எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை - கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் புதிய தொகுப்பு. 'கவிதையின் நிழலுக்கு அருகில் வந்துவிட்டேன்' என்ற குறிப்புடன் இந்த நூலின் முதல் அறிவிப்பை சதீஷ்குமார் வெளியிட்டிருந்தார். கவிதையின் அசல் உருவையும் இந்நூலின் நிறைய கவிதைகளில் அவர் தொட்டுள்ளார் என்பது கவிதை வாசகனாக என் எண்ணம். இந்தத் தொகுப்பின் கவிதைகளை ஒருசேர வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட நான்கு மயக்கங்கள் குறித்த குறிப்பே இது.
அ) குதிக்கிற தவளை
குதிக்கிற தவளையின் நினைவு வரும் எனக்கு சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம். அவரது கவிதைகளில் முக்கியமான சில இடங்களில் வார்த்தைகள் தங்கள் இடங்களை மாற்றி அமர்ந்திருப்பதை ஒரு வாசகன் உணரலாம். இது வெறுமனே வார்த்தை விளையாட்டாக தென்படுவதில்லை. இதை இவ்வாறு விளக்கலாம் : அவரது கவிதைகளில் ஆரம்பந்தொட்டே இரண்டு வார்த்தைகள் கவிதையின் முடிவில் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நாம் வாசித்துக் கொண்டு வர வர இறுதியில் அந்த இரண்டு வார்த்தைகளும் மாறியிருக்கும் - இரண்டு தவளைகள் குதித்து இடம் மாறி ஏமாற்றிவிட்டதைப் போல. இந்த விநோதத்தை அவரது பல கவிதைகளை வாசிக்கிறபோது உணர்ந்திருக்கிறேன்.
உன்னை விரும்பினேன்
என்பதற்கு
என்னிடம் எந்த சாட்சியமும் இல்லை
நிரூபிப்பதில்
ஆயிரம் சங்கடங்கள்
அப்போது
எதைச் செய்தாலும்
அதில்
பிழைகளின் அற்புதம்
ஆ) வரிகளின் விரிப்பு
சுருண்ட பாயை விரிக்கும்போது அது ஒரு பாதையை ஏற்படுத்துகிறது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த தன்மை உண்டு. ஒரு சொல்லை விரித்து உண்டான வரி. இத்தகு வரிகளை இவரது கவிதைகளில் நிரம்பக் காணலாம். வழக்கமாக இவரது கவிதை பாணியில் பிறழ்ந்த வரி, வெறுமை மனம் இரண்டும் உண்டு. இந்த இரண்டு அம்சமுமே தவறான பாதையில் வண்டியை ஓட்டிச் செல்வது மாதிரி. அந்தப் பிறழ்வும் வெறுமையும் அந்த அம்சத்தினூடே கவிதைக்கு ஒரு விநோத அழகைக் கொடுக்கும். சதீஷ்குமார் தனது கவிதை ஊர்தியை தவறான பாதையில் அது தவறான பாதை எனச் சொல்லியபடியே ஓட்டிச் செல்கிறார். இந்த மாறுபட்ட தன்மை வழக்கமான பிறழ்வின் வெறுமையின் கவிதைகளில் இருந்து இவரது கவிதையை வேறுபடுத்துகிறது.
பாழந்தி
புல்வெளிகள் எரியும் வெயிலில்
அழிவைப் பாடுகிறது காற்று
இன்று பெய்த மழையில் முளைத்த விதை
எந்த நூற்றாண்டின் ஞாபகத்தில்
பிளந்துகொள்கிறது
நான் மன்னிப்பு கேட்கிறேன் வானங்களிடம்
வானம் நீலங்களால் மன்னிக்க
விரும்பியது போலத்தான் தோன்றியது
ஆனால்
அந்தியின்
மயக்கங்களின் பாழ்
இ) குரல்
கவிஞனுக்கென்று ஒரு குரல் உண்டு. கவிஞன் தரித்த உடல் கொண்ட சாதாரணனுக்கு ஒரு குரல் உண்டு. இந்தச் சாதாரணன் தன் குரலிலிருந்து கவிஞனின் குரலுக்குப் போக முயற்சிப்பான். அது சில சமயங்களில் வெறும் மிமிக்ரியாக முடிந்துவிடும். அந்தக் கவிதைகளிலும் அத்தகைய குறைபாடுகள் தென்படும். சில சமயங்களில் கவிஞன் முழுமையாக வெளிப்பட்டு அவன் குரலில் பேசுவான். அப்போது அவன் எதைப் பேசினாலும் அது கவிதை தான். ஆ! மட்சுஸிமா என்பான், உடனே அது கவிதையாகிவிடும். காபி சாப்பிட போலாம் வா! என்பான் அதுவும் கவிதையாகும். இதைத்தான் பாரதி மந்திரம் போலொரு சொல் என்றானா? மந்திரம் சொல்லால் இல்லை, சொல்பவரால் சொல்பவரின் குரலால் மாத்திரமே சொல் மந்திரம் ஆகிறது. தண்ணீர் ரசம் ஆகிறது. சதீஷ்குமார் சீனிவாசனும் தனது கவிதைகளில் அது துவங்கும்போதிலிருந்தே அந்தக் குரலை எடுக்க முனைகிறார் அல்லது எடுத்துவிடுகிறார். இது அவரது சொற்களை, கூறலை கவிதையாக மாற்றுகிறது.
ஒரு மீன் அறிகிற நீர்
காற்று அறிந்த மரம்
உடல்களின் முடிச்சவிழ்ந்த காமம்
நீதியின் ருசி அறிந்த
காத்திருப்பின் வெக்கை
விட்டுவிட்டுப் பறந்த பறவை
அபயம் என்ற ஒரு வெற்றிடம்
வெற்றிடத்தின் மெளனம்
அதில் உதித்த சொல்
யாராவது பேச வேண்டும்
திக்கித் திக்கியாவது
ஈ) இரண்டு ஆப்பிள் பெட்டிகள்
இரண்டு ஆப்பிள் பெட்டிகள் கவிதை சதீஷ்குமாரின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. இந்தக் கவிதை உண்டாக்கும் மயக்கம் வரியாலோ சொல்லாலோ அல்ல, முழுக்கவிதையால்.. முழுக்கவிதையும் ஒரு கவிதையாகி ஒரு மயக்கத்தைத் தருகிறபோது வாசகன் அதன் வரியாலோ சொல்லாலோ அதை நினைவுபடுத்தமாட்டான். வரியோ சொல்லோ அல்லாமல் வேறு ஒன்றே அந்தக் கவிதைக்கு உயிரைத் தரும். (கவிதை எழுதுபவன் தன் உயிரோடு இன்னொரு உயிரையும் கூடுதலாக வைத்திருப்பான் - கவிஞர் லட்சுமி மணிவண்ணனின் கூற்று இது). பெரும்பாலும் அத்தகைய கவிதை ஒரு காட்சியாக படிமமாக மனதில் நிற்கும். அது தரும் மயக்கம் அளப்பரியது.
இரண்டு ஆப்பிள் பெட்டிகள்
டாடா ஏசியில்
ஆப்பிள் பெட்டிகளுக்கு நடுவே
இரண்டு ஆப்பிள் பெட்டியளவுக்கு
உடல் மடக்கி படுத்திருந்தான் அவன்
இதுவொரு அதிகாலை
பனியூறிய மலைகளின் சாலையில்
இறங்கிக்கொண்டிருந்தது அந்த வண்டி
எனக்கு நம்பிக்கை இல்லை
ஆனாலும்
இரண்டு ஆப்பிள் பெட்டி அளவுள்ள அவனை
யாராவது கேரிபேக்கில் வாங்கிச்செல்வார்கள்
யாராவது
ஒரு துண்டரிந்து வாயிலிடுகையில்
அவன் இனித்தாலும் இனிப்பான்
***
***







0 comments:
Post a Comment