மெளலானா ஜலாலுத்தின் முகம்மது ரூமி என்கிற இறையியலாளர் ஒரு மாபெரும் கவியாக மலர்ந்தது அவருடைய நண்பரும் வழிக்காட்டியுமான ஷம்ஸின் வருகைக்கு பின். ஷம்ஸ் இ தப்ரிஸ் ஒரு சூஃபி தத்துவ ஞானியாக அறியப்படுகிறார். ஷம்ஸ் உடனான ஆழ்ந்த நட்பும் ஒரு தொடர் உரையாடலும் ரூமியை ஆன்மிகமான அடுத்த தளத்திற்கு கொண்டுச் சென்றது . ரூமி தன் ஆன்மாவை கண்டுக்கொண்டார் அதில் கவிதையை ஒரு சுடராக ஏற்றி அவ்வொளியில் காதலையும் இறைவனையும் ஒருங்கே வழிப்பட்டார்.
ரூமியின் கவிதைகளை இரு தளங்களிலாக வாசிக்க முடியும். ஒன்று நேரிடையான காதல் கவிதைகளாக இன்னொன்று ஆன்மீகமாக. இரண்டுமே ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தும் இருப்பதுண்டு. காதலில் உள்ள ஏக்கம் , பிரிவுத்துயர் ஆன்மீகத்திலும் உள்ளது. ஆன்மீகத்தில் உள்ள தன்நிலை அழிதல், அர்ப்பணிப்பு காதலிலும் உண்டு. இரண்டுமே சுயத்தை கொடையாக கேட்பது . இரண்டிலும் பேரின்ப நிலையை அடையலாம், தீவிர தனிமையிலும் உழலுலாம். ரூமியின் கவிதைகள் இவை எல்லாவற்றையும் பேசுவது.
திரு. என். சத்தியமூர்த்தி மொழிப்பெயர்ப்பில் ரூமியின் கவிதைகள் “ தாகங்கொண்ட மீனொன்று” என்ற தொகுப்பாக வெளி வந்துள்ளது. அதில் உள்ள நீள் கவிதை “ எலியும் தவளையும்”
எலியும் தவளையும் காதலர்கள். எலியும் தவளையும் காதலிக்க முடியுமா? ஏன் முடியாது அல்லது ஏன் கூடாது? எலி நிலத்தில் வாழ்வது தவளை நீரிலும் நிலத்திலும். ஆனாலும் அவற்றிற்கு அதை பற்றி எல்லாம் அக்கறையும் கவலையும் கிடையாது. பார்த்த முதல் நொடியில் இருந்து காதலிக்க துவங்குகிறார்கள்..சந்திக்க, உரையாட அவர்களுக்கு ஆன ஒரு நேரமும் இடமும் இப்பிரபஞ்சத்தில் கிடைத்துவிடுகிறது. இரு உயிர்கள் எவ்வித கணக்கும் துளி கசப்பும் இல்லாமல் உறவாடும் போது அங்கே கடவுள் வந்து அருகே அமர்ந்துக்கொள்கிறார். எலிக்கு நினைத்த நேரத்தில் எல்லாம் தவளையைக் கண்டு உரையாட முடியவில்லை என்ற ஆதங்கம் வருகிறது. தன் குரல் கேட்காத தொலைவில் எங்கோ நீருக்குள் இருப்பதாய் துயர்க் கொள்கிறது. குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டுமே சந்திக்க முடியும் என்பது எத்தனை பெரிய அநீதி?.. தினம் அரை மணி வாரத்தில் ஒருமுறை இதுவெல்லாம் போதது நமக்கு என்கிறது.
“ மீன்களை போல நம்மைச் சுற்றி பெருங்கடல் அல்லவா இருக்க வேண்டும்” என்கிறது. எலியையும் தவளையையும் போல எத்தனை காதல்கள் இருக்கின்றன இங்கே. ஒருவர் வாழும் நீரில் ஒருவர் சுவாசிக்க முடியாது, குறிப்பிட்ட எல்லையை தாண்டி செல்ல இயலாது. நேரமும் காலமும் அளவிட்டு தான் பகிர முடியும்..இன்னும் ஒரு ஐந்து நிமிடம் என்று இறைஞ்சும் கண்களை எங்கேயாவது சந்தித்திருப்போம். எந்த தர்க்கத்திலும் இங்கே இருக்கும் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் பொருந்தாது முட்டி மோதி திகைக்கும் எலியும் தவளையும் ஏராளம். ஒரு கட்டத்தில் அதில் ஒருவர் இங்கே இருப்பவற்றில் சிக்கி குழம்பும் போது ஒருவர் இப்படி கேட்க வேண்டியிருக்கிறது .
“ உனை நீ
அறியும் வழக்கம்
உள்ளதா உனக்கு?
விவாதமும் வேண்டாம்
சாதுர்யமான பதிலும்
வேண்டாம் இங்கு”.
அத்தொகுப்பில் இன்னொரு கவிதை:
காதலிப்பதை எவ்வாறு கற்றுக்கொள்ளுவது? இன்னொரு உயிரை காதலிப்பது எளிதாக தோன்றலாம் ஆனால் எதிரில் இருப்பது அத்தனை தூயதாக, களங்கமற்ற ஆன்மாவாக, உயரியதாக அமைந்து விட்டால்..ஒளிவிடும் அரிய கருமுத்தை உள்ளங்கையில் ஏந்துவது எப்படி? அகம் நடுங்காமல் தீண்டுவது எங்கனம்? வழியும் தீர்வும் அங்கேயே உள்ளது. பொங்கி பெருகும் உன் ஒளியால் நான் காதலிக்க கற்றுக்கொண்டேன். மேலும் கவிதையை நான் அடைந்தது உன் அழகினால். எப்போதும் என் நெஞ்சில் நின்றாடும் நின் பாதங்களை பிறர் காண இயலாது. இதயத்தில் பெருகும் இசையில் சுழலும் உன் நடனத்தில் நான் காண்கிறேன் கலையாகி வந்த ஒன்றை.
உனது ஒளியில்
கற்றுக்கொள்கிறேன்
எப்படிக் காதலிப்பதென.
உனது அழகில்
எப்படிக் கவிதை செய்வது
என்பதையும்.
எனது நெஞ்சினுள்
நடனமிடுகிறாய் நீ.
அங்கே காண்பதற்கில்லை
எவரும் உன்னை.
ஆயினும்
காண்கிறேன் நான் அவ்வப்போது
அந்த தரிசனமே
இந்தக் கலையாகிறது.
நீள் கவிதைகளில் உள்ள சில பகுதிகளை தனிக் கவிதைகளாவே வாசிக்க முடியும். அத்தகைய ஒன்று..
“நிலவிற்கு வழி
வாசல் அல்ல
சாளரமே.”
ஆன்மாவின் வாசல் இதயமாக இருந்தாலும் அதன் சாளரம் கண்களாக உள்ளது. காதல் அவ்வழியே உள்ளே நுழைந்து வாசலை அடைந்து முழு இல்லத்தையும் ஆள்கிறது.
***
0 comments:
Post a Comment