வாமாங்கி (இடபாகத்தாள்)
சமீபத்தில் ஒரு நாள் பண்டர்பூர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.
அங்கு விட்டலனைக் காணவில்லை.
ரகுமாயியின் பக்கத்தில் அவன் நின்றிருக்கும் பீடம் மட்டுமே இருந்தது.
நான் நினைத்துக் கொண்டேன்.
சரி ,
விட்டலன் இல்லையென்றால்
என்ன?
ரகுமாயி இருக்கிறாளே! யாரோ ஒருவரது காலில் தலையை வைத்து வணங்கி விட்டால் போதும்.
முன்னும் பின்னும் மோதிய கூட்டத்தின் நடுவே ரகுமாயியிடம் கேட்டேன்?
எங்கே உன் விட்டலனைக் காணும்? ,எங்கே போனான்?
அவள் ஆச்சரியத்துடன் , எங்கே போனான் என்றால்?
அவன் என் வலது பக்கம் தானே நின்று கொண்டிருந்தான், ஏன் இப்போது இல்லையா ?
நான் திரும்பவும் ஒருமுறை பார்த்து விட்டுச் சொன்னேன், அங்கு அவன் இல்லை!
அவள் உடனே,
என் பக்கத்தில் இருப்பது கூட எனக்கு சரியாகத் தெரிவதில்லை!
கல்லைப்போல ஆகிவிட்டது
என் கழுத்து.
அதை இப்படி அப்படி கூடத் திருப்ப முடியவில்லை!
அவன்,
எப்போது வருகிறான்? எப்போது செல்கிறான்?
எங்கே செல்கிறான்?
என்ன செய்கிறான்? என்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை!
அவன் என் தோளோடு தோள் தொட்டபடி எப்போதும் பக்கத்தில் இருக்கிறான் என, முட்டாள்தனமாக இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்!
ஆடி மாத ஏகாதசி காலங்களில் எத்தனை கோடி மக்கள் வருகிறார்கள்! ஆனால், ஒருவரும் ஏன் என்னிடம் ஒன்றுமே
சொல்லவில்லை?
இன்று ஏன் திடீரென என்னைச் சந்திக்க ஓடி வந்திருக்கிறது இருபத்தெட்டு யுகங்களாகக் காத்திருந்த தனிமை!
அவள் திரும்பவும் கல்லானாள்!
- அருண் கோல்ஹட்கர்
***
அம்மாவின் மறைவுக்கு பின் அப்பா
அம்மாவின் மறைவுக்கு பின் தான் அப்பா மௌனமானார்.
முன்பு போல் சமையலறை மூலையில் உள்ள பூஜை அறையில்
கடவுளைக் குளிப்பாட்டி,
உணவு படைக்கிறார்.
ஆனால், ஆரத்தி எடுக்கும்போது
கை நடுங்குகிறது.
அம்மா வைத்த பாதாம் மரத்தின் கீழ் சேர்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பொருட்டு,
அவள் நினைவில் வாழ அங்கேயே நிழல் ஆகிறார்.
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கட்டி வைத்த பழைய நூல்களை எடுத்து மீண்டும் கட்டி வைக்கிறார்.
செய்தித்தாளை கண்ணுக்கு மிக அருகில் வைத்து படிக்க முடியாதபடி படிக்கிறார்.
சாப்பாட்டுக்குப் பிறகு ஊதுபத்திக் குச்சியால் பல்லின் இடுக்குகளைக்
குத்தியபடியே இருக்கிறார்.
காய்ந்த மாம்பழக் கொட்டையிலி ருந்து வரும்
தளிர் பச்சை முளை போல, பழைய நினைவுகளைச் சொல்ல எண்ணித் தன் மௌனத்தைக் கலைக்கிறார்,
ஆனால் எப்போதாவது.!
- தாஸு வைத்ய்
***
நிழல்
மதிய நேரமிது.
நான் சாலையின் ஓரத்தில் நின்றிருக்கிறேன். என் வலது பக்கமாய் ஒரு பெரிய அடர்ந்த மரம்.
அதன் நிழல் என் முன்னால் விழுகிறது.
மரத்தின் தண்டு கருமையானதாகவும் ,
கிளைகள் சாம்பல் பழுப்பிலும், இலைகள் தளிர் கரும் பச்சையாகவும், அழகிய வண்ண மலர்களும் கூடியதாய்,
நீல வானின் கீழ் நின்றிருக்கிறது.
அதன் கிளையில் மின்னும் கருப்பில் காகம் அமர்ந்திருக்கிறது.
மரம் தன்னுள் பல நிறங்களைக் கொண்டிருந்தாலும்,
அதன் நிழலில் இலைகள், தண்டு கிளைகள், பூ, காகம், என அனைத்துமே கருப்பானது.
நிழல் மரத்தின் அத்தனையையும் ஒன்றாக்கிவிட்டது.
பார்க்க போனால் பேதமற்ற நிழலில் தான் மரத்தின் ஒட்டுமொத்தமும் ஒன்றாய் உயிர்த்துள்ளது!
- ஷாந்தா ஷேல்கே
***








0 comments:
Post a Comment