கவிதைக்கு இதுவே நிலையான வடிவம் என்று சொல்லத் தக்க வடிவங்கள் ஏதும் உண்டா? கவிதை இந்த வாகனத்தில் மட்டுமே ஏறி அமரும் என்று சொல்லத்தக்க நிலையான வாகனங்கள் ஏதும் உண்டா? கிடையாது. அது எப்படி வேண்டுமாயினும் வரலாம். நமக்கு அடையாளம் காணத் தெரிய வேண்டும் அவ்வளவே விஷயம். கவிதையின் முகம் காண நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது ஒன்றே விதி.
அது எந்த வடிவத்திலும் வரலாம், எந்த பொருளின் பேரிலும் வரலாம்.நம்மாழ்வார் வடிவிலும் வரலாம், பாப் மார்லி வடிவிலும் தோன்றலாம். நாட்டுப்புற கீதத்திலும் வரலாம், நவீன கவிதையிலும் வரலாம்.எந்த வடிவில் வந்தாலும் அதில் கவிதை ஏறி அமர்ந்து இருப்பின் ஏற்பது ஒன்றே வழி. கவிதை ஏறி அமர்ந்து வரவில்லை எனில் நவீன கவிதை வடிவமே ஆனாலும் அதுவும் செய்யுளுக்கு சமமே.
ஒவ்வொரு காலத்திலும் கவிதை ஒவ்வொரு வடிவத்தில் நம் முன்னால் வந்து நிற்கிறது. செய்யுளின் வடிவத்தில் கவிதை வந்து நின்ற காலங்கள் உண்டு. யாப்பில், பாடலில், பழமொழிகளில், குறளில் என பல்வேறு வடிவங்களில் அது நம் முன்பாக வந்திருக்கிறது. ஒருவேளை காலம் தான் பொது வடிவை கவிதைக்கு தருகிறதோ என்னமோ? ஒரு காலம் முடியும் போது, கவிதையின் வடிவமும் முற்றுப் பெறுகிறது. அடுத்தது தொடங்குகிறது. தமிழில் நவீன கவிதைகளின் உரைநடை வடிவம் முடிவடைந்து வேறு உரு கொள்வதை வி. சங்கரின் இந்த கவிதைகள் உணர்த்துகின்றன.
இந்த தொகுப்பில் நெடிய மாலைகளை போன்ற நான்கு கவிதைகள் உள்ளன. ஒவ்வொரு மாலையிலும் தொடுக்கப் பட்டிருக்கும் பூக்கள் ஒவ்வொன்றும் மொத்தத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. சில இடங்களில் தனித்தும் அவற்றுக்கு ஒரு அனுபவம் இருந்தாலும் கூட மொத்ததோடு அவை ஒன்றுபடுகின்றன. இந்த அமைப்பு முறை நவீன கவிதை வாசிப்பு பழக்கத்திற்கு உவப்பாக இல்லை.ஆனால் இதனால் உண்டாகும் கவிதை அனுபவம் சிறப்பாக இருக்கிறது. வி. சங்கரின் வெளிப்பாட்டுச் சிறப்பு இது
தமிழில் நீண்ட நெடிய கவிதைகள் உண்டு. நவீன கவிதையில் நகுலன், விக்ரமாதித்யன் ஆகிய இருவரிடமும் நெடிய பாக்கள் உண்டு. சரக்கொன்றை போன்றவை அவை. தனித்து குறைவான பொருளும் ஒட்டு மொத்தத்தில் மிகுதியான பொருளும் தருபவை. வி. சங்கரை அப்படி சொல்ல முடியுமா என்றால் ஒரு ஒப்பீட்டுக்கு வேண்டுமானால் அப்படி சொல்லலாமே அன்றி மொழிப் பெருக்கில் இவர் புதியவராக இருக்கிறார்
சங்கருக்கு விஷேசமான ஒரு மொழி மண்டலம் இந்த கவிதைகளில் அமைந்திருக்கிறது. ஒருவகையில் சொன்னால் நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே சங்கரின் கவிதைகள்.
நவீன தமிழ் கவிதையின் மொழிக் கொள்கைக்கு சங்கரின் கவிதைகளில் இடமே கிடையாது. ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை சங்கரின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன. மாப்பிள்ளை காரில் வரலாம், எந்த காரில் வேண்டுமானாலும் வரலாம். அது ஏற்புடையது தான். திடீரென ஒரு மாப்பிள்ளை நடந்து வந்தால் மாப்பிள்ளை மாதிரியே தோன்ற மாட்டார் தானே இல்லையா? ஒருவேளை கவிஞன் கழுதையில் ஏறி வந்தால் எப்படி எடுத்துக் கொள்வது?
வி. சங்கரின் மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற்றத்தை புறவயமாக ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் நவீன அம்சம் வெண் முரசில் பெறப்பட்டதாக இருக்கிறது. சங்கரின் சரளத்தின் தோற்றுவாய் என ஜெயமோகனின் ' வெண் முரசு ' காவியத்தைச் சொல்லலாம். பெரிய காப்பியங்களில் இப்படியான துணைப் பிரதிகள் தோன்றும் சாத்தியங்கள் உண்டு. சங்கரின் கவிதைகளில் அவை சிறப்பாக உருமாறியிருக்கின்றன என்று சொல்லலாம்
வி. சங்கரின் இந்த கவிதை நூல் தமிழ் கவிதைக்கு ஒரு புதுமையான வரவு என்பதில் சந்தேகமில்லை. நவீன தமிழ் கவிதைகளில் கிழடு தட்டி போயிருக்கும் விறைத்த வசனத் தன்மையில் இது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஒரு காலம் தனது அடுத்த அடியை எடுத்து வைப்பதை இந்த கவிதைகளில் உணர முடிகிறது. இக்கவிதைகளின் அடி நாதமாக, நிழலாக பரவியிருக்கும் ஆன்மீகம் நவீன கவிதைக்கு புதியது. கவிதை அதன் விழிப்புத்தன்மையில் இருந்து விழிப்பற்ற தளத்துக்குள் புரண்டு திரும்புவதை சங்கரின் தொகுப்பு அறிவிக்கிறது. இந்த தொகுப்பை சிலேட் மூலமாக கொண்டு வருவதில் மகிழ்கிறேன்
தமிழில் நவீன கவிதைகள் நிறைய சங்கர்களாலும் ஆகி வருகிறது. இது நன்மை தாமோ பராசக்தி?
(வி.சங்கரின் சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு எழுதிய முன்னுரை)
***
சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க...







0 comments:
Post a Comment