‘க.நா.சு. இலக்கியத் தடம்’ என்ற நூல் 1991ஆம் ஆண்டு வெளியானது. அதில் க.நா.சு.வின் ‘படித்திருக்கிறீர்களா?’ (1957) நூலை முன்வைத்து அம்ஷன் குமார் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. கட்டுரையில் அவர், ஒரு வாசகன் என்ற முறையில் தனக்கு க.நா.சு. மீது ஆதங்கம் இருப்பதாகக் கூறி, அதற்கான காரணங்களையும் சொல்கிறார். ‘நாவல், சிறுகதை, கவிதை ஆகியவை ஒவ்வொன்றையும் எவ்வாறு ரசிப்பது என்பதற்குத் தனித்தனியாகப் புத்தகங்கள் எழுதக்கூடிய புலமையும் ஆற்றலும் கொண்டிருந்தும் அவ்வாறு செய்யாததற்கும்’ ஆதங்கப்படுவதாகக் கூறுகிறார். க.நா.சு. எழுதி வெளியான கட்டுரைத் தொகுப்புகள் அத்தனையையும் படித்திருத்தால் அவர் இவ்வாறு ஆதங்கப்பட நேர்ந்திருக்காது. தனது கட்டுரைக்காகத் தேர்ந்தெடுத்த ‘படித்திருக்கிறீர்களா?’ நூலின் மற்றொரு பாகத்தைக்கூட (1958) அவர் வாசிக்கவில்லை என்பது தெரிகிறது. ஆனால் தனது கட்டுரைக்கு ‘படித்திருக்கிறீர்களா க. நா. சுப்பிரமணியம்?’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
க.நா.சு. நாவல் ரசனை தொடர்பாக ‘நாவல் கலை’ (1984) என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அந்நூலில் உள்ள கட்டுரைகள் திட்டமிட்டு ஒரே மாதத்தில் எழுதப்பட்டவை. க.நா.சு. இந்த ‘நாவல் கலை’ போல ‘கவிதைக் கலை’ என்ற நூலை எழுதவில்லையே தவிர, அவரது கட்டுரைத் தொகுப்புகளில் கவிதை பற்றி பல கட்டுரைகள் உள்ளன. அவற்றைக்கொண்டு ஒரு தொகுப்பை நாமாகவே உருவாக்கிகொள்ளலாம். நூல்வடிவம் பெறாத கட்டுரைகளிலும் கவிதை பற்றி எழுதியவை ஏராளம். ஆங்கிலத்தில் எழுதியவற்றையும் உள்ளடக்கினால் பெருந்தொகையாகச் சேரும்.
அம்ஷன் குமாரின் கட்டுரையை வாசித்ததும் ‘நாவல் கலை’ போல கவிதை, சிறுகதை பற்றிய க.நா.சு.வின் கட்டுரைகளைத் தனித்தனி நூல்களாகத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைப்பற்றி நண்பர் துரை. லட்சுமிபதியிடம் கூறியதும், சிறுகதை பற்றிய தொகுப்பை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு வேலையைப் பகிர்ந்துகொண்ட சில நாட்களிலேயே கவிதை பற்றியத் தொகுப்பில் இடம்பெறவேண்டிய கட்டுரைகளின் பட்டியல் தயாராகிவிட்டது. ஆனால், நூலாக்கப் பணியை மேற்கொள்ளும் பொழுது கூடவில்லை.
ஒருசில நாட்களுக்கு முன் பிரியத்திற்குரிய மூத்த கவிஞர் ஒருவர் நவீன கவிதை பற்றி சில கட்டுரைகளை எழுதவுள்ளதாகத் தன் திட்டத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது க.நா.சு. கவிதை பற்றி எழுதியவற்றைக் கொடுத்து உதவுமாறு கோரினார். அவரிடம் மேற்கண்ட விவரத்தையே பதிலாகச் சொல்லவேண்டியதாயிற்று. கவிஞருடனான அந்த உரையாடல் திட்டமிட்டிருந்த தொகுப்பை விரைவில் வெளியிட ஆவன செய்யவேண்டும் என்ற ஊக்கத்தை அளித்தது.
கட்டுரைகளைத் தொகுத்து நேரடியாக நூலாக்குவதற்குப் பதிலாக இணைய இதழ் ஒன்றில் தொடராக வெளியிட்டு, பிறகு புத்தகமாக்கலாம் என்ற யோசனை தோன்றியது. ‘கவிதைகள்’ இணைய இதழின் பொறுப்பாசிரியர்கள் அதற்கு மகிழ்வுடன் இசைந்தனர்.
முதல் கட்டுரையாக ‘தமிழில் புதுக் கவிதை’ என்ற கட்டுரை வெளியாகிறது. தமிழில் இன்று நிலவும் நவீன கவிதை, ‘புதுக் கவிதை’ என்ற பெயரில் உருவாகத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டது இக்கட்டுரை. புதுக் கவிதை என்ற சொல்லே க.நா.சு.வின் மூலம்தான் பரவலாகப் புழக்கத்திற்கு வருகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட காலத்தை ஒட்டி, ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் தொடக்கத்திலும் ‘எழுத்து’, ‘சரஸ்வதி’ முதலிய சிற்றிதழ்களில் நடந்த விவாதங்கள் மூலம் புதுக் கவிதை என்ற பெயர் நிலைத்தது.
அந்த விவாதங்களுக்கெல்லாம் முன்பு புதுக் கவிதையின் குணங்கள் என்னென்ன, அவை மரபிலிருந்து உதறவேண்டியவை எவை, அயல்மொழிகளில் புதுக் கவிதை முயற்சிகள் செய்து வெற்றி கண்டவர்கள் யார்யார், தமிழில் புதுக் கவிதையைத் தோற்றுவிக்கும் முயற்சியைத் தொடங்கியவர்கள் யார்யார், அவர்கள் செய்த முயற்சியின் எல்லைகள் யாவை, தான் செய்துவரும் புதுக் கவிதைப் பரிசோதனை எத்தகையது எனப் பல வினாக்களுக்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கட்டுரை இது. க.நா.சு. முன்வைத்துள்ள பெரும்பாலான சிந்தனைகள் அடிப்படையானவை, இன்றும் காலாவதியாகாதவை என்பதே இக்கட்டுரையுடன் தொடரைத் தொடங்குவதற்குக் காரணம்.
***
***
- தமிழில் புதுக் கவிதை
- கவிதை சில குறிப்புகள்
- புதுக் கவிதை - இரண்டு குறிப்புகள்
- 1977ல் புதுக் கவிதை
0 comments:
Post a Comment