இவரது வாழ்க்கைக் குறிப்பை வாசிக்கையில், நான்கு ஐந்து திருமணம் செய்து, மூன்று நான்கு விவாகரத்துக்கள் செய்து, ஏககாலத்தில் இரண்டு மூன்று காதலர்களுடன் சேர்ந்து கவிதாயினி கோலாகலமாக வாழ்ந்ததை அறிய முடிகிறது. இவரது வாழ்வு குறித்தும் கலை குறித்தும் நீலி இதழில் எழுத்தாளர் சுசித்ரா விவாதமுகம் கொண்ட கட்டுரை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்.
ஜேன் ஹெர்ஷ் பீல்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்த இசுமி கவிதைகளில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து எனக்கென நான் செய்து வைத்திருந்த (கவிதைச் சவையின் பொருட்டு சற்றே சுதந்திரம் எடுத்துக் கொண்ட) மொழியாக்கம் இது. இவரது கவிதையிகளில் வரும் நிலமும் பொழுதும் தமிழின் சங்கக் கவிதைகளுக்கு இணையானது. அதே சமயம் இந்த இசுமி கவிதைகளில் உள்ள நிலமும் பொழுதும் கொண்ட நிலையாமை, பௌத்தம் சொல்லும் நிலை இன்மை, நிறை இன்மை, சாரம் இன்மை இவற்றுக்கு அருகே வருவது. பௌத்த சாரம் கொண்ட காதல் கவிதைகள் என்று இவற்றை வரையறை செய்யலாம்.
இசுமி தனது இறுதிக் காலத்தில் பௌத்த பிக்குனி ஆகிவிட்டார் என்றும், கியோட்டோ நகரில் உள்ள செய் ஷின் இன் ஆலயத்தில் இன்றும் இசுமி வணங்கப்படுகிறார் என்றும் அவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது.
1
அதிகாலை
நடுவானில் தனித்திருக்கும் நிலவினைக்
காண்கையில்
எப்பகுதியும் விடுபடாது
என்னை நான் முழுதறிகிறேன்.
2
பாறையின் அருகில் நிற்கும்
இந்தப் பைன்மரத்திற்கு
நினைவுகளும் இருக்கக் கூடுமோ?
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்,
அதன் கிளைகள்
நிலம் நோக்கி எவ்விதம் குனிந்திருக்கிறது பாருங்கள்...
3
எவருக்காக காத்திருந்தேனோ
அவர் இப்போது வந்துவிட்டால்
என்ன செய்வது நான்?
கால்தடங்கள் சிதைக்கலாகுமோ,
காலைப்பனி போர்த்திய
இந்த அழகிய தோட்டத்தை...
4
நினைத்துக் கொண்டிருக்கிறேன் உன்னை
உனக்கான ஏக்கத்தால்
என் உடல் கொள்ளும்
ஒளிர்வினை ஒத்திருக்கின்றன
இந்த சதுப்பு நிலத்தின்
மின்மினிகள்.
5
வெற்று வானிற்குள்
நீ ஏன் மறைந்து போனாய்?
வீழும் பனித்தூவல்கள் கூட பூமியில்தானே
விழுகிறது.
6
அறுந்து சிதறும்
மிடற்று ஆரத்து
மணிகளைப் பற்றுவதினும் கடிது
இந்த வாழ்வைப் பற்றிப் பேணுவது.
7
காதலுக்கு
இவ்வுலகில்
வண்ணமேதுமில்லை.
ஆயினும்
இவ்வளவு ஆழமாக எப்படி என் உடல் உன்னால் வண்ணம் கொண்டது?
8
இப்பொழுதில்
என் அணுக்கர்
என் சொந்த உடல்
இவைகளும் கூட
வேறுபட்ட திசைகளில்
மிதந்து செல்லும்
முகில்களாகிவிடும்
9
நிகழும் இவ்வுலகு
கனவென நீ அறியாயோ?
முன்பொருகாலம்
உன்னை மிக விழைந்தேன்...
எவ்வாறாயினும்,
கணத்தில் கடந்துசென்ற
ஒன்றுதான் அதுவும்.
10
இவ்வுலகில் இருக்கக்கூடாது எது?
மறப்பவனா?
மறக்கப்படுபவனா?
எது மேலானது?
இறந்த பிறகும் ஒருவரை விரும்புவதா?
நீங்கள் உயிருடன் இருக்கும்போதே ஒருவரை ஒருவர் காணாதிருப்பதா?
எது சிறப்பு?
நீங்கள் ஏங்கும் தொலைதூர காதலரா?
அல்லது நேசமின்றி நீங்கள் நிதமும் சந்திக்கும் ஒருவரா?
கணந்தோறும் மாறும் விஷயங்களில்
எதுதான் சற்றேனும் நம்பக்கூடியது?
விரைந்து வீழும் அருவியா?
ஒழுகும் நதியா?
அல்லதிந்த மானுட உலகா?
***







0 comments:
Post a Comment