக்குத் தெரியும்

காலியில் நிரம்பி வழிபவை எவையோ

அவைதான் பாடுகின்றன.


ஒருவர் பாடுகிறார்

கண்களை இறுக மூடியபடி.

உள்ளே அவ்வளவு வெளிச்சம்


எனக்குத் தெரியும் 

அந்த வெளிச்சம்தான் பாடுகிறது

...

இதில் சிக்கல், இசை ஒரு நிகழ்த்துக்கலையாக இருப்பது. அது இரண்டு தளங்களிலான அகவயத்தன்மையை இழுத்து வருகிறது. நீங்களும் நானும் ஒரே வகையான இசையை கேட்பதில்லை. ஒரே தரத்திலான அபூர்வத்தையும்  கண்டுகொள்வதில்லை. இசை தரும் அந்த மோன நிலையை மொழியில் வெளிப்படுத்தினால் அது வாசகருக்கு முழுமையாக சென்று சேருமா என்ற பிரக்ஞையை உதறி எழுந்த கவிதை இது. 

கடலின் மறதி (பிரம்மராஜன்)

...

வெளிச்சமிட்ட விளையாட்டுப் பொம்மையாய் மிதந்த மங்கு மாலை

உலோகப் பருந்தாகும் ஜெட் உறுமலிலும் கூட

தன் சுருதி பிசகாது பீம்சேன் ஜோஷியுடன்

பாடிக்கொண்டிருந்தன நெக்குருகி

தலைப்பிற்குள் புதைந்த முகத்தை அகற்ற மனமில்லை

குருதித் தாளமும் ஜோஷியின் தேஷும் மீன்வாடையும்

ஆற்றைத் தாண்டியும்

கேட்டுக்கொண்டிருந்தன

நுகர்வில் பதிந்துபோன நுரைமுகமும்

உயிர் கசிந்த உன் பாடலும்

கடலற்ற இற்றை நாளிலும்

தோணியில் மிதக்கத் தோதாயின

க்ளட்சுகளை மாற்றிக்கொண்டிருப்பினும்

தோணியை நகர்த்தும் துடுப்பின் ஸ்பரிசமே

இந்தத் தார்ச் சாலையை அலைக் குரலாய்

மாற்றிக் கொண்டிருக்கிறது.

நல்வாய்ப்பாக இணையப்பதிவு இருக்கும் பாடல் என்றால், கவிதையை ரசிக்க சுட்டியை கொடுக்க வேண்டியுள்ளது. பாட்டும் பொருளும் இணைந்து உருவாக்கும் பூரணம், ஓர்  அனுபவத்தை கிளர்த்தக் கூடும். மதுவையும் சீஸையும் இணைத்து கொடுப்பது போல ஓர் இசைக் கோர்வையையும் – கவிதையையும் இணைத்து வைக்கலாகுமா?

...

அந்தக் குளிரூற்றைவேர்  உறிஞ்சுவதால்

தீமரம் குளிர்கிறது;

குளிர் அலைகளுக்குமேல்

சீதையின் முகம் காட்சியளிக்கிறது


உலர்ந்து உதிர்ந்திருக்கலாம் 

திருநெற்றியில் இட்ட குங்குமம்

சூடு தணிக்க

இப்பாடல் இல்லாமலிருந்தால்


சஞ்சயின்  எழுந்தாளே துணைவராதிருந்தால் 

தேவி

உள்ளே பொசுங்கியிருப்பாள்

அக்கினி தேவன் கைகளில்

...

எழுந்தாளே பூங்கோதை 

(பி ராமன் (மலையாளம்), தமிழ் மொழியாக்கம்: சுகுமாரன்)

அருணாசல கவி எழுதிய இராம நாடகத்தில் இருந்து ‘எழுந்தாளே பூங்கோதை’ என்ற பாடலை பாடகர் சஞ்சய் சுப்ரமண்யன் பாடியதை முன்வைத்து எழுதப்பட்ட கவிதை. அக்னிப் பிரவேசத்தில் கருக்கழியாமல் வெளிப்பட்ட சீதையை சொல்கிறது. பொதுவாக பிலஹரி ராகத்தில் பாடப்படுவது, சஞ்சய் இதை மோஹனத்தில் அமைத்துப் பாடுகிறார். ‘தீமரம் குளிர்கிறது’ என்பது மோஹன ராகம் எழுப்பும் உணர்வுகளை மிக அணுக்கமாக சொல்லும் படிமமாக அமைகிறது. 

சில தருணங்களில் இசையின் வண்ணம் மொழியின் மெய்ப்பாட்டைச் சூடி புதிய சித்திரத்தை உருவாக்கித் தரும்.  வகுளாபரணம் என்பது மரமேறி விளையாடும் சிறுவர்களின் வேடிக்கையின் தனி மொழி என்பதை இந்த கவிதை நிகழ்வதற்கு முன்னர் எண்ணிப் பார்த்திருக்கமாட்டோம்

வகுளாபரணம் (சுகுமாரன்)

உச்சிக் கிளையில்

ஒற்றை மலர் எஞ்சியிருக்கும்

மகிழ மரத்தில் ஏறுகிறான்

குண்டுப் பையன்

...

...

முன் சடையைப் பின்னுக்கு வீசிக்

கண்ணிடுக்கிச் சிரிக்கிறாள்


ஒரு சிரிப்பு இன்னொரு சிரிப்பை

இப்படித்தான் திறக்குமா

இப்படித்தான் பூக்குமா

இப்படித்தான் மணக்குமா?


‘ஜாலம் செய்வதேதோ?’ என்று

உள்ளிருந்து கேட்கிறார் வேதநாயகம்.

பாட்டைச் சொல்லும் பொழுது அதன் வரிகள், அதன் பின்னால் இருக்கும் உணர்ச்சிகள், அதன் வழியாக பயணம் செல்லும் பாதைகள் என்று தொட்டு தொட்டுச் சொல்ல எதுவாக இருக்கிறது. பாட்டின் வரியை இழுத்துக்கொன்டாலும் அதை மீறிய ஒன்றைச் சொல்லும் பொழுது கவிதை பறக்கிறது. இசை என்றால் அது செவ்வியல் இசை, தீவிரம் என்றால் கழுத்தறுந்து ரத்தம் பீறிட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல், கலை அன்றாடத்தை தீண்டும் கள்ளமின்மையின் பொற்கணத்தில் உன்னதம் நிகழலாம்.  பாட்டில் ஏறுவதே அதன் இன்பம் என்னும்படி, புன்னகையாகவும் மலரலாம். 

பரோட்டா மாஸ்டரின் கானம் (இசை)

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்

"மூக்கின் மேலே

 மூக்குத்தி போலே

 மச்சம் உள்ளதே.... " அதுவா ?

 என்று நீங்கள் கேட்க,

கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்

அடுப்பில் கிடந்து கருகும்

திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்

அதுவா...?

அதுவா...?

அதுவா...?

என்று திருப்பிக் கேட்டான்

அப்போது உங்களுக்கு சிலிர்த்துக்கொண்டதா எஸ்பிபி  ஸார் ?

பீறிட்டுக் கொண்டு ஒலிக்கும் பரோட்டா வீச்சின் தாளமும் ‘அதுவா’ சொல்லும் உச்சாடனத்தன்மையும் இதை கலையாக்குகிறது. 

நியாயமாக ‘இனிய’ குரல் கொண்டவர்களாக அறியபட்ட பாடகர்களே கவிதைக்குள் நுழைய வேண்டும். சஞ்சய், எம் டி ராமநாதன், ஜோஷி போன்ற தனித்துவ குரல் கொண்ட பாடகர்கள் தொடர்ச்சியாக கவிதைக்குள் வருவது சுவாரஸ்யமானது. பெண் பாடகர்கள் ஏனோ அவ்வளவாக இடம் பெறவில்லை. (பெண் கவிஞர்களும் அதிகமாக இசையை பொருட்படுத்தவில்லை) இசையன்பது வெறும் குரல் அல்ல. குரலினிமை, மதுரம் என்று நாம் சில மதிப்பீடுகளின் மீது வழக்கமான பார்வைகளை கூட்டி கற்பனாவாதத்தின் பூச்சை தடவினாலும், அதைத் தாண்டிய மேதமைமையும் தீவிராம்சமும் நம் நெஞ்சத்தை ஊடுருவி அதிரச் செய்கின்றன. 

ஜன்னல்களுடைய

மறையைத் தாண்டி

அந்த ஸ்வரங்கள்

அரச மரத்து இலைகளில்

கல்பாத்தியாற்றில்

சுடுகாட்டில்

காலங்களைத் தாண்டி

ஒழுகிக் கொண்டிருந்தன. 

...

ராமநாதன்

பாடிக்கொண்டே இருந்தார்.

காலத்தின் பாதையில்

பின்னோக்கி நடந்துகொண்டே இருந்தார்.

நாத ரஹஸ்யத்தைத்தேடி

ஆதிமௌனத்தைத் தேடி 

எம் டி ராமநாதன், பி ரவிகுமார் (மலையாளம்) மொழியாக்கம்: சுகுமாரன்)


மேலும்...

***










***
Share:

இசை - இரண்டு கவிதைகள் - வேணு வேட்ராயன்

 (1)

 மலர் திறப்பு

ஒரு மே ஃபிளவர்

தன் இரத்த உயிரால்

என்னைப் பெயர் சொல்லி

அழைத்தது

நான் அதை நோக்கிப்

புன்னகைத்தேன்

சென்றேன்

நெருங்கினேன்

தொட்டேன்

ஓர் இதழ்திறந்து நுழைந்தேன்

நடந்தேன்..

நடந்தேன்..

நனந்தேன்..

கண்டு வந்தவன் சொல்கிறேன்

ஒரு மலருக்குள்

அந்த ஊரையே வைக்குமளவு

இடமிருக்கிறது

°

Malar thirappu

 A Mayflower called me,

By my name,

By it's bloody soul.

 

I smiled at it,

Went near it,

Touched it.

 

Unfolding a petal

I walked in

Walked in

And walked in.

 

Having seen it

I tell you,

A flower is vast enough

To hold within itself,

This vast entirety.

***

(2)

 க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

 நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை.

சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை.

மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு

பந்துவீசுமாறு

பணிக்கப்பட்டிருக்கிறேன்.

எதிரே க்ரிஷ்கெய்ல்

நின்ற்கொண்டிருக்கிறார்.

அணித்தலைவர் ஓடிவந்து

பந்து அந்தரத்திலேயே

இடப்பக்கம் சுழன்று

மறுபடியும் வலப்பக்கம் சுழன்று

விழுமாறு வீசச்சொன்னார்.

நான் அவரது முகத்தையே

பார்த்தேன்.

அவர் திரும்பி ஓடிவிட்டார்.

எதிரே க்ரிஷ்கெய்ல்

நின்றுகொண்டிருக்கிறார்.

அவரின் சடாமுடி

ருத்ரதாண்டவனை குறித்து

நிற்கிறது.

அடேய் சுடலையப்பா…

இந்த பந்தை வானத்திற்கு அடி…

திரும்பி வரவே வராத படிக்கு

வானத்திற்கு அடி.

°

 Bowling to Chris Gayle

 I am not in this game,

Not even as a spectator.

 

I was dragged on to this field,

And made to bowl.

Chris Gayle is at the batting crease.

The team captain came to me rushing,

Told me to spin and drift the ball in air towards the leg,

and again towards the off before pitching it.

I kept staring at his face,

But he sprinted back to his fielding mark.

Chris Gayle is at the batting crease,

His dreadlocks denotes

The One 'Rudhra Thaandavan’.

 

Hey Sudalaiyappaa!

Hey Rasta!

Hit this ball in to the skies,

Hit this ball into oblivion

(translation: venu vetrayan)

***

இசை தமிழ் விக்கி பக்கம்

வேணு வேட்ராயன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

ஷேக்ஸ்பியரும் கம்பனும் - க.நா.சு

யாரோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது. ஷேக்ஸ்பியருக்கு விழாக் கொண்டாடுகிறார்கள்.

கம்பனுக்கும்தான் விழாக் கொண்டாடுகிறார்கள். அமர்க்களமாகவே கொண்டாடுகிறார்கள். இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம்?

ஷேக்ஸ்பியரைப்பற்றி எத்தனை நூல்கள்! எத்தனை பேர் வழிகள் வாழ்வின் லக்ஷியமாக வைத்துக்கொண்டு, அதே மூச்சாக இருந்து உழைத்திருக்கிறார்கள்? பதிப்புகள் என்ன! வாழ்க்கை ஆராய்ச்சிகள் என்ன! விமரிசனங்கள் என்ன! அப்படி ஒருவர் இருந்தாரா இல்லையா என்பது பற்றி என்ன! இப்படியாக ஒரு லைப்ரரியை நிரப்புகிற அளவுக்கு நூல்கள் வந்திருக்கின்றன.

நூல்கள் மட்டும் அல்ல; ஷேக்ஸ்பியர் படிப்பது, அனுபவிப்பது, ரஸிப்பது, ரஸித்தது ஒன்றை எடுத்துச் சொல்வது என்று தங்கள் வாழ்நாள் பூராவையும் செலவிட்டவர்கள் உண்டு.

கம்பன் ஷேக்ஸ்பியருக்கும் முந்நூறு - அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன் - அதற்கு முந்தி சிலப்பதிகாரம் - திருக்குறள் - மூன்றாஞ்சங்கம் - இரண்டாஞ் சங்கம் - முதற் சங்கம் - தொல்காப்பியர் - அகத்தியர் - சிவபெருமான் என்று கதைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நம்மிடையே பஞ்சமே இல்லை.

கம்பனைப் பற்றிய வரையில், அந்த ரஸனைக்குத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஒருவர் உண்டு. தான் அனுபவித்ததையும் பிறர் அனுபவிக்கச் செய்தவர். அவரைத் தமிழ் அன்பர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் என்ன பாடு படுத்தினார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இருந்ததேயில்லை. இருந்திருந்தாலும் அவர் இந்த நாடகங்களையெல்லாம் எழுதியிருக்க முடியாது என்று சொல்கிற அளவுக்கு இங்கிலாந்தில் ஆராய்ச்சி பெருகுகிறது.

இங்கு கம்பராமாயணத்தில் செருகு கவிகள் ஏராளம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட ரசிகமணி டி.கே.சி. இவைதான் கம்பன் பாடல்கள் என்று எடுத்து அறுதியிட்டு - தன் ரஸனையை வைத்துச் சொன்னால் ஆட்சேபம் சொன்னார்கள்.

கம்பனுக்கு ஒரு நல்ல பதிப்பா, ஒரு நல்ல விமரிசனமா, படிப்பதற்கு ஒரு தூண்டுதலா - ரஸிகமணி டி.கே.சி. தந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒன்றும் கிடையாது.

இருந்தும் கம்பனைப் பற்றிய புத்தக உற்பத்தி பெருந்தொழிலாகத்தான் இருக்கிறது - விழாத் தம்பட்டங்கள் பெரிதாகத்தான் ஒலிக்கின்றன.

வ.வெ.ஸு. ஐயர் தன் போக்கில் கம்பராமாயண ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

அந்தப்பாதைகளில் செல்ல முழுநேர இலக்கிய ஈடுபாடுள்ளவர்கள் தமிழ்நாட்டில் பத்துத் தலைமுறைகளில் ஒரு ஆயிரம் பேராவது தோன்றாவிட்டால் கம்பன், கம்பன் என்கிற முழக்கம்தான் இருக்குமே தவிர காரியம் எதுவும் இராது.

தவிரவும் கம்பனை அணுகி, அணுகி அறிந்து ரஸிக்க வ.வே.ஸு. ஐயர் பாதை, டி.கே.சி. பாதை என்று இரண்டுதான் உண்டு என்பதும் தவறு. எத்தனையோ பாதைகளை உண்டாக்கிகொள்ள வேண்டும். எத்தனை பேருக்குக் கம்பனிடம் ஈடுபாடு இருக்கிறதோ அத்தனை பாதைகள் உண்டு.

பண்டித பேராசிரியர்களுடையதும் ஒரு பாதைதான். இந்த ஐம்பது நூறு ஆண்டுகளில் நாம் காண்பது இதுதான். அவர்கள் பின்பற்றுகிற பாதை இருட்டுப்பாதை. எங்கும் செல்லாது. சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும் என்பதுதான்.

***

‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’, 1985

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்[

***
Share:

ரூமி கவிதைகள் - தேவி.க

 ரூமி (1207 - 1273) 

13ம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் எழுதி  இன்று உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கபடும் கவிஞர். காலங்களை தேசங்களை மொழிகளை கடந்து தொடர்ந்து வாசிக்கபட்டும் பகிரப்பட்டும் வரும் கவிதைகளை உருவாக்கியவர். ஆன்மீக சொற்பொழிவாளராக மத அறிஞராக வாழ்வை துவங்கியவர் . அவருடைய கவிதைகளை போலவே அவரின் வாழ்வும் ஆழழும் ஆச்சரியங்களும் சுவாரசியமும் நிறைந்தது. 

மெளலானா ஜலாலுத்தின் முகம்மது ரூமி என்கிற இறையியலாளர் ஒரு மாபெரும் கவியாக மலர்ந்தது அவருடைய நண்பரும் வழிக்காட்டியுமான ஷம்ஸின் வருகைக்கு பின். ஷம்ஸ் இ தப்ரிஸ் ஒரு சூஃபி தத்துவ ஞானியாக அறியப்படுகிறார். ஷம்ஸ் உடனான ஆழ்ந்த நட்பும் ஒரு தொடர் உரையாடலும்  ரூமியை ஆன்மிகமான அடுத்த தளத்திற்கு கொண்டுச் சென்றது . ரூமி தன் ஆன்மாவை கண்டுக்கொண்டார் அதில் கவிதையை ஒரு சுடராக ஏற்றி அவ்வொளியில் காதலையும் இறைவனையும் ஒருங்கே வழிப்பட்டார்.

ரூமியின் கவிதைகளை இரு தளங்களிலாக வாசிக்க முடியும். ஒன்று நேரிடையான காதல் கவிதைகளாக இன்னொன்று ஆன்மீகமாக. இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தும் இருப்பதுண்டு. காதலில் உள்ள ஏக்கம் , பிரிவுத்துயர் ஆன்மீகத்திலும் உள்ளது. ஆன்மீகத்தில் உள்ள  தன்நிலை அழிதல், அர்ப்பணிப்பு காதலிலும் உண்டு.  இரண்டுமே சுயத்தை கொடையாக கேட்பது . இரண்டிலும் பேரின்ப நிலையை அடையலாம், தீவிர தனிமையிலும் உழலுலாம்.  ரூமியின் கவிதைகள் இவை எல்லாவற்றையும் பேசுவது.

திரு. என். சத்தியமூர்த்தி மொழிப்பெயர்ப்பில் ரூமியின் கவிதைகள் “ தாகங்கொண்ட மீனொன்று” என்ற தொகுப்பாக வெளி வந்துள்ளது. அதில் உள்ள நீள் கவிதை “ எலியும் தவளையும்” 

எலியும் தவளையும் காதலர்கள். எலியும் தவளையும் காதலிக்க முடியுமா? ஏன் முடியாது அல்லது ஏன் கூடாது? எலி நிலத்தில் வாழ்வது தவளை நீரிலும் நிலத்திலும். ஆனாலும் அவற்றிற்கு அதை பற்றி எல்லாம் அக்கறையும் கவலையும் கிடையாது. பார்த்த முதல் நொடியில் இருந்து காதலிக்க துவங்குகிறார்கள்..சந்திக்க, உரையாட அவர்களுக்கு ஆன ஒரு நேரமும் இடமும் இப்பிரபஞ்சத்தில் கிடைத்துவிடுகிறது. இரு உயிர்கள் எவ்வித கணக்கும் துளி கசப்பும் இல்லாமல் உறவாடும் போது அங்கே  கடவுள் வந்து அருகே அமர்ந்துக்கொள்கிறார். எலிக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் தவளையைக் கண்டு உரையாட முடியவில்லை என்ற ஆதங்கம் வருகிறது. தன் குரல் கேட்காத தொலைவில் எங்கோ நீருக்குள் இருப்பதாய் துயர்க் கொள்கிறது. குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டுமே சந்திக்க முடியும் என்பது எத்தனை பெரிய அநீதி?.. தினம் அரை மணி வாரத்தில் ஒருமுறை இதுவெல்லாம் போதது நமக்கு என்கிறது. 

“ மீன்களை போல நம்மைச் சுற்றி பெருங்கடல் அல்லவா இருக்க வேண்டும்” என்கிறது. எலியையும் தவளையையும் போல எத்தனை காதல்கள் இருக்கின்றன இங்கே. ஒருவர் வாழும் நீரில் ஒருவர் சுவாசிக்க முடியாது, குறிப்பிட்ட எல்லையை தாண்டி செல்ல இயலாது. நேரமும் காலமும் அளவிட்டு தான் பகிர முடியும்..இன்னும் ஒரு ஐந்து நிமிடம் என்று இறைஞ்சும் கண்களை எங்கேயாவது சந்தித்திருப்போம். எந்த தர்க்கத்திலும் இங்கே இருக்கும் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் பொருந்தாது முட்டி மோதி திகைக்கும் எலியும் தவளையும் ஏராளம்.  ஒரு கட்டத்தில் அதில் ஒருவர் இங்கே இருப்பவற்றில் சிக்கி குழம்பும் போது ஒருவர் இப்படி கேட்க வேண்டியிருக்கிறது .

“ உனை நீ

அறியும் வழக்கம் 

உள்ளதா உனக்கு?

விவாதமும் வேண்டாம்

சாதுர்யமான பதிலும்

வேண்டாம் இங்கு”.

அத்தொகுப்பில் இன்னொரு கவிதை:

காதலிப்பதை எவ்வாறு கற்றுக்கொள்ளுவது? இன்னொரு உயிரை காதலிப்பது எளிதாக தோன்றலாம் ஆனால் எதிரில் இருப்பது அத்தனை தூயதாக, களங்கமற்ற ஆன்மாவாக,  உயரியதாக அமைந்து விட்டால்..ஒளிவிடும் அரிய கருமுத்தை உள்ளங்கையில் ஏந்துவது எப்படி? அகம் நடுங்காமல் தீண்டுவது எங்கனம்? வழியும் தீர்வும் அங்கேயே உள்ளது. பொங்கி பெருகும் உன் ஒளியால் நான் காதலிக்க கற்றுக்கொண்டேன்.  மேலும் கவிதையை நான் அடைந்தது உன் அழகினால். எப்போதும் என் நெஞ்சில் நின்றாடும் நின் பாதங்களை பிறர் காண இயலாது. இதயத்தில் பெருகும் இசையில் சுழலும் உன் நடனத்தில் நான் காண்கிறேன் கலையாகி வந்த ஒன்றை.

உனது ஒளியில்

கற்றுக்கொள்கிறேன்

எப்படிக் காதலிப்பதென.


உனது அழகில்

எப்படிக் கவிதை செய்வது

என்பதையும்.


எனது நெஞ்சினுள் 

நடனமிடுகிறாய் நீ.

அங்கே காண்பதற்கில்லை 

எவரும் உன்னை.

ஆயினும் 

காண்கிறேன் நான் அவ்வப்போது

அந்த தரிசனமே

இந்தக் கலையாகிறது.

நீள் கவிதைகளில் உள்ள சில பகுதிகளை தனிக் கவிதைகளாவே வாசிக்க முடியும். அத்தகைய ஒன்று..

“நிலவிற்கு வழி

வாசல் அல்ல

சாளரமே.”

ஆன்மாவின் வாசல் இதயமாக இருந்தாலும் அதன் சாளரம் கண்களாக உள்ளது. காதல் அவ்வழியே உள்ளே நுழைந்து வாசலை அடைந்து முழு இல்லத்தையும் ஆள்கிறது.

***


Share:

செல்வசங்கரன் கவிதைகள்

 இரண்டு பறவைகள்

என் மூக்கின் நுனி

என் கண்களைக் காட்டி 

மேலிருக்கின்ற இரண்டு பறவைகள்

ஏன் பறக்காமலிருக்கின்றன 

என்று கேட்டன

மலை உச்சியாக இருந்தால் 

இந்நேரத்திற்கு இரண்டு பறவைகள் 

அங்கிருந்து பறந்திருக்கும்

பறக்காமல் இருப்பதற்கு 

அந்த இரண்டு பறவைகள் 

அங்கு என்ன செய்கின்றன


***

நீர் பாக்ஸிங்

நீருக்குள் பந்தை 

மேலிருந்து கீழே ஒரு கை 

அமுக்குகிறது

கீழிருந்தும் மேலே ஒரு கை 

அமுக்குகிறது

பார்க்க நீர் பாக்ஸிங்

போல தோன்றுகிறது

என்ன இந்த பாக்ஸிங்கில்

மைதானத்தை மட்டும் 

யாரோ ஒருவர் தெரியாமல் 

தூக்கி பக்கவாட்டாக

படுக்கப்போட்டுள்ளார்

***

இல்லாத கடல்

வெளிச்சத்திற்கு சொந்தமான 

பொருள்கள் எல்லாம்

இருட்டிற்கும் சொந்தமானது

வெளிச்சத்தில் வரிசை மாறாத

புத்தகங்கள் எல்லாம்

இருட்டிலும் வரிசை மாறாது

வெளிச்சத்திற்கும் இருட்டிற்கும் 

இடையே

பெருங்கடலெல்லாம் ஓடவில்லை

ஆனால் 

பெருங்கடல் ஓடுகின்ற அளவு 

அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது

***

தெய்வம்

உலகத்தில் எல்லாரும்

தூங்குகையில் நானும் தூங்குகிறேன்

என் தூக்கம் ஒரு சிறிய பரப்பளவு

ஒரு குட்டிப் பாத்திரம்

ஒரு சிறிய வீட்டில் ஒரு சிறிய கட்டிலில்

தூங்கிக் கொண்டிருக்கிறேன்

ஒரு சிறிய முழிப்பில் முழித்துப் பார்க்கிறேன்

கண் முன்னால் வீட்டிலிருந்த பொருட்கள்

எல்லாம் சிறிய சிறிய பொருட்கள்

இவ்வளவு சிறிய பொருட்களை 

இவ்வளவு பெரிதாக காட்டுகிற கண்களை 

ஒருமுறை தொட்டு வணங்கினேன்

***

நான்கு குழந்தைகள்

தன்னுடைய மூன்று குழந்தைகளில்

ஓவ்வொரு குழந்தையாக 

தெப்பத்தில் தூக்கி எறிந்த தாய் 

தன்னுடைய முறைக்காக காத்திருக்கிறாள்

தன்னுடைய முறையில் அவளை மட்டுமே 

அவளால் தூக்கியெறிய முடிந்தது

அவளிடம் குழந்தைகள் தீர்ந்துவிட்டன

அவளையே ஒரு குழந்தையைப் போல

எண்ணி உள்ளே தூக்கி எறிந்தாள்

நீந்த தெரிந்த அவளது கை கால்களை

இவ்வாறு அமுக்கி பிடித்துக் கொண்டாள்

***

Share:

சுகுமாரனின் பிந்தைய கவிதைகள் - இசை

கவிஞர் சுகுமாரனின் 50 ஆண்டு எழுத்துப் பயணத்திற்கு என் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மாணவன் என்பதால் இது நன்றி சொல்லவும் உகந்த தருணம். 

நான் ‘பொக்கிஷங்களை’ நம்புவதில்லை. மாநகராட்சியின் மக்காத குப்பைத் தொட்டியில்  இன்று வந்து விழுபவைகளுள் சில,  ஒரு காலத்துப் பொக்கிஷங்கள்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே அவற்றைப் பூட்டிப் பாதுகாப்பது வேடிக்கையானது. ஆனாலும்  நான் அப்படி பாதுகாக்கும் ஒரே ஒரு பொக்கிஷம்,   இதுவரை வெகுசிலரே பார்த்திருக்கிற,  என் முதல் கவிதைத் தொகுப்பை வாசித்து விட்டு , சுகுமாரன் எழுதிய கடிதம் ஒன்றுதான். இதோ இந்தக் கட்டுரைக்கும் உதவும் சொற்கள் அந்தக் கடிதத்தில் இருந்தன. 

கோவை காந்திபுரம் கணபதி விடுதியில் இளம் இளைஞனாக அவரோடு நிகழ்த்திய மூன்று மணி நேரத்திற்கும்  அதிகமாக நீண்ட உரையாடலும் இத்தருணத்தில் நினைவிற்கு வருகிறது. “ கவிதைக்கு பொய்யழகு” என்கிற கூடாரத்திலிருந்து வந்தவனின் நெஞ்சில் உண்மையே கவிதையின் ஆபரணம் என்கிற எண்ணத்தை  ஆழ விதைத்துவிட்டவை அந்த உரையாடல்கள்.  மொத்த  உலகத்தின்  கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு நான் சென்று வந்த 11 மணிக் காட்சிகள் குறித்து,  முதன்முதலில் இன்னொரு மனிதரிடம் நான் பகிர்ந்து கொண்டதும் அவரிடம்தான். அதாவது என்னிடமே நான்  சொல்லத் தயங்கிய  பலவற்றையும் ஒரே மூச்சில் அவரிடம் சொல்லி முடித்தேன். அந்த உரையாடல் முடிந்த படியிறங்கிச் செல்கையில் இருந்த காலி மனத்திற்கும் இலக்கியத்திற்கும் வலுவவான தொடர்பிருந்தது என்றே கருதுகிறேன்.  எல்லாவற்றுக்கும் நன்றி தம்பி !

சுகுமாரனைக் குறித்தும் அவரது முந்தைய காலத்துக் கவிதைகள் குறித்தும் நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை வாசிக்கக் கிடைக்கின்றன. ஆகவே இந்தக் கட்டுரை அவரது பிந்தைய கவிதைகளைக் கருதி  எழுதப்படுகிறது. அவருடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பான “ இன்னொரு முறை சந்திக்க வரும் போது” என்கிற தொகுப்பில் உள்ள கவிதைகளையும், இதுவரை தொகுக்கப்படாத சமீபத்திய கவிதைகளையும் இங்கு  அணுகிப் பார்க்கலாம்.

பொதுவாக நீண்ட காலமாக எழுதி வரும் எழுத்தாளரை மதிப்பிட அவர் எங்கு துவங்கி,  எங்கெங்கு சென்றுவிட்டு, இப்போது எங்கு வந்து நிற்கிறார் என்பதைக் காண்பது ஒரு விமர்சன மரபு. “மனிதர் இப்போது எவ்வளவு கனிந்துவிட்டார் பாருங்கள்..”  என்று சொல்வது அந்த மரபின் ஐதீகங்களில் ஒன்று.  கனிவிற்கு கண்டிப்பாக கைதட்டி ஆக வேண்டும் இல்லையேல் நமது கல்நெஞ்சம் கையும் களவுமாகச்  சிக்கிவிடும்.  ஆனால் இந்த மரபு ஒரு தோராயமான  வரைபடத்தையே அளிக்க இயலும் என்று நினைக்கிறேன்.  எப்படியாவது தொகுத்துக் காணவேண்டும் என்பதற்காக இப்படிக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் பயணத்தை அப்படி துல்லியமாக வரையறுத்து விட  இது பயன்படுமா என்பது சந்தேகமே.  மனிதன் ஒரு நாளில் இச்சையின் பிடியிலும், மறுநாள் ஞானத்தின் ஒளியிலும் வாசம் செய்பவன். நமது ஒரு நாள் கூட ஒன்பது மெய்ப்பாடுகளாக உடைந்து விட வாய்ப்புண்டு தானே? கனிந்துவிட்டார் என்று நாம் சான்றிதழ் தரும் ஒருவர் மறுநாளே ஒரு கொலை செய்தாலும் செய்துவிடுவார்.  கவிஞரும் தன் சமீபத்திய தொகுப்பின் முன்னுரையில் இதை ஒத்துக் கொள்கிறார். “ மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட்களில் ஒருங்கே எழுந்தன”.

ஒரு எழுத்தாளரின் 50 வருடப் பயணத்தில் 45 ஆண்டுகளை கழித்து விட்டு  5 ஆண்டுகளை மட்டும் தனியே காண்பது சிரமமே எனினும் அவரது பழைய கவிதைகளை துணைக்கு அழைக்காமல் இந்தக் கவிதைகளை மாத்திரம் பேசிப் பார்க்க இங்கு முயலலாம். இந்த வகையில் ஒரு அனுகூலம் உண்டு.  ஒவ்வொரு கவிஞனின் நெற்றியிலும்  தலையெழுத்தைப் போல் பொறிக்கப்பட்டிருக்கிற,  அவனது சில  கவிதைகளிடமிருந்து அவனுக்கு விடுதலை அளித்துவிட முடியும்.

சுகுமாரனின்  வாராணசி குறித்த கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக இத்தொகுப்பில் உள்ளன.  “காலம் “என்கிற தலைப்பில் முதல் கவிதை உள்ளது.  அச்சமாகவும் விடுதலையாகவும் இருக்கிற,  நிர்கதியாகவும், சரணாகதியாகவும் பொருள் படுகிற ‘மரணம் ‘ நிகழ்ந்து கொண்டேயிருக்கிற ஸ்தலத்தில் காலம் என்னவாக இருக்க முடியும்?

இங்கு

காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று

காலங்களுக்கு அப்பாலான காலம்


இங்கே 

இன்று பிறந்த இன்றும்

நாளை  பிறக்கும் நாளையும்

பிறந்ததுமே

இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன..

………


இங்கே 

வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது

சாவின் கொள்ளிகளுக்கு இடையில்

………….

………………

வாராணசி கவிதைகளில் அடுத்ததாக உள்ளது  உஸ்தாத் பிஸ்மில்லாகானின் நினைவுகளூடாக எழுதப்பட்டிருக்கிற “ உஸ்தாத்” என்கிற கவிதை. அதாவது, ‘காலம் ‘என்கிற சோகமான தத்துவத்திலிருந்து ,  எப்போது நினைத்தாலும் அப்போது தித்திக்கிற பேரின்பத்திற்கான ஏக்கத்திற்கு தாவுகிறது கவிதை. இப்போது ‘காலம் ‘என்கிற முதல் கவிதை அர்த்தம் இழக்கிறதா? அல்லது கூடுதலாக வலுப்பெறுகிறதா?

வாராணசி கவிதைகளில் “முக்தி” மூன்றாவது கவிதையாகவும், “சுடர்கள்” கடைசிக் கவிதையாகவும் உள்ளன. 

முக்தி

காசிக்கு வந்தால்

அதி விருப்பானதை

இங்கேயே கைவிட்டுப் போவது மரபு

……….

ஒவ்வொருவரும்

ஒவ்வொன்றைக் கைவிட்டுப்  போகும்போது

காசியையும் கையோடு கொண்டு போகிறார்கள்

ஒவ்வொருவரும்

ஒவ்வொரு முறையும்

காசியை நினைக்கும் போது

கைவிட்டவையும் கூடவே வராதா?


“சுடர்கள்” கவிதை இப்படி முடிகிறது


 “கங்கையில் மிதக்கவிடப்

பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில்

அழியாச்சுடர்களை பார்த்தேன்…”

இப்படியாக இந்தக் கவிதைத் தொடர் அழிவில் துவங்கி அழியாச்சுடரில் நிறைகிறது. அழிவு உறுதியானதும் இறுதியானதும் என்பதை மனிதன் அறிய மாட்டானா என்ன? ஆனால் அதற்குள் அழியாச்சுடர்களை கண்டுவிட ஏங்குபவன் அவன். கண்டும் விடுபவன் என்றே தோன்றுகிறது

இந்த நாட்களில்  இருட்டை அதிகம் சந்திக்கிறேன். இத் தொகுப்பிற்கு எழுதப்பட்டிருக்கிற முன்னுரையின் தலைப்பு “ இருட்டின் ஒளி”. ‘இருட்டும் ஒரு வெளிச்சம்தான் என்கிற அறிவை’ அடைந்ததாக முன்னுரை சொல்கிறது. முன்னுரைக்கு முன் அச்சிடப்பட்டிருக்கிற அப்பாஸ் கியரோஸ்தமியின் வாசகம் ஒன்று  “முழு இருட்டிலும் கவிதை காத்திருக்கிறது. அது அங்கிருப்பது உனக்காகவே ”  என்கிறது. . சமீபத்தில் வாசித்த  சஹானாவின் கவிதை ஒன்று.. “ இருளே உண்மையான வெளிச்சம்” என்றது. எங்கும் விரவிக் கிடக்கிற வெளிச்சத்தில் விழிகள் தூக்கத்துள் செருகிக் கொள்கின்றன. இருட்டு நம்மை நன்றாக விழித்துக் காணச் சொல்கிறது. அப்போது காணாத பாதையெல்லாம் காணக்கிடைக்கின்றன.  இப்படியாக தமிழின் மூத்த  கவி ஆளுமை ஒருவரும், இளம் கவி ஒருவரும் இணைந்து இருட்டில்தான் தேடுகிறார்கள். இருட்டில்தான் அடைகிறார்கள். கவி இருளின்  சிநேகிதராக இருப்பது அவசியம் என்றே நானும் நம்புகிறேன்.

தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இந்தக் கவிதைகளில் இயல்பாகவே "இருப்பு"  குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 

…..

நாம் இல்லாமற் போனால்

நமது பிரபஞ்சம் என்ன ஆகும்

நாம் இல்லாமற் போனால்

நாம் என்ன ஆவோம்?

நாம் இல்லையெனில்  உறுதியாக பிரபஞ்சத்திற்கு ஒன்றும் ஆகாது. ஆனால்  நாம் இன்றி நம்மால் இருக்க இயலுமா? நாம் எதுவோ அது இல்லையெனில் அது நாம் அல்ல அல்லவா? ( ஆஹா!!! எவ்வளவு அழகான சத்தங்கள் எழுகின்றன)

கவியின் பிந்தைய கவிதைகளில்  அடிக்கடி மரணம் தலை நீட்டிப் பார்க்கிறது. கூடவே மரணத்திற்கு எதிரான காதலும். மரணத்திலிருந்து காக்கும் வேடிக்கைச் சிரிப்பையும்   காண முடிகிறது.  வேடிக்கை, தீவிரத்திற்கு எதிரானதென்பதே பொதுக் கருத்து. அது ஒரு தனித் தீவிரம்தான். இவ்வளவு தீவிரத்திற்கு இங்கு ஒரு அர்த்தமும் இல்லை என்று சொல்லும் தீவிரம். சமீபத்தில்  ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் பொன்மொழி ஒன்றை வாசித்தேன்..” நாம் வேடிக்கையானவர்களாக இல்லையென்றால் வாழ்க்கை நரகமாகிவிடும்”

பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் தான் விரும்பிய “ எளிமையை” அடைய முடிந்திருப்பதாகச் சொல்கிறார் கவி. எளிமையினூடே கொஞ்சம் அசட்டையும் சேர்ந்து விட்டதோ என்று நான் சந்தேகிக்கிறேன். தொற்றுக் காலத்தின் சோர்வு இதன் சொற்களையும் பிணித்திருக்கலாம். எளிமையும், அசட்டையும் அருகருகே இருக்கும் ஆபத்துகள் தானே?

கதை சொல்லும் கவிதைகள் மேல் பெரிதாக எனக்கு ஈர்ப்பில்லை. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் அப்படியான  இரண்டு  கவிதைகள் என்னை அதிகம் ஈர்த்தன.  பிறழ்ந்த காதல் என்று சொல்லப்படுகிற காதல் கதைகளில் இடம்பெறும் இரண்டு ஆண்களுக்கு இடையேயான விரோதம்,  வெறுப்பு, கொலை வெறி போன்றவற்றை நாம் அறிவோம்.  ஆனால் அவர்களுக்கிடையே  முகிழ்கும் அன்பையும், மதிப்பையும் பேசும் தமிழ்க்கவிதை வெகு அரிது என்றே நினைக்கிறேன். இந்தக் கதையில் காதலியின் பெயர்”  லியான்ஹூவா” அவள் கணவனின் பெயர்” காங்க்மிங்க் ரேன்”. அவள் காதலனின் பெயர்” ருவான் ரே”.  கணவன் காதலனை போனில் அழைக்கிறார்…

திரு. ருவான்ரேனின் காதலி

…….

……

……

“ ஹலோ, ருவான் ரே,

 லியான்ஹூவா இங்கே ஓயாமல் அழுகிறார்

கூந்தலைப் பிய்த்து கூப்பாடு போடுகிறார்

சுவரில் முட்டிக் கபாலம் பிளக்கிறார்

நீங்கள் பேசினால் நிச்சயம் தணிவார்”


கைநடுங்க ரிசீவரைப்  பற்றிக்

காதலிக்கு ஆறுதல் சொல்லும் போது

கலங்கிய விழிகளால் ருவான் ரே

ஜன்னலுக்கு அப்பால்

மண்ணிலிருந்து விண்ணுக்கு

நட்சத்திரம் ஒன்று ஒளிபரப்பிப் போவதை

அண்ணாந்து பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்

அந்த விண்மனமீனுக்கு

”காங்க்மிங்க்  ரேன் ” என்று புதுப்பெயர் சூட்டினார்.

“லியான்ஹூவாவின் காதலர்” என்கிற அடுத்த கவிதையும்  பிறழ்ந்த காதலின் வினோதமான மனநிலைகளில் ஒன்றை துல்லியமாகத் தொட்டு விடுகிறது. 

….

…..

காதலியின் கணவர் மறைந்தால்

கைம்மைக்கு ஆளாவது காதலரே என்று

திரு. ருவான் ரே யாரும் காணாமல் தேம்பினார்

தான் அந்நியமானதை எண்ணி வெதும்பினார்……

இந்தக் கவிதைகளின் பாத்திரங்களுக்கு கந்தசாமி, முனுசாமி, கலைச்செல்வி என்றே கூட பெயர்கள் சூட்டி இருக்கலாம். ஆனால் அப்படிச் சூட்டினால் இவற்றை யாராவது வாசித்துவிடும் ஆபத்துண்டு என்பதால் கவிஞர் தவிர்த்து விட்டாரோ என்னவோ? அல்லது தமிழன் இன்னும் அவ்வளவு நாகரீகமடையவில்லை என்று கருதுகிறாரா ?

இந்தப் பிந்தைய  கவிதைகளில் இசை அளிக்கும்  பரவசங்கள் கவிதைகளாகி உள்ளன. “ ஒளி இடறி இடறி உரையாடும் அடர்வனம்” என்கிறார் M.D. ராமநாதனின் சஹானாவை.   “ வகுளாபரணம்” எனும் ராகத்தின் உணர்வு நிலைகளை  புறக்காட்சிகளாக எழுதிப் பார்க்க முயன்றிருப்பது புதிய அனுபவம்தான்.  அந்தக் காட்சிகளின் வழியே அந்த ராகத்தின் இனிமையை தொட முடிகிறது. 

சரக்கொன்றை பாடும் சங்கீதமொன்றும் எனக்குப் பிடித்தமானது. கண் , காது வழிப் பார்க்கும்  கவிதையிது.   பளீரென்று ஒலிக்கும் பிரமாதமான பாடல் . 

பருவ கானம்

நாள்தோறும் நடக்கும் வழியில்

நேற்றுவரை காணாத மலர்ச்சி

இன்று


ஆண்டு முழுவதும்

ஒத்திகை பார்த்த பாடலைப்

பாடிக் கொண்டிருக்கிறது

பொற்கொன்றை

ஒவ்வொரு மனிதனிடமும் வழியனுப்பி வைக்க  வேண்டியவை என்று ஒரு பட்டியல் உண்டு. பிரியங்கள், ஆசைகள், பழக்கங்கள், நினைவுகள்  என்று. மனிதன் அதற்கெதிராக சமரிடாமல் இல்லை.   பயன்தான் பல உயிர்க்கும் வாய்ப்பதில்லை.

ஐ வல் யூ

காலம் கண்ணுக்குள் உறையக்

காட்சிகள் புரையோடுகின்றன

கால்கள் தளர்கின்றன

செவி மங்குகிறது

மொழி குழறுகிறது


இனிமேல் பயனில்லை

எனவே

கடைசியாக அலங்கரித்து

மனம் தளும்ப உபசரித்து

அழைத்துப் போய்

சொல் எட்டாத் தொலைவில்

விட்டு வந்தேன்


வரும் வழியில் உள்ளுருகி

அது இருந்த நாளையும்

அத்துடன் இருந்த பொழுதையும்

அதுவாக இருந்த நொடியையும்

நினைவில் ருசித்துக் கொண்டே திரும்பினேன்


நான் வந்து வீடடையும் முன்பே

அது வந்து வாசலில் நிற்கிறது

யுகயுகமாகக் காத்திருந்தாற் போல

துள்ளி ஓடி வந்து

அன்றலர்ந்த மலர்த்திரளை

ஆசையுடன் நீட்டுகிறது

முதன்முதலாகச் சொல்வது போல

 அந்தரங்கமாகச் கிசுகிசுக்கிறது

 “ ஐ வல் யூ”

“சொல் எட்டாத் தொலைவு”  என்கிற  தொலைவு இந்தக் கவிதையில் கவனிக்க வேண்டிய வரி. மேலும் இந்தக் கவிதையில் “ கடைசியாக” என்கிற சொல்லைப் பார்க்கப் பார்க்க  பாவமாக இருக்கிறது.  மனிதன் “ கடைசியாக “ என்று சொல்லும் அநேக தருணங்களிலும்  அவன் பின்னால் நின்றுகொண்டு ஏதோ ஒன்று வாய் பொத்திச் சிரிப்பது போல் எனக்குத் தோன்றும். 

தவிட்டுப் பழத்தை வாயில் இட்டு காலத்தை மெல்லும் ஒரு கவிதையும் எனக்குப் பிடித்தமானது.

இது போர்களின் காலம். டி.விக்கள்  நாள் தோறும் ஏதோ ஒரு போரைக் காட்டுகின்றன. இவற்றில் போர் குறித்து இரண்டு கவிதைகள் காணக்கிடைக்கின்றன. ஒரு கவிதை தெளிவாக போருக்கு எதிராகப் பேசுவது. காஸாவில் மண்ணை அள்ளித் தின்று காட்டிய ஒரு சிறுவன் வைரல் ஆனான். ஆனால் போர் என்ன ஆனது? 

ஆயத்தம்

ஒரு யுத்தத்தை ஆரம்பிக்க

இரண்டு பேர் போதும்

எதிரியாக மாறிய நண்பனும்

நண்பனாக மாறிய எதிரியும்


ஒரு யுத்தத்தின் முடிவில்

ஐந்து பேர் எஞ்சுவார்கள்

இறந்தவன் ஒருவன்

சுமப்பவர் நால்வர்


ஒரு யுத்தம்  புதிய சாதிகளை உருவாக்குகிறது

அங்கவீனர்கள்

அநாதைகள்

கைம்பெண்கள்

தரித்திரர்கள்


கூடவே

மூடர்களை

கல் நெஞ்சர்களை

இன்னொரு கவிதை” போரும் அமைதியும்”.  இந்த இரண்டு கவிதைகளும் ஒரு வகையில் அருகருகே வைத்து வாசிக்கத் தகாதவை. ஒரு வகையில் அருகருகே வைத்து வாசிக்கத் தக்கவை. பின்னது  என்னளவில் வெகு ஆழமானது. வீடுகளில் நடக்கும் போர்கள், உள்ளத்துள் நடக்கும் போர்கள் என நமது அன்றாடங்களின் யுத்தத்தையும் சேர்த்து அள்ளி வந்திருக்கிற கவிதை அது. 

போரும் அமைதியும்

யுத்தமும் சமாதானமும் இரண்டல்ல

ஒன்றுதான்.


எப்போதும்

சமாதானத்துக்காகவே

காத்திருக்கிறது யுத்தம் 

எப்போதும்

யுத்தத்தை எதிர்பார்த்திருக்கிறது

சமாதானமும்


இரண்டும்

எப்போது இன்னொன்று முடியும் என்றே

தொடங்குகின்றன

இரண்டும் 

எப்போது  தொடங்கும்  என்றே

முடிகின்றன


ஒரு பொதுப் பகைவனைக் காட்டி

எல்லாரையும் கொல்கிறது போர்

ஒருவரையும் ஒருவரிடமும் 

கொண்டு சேர்ப்பதில்லை அமைதி .


யுத்தம்

மரணத்தின் வெட்டியான்

சமாதானம்

வாழ்வைத் தொலைத்த அகதி.


எனவே 

ஒன்றுதான்

போரும் அமைதியும்.

வாழ்வை தொலைத்து அடைகிற  சமாதானத்தை எண்ணினால்  குமட்டிக் கொண்டு வருகிறது.  சமாதானமும் நீதியும் வேறு வேறல்லவா? 

சுகுமாரனின் சில  கவிதைகள்  வெடிப்பதற்குப் பதிலாக ஒரு புள்ளியைச் சுற்றிச் சுற்றி வண்டு போல்  ரீங்கரிப்பை. ஒரு விதத்தில் ஆலாபனை போல. அவரது இசை ஆர்வம் இந்த வடிவிற்கு அவரை இட்டுச் சென்றிருக்கலாம். அடுக்கி அடுக்கிச் சொல்லப்படுகிற அல்லது விஸ்தாரமாக நீட்டி முழக்கும் இந்த வகைமை மீது எனது ஆரம்ப நாட்களில் இருந்த மோகம் பின்னாட்களில் தேய்ந்து விட்டது என்பது  உண்மை. அந்த வகையான கவிதைகள் அவரது  பிந்தைய கவிதைகளில் குறைவு என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு உவப்பான செய்தி.

கட்டுரை முடிந்துவிட்டது. “ சமாதானம் வாழ்வைத் தொலைத்த அகதி” என்கிற வரி இன்னும் முடியவில்லை.

(ஆவடி இந்துக்கல்லூரியும், காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய “ சுகுமாரன் படைப்புப் பயணம் ’ “ நிகழ்வில்  ஆற்றிய உரையின் விரிவான எழுத்து வடிவம்)

***


***
Share:

கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு - க.நா.சு

(தேரழுந்தூரில் மார்ச் 28, 29 1964 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.)

நேற்று உலகக் கவிஞர்களிலே உயர்ந்தவன் கம்பன் என்று பலரும் பேசினார்கள், அப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கவிகள் உலகப் பரப்பிலே இருப்பதாக நினைப்பது தவறு. இது கவிஞர்களுக்குள்ளே போட்டியல்ல - எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு இந்த வருஷம் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பேர்வழிகள் போகிறார்கள் என்கிற கணக்கல்ல அது. உலகத்தில் நல்ல கவிகள் என்கிற எண்ணிக்கை ஒரு பத்திருபதுக்குள் அடங்கிவிடும் - அவற்றில் ஒருவன், தமிழில் எழுதிய கவி கம்பன் என்பது நமது பெருமை.

நல்ல கவிகளிலும் காவியங்கள் எழுதியவர்கள் மிகக் குறைவு. ஒரு கை விரல்களுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையினர்தான். கீழை நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் சீனாவிலோ ஜப்பானிலோ காவியங்கள் என்று இலக்கியத்தரமாகச் சொல்லக் கிடையாது. இந்தியாவிலே இரண்டு - ஆதி கவி என்று சொல்கிற வால்மீகி. தமிழிலே கம்பன். உலகத்து ஆதி கவியாகிய ஹோமர் கிரேக்க காவியம் எழுதியவன். ‘இலியாது’ம் ‘ஒடிஸ்ஸி’யும் அவன் காவியங்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் லத்தீன் மொழியில் வர்ஜில் ‘ஏனியது’ எழுதினார். பிறகு இத்தாலிய மொழியில் ‘தெய்வ நாடகம்’ எழுதிய டாண்டே கம்பருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்தவர். பின்னர் ஆங்கிலத்தில் மில்டன் - இவ்வளவு பேர்தான் காவிய கர்த்தாக்கள்.

இந்தக் காவியங்களிலே கட்டுக்கோப்பு அமைந்த காவியங்களைச் சிருஷ்டித்தவர் என்று வால்மீகியையும் கம்பனையும் விட்டுவிட்டால், வேறு டாண்டேயை மட்டும்தான் சிறப்பாகச் சொல்லலாம். டாண்டேயின் காவியம் ஆத்மானுபூதியால், வீட்டு உவமைகளால் சிறப்புப்பெற்றது. அதனுடன் ஒப்பிட்டு கம்பனின் உருவத்தைக் கணிக்கிற காரியத்தை விமரிசனபூர்வமாக நாம் இன்னும் செய்யவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக பாட்டையும் பாத்திரங்களையும் சம்பவங்களையும் பிய்த்துப் பிய்த்துக் கம்பனை அனுபவிப்பதையே நாம் இதுவரை செய்துவந்திருக்கிறோம். முழுக் காவியமாகக் காண இதுவரை எவ்வித முயற்சியுமே செய்யப்படவில்லை. விமரிசன முறையில் வ.வே.ஸு. ஐயர் இதை ஓரளவு செய்ய முயன்று பார்த்தார். அவர் பல மொழிகளையும் அறிந்தவராயினும், ஆங்கிலத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டு, மில்டனையே பெரிய காவிய கர்த்தவாக எண்ணி அவனோடு கம்பனை ஒப்பிடுவதுடன் நிறுத்திக்கொண்டார். விமரிசன ரீதியில் மில்டனையும் வர்ஜிலையும் இரண்டாந்தரக் காவிய கர்த்தாக்களாகவும் முதல் தரமானவர்களாக ஹோமர், டாண்டே என்கிறவர்களைக் கருதுவதும் சமீப காலத்து வழக்கு. இது இனி அழிபடாத வழக்கு என்றும் தோன்றுகிறது. கட்டுக்கோப்பு என்கிற அளவில் பார்ப்பதற்கு ஆதிகவிகளாகிய ஹோமரையும் வால்மீகியையும் விட்டுவிட்டு கம்பருடன் ஒப்புநோக்கத்தக்கவர் டாண்டே. இந்தக் காரியம், விமரிசனம் இனித்தான் செய்யப்பட வேண்டும்.

கட்டுக்கோப்பு தவிர இன்னும் ஒன்றிலும் கம்பனும் டாண்டேயும் ஒப்பிடத்தக்கவர்கள். டாண்டேயை மத்திய காலத்து அறிவு பூராவுக்கும், ஆத்ம அனுபூதி பூராவுக்கும் வாரிசாக மதிப்பது ஐரோப்பிய வழக்கு. அதே அளவில் கம்பன் இந்தியாவின் ஒரு முக்கியமான காலகட்டத்தின் அறிவு ஞானம், அனுபூதி இவற்றின் வாரிசு என்பது வெளிப்படை. ஆகையால்தான் அவனைப்பற்றி இவ்வளவு பேச முடிகிறது - அவன் காவியத்திலே இத்தனை விஷயங்களையும் காணமுடிகிறது என்பது தெளிவு. இத்தனை விழாக்களையும் அவனால் தாங்க முடிகிறது.

கட்டுக்கோப்பு என்பதை மனப்பாடம் பண்ணிய பாட்டுக்களைப் பாடி ருஜுப்படுத்த முடியாது. எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 1953-ல் என்று நினைவு - பாரிஸ் நகரில் ஆண்ட்ரே மால்ரோ என்கிற ஃபிரெஞ்சு அறிஞருடன் ஒருநாள் பூராவும் அளவளாவ எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் நல்ல இலக்கியாசிரியர் - நாவலாசிரியர் - உலகத்துக் கலையின் சரித்திரத்தை எழுதியிருக்கிறார் – ‘வாய்ஸ் ஆஃப் ஸைலன்ஸ்’ என்கிற பெயரில் மதுரைக் கோயிலையும் தமிழ்நாட்டுச் சிற்பங்களையும் பற்றி அதிலே எழுதியிருக்கிறார். அவரைச் சந்தித்தபோது அதுபற்றி எனக்குத் தெரியாது - கலை பற்றிய அவர் நூல் அப்போது வெளிவரவில்லை. தமிழ் இலக்கியம் பற்றிய பேச்சிலே நான் கம்பனைப் பற்றிச் சொன்னேன் - தனியொரு சிறப்பான காவியமாக, ராமாயணக் கதைதான் எனினும் தனிச் சிறப்புடையது என்று. எனக்குக் கவிதையை மொழிபெயர்த்துச் சொல்ல வல்லமை இருப்பதாக நினைப்பு இல்லாதது காரணமாக மதுரைக் கோயிலை உதாரணமாகச் சொன்னேன்.

மதுரைக் கோயிலுக்கு, நம்முடைய கோயில்கள் எல்லாவற்றிற்குமே, ஒரு கட்டுக்கோப்பு உண்டு. அந்தக் கட்டுக்கோப்பு இத்தன்மையது; இதனால் அமைவது என்று சொல்ல இயலாது. ஆனால் அந்த கட்டுக்கோப்பை உணர முடியும். தென்னிந்தியக் கோயில்கள் போன்றதோர் சிறப்பான அமைப்புப் பெற்றது கம்பனின் காவியம் என்று சொன்னேன் மால்ரோவிடம். மால்ரோ பின்னர் இந்திய அரசாங்கத்தின் விருந்தினராக - அவர் அப்போது ஃபிரெஞ்சு தேசத்தின் கலாசார மந்திரி - தென்னிந்தியா வந்து மதுரையைப் பார்த்துவிட்டுப் போனார்.

மதுரைக் கோயிலின் ஆதி உருவம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இடையில் எத்தனையோ சேர்க்கைகள், புது அமைப்புகள் உண்டாகியுள்ளன. அதேபோல கம்பன் கவிதையிலும் செருகு கவிகள், போலிக் கவிகள், என்று யார் யாரோ பாடியவை பாடிச் சேர்த்தவை சேர்ந்துவிட்டன. பாடபேதங்கள் பிழைகள் ஏராளமாக இருக்கின்றன; உண்மைதான். அவையெல்லாம் சேர்ந்தும் விலகியுமே கம்பரின் காவியக் கட்டுக்கோப்பு உருவாகியுள்ளது. இதையெல்லாம் வைத்தே நாம் கம்பனின் காவியக் கட்டுக்கோப்பை அறிந்துகொள்ள வேண்டும். வாலிவதத்தையும், இந்திரஜித்தின் மாயத்தையும் மட்டும் பிரித்துப் பிரித்துச் சொல்லிக்கொண்டே காலங்கடத்திக்கொண்டிருப்பது சரியல்ல. முழுக் காவியமாக கம்பன் கவிதை பூராவையும் அறிந்துகொள்ள, இன்று அவசியம் இருக்கிறது.

இலக்கியத்தில் காவியம், நாவல் என்கிற இரண்டு துறைகளுக்கும்தான் கட்டுக்கோப்பு என்கிற சிறப்பு அமைதி உண்டு. மற்ற துறைகளுக்கெல்லாம் - உதாரணமாக சிறுகதை, சிறு கவிதை, நாடகம், விமர்சனம் - இதற்கெல்லாமும் கட்டுக்கோப்பு என்று ஓரளவில் உண்டு. என்றாலும் சிறப்பாக Structure, Architectonics என்பது காவியத்துக்கும் நாவலுக்குமே உரியது.

இன்றைக் காலகட்டத்தில் காவியங்கள் என்று எழுதுகிறவர்கள் கிடையாது. காவியங்களின் காலம் கடந்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம். காவியத்தின் குறிக்கோளை, நோக்கத்தைக் கொண்டு நாவல்கள் தோன்றியுள்ளன என்று சொல்வது மிகையாகாது. கம்பன் இன்று உயிருடன் இருந்தால், ராமாயணத்தையே எழுதுவதேயானாலும், அவன் இன்று நாவலாகவேதான் எழுதியிருப்பான். நாவாலாசிரியன் - இன்று நாவல்கள் எழுதத் துணியும் இலக்கியாசிரியன் - என்கிற அளவில் நான் சொல்வேன். ராமாயணத்தைப் போன்றதோர் நாவலுக்கேற்ற விஷயம் கிடைப்பது அருமையிலும் அருமை. வசனத்தில் நம் இன்றைய சிறந்த இலக்கியாசிரியர்களில் சிலரேனும் ராமாயணத்தை எழுதிப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்றே நான் சொல்வேன். ஒரு காலத்தில் நானே செய்து பார்க்கிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வேன் என்றும் சொல்லுவேன்.

உலகத்துக் காவிய கர்த்தாக்களைப் போலவே உலகத்து மிகச் சிறந்த முதல்தரமான நாவலாசிரியர்களும் எண்ணிக்கையில் ஒரு கைவிரல்களுக்குக்குள் அடங்கக்கூடியவர்கள்தான். டாஸ்டாவஸ்கி (பல நாவல்கள்), டால்ஸ்டாய் (‘போரும் சமாதானமும்’ என்கிற ஒரு நாவல்), மார்சல் ப்ரூஸ்ட், லாகர்கெவ், தாமஸ் மன் (ஜோஸஃப் வரிசை) என்று ஏழெட்டுப் பேருக்கு அதிகம் சொல்ல இயலாது. இவர்கள் சிருஷ்டிகளுக்குத் தந்த கட்டுக்கோப்புக்கும் காவிய கர்த்தாக்களில் கட்டுக்கோப்பு அம்சத்தில் சிறப்புற்றவர்களான டாண்டே, கம்பன் இவர்கள் தங்கள் சிருஷ்டிகளுக்குத் தந்துள்ள கட்டுக்கோப்புக்கும் ஒப்புவமை காணவேண்டியது, கண்டு முடிவுகளை வற்புறுத்துவது விமரிசகனின் கடமையாகும்.

டாண்டேயைப் படிக்கும்போது நமக்குச் சந்தேகம் இன்றித் தெரிகிறது. காவியத்தின் ஒவ்வொரு பாட்டும், ஒவ்வொரு மூன்று அடிப் பாட்டும், முதல் இரண்டு நரகம் பர்கேடரி சுற்றில் வர்ஜில் அழைத்துச் செல்ல, மூன்றாவது சுற்றில் பியாட்ரிஸ் என்கிற மன உருவக் காதலி அழைத்துச் செல்ல, டாண்டேயின் மஹோந்நதமான சிந்தனை என்கிற தெய்வ சாந்நித்யத்திலே கொண்டுபோய் டாண்டேயையும் அவனுடன் மனித குலத்தையும் நிறுத்தத்தான் என்பது தெரிகிறது. மனித அறிவின் பிரயாணம் டாண்டேயின் காவியத்தில் பிரமாதமான ஒரு அனுபவ ஆதாரம் எடுத்திருப்பதைக் காண இயலுகிறது.

ஆனால் மேலைநாடுகளிலும் ஃபாஷன் என்கிற பேய் பிடித்து இலக்கிய உலகத்தையும் ஆட்டத்தான் ஆட்டுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன் நம் நாட்டில் கம்பன் பற்றி இருந்த நிலைதான் டாண்டேயைப் பற்றி ஐரோப்பிய இலக்கியவுலகிலே. மில்டனைப் பெருங்காவிய கர்த்தாவாக மதிக்கிற பழக்கம் போய்விட்டது என்று சொன்னேன். அதற்குப் பிறகு டாண்டேயைப் பார்க்கிற பழக்கம் ஏற்பட்டுவிடவில்லை - டாண்டேயைப் பாராட்டுவது டி. எஸ். எலியட் என்கிற ஆங்கிலக் கவி தொடங்கி வைத்த ஃபாஷன் இன்று ஆங்கில இலக்கியவுலகிலே இருக்கிறதே தவிர படிப்பவர்கள் குறைவுதான்.

மேலைநாடுகளில் கவிதை என்றால் பயந்து கூட்டம் கலைந்துவிடும் என்று ரஸிகமணி டி.கே.சி. அவர்கள் சொல்லிவிடுவார்கள். இங்கு இந்தியாவில் கவியின் பெயரைச் சொல்லிக் கூட்டம் கூட்டுவது சாதாரண காரியமாக இருக்கிறது. கம்பனைப் பற்றி விழாக்கள் வேண்டுமா? கம்ப ராமாயண வகுப்புகள், சிறு பெரு பிரசங்கங்கள், ஆராய்ச்சிகள், தனி ஸ்தாபன பொதுத் துறை, சர்க்கார்த் துறை ஆதரவுடன் கம்பன் முயற்சிகள் எத்தனை எத்தனையோ நடக்கின்றன. ஒரு பதினைந்து ஆண்டுகளில் இருபது முப்பது லட்சங்கள் வரையில் சென்னை, டில்லி சர்க்கார்கள் கம்பன் பெயருக்காகச் செலவிட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் - புள்ளிக் கணக்கு விவரம் சரியா தப்பா என்று எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் ராஜம் மனமுவந்து அளித்த பதிப்பையும், பழைய வை.மு.கோ. பதிப்பையும், கு.அழகிரிசாமி பதிப்பையும் விட்டால் கம்பனுக்கு நல்ல பதிப்பு என்று ஒன்றுகூட இல்லாத குறைதான். பேசிப் பேசியே, விழாவெடுத்தே நமது இலக்கியத் தினவு எல்லாம் தீர்த்துக்கொண்டுவிடுகிறோம். குறிப்பிட்ட எத்தமிழ்த் துறையிலும் முழு ஈடுபாட்டுடன் உழைக்க ஒருவருமே தயாராக இல்லை. பேராசிரியராக இருக்கையிலே கம்பன் ஒரு உப தொழில். இப்படித்தான் கம்ப சேவை வளர்கிறதே தவிர – வ.வே.ஸு. ஐயர் அன்று துவக்கி வைத்த பாதையிலே செல்லக்கூடிய யாரையும் காணவில்லை

உலகத்துக் காவியங்களிலே பலவற்றிலும் காணப்படாத ஒரு கட்டுக்கோப்பு கம்பனில் காணப்படுகிறது என்று சொன்னேன். இந்த விஷயத்தில் டாண்டேயைத் தவிர வேறு யாரையும் கம்பனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கில்லை. ஹோமரிலும் வால்மீகியிலும் ஒரு சக்தியிருக்கிறது - அந்த சக்திக்கு ஒப்பிட உலக இலக்கியப் பரப்பிலே வேறு எதுவும் கிடையாது. அது தனி. ஆனால் கம்பனின் காவியத்தில் உள்ள சக்தியை செயற்கையால் பெற்றது. Sophistication கவி நயம் தெரிந்து சுயப் பிரக்ஞையுடன் பெற்றதாகும். டான்டெயிலும் இந்த சுயப் பிரக்ஞை உண்டு. கம்பனின் காவியம் டாண்டேயினுடையது போலவே அறிவுமயமானது. ஒரு குறிக்கோளை நோக்கி நடப்பது ராமராவண யுத்தம். மேலெழுந்தவாரியாக கதையின் முடிவுதான் அதுவும். கம்பனாக கற்பனை செய்துகொண்டதல்ல; வால்மீகி தந்து எடுத்துக்கொண்டாலும், ஆனால் அதற்கான பகைப்புலனும் சூழ்நிலையும், போர்க்களமும் கம்பனின் அறிவுக் கற்பனை. அதைக் குறித்தே காவிய முழுதும் எல்லாம் அங்குலம் அங்குலமாக நகருவதை கட்டுக்கோப்பைக் கணிக்கிறபோது நாம் காண்கிறோம்.

***

‘இலக்கிய வட்டம்’, இதழ் 11, 10-4-1964

‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’, 1984

 ***

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

Share:

ஆனந்த்குமாரின் ப்ளம்கேக் - மதார்

உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக இன்னும் நீ ஆகவில்லை என்பதே உண்மை. ஏனெனில் படைப்பவனுக்கு ஏழ்மை என்ற ஒன்றில்லை, முக்கியமற்ற இடமென ஏதுமில்லை.

   - ரெய்னர் மரியா ரில்கே

கவிஞர் ஆனந்த்குமாரின் முதல் தொகுப்பான டிப் டிப் டிப் 2021 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொகுப்பு. எளிமையும், குழந்தைகள் உலகும், கவிஞன் எட்டும் ஆன்மீகத் தளமும் அத்தொகுப்பின் சிறப்புகளாக அமைந்திருந்தன. நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு அவரது இரண்டாவது தொகுப்பான ப்ளம் கேக் வெளிவந்துள்ளது. விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவில் கவிஞர் ஆனந்த் குமார் தன் கவிதை வெளிப்பாட்டை 'ஒரு குழந்தை நமக்கு அளிப்பது அளப்பரியது' என்று தனது இரண்டு மகன்களுக்கும் நன்றியாகக் கூறுகிறார். இந்த இரண்டாவது தொகுப்பில் அவர் தந்தையினின்றும் கூடுதலாக ஒரு காதலனாக மலர்ந்துள்ளார். பொதுவாகவே அவரது மனம் ஒரு காதலனுக்கான மனம். காணும் யாவையும் காதலுடன் பார்ப்பவனே கவிஞன் எனச் சொல்லலாம்தானே. அந்த வகையில் ஆனந்த்குமாரின் 'மனம்' அவரை ஒரு கவிஞராக தொடர்ந்து நிலைநிறுத்துகிறது. அம் மனமே மொழியைத் தீர்மானிக்கிறது. கவிதையாகிறது. இரண்டு வகையான கவிஞர்கள் உண்டு. ஒன்றிலிருந்து வேறொன்றைக் கண்டறிந்து எழுத முனைபவர்கள். ஒன்றையே எழுதி எழுதிச் செல்பவர்கள். முதல் தரப்பில் தேவதச்சன், சுகுமாரன் போன்ற கவிஞர்களை வைக்கலாம். இவர்கள் கவிதைக்குப் புதிதாக எதையேனும் செய்யத் துடிப்பவர்கள். இரண்டாவது தரப்பில் தேவதேவன், கல்யாண்ஜி போன்ற கவிஞர்களை வைக்கலாம். அவர்களோடு சேர்த்து ஆனந்த்குமாரையும் வைக்கலாம். இவர்கள் தன் கவிதா ஆற்றலின் வீச்சால் முன் நகர்பவர்கள். கவிதை மீது அதீத பித்துடையவர்கள். இந்த இரு தரப்பினருமே கவிதைக்குத் தேவையானவர்கள்.

உனக்காக மட்டும்

நிறைத்துவைத்த பாத்திரத்தில்

ஒருவாய் அள்ளக்

கைவிடவும்


அண்டமெல்லாம்

பொங்கிவழியுது

நீர்

(ப்ளம் கேக் , பக்க எண் 63)

கவி ஆனந்த்குமாரின் டிப் டிப் டிப் லிருந்து ப்ளம் கேக் வேறுபடும் சிறிய இடமாக காதல் கவிதைகளைக் குறிப்பிடலாம். இந்த இடத்தில் காதல் கவிதை என்பதை அதன் வைரல் குணம் காரணமாகக் குறிப்பிடவில்லை. ஆனந்த் இயல்பாகவே தன் கவிதைப் பாதையின் 'வழியாக' அதைத் தேர்வு செய்கிறார். அதன் உச்சபட்ச சாத்தியங்களைத் தொடுகிறார்.

நீ இன்னும் வளையல்கள் அணிகிறாய்

பற்றியும் பற்றாமல்

பிடித்திருப்பதுதான்

எப்போதும் உன்

கைகளைச் சூழ்ந்திருப்பதன் ரகசியமா


உன்னில் ஓர் பிடியுமில்லை

என சொல்லிக்கொண்டே

இருக்கவேண்டுமா


நழுவிவிழும் தோரணையில்

உன் கைநுனிவரை சென்று

துடிக்கவேண்டும் இல்லையா


இந்த நாடகத்தை நீ

குறைந்தபட்சம் பார்க்கிறாயா

சின்னச் சிணுங்கல்களை

முனகல்களை கேட்கிறாயா


இந்தத் தேர் செல்லும் திசை

உனக்குத் தெரியுமா


முன்னும் பின்னும்

காலத்தில் ஓடும்

அந்த ஓட்டைச்சக்கரங்கள்

அப்படி

எங்குதான் கூட்டிச்செல்கின்றன உன்னை

அதன் மீது நீ

இப்படி அமர்ந்திருப்பதற்கு

ஆனந்த்குமாரின் காதல் கவிதைகள் மேலோட்டமானவை அல்ல. முதலிலேயே குறிப்பிட்டது போல் தன் 'மனம்' வழியாக அவர் அதைத் தொடும் இடங்கள் அபாரமானவை. ஏதோ ஒருவகையில் எல்லா நல்ல கவிதைகளும் காதல் கவிதைகளாகவே அமைகின்றன. இங்கே காதல் என்றால் எல்லா வகைக் காதல்களும். ஆனந்தின் காதல்கள் குழந்தை மீது, இயற்கை மீது, வெளி மீது, பெண் மீது நிகழ்கிறது. 

மலைமேல் ஒரு பட்டாம்பூச்சி

மண்ணிற்கருகில்

பறக்கிறது



விரிந்து உதிர்ந்த மலரென

நகர் நடுவில் ஒரு மைதானம்


பொங்கி நிற்கும் நீரை

சுற்றிவரும் எறும்புகள் போல

அதிகாலையில்

அதன் ஆழத்தைப் பார்த்தபடி

எல்லையைச் சுற்றி நடக்கிறார்கள்

பெரியவர்கள்


ஒன்றுமில்லையெனக்

கிடந்த அந்த மலரை

இந்த விடுமுறைநாளில்

தொட்டது யார்


பூவெறும்புகளென உள்ளிருந்து

வெளிவந்துகொண்டே இருக்கிறார்கள்

பிள்ளைகள்

நுண்மையான விஷயங்கள் மீது ஆனந்தின் கவனம் குவியும் இடங்களில் பிறக்கும் கவிதைகளும் இத்தொகுப்பில் முக்கியமானவை. 

காரின் பின்சீட்டில்

திரும்பி நிற்கும் குழந்தை

கைகளை விரித்து

கண்ணாடியில் வைத்திருக்கிறது


பின்னால்

நீண்டு விலகிச்செல்லும்

சாலையின் இருபக்கமிருந்தும்

சுருங்கிச் சுருங்கி

அதன் கைகளில்

சேர்ந்துகொண்டேயிருக்கிறது

உலகம்


-


நான் அவளை

சிறுவிரல் பற்றி

அழைத்து வருகிறேன்


அதற்குள்

நீங்கள் இந்த

உலகை கொஞ்சம்

ஒழுங்குபடுத்தி வைக்கிறீர்களா?

கவிதா ஆற்றலின் வீச்சால் அடித்துச் செல்லப்படும் இடங்களை ஒரு கவிஞன் அனுமதிக்க வேண்டும். அது பெரும் பேறு. ஆனந்த்குமார் அப்படி அனுமதித்த இடங்கள் தொகுப்பில் நிறைய உள்ளன. 

அந்த ஆளுயர செம்பருத்திச் செடியில்

எத்தனையோ முறை நான்

பூப்பறித்திருக்கிறேன்

அதிலெதுவும் இப்போது

என்னிடம் இல்லை

மரம்தான் வைத்திருக்கிறது

இன்னும் அந்தப் பூவை

ஒவ்வொரு நாளும் 

அதை மலர்த்திக் காட்டி

என்னை அழைக்கும்

ஒவ்வொரு முறையும்

நான் பறித்துவிட்டதாய்

நினைக்கையில்

நீர்ப்பறவைபோல மூழ்கி

மறுநாள்

மற்றோரிடத்தில் பூக்கும்

இன்னும் நான்

பறித்திடாத பூ

தொகுப்பில் பல கவிதைகள் மனதில் நிலைப்பவை. நான் தினமும் வேலைக்குச் செல்லும்போது என் இரண்டு வயது மகனை ஸ்கூட்டரில் ஒரு ரவுண்டு அடித்து இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அப்படி பிரிந்து செல்லும்போது மனம் இலேசாகக் கனக்கும். உடனே நான் மனதிற்குள்ளேயே இறைவா என் மகனை உன் பொறுப்பில் விட்டுப்போகிறேன். பத்திரமாக பார்த்துக்கொள் என்று வேண்டுவேன். நாட்கள் கூடக் கூட பட்டியல் நீண்டுகொண்டே போனது. மகனுடன் மனைவி இணைந்தார், அம்மா இணைந்தார், அண்டை வீட்டார் இணைந்தனர், இறுதியாக உலகோரெலாம் இணைந்தனர். நான் எழுத நினைத்த இந்தக் கவிதையை ஆனந்த் இத்தொகுப்பில் அழகான கவிதையாக எழுதியுள்ளார்.

தனியான பிள்ளைகளே உறங்குங்கள்

நான் குழந்தைகளை

அணைத்துறங்கும் இவ்வேளை

கொஞ்சம் கையை நீட்டி

இந்த நகரையும்

அணைத்துக்கொள்கிறேன்


இருளோ

அன்னையைப்போல்

நமை சேர்த்தணைத்துக்கொள்கிறது

இன்றைய ஒளியின் சிறுமைகளை

நீவி அழிக்கிறது

அதன் கனத்த கரங்கள் 


இவ்வளவு ஒட்டி

நாம் உறங்குகையில்

இனி

இடையில் எதுவும் புகாதேதான்


இன்னும் நெருங்கிப்படுங்கள்

குழந்தைகளே

மரங்களே

கடல்களே

இதே போல இந்தத் தொகுப்பின் இன்னொரு கவிதையும் நான் எழுத விரும்பிய ஒன்று

எனது வேலை

எனது வேலைக்கு

நீளமான உறுதியான கைகள்

எட்டு பக்கமும் கால்கள்

வேட்டை விலங்கின் கண்கள்

இரையின் காதுகள்

ஆனாலும்

சின்னப் பிரிவுக்கு வாடும்

வீட்டுச்செடியின் வாசனை அதற்கு


ஒருநாள் அதன்

உடலிற்குப் பொருந்தாத

இரண்டு குட்டிச்சிறகுகள் அதன்மீது

முளைத்திருப்பதைக் கண்டேன்

அதனிடம் சொன்னதும்

கிக்கிரி பிக்கிரியென சிரிப்பு

ஒரே துள்ளாட்டம்;

பறந்து பறந்து பார்த்தது

ஒரு கோழியைப் போல

கத்தரித்துக் கத்தரித்து நான்தான்

அதை பத்திரமாக

பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது


வெகுநெடுநாட்கள் கழித்து

வேலைக்குள் மூழ்கியிருந்த

ஒரு மழைநாளில்

சட்டென அது

தோகைவிரித்து ஆடத்தொடங்கியது

தொகுப்பில் மூன்று சமர்ப்பணக் கவிதைகள் உள்ளன. சம்பிரதாய சமர்ப்பணங்களாக இல்லாமல் நல்ல கவிதைகளாவும் அமைகின்றன அவை.

மதுர மலர்

இரண்டு டீயில்

ஒன்று சர்க்கரை இல்லாமல்.


இப்போது

எங்கள் முன் அமர்ந்திருக்கின்றன

ஒன்றையொன்று காட்டிக்கொடுக்காமல்


வெப்பம் அவிழும்

ஆவியில் மட்டும் சின்ன

நளின வேறுபாடு


நாங்கள் தேர்ந்தெடுத்தோம்

அவரவருக்குப் பிடித்த

ஒரு வசீகர நடனத்தை


ஒரு நொடி

நிலைகுலைந்தன

உலகின் மதுர விகிதங்கள்

செடிமாற்றிப் பூத்தன இரு

சின்னஞ்சிறிய மலர்கள்.

(கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு) 

தொகுப்பில் குட்டைச் சேற்றின் கேள்வி என்றொரு கவிதை உள்ளது. இதை நிறைய முறை யோசிக்க மட்டுமே செய்திருக்கிறேன். ஆனந்த் அதை அழகான கவிதையாகவும் எழுதியிருக்கிறார். 

குட்டைச் சேற்றின் கேள்வி

முன்பு 

பத்தாம் வகுப்பு பாடம் 

தீவிரமாய் போய்க்கொண்டிருக்கையில்  

அவன் நினைத்தான் 

இப்போது ஆறாம் வகுப்பில் 

சேர்ந்து விட்டால்  

எல்லாக் கேள்விகளுக்கும் 

தனக்கு விடை தெரியுமென்பதை 


அவன் முட்டி மண்டையுடைத்து 

எம்பிக் காலுடைத்த 

எல்லாப் சுவர்களையும் 

ஒற்றை எட்டில் 

தாண்டி வந்துவிடலாம் என்பதை 


சட்டென பாடம் நிறுத்தி 

அன்றில் இழுத்து வந்து 

பத்தாம் வகுப்பு ஆசிரியர் 

ஒரு கேள்வி கேட்டார் 

அவன் அங்கே நின்று 

முழித்துக்கொண்டு இருக்கிறான்


இன்று அவனுக்கு

அந்தக் கேள்விக்கு 

தெள்ளத் தெளிவாக பதில் தெரியும்  

மேலும் அவனுக்கு 

நிறைய பதில்கள் தெரியும் 

கேள்விகள்தான் பின்னால் கிடக்கின்றன 


யோசித்துக்கொண்டே 

நடந்து கொண்டிருந்தவனை

தடுத்து நிறுத்தியது 

ஒரு சாலையோர குட்டை 


பார்த்து பார்த்து என்றது 

பத்தாம் வகுப்பு 

குதி குதி என்றது 

ஆறாம் வகுப்பு 


அத்தனை பதில்களையும் தூக்கிக்கொண்டு 

இதோ அவன்

குட்டைச் சேற்றின்மேல்

பறந்து கொண்டிருக்கிறான் 

கவிஞர் வெய்யில் ஒரு மொழிபெயர்ப்பு கவிதையைக் குறிப்பிட்டு அதில் வருவது போல "கார்" என்கின்ற வாகனம் ஏன் தமிழ்க்கவிதையில் இயல்பாக வரவில்லை? ஏனென்றால் கவிஞர்கள் யாரிடமும் கார் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தத் தொகுப்பின் பல கவிதைகளில் கார் இயல்பாக வருகிறது. 

ஒரு புகைப்படக்காரனும் சரி கவிஞனும் சரி இருவருமே ஒரு தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். அத்தருணம் வந்ததும் அதைப் பிடித்துவிடுகிறார்கள். ஆனந்த்குமாரால் சரியான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பாக ப்ளம் கேக் தொகுப்பைச் சொல்லலாம். 

ஆடை கண்ணாடியில் ஓடும் நதி, பீரோ கண்ணாடியில் மிதக்கும் மேகம், மீதி அப்பாவை விரும்பும் அக்கி, சிந்திக் கிடக்கும் பருக்கை குட்டிக்கரணம் அடிப்பவனுக்கு நட்சத்திரமாவது, மத்தியத்தை வெட்டி விடுபவள்,கடை அடைப்பவரின் சித்திரம், சிக்னலில் காத்திருக்கும்போது நிகழ்பவை, ஒரு மலரைத் தொடுவது எப்படி, பூமியுடன் விளையாடும் சிறுமி, மழை பெய்யாத ஊரைப் பார்க்கும் மழை, இயேசுகுட்டி... அலுவலகத்திற்கு வழிதவறி வந்த பள்ளிக்கூட தின்பண்ட டப்பா, கலர் டிரெஸ் குழந்தைகள் என தொகுப்பு முழுக்கவே ஒரு ஞாயிற்றுக்கிழமைத்தன்மை கரைந்து கிடந்து இனிக்கிறது. 

***

ப்ளம் கேக் வாங்க : 

தொடர்புக்கு - 9789878967 (சுரேன், வான்கா பதிப்பகம்)

***

ஆனந்த் குமார் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:
Powered by Blogger.

கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி

ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (11) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (226) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (1) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (11) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (226) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (1) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive