குறிப்பாக, இரண்டு
காரணங்களுக்காக திருக்குறளைப் படிப்பது எனக்கு முக்கியமானதாக இருந்தது. ஒன்று,
தமிழர்கள் உதட்டளவில் இந்த நூலுக்குக்
கொடுக்கும் அளவுக்கு அதிகமான புகழ்ச்சி; ஆனால் அதற்குரிய சீரிய, ஆழமான
ஆய்வுகள் அதிகமாக செய்யப்படவில்லை. இரண்டாவது, இதுவொரு அறநெறி போதிக்கும் நூலாக இருக்கும் அதே
சமயத்தில் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகவும் இருப்பது. லட்சியவாத எழுத்தின்
மீதான மதிப்பு இன்றைய காலத்தில் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான லட்சியவாத எழுத்தாளர்கள் தங்கள் சிறிய
படைப்புகளால் தோல்வியடைந்த எழுத்தாளர்களாக இருப்பதையே வரலாறு நமக்கு காட்டுகிறது.
லியோ டால்ஸ்டாய்
நிச்சயமாக ஒரு நவீனக் காலத்து விதிவிலக்கு. அவ்வாறே திருவள்ளுவர்
என்னளவில் பண்டைய காலத்து விதிவிலக்கு. தங்கள் அறவுணர்வை சிறந்த இலக்கியமாக
வெளிப்படுத்திய மிகச்சில அறநெறி எழுத்தாளர்களில் ஒருவராக திருவள்ளுவரைக் கருதலாம்.
திருக்குறளை
முதன்முறை படித்தபோது, அந்நூலில்
ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே சிறந்த
கவிதைப்பண்புடன் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் தொடர் வாசிப்பில் என் கருத்து
மாறியது. தற்போது ஒரு பங்கை வேண்டுமானால் நிராகரித்துவிடலாம், மிச்சம் ஐந்தில்
நான்கு பாகம் சிறந்த கவிதைகளாகச் சொல்லத்தக்கவை என்ற நிலைக்கு வந்திருக்கிறேன்.
இன்னும் கொஞ்ச காலம் இந்நூலுடன் செலவழித்தால் சற்றுக் குறைவாகத் தோன்றிய பாகமும்
என் கருத்தை மாற்றிச் சிறந்தவையாகத் தோன்றக்கூடும் என நினைக்கிறேன்.
கற்றறிந்த
உரையாசிரியர்கள் தங்கள் விளக்கவுரைகளால் குறளில் உண்டாக்கிய சிக்கல்களிலிருந்து
அப்பிரதியைப் பிரித்து எடுப்பதை எனக்கே ஒரு விளையாட்டு போலச் செய்து பார்த்தேன்.
உரையாசிரியர்கள் கற்றவர்களாக இருந்தாலும் எனக்கு அசௌகரியமாய் இருந்தனர். அவர்களை
ஒதுக்கிவிட்டு கவிஞனின் உள்ளத்திலிருந்து குறளை அணுக முயன்றேன். நேரடியாக
சொற்களின் வழியாகவும் செறிவுமிக்க அதன் சொற்றொடர்கள் வழியாகவும் அணுகினேன். பத்து
வருடங்களுக்கு முன்பு இவ்வாறு எனக்கு நானே உரைநடை வடிவில் செய்துகொண்ட மொழியாக்கம்
மிகவும் களிப்பூட்டும் பயிற்சி அனுபவமாக இருந்தது.
பிறருக்குத்
தீங்கு செய்யாமையை ஒட்டுமொத்தமாக வலியுறுத்துவது, யாரையும் காயப்படுத்தாமல் அஹிம்சை வழியைக் கடைபிடிப்பதன்
மேன்மை, துறவு நெறியின்
சிறப்பு போன்றவற்றை குறள் தொடர்ந்து எடுத்துரைப்பதைக் காணலாம். இதுபோக, காலக்கணக்கு
மற்றும் இதரக் கருத்துகளுக்கு நான் சார்த்திருக்கும் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற
அறிஞர்களின் கருத்துப்படியும் குறளை இயற்றியவர் பிறப்பாலோ அல்லது நம்பிக்கையின்
அடிப்படையிலோ ஒரு சமணராக இருக்கலாம் என்கிற வலுவான எண்ணம் எனக்கு உள்ளது. தமிழ்
அறிஞர்களைப் பொறுத்தவரை, என் கருத்து என்னவென்றால், இலக்கியத்தைக் காட்டிலும் மதம் சார்ந்த பற்றுகளே
அவர்களின் இலக்கிய நிலைப்பாடுகளைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. சங்க
இலக்கியத்தில் சமணர்களின் பங்களிப்பு வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதைவிட மிகவும்
பெரிது என்றே நான் நினைக்கிறேன். மேலும் சமணர்கள் அன்றைக்கு நிலவிய சமஸ்கிருத மைய
இலக்கியப் போக்குகளை எதிர்த்து நடத்திய போராட்டமும் தமிழ் மொழி தன் பேச்சுவழக்கு
எனும் நிலையிலிருந்து இலக்கிய நிலைக்கு உயர முக்கியக் காரணியாக இருந்திருக்கலாம்.
இவை அனைத்தும் இப்போதைக்கு ஆராய்ச்சிக் கருத்துகளே; தெளிவான ஆதாரங்களாக இன்னும் உருவாகவில்லை.
இந்த
நிலைமையில்தான் பாரதிய ஞானபீடத்தின் ஆலோசகர் திரு எல். சி. ஜெயின், வள்ளுவரின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை
வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கினார். தினசரி வாழ்வில் குறள் வலியுறுத்திய
அஹிம்சை, அதன் சமூக மற்றும்
மனிதநேயப் பார்வை ஆகியவற்றைத் தொகுத்து நோக்கினேன். குறளின் பல்வேறு அதிகாரங்களின்
ஊடே மீண்டும் மீண்டும் வாசித்தபோது, நாளுக்கு நாள் இன்னும் தெளிவாக நான் உணர்ந்தது என்னவென்றால், கவிஞர் சொல்வதான
மானுடப் பொதுநெறி, சமண மதப்
பின்னணியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்பதே.
பேராசிரியர் அ.
சக்கரவர்த்தி, தன் முடிவுகளின்படி, குறளின் ஆசிரியர் ஸ்ரீ குந்தகுந்த ஆச்சாரியர்
என்றும் அவரது சீடர் காஞ்சிபுரம் பகுதியின் அதிகம் அறியப்படாத சிற்றரசரான சிவகுமார மஹாராஜா என்றும்
அடையாளப்படுத்தியுள்ளார். இது மிகைப்படுத்தப்பட்டது போலத் தோன்றினாலும் அவரது
ஆய்வு முடிவுகளை முழுக்கச் சாத்தியமற்றவை என்று சொல்லிவிட முடியாது. சமண மரபு பல
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இதனுடன் குறளிலிருந்து அதிகமாக மேற்கோள்
காட்டப்பட்ட பெரும்பாலான நூல்கள், சமண நூல்கள் என்பதையும் இணைத்துப் பார்க்கும்போது திருவள்ளுவர் ஒரு சமணர்
என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
நான்
சக்கரவர்த்தியின் அறிமுகத்தில் இருந்தும் பிற முக்கியக் கட்டுரைகளிலிருந்தும் அதிகமாக
மேற்கோள் காட்டியிருக்கிறேன். என் பார்வையில் வடக்கு-தெற்கு என்றோ,
தமிழ்-சமஸ்கிருதம் என்றோ பிரிவினைப் பார்வைகளைக் கொண்டிருப்பதைக் காட்டிலும்
திருவள்ளுவரை ஒரு கவிஞராகவும் உலகை நோக்கி சில நித்திய உண்மைகளைப் பாட
முயன்றவராகவும் காண்பதே குறளுக்குச் செய்யும் நியாயமாக இருக்கும். அதன் அறநெறிப்
பார்வை சமணத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் குறள் நிச்சயமாக மதம் அல்லது அதுபோன்ற வேறெந்த குறுகிய
பிரிவுக்குள்ளும் அடங்கிவிடாத புத்தகம். அது அன்பைப் போல விசாலமானதும் கடலைப் போல அகன்றதும் வானத்தைப் போல
உயர்ந்ததுமான ஒன்று. பண்டைய நூலாக இருந்தாலும், நவீன மனிதன் விரும்புகிற அளவுக்கு என்றும்
நவீனத்தன்மையுடன் இருப்பதே அதன் மிகப் பெரிய கவர்ச்சி.
குறளிடம் ஒவ்வொரு
மனிதனுக்கும் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. அது கவிதையாகவோ ஞானமாகவோ
இருக்கலாம். மனிதராய் பிறந்த அனைவரும் அதன்வழி பயனடைய முடியும். உலகின் சிறந்த
அறநெறி நூல்களின் வலிமை இதில்தான் உள்ளது. அவ்வகையில் உலகுக்குக் கிடைத்துள்ள
மிகச்சிறந்த அறநெறி நூல்களில் ஒன்றாக குறள் இருந்தாலும் உலகின் பெரும்பகுதி
அதுபற்றிய அறிமுகம் இல்லாமலே உள்ளது. தேவையான விமர்சன ஆழத்துடன் உலக அரங்கில்
குறள் முன்வைக்கப்படாததே அதன் காரணம்.
க. நா. சுப்ரமண்யம்
புது தில்லி
தமிழ்ப்
புத்தாண்டு நாள், 1986
***
[க. நா.
சுப்ரமண்யம் திருக்குறள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய Tiruvalluvar And His Tirukkural (1987) என்ற
நூலின் முகவுரை. தமிழில், டி. ஏ. பாரி.]
***
க.நா.சுப்ரமண்யம் தமிழ் விக்கி பக்கம்:
டி.ஏ. பாரி தமிழ் விக்கி பக்கம்:
***







0 comments:
Post a Comment