'ஞானத்தின் பாதைக்கு கற்பனைகள் தடையா?' எனும் இதே கேள்வியை பிரமிள் கவிதையாக்கியிருக்கிறார். பிரமிளின் தொடக்க காலக் கவிதைகளில் ஒன்று இது (எழுத்து இதழ், 1961, வயது 22). ஒரு படைப்பாளியின் ஆரம்பகால படைப்புகளை வாசிப்பது, கலைஞர்களின் பழைய புகைப்படங்களை நோக்கி வியக்கும் அனுபவத்திற்கு ஒப்பானது. பிரமிள் இளமையிலேயே தத்துவார்த்தமான கேள்விகளைத் தாங்கி அலையும் கவிஞராக இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக அவருடைய தொடக்க காலக் கவிதைகள் பலவற்றைச் சுட்டலாம், அதிலொன்று இது.
ஞானத்தை அடைய மனதை வெண்தாள்ச் சூன்யமாக்கிக்கொள்ளவேண்டுமா? ('வெண்தாள்ச் சூன்யம்' – பிரமிளின் 'இறப்பு' கவிதையின் கடைசி வரிகள்). இந்தக் கவிதையில் பிரபஞ்சத்தின் இயக்கங்களை முன்வைத்து ஒரு தேடலைச் சொல்லி, பின் அங்கிருந்து பதிலின் இழையற்ற, திரையகன்ற கேள்விகளின் பாதையை உத்தேசிக்கிறார்.
கேள்விகள்
தாய்ப்பரிதி ஆகர்ஷண
முலையுறிஞ்சும் பூமிக்கு
வானெல்லாம் தொட்டிலோ?
சந்திரனில் வழிகின்ற
விந்தின்னும் கருவுற்றுத்
திரளாத காரணமென்?
தீ முளைத்துக் காற்று எனும்
பூமியிலே வேரைவிட்டால்
பூக்கிறது எத்திசையில்?
தெரியாது?
அறிவின் குரலடைத்த
கவிதைக் கவளத்தைக்
கக்கிஎறிந்துவிடு.
ஞானத்துப் பயணத்தில்
இடறும் கற்பனையின் கல்
எட்டி உதைத்துப்போ.
மூளை மலர்த்தடத்தில்
ஏதோ நாற்றமிது
மூக்கைப் பொத்திநட.
அப்பால்…
பதிலின் இழையற்ற
கேள்வித் திரையகலும்…
பாதை எதிர் செல்லும்…
***
இந்தக் கவிதையின் வரிகளில் பிரமிள் காட்சிப்படுத்தும் வீடும், சுவர்களும் எத்தகையது? அது பருவடிவமானதல்ல. லௌதிகன் ஒருவனுடைய வீட்டின் சுவர்கள் உறவுகள், செல்வம், எதிர்பார்ப்பு, அதிகாரம் போன்ற பல கூறுகளால் ஆனது. கவிஞன் இருண்ட கானகக் குரல்களுடன் நகரச் சந்தையில் அலைபவன். சராசரி வாழ்வின் சுவர்கள் மூடும் வீட்டை அருவறுக்கிறான், அதன் பசியால் விழுங்கப்பட மறுக்கிறான். இந்தக் கவிதை சுட்டும் வீட்டின் சுவர்கள் தத்துவம், ஆத்மஞானம், விடுதலை என ஆதர்ச நிலைகளால் ஆனது. கவிஞன் வாழ்வின் சாரத்தை அறிய, எல்லாவற்றுக்குமான ஆதிக் காரணத்தைத் தேடி, அதனுள் நுழையும் கருவாக மாற விரும்புகிறான். அந்தக் கரு வளர்ந்தால் அனைத்தும் அறிந்த மெய்ஞானியாக உருமாறுமோ? பிரமிள் இதைத்தான் விழைகிறாரா?
சுவர்கள் (1973)
மனசின் இருண்ட அநுஷ்டானங்கள் என்னை வீடு திரும்ப
விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றன.
இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒன்று நகரச் சந்தையில்
அலைகிறது.
வீடு திரும்பும் வழி தெரியவில்லை.
அன்று –
ஒரு மாட்டுக் கொட்டிலின் மஞ்சள் வைக்கோல் மீது பிறந்து
கிடந்த சிசு மூன்று சக்ரவர்த்திகளை நோக்கித் திறந்த பாலை
வெளியினூடே ஒரு நக்ஷத்திரத்தின் அழுகையில் அழைத்து வழி
காட்டிற்று.
நான் சக்ரவர்த்தியுமல்லன்.
சூழச் சுவர்களின் இனம் மூடும் நகர் ஒரு திறந்த வெளியுமல்ல –
பாலையாயினும்.
வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று
நிற்கக் கண்டவனாயினும்,
வீடு,
ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்.
இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல.
கருவாகி
புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச்சுனையைக் காண.
***
***
0 comments:
Post a Comment