இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்கா எனும் இலக்கண வடிவில் கவிதைகள் எழுதியவர். 

இவரது வாழ்க்கைக் குறிப்பை வாசிக்கையில், நான்கு ஐந்து திருமணம் செய்து, மூன்று நான்கு விவாகரத்துக்கள் செய்து, ஏககாலத்தில் இரண்டு மூன்று காதலர்களுடன் சேர்ந்து கவிதாயினி கோலாகலமாக வாழ்ந்ததை அறிய முடிகிறது. இவரது வாழ்வு குறித்தும் கலை குறித்தும் நீலி இதழில் எழுத்தாளர் சுசித்ரா விவாதமுகம் கொண்ட கட்டுரை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்.

ஜேன் ஹெர்ஷ் பீல்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்த இசுமி கவிதைகளில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து எனக்கென நான் செய்து வைத்திருந்த  (கவிதைச் சவையின் பொருட்டு  சற்றே சுதந்திரம் எடுத்துக் கொண்ட) மொழியாக்கம் இது. இவரது கவிதையிகளில் வரும் நிலமும் பொழுதும் தமிழின் சங்கக் கவிதைகளுக்கு இணையானது. அதே சமயம் இந்த இசுமி கவிதைகளில்  உள்ள நிலமும் பொழுதும் கொண்ட நிலையாமை, பௌத்தம் சொல்லும் நிலை இன்மை, நிறை இன்மை, சாரம் இன்மை இவற்றுக்கு அருகே வருவது. பௌத்த சாரம் கொண்ட காதல் கவிதைகள் என்று இவற்றை  வரையறை செய்யலாம்.

இசுமி தனது இறுதிக் காலத்தில் பௌத்த பிக்குனி ஆகிவிட்டார் என்றும், கியோட்டோ நகரில் உள்ள செய் ஷின் இன் ஆலயத்தில் இன்றும் இசுமி வணங்கப்படுகிறார் என்றும் அவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது.

1

அதிகாலை

நடுவானில் தனித்திருக்கும் நிலவினைக்

காண்கையில்


எப்பகுதியும் விடுபடாது

என்னை நான் முழுதறிகிறேன்.


2

பாறையின் அருகில் நிற்கும்

இந்தப் பைன்மரத்திற்கு

நினைவுகளும் இருக்கக் கூடுமோ?


​ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்,

அதன் கிளைகள்

நிலம் நோக்கி எவ்விதம் குனிந்திருக்கிறது பாருங்கள்...

3

​எவருக்காக காத்திருந்தேனோ

அவர் இப்போது வந்துவிட்டால்

என்ன செய்வது நான்?

கால்தடங்கள் சிதைக்கலாகுமோ,

காலைப்பனி போர்த்திய

இந்த அழகிய தோட்டத்தை...

4

நினைத்துக் கொண்டிருக்கிறேன் உன்னை


உனக்கான ஏக்கத்தால் 

என் உடல் கொள்ளும் 

ஒளிர்வினை  ஒத்திருக்கின்றன


இந்த சதுப்பு நிலத்தின் 

மின்மினிகள்.

5

வெற்று வானிற்குள்

நீ ஏன் மறைந்து போனாய்?


வீழும் பனித்தூவல்கள் கூட பூமியில்தானே 

விழுகிறது.

6

அறுந்து சிதறும்

மிடற்று ஆரத்து 

மணிகளைப் பற்றுவதினும் கடிது

இந்த வாழ்வைப் பற்றிப் பேணுவது.

7

காதலுக்கு

இவ்வுலகில்

வண்ணமேதுமில்லை.


ஆயினும்

இவ்வளவு ஆழமாக எப்படி என் உடல் உன்னால்  வண்ணம் கொண்டது?

8

இப்பொழுதில்  

என் அணுக்கர்

என் சொந்த உடல்

இவைகளும் கூட 

வேறுபட்ட திசைகளில்

மிதந்து செல்லும்

முகில்களாகிவிடும்

9

​நிகழும் இவ்வுலகு

கனவென நீ அறியாயோ?

முன்பொருகாலம்

உன்னை மிக விழைந்தேன்...

எவ்வாறாயினும்,

கணத்தில் கடந்துசென்ற

ஒன்றுதான் அதுவும்.

10

இவ்வுலகில் இருக்கக்கூடாது எது?

மறப்பவனா?

மறக்கப்படுபவனா?


எது மேலானது? 

இறந்த பிறகும் ஒருவரை விரும்புவதா?

நீங்கள் உயிருடன் இருக்கும்போதே ஒருவரை ஒருவர் காணாதிருப்பதா?


எது சிறப்பு?

நீங்கள் ஏங்கும் தொலைதூர காதலரா?

அல்லது நேசமின்றி நீங்கள் நிதமும் சந்திக்கும் ஒருவரா?


கணந்தோறும் மாறும் விஷயங்களில் 

எதுதான் சற்றேனும் நம்பக்கூடியது?

விரைந்து வீழும் அருவியா?

ஒழுகும் நதியா?

அல்லதிந்த மானுட உலகா?

***

Share:

இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில் - தேவதேவன்

அடுப்பங்கரையிலிருந்தபடியே மனைவி தன் குட்டிக்குழந்தையிடம் கேட்கிறார்: “அப்பா, எங்கே… என்ன செய்துகொண்டிருக்கிறார்?” ஓடிப்போய் அடுக்களைக்கும் கூடத்திற்குமிடையேயுள்ள வாயில்நிலையைப் பற்றி நின்று ஆடியபடி எட்டிப் பார்த்த குழந்தை, கூடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தபடி அம்மாவிடம் “க வி தை…” என ராகம் போட்டது. இங்கேதான் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அதன் பொருள். ஆனால் குழந்தையின் அந்தக் குரலில் திடுக்கிட்டவனாய் அவன் அசந்துவிட்டான். ஒரு கவிதைக்கணம் அது அவனுக்கு. வாழ்வின் இதுபோன்ற ஓர் அனுபவத்தை நாம் சொல்லி மாளாது அல்லது சொல்ல முடியாது.

வள்ளுவர், குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொற்கேளாதவர் என்றார். அது ஒரு பேரனுபவமாய் ஒருவர் இதயத்தைத் தொட்டுவிடும்படியாய் அமைந்துவிட்டதா? அமைந்துவிட்டது என்றால் அடுத்து அடுத்து ஒருவர் அதைப்பற்றிக்கொள்ள, பாதுகாத்துக்கொள்ள, தொடர – எந்தச் சொற்களாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்காத, கறைபட்டிருக்காத ஓர் ஆழ்நிலைச்சொல்லுக்கே இங்கே நாம் ஏங்குகிறோம். புரிந்துகொண்டோமென்றால் பிரச்னை இல்லை. அளவீடுகளுக்குட்பட்ட ஒரு புலனனுபவ உச்சத்திலும் அது தேங்கிக்கிடந்தால் நாம் எதிர்பார்க்கும் ஒரு பெரும்பயன் இல்லையே.

அந்தக் கவிதையைப் படித்துவிட்டு மேற்செல்வோம்.

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு

அடுத்த அறையில் என் மனைவி என் மகளிடம்

“அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார்?”

“க வி தை…”


நான் அந்தச் சொல்லை எத்தனையோ பேர்

எத்தனையோ சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இவ்விதமாய்

அர்த்தபுஷ்டியும் அர்த்தமின்மையும் ஒருங்கிணைந்த

ஓர் அம்ருதத்தன்மையுடன்

ஒரு நாளும் ஒலித்ததில்லை அது.

ஏன்?

அவளுக்குக் கவிதை தெரியும் என்பதாலா?

அல்லது ஏதும் அறியாத சின்னஞ்சிறுமி என்பதாலா?


நான் எழுதி முடித்த கவிதையைத்

தனக்கு வாசித்துக்காட்டியே ஆகவேண்டும் என்பாள் அவள்.

அப்போது அவளுக்குப் புரியுமொரு மொழியில்

மொழிபெயர்ப்பாகும் அக்கவிதை.

நன்றாயிருக்கிறதெனப் பரவசித்து

என் கன்னத்தை

தன் மொட்டுவிரல்களால் எடுத்து முத்தமிடுவாள்.


முதல் ரசனையை ஏற்ற

என் கவிதையின் அந்தக் காட்சியை உற்சாகத்தோடு

நான் என் கவிதை ரசிக நண்பரொருவருக்கு

நடித்துக் காட்டுகையில்

அது அக்கவிதையின்

மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பாகும்,

அதில் ‘எனது கன்னம்’ என்பது

‘வெளி’ என்றாகியிருக்கும்.


அதனாலென்ன?


மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புதானே

முற்றான கவிதை.


சின்னஞ்சிறிய சோகம் (1992)

இந்தக் கவிதையை நாம் விளக்காமலேயே இங்கே புரிந்துகொள்ளப் பார்ப்போம். மீண்டும் நாம் வாழ்க்கை அனுபவத்திற்கே வருவோம். இந்தக் கவிதையை நான் எழுதி முடித்திருந்த சமயத்தில் ஜெயமோகன் என் வீட்டிற்கு வந்திருக்க, நான் அனுபவத்தில் கொண்ட ஆனந்தமே முதன்மையாகி நிற்கிற பரவசத்துடன் அவரிடம் கவிதையைக் காட்டினேன். அவ்வளவு தூரம் நன்றாக, கவிதையாக வரவில்லை என்றார் அவர், ஒரு தர்மசங்கடமான புன்முறுவல் பூத்தவராய். (இப்போது அவர் பார்வை மாறியிருக்கலாம். இது அன்று அக்கணம் நடந்தது அவ்வளவே). ஆனால் நான் எந்த மாதிரியான ஏற்பு, மறுப்பு, வெற்றி(?) தோல்வி(?)களுக்கெல்லாம் என்றுமே கவலைப்படாது எழுதிக்கொண்டிருப்பவன். எனது மிகச்சிறிய எதிர்பார்ப்பு இவற்றிற்கிடையேயான ஒரு நடுவண்பாதைபோலவே தோன்றும். அண்மையில் ஒருவர் ஓர் ஆங்கில நூல் முயற்சியின் கவிதைத் தேர்வுக்கென அவரே இக்கவிதையைத் தேர்ந்தெடுத்தபோதும் புதிதாக என்னிடம் எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை.

பிரமிளைப் போலவே ஜெயமோகனும் கவிதைகள் விஷயத்தில் தன்னை மீறும் கவிதைகளைத் தீர்மானிப்பதில் அக்கறையோடும் கவனத்தோடும் இருப்பவர். புதிய திறப்புக்கான சாத்தியங்கள் அதிலேதான் இருக்கக்கூடும் என்பது அவர் நம்பிக்கை. ஜெயமோகன் தனதைப் பல இடங்களிலும் திரும்பத்திரும்பத் கூறிக்கொண்டிருக்கிறார்.

இது வாழ்வு பற்றிய அடிப்படையையும், நம் பார்வையையும், புரிதலையும் பற்றியதுதான் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

எப்போதுமே என்ன நிகழ்கிறது என்பதை நாம் அறிந்துகொள்வதும் நாம் என்னவாகிறோம் என்பதும்தான் முதன்மையானது என்று அறிகிறோம். கவிதை ஒரு கலையாகத் தன்னை நிறுவுவதற்காகப் பிறக்கவில்லை. தன்னை வெளிப்படுத்தும் அதன் நோக்கமே தனி. பல நேரங்களில் அது தோற்றுக்கிடந்தாலும் அது பற்றி அது கவலைப்படுவதே இல்லை. அதனை நிலைநிறுத்துவது எது என்றால் அதன் உள்ளே ஒரு நம்பகத்தன்மையை உமிழ்ந்தபடி ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஓர் உண்மை, அவ்வளவுதான். ஓளி என்றும் நாம் சொல்லிவந்ததும் இதைத்தான்.

மேற்படி கவிதையில் கவிதைக்கணமாய்த் தோன்றிய ஓர் அனுபவம் (குழந்தையின் குரலைக் கேட்டதும் அடைந்த பெருங்களியும் வியப்பும், விழிப்புமான ஓர் அற்புதம்) எழுத்தின்றி வாழ்விலேயே ஒரு எடுத்துரைப்பாகத் தொடர்கிறது (நண்பனிடம் பகிர்ந்துகொள்வது) அப்போது அதில் ஏற்படும் மாறுதல் மீண்டும், மீண்டும் மீண்டும், தன்னைப் புதுப்பித்துக்கொண்டு செல்லும் கவிதையாகவே உள்ளது. இங்கே அது மிக எளிய அமைப்பிலேயே உள்ளது. இது இன்னும் இன்னுமென இடையறாத ஓர் அலையாகத் தொடர்ந்தால் அதுவே வாழ்வின் உச்சநிலை என்றுகூடச் சொல்லலாம். பிரமிள் நீளமான படிமக் கவிதைகளை எழுதுகையில் செயல்படுவது இந்த வாழ்வின் உயிர்ப்புமிக்க இந்த அலைதான்.

உயிர்ப்புமிக்க வாழ்வும் மரணமுமான நீரோட்டத்தில் எப்போதுமே புதுமையும் புத்துணர்ச்சியும்தானே இருக்கும்?

பெரிய ஆளுமைகளாகப் பெயர்பெற்றவர்கள் தங்கள் வாழ்வாலேயே அதை வெளிப்படுத்தியவர்களே ஒழிய தங்கள் வெளிப்பாட்டுத்திறன்களால் அல்ல. ராமகிருஷ்ணர் வயல்வரப்போரம் வந்து கொண்டிருந்த ஒருநாள் வானத்தில் பறந்துசென்ற ஒரு கொக்கினை அண்ணாந்து பார்க்கையில் மயங்கி விழுந்துவிட்டிருக்கிறார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிற வரி நம்பகத்தன்மையோடுதானே நம்மிடமும் ஒளிர்கிறது. இப்படி பலரது அனுபவங்களைச் சொல்லலாம்.

நாம் இங்கே இப்போது பேசிக்கொண்டிருப்பது கவிதை பற்றியா, கவிதையின் மதம் பற்றியா என்று பிரித்தறிய முடியாத ஒன்றைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோமா? இல்லை, ‘இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்’ எனத் தொடங்கும் ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையை இத்துடன் இணைக்கிறேன். இது மிக முக்கியமானதொரு கவிதை. நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை என்று ஒன்றுதான் உண்டு. நிபந்தனைகளற்றது அது. இதுதான் நமது அனைத்துப் பிரச்னைகளும் தொடங்கும் இடமாகவும், முடிவுக்கு வரும் இடமாகவும் இருப்பது.

பயன்படுத்தப்படாத ஒரு சாலை

இரண்டு சாலைகள் பிரிந்தன

ஒரு மஞ்சள் வனத்தில்

மன்னிக்கவும்,

இரண்டிலும் என்னால்

பயணம் செய்ய இயலாது,

அதில் ஒன்று எந்த அடிவளர்ச்சியில்

தன் பிரிவுத்திருப்பத்தை வைத்திருக்கிறது என

என்னால் இயன்றவரை பார்த்தபடி

ஒரு பயணியாக நின்றுகொண்டிருந்தேன்

நெடுநேரம்.


அப்புறம் சற்று நலமாகத் தோன்றிய

பிறிதொன்றையே தேர்ந்துகொண்டேன்

இதுவே, ஒருவேளை நல்லதொரு

கோரிக்கையாக இருக்கலாமென,

ஏனென்றால் இதுவே பசும்பச்சையுடனும்

தகுதிமிக்க அணிகளுடனும் இருந்தது.

இருந்தும்கூட அதற்காகவே

அதைக் கழித்துச் செல்பவர்கள் மெய்யாகவே

அதைக் கடந்து செல்கிறார்கள் அதைப்போலவே.

அந்தக் காலைப்போதில்

இரண்டுமே ஒன்றுபோலவே கிடந்தன

இலைகளில், மனிதர்களால் மிதியுண்ட

கருந்தடம் இல்லை.

ஓ, நான் அந்த முதலாமதை

மறக்காமல்தான் வைத்திருக்கிறேன்,

பிறிதொரு நாளுக்காக,

வழிநோக்கி நடத்தும் வழியை அறிந்தும்

நான் அய்யுற்றேன், திரும்பிவருவேனோ நான் என.


பெருமூச்சுடனே

நான் இதைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்:

யுக யுகாந்திரங்களாக எங்கோ

இரண்டு சாலைகள் பிரிந்து சென்றன

ஒரு மஞ்சள் வனத்தில்,

நான் ஒன்றைத் தேர்ந்தேன்

மிகக்குறைவாகவே பயன்பட்டிருந்த ஒன்றை

அது உண்டாக்கியுள்ளதுதான் அனைத்து வேறுபாடுகளும்.


ராபர்ட் ஃப்ராஸ்ட்

தமிழில்: தேவதேவன்

பெருங்கவிஞர்கள் எனப்படுவோரின் சிறந்த கவிதைகளெனப் புகழ்பெற்று விளங்கும் கவிதைகள் அனைத்துமே மிக எளிய தரிசனங்களின் பேரொளிர்வும் அரற்றல்களுமாகவே இருப்பதன் இரகசியம், மனிதர்கள் இந்த இடத்திற்கு வந்துசேர வேண்டும், சேர்ந்துவிடவேண்டும் என்ற உள்ளார்ந்த வேகம் ஒன்று மட்டும்தான்.

கவித்துவமிக்கவை என என்ன சொற்களை வைத்திருந்தார் இயேசு? இன்று நாம் தேர்ந்துகொண்டுள்ள நவீன கவிதை எவற்றையெல்லாம் உதறியனவோ அவற்றையெல்லாம்தானே நம் வாழ்வும் உதறியாக வேண்டும்? வாழ்வு ஏன் இத்துணை சிக்கல்களானது, துன்பமானது? தன்மய்யத்தினால்தானே உருவானது பொருள்வயப்பட்ட பேராசைகளும், போட்டி பொறாமைகளும் பிறவும்? இதை ஆதரித்தும் ஆதரிக்கமாலும் ஒட்டி ஒழுகியபடியும், ஒட்டாமலும் ஒரு கவிதையால் எழுந்து நிற்க முடியுமா? புரியச் சிரமமாயிருப்பது போல் தோன்றுகிறதா? இருமைநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு பார்வையை நாம் புரிந்துகொண்டோமானால் மிக எளிதாகவே புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். தன்மய்யத்திற்கும் தன்னியல்பிற்கும் ஏதாவது தொடர்பு, உறவு, உண்டா என்ன? எந்த வெளித்தொடர்புகளுமற்று எத்துணை அழகிய பெரிய தனிமையின் வளத்துடனும் ஒளியுடனும் திகழ்கிறது பாருங்கள் நமது கவிதையும் வாழ்வும்!

தன்னியல்பால் நம் தன்மய்யச் செயல்களை ஊடுறுவ முடிகிறது, கட்டுப்படுத்தமுடிகிறது. ஒரு நடுவண்பாதையில் பயணிக்க முடிகிறது. தன்மய்யச் செயல்களோ தன்னியல்பைவிட்டு விலகி நிற்கத்தான் முடிகிறது. ஆழமற்றவையே அது தரும் களிப்பும் துக்கமும் அங்கே கவிதை இல்லை: அதாவது தன்னியல்பின் தாரகை இல்லை.

***

குழந்தைப்பருவத்தில் ஒருநாள்.; சுற்றி நின்ற வானம் என்றுமில்லாத ஒரு பார்வையுடன் என்றுமில்லாத ஒரு பேருருக்கொண்டதாக நின்றிருந்தது. அதற்குமுன்புவரை அந்தச்சிறுவன் அதுவரை கண்டிராத ஓர் அமைதியில் – சுற்றியிருந்த மண் முதலான மரஞ்செடிகொடிகள் கட்டடங்கள் உட்பட எல்லாப் பொருட்களுமே அவனைப் போலவே அதை உணர்ந்தவாறிருக்க, ஒரு சாலை நடுவே அவன் திகைத்து நின்றுவிட்டான். அன்று அவன் அப்போதுதான் இந்த மண்ணையும் காற்றையும் ஒளியையும் வெளியையும் எல்லா உயிர்களையும் நன்கு கண்டுகொண்டவன் போலானான். எல்லாமும் கூடி இணைந்து உருவாகிக் கொண்ட பொம்மைகள் போலவே மனிதர்களும், விதவிதமான உயிர்களும்… உயிர்பிரிதல் என்பதும் மரணம் என்பதும் என்ன? இறந்தவை பிரிந்து தம் பிறப்பிடத்திற்கே மீண்டு சென்றுவிடுவதுதானே? அதுவரைக்குமாய் அவனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒரு துக்கம் அல்லது துக்கம் போன்று திரண்டுநின்ற ஒன்று இதுதானா? என்ன, இந்தப் பையன் இப்படி இருக்கிறானே என்று அவன் பெற்றோரும் உற்றாரும் சுற்றமும் புரிபடாமல் அப்புறம் கண்டுகொள்வதில் ஆர்வமற்றும் விலகிப்போய்விடுவதெல்லாம் இதைத்தானா?

அந்த அனுபவத்திற்கும் பிந்தைய ஒரு அய்ம்பது ஆண்டுகளுக்கும் பிந்தைய ஒருநாள்தான் இதே போன்றதொரு பெருங்காட்சி அவனது மைத்துனரின் மாமனார் ஒருவர் இறந்துபோன இல்லத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த வேளை… அந்த மனிதர் சற்று அறிமுகமாயிருந்தவர். அவ்வளவுதான். அவர் அப்போது அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளாகவும், சுவராகவும், சுற்றியிருந்த மரங்களாகவும், ஒளியாகவும்,, வானமெங்கும் விரிந்துகிடந்த இடமாகவும் காணப்பட்டார். விந்தைதான் இந்தப் பிரக்ஞைநிலைதான் மனிதமூளை எப்போதுமாய் அடைந்திருக்க வேண்டிய ஒன்று என்பதே அவன் எண்ணமாகியது.

வாசிப்பு தொடங்கிய காலத்தில் அவன் புத்தரையும் பவுத்தத்தையும் படித்து அறிந்தபோது – மரணம்பற்றிய அதே கண்டுபிடிப்பே அதிலும் இருந்ததைக்கண்டபோதுதான் அதுவே உண்மையை அறிவதற்கான கருவியாகச் செயல்பட்டிருப்பதையும் தெரிந்துகொண்டான்.

கிட்டத்தட்ட அனைத்துப் பெரிய ஆளமைகளுமே தங்கள் விழிப்புநிலையைத் தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அடைந்தவர்களாக இருக்கிறார்கள். மிகப்பெரிய அடக்கத்தையும், பார்வையும் அளித்திருக்கிற அந்த விழிப்புநிலையே சரியான மனிதர்களை உருவாக்கக்கூடியது.

அரைகுறை உள்ளொளியே ஒருவனைத் தீவிரமிக்க படைப்பாளியாகவும், போராளிகளாகவும், செயற்பாட்டாளர்களாகவும் கூட ஆக்கியிருக்கிறது. அதேசமயம் எல்லா மனிதர்களிடமுமே கருணைமிக்க தூய அந்த விழிப்புநிலை ஒரு மின்னலாக மெய்யான வாழ்வாக தன்னைக் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது. இதுவே எத்தகைய துயர்நெருப்பால் வதங்கும் மனிதனையும் வாழ்வை நோக்கியே ஈர்க்கும் பாசக்கயிறு மற்றும் கொடை என வேண்டும். பிரமிளின் புகழ்பெற்ற கவிதை ஒன்றைப் பார்க்கலாம்.

பல்லி


கவிதை

இறக்கத்துடிக்கும் வாலா?

உயிரோடு மீண்ட உடலா?


– எழுத்து. செப்டம்பர் 1963.

கவிதை இறக்கத் துடிக்கும் வாலா? இல்லை. உயிரோடு மீண்ட உடலா? ஆம், என்பது இதன் ஆழ்ந்த பொருள். ஓர் உள்ஒளியே இதனை என்றும் ஒளிரக்கூடிய இரத்தினம்போன்ற கவிதையாக மாற்றியிருக்கிறது. பல்லி தனது வாழ்வை மீட்டுக்கொள்வதற்காக தனது வாலை உதிர்த்துவிட்டிருக்கிற விபரம் நாம் விரித்துப்பார்த்துக் கொள்ளக்கூடிய தரிசனமாக, கண்டடைதலாக மாறியிருக்கிறது. தன்னை மீட்டுக்கொள்கிற வாழ்வே கவிதை என்ற நிலையை மனிதர்களை எட்டிவிடத் தூண்டிவிடுவதையே இனி நாம் அடையவும் சுட்டிக்காட்டுபவர்களாகவும் உள்ளோம். உண்மைதான் அதன் வழிகாட்டி.

காலம்காலமாய்த் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மானுடச் சீரழிவைக் குறித்து கவலைகொள்பவர்களும் முழுமையான கண்டடைதலை – பாதையை – கண்டுகொண்டவர்களும் யார்? பெரியபெரிய கவிஞர்களும் மனிதர்களும்கூடத் தோற்றுப்போய்விட்ட கவிதையின் மதத்தை நாம் கண்டும் பற்றியும் பிடித்துக்கொண்டால் அடைந்துவிட மாட்டோமா? முடியும் என்பதே உண்மை. என்றாலும் ஜென் துறவிகளாலும் கவிஞர்களாலும் இன்னும் தன் மேன்நிலையை அடைந்திருக்காத மானுடச் சிக்கல்களையும் விடுதலையையும் மிகத்துல்லியமாக விவரிக்கவும் சுட்டிக்காட்டவும் இயன்ற ஒரு மிகப்பெரிய மானுட ஆச்சரிய நிகழ்வான ஜே.கிருஷ்ணமூர்த்தியாலும்கூட அது நிகழாததின் காரணம். அது எந்த ஒரு தனிமனிதனாலும் உருவாகக் கூடியதும் பின்பற்றிவிடக் கூடியதுமல்ல. ஒவ்வொருவரும் தானே அதைக் கண்டடைந்து இயற்றிக்கொள்ளாதவரை முடிவற்ற பிரச்னைகளைத்தான் மனிதனும் மனித சமூகமும் கொண்டிருக்கும்.

உருவாக வேண்டிய புனிதமான மானுடவாழ்வு துளித்துளிகளாய் நிரம்புகிற ஒரு வெள்ளம் மட்டுமே என்பதுதான் உண்மை. கவிதைக்கணங்களால் மானுடப் பிரக்ஞையில் ஏற்படும் மாற்றங்களால் மட்டுமே சாத்தியமாக உள்ளது அது. வேறு எந்த வழிகளாலும் இல்லை. பிற எல்லாமே இத்துணை காலங்களாயும் தோற்றுக்கொண்டே இருப்பதையும் தோற்றுக்கொண்டே வருவதையும் பார்த்துக்கொண்டேதானே இருக்கிறோம். நோய்நாடி, நோய் முதல்நாடி எனும் ஒரு குறள் ஞாபகம் வருகிறது. வந்தால் போதுமா? ஒவ்வொருவருமே தன்னந்தனியாகவே உணரவும் செயல்பட இருப்பதுமான பாடு இது. குப்பைகளைச் சேகரிக்கும் கல்வி அல்ல இது. கவிதையைக் கண்டடைந்துவிட்ட மனிதர்களாலும் கூடாது இது எனும்போது, நாம் கண்டுபிடிக்கிறோம் மனிதர்கள் மனிதர்கள்மீது தொடரும் உறவுநிலையே அதன் இயக்கம் என்பதை. ஆனால் ஒருவன் உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகு அதற்குத் துணியாத நம் மனித நிலையைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி தனது சொற்பொழிவு ஒன்றில் பேசும்போது ஒரு கவிதைப்படிமத்தையே உதிர்க்க வேண்டியவரானார். அந்தக் கவிதை என்னைக் கவர்ந்த ஒரு கவி ரியோகானிடம் அப்படியே இருந்ததையும், கிருஷ்ணமூர்த்தி இதைக் கண்டிப்பாய் வாசித்திருப்பார் என்றும் அவர் எப்போதுமே தான் கற்ற கல்வியை எல்லாவற்றையுமே சுமையாக இறக்கித்தூரவிட்டவராய் அதன் சாராம்சத்திலேயே திளைப்பவர் என்பதையும் சும்மா நான் இப்போது இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறது ரொம்ப இன்பமாக இருக்கிறது. அந்தக் கவிதையையும், வியப்பு ஏற்பட்ட உடனேயே நான் மளமளவென்று இருவரது பிறவிக்காலத்தைக் குறிப்பெடுத்துப் பார்த்ததையும் காட்டுகிறேன்.

உங்கள் மனம்தான் புத்தர்.

மற்றும்

நாம் கண்டடைந்த வழி என்பது

எங்கும் போகாததே.

வேறெதையும் தேடாதீர்கள் இதைத்தவிர.

தெற்கே நீங்கள் போகவிரும்பும்போது

வடக்குநோக்கி

நீங்கள் உங்கள் வண்டியைச்சுட்டினால்

எப்படி நீங்கள் வந்தடைய முடியும்?


– ரியோகான்

ரியோகானின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் : 1758- 1831 ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பு இறப்பு ஆண்டுகள் : 1894 – 1986. ரியோகானின் இறப்புக்கும் கிருஷ்ணமூர்த்தியின் பிறப்புக்கும் இடையேயுள்ள காலம் 63 ஆண்டுகள். பிறப்புக்கும் பிறப்புக்கும் இடையேயுள்ள ஆண்டுகள் 136. இறப்புக்கும் இறப்புக்குமிடையேயுள்ள காலம் 155. நான் எனது குறிப்பேட்டில் எழுதிப்பார்த்து ‘விளையாடி’க்கொண்டிருந்ததில் ஒரு பகுதியை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

பயணத்தில் பிறந்த கடவுள் - விக்ரமாதித்யன்

 பயணத்தில் பிறந்த கடவுள்

பருவத்திற்கு

முந்தி வந்து கன்னம் தொட்ட

முதல் பருவுக்கு மஞ்சள் முகம்

முதல் பரிசு தந்திருக்கும் பேரழகே

இரவும் பகலும் திரண்டிரு நாட்களாக

புருவங்களுக்கிடையில் குளிர்ந்து மிதக்கும்

விழிகளின் நடுஜாமத்திலிருந்து பாயும்

உன் ஓரப்பார்வைகளின் கதிர்விரல்கள்

கழற்றியிழுக்கின்றன காமத்தின் கபட கவசங்களை.

காத்துக்கொள்ளச் சிரமப்படுகிறேன்.

வீடியோவில் கரையும் திரைப்படக் காட்சி தெளிக்கும் வண்ண ஒளியில்

அபாயச் சங்கிலியாக துப்பட்டாவைப் பிடித்திழுத்ததும் 

நின்று புறப்படும் பெருமூச்சு ரயில்களில் 

ஏறவோ இறங்கவோ நிர்ப்பந்திக்கக்கூடாது என்னை நீ. 

உன்னை முன்னிட்டு

பிறந்தநாள் சிரிப்புடன் எல்லாப் பயணிகளையும் 

அன்புடன் வரவேற்ற ஓட்டுநர், 

பயணச்சீட்டின் பின்புறம் 

மிச்ச பாக்கியை ஹைக்கூவில் எழுதி

நீட்டிய நடத்துநர், 

ஜன்னலோரம் சாக்கிட்டு நின்று 

குண்டு மல்லிக் கூடையை 

புஷ்பக விமானமாக்க சிந்தித்த 

பூ வியாபாரி

இவர்களில் ஒருவனே நானும். 

இருப்பினும்...

உறக்கத்தைப் புடைத்துப் புடைத்து 

இமைகள் துவண்ட இளம்பெண்ணே 

முச்சந்தியிலிருக்கும்

நெடுஞ்சாலைக் காவல் மாடனுக்கு 

காணிக்கை நாணயத்தை 

இருக்கையிலிருந்தே எம்பி 

என் நெஞ்சில்தான் எறிந்திருக்கிறாய்

மறக்கக் கூடாது.

என் இறக்கம்வரை உன் அருளால் 

கடவுளாயிருக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்.

- ஜெ. பிரான்சிஸ் கிருபா

('வலியோடு முறியும் மின்னல்' தொகுப்பு பக்கம்: 72)

பிரமாதமாக ஆரம்பம் கொள்கிறது கவிதை. முதல் நான்கு வரிகளும் அந்த இளம்பெண்ணைப் பற்றிய எழிலார்ந்த வர் ணனை. கற்பனாதீதத்தின் உச்சம் இது. தவறொன்றும் இல்லை. அழகுதெய்வத்தை எவ்விதம் அறிமுகப்படுத்துவது. இவ்விதம் இருப்பது இந்தக் கவிதைக்கு ஏற்புடையதாகவே அமைந்திருக்கிறது.

அடுத்த நான்கடிகளும்கூட அருமையான வர்ணனைதான். பேரழகியைக் கண்ட கிறக்கத்திலும் மயக்கத்திலும் பேசும் மொழிகள்.

பிறகுள்ள ஐந்து வரிகளும் அவனுடைய மேலுமான நிலை மைகளை விவரித்து, வேண்டுகோளில் நிறைவடைகின்றன. அந்தச் சூழலில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர், வந்து நிற்கும் பூவியாபாரி ஆகியோர் எப்படியெல்லாம் அதிசயமாய் மாறிப் போய் விடுகிறார்களோ அதைப் போலவேதான் அவனும் என் பதைப் பதினொரு அடிகளில் விளக்குகிறது.

என்றாலும், அவன் கடவுளாய் இருக்கக் கடமைப்பட்டவனா கிறான். எவ்வாறு. அவள், முச்சந்தியிலிருக்கும் நெடுஞ்சா லைக் காவல் மாடனுக்கு இருக்கையிலிருந்து எம்பி எறிந்த காணிக்கை நாணயம் அவன் நெஞ்சில் விழுந்து விட்டதனால். “இருப்பினும்” என்பதற்குப் பின்னுள்ள இரு வரிகளும் வர்ண னையுடன் கூடிய விளி (முன்னிலையில்) தொடரும் பத்தடிக ளுமே கவிதையை நிறைவடையச் செய்வதாய் இருக்கின்றன.

அவனைக் கடவுளாக்கி விட்டாள், அவள், தன்னை அறி யாமலேயே கடவுளான பிற்பாடு காமம் கொள்ள முடியுமா, கருணை கொள்ளத்தான் முடியும். காத்து நிற்கத்தான் இய லும்

ஓர் எதார்த்த நிகழ்வுதான், ஒரு தருணம்தான் கவிதை விஷ யம். கவிஞனின் கைவண்ணத்தில், சொல்முறையில், கற் பனை நவிற்சியில் கட்டான கவிதையாக வடிவு கொண்டு

விடுவதைக் காணலாம். பேருந்துப் பயணப் பின்புலம், அந் தப் பெண் குறித்த வர்ணனை, சூழல், தன்பாடு, தன்நிலை அனைத்துமே சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பிரான்சிஸ் கிருபா, அடிப்படையிலேயே 'ரொமான்டிக்' கவி ஞர்தான். 'ரொமான்டிசிஸம்' அற்புதமாக வாய்த்திருக்கிறது அவருக்கு. இன்னும் கூட அந்த அம்சத்தை பிரான்சிஸ் வளர்த்தெடுத்துச் செல்லலாம்.

நவீன தமிழ்க்கவிதையில் ஆகச்சிறந்த 'ரொமான்டிக்' கவி தைகள் என்று பார்த்தால், மொத்தத்தில் முப்பதுகூடத் தேறாது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏன் இப்படி நவீனத்துவமே 'ரொமான்டிக்' மனநிலையை அனுமதிக்காது என்பதா, இல்லை, ஒருவேளை, 'ரொமான்டிசிஸுமாக எழுதுவது நவீனகவிதையாகாது என்று நமது நவீனகவிஞர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்களா, அல்லது, நவீனகவிஞர்களே 'ரொமான்டிக்'காக இருக்க மாட்டார்களா. எது எப்படியோ முன் னைத் தமிழில் உள்ளவைபோல, நவீனதமிழில் 'ரொமான் டிக்' கவிதைகள் கணிசமான அளவில் இல்லை என்பதே உண்மை.

நம்முடைய அகப்பாடல்களில் உள்ளமிழ்ந்த 'ரொமான்டிசி ஸம்' உண்டுதான். மிகைக்கூற்றாக இராது என்பது வேறு அக வாழ்வைச் சொல்கையில் எவ்வாறு ரொமான்டிக்காக இல்லா மல் இருக்க முடியும். தன்மையாக, அளவாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம் சங்கத்தில், காமத்துப்பாலில் அநேகம் குறள்கள் ரொமான்டிக்கானவைதாம். சிலம்பில், கோவலன், கண்ணகியைப் பாராட்டிப் பாராட்டிப் பேசுவதும் சரி, 'கானல் வரி' யும் சரி ரொமான்டிக்கானவைதாம். கம்பனின்

கவிதைகளில் ரொமான்டிசிஸத்தின் உச்சத்தைக் காணலாம். முழுக்கமுழுக்க ரொமான்டிக் கவிஞன் அவன்.

பக்தி இலக்கியத்தில் நாச்சியார் திருமொழி பூராவும் ரொமான் டிசிஸம்தான். பெரியாழ்வார் பாசுரங்கள் வேறொரு வகை யில். திருநாவுக்கரசு சுவாமிகளும் மாணிக்கவாசகரும் அகத் துறைப் பாடலன்ன எழுதியவையெல்லாம் ரொமான்டிக்கான வையே. சிற்றிலக்கிய வகையில் பெரும்பாலானவையும் இத் தன்மை வாய்ந்தவையே. 'தனிப்பாடல் திரட்டி'ல்கூட இப்படிப் பல கவிதைகள் உண்டு. பாரதியின் 'கண்ணன்பாட்டு' என்ன. கண்ணதாசன் இதில் மன்னன்.

ந பிச்சமூர்த்தி கவிதைகளில் நல்ல ரொமான்டிக் கவிதைகள் இருக்கின்றன க. நா. சு.வின் முதல் கவிதையே அப்படித்தான். பிரமிளின் பாலியல் கவிதைகள், இன்னும் சில கவிதைகள் அனைத்துமே உச்சபட்ச ரொமான்டிக்கானவை. ஆத்மாநா மிடமிருந்தும் எடுத்துக்காட்டலாம். கலாப்ரியா, தேவதேவன், சுகுமாரன், சமயவேல் கவிதைகளிலிருந்து நிறையவே உதார ணம் கூறலாம்.

யூமா வாசுகி ஒரு தொகுதியே இப்படி எழுதியிருக்கிறார். சம காலக் கவிஞர்களில் லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராம சுப்ரமணியன் கவிதைகள் பலவற்றில் இப்பண்பைப் பார்க்க லாம். எங்கே, எப்படி, எப்போது இந்தக் கண்ணி விடுபட்டுப் போயிற்று. இப்போது என்ன ஆயிற்று.

நவீன கவிதையின் இயல்புக்கு ஏற்ற மாதிரியான ரொமான் டிசிஸத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை. நவீனகவிதை ஏற் றுக்கொள்கிறாற்போல, ரொமான்டிக்காக எழுதுவதை ஒதுக்க வேண்டியதில்லை. கவிதையில், வலிந்து எதையும் திணிக் கவும் வேண்டாம். ஓர்மையாக எந்த ஒன்றையும் கழிக்கவும் வேண்டாம்.

இங்கே எடுத்துக்காட்டிப் பேசும் கவிதைகள் யாவுமே திட் டமிட்டோ தீர்மானித்தோ யோசித்தோ கையாண்டதில்லை. பார்த்ததும் படித்ததும் மனசில் பதிந்தவையே ஆகும். ஒரு கட் டுரையாக எழுதலாமே என்று நினைத்தபோது இவை தற்செ யலாய் வந்து இடம்பிடித்துக் கொண்டன என்பதே நிஜம் தவிரவும், இவை எல்லாமே இயல்பானவையாகவும் எளிமையாக வும் இருப்பதுகூடத் தேர்ந்தெடுத்துக் கொண்டதனால் அல்ல என்பதும் உண்மையே. உள்ளம் விரும்புவதே எழுத்தில் வந்தி ருக்கிறது என்று வேண்டுமானால் ஒத்துக்கொள்ளலாம்தான்.

எளிமை, இயல்பு, நேரடித்தன்மை ஆகிய தன்மைகளோடு அபூர்வமான, அற்புதமான, அதிசயம் போலான கவிதை கள் சாத்தியம் என்பதற்கும் இந்தப் பத்துக் கவிதைகளையே உதாரணமாகச் சொல்ல முடியும். இப்படி இருக்கையில், படி மம், புனைவு, புதிர்த்தன்மை இருண்மை, மயக்கம், மாயம், சோதனை முயற்சி இன்ன பிற அம்சங்கம் கொண்டு ஏன் கவி தைகள் எழுதப்படுகின்றன என்ற நியாயமான கேள்வி வரும். பதிலும் இருக்கிறது.

இப்படி இப்படியான தன்மைகள் எல்லாமும் கவிஞனின் மனோபாவம், மனோதர்மம் சார்ந்தவைதாம். தான் எழுதும் கவிதை வித்யாசமானதாக இருக்க வேண்டும் என்று கவி ஞன் ஒருவன் கருத உரிமையுண்டு. 'கவிதை ஏன் ஒரேமாதிரி இருக்கவேண்டும்' என்று இன்னொரு கவிஞன் நினைத்துப் பார்த்திருக்கலாம். எதார்த்தத்தில் எழுதுவது வேறொரு கவி ஞனுக்கு சுலப சாத்தியமாகப் பட்டு, 'இதை எழுத நான் வேண் டியதில்லை' என்று அவன் எண்ணலாம். சித்துவேலை செய்து பார்ப்போமே என்றுகூட சிந்திக்கலாம், மற்றொரு கவிஞன். அலங்காரங்கள் இருந்தால் அழகாக இருக்குமே என்று பிறிதொருவன் ஆசைப்பட்டிருக்கலாம். வண்ணங்கள் சேர்த்தால் வடிவாயிருக்காதா என விரும்பிச் செய்திருக்கலாம். இதுவரையிலும் யாரும் தொடாத உயரத்தில் தன் கவிதையை ஏற் றிவைத்துப் பார்க்க உளம்கொண்டு வலிந்து வருவித்திருக்க வேண்டும். மொழியின் உச்சபட்ச எல்லையை அடைந்துவிட  வேண்டுமென்ற ஆர்வத்தில் இயற்றியிருக்க வேண்டும். கவி தையின் அதிகபட்ச சாத்தியங்களை எய்திவிட வேண்டும் என்ற வேட்கையில் கட்டியிருக்கலாம். மழையின் பொழிவை எப்படி வகைப்படுத்துவீர்கள். அருவி விழுவதை யார் தீர்மா னிக்க இயலும். ஆற்றின் போக்கை எவர் நிர்ணயிக்க முடியும். தீயின் ஜ்வாலைகளை வகுத்துவைக்க ஆகுமா. காற்றின் வீச் சைக் கட்டுப்படுத்துவது நடக்கக்கூடியதா என்ன.

நிலத்தின் சத்துவமும் சாரமும் எப்படியெப்படியோ அப்படியப்ப டிதான் கண்டுமுதலும் மேனிகாணலும்.

வானம் வைத்திருக்கும் சூரிய - சந்திரர்கள், பிற கோள்கள், நட் சத்திரங்கள், மேகங்கள் இவற்றையெல்லாம் உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைத்துப் பார்க் கக்கூட சாத்தியப்படாது.

கவிமனம் போலக் கவிதை.

பொருத்தமான மேற்கோளுடன் கட்டுரை நிறைவடைகிறது:

"கவிதை ஒரு மோகனமான கனவு” என்பார் புதுமைப்பித்தன். மாபெரும் கனவு. இந்தப் பிரபஞ்சத்தையே அளக்க முயலும் கனவு. எனவே பிரபஞ்சத்திற்குள்பட்ட எல்லாமும் கவிதைக் கான விஷயங்களாகின்றன.

"அனுபவங்களின் சாரத்தை உணர்த்துவதன் மூலம் வாழ்க் கையின் அர்த்தத்தைத் தேடுவதாகக் கவிதை வெளிப்பட வேண்டும். விவரிக்கும்போது அது, கவிதை அல்லாத ஒன்றாகிவிடுகிறது. உணர்த்துதல் மொழிசார்ந்த விஷயமாத லால், சொற்பிரயோகத்தில் கவிதை தீவிர கவனம் கொள்கி றது. பழக்கத்தில் உள்ள சொற்களைக் கூர்மைப்படுத்துகிறது. தனக்கான மொழியைத் தேடிக் கொள்கிறது. நல்ல கவிஞன், அதிலிருந்து அவனுக்கான கவிதைமொழியை உருவாக்கிக் கொள்கிறான்.

"விவரிப்பை விடுத்து, உணர்த்துவதை முதன்மைப்படுத்துவ தால், நவீனகவிதை செறிவான வடிவம் கொள்கிறது. இந்தச் செறிவு, பூங்காக்களில் வெட்டிவிடப்படும் செடியைப் போன் றதல்ல; இயல்பாகக் கிளைத்து வளரும் மரம் போன்றது. இவ்வாறு, ஒருவிதமான கச்சிதமான அமைப்புக்கொண்டதாக கவிதை அமைகிறது. இதனால், இன்றைய கவிதை, பன்மு கத்தன்மை கொண்டதாகிறது. அதேசமயம், பன்முகத்தன்மை கொண்டால் மட்டும்தான் கவிதை என்றும் ஆகிவிடாது.

"கவிதைக்குப் பல முகங்கள், பல குரல்கள் உண்டு. இது கவிஞனின் ஆளுமை சார்ந்தது. அவன் உணர்த்த முனை யும் அனுபவத்தின் தன்மை சார்ந்தது. இதனால் ஒரு கவி ஞனிடமேகூடப் பல குரல்களையும் கேட்கலாம். அந்தக் கவி தைக்குரல், உயிர்த்துடிப்புக் கொண்டதாக இருக்க வேண்டும். உண்மையின் குரலாக இருக்கவேண்டும் பாவனையும் வேஷ மும் கொண்ட குரல், எத்தனைதான் இனிமையானதாயினும், அலங்காரமானதாயினும் ஒருபோதும் கவிதையாகாது.

கவிதை என்றும் புதியதாக இருக்கவேண்டும். கவிஞனின் தனித்துவம், வித்தியாசமான பார்வை, மொழிப்பிரயோகம், இந்தப் புதுமை கவிதையில் கைகூடுவதற்கான காரணங்கள் எனலாம்."

***

ஜெ. பிரான்சிஸ் கிருபா தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

மாலை - அபி

 மாலை - எது

தூசி படிந்த புளியமர வரிசையை

வைதுகொண்டே

மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள்


வண்டுகளும் பறவைகளும்

தோப்புகளுக்குள்

இரைச்சலைக் கிளறி

எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன


இருண்டு நெருங்கி வளைக்கும்

மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில்

இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித்

ததும்புகிறது


என் வலி


பொழுது நிரம்புகிறது

ஒரு இடுக்கு விடாமல்

O

தூசி படிந்த இரைச்சலுக்கடியில்

சாத்வீக கனத்துடன்

இது எது?


இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில்

இடறாத என் பாதங்களினடியில்

இது எது

என் சாரங்களின் திரட்சியுடன்

வலியுடன்

அலங்கரித்த விநோதங்களை

அகற்றிவிட்டு

எளிய பிரமைகளின் வழியே

என்னைச் செலுத்தும்

இது எது?

***

மாலை - தணிவு

காடு எரிந்த கரிக்குவியலில்

மேய்ந்து களைத்துத்

தணிந்தது வெயில்

என்னோடு சேர்ந்து


இதோ இதோ என்று

நீண்டு கொண்டே போன பாதைகள்

மடங்கிப்

பாலையினுள், முள்வெளி மூழ்கச்

சலனமற்று நுழைந்துகொண்டன


விவாதங்கள்

திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன

வழிகளில்

அறைபட்டுத் திரும்பின


முடிவுகள்

அரைகுறைப் படிமங்களாக வந்து

உளறி மறைந்தன


பசியும் நிறைவும்

இரண்டும் ஒன்றாகி

என் தணிவு


வேறொரு விளிம்பைச்

சுட்டிக் காட்டாத

விளிம்பில்

தத்தளிப்பு மறைந்த

என் தணிவு


நிகழும் போதே

நின்றுவிட்ட என் கணம்

குளிரத் தொடங்கியது

என் தணிவைத் தொட்டு

***

மாலை - காத்திருத்தல்

விஷப்புகை மேவிய வானம்

மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது


அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு

மின்னி இடித்து

வெறியோடு வருகின்றன

அல்ல அல்ல அல்ல என்று

பொழிந்து பிரவகிக்க

அழித்துத் துடைத்து எக்களிக்க

வருவது தெரிகிறது


அடர்வனங்களின்

குறுக்கும் நெடுக்குமாக

ஆவேசக் காட்டாறுகள்

பதறி ஓடி

வாழ்வைப் பயிலும்


உண்டு-இல்லை என்பவற்றின் மீது

மோதிச் சிதறி

அகண்டம்

ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது

O

காத்திருக்கிறேன்

இதுவே சமயமென

எனது வருகைக்காக

என் குடிசையில் வாசனை தெளித்து

சுற்றிலும் செடிகொடிகளின்

மயக்கம் தெளிவித்து

அகாலத்திலிருந்து

இந்த மாலைப்பொழுதை விடுவித்து-


காத்திருக்கிறேன்

மறுபுறங்களிலிருந்து

வெற்றி தோல்வியின்றித் திரும்பும்

என் வருகையை எதிர்நோக்கி


விடைகள்

விடைகள்

மிகவும் மெலிந்தவை


ஏதோ சுமந்து வருவன போல

முக்கி முனகி வியர்வை துளித்து

நம் முகத்தில்

திருப்தி தேடுபவை


தரையில் கால்பாவாது

நடக்கவும்

நீரில் நனையாமல்

நீந்தவும்

அறிந்தவை


முந்தாநாள்

ஒரு விடையை

எதிர்ப்பட்டேன்


என்னைப் பார்த்தவுடன்

அது

உடையணிந்து

உருவுகொண்டது


தன்னை ஒருமுறை

சரிபார்த்துக் கொண்டதும்

எங்களைச் சுற்றி

ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு

என்னை நேர்கொண்டது


நான்

ஒன்றும் சொல்லவில்லை


நெளிந்தது


கலைந்து மங்கும்தன்

உருவை

ஒருமித்துக் கொள்ளக்

கவலையோடு முயன்றது


சுற்றிலும் பார்த்துவிட்டு

ஒருமுறை

என்னைத் தொடமுயன்றது


நான்

எதுவுமறியாத

பாவனை காட்டியதில்

ஆறுதலுற்றுக்

கொஞ்சம் நிமிர்ந்தது


எதிர்பாராது வீசிய காற்றில்

இருவரும்

வேறுவேறு திசைகளில்

வீசப்பட்டோம்


திரும்பப்போய்த்

தேடிப்பார்த்த போது

சாமந்திப்பூ இதழ்கள் போல்

பிய்ந்து கிடந்தன

சில

சாகசங்கள் மட்டும் 

***

அபி தமிழ் விக்கி பக்கம்

***


Share:

சில தமிழ்க் கவிதைகள் - தேவதேவன்

அமைதி என்பது...


பொழுதுகளோடு நான் புரிந்த

யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு

நான் உன்னருகே வருகிறேன்.


அமைதி என்பது மரண்த்தறுவாயோ?

வந்தமர்ந்த பறவையினால் 

அசையும் கிளையோ?


வாழ்வின் பொருள் புரியும்போது

உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்

புரிந்துவிடுகிறது.


அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ?

எழுந்துசென்ற பறவையினால் 

அசையும் கிளையோ?

***

சொற்களால் முடியாததை யெல்லாம்

சொல்லிக்கொண்டிருக்கிறது

இயற்கை

***

பொன் இருள் தீபம்

அறியாமையின் பொன் இருள் உன் கண்களில்;

உன் மடியில் பால் கறந்துகொண்டிருக்கும்

அந்த மனிதனின் கண்களிலோ

அனுபவத்தின் ரணம் படிந்த இயலாமைகள்;

வறண்ட தாவரம் போல் நிற்கும்

அவன் மனைவியின் கண்களிலோ

துயரங்களின் ஆறாத காயங்கள்;

கைக்குழந்தையின் வட்டமுகம் முழுக்க

அச்சத்தின் திக்பிரமைக் கறை;

முற்றத்தில் துள்ளி பாண்டி ஆடிக்கொண்டிருக்கும்

சிறுமியிடம் சற்றே எட்டிப் பார்க்கிறது

வாழ்வின் துளி இன்பம்,

பொன் இருளில் ஒளிரும் தீபம்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:
Powered by Blogger.

இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (285) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (285) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive