(தேரழுந்தூரில் மார்ச் 28, 29 1964 தேதிகளில் நடந்த கம்பன் திருவிழாவில் இது விஷயமாகப் பேசிய பேச்சின் சாராம்சம்.)
நேற்று உலகக் கவிஞர்களிலே உயர்ந்தவன் கம்பன் என்று பலரும் பேசினார்கள், அப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கவிகள் உலகப் பரப்பிலே இருப்பதாக நினைப்பது தவறு. இது கவிஞர்களுக்குள்ளே போட்டியல்ல - எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு இந்த வருஷம் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பேர்வழிகள் போகிறார்கள் என்கிற கணக்கல்ல அது. உலகத்தில் நல்ல கவிகள் என்கிற எண்ணிக்கை ஒரு பத்திருபதுக்குள் அடங்கிவிடும் - அவற்றில் ஒருவன், தமிழில் எழுதிய கவி கம்பன் என்பது நமது பெருமை.
நல்ல கவிகளிலும் காவியங்கள் எழுதியவர்கள் மிகக் குறைவு. ஒரு கை விரல்களுக்குள்
அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையினர்தான். கீழை நாடுகள் என்று எடுத்துக்கொண்டால்
சீனாவிலோ ஜப்பானிலோ காவியங்கள் என்று இலக்கியத்தரமாகச் சொல்லக் கிடையாது.
இந்தியாவிலே இரண்டு - ஆதி கவி என்று சொல்கிற வால்மீகி. தமிழிலே கம்பன். உலகத்து
ஆதி கவியாகிய ஹோமர் கிரேக்க காவியம் எழுதியவன். ‘இலியாது’ம் ‘ஒடிஸ்ஸி’யும் அவன்
காவியங்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் லத்தீன் மொழியில் வர்ஜில் ‘ஏனியது’
எழுதினார். பிறகு இத்தாலிய மொழியில் ‘தெய்வ நாடகம்’ எழுதிய டாண்டே கம்பருக்கு
இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்தவர். பின்னர் ஆங்கிலத்தில் மில்டன் -
இவ்வளவு பேர்தான் காவிய கர்த்தாக்கள்.
இந்தக் காவியங்களிலே கட்டுக்கோப்பு அமைந்த காவியங்களைச் சிருஷ்டித்தவர் என்று
வால்மீகியையும் கம்பனையும் விட்டுவிட்டால், வேறு டாண்டேயை மட்டும்தான் சிறப்பாகச் சொல்லலாம்.
டாண்டேயின் காவியம் ஆத்மானுபூதியால், வீட்டு உவமைகளால் சிறப்புப்பெற்றது. அதனுடன் ஒப்பிட்டு கம்பனின் உருவத்தைக்
கணிக்கிற காரியத்தை விமரிசனபூர்வமாக நாம் இன்னும் செய்யவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக பாட்டையும் பாத்திரங்களையும் சம்பவங்களையும்
பிய்த்துப் பிய்த்துக் கம்பனை அனுபவிப்பதையே நாம் இதுவரை செய்துவந்திருக்கிறோம்.
முழுக் காவியமாகக் காண இதுவரை எவ்வித முயற்சியுமே செய்யப்படவில்லை. விமரிசன
முறையில் வ.வே.ஸு. ஐயர் இதை ஓரளவு செய்ய முயன்று பார்த்தார். அவர் பல மொழிகளையும்
அறிந்தவராயினும், ஆங்கிலத்தின்
ஆதிக்கத்துக்குட்பட்டு, மில்டனையே
பெரிய காவிய கர்த்தவாக எண்ணி அவனோடு கம்பனை ஒப்பிடுவதுடன் நிறுத்திக்கொண்டார்.
விமரிசன ரீதியில் மில்டனையும் வர்ஜிலையும் இரண்டாந்தரக் காவிய கர்த்தாக்களாகவும்
முதல் தரமானவர்களாக ஹோமர், டாண்டே
என்கிறவர்களைக் கருதுவதும் சமீப காலத்து வழக்கு. இது இனி அழிபடாத வழக்கு என்றும்
தோன்றுகிறது. கட்டுக்கோப்பு என்கிற அளவில் பார்ப்பதற்கு ஆதிகவிகளாகிய ஹோமரையும்
வால்மீகியையும் விட்டுவிட்டு கம்பருடன் ஒப்புநோக்கத்தக்கவர் டாண்டே. இந்தக்
காரியம், விமரிசனம் இனித்தான்
செய்யப்பட வேண்டும்.
கட்டுக்கோப்பு தவிர இன்னும் ஒன்றிலும் கம்பனும் டாண்டேயும்
ஒப்பிடத்தக்கவர்கள். டாண்டேயை மத்திய காலத்து அறிவு பூராவுக்கும், ஆத்ம அனுபூதி பூராவுக்கும் வாரிசாக மதிப்பது
ஐரோப்பிய வழக்கு. அதே அளவில் கம்பன் இந்தியாவின் ஒரு முக்கியமான காலகட்டத்தின்
அறிவு ஞானம், அனுபூதி இவற்றின்
வாரிசு என்பது வெளிப்படை. ஆகையால்தான் அவனைப்பற்றி இவ்வளவு பேச முடிகிறது - அவன்
காவியத்திலே இத்தனை விஷயங்களையும் காணமுடிகிறது என்பது தெளிவு. இத்தனை
விழாக்களையும் அவனால் தாங்க முடிகிறது.
கட்டுக்கோப்பு என்பதை மனப்பாடம் பண்ணிய பாட்டுக்களைப் பாடி ருஜுப்படுத்த
முடியாது. எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. 1953-ல் என்று நினைவு - பாரிஸ் நகரில் ஆண்ட்ரே
மால்ரோ என்கிற ஃபிரெஞ்சு அறிஞருடன் ஒருநாள் பூராவும் அளவளாவ எனக்குச் சந்தர்ப்பம்
கிடைத்தது. அவர் நல்ல இலக்கியாசிரியர் - நாவலாசிரியர் - உலகத்துக் கலையின்
சரித்திரத்தை எழுதியிருக்கிறார் – ‘வாய்ஸ் ஆஃப் ஸைலன்ஸ்’ என்கிற பெயரில் மதுரைக்
கோயிலையும் தமிழ்நாட்டுச் சிற்பங்களையும் பற்றி அதிலே எழுதியிருக்கிறார். அவரைச்
சந்தித்தபோது அதுபற்றி எனக்குத் தெரியாது - கலை பற்றிய அவர் நூல் அப்போது
வெளிவரவில்லை. தமிழ் இலக்கியம் பற்றிய பேச்சிலே நான் கம்பனைப் பற்றிச் சொன்னேன் -
தனியொரு சிறப்பான காவியமாக, ராமாயணக் கதைதான் எனினும் தனிச் சிறப்புடையது என்று. எனக்குக்
கவிதையை மொழிபெயர்த்துச் சொல்ல வல்லமை இருப்பதாக நினைப்பு இல்லாதது காரணமாக
மதுரைக் கோயிலை உதாரணமாகச் சொன்னேன்.
மதுரைக் கோயிலுக்கு, நம்முடைய
கோயில்கள் எல்லாவற்றிற்குமே, ஒரு
கட்டுக்கோப்பு உண்டு. அந்தக் கட்டுக்கோப்பு இத்தன்மையது; இதனால் அமைவது என்று சொல்ல இயலாது. ஆனால் அந்த
கட்டுக்கோப்பை உணர முடியும். தென்னிந்தியக் கோயில்கள் போன்றதோர் சிறப்பான
அமைப்புப் பெற்றது கம்பனின் காவியம் என்று சொன்னேன் மால்ரோவிடம். மால்ரோ பின்னர்
இந்திய அரசாங்கத்தின் விருந்தினராக - அவர் அப்போது ஃபிரெஞ்சு தேசத்தின் கலாசார
மந்திரி - தென்னிந்தியா வந்து மதுரையைப் பார்த்துவிட்டுப் போனார்.
மதுரைக் கோயிலின் ஆதி உருவம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இடையில்
எத்தனையோ சேர்க்கைகள், புது
அமைப்புகள் உண்டாகியுள்ளன. அதேபோல கம்பன் கவிதையிலும் செருகு கவிகள், போலிக் கவிகள், என்று யார் யாரோ பாடியவை பாடிச் சேர்த்தவை
சேர்ந்துவிட்டன. பாடபேதங்கள் பிழைகள் ஏராளமாக இருக்கின்றன; உண்மைதான். அவையெல்லாம் சேர்ந்தும் விலகியுமே
கம்பரின் காவியக் கட்டுக்கோப்பு உருவாகியுள்ளது. இதையெல்லாம் வைத்தே நாம் கம்பனின்
காவியக் கட்டுக்கோப்பை அறிந்துகொள்ள வேண்டும். வாலிவதத்தையும், இந்திரஜித்தின் மாயத்தையும் மட்டும் பிரித்துப்
பிரித்துச் சொல்லிக்கொண்டே காலங்கடத்திக்கொண்டிருப்பது சரியல்ல. முழுக் காவியமாக
கம்பன் கவிதை பூராவையும் அறிந்துகொள்ள, இன்று அவசியம் இருக்கிறது.
இலக்கியத்தில் காவியம், நாவல்
என்கிற இரண்டு துறைகளுக்கும்தான் கட்டுக்கோப்பு என்கிற சிறப்பு அமைதி உண்டு. மற்ற
துறைகளுக்கெல்லாம் - உதாரணமாக சிறுகதை, சிறு கவிதை, நாடகம்,
விமர்சனம் - இதற்கெல்லாமும்
கட்டுக்கோப்பு என்று ஓரளவில் உண்டு. என்றாலும் சிறப்பாக Structure,
Architectonics என்பது
காவியத்துக்கும் நாவலுக்குமே உரியது.
இன்றைக் காலகட்டத்தில் காவியங்கள் என்று எழுதுகிறவர்கள் கிடையாது.
காவியங்களின் காலம் கடந்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம். காவியத்தின்
குறிக்கோளை, நோக்கத்தைக்
கொண்டு நாவல்கள் தோன்றியுள்ளன என்று சொல்வது மிகையாகாது. கம்பன் இன்று உயிருடன் இருந்தால், ராமாயணத்தையே எழுதுவதேயானாலும், அவன் இன்று நாவலாகவேதான் எழுதியிருப்பான். நாவாலாசிரியன் - இன்று நாவல்கள்
எழுதத் துணியும் இலக்கியாசிரியன் - என்கிற அளவில் நான் சொல்வேன். ராமாயணத்தைப்
போன்றதோர் நாவலுக்கேற்ற விஷயம் கிடைப்பது அருமையிலும் அருமை. வசனத்தில் நம் இன்றைய
சிறந்த இலக்கியாசிரியர்களில் சிலரேனும் ராமாயணத்தை எழுதிப் பார்க்கவேண்டிய அவசியம்
இருக்கிறது என்றே நான் சொல்வேன். ஒரு காலத்தில் நானே செய்து பார்க்கிற
சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வேன் என்றும் சொல்லுவேன்.
உலகத்துக் காவிய கர்த்தாக்களைப் போலவே உலகத்து மிகச் சிறந்த முதல்தரமான
நாவலாசிரியர்களும் எண்ணிக்கையில் ஒரு கைவிரல்களுக்குக்குள்
அடங்கக்கூடியவர்கள்தான். டாஸ்டாவஸ்கி (பல நாவல்கள்), டால்ஸ்டாய் (‘போரும்
சமாதானமும்’ என்கிற ஒரு நாவல்), மார்சல் ப்ரூஸ்ட், லாகர்கெவ்,
தாமஸ் மன் (ஜோஸஃப் வரிசை) என்று
ஏழெட்டுப் பேருக்கு அதிகம் சொல்ல இயலாது. இவர்கள்
சிருஷ்டிகளுக்குத் தந்த கட்டுக்கோப்புக்கும் காவிய கர்த்தாக்களில் கட்டுக்கோப்பு
அம்சத்தில் சிறப்புற்றவர்களான டாண்டே, கம்பன் இவர்கள் தங்கள் சிருஷ்டிகளுக்குத் தந்துள்ள கட்டுக்கோப்புக்கும்
ஒப்புவமை காணவேண்டியது, கண்டு முடிவுகளை வற்புறுத்துவது விமரிசகனின் கடமையாகும்.
டாண்டேயைப் படிக்கும்போது நமக்குச் சந்தேகம் இன்றித் தெரிகிறது. காவியத்தின்
ஒவ்வொரு பாட்டும், ஒவ்வொரு மூன்று அடிப் பாட்டும், முதல் இரண்டு நரகம் பர்கேடரி
சுற்றில் வர்ஜில் அழைத்துச் செல்ல, மூன்றாவது சுற்றில் பியாட்ரிஸ் என்கிற மன
உருவக் காதலி அழைத்துச் செல்ல, டாண்டேயின் மஹோந்நதமான சிந்தனை என்கிற தெய்வ சாந்நித்யத்திலே கொண்டுபோய்
டாண்டேயையும் அவனுடன் மனித குலத்தையும் நிறுத்தத்தான் என்பது தெரிகிறது. மனித
அறிவின் பிரயாணம் டாண்டேயின் காவியத்தில் பிரமாதமான ஒரு அனுபவ ஆதாரம்
எடுத்திருப்பதைக் காண இயலுகிறது.
ஆனால் மேலைநாடுகளிலும் ஃபாஷன் என்கிற பேய் பிடித்து இலக்கிய உலகத்தையும்
ஆட்டத்தான் ஆட்டுகிறது. கொஞ்ச காலத்துக்கு முன் நம் நாட்டில் கம்பன் பற்றி இருந்த
நிலைதான் டாண்டேயைப் பற்றி ஐரோப்பிய இலக்கியவுலகிலே. மில்டனைப் பெருங்காவிய
கர்த்தாவாக மதிக்கிற பழக்கம் போய்விட்டது என்று சொன்னேன். அதற்குப் பிறகு
டாண்டேயைப் பார்க்கிற பழக்கம் ஏற்பட்டுவிடவில்லை - டாண்டேயைப் பாராட்டுவது டி. எஸ்.
எலியட் என்கிற ஆங்கிலக் கவி தொடங்கி வைத்த ஃபாஷன் இன்று ஆங்கில இலக்கியவுலகிலே
இருக்கிறதே தவிர படிப்பவர்கள் குறைவுதான்.
மேலைநாடுகளில் கவிதை என்றால் பயந்து கூட்டம் கலைந்துவிடும் என்று ரஸிகமணி டி.கே.சி.
அவர்கள் சொல்லிவிடுவார்கள். இங்கு இந்தியாவில் கவியின் பெயரைச் சொல்லிக் கூட்டம்
கூட்டுவது சாதாரண காரியமாக இருக்கிறது. கம்பனைப் பற்றி விழாக்கள் வேண்டுமா?
கம்ப ராமாயண வகுப்புகள், சிறு பெரு பிரசங்கங்கள்,
ஆராய்ச்சிகள், தனி ஸ்தாபன பொதுத் துறை, சர்க்கார்த் துறை ஆதரவுடன் கம்பன் முயற்சிகள் எத்தனை
எத்தனையோ நடக்கின்றன. ஒரு பதினைந்து ஆண்டுகளில் இருபது முப்பது லட்சங்கள் வரையில்
சென்னை, டில்லி சர்க்கார்கள்
கம்பன் பெயருக்காகச் செலவிட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் - புள்ளிக்
கணக்கு விவரம் சரியா தப்பா என்று எனக்குச் சொல்லத் தெரியாது. ஆனால் ராஜம்
மனமுவந்து அளித்த பதிப்பையும், பழைய வை.மு.கோ. பதிப்பையும், கு.அழகிரிசாமி பதிப்பையும் விட்டால் கம்பனுக்கு நல்ல பதிப்பு என்று ஒன்றுகூட
இல்லாத குறைதான். பேசிப் பேசியே, விழாவெடுத்தே நமது இலக்கியத் தினவு எல்லாம் தீர்த்துக்கொண்டுவிடுகிறோம்.
குறிப்பிட்ட எத்தமிழ்த் துறையிலும் முழு ஈடுபாட்டுடன் உழைக்க ஒருவருமே தயாராக
இல்லை. பேராசிரியராக இருக்கையிலே கம்பன் ஒரு உப தொழில். இப்படித்தான் கம்ப சேவை
வளர்கிறதே தவிர – வ.வே.ஸு. ஐயர் அன்று துவக்கி வைத்த பாதையிலே செல்லக்கூடிய
யாரையும் காணவில்லை
உலகத்துக் காவியங்களிலே பலவற்றிலும் காணப்படாத ஒரு கட்டுக்கோப்பு கம்பனில்
காணப்படுகிறது என்று சொன்னேன். இந்த விஷயத்தில் டாண்டேயைத் தவிர வேறு யாரையும்
கம்பனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கில்லை. ஹோமரிலும் வால்மீகியிலும் ஒரு
சக்தியிருக்கிறது - அந்த சக்திக்கு ஒப்பிட உலக இலக்கியப் பரப்பிலே வேறு எதுவும்
கிடையாது. அது தனி. ஆனால் கம்பனின் காவியத்தில் உள்ள சக்தியை செயற்கையால் பெற்றது.
Sophistication கவி நயம்
தெரிந்து சுயப் பிரக்ஞையுடன் பெற்றதாகும். டான்டெயிலும் இந்த சுயப் பிரக்ஞை உண்டு.
கம்பனின் காவியம் டாண்டேயினுடையது போலவே அறிவுமயமானது. ஒரு குறிக்கோளை நோக்கி
நடப்பது ராமராவண யுத்தம். மேலெழுந்தவாரியாக கதையின் முடிவுதான் அதுவும். கம்பனாக
கற்பனை செய்துகொண்டதல்ல; வால்மீகி
தந்து எடுத்துக்கொண்டாலும், ஆனால்
அதற்கான பகைப்புலனும் சூழ்நிலையும், போர்க்களமும் கம்பனின் அறிவுக் கற்பனை. அதைக் குறித்தே காவிய முழுதும் எல்லாம்
அங்குலம் அங்குலமாக நகருவதை கட்டுக்கோப்பைக் கணிக்கிறபோது நாம் காண்கிறோம்.
***
‘இலக்கிய வட்டம்’, இதழ் 11, 10-4-1964
‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’, 1984
0 comments:
Post a Comment