ஆழத்தில் மணக்கும் மலர்கள் - இசை

கல்பற்றா நாராயணன் எழுதிய இக்கட்டுரைகள் ‘அகழ்’ இதழில் வெளியான போதே பரவலான வாசககவனம் பெற்றவை.  இதில் மூன்று கட்டுரைகள் புனைவு சார்ந்தவை. ஏனைய யாவும் கவிதை  குறித்து எழுதப்பட்டவை. புனைவு குறித்து எழுதப்பட்டவையும் தனது  கவித்துவச்  செறிவால் கவிதையைப் பேசுவது போன்றே மயக்கம் தருகின்றன. மேலும் அந்த மூன்று கட்டுரைகளும் சில பிரமாதமான கவிதைகளின் ஊற்றுமுகமாய் இருக்க வாய்ப்புள்ள கட்டுரைகள். கவிஞர்களின் கட்டுரைகள் அவை.  ஆகவே இந்நூலை கல்பற்றா,  கவிதை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு என்று சுட்டவே விரும்புகிறேன்.

‘விரித்தால் சுவை குன்றுவது கவிதை’   என்பதே பொதுவான அபிப்ராயம். ஆனால் விரித்து விரித்து மேலும் சுவை கூட்டும் கட்டுரைகள் இவை. ஒரு கவிதையை எவ்வளவு நீட்டிப் பார்க்க முடியுமோ அவ்வளவு நீட்டிப் பார்க்கிறார் கல்பற்றா. அதாவது மனித குல வரலாற்றில் எவ்வளவு நீளம் போகுமோ அவ்வளவு நீளம் நீட்டிப்பார்க்கிறார். இந்தக் கட்டுரைகளை வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது…” உலகிலேயே மிக நீளமானது கவிதைதான்  போல?”  

கவிதை என்றால் என்ன  என்கிற பழம்பெரும் கேள்வி பேசித் தீராதது. 

ஆயிரம் கவிதைகள் எழுதி முடித்து விருதுகள், பாராட்டுகள் என்று வாங்கி அடுக்கி வைத்திருக்கும் ஒரு கவியும், அந்தக் கேள்வியின் முன்னே ஆர்வம் கொப்பளிக்கும் ஓர் இளம் மாணவன்தான். ஏற்கனவே சொன்ன பதிலை கொஞ்சமே கொஞ்சமாக மாற்றிச்  சொன்னால்,  அதைப் புதிது போன்றே  கேட்பவன் . . ஏற்கனவே சொன்ன பதிலை அப்படியே திருப்பிச் சொன்னால், அதையும் புதிது போன்றே கேட்பதில் வல்லவன் . ஒவ்வொரு முறையும்  ஒரு ரகசியத்தைக்  கேட்கும் கூர்த்த  கவனத்துடனும், இன்பத்துடனும் அதற்குச் செவி மடுக்கிறான் அவன்.

“ஒரு வகையில் கவிதை என்பதே கழிவிரக்கத்தின் வெளிப்பாடு தானோ? செய்ய வேண்டியதைச்  செய்ய வேண்டிய தருணத்தில் செய்யாமல் இருந்தவனின் மொழியா?.....பெரும்பாலான கவிதைகளும் ஒரு வகையான பெருமூச்சுக்கள்தான்”

“சொல்லா முடியாததைச் சொல்வது என்கிற மொழியின் புராதன கடமை கவிதையில் ஒவ்வொரு முறையும் நிறைவேற்றப்படுகிறது”

“கவிதையின் வடிவில் அல்லாமல் வேறெப்படியும் சிலவற்றை வெளிப்படுத்த முடியாது”

“மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்பு போல நிறைவின்மை கொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லை மீறலாக கவிதையை நாம் யோசித்துப் பார்க்கலாம்”

கவி புனையும் கட்டுரைகளுக்கென்றே ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு. அந்தக்  கிறங்கடிக்கும் தன்மை வியாபித்துள்ள எழுத்துக்கள் இவை. கட்டுரையின்  சில வரிகளை தீவிரமாக மனம் கொண்டு தொடர்ந்தால் செறிவான இன்னொரு கட்டுரை பிறக்கும் வாய்ப்புண்டு. இதில் கிடைக்கும்  தொன்மக் கதைகளும் சுவாரஸ்யமானவை. சில வரிகள் மனித குல வரலாற்றின் கவித்துவமான திருப்பங்களைத்  தொட்டுச் சுடர்கின்றன.  

“எப்போது என்று உறுதியாகச் சொல்லமுடியாத தொல் பழங்காலத்தில் , இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப் பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை  / ‘ சுய’ ரூபத்தை நீர்ப் பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத் தொடங்குகிறான். அது நீர்ப் பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வது போல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச் சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம்…

“இரவில் நெருப்பைச்  சூழ்ந்து அமர்ந்திருத்தலிருந்துதான் கதையும், கவிதையும், இசையும், நடனமும், தத்துவசிந்தனையும் வரலாறும், அறிவியலும் உருவெடுத்தது”

கவிஞர் உடற்பயிற்சியை  ‘பரிகாசத்திற்கு உரிய விஷயம்’ என்கிறார். அதனால் பலன் அடைந்தவன் என்பதால் என்னால் அப்படிக் கருத முடியவில்லை. ஆனால் அவர் சொல்வது போன்றே நடைப்பயிற்சிக்கும் எழுத்திற்குமான உறவை நான் உறுதியாக வழி மொழிகிறேன். என் பெரும்பாலான கவிதைகள் காலை நடையில் எழுதப்பட்டவைதான். “காலை நடை முடித்து வீட்டிற்கு திரும்புவது புறப்பட்ட நான் அல்ல” என்கிறார். நானும் அப்படியே உணர்ந்திருக்கிறேன். ஆயிரம் துரதிர்ஷ்டங்களுக்கு மத்தியிலும் அள்ள அள்ளத் தீராத பொக்கிஷமாக வெளி திறந்து விரிந்து  கிடக்கிறது. 

கல்பற்றா தீவிர விராட் கோலி ரசிகர்.  கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஹாக்கி, வாலிபால், கபடி , கூடைப்பந்து என எல்லா விளையாட்டிலும் கோலியை “ Non playing captain “ஆக நியமிக்க வேண்டும் என்று அனுஷ்கா ஷர்மாவோடு சேர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்குமளவு ரசிகர். இந்தக் கட்டுரைகளை கோலியின் ஸ்டைலான பவுண்டரிகள் மற்றும் ஆக்ரோஷமான சிக்‌ஷர்கள் என்று வர்ணனை செய்தால் நிச்சயம்  அவர் மகிழ்வார். அப்போது அவர் முகத்தில் தவழும் அந்தப் புன்னகையையே தமிழின் பரிசாக அவருக்குச்  சூட்டி மகிழ  விரும்புகிறேன். 

படைப்பாளி படைப்புக்கான ஊக்கம் பெறும் வழியும் அவ்வளவு துலக்கமாக  இல்லை. கவி கண்ணீரையும் இரத்தத்தையும் சரிவிகித சமானத்தில் கலந்து வார்த்தாலும், சமயங்களில்  அங்கு கவிதைக்கு பதிலாக வேறொன்றே  தோன்றி நிற்கும்.  அப்போது அவன் எவ்வளவு பாவம் என்பதை அவன் மாத்திரமே அறிவான்.

“சச்சின் டெண்டுல்கர் சதம் அடித்த நாட்களில், மிகச் சொற்பமான ரன்களில் வெளியேறிய நாட்களில் , நான் ஆற்றிய மேடையுரைகளின் வரைபடம் உயர்வு தாழ்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்… பொறுமையில்,  படைப்பூக்கத்தில், விழிப்பு நிலையில் எல்லாம் எனக்குச்  சிறந்த விளையாட்டு வீரர்கள் தூண்டுதலாக இருந்திருக்கிறார்கள்..”  என்கிறார்.   ஜனரஞ்சக சினிமாக்கள் என்று எள்ளப்படும் சினிமாக்களிடம் இருந்து கூட   நான் தூண்டுதல் பெற்றிருக்கிறேன்.  கார்த்திக் சுப்புராஜின்  “ பீட்சா” படம் எனக்குப் பிடித்திருந்தது. அதன் சுவாரஸ்யம் புத்துணர்ச்சி அளித்தது.  அந்தப் படம் பார்த்து வந்த மாலையில்தான் “ லியூகோடெர்மா கன்னியின் விநாயகர்” என்கிற கவிதையை எழுதினேன்.  இப்போதும் எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலில் அது உண்டு. அந்தப் படத்திற்கும் கவிதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  இல்லை, அப்படி ஒரேயடியாக சொல்லிவிட முடியவில்லை. அந்தக் கவிதையின் புனிதத்தில் தூசு படிந்துவிடும் என்று இத்தனை நாளும் இந்த ரகசியத்தை மறைத்து வந்தேன். 

“கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள்” என்கிற கட்டுரையில் குறிப்பிட்ட கவிதைக்கு வெளியே மேலும் சுதந்திரமாகும் , மேலும் காத்திரம் கொள்ளும் வரிகளைக் குறித்து எழுதியுள்ளார்.  கம்பனில் ஒரு வரி உண்டு “ கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்பதென் கொலோ?”. சீதை தன் நெஞ்சிற்குச்  சொல்வதாய் அமைந்த எளிய காதல் கவிதை. இராமனைக்  கண்ட மாத்திரத்திலேயே அவனை இறுக அணைத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியல்லாமல் அவனைக்  கடந்து செல்ல விட்டுவிட்டு இப்போது புலம்பித் தவித்து என்ன பயன்? என்று கேட்கிறாள். இவ்வரி அந்தக் கவிதைக்குள் அப்படியொன்றும் ஆகச்சிறந்த வரியல்ல. ஆனால் அவ்வரியை அக்கவிதையிலிருந்து விடுவித்து வெளியே கொண்டு வந்து வைத்தால்,  காலாதி  காலமாக  மனிதன் தவற  விட்டுவிட்டுத்  தவிக்கும்   அத்தனை துன்பங்களையும்  கோர்த்துக் கட்டிவிடுகிறது  இவ்வரி. 

இந்த நூலின் வழியே   20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்  மலையாளத்தில் செல்வாக்கு செலுத்திய பல கவிஞர்களின் முக்கியமான வரிகள் தமிழுக்கு அறிமுகமாகின்றன. அவ்வரிகளின் வழியே அவர்களும். மலையாளக்கவி பி. ராமனுடனான ஒரு உரையாடலில் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மலையாளத்தில் பல முக்கியமான கவிகள் தோன்றியதாகவும், ஆனால் அவர்கள் எல்லாரும் கடினமான   செய்யுள் வடிவங்களில் எழுதியதால் அவற்றை பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியாமல் போய்விட்டது என்றும் வருத்தப்பட்டார். அந்த மலையாளக் கவிதைகளின் வரிகளை வாசிக்கையில்.  அதே காலத்தில் தமிழில் செய்யுள்  வடிவில் இயற்றப்பட்ட கவிதைகளுக்கும் அவற்றுக்குமான வேறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும்  மலையாளக் கவிதைகள்  நவீனக் கூறுகளுடனேயே வெளிப்பட்டிருக்கின்றன. மனித அகத்தை ஊடுருவிப் பார்ப்பதையே  அதிகம் விரும்பியிருக்கின்றன. குறிப்பாக அக்கவிதைகளில் உள்ள கசப்பையும்  இருட்டையும் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் நாம் ஒரே ஒரு பாரதியோடு வாழ்ந்து வந்துள்ளோம். அவரும் ‘ அன்புசெய்தால் போதும் பாடுபடாமலேயே பயிர் விளையும்’ என்று பாடும் அளவு பொன்னுலகப் பித்தராக  இருந்திருக்கிறார்.  

இத்தொகுப்பு  முழுக்கவே  இருள் நிரம்பியுள்ளது. 

“குற்றம் மீதான ஈர்ப்பு எவ்வளவு அபாயகரமானது! ஆனால் எவ்வளவு உண்மையானது.”

“நம் ஒழுக்கநெறிகள் அசைந்தபடியே உள்ள ஒரு கல்லில் அஸ்திவாரம் அமைத்து ஆலயம் போல நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது”

“எந்தப் பசியும் ஒன்றை விட மற்றது எளிமையானது அல்ல”

“தொன்மங்களும், மூட நம்பிக்கைகளும் மனிதனுக்கு அளித்த பாதுகாப்புணர்வை வரலாற்றாலும் அறிவியலாலும் அளிக்க முடியவில்லை”

“உறக்கம் ஒரு பிழையான செயல் அல்ல. ஆனாலும் அதில் தன்னலம் இருக்கிறது. ஒரு வகையான கண்டுகொள்ளாமை உண்டு. பாவம் உண்டு. நல்ல தூக்கம் என்ற சொல்லில் மேலே சொன்ன எல்லாமே உண்டு”

“மாண்பான நபர்கள் கொலையை கனவு காண்கிறார்கள். அப்படி அல்லாதவர்கள் அதை நிகழ்த்துகிறார்கள்”

“வெண்மை எவ்வளவு அருவருப்பானது. நன்நம்பிக்கை எவ்வளவு பொய் ஆனது இல்லையா?”

கும்மிருட்டு என்றாலும் இவை ஒரு கவி கட்டாயம் காண வேண்டிய இருட்டல்லவா? கவிதை எரி மூண்டு எழும் இருட்டல்லவா?

கொஞ்ச காலமாக எனக்கு ‘சித்தார்’ பைத்தியம் பிடித்திருந்தது. எப்போது  காரைக் கிளப்பினாலும்   அதை அனுஷ்கா ஷங்கர்தான் ஓட்டினார்.  பிறகு ‘சரோட்’  அறிமுகம் ஆனது. அதன் ஆழமான ‘ ட்வாங் ‘கை  கேட்டதும் அதுவே என் வாத்தியம் என்பதை உணர்ந்தேன். ஒரு நண்பருடனான  சமீபத்திய உரையாடல்  இப்படி அமைந்தது

“சித்தார் இல்ல, சரோட்தான் என் வாத்தியம்”

“ஏன், சித்தார்க்கு என்ன குறை?”

“துக்கம் பத்தல”  

“கொஞ்சம் கண்ணீர் கலக்காத வாழ்கைப் பலகாரம் எதற்கு?” என்று கேட்கிறார் இடச்சேரி கோவிந்தன். நீங்கள் கவலைப்படாதீர் கவிஞரே! கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் அது கிடைக்காது.

இந்த மொழியாக்கத்தின் வழியே தமிழ்க் கவிதையியலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்  செய்துள்ளார் மணவாளன்.  கவிதை மொழியாக்கத்தைப் போன்றே கவிதை குறித்த எழுத்தை மொழி பெயர்ப்பதும் அடிப்படையில் சிக்கலானதே. ஆனால் அந்தச் சிக்கலை தீவிரத்துடனும்  பரவசத்துடனும்  எதிர் கொண்டிருக்கிறார். அடிக்குறிப்பு என்பதே  விளக்குவதை  நோக்கமாகக் கொண்டது மணவாளன் அதிலும் செறிவைக் கைவிடாதவராக உள்ளார். “ உம்பம்” என்கிற சொல்லிற்கான அடிக்குறிப்பு இது…  “  உம்பம்- அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளத்தில் தண்ணீர் ‘உம்பம்’ என்று சொல்லப்படுகிறது” எனக்கு மலையாளம் தெரியாது. ஆனால் அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் மலையாளம் தெரியும் என்று தோன்றியது. அது போன்றே அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் தெலுங்கும், அம்மாக்கள் குழந்தைகளிடம் உரையாடும் உருதும் எனக்குத் தெரியும் என்கிற எண்ணம் என்னை குதூகலம் கொள்ள வைத்தது. 

கல்பற்றாவுக்கு  சிரம் தாழ்ந்த வந்தனங்களைச் சொல்கிறேன். மணவாளனை இறுக அணைத்துக் கொள்கிறேன்..

“தீர்வு உள்ள பிரச்சனைகளுக்கு அல்ல, தீர்வே இல்லாத பிரச்சனைகளுக்குத்தான் எழுத்தாளன் உடனிருக்க வேண்டும்” என்கிறார் கல்பற்றா. 

தீர்வு இல்லாத சிக்கல்களில் சும்மா கூட  இருப்பதில் என்ன அருமை வந்துவிடப் போகிறது?  தீர்வே   இல்லாத சிக்கல்களில் கூடவே  இருப்பவனைக் காட்டிலும்  அருமையானவன்  இன்னொருவன் உண்டோ?

(கல்பற்றா நாராயணனின் கருப்பு இருட்டல்ல கட்டுரை தொகுப்பிற்கு கவிஞர் இசை எழுதிய முன்னுரை)

கருப்பு இருட்டல்ல (தமிழில் அழகிய மணவாளன்) நூல் வாங்க...

***





Share:

கவிதையின் நிலையான வடிவம் எது - லட்சுமி மணிவண்ணன்

வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச்சயமாக நவீன கவிதைகளின் வடிவில் இல்லை. ஆனால் அது நவீன கவிதைகள் தருகிற கவிதை அனுபவத்தைத் தருகிறது.

கவிதைக்கு இதுவே நிலையான வடிவம் என்று சொல்லத் தக்க வடிவங்கள் ஏதும் உண்டா? கவிதை இந்த வாகனத்தில் மட்டுமே ஏறி அமரும் என்று சொல்லத்தக்க நிலையான வாகனங்கள் ஏதும் உண்டா? கிடையாது. அது எப்படி வேண்டுமாயினும் வரலாம். நமக்கு அடையாளம் காணத் தெரிய வேண்டும் அவ்வளவே விஷயம். கவிதையின் முகம் காண நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது ஒன்றே விதி. 

அது எந்த வடிவத்திலும் வரலாம், எந்த பொருளின் பேரிலும் வரலாம்.நம்மாழ்வார் வடிவிலும் வரலாம், பாப் மார்லி வடிவிலும் தோன்றலாம். நாட்டுப்புற கீதத்திலும் வரலாம், நவீன கவிதையிலும் வரலாம்.எந்த வடிவில் வந்தாலும் அதில் கவிதை ஏறி அமர்ந்து இருப்பின் ஏற்பது ஒன்றே வழி. கவிதை ஏறி அமர்ந்து வரவில்லை எனில் நவீன கவிதை வடிவமே ஆனாலும் அதுவும் செய்யுளுக்கு சமமே.

ஒவ்வொரு காலத்திலும் கவிதை ஒவ்வொரு வடிவத்தில் நம் முன்னால் வந்து நிற்கிறது. செய்யுளின் வடிவத்தில் கவிதை வந்து நின்ற காலங்கள் உண்டு. யாப்பில், பாடலில், பழமொழிகளில், குறளில் என பல்வேறு வடிவங்களில் அது நம் முன்பாக வந்திருக்கிறது. ஒருவேளை காலம் தான் பொது வடிவை கவிதைக்கு தருகிறதோ என்னமோ? ஒரு காலம் முடியும் போது, கவிதையின் வடிவமும் முற்றுப் பெறுகிறது. அடுத்தது தொடங்குகிறது. தமிழில் நவீன கவிதைகளின் உரைநடை வடிவம் முடிவடைந்து வேறு உரு கொள்வதை வி. சங்கரின் இந்த கவிதைகள் உணர்த்துகின்றன.

இந்த தொகுப்பில் நெடிய மாலைகளை போன்ற நான்கு கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு மாலையிலும் தொடுக்கப் பட்டிருக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் மொத்தத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. சில இடங்களில் தனித்தும் அவற்றுக்கு ஒரு அனுபவம் இருந்தாலும் கூட மொத்ததோடு அவை ஒன்றுபடுகின்றன. இந்த அமைப்பு முறை நவீன கவிதை வாசிப்பு பழக்கத்திற்கு உவப்பாக இல்லை.ஆனால் இதனால் உண்டாகும் கவிதை அனுபவம் சிறப்பாக இருக்கிறது. வி. சங்கரின் வெளிப்பாட்டுச் சிறப்பு இது 

தமிழில் நீண்ட நெடிய கவிதைகள் உண்டு. நவீன கவிதையில் நகுலன், விக்ரமாதித்யன் ஆகிய இருவரிடமும் நெடிய பாக்கள் உண்டு. சரக்கொன்றை போன்றவை அவை. தனித்து குறைவான பொருளும் ஒட்டு மொத்தத்தில் மிகுதியான பொருளும் தருபவை. வி. சங்கரை அப்படி சொல்ல முடியுமா என்றால் ஒரு ஒப்பீட்டுக்கு வேண்டுமானால் அப்படி சொல்லலாமே அன்றி மொழிப் பெருக்கில் இவர் புதியவராக இருக்கிறார் 

சங்கருக்கு விஷேசமான ஒரு மொழி மண்டலம் இந்த கவிதைகளில் அமைந்திருக்கிறது. ஒருவகையில் சொன்னால் நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே சங்கரின் கவிதைகள். 

நவீன தமிழ் கவிதையின் மொழிக் கொள்கைக்கு சங்கரின் கவிதைகளில் இடமே கிடையாது. ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை சங்கரின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மாப்பிள்ளை காரில் வரலாம், எந்த காரில் வேண்டுமானாலும் வரலாம். அது ஏற்புடையது தான். திடீரென ஒரு மாப்பிள்ளை நடந்து வந்தால் மாப்பிள்ளை மாதிரியே தோன்ற மாட்டார் தானே இல்லையா? ஒருவேளை கவிஞன் கழுதையில் ஏறி வந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?

வி. சங்கரின் மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற்றத்தை புறவயமாக ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் நவீன அம்சம் வெண் முரசில் பெறப்பட்டதாக இருக்கிறது. சங்கரின் சரளத்தின் தோற்றுவாய் என ஜெயமோகனின் ' வெண் முரசு ' காவியத்தைச் சொல்லலாம். பெரிய காப்பியங்களில் இப்படியான துணைப் பிரதிகள் தோன்றும் சாத்தியங்கள் உண்டு. சங்கரின் கவிதைகளில் அவை சிறப்பாக உருமாறியிருக்கின்றன என்று சொல்லலாம் 

வி. சங்கரின் இந்த கவிதை நூல் தமிழ் கவிதைக்கு ஒரு புதுமையான வரவு என்பதில் சந்தேகமில்லை. நவீன தமிழ் கவிதைகளில் கிழடு தட்டி போயிருக்கும் விறைத்த வசனத் தன்மையில் இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு காலம் தனது அடுத்த அடியை எடுத்து வைப்பதை இந்த கவிதைகளில் உணர முடிகிறது. இக்கவிதைகளின் அடி நாதமாக, நிழலாக பரவியிருக்கும் ஆன்மீகம் நவீன கவிதைக்கு புதியது. கவிதை அதன் விழிப்புத்தன்மையில் இருந்து விழிப்பற்ற தளத்துக்குள் புரண்டு திரும்புவதை சங்கரின் தொகுப்பு அறிவிக்கிறது. இந்த தொகுப்பை சிலேட் மூலமாக கொண்டு வருவதில் மகிழ்கிறேன்

தமிழில் நவீன கவிதைகள் நிறைய சங்கர்களாலும் ஆகி வருகிறது. இது நன்மை தாமோ பராசக்தி?

(வி.சங்கரின் சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு எழுதிய முன்னுரை)

***

சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க...

 

Share:

அருணாசலக் கவிராயர் - க.நா.சு

தாயுமானவர் வேதாந்தக் கவி. அருணாசலக் கவிராயர் நாடகக் கவி; இசைக்கவி. எப்படிச் சொன்னாலும் சரிதான். புதுத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையான ஒரு கொள்கையை வளராமலேயே ஏற்றுக்கொண்டு கவிதை செய்தவர் அருணாசலக் கவிராயர். சிறப்பாகப் பாரதியாரில் வந்து முடிந்த கவிதை மரபுக்கு வழிகாட்டித் தந்தவர் என்று அருணாசலக் கவிராயரை நாம் பாராட்ட வேண்டும். கவிதையை அரும்பத அகராதிகள், வியவக்தியான கர்த்தாக்கள், அறிவுப்புலிகள் இவர்களிடமிருந்தெல்லாம் நமக்கு மீட்டுத் தரப் பாடுபட்டவர்களில் அருணாசலக் கவிராயரைக் காலத்தால் முதல்வராகச் சொல்லலாம்.

1712ல் பிறந்த அருணாசலக் கவிராயர் தனது அறுபதாவது வயதில் ராமநாடகக் கீர்த்தனைகளைப் பாடினார். அதற்குப் பிறகு அறுபத்தேழாவது வயது வரையில் இருந்துவிட்டு 1779ல் இறந்தவர். மாயூரத்துக்கருகிலுள்ள தில்லையாடி என்னும் கிராமத்தில் பிறந்த அருணாசலக் கவிராயர் சீர்காழி அருணாசலக் கவிராயர் ஆனதற்கு அவருடைய மதியையும் கவித்துவத்தையும் உணர்ந்த ஒரு சீர்காழி நண்பரான போஷகரின் செயல்தான் காரணம் என்று கதை சொல்வார்கள். காசுக்கடை வைத்துப் பொருளீட்ட முயன்றவர் அருணாசலக் கவிராயர். கவிராயருக்குக் காசுக்கடைக் கணக்குச் சரியாக வந்திராது என்றே நாம் ஊகித்துக்கொள்ளலாம். காசுக் கடையுடன் ராமாயணப் பிரசங்கமும் பிழைப்புக்காகச் செய்துவந்தவருக்குக் கம்ப ராமாயணத்தில் நல்ல பரிச்சயமிருந்ததில் ஆச்சரியமில்லை. பிரசங்கி என்று ஒருவன் எடுத்துச் சொன்னாலொழிய, கம்ப ராமாயணத்தில் பல பகுதிகள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை. அதற்குக் காலம் மட்டும் காரணமல்ல. இலக்கியமென்பது பேச்சு பாஷையை விட்டு விலகி நின்றதுதான் காரணமென்று புரிந்துகொள்ள அவருக்குப் பொதுவான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கத்தான் வேண்டும்.

ராமநாடகக் கீர்த்தனங்களைத் தவிர, அவர் சீர்காழிப் புராணம், சீர்காழிக் கோவை, அநுமார் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் முதலியனவும் பாடினார். ஆனால் அவருடைய ராமநாடகம்தான் முக்கியமாக மக்களின் மனத்தைக் கவர்ந்தது. ஸ்ரீரங்கத்தில் ராமநாடகக் கீர்த்தனங்களை அரங்கேற்றிவிட்டு அடுத்தபடியாக, தஞ்சை மராட்டிய அரசனாகிய துளஜராஜரிடம் அதை அரங்கேற்ற விரும்பினாரென்றும், அது அப்போது சரிப்படாது போகவே துளஜராஜருக்கு நெருங்கிய நண்பரான புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை முன் அரங்கேற்ற விரும்பினாரென்றும், துளஜராஜா கேட்காதபோது நான் கேட்பது சரியல்ல என்று ஆனந்தரங்கம் பிள்ளை அவரைத் தமது நண்பர் சென்னை முத்துக்கிருஷ்ண முதலியாரிடம் அனுப்பினார் என்றும் ஒரு கதையுண்டு. அந்த நாட்களில் கவியென்றால் உலகம் அறிந்திருக்கவும் வேண்டும், உலகில் அங்குமிங்கும் ஓடியாடி உலகை ஒத்துப் பாடியாடித் திருப்தி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பத்திரிகை யுகமாகிய இந்தக் காலத்துக்கும் அந்தக் காலத்துக்கும் அப்படி வித்தியாசம் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புராணம், கோவை முதலிய நூல்களால் கவியாக யாருடைய பெயரும் இனிப் பரவவில்லை என்பது பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலேயே தெளிவாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாகவே இந்தத் துறைகளில் உழைப்பவர்களுக்குப் பஞ்சம் ஏற்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றண்டின் முடிவு வரையில் எழுதிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அருணாசலக் கவிராயரும் தம் நூலைப் போஷகர் முன் அரங்கேற்ற முற்பட்டாலும்கூட, ஒரு பொதுஜன யுகம் வர இருப்பதை உணர்ந்துதான் இந்தக் கீர்த்தனங்களை இயற்றினார் என்று சொல்வது மிகையாகாது. ஆனால் பொதுஜன யுகம் வந்துவிடவில்லை அப்போது. பெஷி வசனத்தில் கடத்திய காரியத்தை, ஆனந்தரங்கம் பிள்ளை தமது தினசரிக் குறிப்புகளைத் தமக்காக எழுதிக்கொண்ட காரியத்தை, அருணாசலக் கவிராயர் ஒருவிதத்தில் சாதித்தார். இசையும் நாடகமும் தமிழும் கலந்து செய்தார். அறுபது வருஷங்கள் அப்பெயர் தமிழ்நாட்டில் அப்படியொன்றும் அதிகமாகப் பரவிவிடவில்லை. தில்லையாடியிலிருந்து சீர்காழி வரையில்தான் பரவியிருந்தது. ராமநாடகக் கீர்த்தனைகளுக்குப் பிறகு அவர் புகழ் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டது. அறுபத்தியேழாவது வயதில் அவர் இறக்கும்போது அவர் கீர்த்தனங்கள் எங்கும் பிரசித்தமாக இருந்தன. அவரே பல இடங்களிலும் பாடி அவற்றைப் பிரசங்கித்தார். அவர் சிஷ்யர்கள் பலரும் வெற்றிகரமாகச் செய்தார்கள். ஒரு நூற்றைம்பது வருஷங்களாகத் தமிழ்நாட்டிலே ராமநாடகக் கீர்த்தனைகள் பிரபலமாகவே இருந்திருக்கின்றன என்று சொல்வது பிசகாகாது.

கம்பராமாயணப் பிரசங்கத்தையும் தன் தொழிலாகக் கொண்ட அருணாசலக் கவிராயருக்கு ராமகதையை இசையாகத் தொகுக்க வேண்டுமென்று தோன்றியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரிடம் தமிழ் கற்றுக்கொண்ட மாணவர்கள் இருவர் இசை வல்லவர்களாகவும் இருந்ததனால் இது சுலபமாகவே சாத்தியமாயிற்று. எளிய சந்தம், எளிய பதங்கள், எளிய கதை என்று பாரதியார் பிறகு - ஒரு நூற்றைம்பது வருஷங்களுக்குப் பிறகு, சொன்னாரே - அத்துடன் இசையையும் சேர்த்துச் செய்துவிட்டார் அருணாசலக் கவிராயர். அதை நாடகமாகச் செய்யலாம் என்று செய்ததை ஒரு தனிப்பெருமையாகச் சொல்லலாம்; ராமகீர்த்தனைகளாக மட்டுமில்லாமல் இவை ராமநாடகக் கீர்த்தனைகளாகவும் அமைந்ததுதான் விசேஷம் என்று சொல்ல வேண்டும்.

இன்று நாம் சொல்லிக்கொள்வது போலவே, அன்றும் முத்தமிழ் என்றும், இயல், இசை, நாடகம் என்றும் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். கோயில்களில் நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பது நமக்குப் பலதரப்பட்ட கல்வெட்டுக்களால் தெரியவருகிறது. அருணாசலக் கவிராயர் காலத்திலே நாடகம் அப்படியொன்றும் பிரமாதமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பதும் உண்மைதான். வடமொழிக் கதையான ராமாயணத்தைக் கம்பன் அற்புதமான காவியமாகச் செய்துவிட்டான். சிலப்பதிகாரத்தைப் போலவே அந்தக் காவியத்திலும் நாடகப் பண்பு நிறைந்திருக்கிறது என்பது உண்மைதான். கம்பராமாயணப் பிரசங்கியாகிய அருணாசலக் கவிராயருக்கு, இன்றைய கம்பராமாயணப் பிரசங்கிகளைப் போலவே கம்பராமாயணத்தின் நாடகப் பாங்கு முழுதும் நன்கு தெரிந்துதானே இருக்க வேண்டும்? இந்நாடப் பாங்கை அழுத்தமாக வெளிக்கொணர ஒருவர் முயன்றால் தவறு ஒன்றுமில்லை. கம்பராமாயணத்தை யொட்டியேதான் அருணாசலக் கவிராயர் தமது ராமநாடகக் கீர்த்தனைகளைச் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். தெளிவான தமிழில் அரும்பத அகராதியையோ வியாக்கியான கர்த்தாக்களின் உதவியையோ நாடாத வகையிலே நாடகப் பாங்கை மட்டும் மனத்தில் கொண்டு அருணாசலக் கவிராயர் இந்தக் கீர்த்தனங்களைப் பாடிவிட்டார்.

இசையாக ராமநாடகக் கீர்த்தனைகளை மதிப்பிட எனக்குத் தெரியாது - அப்படி மதிப்பிட வேண்டிய இடமும் இதுவல்ல. ஆனால் நாடகமாகவும் இலக்கியமாகவும் மதிப்பிடும்போது ராமநாடகக் கீர்த்தனைகளின் நயம் தெளிவாகவே விளங்குகிறது என்று சொல்லலாம். இந்த நாடகம் நமக்குப் பழக்கமான இன்றைய நாடகங்களைப்போல இல்லைதான். ஆனால் இதில் நாடகத்தன்மை இருக்கிறது என்பது வெளிப்படை. சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்று பலவகைகளில் சொல்லலாம். பழைய பந்தாவில் நாட்டியத்தைப்பற்றிச் சொல்லியது என்பதாலும், நாடகத்தன்மை, அதாவது சம்பவ மோதல்கள் சிறப்பாக உள்ளது என்பதாலும் அதை நாடக நூல் என்று சொல்லலாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் காலத்தில் சிலப்பதிகாரம் வழக்கத்திலிருந்ததா? அவர் அதை அறிந்திருந்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அளவுக்கில்லாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு அளவுக்குள் ராம கதையை நாடகமாக்கிவிட்டார் அவர். தமிழில் பிற்காலத்தில், அதாவது பத்தொன்பதாவது நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் வெளிவந்து நடிக்கப்பட்ட நாடகங்களுக்கெல்லாம் ஆதர்சம் என்று ராமநாடகக் கீர்த்தனையைத்தான் சொல்ல வேண்டும். இன்றுள்ள நாடக மேடை, சினிமாவுக்கும் ராமநாடகக் கீர்த்தனை வழிகாட்டியாக, முன்னோடியாக இருந்துவருகிறது என்று சொல்வது பொருந்தும் என்றே தோன்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, இந்த முதல் நூலை ஓரளவு பின்பற்றித்தான் கோபாலகிருஷ்ண பாரதியார் தம் நந்தன் சரித்திரத்தில் பிரமாதமான வெற்றி பெற்றார் என்று சொல்ல வேண்டும். வேதநாயகம் பிள்ளை தம்முடைய பெண்மதி மாலையிலும், சர்வ சமரஸக் கீர்த்தனைகளிலும்கூட இந்தக் கீர்த்தனைகளின் நாடகப் பண்பையும் இசையையும் பின்பற்றி எழுதவே ஓரளவு முயன்றார் என்றுகூடச் சொல்லலாம்.

இலக்கியமாக மதிப்பிடும்போது, இந்த ராமநாடகக் கீர்த்தனைகளுக்கு எந்த அளவில் இடமுண்டு என்று கேட்கத் தோன்றலாம். ‘மக்கள் இலக்கியம், மக்கள் இலக்கியம்’ என்று இந்தக் காலத்தில் ஒரு கொள்கை பரவிப் பிரமாதப்படுகிறதே - அதற்கு ராமகதை ஆதாரமாக அமையக்கூடாது என்று வேண்டுமானால் மக்கள் இலக்கியக்காரர்கள் சொல்லலாம். ஆனால் அருணாசலக் கவிராயர் இந்த ராமநாடகக் கீர்த்தனைகளை மக்கள் இலக்கியமாகக் கருதியேதான் செய்து வெளியிட்டார் என்று சொல்ல வேண்டும். ராவணனுக்கு விபீஷணன் புத்தி கூறும்போதும், ராமனுக்கும் சூர்ப்பனகைக்கும் சம்வாதம் கடக்கும்போதும், அநுமான் சீதையைச் சந்தித்து அசோகவனத்தில் பேசும்போதும் இசையை விலக்கிவிட்டு நாடகமாக மட்டும் நாம் கவனித்தால், இது தெளிவாகவே விளங்கும். மக்கள் மாறிவிடுவதில்லை. மேலெழுந்தவாரியான பல வியவகாரங்கள் மாறுகின்றன; சுலோகங்கள் மாறுகின்றன. மனிதர்கள் இன்னும் ராமராஜ்யத்தை எண்ணிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறர்கள். மகாத்மா காந்தி ராமராஜ்யம் என்கிற பெயரைச் சொல்லித்தான் சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார். அந்த ராம ராஜ்யத்தையும், அதற்கு ஆதாரமான ராஜ்யத்தையும் தமிழருக்கெல்லாம் தெரிவிக்க இக் கீர்த்தனைகளும் பிரயோசனப்பட்டன என்பது அவற்றின் தனிப்பெருமை. 

மற்ற இந்திய மொழிகளிலே ராமாயணத்துக்குப் பலப்பல மொழிபெயர்ப்புகள் உண்டு. தமிழிலோ கம்பனுடையதும், அருணாசலக் கவிராயருடையதும்தான். இலக்கியபூர்வமாக அவையே போதும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

***

‘கல்கி’, 8 பிப்ரவரி 1959


Share:

இரு மனங்கள், இரு தீர்வுகள் - அ.க. அரவிந்தன்

கவிதை முழுமையான இலக்கிய வடிவம் என்று எனக்கு தோன்றும். புனைவு இயல்பிலேயே சிக்கலை அறுதியிட்டு தீர்வை முன்வைக்க முயற்சி செய்வதாக இருக்கும்.வலுவான சிக்கல்-கண்ணியான தீர்வு-இலக்கிய பெறுமானம் இவை மூன்றும் புனைவைப் பொருத்தவரை அடுத்தடுத்த படிநிலையில் நிகழவேண்டியது.இதனால் அகவயமான ஏற்பு வாசகனுக்கு கிட்டுவதில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகிவிடும்.ஆனால் கவிதை வெறுமனே ஒரு விஷயத்தைக் கவனப்படுத்த முயற்சி செய்கிறது.

கவனப்படுத்த விரும்பும் விஷயம் வாசகனின் கண்ணிற்கு தெரிகிறதா? இல்லையா? என்பதே கேள்வி. அதனால்தான் “என்கவிஞர்” என்றும் “என்கவிஞர் இல்லை” எனவும் வாசகர் சொல்வதைக் கேட்க முடிகிறது.ஆக, கவிஞனின் சுயத்திற்கும் வாசகனின் இயல்புக்கும் கணநேர உரையாடலைதான் நாம் கவிதானுபவமாக சொல்கிறோம்.பின்பு, அதை ஒட்டியப் பேச்செல்லாமே அந்த அனுபவத்தை விளக்குவதே.இதனால் புனைவில் கவிதானுபவத்தை உத்தேசிக்கும் ஆக்கங்கள் வெற்றியடையாமல் போய்விடுவதையும் பார்க்கிறோம்.

கீழே வரும் இரு கவிதைகள் பற்றிப் பேசவதே என் நோக்கம். 

துக்கம் ஒரு பரிசுப்பொருள் நெடுநாள்

என் மேசை மீது கிடக்கிறது ஒவ்வொரு நாளும் அதைப் பிரிக்கிறேன் 

சரிகை முடிச்சிடுகிறேன்

தூங்கச் செல்கிறேன் 

அது அங்கேயே கிடப்பதில்

சந்தோஷம்தான் எனக்கு

பிறந்த குழந்தை போல

அது அங்கேயே கிடக்கிறது

அது தவழ்வதில்லை

நடக்கவும் செய்யாது

அது ஒரு எளிய அற்புதப் பொருள்

அதன் தொனி மெளனம்

அதன் பணி பிணியறுப்பு

- மதார் (வெயில் பறந்தது)


துக்கம் — ஒன்றினுள்

இன்னொன்று

அதனுள்

பிறிதொன்று என

எண்ணிறந்த பெட்டிகளை

உள்ளடக்கிய

ஒரு பெரிய பெட்டியைப் போன்றது.

மகிழ்ச்சி — சளைக்காமல்

அவற்றை

ஒவ்வொன்றாகத்

திறந்துகொண்டேயிருப்பது.

-வே.நி.சூர்யா (அந்தியில் திகழ்வது)

இவ்விருகவிதைகளில் ஒருவித தீர்வு தட்டுப்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுவே இதை குறித்து பேச ஆர்வம். அதுவும் சிக்கல்-காரணம்-தீர்வு என்ற அறிவியல் பார்வை அல்ல. அறிவியல் பார்வை தற்காலிக அறிதி பார்வை. இதை கலைப் பார்வை என்று பிரிக்கலாமா? 

இவ்விரு கவிதைகளும் ஒரே பேசுபொருளைக் கொண்டிருந்தாலும் முற்றிலும் வேறான அனுபவத்தைத் தருகிறது. மதார் கவிதையில் வெளிப்படும் சுயம்: அனைத்தும் அதன் கையில் இருப்பதாக முன்வைக்கிறது. துக்கத்தை நயந்து அணிந்துக்கொள்ளும் வஸ்திரத்தைப் போல சுட்டுகிறது. மேலும் அந்தத் துக்கத்திற்கு ஒரு பொறுப்பை தருகிறார். பொறுப்பின் நிமித்தம் நிவாரணம் சாத்தியப்படுகிறது. "பிணியறுப்பு" அதன் வேலை என்று சொல்லும் போது, துக்கம் எடை குறைந்து குழந்தையாகவே மாறுகிறது. ஒவ்வொரு குழந்தையும் நோய் தீர்க்கும் வேலையைச் செய்கிறது. அது நம்மை மகிழ்விக்க முயற்சி செய்வதில்லை. துக்கத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக்கி வேடிக்கை பார்க்க செய்யும் மனநிலையே தீர்வு என்று எண்ணவைக்கிறது. 

இறுதியில் யாவுமே தருணங்கள்தானா? 

என்ற தலைப்பில் உள்ள பத்து பிரிவுகளில், ஒன்றில் உள்ளதே மேலே உள்ள வே.நி. சூர்யாவின் இக்கவிதை. 

இதில் மகிழ்ச்சியை உத்தேசிக்கிறார். அவர் எதையும் மாற்ற விழையவில்லை. மேலும் அனைத்துமே தருணமா? என்று சந்தேகிக்கிறார். துக்கம் எடுத்து கையாளக் கூடிய, ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அதை எதுவாகவும் அறிதியிட  முடியாது.அது ஒரு “எண்ணிறந்த” பெட்டி. அதனாலேயே அது எடையுடன்  இருக்கிறது. ஏனெனில் அது “பெரிய”தாக உள்ளது. இதற்கு சரிக்கு சரியாக நிற்கும் வல்லமை மகிழ்ச்சிக்கு உள்ளதாக கவிஞர் முன்வைக்கிறார். ஆனால் நாம் மகிழ்ச்சியை அடைய “சளைக்காமல்” இருக்கவேண்டும். 

இருவேறு தருணத்தில் சிக்கலையும் தீர்வையும் காணவாய்ப்பதாகவும் யோசிக்கமுடியும். 

ஒரு மனம் துக்கத்தை தன்வயப்படுத்த உருமாற்றத்தை கோருகிறது. பிரிதொன்று துக்கத்தை எதிர்கொள்ள உத்தியை கற்றுத் தருகிறது.(சளைக்காமல் இருப்பது) 

பேசுபொருளில் உள்ள ஒற்றுமையால் இவ்விரண்டு கவிதைகளையும் ஏதோவொரு கணத்தில் அருகருகே வைத்துவிட முடிகிறது. துக்கம் ஒரு பொருளாக இருப்பது இந்தத் தசாப்தத்தின் கவிதையாக இக்கவிதைகளை மாற்றுகிறது. கவிதையில் நிகழ்வுகளுக்குதான் பஞ்சமிருக்காது. பொருள்கட்கள் வந்து விழுவது அபூர்வமே. கவிதையில் ஒரு பறவை வருகிறது என்றால் பறத்தல் என்ற நிகழ்வு கவிதையில் பேசபொருளாக உள்ளது என்று கொள்ளலாம்.ஆனால் பொருட்கள் நிகழ்வதில்லை. நிகழ்வு வந்தால் கூடவே காலமும் வந்துவிடும். மாறாகப் பொருட்கள் அணுகுமுறை சார்ந்து அர்த்தம் தரும் ஒரு வஷ்து மட்டுமே. மேலும் துக்கம் என்ற அகவயமான உணர்வை புறவயமான பொருளாக மாறியிருக்கிறது. ஆகவே சற்றே உறுதி கூடுகிறது. 

1992 - உலகமயமாதலுக்கு பிற்பாடு… என்ற விளக்கம் கலை, அறிவியல், பொருளாதாரம் என்று அனைத்திற்குமே பொருந்தும். அதை ஒத்திவைத்துவிட்டு அன்றாடத்தில் பார்த்தால், ஒரு மனிதன்  வாழ எவ்வளவு பொருட்கள் தேவையாக இருக்கிறது என்று ஆச்சரியமடைய வைக்கிறது. வரலாறு நெடுக முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றுதான் நாம் அதிக பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் விஷயமே. சிக்கல் என்னவென்றால் அந்த பொருட்கள் அனைத்துமே நமக்கு அவசியம் என்று எண்ணுகிறோம். மேலும் பொருட்கள் நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.மதார் அந்த மகிழ்ச்சியின் பொருட்டே அதை குழந்தையாக மாற்றுகிறார்.சூர்யா துக்கத்திற்கு எதிராக மகிழ்ச்சியை வைக்கிறார்.துக்கத்தை மாற்றுவதும், துக்கத்திற்கு எதிர் ஒன்றை முன்வைப்பதும் அவரவர் திராணிக்கு உட்பட்டதே.சட்டென்று இந்தக் கவிதை நினைவில் ஆட்படுகிறது.

இந்தச் செருப்பைப் போல்

எத்தனைப் பேர் தேய்கிறார்களோ

இந்தக் கைக்குட்டையைப் போல்

எத்தனைப் பேர்/பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்தச் சட்டையைப் போல்

எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்ளுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

(நன்றி நவிலல்) 

- ஆத்மாநாம்

ஆத்மாநாமின் இக்கவிதையில் பொருளுக்கும் தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி இன்மையை சுட்டுவதாக வாசிக்கமுடியும். துயர் பொருளாக பிரியாமல் இருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு இயல்புக்கும் ஒரு பொருளைக் கண்டறிந்த காலத்தின் ஆவணமாக இந்தக் கவிதையைச் சுட்டலாம். ஆனால் மேற்கண்ட இரு கவிதைகள் இந்தத் தசாப்தத்தின் கவிதையாக மாறியிருப்பதற்கு காரணம், மனிதனின் இயல்புக்கு ஒரு பொருளை சுட்டமுடியாது என்பதும், மனிதர்கள் பொருட்களைப் போன்றவர்கள் அல்ல என்பதும், அவர்களுக்கு துக்கம் பொருட்களின் பெயரில் யாராலோ அல்லது அவனாலேயேகூட ஏற்படுத்திக் கொள்ளும் விஷயம் மட்டுமே என்ற கண்டுபிடிப்புதான். தீர்வை மேலேயே பார்த்து விட்டோம் அல்லவா? 

“துக்கத்திற்கு காரணம் ஆசை” என்ற பழைய கண்டுபிடிப்பு உயிர்ப்புடன் இருக்கக் காரணம், தீர்வு இயல்பாகவும் எளிதாகவுமில்லை என்பதோடு அது காலம்தோறும் மாறக்கூடியதாகவும் இருக்கிறது என்பதால்தான். இந்தக் காலத்திற்கான இரு தீர்வுகளால் இக்கவிதைகள் நினைவில் இருக்கிறது.

***

ஆத்மாநாம் தமிழ் விக்கி பக்கம்

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சில மராட்டி கவிதைகள் - தமிழில் ஆர். தீபா

வாமாங்கி (இடபாகத்தாள்)

சமீபத்தில் ஒரு நாள் பண்டர்பூர் கோயிலுக்கு சென்றிருந்தேன். 


அங்கு விட்டலனைக் காணவில்லை.

ரகுமாயியின் பக்கத்தில் அவன் நின்றிருக்கும் பீடம் மட்டுமே இருந்தது.


நான் நினைத்துக் கொண்டேன்.

 சரி , 

   விட்டலன் இல்லையென்றால்  

என்ன?

   ரகுமாயி இருக்கிறாளே! யாரோ ஒருவரது காலில் தலையை வைத்து வணங்கி விட்டால் போதும்.


முன்னும் பின்னும் மோதிய கூட்டத்தின் நடுவே ரகுமாயியிடம் கேட்டேன்?

எங்கே உன் விட்டலனைக் காணும்? ,எங்கே போனான்?


அவள் ஆச்சரியத்துடன் , எங்கே போனான் என்றால்?

அவன் என் வலது பக்கம் தானே நின்று கொண்டிருந்தான், ஏன் இப்போது இல்லையா ? 


நான் திரும்பவும் ஒருமுறை பார்த்து விட்டுச் சொன்னேன், அங்கு அவன் இல்லை! 


அவள் உடனே,

என் பக்கத்தில் இருப்பது கூட எனக்கு சரியாகத் தெரிவதில்லை! 


கல்லைப்போல ஆகிவிட்டது 

என் கழுத்து. 

அதை இப்படி அப்படி கூடத் திருப்ப முடியவில்லை! 


அவன்,

எப்போது வருகிறான்? எப்போது செல்கிறான்? 

எங்கே செல்கிறான்?   

என்ன செய்கிறான்? என்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை!


அவன் என் தோளோடு தோள் தொட்டபடி எப்போதும் பக்கத்தில் இருக்கிறான் என, முட்டாள்தனமாக இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்!


ஆடி மாத ஏகாதசி காலங்களில் எத்தனை கோடி மக்கள் வருகிறார்கள்! ஆனால், ஒருவரும் ஏன் என்னிடம் ஒன்றுமே 

சொல்லவில்லை?


இன்று ஏன் திடீரென என்னைச் சந்திக்க ஓடி வந்திருக்கிறது இருபத்தெட்டு யுகங்களாகக் காத்திருந்த  தனிமை!


அவள் திரும்பவும் கல்லானாள்!

- அருண் கோல்ஹட்கர்

***

அம்மாவின் மறைவுக்கு பின்  அப்பா

அம்மாவின் மறைவுக்கு பின் தான் அப்பா மௌனமானார்.


முன்பு போல் சமையலறை மூலையில் உள்ள பூஜை அறையில்  

  கடவுளைக் குளிப்பாட்டி, 

உணவு படைக்கிறார்.   

  ஆனால், ஆரத்தி எடுக்கும்போது 

கை நடுங்குகிறது. 


அம்மா வைத்த பாதாம் மரத்தின் கீழ் சேர்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பொருட்டு,

அவள் நினைவில் வாழ அங்கேயே நிழல் ஆகிறார்.


வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.


கட்டி வைத்த பழைய நூல்களை எடுத்து மீண்டும் கட்டி வைக்கிறார்.


செய்தித்தாளை கண்ணுக்கு மிக அருகில் வைத்து படிக்க முடியாதபடி படிக்கிறார்.


சாப்பாட்டுக்குப் பிறகு ஊதுபத்திக் குச்சியால் பல்லின் இடுக்குகளைக்

குத்தியபடியே இருக்கிறார்.


காய்ந்த மாம்பழக் கொட்டையிலி ருந்து வரும் 

தளிர் பச்சை முளை போல, பழைய நினைவுகளைச் சொல்ல எண்ணித் தன் மௌனத்தைக் கலைக்கிறார்,

ஆனால் எப்போதாவது.!

- தாஸு  வைத்ய்

***

நிழல்

மதிய நேரமிது.

நான் சாலையின் ஓரத்தில் நின்றிருக்கிறேன். என் வலது பக்கமாய் ஒரு பெரிய அடர்ந்த மரம். 


அதன் நிழல் என் முன்னால் விழுகிறது.


மரத்தின் தண்டு கருமையானதாகவும் ,

கிளைகள் சாம்பல் பழுப்பிலும், இலைகள் தளிர் கரும் பச்சையாகவும், அழகிய வண்ண மலர்களும் கூடியதாய்,

 நீல வானின் கீழ் நின்றிருக்கிறது.


அதன் கிளையில் மின்னும் கருப்பில் காகம் அமர்ந்திருக்கிறது.


மரம் தன்னுள் பல நிறங்களைக் கொண்டிருந்தாலும்,

 அதன் நிழலில் இலைகள், தண்டு கிளைகள், பூ, காகம்,  என அனைத்துமே கருப்பானது.


நிழல் மரத்தின் அத்தனையையும் ஒன்றாக்கிவிட்டது. 

 பார்க்க போனால் பேதமற்ற நிழலில் தான் மரத்தின் ஒட்டுமொத்தமும் ஒன்றாய் உயிர்த்துள்ளது!

- ஷாந்தா  ஷேல்கே

***

கவிதைகள், தமிழில் ஆர். தீபா

Share:
Powered by Blogger.

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (15) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (246) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (15) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (246) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive