வீடு எப்படி வளர்ந்தாலும் படுக்கை அறையில், கெடிலம் ஆற்றை நோக்கிய ஜன்னல் மட்டும் மாறவே மாறாது. அது என் ஜன்னல். என் பால்யத்தின் உப்பறிகை. மிக பெரியது. நான் உக்கார்ந்து விளையாடலாம். சுருண்டு படுத்து தூங்கலாம். முக்கியமாக எனது கதை புத்தகங்களை அங்கே கிடந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே படிக்கலாம்.
இரவுகளில், ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட் லண்டனில் நடந்து வரும் வெஸ்ட் மினிஸ்டர் பாலம், அதன் கீழ் ஓடும் தேம்ஸ் நதியை என் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். கெடிலம் நதியும் அதன் மேல் நிற்கும் (சமீபத்தில் உடைத்து நொறுக்கப்பட்ட) பிரிட்டிஷ் காலத்து இரும்பு பாலமும் அன்றெல்லாம் எனக்கு தூரத்தில் தெரியும் லண்டன் நிலம்தான். அது எனக்கு ஜன்னல் மட்டுமே அல்ல இன்னொரு உலகுக்கான சாளரமும் கூட.
பின்னர் பல்வேறு கீழ்மைகளின் சூழல் அழுத்தம். சொந்த வீட்டை விற்றோம். பதிவாளர் அன்றைய சம்பிரதாயப்படி கையெழுத்து போடும் முன்பாக எங்கள் எல்லோருக்கும் அந்த வீட்டை விற்க பூரண சம்மதம் என்று குரல் விட்டு சொல்ல சொன்னார். எல்லோருக்குமே குரல் இடறியது. கிரயம் முடிந்ததும் வீட்டை வாங்கியவர் அன்றைய சம்பிரதாயதின்படி எங்களை அழைத்து சென்று எல்லோருக்கும் வடை பாயாச விருந்து வைத்தார். உண்டு முடித்ததும் சிறுவனான நான் உட்பட எங்கள் குடும்ப உறுப்பினர் எல்லோரும் சேர்ந்து அவரை வளம் கொண்டு வாழ வாழ்த்த சொன்னார். பின்னர் என் வாழ்நாளில் ஒருபோதும் என் சொந்த வீடு இருக்கும் இடம் பக்கமே நான் போனதில்லை.
புதிய ஒண்டுகுடித்தன வாடகை வீட்டில். ஒரு நாள் இரவு ஜன்னலை திறந்தால் தெரியும் சிமெண்ட் பூசாத பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரை நோக்கி, இழந்த என் ஜன்னல் உலகை எண்ணி ஏங்கி அழுத என்னை என் குடும்பதினர் விசித்திரமாக கண்டு பீதி அடைந்து தேற்றினர். அன்றைய என் உணர்வை எவருக்குமே என்னால் சொல்லி புரிய வைக்க முடியாத நிலை.
இதே போல திருச்சி பாட்டி வீட்டு மொட்டை மாடி தீப்பெட்டி குடோன் அறையில், மூன்று நாட்கள் சிறை போல கிடந்து விஷ்ணுபுரம் நாவல் வாசித்து முடித்தபோது என் உடன் இருந்த ஜன்னல். அதுவும் என் வாழ்வோடு கலந்த ஒன்று. குறிப்பாக நாவல் முடிந்த தருணம் அப்படி ஒரு தனிமை. ஜன்னல் வழியே தெரியும் வானம் என்னைப்போலவே தனித்து ஏங்கி கிடப்பதாக ஒரு உணர்வு. ஒரு உளமயக்கு கணத்தில் ஜன்னல் வழியே ஜன்னலை தன் கண்ணாக்கி அந்த வானம் என்னைப் பார்த்தது. அந்த கண்களில்தான் என்ன ஒரு தனிமை. அது முதல் அனுபவம். அதன் பிறகு எத்தனையோ வீடுகள், எத்தனையோ வாசிப்பு அறைகள், எத்தனையோ ஜன்னல்கள். அதன் அருகே கிடந்து எந்த ஒரு நல்ல புனைவையும் வாசித்து முடிக்கும்போது ஜன்னலை பார்ப்பேன். என் போலவே தனிமையும் ஏக்கமும் கொண்டு வானம் என்னைப் பார்க்கும். பிறர் போல, வீடுகள் எனக்கு உண்டு புணர்ந்து உறங்கி நோய் முற்றி உடல் மக்கும் இடம் அல்ல. அங்கே என் அறையில் புத்தகங்கள் உண்டு. ஜன்னல் உண்டு. அதன் வழியே தாஸ்தாவேஸ்கியும் ஜெயகாந்தனுமாகி என்னை நோக்கும் எனக்கு மட்டுமே தெரியும் வானம் உண்டு.
இது என்னை அன்றி பிற எவருக்குமே புரிய இயலாத உணர்வு என்று
இந்த போகன் சங்கர் கவிதையை வாசிக்கும் முன்பு வரை நினைத்திருந்தேன். என் உணர்வு தீவிரத்துக்கு நிகராக அல்ல என்றாலும் அதற்கு அருகே வந்து நிற்கும் கவிதை இது.
***
ஒவ்வொரு வீட்டை மாற்றும்போதும்
இப்படி நினைத்துக் கொள்கிறேன்.
' குறைந்தது ஐயாயிரம் புத்தகங்களாவது இருந்து படித்த வீடு'
பொதுவாக நான் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பது
அங்கு புத்தகங்கள் படித்த அறையையும்
இடத்தையும்.
பிறகு
வாசிப்பின் நடுவே
பெருமூச்சுடன் நிறுத்தி
வெளியே கூவிய ஒரு பறவையையோ
நிலவொளியையோ
வெறித்த ஒரு சன்னலை.
***
போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்
***






.jpeg)
0 comments:
Post a Comment