கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி

மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங்காமல், இந்த ராக – காட்சி, பாடல் வரி – இசை தொடர்புறுத்தல்கள் வெறும் சமரசமாக, மனம் நிகழ்த்தும் சித்து விளையாட்டாகவும் அமைந்துவிடலாம். அவை மாற்றுப் புலனனுபவமாக (synesthesia) மாறாமல் சில நேரங்களில் மனப்பிதுக்கங்களாக (mental projections) மட்டுமே நின்று விடுகின்றன. இதனால் தான் வரிப்பாடல்கள், சினிமாப் பாடல்கள் அவ்வளவு பிரபலமாக இருக்கின்றன. வெண்ணிலாவின் தேரில் ஏறி சைதாப்பேட்டை சென்று இறங்கும் காட்சி ஒன்று முகுந்த் நாகராஜன் கவிதையில் வரும். ஆரம்பகட்டத்தில் அப்படி எதாவது ஒன்றை பிடித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. உங்கள் வெண்ணிலாவின் தேருக்கு இலக்கம் சைதாப்பேட்டை தானா என்ற கேள்வியை சற்று அழுத்தமாக கேட்டுக் கொள்வதில் தவறில்லை.  

சொல்லவா ஆராரோ (வெய்யில்)

ஆம் அம்மா! அந்த ரயில்தான்

உனக்கும் எனக்குமிடையே நீண்டு தடதடக்கும்

தொப்புள்கொடி

வலிக்கிறது ராஜா... வெட்டிவிடுங்கள்

ரணமான அவளின் உயிர்ப்பாதையில் 

வேங்குழலின் சாற்றைப் பூசிக்கொண்டிருப்பது யார்?  

லயத்தின் துடிப்பை, நாதத்தின் தொடர்ச்சியை பின் தொடர்ந்து மனம் ஒரு உத்தரவாதத்தை, நிறைவை, அதன் வழியாக இந்த வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக ஒரு அர்த்தத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது. பல நூறு வருடங்களாக மாறாத ஒலியமைப்புக்குள், பரிணமிக்கப் பிடிக்காத ஓர் ஆதிப் பிரக்ஞை நம்மைச் செலுத்தி வருகிறது. அதற்கு நாம் மொழியை துணைக்கருவியாக, ஆதார கட்டமைப்பாக கொள்கிறோம்.  நகரத்தின் பாதுகாப்பான கட்டமைப்பில் இருந்து விலகினால் ஒழிய வயல் பச்சைகளை கண்டு கொள்ள முடியாது. அதற்கொரு மனப்பயிற்சி அவசியமாகிறது.

செவ்வியல் இசை திரை இசையிடமும் நாட்டார் இசையிடமும் இருந்து பின் தங்குவதில் மொழியின் பங்கு முக்கியமானது. கருவியசைகளை நாம் தாண்டிச் செல்வதன் பின்னணியில் இருப்பதும் மொழியின்மை தரும் அச்சமே. இயல்பாகவே நாம் பரீட்சார்த்தமான முயற்சிகளை வெறுப்பதற்கான உளநிலையை வேறு கொண்டுள்ளோம். அந்த அச்சத்தை, மனத்தடைகளை விலக்கி, பெயரும் உடலும் அற்ற சுதந்திர இருப்பாக இசையை சொல்வதில் இருக்கும் போதை அலாதியானது. ஏனெனில், ராக அனுபவம் என்பது சொல்பொருள் அனுபவமல்ல.

ராகம் (அபி)

விரல்கள் தாளமிடத் தொடங்கியதும்

அந்த ராகம்

எங்கிருந்தோ

மனசுக்குள்

நுழைந்தது


கிளை பிரிந்து பிரிந்து

கடலடித் தாவரங்களை

அசைத்து இசைகொண்டது


பவளப்பாறை இடுக்குகளில்

குளிர்ந்து கிடந்த வயலின்கள்

உயிர்த்து வீறிட்டன

00


எல்லாப் புறங்களிலிருந்தும்

ஒரே காற்று

வீசியடித்தது


கற்பனைகள் முற்றிலும்

கலைந்து போயின


பல தேசத்துக்

குழந்தைகளின் முகங்கள்

ஒரே அழுகையின் கீழ்

ஒன்று கூடின


பாதைகளற்றுப் போனது உலகம்

நேரம் கூட நகர்வதற்கின்றி


கவிதையின் மூச்சு ஒன்று

கவிதையை மறுத்துக்

கடல்வெளி முழுவதையும்

கரைக்கத் தொடங்கிற்று

விவால்டியின் புகழ்பெற்ற நான்கு பருவங்கள் இசைக் கோர்வையில் ஒன்றான கூதிர் காலத்திற்கான இசையுடன் நான் இதை தொடர்புபடுத்திக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க குறிப்பு கொடுத்திருக்கிறார்கள் – ‘வேகமாக, ஆனால் அதிவேகமாக வசிப்பதற்கு அல்ல.’ சரி தான்.  

கேள்வியின் முழுமையான இன்பத்தை புறந்தள்ளாமலும் கலை புறக்கணிப்பாக மாறாமலும் இசையை நாம் அணுக வேண்டி இருக்கிறது. நாம் ‘சஹ்ருத்யர்’ என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது. பவபூதி, இதை சமான தர்மம் என்கிறார். இசைப்பவருக்கும் நமக்கும் நிபுணத்துவத்தில் இருக்கும் நிகர்நிலை இல்லை, உள்ளத்து உணர்வில் ஏற்படும் சமானம் இது. ஒரே ஸ்ருதியில் பிணைக்கப்பட்டிருக்கும் இரண்டு வீணைகள் ஒத்திசைப்பது போல இசையும் ரசிகரும் ஒன்றாவது தான் நிஜமாகவே கலை உதிக்கும் இடம்.

இசைப் பயன் (சுகுமாரன்)

பாடகர் பாடிக் கொண்டிருக்கிறாரா

நாம் எல்லாரும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமா

பாடகருக்கும் நமக்கும் நடுவில் இசை ஒலித்துக் கொண்டிருக்கிறதா?

ஏதோ விநாடியில்

நமக்கும் இசைக்கும் இடையில் அமர்ந்து

பாடகரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கும் இசைக்கும் இடையில் அமர்ந்து

நாமும் பாடிக் கொண்டிருக்கிறோம் .


-

ஒரே பாடல் தான் 

நான் கேட்டதால்

இரண்டாகப் பிரிந்தது

மீண்டும்

நான் பாட, நீ கேட்கவென,

பலவாகி வளர்ந்தது

நாம் பாடி, பலர் கேட்டு

உலகம் நிறைத்தது

உலகெலாம் பாட

ஒன்றாகிக் கேட்கிறது

ஒரே பாடல். (ஆனந்த் குமார்)

-

சரிவிலே எழுவதென்ன கண்ண பெருமானே ! (இசை)

பாடகர் பாடுகிறார்

பாடிக் கொண்டிருக்கிறார்

பாடிக் கொண்டிருக்கிறார்


பாடகர்  

‘பாடத்’ துவங்கும் தருணம்

என்றொன்றுண்டு


பாடகர் ‘பாடத் ‘ துவங்கி விட்டார்


“ ஓ...”

என்றெழுந்ததொரு  வாத்தியம் 


“ம்”

என்றொரு வாத்தியம்


“ஆஹா...”

என்று எங்கோ துள்ளியதொரு வாத்தியம்


“ ச்…”

கொட்டி மறைந்ததொரு வாத்தியம்


“வாவ்!” 

வாய் திறந்து 

கூச்செரியும் வாத்தியங்கள் ஆங்காங்கு


தாயைத் திட்டி 

ஒரு கெட்ட வாத்தியம்

பிளாஸ்டிக் சேர் வாத்தியங்கள்

செருப்புக் கால் வாத்தியங்கள்


நெஞ்சத்து ஆனந்தம்…

அது ஒரு நிகரற்ற வாத்தியம்


வாத்தியங்கள் 

கூடிக் கூடிப் பெருகியதில்


மேடை கொள்ளவில்லை

இதோ..

இந்த மேடை 

சமத்தில் சரிவதைக் காண்கிறேன்


மேடை, அரங்கு என்று

இரு வேறில்லை இப்போது.

இயற்கையின் சரடாக ஒரு இசைப்படைப்பை அணுகுவதென்றால் என்ன? குயிலும் குக்கரும் கூவுவது இனிமை தான். ஆனால் இசை என்ற அடையாளத்தை அறுதியாக ஏற்காதவை. ஸ்வரங்கள் என்பவை ஒரு வகையான ஒலி ஊகங்கள். அதை ஊகிப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் உள்வாங்குவதிலும் மானுட அறிவு தொழில்படுகிறது.  கரும்பச்சைக்கும் இளம்பச்சைக்கும் வேறுபாடு சொல்வது போல சாதாரண காந்தாரத்திற்கும் அந்தர காந்தாரத்திற்கும் வேறு சொல்ல முடிவதில்லை. அருகருகே வைத்து பாடி காண்பித்தால் கூட காதில் வண்டு ஊறுவது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கும். இசைக்கு காது திறக்க காத்துக்கிடக்க வேண்டி இருக்கிறது, திறக்காமலே கூட போகலாம். இருப்பினும், ஒலியின் உச்சக்கட்ட வெளிப்பாடு என்று ஒன்று இருப்பதை நாம் தன்னியல்பாக உணர்கிறோம்.

நீரோ நீ வாசி (மதார்)

ஹாரனில் இசையமைக்கும் பேருந்தோட்டி 

தன் பயணிகளை 

அமைதியற்ற மலையுச்சிக்கு 

அழைத்துப் போகிறான் 

தன் ஹாரன் வழியே

இனிமைப்படுத்த முயலுகிறான் 

இழந்த இசைப்பொழுதுகளை 

ஹாரன் இசை செவியுறும் அப்பிரதேசத்து மக்கள் 

கெட்ட வார்த்தை கூறி நகர்கிறார்கள் 

ஹாரன் இசை செவியுற்ற 

ஒரு கூடைப் புல்லாங்குழல்கள் 

கால் முளைத்து மானாகி காடோடின 

நம் பேருந்தோட்டி இசையை நிறுத்தமாட்டான் 

ஹாரன் இசைதான்

நம் பேருந்தோட்டிக்கு 

எரியும் ரோம் நகரமும் 

பிடிலும்

அருவமான ஒன்றாக இருந்தும் அதெப்படி புலன்களை வந்தடைகிறது? புலன் உணர் வட்டத்திற்குள் இருந்தும் பிடிபடாத இசையின் எடையின்மையை எப்படி பொருள் கொள்வது? இசைக்கான பிரத்யேகமான தொழில்நுட்ப மொழியை கொண்டு அதன் தொழில் நுட்பத்தை மட்டுமே விளக்க முடிகிறது. கவி மொழிக்குள் ஸ்வரத்தின் துல்லியமும் அசைவும் சட்டென்று திறந்துவிடுகிறது.

மழை தேக்கிய இலைகள்

அசைந்து

சொட்டும் ஒளி


கூரையடியில் கொடியில் அமர‌

அலைக்கழியும் குருவி 

(யேசுதாசுக்கு, இசை தரும் படிமங்கள், சுகுமாரன்)

அப்படி எல்லா நேரமும் இசை தன்னை காட்டி நிற்பதில்லை. மர்மமான களி நடனமும் இந்த பரவசத்தின் ஒரு பகுதி. பெரும்பாலும் தொட்டறிய முடியாத தெய்வதங்களை, பேரனுபவங்களை நாம் இசையோடு தொடர்பு படுத்தி வைத்திருக்கிறோம். அது காமமாக வெளிப்படும் பொழுது நமக்கு மெல்லிய திகைப்பு ஏற்படுகிறது. இந்த இணைவு சாதாரணமாக fallacies முளைக்கும் சாத்தியங்களை கொண்டுள்ளது. எந்த உள்ளர்த்தமும் இன்றி எவ்வித அனுபவத்தையும் மீட்டாமல், பேச்சுவாக்கில் ஒரு பிரபலத்தின் பெயரை குறிப்பிட்டு தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும் கற்றுக்குட்டிப் போல், சில கவிதைகள் இசையை பெயர் தூவிச் செல்கின்றன. தொடுகறி ஆக்கிக் கொள்கின்றன. பெயர் தூவிக் கவிதைகளில் இருந்து இசையை காப்பற்ற வேண்டியதில்லை, கவிதையை பத்திரப்படுத்த வேண்டி இருக்கிறது. அரிதாக நுட்பங்களைத் தொடும் கவிதையும் உண்டு. 

ஜகன்மோகினி (சுகுமாரன்)

மறைக்கபடாத உன் இடங்களை எல்லாம்

பகல் ஒளியின் உண்மை போலப் பார்த்த எனக்கு

ஆடையின் இருளில் அதே இடங்கள்

அறியாமையின் திகைப்பாய்த் திணற வைப்பதேன்


தெளிந்த ரகசியம் எந்தப் பொழுதில்

தெரியாப் புதிராகிறது ஜகன்மோகினி?

... 

இசை, கால ஒழுங்கோடு மிக நெருக்கமான தொடர்புடையது. ஏதுமற்ற தொடக்கத்தில், காலவெளி ஒன்றோடன்று முயங்கி ஒற்றை உருண்டையாகக் கிடந்தது. நாம் ‘நோட்’ அல்லது 'ஸ்வரம்' என்று அர்த்தப்படுத்தும் ஒலிகள் அத்தனையும் ஒரே நேரத்தில் இணைந்து பேரோசை இட்டிருக்கலாம். காலம் என்றொன்று பிறக்க, ஒரு கணம் மற்றொன்றில் இருந்து பிரிந்து தனித்த அடையாளத்தை பெற்று இசைக்கான சாத்தியங்கள் பிறக்கின்றன. ஏறத்தாழ பிரம்மத்தை வர்ணித்து ஜீவன் பிறந்த கதை போல் இருந்தாலும், ராகங்களும் தாளங்களும் அறுபடாத ஒருமையிலிருந்து பிறந்தவை. அரூபத்தை இத்தனைத் தூலமாக சொல்லிவிட முடியுமா என்று தோன்றச்செய்யும் சிருஷ்டி கீதமாகவும் கவிதை அமையும். 

நிசப்தமும் மௌனமும் (அபி)

நெடுங்கால நிசப்தம்

படீரென வெடித்துச் சிதறியது


கிளைகளில் உறங்கிய

புழுத்தின்னிப் பறவைகள்

அலறியடித்து

அகாத வெளிகளில்

பறந்தோடின

தத்தம் வறட்டு வார்த்தைகளை

அலகுகளால் கிழித்துக் கொண்டே


விடிவு

நினைவுகளையும்

நிறமழித்தது


'நெடுங்காலம்' கடுகாகிக்

காணாமல் போயிற்று


சுருதியின்

பரந்து விரிந்து விரவி...

இல்லாதிருக்கும் இருப்பு

புலப்பட்டது

மங்கலாக


சுருதி தோய்ந்து

வானும் நிறமற்று

ஆழ்ந்தது மெத்தென


பூமியில்

ஒலிகளின் உட்பரிவு

பால்பிடித்திருந்தது

வெண்பச்சையாய்

'இசைக் கோர்வை என்பது, காலக் களிமண்ணில் வனைந்தெடுத்த  பலபட்டைகள் கொண்ட இருப்பு’ என்கிறார் விர்ஜினியா வுல்ஃப். அவர் நுட்பாமாக எதையோ சொல்கிறார் என்று புரிந்தாலும் என்னவென்பதை என்னால் ஊகமாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. சப்தத்தின் பிடியில் சிக்கி இருக்கும் சங்கீதத்தின் விளக்கமுடியாத நுண்மையை சொல் தொட்டுவிடும் கணமும் கவிதைக்குள் சாத்தியம். 

...

நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்! (அங்கு, இசை)

நேரடி புலன் அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் அதி தீவிர அனுபவத்திற்கு முன்னும் பின்னும் மனிதர் அமையும் இரட்டை நிலையையும், இசையின் பல்பரிணாம இருப்பையும் மொழியனுபவமாக மாற்றுகிறது. 

இசைக்கு அறிவு தேவையில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. மேலும், உணர்வு நிலைகள், அறிவிற்கு அவ்வப்பொழுது எட்டாததாலேயே கீழானது என்ற எண்ணமும் அறிவுத்தளத்தில் உண்டு.  இவற்றில் உண்மை இல்லை என்பதால் எனக்கு உடன்பாடில்லை. பீத்தோவன் இசையை அறிவுலகத்திற்கும் உணர்வுலகத்திற்கும் இடையில் இயங்கும் சமரசக்காரராக விவரிக்கிறார். செவித்திறன் இழந்த பின் சிம்ஃபோனி எழுதியவர் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. அறிவும் உணர்வும் கனிந்த நிலையை இசைக்கோருகிறது. அதற்கு நம் முன் அனுபவங்களும் போதாமைகளும் எதிரிகள் ஆகின்றன. 

பியானோ (பிரமிள்)

...

கைதொட  எட்டி

கண்தொட எட்டாத

தொலைதூரம் வரை

கட்டமிட்டு நின்றன

ஸ்ருதி பாறைகள்

இசையின் வெளியில்

வட்டமிட்டது ஒருநிழல்


திடீரிட்டு

வெளிநீத்து வெளியேறி

கையை நிழல்

கவ்விக் குதறிற்று

வேதனையில்

சிலிர்த்த விரல்கள்

நிலவில் ஒடுங்கின.

நிலவெளிமேல்

ஸ்ருதிப் பாறைகள்

தத்தளிக்க துவங்கின.

"அடடா!- ஆனாலும்

இண்டியன் கர்நாடிக்

மியூசிக்கிற்கு

அப்புறம்தான் இது -

நம்ப கல்ச்சர்

ஸ்பிரிச்சுவல் ஆச்சே"

என்று உருண்டன

உள்வட்டது

அசட்டுக் கற்கள்


இந்தக் கல்நார்

தோல் வட்டத்துக்கு அப்பால்

அரை இருளில்

காலணியற்று நின்ற

யாரோ ஒருவனின்

இதயச் சுவடுகளில்

குத்திய முட்கள்

சிறகுகளாயின


துடிப்புகள் கூடி

கழுகுகளாகி

நிலவில் ஒடுங்கின

...

அரசியல் தொனிக்கும் கவிதைகளை கவித்துவம் குறைந்தவை என்று சொல்லும் நுட்ப அரசியத்தாண்டி, சமகாலத்தன்மை கொண்ட ஒன்று எப்போது கவிதையாக உருக்கொள்கிறது? பாட்டும் வரியும் இணைந்து நிகழ்த்தும் ரசவாதத்தை போல, இசையற்ற வெளியில் இசையின் நினைவு எழுப்பும் ரசவாதம் என்றும் ஒன்றுண்டு. ‘மென்குரல் மங்கிய பின்னான இசை’ என்ற தலைப்பில் ஷெல்லி எழுதிய கவிதைக்கு அருகில் வரும் கவிதை இது. நினைவினூடாக ஓசையை தொட்டெழுப்பி ரீங்காரமாக எஞ்சும் புள்ளியில் நிகழ்கிறது. மலர் உதிர்ந்த பின்னும் எஞ்சும் மணம். இன்மையின் அழுத்தமான ஆற்றல், அது தரும் துயரம், துயரமென்னும் இசை, இசையென்னும் ஆடல், ஆடலில் ஒரு சொல். 

தூல சூட்சும சன்னிதி (ஷங்கரராமசுப்ரமணியன்)

கிழக்குக் கோபுரத்துக்குள்

நுழைந்து

நந்தியை

நினைவில் இப்போது

தாண்டினாலும்

தலைக்குள் கேட்கத் தொடங்கிவிடுகிறது

தவிலும் நாயனமும்

இசைப்பவர் வேண்டாம்

கருவியும் வேண்டாம்

இன்னும் வெளிச்சம் நுழையாத

இருள்மூலைகளில்

அதன் எதிரொலிகள் பெருமூச்சுகள் கேட்கின்றன

ஒடுக்கிய குதிரைகள் போல்

கொடிமரம் தாண்டிக் கருவறைக்குள்

செல்லும் நுழைவாயிலின்

பக்கவாட்டு மேடையின் மூலையில்

தவிலும் நாதஸ்வரமும் பம்பையும்

புழங்காத நாட்களில் அழுக்குத் துணிகள் சுற்றி

எண்ணெய் மக்கி நெடியடிக்கும் 

சுவரில் தொங்கும்.

உச்சிகால பூஜை வேளையில்

சந்தடி இல்லாத நேரத்தில்

கோயிலுக்குள் புகுவோம் சிறுவர்கள் நாங்கள்

தவிலும் பம்பையும் தொங்கும் மேடையில்

துள்ளி ஏறி

தவிலை தப்தப்பென்று அடித்துவிட்டு

அரவமில்லாத மண்டபத்தைத் துடித்தெழுப்பி

பறந்து ஓடுவோம்

ஆமாம்

இன்னமும்

கோயிலின் நடுவில் 

தன் ஆதங்கத்தை 

நூற்றாண்டுகள் அடக்கப்பட்ட பைத்தியத்தை 

ஒலிக்காமல்

இருக்கிறது அந்த வாத்தியம்

கைகளைக் கொண்டு விடுதலை செய்ய முடியாது. 

உள்ளே வா

சந்தடி இல்லாத உச்சிகால வேளையில்

விளையாட்டாக

நுழையும் சிறுவர்களைப் போல உள்ளே வா

உள் ஒடுக்கி

அமர்ந்திருக்கிறது 

தவிலும் பறையும் பம்பையும்

உள்ளே வா

கைகளைக் கொண்டு 

சிலைக்குள் இருக்கும்

குதிரையை

விடுதலை செய்யமுடியுமா

உள்ளே வா. 

(பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு)

இசையை பற்றி நேரடியாக சுட்டாமல் என்னுள் இசையனுபவமாக நீடிக்கிற கவிதைகள் இருக்கின்றன. அவை மிகை வாசிப்பிற்குள்ளும் மிகை உணர்சிக்குள்ளும் கூட்டிச் செல்லும் அபாயத்தை மனதில் கொண்டு கைவிடுகிறேன். 

தெளிவற்ற பாழ்வெளிகளில், எதனுள்ளும் சிக்காத முடிவின்மையில், மொழிப்படுத்தவியலாதவற்றில் இசை எழுகிறது. அங்கு காட்சிக்கலைகள் துல்லியத்தை இழக்கின்றன, கவிதை சற்று திக்கித் தடுமாறுகிறது. சரியாக அந்தப் புள்ளியில், இருளை உண்ணும் ஒளி போல, இசை நுழைந்து தனது ஆட்சி செலுத்துகிறது. இசையின் சாத்தியங்கள் பிரக்யைக்குள்ளும் மொழிக்குள்ளும்  வசப்பட்டும் வசப்படாமலும் அலைக்கழிக்கும் தருணங்களை கூர்மையாக்கிக் கொண்ட அளவிற்கு, பாடல் வரிகளை விரித்துக் கொண்ட அளவிற்கு, முக பாவங்களை கூர் நோக்கியதைத் தாண்டி, ரசிகனின் ரசனையை புலன் அனுபவப்படுத்தியத்தை விடுத்து, இசையின் தனித்த  நுண்மைகளை தொட்ட கவிதைகள் தமிழில் அரிதாகவே கிடைக்கின்றன.  சொல்லால் அள்ளிவிட்டால் எதோ ஒன்று அதில் பிறழ்ந்து விடுமோ, தப்பி ஓடுமோ,  என்ற ஐயம் காரணமாக இருக்கலாம். 

பேரலையோடு கடல் வந்து நம் காலை தீண்டித் தீண்டிச் செல்கிறது, நாம் கண்டுகொள்வது அலையின் தடங்களைத் தான். உவமையிலா இன்பம் என்றாலும், மொழியின் விந்தை அல்லவா அலையை கடலாக்குவது?

நன்றி: கவிஞர் ஷங்கரராமசுப்ரமணியன், கவிஞர் இசை

***

வெய்யில் தமிழ் விக்கி பக்கம்

சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

அபி தமிழ் விக்கி பக்கம்

ஆனந்த்குமார் தமிழ் விக்கி பக்கம்

மதார் தமிழ் விக்கி பக்கம்

இசை தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

ஷங்கரராமசுப்ரமணியன் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

காரைக்காலம்மையார் - க.நா.சு

தத்துவ தரிசனம் எந்த சமயத்தில் எப்படிக் கவிதையாகிறது என்பதை உலகத்திலுள்ள பல மொழிக் கவிகளிடமிருந்து நிதரிசனமாக விளக்க முடியும். வார்த்தை, ஓசை முதலியவற்றிற்கும் அப்பால் கவிதைக்கு ஒரு ஆத்மா இருக்கிறது - அந்த ஆத்மாதான் கவிதையிலே முக்கியமான அம்சம் என்று சொன்னால் சுலபமாகவே எல்லோருமே ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். இந்தத் தத்துவ ஆத்மா இருக்கிறதே இது எல்லா மொழிக் கவிகளுக்கும் ஒன்றுதான். ஆங்கில ஷேக்ஸ்பியரும் சரி, இத்தாலிய டாண்டேயும் சரி, தமிழ்க் காரைக்காலம்மையாரும் சரி - எல்லாருமே ஒரு ஆத்ம மானஸரோவரிலிருந்துதான் தங்களுடைய கவிதைக் கங்கையைக் கொணருகிறார்கள்.

உலகத்திலுள்ள ஞானமெல்லால் எப்படி ஷேக்ஸ்பியருக்கு வந்தது என்று அவர் கவிதையைப் படித்து ஆச்சரியப்பட்டுக் கேட்பவர்கள் உண்டு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற வகையில் ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியரேயல்ல என்றும், வேறு எல்லாம் தெரிந்த வசதியுள்ள ஒருவர் என்றும் சிலர் பதிலும் சொல்வதுண்டு. அதற்கு அவசியமேயில்லை. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்ம ஞான மானஸரோவரை எட்டி அணுகக் கற்றுக்கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன, காரைக்காலம்மையார் ஆனால் என்ன?

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக

நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலகத்(து)

எக்கோலத் தெவ்வுருவில் எத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத் தவ்வுருவே யாம்

என்று அற்புதத் திருவந்தாதியில் பாடுகிற காரைக்காலம்மையாரை மனித ஞான மானஸரோவரைக் கண்டவர் என்றுதான் சொல்லவேண்டும்.

கலை, இலக்கியம் இவை போலவே, தெய்வத்துக்கும் உருவமும் உருவமின்மையும்தான் அற்புதமான லக்ஷணங்கள். வேறு இலக்கணமே இதற்குத் தேவையில்லை என்று சொல்லிவிடலாம்.

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா(து)

ஏதொக்கும் என்பதனை யாரறிவார்

யார் அறிவார்? ஆனால் வார்த்தைகளுக்கு அகப்படாத ஒன்று உருவம் எடுக்கிறது. எடுக்கிற இடமும் உண்டு. காரைக்காலம்மையார் கவிதையில் - ஷேக்ஸ்பியர் கவிதையில் - சிவன் கிராதனாகி அர்ச்சுனனுடன் போர் தொடுத்தபோது,

... ... ... ... ... ... ... ... ... ... ... ... - பூதப்பால்

வில்வேட னாகி விசயனோ டெற்றநாள்

வல்வேட னாய வடிவு.

உலக மொழிகள் எல்லாவற்றிலுமே கவிதை, வார்த்தைகளில் அகப்படாத ஏதோ ஒன்றுக்கு வார்த்தையும் வடிவும் தர முயலுகிறது. தெய்வம் தேடி, பக்தி செய்கிற முயற்சியும் அதே போல ஒன்றுதானே? அதில் என்ன சந்தேகம்? காரைக்காலம்மையார் கவிதை வடிவு கண்டவர் - வடிவமில்லாமையும் கண்டவர். அதை மாற்றி மாற்றி அவர் அமைத்துப் பாடி அற்புதத் திருவந்தாதியைக் கவிதையாகவும் தத்துவமாகவும் நமக்குக் காட்டுகிற காட்சி மகத்தானது.

அன்றுந் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவம் காண்கிலேன்

என்று சொல்கிற கவியேதான் நமக்குச் சிவபிரானுடைய கழுத்திலே உள்ள மறுவையும் காட்டுகிறார். மறுவை மட்டும் கண்டால் போதுமா? முடிமேல் மதியும். கழுத்திலே நாகங்களும்தான் புலனாகின்றன.

கலங்கு புனற்கங்கை யூடாட லானும்

இலங்கு மதியிலங்க லானும் - நலங்கொள்

பரிசுடையான் நீள்முடிமேல் பாம்பியங்க லானும்

விரிசடையாம் காணில் விசும்பு

என்றும்,

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல் சிவந்த வாறோ

என்றும் சொல்ல முடிகிறது கவிக்கு.

உருவத்தையும் உருவமின்மையையும் டாண்டேயாலும் இதே அழகுடன் சுவர்க்கத்தில் வைத்து, ஒரு கிறிஸ்துவ சாஸ்திரப் பயிற்சியுடன் சொல்ல முடிகிறது. காரைக்காலம்மையாரில் இதே அழகும் ஆத்மாவும் தத்துவமும் சிவபிரான் பெயரால் வெளியாகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டையும் (ஒன்றை இத்தாலிய மொழியிலும், மற்றதைத் தமிழ்மொழியிலும்) அனுபவிக்க முடிகிறது. ஆத்ம ஞானத்தை முட்டும் இந்த இலக்கிய அனுபவம் அருமையானது. அற்புதமானது என்று சொல்ல வேண்டும்.

டாண்டே மட்டுமல்ல - காரைக்காலம்மையாரும் கம்பனும் சொல்லுகிறார்கள். அதைத்தான் விசேஷமாகச் சொல்லவேண்டும். காலத்தால் காரைக்காலம்மையார் இரண்டொரு நூற்றாண்டுகள் டாண்டேக்கு முன்பிருந்தவர். அந்த அழகையும் சற்றுக் கவனிக்கலாம் - இந்தக் கவனிப்பு - விஷயமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் - நூலறிவு பேசுகிற காரியம்தான் இது - என்றாலும் பார்ப்போம்.

உருவம் சரி - உருவு இல்லாமை சரி. அதேபோல விரிந்தும் குறுகியும் நிற்கும் திறந்தான் எங்கே? எப்படி வார்த்தையில் அடைப்பது?

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தால்

முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்

என்நெஞ்சத் தான்என்பேன் யான்

'யான்' என்கிற அரங்கு போதும் அவனுக்கு - கலைக்கு - கவிதைக்கு - இலக்கியத்துக்கு. ஆனால் அவன் உருவெடுத்து ஆடும்போது சில சமயம் அரங்கு ஆற்றாது. டாண்டே கண்களை மூடிக்கொள்கிறார் தன் கவிதையிலே - காரைக்காலம்மையார் திசைகளையே சிதறி விழச் செய்கிறார்:

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகாள்

முடிபேரில் மாமுகடு பேரும் - கடகம்

மறிந்தாடு கைடெரில் வான்திசைகள் பேரும்

அறிந்தாடும் ஆற்றாது அரற்கு.

ஆத்ம மானஸரோவரை எட்டிப் பிடித்துவிட்டேம் – “இன்று நமக்கெளிதே!” என்று பாடுகிறார் காரைக்காலம்மையார். ஆமாம் இன்று நமக்கெளிதே, டாண்டேக்கும் காரைக்காலம்மையாருக்கும், ஷேக்ஸ்பியருக்கும் பிறகு என்று சொல்லத் தோன்றுகிறது.

காரைக்காலம்மையாரைப்பற்றி, மந்திர மாம்பழக் கதைகளுண்டு. அவரே தன்னைக் காரைக்கால் பேய் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளுகிறார். சிவகணங்களில் ஒன்றாகத் தன்னை நினைத்து, அரனாடும் அரங்கைத் தன் நெஞ்சாக நினைத்த காரைக்காலம்மையார், “அரங்கமாய்ப் பேய்க் காட்டில் ஆடுவான்” என்று கூறி உலகையே திருவாலங்காடாகவும், ருத்திர பூமியாகவும் காட்டுகிறார். அந்த விந்தையை ஒரு பத்துப் பாட்டுகளில் பார்க்கலாம். (இன்றைய நகரத்து வாழ்க்கையை மகா மசானம் என்கிற ஒரு பகைப்புலத்தில் கண்ட ஒரு சிறுகதை ஆசிரியர் நமக்கு ஞாபகம் வருகிறது இந்தப் பாட்டுக்களைப் படிக்கும்போது.) அற்புதத் திருவந்தாதியை Paradiso என்று சொன்னால் மூத்த திருப்பதிகத்தைத் தன்மை சிறிதும் மாறாத Inferno என்று சொல்லலாம். ஆனால் மனித சங்காத்தம் இல்லாத Inferno - அது. நகரம் அல்ல - நல்லது தீயதன் விளைவு அல்ல - வெறும் வார்த்தைகளால் விளைந்த நரகம். “அங்கங் குளிர்ந்தனலாடு மெங்கள் அப்ப னிடந்திரு ஆலங்காடே” என்று பாடுகிற காரைக்காலம்மையார் வார்த்தை விந்தைகள் எத்தனை செய்துகாட்டியிருக்கிறார் என்பதை இந்தப் பத்துப் பாட்டுக்களிலே அறிந்துகொள்ளலாம்.

சிவன் என்கிற மரபையும், தத்துவம் என்கிற உண்மையையும் கைவிட்டுவிடாமல் காரைக்காலம்மையார் தமிழில் அற்புதமாக நமக்குக் கவிதை செய்துதருகிறார். பக்தியை மீறிய ஒரு கவிதைப் பாவம் காரைக்காலம்மையாரிலே கனிந்திருக்கிறது. அனுபவிக்கப் பழகிக்கொள்பவர்கள் பாக்கியசாலிகள்.

“அண்டமுடி நிமிர்ந்தாடும்” அந்த ஒன்றை அறிந்து கொள்ள உலகத்துச் சிறந்த கவிகளிலே ஒருவராக நமக்குக் காரைக்காலம்மையார் பயன்படுகிறார்.

(விமரிசனக்கலை, 1959)

***

காரைக்கால் அம்மையார் தமிழ் விக்கி பக்கம்

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

***
Share:

கவிஞர் செல்வசங்கரன் நேர்காணல்

புலிப் பாய்ச்சல்

புலியின் உறுமல்

அப்புலிக்கே கேட்டது

உறுமலைக் கவனிப்பதால்

அதன் காதுகளுக்கு

கடுமையான வலி ஏற்பட்டபொழுதும்

சத்தமாக உறுமி கூர்ந்து கேட்டது

உறுமலின் போக்கில்

லேசாகப் பிசிறடித்தது

அதற்குத் தெரிந்தது

சிறிது சரிசெய்து 

இன்னொரு முறை உறுமியது

உறுமல் 

நீளவாக்கில் அடர்த்தி குறைந்துபோய்க் கொண்டிருந்தது

உறுமி உறுமி

அதைக் கெட்டித் தன்மைக் கொண்டதாய் மாற்றிக்கொண்டிருந்தது.

(செல்வசங்கரனின் 'பறவை பார்த்தல்' தொகுப்பிலிருந்து..)

***

கவிஞர் செல்வசங்கரன் 1981ல் பிறந்தவர்.பூர்வீகம் விருதுநகர். தற்போது அங்கு கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.அறியப்படாத மலர் ( 2013 ), பறவை பார்த்தல் ( 2017 ),

கனிவின் சைஸ் ( 2018 ), சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி ( 2020 ), கண்ணாடி சத்தம் ( 2022), மத்தியான நதி ( 2022), வெறுங்கடல் ( 2024 ) ஆகிய ஏழு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி, வெறுங்கடல் தொகுப்புகளுக்காக செளமா இலக்கிய விருது பெற்றுள்ளார். விசித்திரங்களை ஒழுங்கமைத்து எழுதுவது, காலம் மீதான ப்ரக்ஞை, நிகழ்காலத்தை பதட்டத்துடன் அணுகுவது ஆகியன இவரது கவிதைக் குணங்கள். 

1. கல்விப்புலம் சார்ந்தவர்கள் இலக்கியம் படைக்க வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதில் அவர்களின் கல்விப்புலம் சார்ந்த பிண்ணனி மட்டுமே ஒரு படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட காரணமாக இருக்கும். உங்கள் கவிதைகள் அப்படி அல்லவே, நீங்கள் உங்களை கவிஞனாக உணரும் இடம் என்று ஒன்று உண்டு. அது அனைத்திற்கும் அப்பாற்பட்ட உச்சபட்ச ஒன்று. அந்த இடத்தில் தான் ஒரு கவிஞன் என்பதற்கு மேல் அந்தப் படைப்பாளிக்கு வேறு எதுவும் மலைப்பாக இருக்காது. நீங்கள் உங்களை கவிஞனாக உணர்ந்த இடம் பற்றிச் சொல்லுங்கள்?

கவிதை என்பது உயிருள்ள ஒரு ஆள் அல்ல. மொழியே அதற்கான மையச்சரடு. மொழியின் தயவில்லாமல் ஒரு கவிதையால் தன்னைத் தானே எழுப்பிக்கொள்ள இயலாது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான அகவோட்டங்களாலும் புறவயக் காரணிகளாலும் பின்னப்பட்டுக் கிடக்கின்றான். கவிதை எழுதுகிறவன், தான் யாரென்று கவிதை வழியாக நேரடியாக சொல்லாது போயினும் கவிதை அவனை யாரென்று காட்டிவிடும். வெகுநாட்களுக்கு ஒருவன் கவிதையை ஏமாற்ற முடியாது.அது, எழுதுகிறவனை யாரென காட்டியே தீரும். 

என்னையே என் கவிதை வழியாகத் தான் திரை விலக்கி புரிந்து கொள்வதாக நான் நினைத்துக் கொள்கிறேன். இல்லை, கவிதை வழியாக நான் புரிந்து கொள்ளுமாறு மிகச்சரியாக நான் வெளிப்படுகிறேன். என் மனம் மிகவும் சிக்கலான சரடு போன்றது. என் மனத்தைக் கொண்டு இந்த வாழ்வை ஒரு மனிதன் வாழ்வது, தொடர்ந்து நீடிப்பது மிகவும் கடினமான காரியம். இந்தச் சிக்கலில் இருந்து நான் இடையறாது வெளியேற முயற்சிக்கிற போது தான் என்னிடமிருந்து கவிதை பிறந்து கொண்டிருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் நான் கவிஞனாக ஆகின்றேன் போல…

2. முதல் கவிதையை எழுதியது எப்போது? குடும்பப் பின்புலம்? வாசிப்புப் பழக்கமானது எப்போது?

நான் இளங்கலையில் பொருளாதாரம் படித்தேன். எனக்கான துறை அது இல்லை என பின்னர் தெரிந்து கொண்டேன். இந்தக் காலகட்டத்தில் வாழ்வியல் குறித்து நிறைய கேள்விகள் எனக்குள் எழுந்தன. நடைமுறை வாழ்க்கையில் அதற்கான பதில்கள் எனக்கு கிடைக்கவில்லை. இலக்கியம் தான் சரியானதென்று அப்பொழுது தோன்றியது. முதுகலையில் தமிழ் இலக்கியம் சேர்ந்த பின்பு மனதில் எழுகின்றவற்றையெல்லாம் டைரிக் குறிப்புகளாக பதிவு செய்ய ஆரம்பித்தேன். அந்தக் குறிப்புகள் அன்றாட நிகழ்வுகளல்லாமல் அன்றாடம் தோன்றியவைகளாக இருந்தன. அந்தக் குறிப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளாகவும் இருந்தன. அக்குறிப்புகளையே கவிதைகளாகவும்  எழுதிப் பார்த்தேன்.ஆக, முதுகலை முதலாமாண்டு படிக்கும் பொழுது முதல் கவிதையை எழுதினேன்.முதன் முதலாக எனது கவிதைகள் பதிவுகள் என்ற தனிச்சுற்று இதழில் 2007 ல் வெளிவந்தாலும் சிற்றிதழில் 2008 ல் தான் புதிய காற்றில் வெளிவந்தது.

எனது குடும்பப் பின்னணியில் சொல்லிக் கொள்ளும்படி இலக்கிய ஆர்வம் யாருக்குமில்லை. எனது மூத்த சகோதரர் அவரது இளைய வயதில் சிற்சில கவிதைகளை எழுதிப் பார்த்துள்ளார்.என் அம்மா நன்றாக ஓவியம் வரைவார். மற்றபடி வார இதழ்களின் வழியே தான் இலக்கியப் பரிச்சயம். சிறிய வயதிலும் சரி , இப்பொழுதும் சரி நான் தீவிர வாசிப்பாளானெல்லாம் கிடையாது. நினைத்தால் வாசிப்பேன். மாதக்கணக்கில் கூட வாசிக்காமல் இருக்கிறதுண்டு. மனிதர்களை கூர்ந்து நோக்குவது பிடித்தமான ஒன்று. மேலும் உயிரற்ற பொருட்களுக்கு என் வாழ்வில் மிக முக்கிய இடமுண்டு. அவைகள் எனக்கு மனிதர்கள். பதிலிகள். அவையில்லாமல் என் வாழ்வே இல்லை. என் தொகுப்புகளில் இதன் தாக்கங்களை நன்றாகவே உணரலாம் 

3. கவிதை உங்களை ஈர்க்கக் காரணம்? 

எழுதப்படும் எல்லா இலக்கிய வகைமைக்கும் கவிதையே மூலகர்த்தா. இலக்கியங்கள் அனைத்தும் கவிதை வழியாகவே புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒரு நல்ல கவிதையை விரித்து ஒரு சிறுகதையாகவும் ஒரு நாவலாகவும் எழுதிப் பார்க்கலாம். எழுதத் துணியும் அத்தனை பேரும் தங்கள் கணக்கை கவிதையிலிருந்தே துவக்குகிறார்கள். கவிதையிலேயே இலக்கியத்தின் அத்தனை ருசிகளையும் அடைந்துவிட முடியும். என் எழுத்துப் பணியை கவிதையிலேயே துவக்கியது போல கவிதையிலேயே முடித்துக் கொள்ளத் தான் ஆசைப்படுகிறேன். புதியவர்களை அணுகத் தயங்கும் என் சுபாவம் தான் என்னை கவிதை எழுதுபவனாக மட்டுமே வைத்துள்ளதாக தோன்றுகிறது. மேலும் நான் மிகப் பெரிய எழுத்துச் சோம்பேறி. 

4. பிடித்த பாதித்த கவிஞர்கள் / கவிதைகள்? 

எல்லா கவிதைகளுக்குள்ளும் எல்லா வாசகர்களாலும் செல்ல முடியாது. கவிஞன் என்பதற்காக எல்லா கவிதைகளின் ஆத்ம உணர்வினையும் ஒருவனால் தொட்டுவிட முடியாது. நமது மனநிலையையொத்த, நமது சுபாவங்களையொத்த, நமது வாழிடங்களையொத்த ஒருவரது படைப்புகளைத் தான் நம்மால் நெருங்க முடியும். நம்மால் அனுபவிக்க முடியும். ஆனால் கவிதை பல நூறு கோணங்களை உடையது. பல நூறு முகங்களைக் கொண்டது. எவ்வளவு பெரிய படைப்பாளன் ஆனாலும் கவிதையின் சில முகங்களைத் தான் கண்டுணர முடியும். சில கவிதைகளுக்குள் தான் அடியாழம் சென்று காண முடியும்.. கவிஞர்களானாலும் கூட அவர்களாலும் எல்லா கவிதைகளையும் துய்க்க முடியாது. எல்லா கவிதைகளும் எல்லாருக்குமானது அல்ல. அந்த வகையில் எல்லாருக்கும் போல எனக்கும் தேவதச்சன் மாஸ்டராக தெரிகிறார். தற்காலத்தில் ச.துரை, வே.நி.சூர்யா கவிதைகள் எனக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. ஆனந்த் குமார் பல்வேறுவிதமான அனுபவங்களை தன் கவிதைகளின் வழி நிகழ்த்திக் காட்டுகிறார். 

5. கலாப்ரியாவின் அதிர்ச்சியூட்டக்கூடிய தருணங்களைப் போன்றவற்றை உங்கள் கவிதைகளில் காணமுடிகிறது. கலாப்ரியா மற்றும் பிற கவிஞர்கள் உங்கள் கவிதைகளில் ஏற்படுத்திய தாக்கம் ஏதாவது உண்டா?

கலாப்பிரியா என்ற பெயரை எனது ஆசிரியர் பு.சி.கணேசன் தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 2002 ல் ஆனந்த விகடனது 75 வது ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் பொழுது 75 முத்திரைக் கவிதைகள் என்ற தொகுப்பைக் கொண்டு வந்தார்கள். அந்த தொகுப்பு என் இலக்கிய வாழ்வில் மிக முக்கியமானது. எனக்கான முதல் தீனியாக அந்த தொகுப்பு அமைந்தது. அதைத் தூக்கிக் கொண்டே திரிந்திருக்கிறேன். அதன் வாயிலாகத் தான் விக்ரமாதித்யன், தேவதச்சன், வண்ணதாசன், மனுஷ்யபுத்திரன் போன்ற ஆளுமைகள் எனக்கு அறிமுகம் ஆயினர், அதில் கலாப்பிரியாவின் ஒரு கவிதையும் இருந்தது. மற்றபடி கலாப்பிரியாவின் தாக்கம் என்னிடம் இருக்கின்றதா என எனக்குத் தெரியவில்லை

6. அசெளகரியமான சூழல் ஒன்றை உங்கள் கவிதைக்குள் தொடர்ந்து காண முடிகிறது. அச்சூழல் ஏற்கனவே இருப்பதாக பாவித்துக்கொண்டு அதற்குள் நீங்கள் உங்கள் கவிதையை நிகழ்த்திக் காட்டுகிறீர்கள். ஒரு அதிர்வு கேட்டுக்கொண்டே இருக்கிறது. சரிதானா? 

நான் உண்மையை அவ்வளவு சீக்கிரம் நம்ப மறுப்பவன். (கதவைப் பூட்டியாயிற்று போன்ற உண்மை) நேர்காணல் மாதிரியான முக்கியத் தருணங்களில் கூட ஒருவித எதிர்மறையான மனநிலையை உள்ளே வடிவமைத்துக் கொள்வேன். எல்லாம் நேர்மறையாக நடந்தாலும் கூட அவ்வாறு இல்லையோ என உள்ளே ஏதோவொன்று சொல்லிக் கொண்டிருக்கும். அதனால் என்னால் மகிழ்ச்சியைக் கூட மகிழ்ச்சியாகக் கருத முடியாது. ஒரு எதிர்மறையான மனவமைதி ஒரு ஆறு போல எனக்குள் சலசலத்துக் கொண்டிருப்பதை என்னால் எப்பொழுதும் உணர முடியும். இந்த மனநிலையால் அகந்தைக்கு எதிரான ஒன்றை நோக்கியே சதா தேடிக் கொண்டிருக்கிற நற்கூறு என் வாழ்வில் தேடாத ஒன்று போல அமைந்து விடுகிறது. அதிலிருக்கிற அம்சங்களை என் வாழ்வின் எல்லா சாத்தியக்கூறுகள் மீதும் தெளிக்கப் பார்க்கிறேன்.அது கவிதை மீதும் படும். ஆக, மகிழ்வு என ஒன்றே இல்லாத வருத்தமும்; மகிழ்வு என ஒன்றே இல்லாத சமநிலையும் கொண்டு அகம் இயங்கும்பொழுது அது ஒருவிதமான அதிர்வினை எனக்குள் எழுப்பலாம். என் கவிதைகளை வாசிக்கும் வாசகர்களுக்கும் அந்த அதிர்வினைக் கேட்கக் கூடிய எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன

7. உங்கள் கவிதைகள் குறித்து பேச எழுதியபோது அதற்கு நான் இட்ட தலைப்பு - 'கவிதைக்குத் திரும்புதல்'. எப்படி கவிதைக்குத் திரும்பிக் கொண்டே இருக்கிறீர்கள்? அந்த மனநிலை, கவிதை முயற்சியிலிருந்து கவிதையைத் தொட்டுவிடுவது தொடங்கி, குறுகிய காலத்திற்குள் ஏழு தொகுப்புகள் எப்படி?  

ஒருவன் எல்லா நேரத்திலும் படைப்பு மனத்தோடே இயங்க முடியாது. கவிதை எழுதத் துவங்கிய பின் பல ஆண்டுகள் ஒரு கவிதை கூட எழுதாமல் போன காலங்கள் என் வாழ்வில் உண்டு. அக்காலகட்டத்தில் ஏதோ ஒன்றின் மீது சாய்ந்து கொண்டு இந்த வாழ்வை நகர்த்திச் சென்றிருக்கிறேன்.

லௌகீக வாழ்வில் படைப்பு சார்ந்த ஒருவன் சுதந்திரமாக  இயங்குவதற்கு பல்வேறுபட்ட தடைகள் இங்குள்ளன. எல்லா படைப்பாளிகளும் இதைக் கடந்து தான் வந்திருக்கிறார்கள் என்றாலும் எல்லாரும் கடந்து வந்த வழி எல்லாருக்கும் பொருந்தாது. கடந்த பத்தாண்டுகளாகத் தான் குடும்பம் சார்ந்த நிலையில் படைப்பில் ஒரு சுதந்திர வெளியை என்னால் உருவாக்கிக் கொள்ள முடிந்துள்ளது. நான் பார்க்கின்ற பணி அமைவாலும் எனக்கு எழுத போதிய நேரம் வாய்த்துள்ளது. மனிதர்களுக்கு நெருக்கடி எல்லா காலகட்டத்திலும் இருக்கக்கூடிய ஒன்று தான். அதைத் தள்ளி நின்று அவதானிப்பதற்கு போதிய நேரம் அமைய வேண்டும். பெரும்பாலானவர்கள் சம்பிரதாயரீதியான பொருளாதாரத் தேடல் வாழ்வில் படைப்பு மனநிலையிலிருந்து தள்ளிப் போய்விடுகிறார்கள். தொடர்ந்து எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள். உபரியான என்னுடைய நேரங்களிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள முடிவதாக நான் நினைக்கின்றேன். தவிரவும் ஒரு கவிதையை எழுதி முடித்த பின்னால் வருகின்ற அந்த மனச் சமநிலைக்காக தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறேன். 

எனது முதல் தொகுப்பான அறியப்படாத மலர்க்கும் (2013, 2010 ல் வெளிவர வேண்டியது) இரண்டாவது தொகுப்பான பறவை பார்த்தல் தொகுப்புக்கும் (2017) நீண்ட இடைவெளி இருந்தது. இந்தக் காலத்தைத் தான் கவிதையில் என்னுடைய தேக்க காலமாக நினைக்கிறேன். பறவை பார்த்தல் வருகின்ற வரை அவ்வளவாக அறிமுகம் இல்லாதவனாகவே கவிதையில் இயங்கி வந்தேன். 2008 முதலே சிற்றிதழ்களில் எழுதி வந்தாலும் அந்தச் செயல்பாடு உதிரி நிலையிலேயே இருந்து வந்தது. எனது முதல் தொகுப்பிலும் பதிப்பகம் சார்ந்து நிறைய கசப்பான அனுபவங்களே எனக்கு இருந்தது. 2008 லிருந்து 2017 வரை கவிதை பிரசுரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் மணல் வீடு அறிமுகத்திற்குப் பின் தான் நிறைய சிற்றிதழ்கள் என் கவிதைகளை தொடர்ந்து வெளியிட்டன. பறவை பார்த்தல் தொகுப்பிற்குப் பின்னான எட்டு ஆண்டுகளில் மணல் வீடு, காலச்சுவடு, சால்ட் பதிப்பகங்கள் வாயிலாக தொடர்ந்து ஐந்து தொகுப்புகள் வெளிவந்துவிட்டன. மொத்த தொகுப்புகள் சார்ந்து கால அளவில் இவ்வாறு சீரற்ற நிலையிலே தான் இயங்கி வந்திருக்கிறேன். குறிப்பிட்ட காலகட்டத்தில் தொகுப்பு வரவேண்டும் என்று நினைத்து எதையும் செய்ய முடியாது. அதைக் கவிதையே முடிவு செய்யும். மேலும், எந்தக் கவிஞனும் கவிதைக்குத் திரும்புவதையே தான் விருப்பமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பான். நான் கவிதைக்கு திரும்பிக் கொண்டே இருக்கிறேன் என நீங்கள் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியளிக்கிறது

8. காலம் என்பதை ஒழுங்குபடுத்தியும், கலைத்தும் ஆடும் மனநிலையை உங்கள் கவிதைகளில் தொடர்ந்து பார்க்க முடிகிறதே?

இதைச் செய்ய வேண்டுமென்ற முன் உணர்வில் நான் எதையும் கவிதையில் செய்ய முயலுவதில்லை. இதை எழுதியே ஆகவேண்டுமென்ற எந்த பிரயத்தனமும் செய்து பார்ப்பதுமில்லை. என்னுடைய பல கவிதைகளில் ஒரே பொருள் வேறு வேறு விதமாக பயின்று வந்திருக்கலாம். அதைத் தவிர்க்கவும் நான் பெரும்பாலும் முயல்வது கிடையாது. சில பொருள்கள் அதுவாகவே திடீரென்று என் கவிதையில் காணாமல் போய்விடும். என் கவிதை என்ன கோருகிறதோ அதற்கு நான் இழைகிறேன். காலம் தின்று செரிக்கக்கூடிய ஒரு பொருளா என்ன…காலம் தருகின்ற மயக்கிலிருந்து எந்தக் கவிஞன் தான் தப்பித்துச் செல்ல முடியும்.

9. காலவெள்ளம், தவளையின் சுயசரிதை போன்ற உங்களின் நிறைய கவிதைகளில் நிகழ்காலம் கடப்பதன் பதட்டத்தை இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நின்று பார்க்கும் ஒருவன் வெளிப்படுகிறான். உங்கள் கவிதையுலகம் நிகழ்காலத்தை ஒரு குறுகிய சந்து போல உருவகப்படுத்துவதாகத் தோன்றுகிறது. குட்டிச் சந்துக்குள் நடந்து போகும் குண்டு மனிதன். ஏன் அப்படி? 

கால வெள்ளம் கவிதை கடைசியில் இப்படி முடியும்

தலை அது இருக்கிற இடத்தில் 

இருப்பது போலத்தான்

கால வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது

இப்போதைக்கு

கால வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் ஏன் தலையை உருட்டிக் கொண்டு ஓடவில்லை. தலையின் வடிவம் நல்ல உருண்டை. தலையைக் கொய்து கீழே வைத்தால் காற்றுக்கோ நீருக்கோ அடித்துச் செல்லக்கூடியது. ஏன் தலை உருண்டு ஓடவில்லை. அப்பொழுது காலம் வெள்ளம் இல்லையா.இல்லை தலையைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றதா.தலையைத் தடவிப் பார்க்கிறேன். இப்போதைக்கு தலை இருக்கிறது.

இது அந்தக் கவிதை பேசுகின்ற விடயம்.

என் முன்னால் தெரிகின்ற வெள்ளம் எனக்கு காட்டாமல் எனக்குத் தெரியாமல் எங்கோ கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதியையே என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அந்தப் பகுதி மட்டுமே முழு வெள்ளம் அல்ல. என் முன்னால் தெரிகின்ற இந்த மிகச் சிறிய பரப்பளவு பின் எனக்கு எப்படி போதுமானதாகும்

10. கதைத் தன்மை கொண்ட கவிதைகளை உங்களிடத்தில் பார்க்க முடிகிறது. சிறுகதை வடிவத்திற்கும் கவிதைக்குள் கதையம்சம் வருவதற்கும் உள்ள வேறுபாடாக நீங்கள் நினைப்பது என்ன? 

ஞானக்கூத்தன் கவிதைகளில் இந்த கதைத் தன்மையை உணரலாம். ஆனாலும் அவர் எல்லா விதமான கவிதைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். பொதுவாக இலக்கியத்திற்கு கவிதை, சிறுகதையென நாம் தான் பெயர் வைக்கின்றோம்.இப்பொழுது நுண்கதை என்ற புதிய வடிவம் வந்துவிட்டது. ஒரு காலத்தில் அதையே நாம் கவிதை என்று கூட அழைத்திருக்கின்றோம்.அந்த வடிவில் ராணி திலக் ஒரு தொகுப்பில் எழுதிப் பார்த்திருக்கின்றார்.மேலும் சிலர் முயன்றுள்ளார்கள். கோபி கிருஷ்ணன் டைரிக்குறிப்பு பாணியிலே கூட சிறுகதையை செய்து பார்த்திருக்கிறார். அளவின் வடிவிலே தான் கவிதை, சிறுகதை என பிரித்து வைத்திருக்கின்றோம். நுண்கதை என்ற புதிய வடிவம் வந்து எல்லாவற்றுக்குள்ளும் எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட்டது. அப்படி சொல்லமுடியாது.ஏற்கனவே எல்லாவற்றுக்குள்ளும் எல்லாம் இருக்கிறது தான். இப்பொழுது பிரித்தறிந்து கொள்கிறோம் அவ்வளவே… 

11. குறுங்கவிதைக்கும் நீள்கவிதைக்கும் என்ன வித்தியாசம்? உங்கள் கவிதைகளில் அதை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?

ஏற்கனவே கூறியது தான். கவிதை என்ற ஒன்று மட்டுமே உண்டு. ஒவ்வொரு கவிஞனுமே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வடிவங்களில் ( குறுங்கவிதை, நீள்கவிதை என ) முயற்சித்துப் பார்க்கவே செய்கின்றான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீள்கவிதை காலாவதியான ஒன்று என்றே படுகிறது. முக்கியமாக நீள்கவிதை, வாசிப்பவர்களை கொட்டாவி விட வைத்துவிடும். 15 வரிகளுக்குள்ளாகவே கவிஞன் தன் உணர்வுகளை வாசிப்பவர்களுக்கு நேர்த்தியாக கடத்திவிட முடியும். அதற்குள் எழுதுவது தான் சவாலானது என்று நினைக்கின்றேன்

12. கவிதை அல்லாத பிற வடிவங்கள் குறித்த உங்களின் பார்வை? வாசிப்பு? எழுதிப் பார்த்ததுண்டா?

கவிதை மேலானது என நான் கூறிக்கொண்டாலும் இலக்கியத்தின் ஒரே வடிவம் எல்லாரையும் திருப்திபடுத்தாது. நானே ஒரு குறிப்பிட்ட நாளின் மனநிலையில் கவிதையை கீழே வைத்துவிட்டு சிறுகதையை வாசித்துக் கொண்டிருக்கலாம்.சில நாளின் மனநிலை வாசிக்க கவிதையைக் கோரும். கவிதையில் இருக்கும் பல்வேறுவிதமான உள்ளடுக்குகள்  தான் கவிதையை சிறந்த வடிவாக்குகிறதென நினைத்துக் கொள்கிறேன். அதே அடர்த்தியோடு, உள்ளடுக்கோடு ஒரு சிறுகதையை நீண்டதாக எழுதும் பொழுது எழுதுபவனே ஒரு கட்டத்தில் சோர்வடைந்துவிடுவான். பின் வாசிப்பவர்களை சொல்லவா வேண்டும். மிகவும் ஆசுவாசமான மனநிலையில் ஒரு சிறுகதையை வாசிக்கலாம். ஆனால் கவிதையை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் ஒரு பிரத்யேக மனநிலை வாய்க்க வேண்டும்.தற்சமயம் வரை ஒரு சிறுகதை கூட நான் எழுதிப் பார்த்ததில்லை

13. சமகால தமிழ்க் கவிதை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? குறைகள் நிறைகள் என்னென்ன?

எல்லா காலத்திலும் இருந்துள்ள, இருக்கின்ற நிகழ்காலம் எப்பொழுதும் சவாலானதே. ஏனெனில் நிகழ் காலத்திற்கு இறந்த காலம் என ஒன்றுள்ளது. இறந்த காலத்திற்கு இந்தப் பிரச்சினையில்லை. இது கவிதைக்குமே பொருந்தும். வேறு மாதிரி முயன்று பார்ப்பது, இதுவரை இல்லாத மாதிரி செய்து பார்ப்பது என்கின்ற நெருக்கடி கவிதைக்கும் உள்ளது. இது கவிதையை வேறு தளத்திற்கு கொண்டு செல்ல முயலுமென்றாலும் இதில் செயற்கைத்தனங்கள் வந்து பரவும் ஆபத்தும் உள்ளது. ஒரு கவிஞன் நகர்ச்சியை தன்னுடைய கவிதைகளிலிருந்து செய்து பார்த்தானேயானால் அது உண்மைக்கு மிகவும் நெருக்கமானதாக அமையும். பக்கத்துக் கவிதைகளில் நிகழுகின்ற மாற்றங்களை தானும் செய்து பார்க்க ஆசைப்பட்டால் போலிகள் வந்து குவிந்து விடலாம். சமகாலத்திற்கு இருக்கக்கூடிய சவால்களாகவும், நிறை குறைகளாகவும் இவற்றையே பார்க்கிறேன் 

14. அயல்மொழிக் கவிதைகள், மரபுக் கவிதைகள் வாசிப்பதுண்டா? அதில் உங்களுக்கு பிடித்தவர்கள்? உங்கள் மேல் தாக்கத்தை செலுத்தியவர்கள் யார்?

அயல் மொழிக் கவிதைகளை முக நூலில் வாசிக்க முடிகிறது. க.மோகனரங்கன் தொடர்ந்து கவிதைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிடுகிறார். மேலும் சிற்றிதழ்கள், இணைய இதழ்களில் வருகின்ற மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வாசிக்கிறேன். மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான மூல ஆசிரியர்கள் முகம் தெரியாதவர்கள் என்பதால் எனக்கு பெயர்கள் ஒரு விசயமாக இல்லை. அவர்களின் நிலமும் அப்படியே. தற்காலத்தில் கவிதைகளில் நிகழுகிற எல்லா பரிமாணங்களையும் ஒரு கவிஞன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இணைந்து போகின்றோமா விலகிப் போகின்றோமா என்பது ஒரு பொருட்டல்ல. தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

15. நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதால் நவீன கவிதையை இளைய தலைமுறையினரிடம் எளிதாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது.ஒரு ஆசிரியராக நவீன கவிதையை இளைய தலைமுறையிடம் கடத்தி விடுவதில் உங்களின் பங்களிப்பு என எதுவும் உண்டா?

வாசிப்பு நிலையில் எல்லா படைப்பாளர்களும் வெகுஜன எழுத்தாளர்களிடமிருந்துதான் தீவிர இலக்கியத்திற்கு வந்து சேர்ந்திருக்க முடியும். இதில் விதிவிலக்கு இருக்கின்றதாவெனத் தெரியவில்லை. 30, 35 ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ்கள் வாசிக்கும் பழக்கம் எழுத்துலகில் புகுவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. தொலைக்காட்சி கூட ஆடம்பரமாகிப் போன அத்தகைய காலகட்டத்தில் அம்புலிமாமா, கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள் , காமிக்ஸ் கதைகள் வாசிப்பவர்களை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்தன. இதன் மூலம் ஒரு கற்பனையான புதிய உலகத்தில் இளமைக்கால வாழ்வை முந்தைய தலைமுறை கழிக்க முடிந்தது. இன்று வார இதழ்கள், காமிக்ஸ் கதைகள் இடத்தை வீடியோ கேம்ஸ்கள் பிடித்துவிட்டன. இதிலும் கற்பனைகள் இருக்கின்றன. இதிலுள்ள கற்பனை, காட்சியாகவே பார்வையாளர்களுக்கு கடத்தப்படுவதால் அதைத் தாண்டிய ஒரு புதிய உலகத்திற்குள் இளைய தலைமுறையினரால் நுழைய முடிவதில்லை. இதையும் தாண்டி ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் புரிதல் உள்ள குறைந்த பட்சம் ஒரு மாணவரையாவது கல்லூரி வளாகத்திற்குள் கண்டு விடுகிறேன். தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவருக்கு நவீன இலக்கியம் ஒரு தாளாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் வாயிலாக நவீனக் கவிதைகள் அறிமுகப்படுத்தப்படுகிறன. தற்காலத்தில் எழுதுகின்ற அநேகம் நவீனக் கவிஞர்களின் பெயரையேனும் அவர்கள் மனத்தில் இருத்திட வெகுவாக முயன்று வருகிறேன்.  ஒரு மாணவரேனும் நவீன இலக்கியப் புரிதலோடு கல்லூரியிலிருந்து படித்து வெளியேறுவதை நல்ல எண்ணிக்கையாகவே காண்கிறேன். எம் கல்லூரியில் படித்து முடித்து சமீப காலத்தில் வெளியேறியதில் பெரு.விஷ்ணுகுமாரை நல்ல விளைச்சலாகப் பார்க்கிறேன்

16. கவிதை மொழியில் உரைநடைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

நவீன கவிதை ஒரு காலகட்டத்தில் சிடுக்கான மொழியைக் கொண்டிருந்தது.சொற்களை எவ்வளவு திருக முடியுமோ அவ்வளவு திருகினார்கள். புரியாத ஒரு மொழியில் எழுதுவது தான் நவீன கவிதை என்ற புரிதலை பொதுப்புத்தியில் ஏற்படுத்தியிருந்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் கவிதை ஒரு வித அயர்ச்சியைத் தந்தது. இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து கவிதை இன்றைய உரை நடை வடிவதிற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நகர்ச்சிக்கு ஒரு சில பத்தாண்டுகள் தேவைப்பட்டுள்ளன. கவிதையின் ஆகச்சிறந்த வடிவமாக உரை நடை வடிவத்தையே சொல்வேன். உரை நடை வடிவில் எழுதுவது தான் இருப்பதிலேயே கடினம். எளிமையாக சொல்லும் பொழுது ஆழம் விடுபட அநேக வாய்ப்புகளுண்டு. எளிமைக்குள் பொருளைப் புதைக்க தான் இன்றைய நவீன கவிஞர்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள். உரைநடையில் இருக்கின்ற எளிமை அது எளிமை அல்ல. அன்றைய காலகட்டத்தில் இருந்த மொழித் திருகலை விட கடினமானது.

17. உங்களுக்குப் பிடித்த உங்களின் ஒரு கவிதை?

எனது பறவை பார்த்தல் தொகுப்பில் இடம் பிடித்த ஒரு கவிதை.

இரைச்சல்

வேண்டுமென்றே

பல்லை இந்தச் சுத்தியல் கொண்டுடைத்து

கதற முடியும்

இப்பொழுது

சுத்தியலைக் கீழே வைத்துவிட்டு

அந்தக் கடையில் போய்

டீ குடித்து வரலாம்

அடித்துவிட்டால்

கண்டிப்பாக உட்கார்ந்து அழவேண்டும்

இதற்குப் பின் நிறைய கவிதைகளை எழுதிவிட்டேன். இதை விட நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருப்பதாகவும் நம்புகிறேன். ஆனாலும் இந்தக் கவிதை என்னுடைய இருப்பைத் துல்லியமாக காட்டக்கூடிய ஒன்று. இந்தக் கவிதையை இன்னும் வேறு வேறு விதமாக வேறு வேறு பரிமாணங்களில் இன்றும் எழுதிப் பார்க்கிறேன். அந்தக் கடையில் போய் டீ குடிப்பதைத் தான் ஒரு தியான நிலை போல தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். அது ஒன்று தான் எனக்குப் பாதுகாப்பு

18. டவுண்லோட் ஆகிக்கொண்டிருக்கும்

அவ்வீடியோ மீது

வெள்ளையான புழு போன்ற சுழி

சுற்றிச் சுற்றி வர

அது இன்னும் சுற்றிக்கொண்டேயிருக்கிறது

என்ற வரிகளை எழுதியுள்ளீர்கள். டவுண்லோட், வாட்ஸப், க்ரிஞ்ச் போன்ற நவீன சொல்லாடல்களை கவிதையில் பயன்படுத்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நவீன சொல்லாடல்கள் நவீன கவிதைக்குள் வெற்றிகரமாக எழுதப்பட்டுள்ளன என்று நினைக்கிறீர்களா? 

கவிதைக்கு தற்காலம் வரை எந்த வரையறையும் கிடையாது. எது கவிதை என்பதிலே கூட இன்று வரைக்குமே குழப்பமே நிலவுகிறது. இது கவிதையா இல்லையா என்பதை அனுபவத்தால் மட்டுமே விளங்கவோ விளக்கவோ முடியும். கவிதை எதுவென தெரிந்து கொள்வதற்கு ஒருவன் ஆயிரம் கவிதைகளைக் கடந்து வந்திருக்க வேண்டும். கார் ஓட்டப் பழகும் பொழுது கார் சரியாக ஓட்டுகின்ற அந்த ஒரு இடத்தை அடைய பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்போம். கார் நன்றாக ஓட்டிய பிறகு அந்த சரியான இடம் இதுநாள் வரை எங்கிருந்தது என சொல்லமுடியாது. ஆனால் சரியாக ஓட்டிக்கொண்டிருப்போம். அது போல தான் கவிதையை உணருகின்ற வரை கவிதை பிடிபடாமல் தான் இருக்கும். உணர்ந்த பின்னால் தான் கவிதையின் அந்தராத்மா புலனாகும். அப்படி தெரிந்த பின்னால் கவிதையில் சரி, தப்பென்று எதுவும் இல்லை. கவிதைக்கு ஒரு வரையறை இதுவரையே கூட வகுக்கப்படவில்லை. அப்படி வகுக்கிற இடத்தில் கவிதை காணாமல் போகத் தொடங்கிவிடும். வரையறையின் வழியே கவிதையை அடைய முயற்சித்தால் வருவது கவிதையாக இருக்காது. ஒரு நல்ல கவிதைக்கு அடைக்க என  வாசல்களே கிடையாது 

19. கால், மூக்கு முடியை வெட்டுதல் என ஒரு தருணத்தில் உணரும் ஒரே உணர்வை நேர்கோடாகக் கவிதையாக்குகிறீர்கள். அது ஒரு விசித்திரத்தையும் பேசுகிறது. அதே சமயம் ஒரு ஒழுங்கமைவுக்குள்ளும் அமைகிறது. இந்த அம்சத்தை உங்களின் நிறைய கவிதைகளில் காண முடிகிறதே? 

நம் கையிலோ காலிலோ உள்ள விரல்களை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் நாமே ஒரு ஜந்து மாதிரி தெரிவோம். இவ்வுலக வாழ்வில் விநோதங்களுக்கு என்ன பஞ்சம்…

20. உங்களின் கவிதைக்குள் வெளிப்படுகிற ஆளுமையின் தோற்றமாக என் மனம் ஒரு ஒழுங்கற்றவனையே கற்பனை செய்கிறது. இந்தப் பிறழ் உங்களுக்குள்ளும் உங்கள் கவிதைகளுக்குள்ளும் நிகழ்வதுதானா? நிகழ்ந்தால் ஏன்?

இந்தக் கேள்விக்கான பதில் இதுவரை அளித்த பதில்களுக்குள் இருப்பதாக நம்புகிறேன்.

***

கவிஞர் செல்வசங்கரனின் சில கவிதைகள்,

1

புதுமனை புகுவிழா

புதுமனை புகுவிழாவிற்கு வந்தவர்கள்

ஒவ்வொரு அறையாகப் பார்த்து வர

விநாடி நேரத்தில் எல்லாவற்றையும் கட்டிமுடித்தார்கள் 

இவ்வளவு நாட்களாக

நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம்

கட்டி அடுத்து அடுத்து என தாவிக்கொண்டிருந்தார்கள்

அவர்கள் கட்டுகிற வீடென்பதால்

எல்லாரிடமும் சந்தோஷம் பொங்கி வழிந்தது

ஒரு நொடியில் கட்டி

ஒரு நொடியில் வாழ்ந்து முடித்து

ஒரு நொடிக்குள்ளாக

எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள்

எவ்வளவு சிறிய காலத்துக்குள்

அவ்வளவு பெரிய வாழ்வு வாழ்ந்து முடிந்துவிட்டது

ஒரு நல்ல நாளாகப் பார்த்து

புதியவீட்டில் குடியேறி

ஜவ்வாக அந்தக் காலத்தை

நாங்கள் இழுக்கத் துவங்கினோம்

2

கற்பனை 

என்ற சொல்லைத் தூக்கி

தண்ணீரில் போட்டனர்

காலம் எந்த அளவிற்கோ

அந்த அளவிற்குக் கணம்

கற்பனை என்பதால் மிதந்து கொண்டிருந்தது 

3

பறவை பார்த்தல்

றெக்கையடித்து

தன்னை மட்டும்

இழுத்துப் பறந்தவண்ணமிருந்தது

மஞ்சள் எனச் சொல்ல முடியாத பறவை

பறப்பதால்

அது சாலைவெளியில்

ஓடித் திரிகின்ற பேருந்து எதையும்

நிறுத்த முடியாமற்போயினும்

வெளிர்நீலனிற வானை

சாலை வெளியில்

திடீரென 

தோற்றுவிக்கமுடியும்

4

நீர்ப் புரிதல்

நீரை எடுத்து என் மீது ஊற்றினேன்

ஒரு குவளையைப் போல உடம்பு

வாங்கிக் கொள்ளுமென நினைத்தால்

ஏமாந்து போவோம்

தரை ஒரு அண்டாவைப் போல

எல்லாவற்றையும் வாங்கியது

எல்லாம் நீருக்குரிய நீர் இது ஒரு நீர்ப் புரிதல்

நீரை வைத்து நீரைக் கழுவி விட்டாற் போல

எல்லாம் தெளிவானது

Share:

சில தமிழ் கவிதைகள் - ரமேஷ் பிரேதன்

நீர்

1

கண்கள் கலங்கி

முகமே குளமான

நீர் நிலை

ஆழம் காண மூழ்குகிறேன்

இரவில் அமிழ்ந்து தரை படிந்த நிலாவில்

பாதம் பதிய

வசதியாகத் தியானத்தில்

அமர்ந்து விடுகிறேன்

தியானவெளியாகவும் மையப் போதமாகவும் குளம்

ஆனால் இது

அந்தரத்தில் மிதக்கிறது

2

மழையைப் போல நீ

எனக்கு எல்லாம் தந்தாய்

3

தூறலாய்த் தொடங்கி

படிப்படியாக வலுத்து

ஒவ்வொரு இழையாக இணைந்து

சலசலவென ஓடோடி

தியானத்தின் உச்சியிலிருந்து உன்னை

அவிழ்த்துக் கொண்டிருக்கிறாய்

அருவி

4

நீ நடந்து செல்லும் பாதையெல்லாம்

ஈரம்

அது உனது பண்பு

என் உடலெங்கும் பலவாகி ஓடுவது

ஒரேவொரு ஆறு

5

கடலைப் போல ஒரு

உடல் நீ

கவிதையைப் போல ஒரு

கடல் நீ


6

குளம் மழை அருவி ஆறு கடல்

எல்லாம் நீ

இப் பெயர்களில் பொருந்தும்

வடிவம் நான்

7

குளம் தியானம்

மழை குதூகலம்

அருவி கொண்டாட்டம்

ஆறு திருவிழா

கடல் கலவி – எல்லாம்

மனசெனச் சுழலும் ஒரு துளி

8

மழையைப் போல நீ

எனக்கு எல்லாம் தந்தாய்

அந்தர நதி

பேரழுகையின் உப்பு நதியில்

வழித்தவறிச் சேர்ந்த

பாய்மரத்தில் நான்


இந்தப் பாய்மரம் பலநூற்றாண்டுகளாகக்

கரை தொட்டதில்லை


என்னைக் கடந்து செல்லும் பறவையே

உனது கேவல் எதற்காக

தரைதொடாத உனது பயணமே

எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய

என்னைக் கடந்து செல்லும் பறவையே

எனது கால்களுக்குக் கீழேயும்

தலைக்கு மேலேயும்

விரிந்து நீளும் நீல நதிகள்

யாரின் பேரழுகையில் நாம்

மிதந்து செல்கிறோம்

நூற்றாண்டுகளாக

***

ரமேஷ் பிரேதன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

If tickled... - DevaDevan

If tickled...

If tickled

The kid showers flowers.


This flower must have learnt from the tree.


This tree

Which blooms and blooms

And blissfully kisses, exults all around 

by the graze of a breeze,

Must have learnt from these stars.


These stars must have learnt from

The splendid radiant ecstatic vast expanse.

Isitnt?


If tickled

The kid showers flowers!

***

கிச்சு கிச்சு மூட்டினால்

கிச்சு கிச்சு மூட்டினால்

மலர்களாக உதிர்க்கிறது குழந்தை


இந்த பூ மரத்திடமிருந்துதான்

கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.


காற்றின் தீண்டலில், பூத்துப் பூத்துக்

காணுமிடத்தையெல்லாம்

முத்தமிட்டுக் களிக்கும் இந்த மரம்

இந்த வான்மீன்களிடமிருந்துதான்

கற்றுக் கொண்டிருக்க வேண்டும்


பேரொளிரும் ஆனந்தப்

பெருவெளியிடமிருந்துதானே

கற்றிருக்க வேண்டும்

இந்த வான்மீன்களும்?


கிச்சு கிச்சு மூட்டினால்

மலர்களாக உதிர்க்கிறது குழந்தை!

தமிழ் மூலம்: தேவதேவன்

ஆங்கில மொழிபெயர்ப்பு: வேணு வேட்ராயன்

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

வேணு வேட்ராயன் தமிழ் விக்கி பக்கம்

***



Share:
Powered by Blogger.

கடலில் ஊறும் சிறு தும்பி - 2 – பார்கவி

மனிதக் குரலைப் போன்ற கருவி இன்னொன்றில்லை. அதிலும் சொல் சேர்ந்து விட்டால் அது அடையும் உச்சங்கள் அதிகம். சில தருணங்களில் பகுத்தறியும் மனம் இயங...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (12) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (231) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (27) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (12) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (231) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (27) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive