வேழம்: மூன்று சங்கக் கவிதைகள் - கடலூர் சீனு

1

நான் யானைகள் குறித்து எழுதியவை அனைத்தையும் வாசித்திருந்த நண்பர் ஒருவர் எனக்கு யானைகள் மீதான ஈடுபாடு என்பது ஜெயமோகன் ஆக்கங்கள் வழியே உருவான ஒன்றா என வினவியிருந்தார்.

அன்றைய பெரும்பாலான இந்தியக் குழந்தைகள் போலவே எனக்கும் முதன் முதலாக யானைகள் மீதான பிரியம் என்பது பிள்ளையார் சிலை வழியே உருவானதுதான். அடுத்ததாக வலிமையாக வந்து விழுந்த விதை, புகை மூட்டமான பாலியத்தில் திருக்கடையூர் கோயில் வளாகத்தில் நான் கண்ட மிக மிக குட்டியான யானைக் கன்று. அம்மா யானையை விட்டுப் பிரித்த குட்டியாக இருக்க கூடும்  மொத்தமே மூன்றரை அடி உயரம்தான் இருந்தது. ஒயர் கூடை ஒன்றை எற்றி எறிவதும், ஓடிச் சென்று அதை தூக்கி வீசுவதும் என விளையாடிக்கொண்டு இருந்தது. நானும் அதனுடன் சென்று விளையாட ஓடினேன். அது விளையாட்டுத் தனமாக என்னை முட்டி எறிந்து விடும் என்று பாகனும அப்பாவும் என்னை அதன் அருகே விட வில்லை. கோயில் முடித்து திரும்பும் போது, சந்தன வண்ணப் பசு ஒன்றிடம் ப்ரும்மாண்ட கருப்பு மை உருண்டை போல அண்டி நின்று அதன் மடியில்  பால் குடித்துக்கொண்டு இருந்தது அந்தக் குட்டி யானை.

கொஞ்சம் வளர்ந்த பிறகு கண்ட  திருவாரூர் திருவிழா ஒன்றில்  நன்கு அலங்கரிக்கப்பட்டு, பொன் வண்ண அம்பாரியில் வைத்திருந்த கடவுள் சிலையை சுமந்த, தந்தங்கள் வளர்ந்து, முழுத்து, முனை சுருட்டிய துதிக்கை மெல்ல இடம் வலம் அசைய நடந்து வந்த வேழம். அதன் இணையற்ற கம்பீரம். 

மறக்க முடியாதவள் செங்கமலம். விளையாட்டுப் பிள்ளை. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சில வருடம் இருந்தவள். வீதி உலா போகும் போதெல்லாம் எங்கள் கடைக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பவன் ஓட்டலுக்கு வருவாள். அவள் வருவது என்பது ஓட்டல் முதலாளிக்கு மிகுந்த மகிழ்வு அளிக்கும் ஒன்று. அவர் கையால் சுட்டு அடுக்கி எடுத்து வந்து தோசைகளை மடித்து மடித்து அவளுக்கு ஊட்டி விடுவார். உணவு முடிந்து இறுதியாக ஓட்டல் பக்கத்திலேயே இருக்கும் பழனி பெட்டிக் கடையில், பழனி பாட்டிலை திறக்க, அவளே கடலை மிட்டாய் உருண்டைகளை துதிக்கை விட்டு எடுத்துக் கொள்வாள். இந்த தொடர் நிகழ்வில் ஒரு நாள், கடலை மிட்டாய் பாட்டிலை திறக்க சற்றே தாமதம். அவள் துதிக்கை கொண்டு விளையாட்டாக அடிக்க, கடையே ஆடி விட்டது. பழனினிக்கு அன்று ஏதோ எரிச்சல். துதிக்கையிலேயே சுளீர் என்று ஒரு அடி போட்டார். அவள் துதிக்கையை எடுத்துக்கொண்டு பின்னடி வைத்து விலகினாள். அவ்வளவுதான். அதன் பிறகு அவள் அந்த ஓட்டல் பக்கமே வருவதையே நிறுத்தி விட்டாள். முதலாளி உணவுகளுடன் அவள் இருக்கும் இடம் போய் சமாதானம் செய்து பார்த்தார். பழனி வெல்ல உருண்டைகளுடன் சென்று அவளைப் போய் பார்த்தார். அவள் துதிக்கையை வீசி பழனியை அருகே வராதே என்று சொல்லி விட்டாள். இறுதிவரை அவள் சமாதானம் அடையவே இல்லை.அப்படி ஒரு கோவம் வீம்பு அவளுக்கு.

வேறொரு கோயிலில் நான் கண்ட முதியவள். முற்ற முழுதான மூப்பு. கண் தெரியாது. பிரிந்த பிரம்புக் கூடை போல எலும்புகள் தெரியும் மண் வண்ண உடல். துவண்டு ஓய்ந்து கிடக்கும் காதுகள் கேட்காது. மரணம் வேண்டி காத்து நிற்கிறாள். அவள் சரிந்து விடாது அவளை இரும்பு கழிகள் கொண்ட சட்டகத்தில் தொட்டில் செய்து அதில் பொதிந்து நிறுத்தி வைத்திருந்தார்கள். அவள் வலது பக்கம் நாற்காலி போட்டு பாகன் அமர்ந்திருக்க, அவள் துதிக்கை நுனி அவனது இடது பாதத்தை சுழற்றிப் பிடித்திருந்தது. அந்தப் பிடியில் எழுந்த என்னை விட்டுப் போய்விடாதே எனும் இறைஞ்சல்.

அனைத்துக்கும் மேலாக திருச்சியில் என் பாட்டி வீட்டு மாடியில் நின்று நான் கண்ட கோயில் யானை ஒன்றின் இறுதி ஊர்வலம். க்ரேன் இணைந்த திறந்த நிலை ட்ரக்கில் முழுக்க முழுக்க பூ மலைக்குள் புதைந்திருந்தாள் துளசி. இரு பக்கமும் மக்கள் பெண்கள் குழந்தைகள் திரள். பெண்கள் எல்லோரும் கண்ணீர் விட்டழ அவள் இறுதி ஊர்வலம் போனாள். அவளது விழுந்து கிடந்த செயல் நின்ற துதிக்கை இப்போதும் என் காய்ச்சல் கனவுகளில் வருவது. இப்படி பல பத்து சித்திரங்களுக்குப் பிறகே எனக்கு ஜெயமோகன் உலகமும் அவரது யானைகளும் அறிமுகம் ஆனது.இதுவரை நான் கண்ட யானைகள் வழியே எனக்குள் இருந்த யானைக்கு அல்லது யானைமை க்கு முகம் தந்தவர் ஜெயமோகன்.

2

ஒரு அன்னை தனது மடியில் இருத்தி, தன் குழந்தைக்கு நிலா காட்டி அதோ நிலா என்றபடி சோறூட்டுகிறாள். உண்மையில் அந்த நிலா முற்ற முழுதாக புறத்தில்தான் இருக்கிறதா? நமது ஐம்புலன் வழியே அன்னை சொல்லிய நிலா எனும் (ஒலி) மொழி வழியேதான் அது நம்முள் அனுபவம் பெறுகிறதா? 

இந்திய மரபு, நாம் அறிவது அனைத்தும் நமது முன் அறிவின் துணை கொண்டே நிகழ்கிறது என்று சொல்கிறது. முற்ற முழுதான புறவயம் என்ற எதுவும் இங்கு இல்லை. இங்கு உள்ள புறம் அனைத்தும் நாணயத்தின் ஒரு பகுதி மட்டுமே, அதன் மற்றொரு பகுதி நமது அகம் பிணைந்தது. அகமும் புறமும் ஒரே நாணயத்தின் இரு பகுதியாக இங்கே இருக்கிறது.

நனவு, கனவு, ஆழ் நிலை இந்த மூன்றும் சித்தம் என்பதன் மேல் நிகழ்வது. இந்த ஆழ் நிலையில் உள்ள முன்னறிவாக பொதிந்த நிலவையே, இந்த ஆழ் நிலையில் உள்ள முன்னறிவில் எழும் நிலா எனும் (ஒலி) மொழி கொண்டு, புற வயமாக வெளியே இருக்கும் நிலா எனும் (ஒலி) மொழி வழியே, மேலே தூரத்தில் இருக்கும் நிலா வாக அறிகிறோம். 

சித்தம், ஆழ் நிலை, கனவு நிலை, நனவு நிலை, சுயம், ஞான இந்திரியங்கள்,  கர்ம இந்திரியங்கள், நான், அது, நாமம், ரூபம், பொருள், எண்ணிக்கை, இடம், வெளி என்று விரியும் தொடரில் ஒரே நேர்கோட்டில் பிரிவின்றி பொருந்தி அமைந்தவை அகமும் புறமும். 

இதில் பேரிலக்கியவாதிகளின் பணி என்பது வெளியில் உள்ளவற்றை மொழி வழியே வாசகனின் நனவு நிலை கனவு நிலை கடந்து அவனது ஆழ் நிலைக்குள் கடத்துவது. கூடவே அவனது ஆழ் நிலையின் சித்திரங்களை மொழி வழியே அவனது கனவு நிலை,  நனவு நிலை கடந்து அவனது பிரத்யேக கற்பனை 'வெளியில்' வைத்து அவனுக்கே துலக்கிக் காட்டுவது. 

அந்த வகையில் ஜெயமோகனின் யானைகள் வாசகனின் நனவு கடந்து கனவு கடந்து அவனது ஆழத்துக்குள் அடி எடுத்து வைத்து இறங்கி செல்வது. அதே போல வாசகனின் ஆழ் கனவில் இருந்து அவன் கனவுநிலை நனவு நிலையை கிழித்து அவனது பிரத்யேக கற்பனை வெளிக்குள் எழுந்து வருவது.

அந்த வகையில் ஜெயமோகனின் நனவு நிலை கனவு நிலை தாண்டி அவரது ஆழத்தில் உறைபவர் சங்க கால தமிழ் நிலத்தின் பெரும் கவிஞன்  கபிலர் என்று  ஒவ்வொரு முறையும் கபிலர் கவிதையை கடக்கும் போதும் எனக்குத் தோன்றும். அகம் புறம் எனும் தமிழ் நிலத்தின் முதல் தத்துவ போதத்தைக் கவிதைகளில் அள்ளி வந்த கவிஞன்.

3

சங்க இலக்கியங்கள் ஏட்டில் இருந்து அச்சுக்கு மாறிய காலம், பின்னர் எழுந்த உரை மரபுக் காலம், இவற்றை கழித்துவிட்டுப் பார்த்தால் சங்கக் கவிதைகளுக்கு நிகழ்ந்தது எல்லாம் அதன் போதாத காலம்தான். சங்க இலக்கியம் மொத்தத்தையும் ஈரல் குடல் குந்தாணி என கழற்றி போட்ட  எத்தனை எத்தனை ஆய்வுகள். முனைவர் சாரதாம்பாள் கிரேக்க செவ்வியல் மரபுடன் சங்க இலக்கியங்களை ஒப்பு நோக்கி நிகழ்த்திய ஆய்வு, தமிழ்நாட்டு பறவைகள் நூல், எட்கர் தர்ட்சன் எழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதிகளை மொழியாக்கம் செய்த க. ரத்னம் அவர்கள் யானைகளின் நடத்தையை சங்க இலக்கிய யானைகளின் நடத்தைகளுடன் ஒப்பு நோக்கி எழுதிய சங்க இலக்கியத்தில் யானைகள் எனும் சிறிய நூல், இப்படி பட்ட நல்ல நூல்கள் ஒரு இருபது சதவீதத்தை கழித்து விட்டால், எஞ்சிய எண்பது சதவீதமும் பிணக்கூராய்வு அறிக்கை எனும் வகைமைக்குள் மட்டுமே வரும். 

இவற்றையெல்லாம் கடந்து சங்கக் கவிதைகள் உயிருடன் இருக்கக் காரணம், அதில் இலங்கும் கபிலர் போன்ற பெரும் கவிகளின் ஆக்கம்தான். இணையம் இக்காலத்தில் அளிக்கும் வசதி மிகப் பெரிது. Tamilvu போன்ற தளங்களில் நுழைந்து, தேடு எனும் கட்டதுக்குள் வேழம் என தட்டினால் மட்டுமே போதும், சங்க இலக்கியத்தில் வேழம் என்ற சொல் பயின்று வரும் எல்லா பாடல்களையும் அது கொண்டு வந்து விடுகிறது. யானைகளில் ஆணுக்கு வேழம் என்றும் பெண்ணுக்கு பிடி என்றும் பெயரிட்டு குறைந்தது ஒரு 20 பெயர்கள் வரை யானைகளுக்கு சங்க இலக்கியங்களில் உண்டு. பெயரைத் தட்டி சங்க கால யானைகள் என்னென்ன செய்தன என்று வாசிப்பது சுவையான அனுபவம்.

அரசர்கள் யானைப்படை வைத்திருந்திருக்கிறார்கள். அவை கோட்டை கதவுகளை உடைகின்றன. எதிரிகளை துவம்சம் செய்கின்றன. வேலைக்கு தேவையான யானைகளை குழி தோண்டி பிடிக்கிறார்கள். தந்தம் வேண்டி புலி வசம் கடி பட்ட யானையைத் தேடித் துரத்தி வேட்டையாடுகிறார்கள். புலவர்களுக்கு பரிசாக யானைகள் கிடைக்கிறது. இத்யாதி இத்யாதி என நீளும் இவை எல்லாம் தகவல்கள். இவற்றை கடந்து கலை என உயரும் சித்திரங்கள் பற்பல உண்டு. 

வரனுறல் அறியாச் சோலையை ஊடறுத்து தனது பிடியைக் காணச் செல்கிறது ஓர் வேழம். அதன் வழியில் ஒரு புலி குறுக்கிடுகிறது. அதை கொம்பால் குத்திக் கிழித்து தூர எறிந்து விட்டு நடக்கிறது வேழம். இந்த குருதி வாடையுடன் தனது காதற்பிடியை காணச் செல்ல அது விரும்ப வில்லை. எனவே போகும் வழியில் வீழும் அருவியில் தனது கொம்புகளை அது கழுவிக் கொள்கிறது. எழுதியவர் வேறு யார் கபிலர்தான். இப்படி சங்க இலக்கியம் காட்டும் பல நூறு யானை குறித்த சித்திரங்களை அடிப்படையில் மூன்று வகைமையில் அடக்கலாம். முதலாவது யானையின் ஆளுமையை மனிதனில் ஏற்றிக் காட்டும் சித்திரம். இரண்டாவது தனது இயல்பில்  யானையும் மனிதனும் சந்தித்துக் கொள்ளும் சித்திரம். மூன்றாவது மனித அம்சத்தை யானைகளில் ஏற்றிக் காட்டும் சித்திரம்.

முதல் வகைமையில் மிகச்சிறந்த உதாரணம் கீழே, ஜெயமோகன் அவர்களுக்கு பிடித்த கவிதையும் கூட.


நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 

ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 

சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 


கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 

நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 

கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 

    

கீழும் மேலும் காப்போர் நீத்த 

வறுந்தலைப் பெருங்களிறு போலத் 

தமியன் வந்தோன் பனியலை நிலையே.


(உரை)


இரவு. நிலவும் இல்லாது போன இருள். 

தோழி ! நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று,  //தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது;//

ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின், //ஓவியம் வரைந்தாற் போன்ற அழகிய அகன்ற இடங்கொண்ட வீட்டில்//

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 

சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள், //அழகிய பெண்ணான உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள்.//

கீழும் மேலும் காப்போர் நீத்த 

வறுந்தலைப் பெருங்களிறு போலத் 

தமியன் வந்தோன் பனியலை நிலையே. //கீழிருந்து தன்னை நடத்துவோரும், மேலமர்ந்து தன்னைச் செலுத்துவோரும் இல்லாது தனித்து வந்த சிறிய தலையைக்கொண்ட பெரிய களிறினைப் போல் தனித்து வந்துள்ளான் தலைவன். நீ வருந்த வேண்டாம்.//

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 

நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 

கண்டனம் வருகஞ் சென்மோ தோழி, //கீழே விழுந்து இழந்து போன நல்ல அணிகலன் கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியைத் தரக்கூடிய அவனது மார்பை சேர்ந்து மெல்ல வருடுவோமா, ஆராய்ந்து கூறுவாயாக!//

இந்த கவிதையை அழகாக்கும் விஷயங்கள் மூன்று. ஓவியம் போல உறைந்த வீடு நோக்கி காதலன் யானை போல வருகிறான். எப்படிப்பட்ட யானை என்றால் சிறிய தலை கொண்ட யானை. பொதுவாக ஆங்கிலத்தில் பாடி பில்டர் எனப்படும் ஆணழகர் பலரை காணும் போது அவர்கள் உடலைவிட அவர்களின் தலை மிக சிறியதாக தெரியும். இந்த உடல் வழிப்பட்ட 'ஆல்ஃபா மேல்' தனம்தான் இங்கே யானையுடன் ஒப்பிடப் படுகிறது. இரண்டாவது அழகு இருளுக்குள் நடந்து வரும் யானை என்பது. அத்தனை பெரிய உருவம், அத்தனை ஆற்றல் கொண்ட, எடை கொண்ட உயிர், இருளுக்குள் இருளாக ஒரு சிறிய ஒலி கூட எழுப்பாமல் நகரும் வல்லமை கொண்டது. காதலன் அப்படித்தான் வருகிறான். மூன்றாவதும் இணையற்றதுமான அழகு, மேலும் கீழும் பாகன் அற்ற யானை என்பது. உண்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் அந்த வேழம் பழக்கி எடுத்த வேழமா? அல்லது காட்டுயிர் வேழமா? தெரியாது. வந்துகொண்டிருக்கும் காதலனும் இப்போது இப்படிப்பட்டவன்தான்.

இரண்டாவது வகைமையில் எனக்குப் பிடித்த கவிதை கீழே,


முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி

நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,

முன் நாள் இனியது ஆகி, பின் நாள்

அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,

பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.


(உரை)

முழந்தாள் இரு பிடி - முழந்தாளையுடைய கரிய பிடியினது, கய தலை குழவி - மெல்லிய தலையையுடைய கன்று, நறவு மலி பாக்கத்து - கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள் ஈன்ற - குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி - குறிய கையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடி, முன் நாள் இனியதாகி - முற்காலத்தில் இனிமையைத் தருவதாகி, பின் நாள் - பிற்காலத்தில், அவர் தினை மேய்தந்தாங்கு - அவர்களுடைய தினையை மேய்ந்தாற் போல, அவர் நகை விளையாட்டு - தலைவர் நம்மோடு முன்பு நகைத்து விளையாடியது, பகையாகின்று - இப்போது பகைமையையுடையதாகின்றது.

முழந்தாள் எனில் முழவு போன்ற கால். சங்க இலக்கியத்தில் முழவு பல்வேறு சித்திரங்களுக்கு உபமானமாக பயின்று வரும். முழவு என்ன வடிவம் கொண்டதோ அந்த வடிவில் கால்களைக் கொண்ட பிடி. அதன் குட்டி, குறத்தி பிள்ளைகளுடன் சுற்றி ஆடி விளையாடுகிறது. குறி (குறில்) இறை எனில் பிஞ்சு கை (கொண்ட குழந்தை). யானை குட்டியின் குட்டி துதிக்கையும் அந்த பிஞ்சு கை போன்றதே. அவர்கள் கூடி விளையாடுகிறார்கள். இது முன்னர். பின்னர் அந்த குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள். பழைய படியே அந்த யானைகள் அவர்களுடன் விளையாட ஓடுகிறது. இப்போது அந்த யானைகள் அவர்களின் வயலை பாழ் படுத்துவதாக சொல்லி அவர்களால் விரட்டியடிக்கப்படுகிறது. நாம் என்ற நிலை நழுவி நாம் அவை எனும் பிரிவினை நிலை நிலவுடைமை வழியே உருவாகி வரும் சித்திரத்தை உணர்ச்சிகள் பொங்கும் வண்ணம் அளிக்கும் கவிதை. 

மூன்றாவது வகைமையில் பல கவிதைகள் உண்டு. இந்த வகைமையில் உச்சம் வேழத்தில் தந்தைமை எழும் கணங்களை எழுதிய கவிதைகள் என்று சொல்லலாம். சங்க இலக்கியம் நெடுக யானைக்கும் புலிக்கும் ஆகாத நிலையே காணக் கிடைக்கிறது. புலியுடன் பொருதி பலம் குன்றிய வேழத்தை அதன் தந்தம் வேண்டி வேட்டுவர் வேட்டையாடுகிறார்கள். புலியால் காயம்பட்ட வேழம் மூங்கிகள் உரசுவுது போலும் ஒலியில் தனது வலியை பிடிக்கு தெரிவிக்கிறது. செம்மலர் பூத்து செறிந்த கிளையை (புலியோ என மயங்கி) புலியை தாக்குவது போல தாக்கி உடைக்கிறது. இன்னும் பல ஆனால் அதே வேழம் தனது கன்றுக்கு புலியால் ஆபத்து எனில் எடுக்கும் ரௌத்ர உருவமே வேறு.  உதாரணம் கீழ்கண்ட அகநானூறு 347 ஆவது கவிதையின் பின்பாதி


மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,  

ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி

வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்,

கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி

கை தலை வைத்த மையல் விதுப்பொடு,

கெடு மகப் பெண்டிரின் தேரும்  

நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

மழை இல்லாது மூங்கிலும் காய்ந்து போன காடு. (நீர் வேண்டி யானைகள் கொள்ளும் தவிப்பு சங்க கவிதைகள் நெடுக காண கிடைக்கிறது.) அங்கே யானைக் குடும்பத்தை தாக்க வருகிறது புலி. யானைகள் நீரின்றி அது கொண்ட விடாய் அமையாது. புலிக்கு நீருக்கு பதில் குருதியே போதும், எனில் அந்தப் புலி எந்த அளவு குருதி தாகம் கொண்டிருக்கும் என்று யூகிக்க முடியும். அப்படிப்பட்ட புலி அந்த யானைக் குடும்பத்தின் வழியில் குறுக்கிடுகிறது. உச்ச ஆக்ரோஷத்தில் வேழம் எழுப்பும் பிளிறலில் அதன் பிடியே பயந்து போய் குட்டியை விட்டு விட்டு ஓடி விடுகிறது.

பின்னர் சூழல் அமைதி கொண்டதும், தொலைந்த தன் குழந்தையை தலையில் கை வைத்தபடி பதறியபடி தேடிக் கொண்டு ஓடும் தாய் போல, அந்தப் பிடி துதிக்கையை உயர்த்தி தலையில் வைத்தபடி, பதற்றத்துடன் தனது குட்டியைத் தேடி ஓடுகிறது.

(ஒண் கேழ் வயப் புலி = அடர் வண்ணமும் வலிமையும் கொண்ட புலி.

குவவு அடி = பனை மரத்தின் அடி போல உறுதியான கால். இங்கே மற்றொரு நுண் விவரணையும் சங்கக் கவிதைகளில் உண்டு. பெரும்பாலும் பிடி யானையின் யின் கால்கள் மட்டுமே முழவு உடன் ஒப்புவமை செய்யப் படுகிறது. வேழத்தின் கால்களுக்கு வேறு)

மற்றொரு கவிதையில் வரும் வேழம், தூரத்தில் எழும் புலியின் உறுமல் கேட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் தன் குட்டி பயந்து விழித்து விடலாகாது என, அது தனது நான்கு கால்களுக்கு இடையே பாதுகாப்பாக அமையும் வண்ணம் சென்று நின்று கொள்கிறது.

மானுட நாடகத் தருணம் அனைத்தையும் யானைகளுக்குள் வைத்து நிகழ்த்திப்பார்த்த பலப் பல சித்திரங்கள் சங்க இலக்கியப் பரப்பெங்கும் விரிந்து கிடக்கிறது. சற்றே ஆர்வம் இருந்தால் போதும் ஜெயமோகன் வாசகர்கள் எவரும் அந்த உலகின் தீவிரத்துக்குள் எளிதில் நுழைந்து விட முடியும். அங்கே கபிலர் போன்றோரில் ஜெயமோகனையும் கண்டுகொள்ள முடியும்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive