உலகத்திலுள்ள ஞானமெல்லால் எப்படி ஷேக்ஸ்பியருக்கு வந்தது என்று அவர் கவிதையைப் படித்து ஆச்சரியப்பட்டுக் கேட்பவர்கள் உண்டு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற வகையில் ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரேயல்ல என்றும், வேறு எல்லாம் தெரிந்த வசதியுள்ள ஒருவர் என்றும் சிலர் பதிலும் சொல்வதுண்டு. அதற்கு அவசியமேயில்லை. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்ம ஞான மானஸரோவரை எட்டி அணுகக் கற்றுக்கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன, காரைக்காலம்மையார் ஆனால் என்ன?
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலகத்(து)
எக்கோலத் தெவ்வுருவில் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே யாம்
என்று அற்புதத் திருவந்தாதியில் பாடுகிற காரைக்காலம்மையாரை மனித ஞான மானஸரோவரைக் கண்டவர் என்றுதான் சொல்லவேண்டும்.
கலை, இலக்கியம் இவை போலவே, தெய்வத்துக்கும் உருவமும் உருவமின்மையும்தான் அற்புதமான லக்ஷணங்கள். வேறு இலக்கணமே இதற்குத் தேவையில்லை என்று சொல்லிவிடலாம்.
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா(து)
ஏதொக்கும் என்பதனை யாரறிவார்
யார் அறிவார்? ஆனால் வார்த்தைகளுக்கு அகப்படாத ஒன்று உருவம் எடுக்கிறது. எடுக்கிற இடமும் உண்டு. காரைக்காலம்மையார் கவிதையில் - ஷேக்ஸ்பியர் கவிதையில் - சிவன் கிராதனாகி அர்ச்சுனனுடன் போர் தொடுத்தபோது,
... ... ... ... ... ... ... ... ... ... ... ... - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டெற்றநாள்
வல்வேட னாய வடிவு.
உலக மொழிகள் எல்லாவற்றிலுமே கவிதை, வார்த்தைகளில் அகப்படாத ஏதோ ஒன்றுக்கு வார்த்தையும் வடிவும் தர முயலுகிறது. தெய்வம் தேடி, பக்தி செய்கிற முயற்சியும் அதே போல ஒன்றுதானே? அதில் என்ன சந்தேகம்? காரைக்காலம்மையார் கவிதை வடிவு கண்டவர் - வடிவமில்லாமையும் கண்டவர். அதை மாற்றி மாற்றி அவர் அமைத்துப் பாடி அற்புதத் திருவந்தாதியைக் கவிதையாகவும் தத்துவமாகவும் நமக்குக் காட்டுகிற காட்சி மகத்தானது.
அன்றுந் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவம் காண்கிலேன்
என்று சொல்கிற கவியேதான் நமக்குச் சிவபிரானுடைய கழுத்திலே உள்ள மறுவையும் காட்டுகிறார். மறுவை மட்டும் கண்டால் போதுமா? முடிமேல் மதியும். கழுத்திலே நாகங்களும்தான் புலனாகின்றன.
கலங்கு புனற்கங்கை யூடாட லானும்
இலங்கு மதியிலங்க லானும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேல் பாம்பியங்க லானும்
விரிசடையாம் காணில் விசும்பு
என்றும்,
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல் சிவந்த வாறோ
என்றும் சொல்ல முடிகிறது கவிக்கு.
உருவத்தையும் உருவமின்மையையும் டாண்டேயாலும் இதே அழகுடன் சுவர்க்கத்தில் வைத்து, ஒரு கிறிஸ்துவ சாஸ்திரப் பயிற்சியுடன் சொல்ல முடிகிறது. காரைக்காலம்மையாரில் இதே அழகும் ஆத்மாவும் தத்துவமும் சிவபிரான் பெயரால் வெளியாகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் (ஒன்றை இத்தாலிய மொழியிலும், மற்றதைத் தமிழ்மொழியிலும்) அனுபவிக்க முடிகிறது. ஆத்ம ஞானத்தை முட்டும் இந்த இலக்கிய அனுபவம் அருமையானது. அற்புதமானது என்று சொல்ல வேண்டும்.
டாண்டே மட்டுமல்ல - காரைக்காலம்மையாரும் கம்பனும் சொல்லுகிறார்கள். அதைத்தான் விசேஷமாகச் சொல்லவேண்டும். காலத்தால் காரைக்காலம்மையார் இரண்டொரு நூற்றாண்டுகள் டாண்டேக்கு முன்பிருந்தவர். அந்த அழகையும் சற்றுக் கவனிக்கலாம் - இந்தக் கவனிப்பு - விஷயமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் - நூலறிவு பேசுகிற காரியம்தான் இது - என்றாலும் பார்ப்போம்.
உருவம் சரி - உருவு இல்லாமை சரி. அதேபோல விரிந்தும் குறுகியும் நிற்கும் திறந்தான் எங்கே? எப்படி வார்த்தையில் அடைப்பது?
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தால்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தான்என்பேன் யான்
'யான்' என்கிற அரங்கு போதும் அவனுக்கு - கலைக்கு - கவிதைக்கு - இலக்கியத்துக்கு. ஆனால் அவன் உருவெடுத்து ஆடும்போது சில சமயம் அரங்கு ஆற்றாது. டாண்டே கண்களை மூடிக்கொள்கிறார் தன் கவிதையிலே - காரைக்காலம்மையார் திசைகளையே சிதறி விழச் செய்கிறார்:
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகாள்
முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்
மறிந்தாடு கைடெரில் வான்திசைகள் பேரும்
அறிந்தாடும் ஆற்றாது அரற்கு.
ஆத்ம மானஸரோவரை எட்டிப் பிடித்துவிட்டேம் – “இன்று நமக்கெளிதே!” என்று பாடுகிறார் காரைக்காலம்மையார். ஆமாம் இன்று நமக்கெளிதே, டாண்டேக்கும் காரைக்காலம்மையாருக்கும், ஷேக்ஸ்பியருக்கும் பிறகு என்று சொல்லத் தோன்றுகிறது.
காரைக்காலம்மையாரைப்பற்றி, மந்திர மாம்பழக் கதைகளுண்டு. அவரே தன்னைக் காரைக்கால் பேய் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளுகிறார். சிவகணங்களில் ஒன்றாகத் தன்னை நினைத்து, அரனாடும் அரங்கைத் தன் நெஞ்சாக நினைத்த காரைக்காலம்மையார், “அரங்கமாய்ப் பேய்க் காட்டில் ஆடுவான்” என்று கூறி உலகையே திருவாலங்காடாகவும், ருத்திர பூமியாகவும் காட்டுகிறார். அந்த விந்தையை ஒரு பத்துப் பாட்டுகளில் பார்க்கலாம். (இன்றைய நகரத்து வாழ்க்கையை மகா மசானம் என்கிற ஒரு பகைப்புலத்தில் கண்ட ஒரு சிறுகதை ஆசிரியர் நமக்கு ஞாபகம் வருகிறது இந்தப் பாட்டுக்களைப் படிக்கும்போது.) அற்புதத் திருவந்தாதியை Paradiso என்று சொன்னால் மூத்த திருப்பதிகத்தைத் தன்மை சிறிதும் மாறாத Inferno என்று சொல்லலாம். ஆனால் மனித சங்காத்தம் இல்லாத Inferno - அது. நகரம் அல்ல - நல்லது தீயதன் விளைவு அல்ல - வெறும் வார்த்தைகளால் விளைந்த நரகம். “அங்கங் குளிர்ந்தனலாடு மெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே” என்று பாடுகிற காரைக்காலம்மையார் வார்த்தை விந்தைகள் எத்தனை செய்துகாட்டியிருக்கிறார் என்பதை இந்தப் பத்துப் பாட்டுக்களிலே அறிந்துகொள்ளலாம்.
“அண்டமுடி நிமிர்ந்தாடும்” அந்த ஒன்றை அறிந்து கொள்ள உலகத்துச் சிறந்த கவிகளிலே ஒருவராக நமக்குக் காரைக்காலம்மையார் பயன்படுகிறார்.
(விமரிசனக்கலை, 1959)
***
காரைக்கால் அம்மையார் தமிழ் விக்கி பக்கம்
0 comments:
Post a Comment